ஏறன் சிவா

எத்தடை வரினும் முன்னேறு — மன
இடரினைக் கிழித்தே விண்ணேறு! — கடல்
முத்தினைப் போலே ஒளிவீசு! — நீ
மூடரைச் செதுக்கும் உளிவீசு!

கத்தியின் மீதும் நடைபழகு — சில
கயவரை ஒழிக்கும் படைபழகு! — உன்
முத்திரை பதிப்பாய் காலடியில் — கொஞ்சம்
முயன்றால் அடைவாய் நாலடியில்!

புல்லையும் வில்லாய் நீமாற்று — வரும்
புயலிலும் அணையாத் தீஏற்று! — பெருங்
கல்லையும் நொறுக்கும் வலிமைபெறு — எவரின்
கண்களின் முன்னும் எளிமைபெறு!

முல்லையைப் போலே மணம்பரப்பு! — பொய்
மூச்சினர்க் கெதிராய்ச் சினம்பெருக்கு!
சொல்லிய சொல்லில் பொலிவுபெறு — நீ
சொல்கிற சொல்லில் தெளிவுபெறு!

தாள்களை வேல்போல் கூராக்கு! — இத்
தரையினை முயன்றே நேராக்கு!
தோள்கள் இரண்டை நீநிமிர்த்தி — இனித்
தொடங்குக வாழ்க்கைப் பெரும்போரை!

சேற்றினுள் உன்னைப் புதைத்தாலும் — நற்
செந்தா மரைபோல் வெளியெழுவாய்!
ஆற்றினில் தூக்கி எறிந்தாலும் — ஒரு
அழகிய படகாய் நீமிதப்பாய்!

பெருஞ்சுடர் நடுவே எரிந்தாலும் — உனைப்
பெரும்புவி நினைவில் கொள்ளும்படி,
அரும்பெருஞ் செயலே நீசெய்வாய் — அதில்
அடையுமிவ் வுலகம் நற்பேறே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *