சேஷாத்ரி பாஸ்கர்

நாகேஸ்வர ராவ் பூங்கா அதன் பெயரை பெறுவதற்கு முன் உள்ளூர் மக்கள் அதற்கு வைத்த பெயர் யாராத்தா குட்டை. இன்று அப்படி சொன்னால் அது கெட்ட பேச்சு என்பார்கள்.

அங்கு எப்படி குட்டை உருவானது என தெரியவில்லை.

ஒரு வேளை இரண்டு வருடங்கள் முன்பு இங்கு பெய்தது போல அம்பது வருடங்கள் முன்பு மழை வந்திருக்கலாம். ஒரே குட்டை பிரதேசம். காட்டு வெளி நிலம். எதிரே உள்ள தேவாலயம் அப்போது காட்டு கோயில் என அழைக்கப்பட்டது. ஆறு மணிக்கே வெளியே போக பயப்படும்படியான ஊர்.

காரணம் திருடர்கள் இல்லை. இருட்டு. பேய் பிசாசு பயம். சங்கிலியை பறித்து கொண்டு ஓட இரண்டு சக்கர வாகனம் பெரிதாய் இல்லை. மிஞ்சி போனால் ஒரு வாடகை மிதி வண்டி. மன்னிக்கவும். அவர் சைக்கிள். வியாதி இல்லை.

காற்று மிதம். மழை சுகம் கொஞ்சம் கஷ்டம். மாசு இல்லை. பெரிய வெளிச்ச விளக்குகள் இல்லை. தெருவின் குப்பைகள் வியாதி பரப்புவதாய் இல்லை. முக்கியமாய் பிளாஸ்டிக் இல்லை. இன்றுள்ள மருத்துவமும், கைபேசியும் அன்று உண்டா என்று விவாதம் செய்தால் என்னிடம் பதில் இல்லை.

நான் சொல்ல வந்தது ஒப்பீடு இல்லை. வாழ்வு சுமை பற்றிய என் கவலை. எட்டு குழந்தைகள் பெற்ற தாய் எல்லோருக்கும் கல்யாணம் செய்து விட்டு சென்ற வருடம் இறந்ததை நான் அறிவேன். ஏன், சில வீட்டில் அம்மாவும் பெண்ணும் ஒரே நாளில் விலக்காகி இருந்த கதை கூட உண்டு. இன்று ஒரு குழந்தை பிரசவத்திற்கு பாடு படுத்தும் ஸோ கால்ட் மாட்டு பெண் எங்கே? எட்டு பெற்றவள் எங்கே? ஆரோக்ய ரீதியில் இதை பேசுகிறேன். சின்ன அடி பட்ட என் அம்மாவுக்கு ஹார்லிக்ஸ் வாங்கி வருவதற்குள் பாத்திரம் தேய்த்து விட்டு செல்வி பார்க்க ஆரம்பித்து விட்டாள். சின்ன அடி கூட எனக்கு பட்டால் அதை எல்லோர்க்கும் சொல்லி மாஞ்சு போய் நிற்கும் நான் அவர்கள முன் தூசி தான்.

நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் எத்தனை கோடி பாட்டு தான் ஞாபகம் வருகிறது. இன்று அரை டிராயர் போட்டு கொண்டு எகனாமிக்ஸ் பேசி கொண்டு நடக்கும் யுவன், யுவதிகளுக்கு இது தெரியாது.

இந்த பூங்கா மூன்று பேரின் சொத்து. ஒன்று தர்மாம்பாள் முதலியார். இன்னொருவர் நாகேஸ்வரர். அவருக்கு அம்ருதாஞ்சன் கட்டிடமும் அப்போது சொந்தம். மெட்ராஸ் பிரெசிடென்சியில் அப்போது போட்ட தர்மம். இன்று சுந்தரம் பைனான்ஸ் வரை வந்து இருக்கிறது.

நிஜ தர்மவான்கள் இருந்த ஊர் அது. நமக்கு தெரியாது. ஒரு வேளை அங்கிருந்த, இருக்கும் மரங்கள் அறியும். அன்று ராமாயி அம்மாளும், நைனியப்ப முதலியாரும், குமாரசாமி ராஜாவும், அரவாமுதன் அய்யங்காரும் இந்த நிலத்தை தரவில்லையெனில் நமக்கு நகரில் ஒரு நாலு ஏக்கர் பசுமை தோட்டம் கிடைத்திருக்குமா என்ன? சரித்திரம் மறக்கப்படகூடாது.

இது திறக்கப்பட்ட எண்பதாவது வருடம் இது. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *