எட்டுக் கோணல் பண்டிதன் – 2

0

தி. இரா. மீனா

ஷ்டவக்கிரன் ஜனக மன்னர் சந்திப்பும், நெருக்கமும்

அஷ்டவக்கிரனும், அவர் தந்தையின் குருவான உத்தாலக ஆருணியின் மகன் சுவேதகேதுவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஜனகமன்னரைக் காண அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் மிதிலையை நோக்கி வந்துகொண்டிருக் கும்போது வழியில் ஜனகரையும் அவரது பரிவாரங்களையும் சந்திக் கின்றனர். எதிர்ப்படும் காவலர் அங்கு கூடியுள்ள மக்களைப் பார்த்து “வழி விடுங்கள்! மன்னன் வருகிறார்… அவருக்கு வழிவிடுங்கள்…’ என்கிறார். அதைக் கேட்ட அஷ்டவக்கிரன் காவலரைக் கோபமாகப் பார்க்க, அவர் அவனைத் தள்ளிவிட முயல்கிறார். அஷ்டவக்கிரனின் தோற்றம் வித்தியாசமாகத் தெரிவதால் அவர் தன் செயலிலிருந்து பின்வாங்கி அவனைத் தள்ளி விடாமல் ’சொல்வது காதில் கேட்கவில்லையா? வழிவிடு, மன்னர் வருகிறார் என உரத்த குரலில் கூறுகிறார். அதற்கு “பார்வையற்றோர், ஊனமுடையவர்கள், பெண்கள், பாரம் சுமப்போர், வேதமறிந்தோர்.. என்ற வகைமக்களைக் கண்டால் எதிர்ப்படுபவர்கள்தான் அவர்களுக்கு வழிவிடவேண்டும் என்று உங்கள் மன்னனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்” என்று சத்தமாகச் சொல்கிறான். இந்தப் பேச்சைக் கேட்டு காவலர் அதிர்ந்து நிற்கிறார். ஜனகருக்கு அஷ்ட வக்கிரனின் இந்தச் சொற்கள் காதில்விழ அனைவரையும் நிற்கச் சொல்லி விட்டு உடல் குறைபாடுள்ள அவனைப் பார்க்கிறார். அவனுடைய தோற்றத்தை விட அவன் சொற்களே அவரைப் பாதிக்கின்றன ’அந்த இளைஞன் சொல்வது சரியே! அவனுக்கு நாம் வழிவிட வேண்டும்…’ அவர் கூறியதைக் கேட்டு அரச பரிவாரங்கள் அவர்களுக்கு வழிவிடுகின்றன.

இதையடுத்து அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் ஜனகரின் அரண்மனையை அடைந்த போது, அங்குள்ள வாயில் காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, “இது விளையாட்டு மைதானமில்லை, ஜனகரின் சபை உங்களுக்கு இங்கே என்ன வேலை? உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்களும், முனி வர்களும் கூடுமிடமிது. இங்கிருந்து போய்விடுங்கள். உங்கள் வயதுச் சிறுவர் கள் என்ன செய்வார்களோ அதைச் செய்யுங்கள்” என்கிறான்.

சுவேதகேது கோபமாக ஏதோ சொல்ல முயல அஷ்டவக்கிரன் அவனைத் தடுத்து “அப்படியென்றால் நரைத்த முடியும், நடுங்கும் முதுமையும் இருந்தால்தான் உள்ளே அனுமதிப்பேன் என்று சொல்கிறீர்களா?” என்று கேட்கி றான். காவலர் சிறிது தடுமாறிவிட்டு ’நான் சொல்லவருவது என்னவென்றால், வயதான பிறகுதான் உங்களால் வேதங்கள்பற்றி உணர முடியும், இளமையான இந்த நேரத்தில் அல்ல..’ தன் விளக்கத்தை அஷ்டவக்கிரன் புரிந்து கொள்வான் என்று காவலர் நினைக்கிறார்.

’நான் வேதம் கற்றவன், அதனால் உள்ளேபோக நீங்கள் அனுமதித்தாக வேண்டும்.’ என்று கட்டளையிடுவது போலப் பேசுகிறான். காவலர் மறுப்புத் தெரிவிக்க முயலும் பொழுதில் ஜனகர் அரண்மனை முற்றத்திற்கு வருகிறார். அஷ்டவக்கிரனைப் பார்த்ததும் அவருக்கு வியப்பேற்படுகிறது. அவன் சாதாரணமானவனில்லை என்றும், அவர்களின் சந்திப்பு இயல்பாக நிகழவில்லை என்றும் ஜனகர் உணர்கிறார். அவனை உள்ளே அனுமதிக்கக் கட்டளையிடுகிறார்.

ஜனகருடன் அவைக்குள் வந்த அஷ்டவக்கிரனை கூடியுள்ளவர்கள் வினோதமாகப் பார்க்கின்றனர். அம்மாதிரி்யான தோற்றமுடைய ஒருவனை அவர்கள் தங்கள் வாழ்வில் கண்டதேயில்லை. அவர்கள்  யாரையும் பொருட்படுத்தாமல் அஷ்டவக்கிரன் நேரடியாக மன்னனிடம் சென்று “இங்கு விவாதம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன், அதில் பங்கு பெற நான் விரும்புகிறேன்…” அவன் கூறியதைக் கேட்டதும் சபை முழுவதும் சிரிக்கிறது… இவ்வளவு அருவெருப்பான தோற்றம் கொண்ட வயதில் சிறிய ஒருவன் சிறந்த முனிவராகிய பண்டியை எப்படி வெல்லமுடியுமென்றும் அது அறிவற்ற செயல் என்றும் அனைவரும் கூறுகின்றனர். அவனைப் பார்த்துச் சிரித்தவர்களைப் பற்றிய சிந்தனையில்லாதவனாக நிற்கிறான்.

அவர்கள் அனைவரும் சிரிப்பை நிறுத்தியதும், அஷ்டவக்கிரன் அவர்களைப் பார்த்து கண்களில் நீர் வரும்வரை சிரிக்கிறான். அனைவரும்  வியப்போடு அவனைப் பார்க்கின்றனர். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு , ”இந்த அறிஞர்கள்தான் என்னுடன் சண்டையிட்டு விவாதிக்கப் போகிறவர்களா? ஜனகரின் சபை பெரும் பண்டிதர்களால் நிரம்பியிருக்குமென்று நினைத்திருந்தேன், ஆனால் நான் இங்கு பார்ப்பது சக்கிலியர்களைத்தான். இது உங்கள் சபையில்லையா? அல்லது நான்தான் தவறான இடத்திற்கு வந்துவிட்டேனா?’ அஷ்ட வக்கிரன் அமைதியாகப் பேசுகிறான்.

எப்படி இதை எதிர்கொள்வது என்று தெரியாமல் நின்ற ஜனகர் “நீ பேசுவதன் பொருளென்ன?சிறந்த பண்டிதர்களை நீ ஏன் அப்படிக் குறிப்பிடவேண்டும்?” எனக் கேட்கிறார். ”காலணி தைப்பவர்கள் தோலைப் பார்த்த அளவில் அது கொண்டு காலணியைத் தயாரிக்க முடியுமா இல்லையா என்று முடிவு செய்து விடுவார்கள்.. என்னால் என்ன செய்ய இயலுமென்பது உங்கள் மனிதர்களுக்குத் தெரியாது… என் தோற்றத்தைப் பார்த்துவிட்டு என்னால் விவாதத்தில் போட்டியிட முடியாது என்று முடிவு செய்து விட்டனர். அம்மாதிரி யானவர்களை உங்கள் ஆலோசகர்களாக வைத்திருக்கிறீர்கள்..’ அஷ்டவக்கிரன் சொல்ல அவையிலுள்ளவர்கள் தலை குனிகின்றனர்.

“தன்னை எதிர்கொள்வதற்கு முன்பே பல முனிவர்களைக் கொன்றவன் பண்டி. அதனால் பண்டியோடு சவால் விட்டு விவாதத்திற்கு வருபவர்களின் புலமையை முதலில் நான் சோதித்தறிவேன். எனக்கு உடன்பாடு என்றால் மட்டுமே அவர்களை அவனிடம் அனுப்புவேன்“ என்று ஜனகர் கூறுகிறார். தன்னை அவர் சோதிக்கலாமென்கிறான் அஷ்டவக்கிரன். அதையடுத்து உட்பொருள் கொண்ட பலகேள்விகளை ஜனகர் அவனிடம் கேட்கிறார். அறி வார்ந்த கேள்விகளும், அதற்கு மிக எளிமையாகக் கிடைக்கும்  பதில்களும் அவையினரை வியப்படையச் செய்கின்றன. ஜனகரே வாயடைத்துப் போகிறார்.

மறுநாள் அஷ்டவக்கிரன் — பண்டி இடையில் விவாதம் நடக்கிறது. அனை வரும் மெய்மறந்து கவனிக்கின்றனர். ஜனகரின் கேள்விகளுக்கு அஷ்ட வக்கிரன் அளித்த பதில்களை அவையினர் கேட்டிருந்ததால், இன்று பண்டியின் வெற்றி முகம் மாறலாம் என்று நினைக்கின்றனர். விவாதம் மிகுந்த அளவு புதிரான கருத்துக்களைக் கொண்டதாக இருக்க, அறிவு நிறைந்த அஷ்டவக்கிரனிடம் பண்டி தோற்றுப் போகிறான். ஜனகர் உட்பட அனைவரும் மகிழ்ச்சியின் எல்லையிலிருக்க அஷ்டவக்கிரன் எவ்வித உணர்வும் வெளிப்படுத்தாதவனாக இருக்கிறான்.

’பண்டியின் விதிப்படி, அவர் விவாதத்தில் தோற்றுப்போனால், போட்டியில் வெற்றி பெற்றவர் எதைக் கேட்டாலும் அவர் தரவேண்டும்…’ என மன்னன் சொல்ல, அஷ்டவக்கிரன் ’பண்டி என்ன விரும்பினாரோ அதுவே எனக்கும் வேண்டும். என் தந்தை உட்பட மற்ற முனிவர்கள் மூழ்கடிக்கப்பட்ட ஏரியில் பண்டி மூழ்கடிக்கப் படவேண்டும்.. இதுதான் என் விருப்பம்’ என்கிறான்.

ஜனகர் எதுவும் சொல்லவில்ல, சொல்வதற்கு எதுவுமில்லை. அவையினர் அஷ்டவக்கிரனின் முடிவுகேட்டு மகிழ்கின்றனர். அப்போது பண்டி மன்னரிடம் ’அஷ்டவக்கிரனின் விருப்பம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நான் என்னைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.!” என்கிறான்.

“நான் எங்கிருந்து வந்தவன் அல்லது இந்த விவாதங்கள் ஏன் அரங்கேறின என்றெல்லாம் உங்களுக்குத் தெரியாது. நான் உண்மையைக் கூறப்போகிறேன். நான் கடற் கடவுள் வருணனின் மகன். என் தந்தை கடலினடியில் ஒரு வேள்வி நடத்த நினைத்து, அதற்கு வேதங்களை நன்கறிந்த பண்டிதர்கள் வர வேண்டுமென்று விரும்பினார். அவர் விருப்பத்தை நிறைவேற்றவே நான் இங்கு வந்தேன். விவாதத்தில் பங்கு கொண்டு என்னிடம் தோற்றவர்களை நான் நீரில் மூழ்கடித்து கடலிற்கடியில் தந்தையிடம் அனுப்பிவிடுவேன். அங்கு அவர்கள் கூடி வேள்வி நடத்துவார்கள் “.

முனிவர்கள் வேள்வி நடத்துவதற்காக மட்டும் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று பண்டி கூறியது… அவ்வாறெனில்… அஷ்டவக்கிரனின் இதயம் படபடக்கிறது. ’மன்னனே! நீரில் மூழ்கடிக்கப்பட்ட முனிவர்கள், அறிஞர்கள் யாருமே இறக்கவில்லை. என் தந்தை நடத்திய வேள்வி நேற்றுத்தான் முடிவடைந்தது. நாம் பேசிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அவர்கள் கடலிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்..’ பண்டி பேசி முடிக்கிறான்.

மன்னன், அஷ்டவக்கிரன், அவையினர் அனைவரும் பண்டியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போகின்றனர். அனைவரும் ஏரிப்பகுதிக்குச் விரைந்த போது நீரிலிருந்து முனிவர்களும், அறிஞர்களும் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருப்பதைக் காண்கின்றனர்.

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *