புலவர் மணியன் (1936-2020) – இரங்கற் குறிப்பு

0

டாக்டர் கி. நாச்சிமுத்து

மூத்த தமிழ் ஆய்வறிஞர், முனைவர், புலவர் மணியன்அவர்கள், இன்று காலை 5 மணிஅளவில் திருப்பூரில்தன்மூத்தமகள்வீட்டில்தம் 84 ஆம் வயதில் காலமானார் என்ற துன்பமான செய்தியை முனைவர் கே. எஸ். கமலேஸ்வரன் அவர்கள் மூலம் அறிந்து சொல்லொணாத் துன்பமுற்றோம். அவர் அண்மைக்காலமாகப் புற்று நோயால் துன்புற்றுவந்தார்.

தஞ்சை மாவட்டம் திருமயிலாடியில் மரபு வழித்தமிழ்ப்புலமைக் குடும்பத்தில் 29.04.1936 பிறந்த முனைவர் திரு புலவர் மணியன் அவர்கள் பெரும்புலவர்ச. தண்டபாணி தேசிகரிடம் தமிழ் கற்ற பெருமையினர். அவருடன் இணைந்து அக்காலத்தியேசங்க இலக்கிய அகராதியை வெளியிட்ட புலமையாளர். அவர் தொடர்ந்து சிலம்புக்கும் மணிமேகலைக்கும் அத்தகைய கருவிநூல் சமைத்தவர். தொடர்ந்து அவர்கள் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியனார் வழிகாட்டச்சங்க இலக்கிய வினை வடிவங்கள் என்ற அரிய அகராதித் தொகுப்பைச் செய்து சங்க இலக்கிய மொழிக்கு அரிய ஒரு கருவிநூலைப் படைத்துத் திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகம்வழிவெளியிட்டார். தொடர்ந்து அவர் அருட்செல்வர் நா. மகாலிங்கம் ஆதரவில் தேவாரம் சொல்லகராதி, அருட்பா அகராதி, திருமந்திர அகராதி, ஒன்பதாம் திருமுறை அகராதி, பத்தாம் திருமுறை அகராதி என்று கருவிநூல்பணியில் முனைந்து செயல்பட்டுப் பல அரிய கருவிநூல்களை வழங்கியவர். அவர் அரிதின் முயன்று தொகுத்து வெளியிட்டுள்ள கொங்குவட்டாரச் சொல்லகராதி பற்றியும் இங்கு விதந்து குறிப்பிடவேண்டும். அதன் திருந்திய பதிப்பொன்றைத்தான் இறக்குந்தறுவாயிலும் கவனமுடன் வெளியிட்டதை நாம் மறக்க முடியாது. அவர் தயாரித்துள்ள பதினொராந்திருமுறை அகராதி அருட்செல்வர் மகனார் திரு.ம.மாணிக்கம் அவர்கள் ஆதரவில் அண்மையில் வெளியாகியிருக்கிறது. அவர் தமிழ்ப்பணிக்காக கற்பகம் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிய சிறப்புடையவர். பல நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர் புலவர் மணியனார் அவர்கள். துணைவியை இழந்த முதுமைத் துன்பத்திலும் தமிழைத்துணையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

வைணவ இலக்கிய மரபில் நாலாயிரம் முதலிய தோத்திரப்பாடல்களுக்கு உரை மரபு சைவத்தில் வேரூன்றவில்லை. எனினும் இருபதாம் நூற்றாண்டிற்குப்பின் இந்நிலை மாற்றமடைந்தது. திருவாசகம் போன்றவற்றை போப் போன்றவர்கள் மொழி பெயர்த்த பின் தமிழர்களும் உரை முயற்சியில் இறங்கினர். பண்டித மணி கதிரேசஞ் செட்டியார், திருவாசக மணி பாலசுப்பிரமணியன் போன்றோரைத் தொடர்ந்து இத்துறையில் முயல்பவர்களைக் காணலாம். அத்துடன் செங்கலவராய பிள்ளை அவர்களின் ஒளிநெறிவரிசை ஆழமான ஒருபுலமை மரபுசைவ இலக்கிய ஆராய்ச்சியிலும் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. அப்புலமை மரபின்கான் முளையாகத் தோன்றிப் பேரா.வ.ஐ.சுப்பிரமணியம் போன்றவர்கள் வழிப்புது நெறிகளை ஏற்றுத் தமிழ்ப்புலமை மரபைச் செழுமைப்படுத்தியவர் புலவர் மணியன் என்ற மணியான புலவர்மணி அவர்கள். ஆராய்ச்சிக்கு உரிய அரிய கருவிநூல்களை உருவாக்குவது என்ற அடிப்படைத் தமிழாய்வை வளப்படுத்தியவர் அவர். நிறுவன ஆதரவு, அரசு ஆதரவு கிடைக்காமல் நல்ல தமிழறிஞர்கள் திருமடங்களையும் புரவலர்களையும் நாடிச் சென்று தம்புலமையை வெளிப்படுத்த முயன்று உரிய சிறப்புக்களைதக்க நேரத்தில் பெறாமற்போன வரலாற்றிற்குச் சொந்தக்காரர் மணியனார் அவர்கள்.

சோழ வளநாட்டில் பிறந்திருந்தாலும் கொங்கு வளநாட்டைத் தன் தாயகமாகக் கொண்டு அவர் கொங்கு நாட்டில் விஜயமங்கலம் போன்ற இடங்களில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் பணி நிறைவில் அவர் கோவையில் குடி புகுந்து ஆற்றி வந்த தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்து அவருக்குச் சிறப்புச் செய்வது கொங்கு மண்ணின் மாண்புக்குத்தக்கது.

அவர் மறைவு தமிழாய்வுக்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார், நண்பர்கள் ஆய்வாளர்கள் முதலிய அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அவர் உயிர் இயற்கையில்கையில் அமைதியாக உறங்கட்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *