திருச்சி புலவர் இராமமூர்த்தி

கொண்டு வந்து மனைப்புகுந்து  குலாவு பாதம் விளக்கியே
மண்டு  காதலின்  ஆச  னத்திடை  வைத்த  ருச்சனை செய்தபின்
உண்டி  நாலுவி  தத்தில்  ஆறுசு  வைத்தி   றத்தன   ஒப்பிலா
அண்டர்  நாயகர்  தொண்டர் இச்சையின்  அமுது செய்ய அளித்துளார்

உரை

அவர்களைத் தமது மனைக்குள்ளே, அழைத்துக் கொண்டு வந்துபுகுந்து, குலவுகின்ற அவர்களது திருவடிகளை விளக்கி, மிகுந்த ஆசையினாலே ஆசனத்தில் எழுந்தருளுவித்து, அருச்சித்து, அதன்பின் நான்கு விதத்தில் இயன்ற ஆறுசுவை யுணவுகளையும், ஒப்பில்லாத சிவபெருமான் அடியவர்கள்  இச்சையில் அமுது செய்தருளுமாறு கொடுத்துள்ளார்.

விளக்கம்

‘’கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே’’ என்ற அடி, அடியாரைத்தம் இல்லத்துக்கு  அழைத்துக் கொண்டு வந்து அவர்தம் திருப்பாதங்களை நீரிட்டு அலம்புதலைக் குறித்தது. இதனை  பாத்தியம் என்ற  வரவேற்பு  நிகழ்ச்சியாகும்.

குலாவு பாதம் – மோட்ச சாதனமாகக்   கொண்டாடப்பெறுகின்ற பாதம்  விளங்குகின்ற பாதம் என்றலுமாம். இறைவனைப் பூசையில் எழுந்தருளச் செய்யும் போதும், அடியார்களுக்கு விருந்தளிக்கும் போதும்   பாத்தியம் அர்க்கியம் – ஆசமனம் – அருச்சனை முதலியன வழிபாட்டின் அங்கங்களைக் கடைப்பிடித்தல். இவை  சிவபூசைக்குரியவை  அடியார் பூசையாகிய மாகேசுவர பூசைக்குமாம்.இவை சோடசோபசார மென்பர். அடியார்க் கமுதளிக்கும் பூசையிற் பாதம் விளக்கும் நியதியும் அது காரணமாகப் பெற்றபேறும் திருப்பெண்ணாகடத்துக் கலிக்கம்ப நாயனார் சரிதத்திற் கூறப்பெறும்.

இப்பாடலின் ‘’மண்டு காதலின்’’ என்ற தொடர், நூல்களில் விதித்தபடி இயற்றுவது என்றமட்டில் அமைந்துவிடாது மனத்திலே மிக்கெழுந்த ஆசையினாலே என்பதைக் குறித்தது.

‘’உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத்திறத்தினில் – நாலு  விதத்திலும் ஆறுசுவைத் திறத்திலும் இயன்ற உண்டி என்க. நாலு வித உண்டி – உட்கொள்ளும் வகைக்குத் தக்கவாறு உண்டி நான்கு வகையாகப் பிரிக்கப்படும். அவை – உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன என்பவையாம்.

ஆறுசுவை – கைப்பு, புளிப்பு, இனிப்பு,துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்பவை. மருந்துநூல் முறைப்படி உடற்கூற்றின் பற்பல தாதுக்களின் சத்துக்களுக்கும் பலவேறு வகைச் சுவைகள் வேண்டப் பெறுவன என்பர். உடல் நலத்துக்கேற்ற உணவு வகைகளை அன்புடன் சமைத்து ஆசையுடன் இடுதல் வேண்டும்.

‘’ஒப்பில்லாத தொண்டர் இச்சையின்‘’ என்ற தொடர் ஒப்பில்லாத நாயகர் தொண்டர் எனவும், ஒப்பில்லாத   தொண்டர் எனவும்,  ஒப்பிலா இச்சை எனவும் கூட்டி  மூவகை  உரை  பெற்றது.

தம்மிச்சையின்படி உணவிடாமல், தொண்டர்களின் விருப்பம், மனப் பக்குவம், மூப்பு ஆகியவற்றுக்கு  ஏற்ப,   அவர்கள்  தமது இச்சையின்படி அமுதுசெய்ய என்று பொருள். தொண்டர்களது இச்சையிலே நாயகர்நின்று விருந்தோம்பும் படி என்றலுமாம். நாயகரும் தொண்டரும் அமுதுசெய்ய என்றும்  பொருள் தரும். இச்சையின்படி அமுதுசெய்ய  அளித்தலாவது – அவ்வவரும் வேண்டியன வேண்டியவாறே பெற்றுண்ண அளித்தல். அளிந்துளார் – அன்புடன் கொடுத்து அவரன்புக்கு ஏற்ப  உளராயினார் என்றது குறிப்பு.

இப்பாட்டால் அடியார்களை உபசரித்து மாகேசுவர பூசை  செய்யும் முறை கூறப்பெற்றது. முன்பாடலில் கூறிய ‘’ஈரமென் மதுரப்பதம் பரிவெய்த முன் உரைசெய்த பின்’’  செய்யவேண்டுவன இவை என்க. இன்றைக்கும் மாகேசுவர பூசைகளிலே இத்திருப்பாட்டினையே பெரும்பாலும் ஓதித் துதித்துப் பூசிக்கும் வழக்கமும் காண்க. இவ்வாறு பூசிக்கப்பெற்ற அடியார்களான மாகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதமும் அதன் பயனும்  அடுத்த பாடலில் கூறினார்.

மல்கி எழுகின்ற சீரினைச் செய்யும் இப்பூசைக்குரியயாப்பாக ஆசிரியர் இப்பகுதியை எழுசீர் விருத்தத்தாற் பாடியருளிய அழகும் காண்க.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *