ஆ. கிஷோர் குமார் 

அயோத்தி 

அணி நகரமாய் விளங்கிய
ஒரு மணி நகரம்..
குறையே இல்லாத
ஒரு தனி நகரம்.
செழிப்பிலும் களைப்பிலும்
நிறை நகரம்..

அறுபதாயிரம் ஆண்டுகளாய்
அலுக்காமல் ஆண்டு
கொற்றக்குடையை விரித்து
வீரத்தில் ஆரமாய்
வீற்றிருக்கும்
தசரதன் பெயர் கொண்ட மன்னன்
அதன் காரணம்..

தயரதனின்  ஆளுகையில்
அயோத்தியே மின்னியது.
அரண்மனையை
அந்த  ஒளிச்சிதறல் பின்னியது…

அரசனின்
அலங்கரிக்கப்பட்ட
அரண்மனையில்
ஆயிரமாயிரம் நெய் விளக்குகள்..
அவற்றில் மூன்று
தசரதனின் முத்து விளக்குகள்..
கோசலை கைகேயி சுமித்திரை
என்ற பெயர் பூண்டு ஒளிர்ந்த
தசரதனின் ஒளி  விளக்குகள்..
அவை நெய் விளக்குகள் அல்ல..
தயரதன் அணைப்புக்காக  எரியும்
மெய்   விளக்குகள்..

தகவுடன்  நாடாண்ட  மன்னன்
மகவு இல்லாமல்
மனக்குறையில் தவித்து தளர்ந்தான்  ….
தன் குலகுரு வசிட்டரிடம்
கொட்டினான் அவன் குறையை..

வசிட்டர் 

இவர் மலையளவு கற்றவர்
இவர் வேள்வி வளர்த்தால்
வேதமே விரும்பி இவர்
வாயருகே சென்றமரும்..
இவர் தசரதனின் குலகுரு..

குருவின் கட்டளையின்றி
செருவுக்கும் செல்லமாட்டான் தசரதன்..

அவன் கண்ணில் தெரிந்த
கவலையும் திவலையும்
வசிட்டர் அறிந்தார்..
பின் வரிந்தார்..

தசரதனே
மான்கொம்புடன் கானகத்தில் பிறந்த
ரிஷ்ய ஸ்ருங்கர் எனும்
கலைக்கோட்டு முனிவரை
வணங்கி அழைத்து வா.
அவர் தலைமையில்
புத்ர காமேஷ்டி யாகம் நடத்து.
யாகம் முடிகையில்
உன் சோகம் தீரும்…

குருவின் கட்டளையைச்
சிரமேல் கொண்டான்..
கலைக்கோட்டு முனியைத்
தலைமை தாங்க வருமாறு
தண்டனிட்டு அழைத்து வந்தான் தயரதன்…

கலைக்கோட்டு முனி 

இவர் பிரம்மனின் பேரன்..
பெண் வாசனை அறியாப் பெருமுனி..
வேதமே இவர் புசிக்கும் சாதம்…
இவர் பாதம் பட்டால்
பாலை நிலத்திலும் பெய்யெனப் பெய்யும்.
அந்த அருமுனி தலைமையில்
யாகம் துவங்கியது.

காமத்தீ அழித்த பெருமுனி கை
ஓமத்தீ வளர்த்தது..
முனிவனின் மந்திர தாகத்தில்
வளர்ந்த நெருப்பு…
நெய்யைத் தண்ணீராய் விழுங்கி
வளர்ந்தது வான் வரை..

வேள்வியை வளர்த்தது வேதம்..
அதிலிருந்து வெளிப்பட்டது பூதம்..
பூதத்தின் கையில் தங்க வட்டில்..
வட்டிலில் இருந்தது ஒரு தெய்வ அமுது..

முனிவர் உரைத்தார்…
மன்னா வட்டிலில் இருப்பதை எடு..
உன் மனைவிகளுக்குப் பகிர்ந்து கொடு..
உன் வம்ஸத்திற்கு கிடைக்கும் வடு..
முனிவர் உரைக்க
மன்னன் பணிந்தான்

வட்டில் அமுதில் பாதியை அவன்
கோசலைக்குக் கொடுத்தான்..
மீதியில் பாதியைக்
கைகேயிக்கும் சுமித்திரைக்கும்
பகிர்ந்து கொடுத்தான்..

வெற்றி பெற்றது வேள்வி.
விடை பெற்றது
மன்னனின் சோகம்..
நால்வர் பிறந்தனர்
அரசிகள் மூவருக்கும்..

அகிலம் வணங்கும்
அரங்க நகரப்பன்
கோசலை வயிற்றில்
குழந்தையாய்ப் பிறந்தான்..
ராமன் எனும் நாமம் கொண்டான்

மற்றைய தினம் போல
அற்றைய  தினம் இல்லை
அது பகலவன் தன் கதிர்களை
அங்குமிங்கும் சிந்திக்கொண்டிருந்த
பங்குனி மாதம்
வளர்பிறையன்று
நவமி திதியில்
புனர்பூசத்தில்
நான்காம் பாதம்

வேதமாய் வந்து
பரப் ப்ரம்மம் பிறக்கையில்
ஐந்து கிரகங்களும்
உச்சத்தில் இருந்தன.
அச்சுதனை வணங்கி
அச்சத்தைத் துறந்தன..

வரதனின் அன்புக்குப்
பாத்திரமான பரதன்
அவன் கைகேயிக்குப் பிறந்தான்.
இலக்குவனும் சத்ருக்கனனும்
சுமித்திரைக்குப் பிறந்தனர்..
பார் புகழச் சிறந்தனர்..

சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *