முனைவர் ஔவை நடராசன்

கவியரசர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கிய நாளிலிருந்தே இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் புதுமைக்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்ட தனிப் பெருந்தகை எனப் பல முறைகள் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

சிற்பி அவர்களைப் பெரும் பேராசிரியர் என்று நினைக்கலாம். நாடறிந்த கவியரசர் என்று நாம் போற்றிப் புகழலாம். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களைத் தோள் மேல் சுமந்து அவர்களுக்கெல்லாம் ஆக்கம் தேடி, நன்மை செய்வதற்கு முன் நிற்கும் அவர் இந்திய நாட்டின் இலக்கியக் கழகமாகிய சாகித்திய அகாதெமியின் துணைத் தலைவராகவும் இருந்து ஆற்றி வருகிற தொண்டுகளை நாடு மறக்காது.

அருமைப் பேராசிரியர் சிற்பி அவர்கள், அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தவர். அருட்செல்வர் பேசும்போது சொல்வார், புரட்சி, புதுமை ஆகியவற்றிற்கும் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் சிற்பி அவர்கள்.  எவருக்கும் எளிதில் வளைந்து கொடுக்கமாட்டார்.  தன்னுடைய கருத்தை நேர்மை பட நின்று பேசுவதில் அவர் என்றும் சிறந்தவர்.  அவருடைய புலமை அடுக்கடுக்காக எடுத்துப் பேசுவதாகும்.

சிற்பி அவர்களுக்கு 85 வயதா? என்று கேட்கும்போதே நான் வியப்படைகிறேன்.

அண்மையில்கூட, கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து ஏழெட்டு இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு, மறுநாள் புது தில்லி சென்று அங்கு இலக்கியக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் என்பதை பார்க்கும் போது அந்த விரைவும் ஆற்றலும் சோர்வில்லாத திறத்தையும் கண்டு நான் வியப்படைகிறேன்.

பேராசிரியர் சிற்பி அவர்கள் தாம் தொட்ட துறைகள் அனைத்திலும் உயரத்தைத் தொட்டவர்.

தற்பெருமை தானறியாத தகைமையன் என்பது போல, அவருடைய அடக்கமும் ஆன்றவிந்த பெருமையும் போற்றத்தக்கவை.

கவியரசர், சிந்தனையாளர், சீர்திருத்தவாதி என்று எல்லாத் துறைகளிலும் பெருமை வாய்ந்தவர்.

கவியரசர் சிற்பி பல்லாண்டு காலம் வாழ்க.

பலருக்காகத் தொண்டு செய்யும் அவரின் கைகள், உதவி செய்வதற்காக நடந்து செல்லும் அவரின் கால்கள், தளர்ச்சி இல்லாமல் ஊருக்கெல்லாம் உதவிட வேண்டும் என்று ஊற்றெடுக்கும் மாட்சி, மனம் இளமையோடு இருக்க வேண்டும்.

அவர் வாழ்க பல்லாண்டு.

வாழ்க சிற்பியின் சிறப்பு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *