அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (28.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 264

  1. தன்னம்பிக்கை

    வண்ணமில்லா
    வண்ணத்து.பூச்சியே,
    உன் எண்ணம் நானறிவேன்!

    உன்
    கறுப்பு வெள்ளை
    நிறம் கண்டு
    வெறுப்புற்ற உறவுகள்
    விரட்டி விட்டார்களேயென்று
    விரக்தி அடையாதே!

    கடவுளின்
    படைப்பினிலே
    வண்ணங்களில்
    பேதங்களில்லை.

    தேன் சிந்தும்
    மலர்கள் உன்னைத்
    தீண்டாதே என்று‌ சொல்வதில்லை.

    உன்னைப் படைத்த
    இறைவன்
    நீ உயிர் வாழ
    உணவளிப்பான்.
    என்னும்
    தன்னம்பிக்கையையும்
    தைரியத்தையும்
    நீ இழக்காத வரை
    உன்னை யாரும்
    தனிமைப்படுத்தி
    தவிக்க விட முடியாது!

    கோ.சிவகுமார்
    மண்ணிவாக்கம்
    சென்னை

  2. சிரிப்பூ…

    பூவில் தேனெடுக்கப்
    புதிதாய்ப்
    பழகும் பட்டாம்பூச்சி
    புறப்பட்டது தேனைத் தேடி..

    பூவில்லாப் பூச்செடியில்
    போய் அமர்ந்தது,
    மொட்டுகள் மட்டுமே
    நிறைந்த செடியில்
    கிட்டவில்லை
    தேன் அதற்கு,
    தேடிச் சென்றது
    வேறிடத்தை..

    எட்டிப் பார்த்த
    பூ மொட்டுக்கு
    வந்த
    அடக்கமுடியாச் சிரிப்பை
    அடக்கிக்கொண்டது..

    அடுத்த நாள்தான்
    சிரித்தது–
    அழகுப் பூவாய்…!

    செண்பக ஜெகதீசன்…

  3. பூவின் குணம்

    வண்ணத்துப் பூச்சியே
    வண்ண்ங்களில் மயங்கி
    வனப்பில் கிரங்கி
    தேனினைத் தரலை

    படைப்பின் உண்மை
    பசியென வந்தால்
    உணவு பரிமாறு

    என்னுள் உள்ள தேன்
    உன்னுள் கலந்து
    உன் கால் பட்டு
    இன்னொரு பூவில்
    நீ அமர்கை
    இயற்கையே

    அதன் நிகழ்வே
    மகரந்த சேர்க்கை
    படைப்பின் பிரமிப்பு

    பூவாகி பிஞ்சாகி
    காயாகி கனியாகி
    என் பிறப்பு

    நீ ஒரு கருவி

    சாதாரண
    வண்ணத்துப் பூச்சியல்ல நீ
    பிரம்மன் படைப்பின்
    அதிசயம் நீ

    வா தேனை எடு
    திகட்ட திகட்ட எடு

    எனக்கு வலிக்குமென
    எண்ணக் கூடாது நீ

    என் மீது உன் ஸ்பரிசம்
    நான் வளரவே

    வா வா தாவர நட்பே
    நட்பெனும் நம்
    கைகுலுக்கலில்
    பூத்து குலுங்கும்
    பூக்கள் எல்லாம்
    காயாகி கனியாகி
    நம் பிறப்பை
    சரி செய்யவே

    நட்புக்கும் காதலுக்கும்
    புரிதல் அறியாதவர்கள்
    நம்மைக் கண்டாலே
    காதலென கற்பனையில்

    வண்ணத்துப் பூச்சியே
    நீ ஒரு இனம்
    நான் ஒரு இனம்
    இதை எப்படி
    காதல் என கற்பனையில்

    இயற்கையின் இயல்பை
    இயல்பாக பாருங்கள்

    சீ..காந்திமதிநாதன்
    கோவில்பட்டி

  4. படக்கவிதைப் போட்டி எண் 264

    வண்ணவண்ண நிறத்தில்
    தாவித்தாவி பறந்திட்டு
    அள்ளஅள்ளக் குறையாத
    தேனைத் தான் பருகுவேனே

    கூட்டுப்புழுவாய் பிறந்திட்டு
    வண்ணத்துப் பூச்சியாய் வளர்ந்திட்டு
    பார்ப்பவர் மனதை கொள்ளையடிக்க
    உருக்கொண்டேன் நானே!!

    மகரந்தச் சேர்க்கை
    என் வாழ்வியல் முறையிலொன்று
    மணத்தோடு மலர்கள் ஆயிரமாயிரம்
    கொட்டிக்கிடக்க ஆனந்தம் தானே!!

    பட்டுப்பூச்சி பருவத்திலே
    எங்களையெல்லாம் கொன்றுவிட்டு
    பட்டாடை உருவாக்கி
    அதை பகட்டாகக் கட்டிக்கொள்ளும்
    பாரில் நிரம்ப மனிதருண்டே

    எம் இன சுழற்சி தொடரத்தான் செய்யும்
    உலக சுற்றுலா சென்றிட்டே
    பசுமையாய் உலகிருக்க
    பறந்திடவே நாங்கள் கிளம்பிட்டோம்
    வண்ணவண்ண நிறத்தினிலே
    தாவிதாவிப் பறந்திட!!!

    சுதா மாதவன்

  5. பிரம்மனின் தூரிகை

    மைபூசி திருடும் கள்வன்போல்
    கார்வண்டு தேன் எடுத்துச் சென்றுவிட
    வெள்ளந்தியாக பூவண்ணம் மேனி பூசி ‘வெண்ணை’பூச்சியாக நிற்கும் பேதை நீ…

    பூக்கடைக்கு விளம்பரம்
    தேவையில்லை என்றாலும்
    பூவழகை புவனிக்குக்
    கொண்டு சேர்க்கும் தூதுவன் நீ…

    காதலியின் கண் துடிப்பைக்
    கண்டுணரும் காதலன்போல்
    பூக்களின் இதயத் துடிப்பை – சிறகினில்
    புலம்பெயர்த்த சித்துவித்தைககாரன் நீ….

    வாடிச் சருகாகும் பூக்களின்
    வண்ணத்தை வார்த்தெடுத்து
    புனர்ஜென்மம் கொடுத்துவிடும்
    பிரம்மனின் தூரிகை நீயன்றோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *