சா.கந்தசாமியும் எனது நினைவுகளும்

0

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்
ramachandran.ta@gmail.com.

மதுரை தியாகராசர் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு முதுகலைத் தமிழ் படிக்கும்போது சா. கந்தசாமி எனக்கு அறிமுகம் ஆனார். தமிழ்த்துறை நூலகம் பல அரிய புத்தகப் பொக்கிஷங்களைக் கொண்டதாக இருந்தது. பேராசிரியர்கள் பேச்சிமுத்து, அருணகிரி, கு.ஞானசம்பந்தம் போன்றவர்களின் ஊக்கத்தால் வாசிப்புப் பழக்கம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. சா.க வின் கதைகளைக் கைகளில் வைத்துக்கொண்டு கல்லூரியின் ஆற்றங்கரையோரத் தென்னந்தோப்புப் பகுதியில் படித்துத் திரிந்தது நினைவுக்கு வருகிறது. ஆலமர நிழலும் அரசமர இலையோசையும் இதம் தர இவரின் கதைகளோடு பயணித்தக்  காலம் அது. தெப்பக்குளம் நடு மண்டபத்தில் சாயங்காலம் வரை இவரின் கதைகளோடு உறவாடிய தருணங்கள் அற்புதமானவை.

சாயாவனம், விசாரனைக் கமிஷன், அவன் ஆனது, தக்கையின் மீது நான்கு கண்கள், ஆறுமுகச்சாமியின் ஆடுகள் போன்றவை இவரின் முக்கிய படைப்புகளாக விளங்கின. மேலும் கனடா குறித்த தனது பயண அனுபவங்களை இரண்டு நூல்களாக எழுதியுள்ளார். இவற்றைக் கவிதா பதிப்பகம் செம்மையாகப் பதிப்பித்துள்ளது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் சாயாவனத்தை வெளியிட்டுள்ளது.

இலக்கியத்தளத்தில் மட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த நிறுவனங்களிலும் (சாகித்ய அகாதெமி) இவரின் சமரசமற்ற பங்களிப்புப் போற்றத்தக்கது. ‘அவன் ஆனது’ என்ற நாவலைப் படித்து பெரும் வியப்பிற்கு உள்ளானேன். எளிய மனிதர்கள் சமூக அவலங்களில் சிக்கியடையும் அனுபவங்களின் தொகுப்பாக இந்நாவல் விளங்கியது. சமூக இயக்கத்தில் தன்மை இணைத்துக் கொள்ள முடியாதவனின் அவல வாழ்க்கை இந்நாவல். இவரின் நாவல்களில் கதைக் கூறும் முறையும் கதை இயங்கிச்செல்லும் போக்கும் மிகவும் யதார்த்தத் தளத்தை அடைந்து விடுகிறது. அழகியல் கூறுகளோ கலைத்தன்மையை நோக்கிய எத்தனிப்புகளோ இல்லாமல் கதைகள் நகர்ந்து செல்கின்றன.

தமிழ்ப் படைப்பாளி என்ற தோரணையில் இருந்து விடுபட்டு ஒரு கம்பிரமான மிடுக்கான தோற்றத்தில் வலம் வரும் ஆளுமையாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவர். சமரச மற்றவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படும் பொதுநிலையிலிருந்து மீறி தனது இருத்தலை மிகவும் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டவர் சா.க அவர்கள்.

இந்திய அளவில் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்ப் படைப்பாளிக்கும் மிகப் பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தவர் சா.க என்னும் கம்பீரமான ஆளுமை. தமிழ் இலக்கியச் சமூகம் இவரின் இழப்பை மனக் கனத்தோடு கடந்து செல்கிறது.

ஒரு படைப்பாளிக்கு ஒரு சமூகம் செய்யும் உண்மையான நினைவேந்தல் என்பது அவரின் படைப்புகளைப் புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதும் பரவலாக்குவதும் தான். பல விருதுகளைப் பெற்றுள்ள, பலருக்கு  விருதுகள் கிடைக்க காரணமாக இருந்துள்ள இவரின் படைப்புகளைப் போற்றுவோம். அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.  ஓர் இலக்கிய முன்னோடியை நினைவு கூர்வோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *