செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்!

1

ஔவை நடராசன்  

தமிழியக்கமாகவே வாழ்ந்த தனிப்பெரும் கவியரசர் புரட்சிப் பாவேந்தரின் மரபுக் கொடியை உயர்த்திப் பிடித்த அண்ணல் கவியரசர் மன்னர் மன்னன் மறைந்தார் என்ற செய்தி, மனத்துயரை ஆறுதல் கொள்ள முடியாமல் எரிதணலாக நெஞ்சையும் உடலையும் எரித்துக் கொண்டிருக்கிறது.

பாவேந்தருடைய படைப்புகளை நாட்டுடைமையாக்க கருதிய நாளில், நான் அரசு செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  முத்தமிழ் கலைஞர் மனம் பதற்றத்தோடு உடனே நாட்டுடைமை தொகையை மன்னர் மன்னனிடம் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

பாவேந்தர் குடும்பம் என்பது, தமிழினத்தின் தனிப்பெரும் செல்வமாகும்.  தமிழினம் பாவேந்தரின் பாட்டின் வரிகளுக்கு எப்போதும் கடன்பட்டது என்று இறுக்கமாகக் கூறினார்.

மன்னர் மன்னன் தம் வாழ்நாள் முழுவதும் எந்தப் பணியில் இருந்தபோதும் கணம் தவறாமல் பாவேந்தர் பாட்டுக்கள் பிறந்த நிகழ்வுகளை எழுதிக்காட்டினார்.  பாவேந்தருடைய பெருமிதம், எவருக்கும் வணங்காத மாட்சி, இன்றும்கூட பாவேந்தர் தொகுதியை தான் நினைக்கும்படி பதிப்பிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் நெஞ்சத்தில் இருந்தது.

உடல் முதுமைதான் அவர் உயிரைப் பறித்துவிட்டது. பாரதி கண்ணுங்கருத்துமாக அந்த வீரக்களிறு ஓய்ந்துவிடக்கூடாது என்று விழிப்பாக பார்த்து வந்தார்.  காலத்தின் கொடுமை அவர் கண்களை மூட வைத்துவிட்டன. ஆண்டு தவறாமல், பாவேந்தர் விழாவிற்கு என்னை அழைப்பதோடு, சென்னை வரும்போதெல்லாம் நான் யாருக்காக வருகிறேன், ஔவையைக் காண வருகிறேன் என்று சொன்னபோது நீங்கள் அதியமானுக்குப் பிறந்த பொகுத்தெழினி என்று ஒரு முறை குறிப்பிட்டேன்.

மூன்றாண்டுகளுக்கு முன்னர், தளர்ந்துபோயிருந்த என்னைப் பார்த்து, புரட்சிக் கவிஞருடைய இரும்பு உடலை இன்று வரை திண்மை குறையாமல் வைத்திருக்கிறேன் என்று பெருமைபட பேசினார். கருப்புக் குயிலின் நெருப்புக் குரல் “மன்னர் மன்னன்” பாவேந்தரை முழுவதுமாக காட்டிய ஒப்பற்ற காப்பியமாகும்.

மன்னர் மன்னனின் புகழ் என்றும் மறையாது.  அவர் கண்ட கனவுகளை பாரதியும், உறவினர்களும் நிறைவேற்றுவார்கள் என ஆறுதல் கொள்கிறேன்.  மன்னர் மன்னன் புகழ் வெல்க!

ஆறாத மனத்துடன் ஔவை நடராசன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செங்கோல் மன்னர் – சிந்திய கண்ணீர்!

  1. “ஆறாத மனத்துடன் ஔவை நடராசன்” இதுவும் ஓர் ஔவை மொழிதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *