வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36

0

தி. இரா. மீனா

சித்தராமன் தொடர்ச்சி

1. “நீரிலுள்ள மீன் தன் நாசியிடம்
நீரைச் சேரவிடாத விதத்தைப் பாரய்யா
சரணன்  உலகத்தினூடே இருப்பினும்
உலகத்தைத் தன்னருகே விடமாட்டான் பாரய்யா.
மீனுக்கு அந்த அறிவையும்
சரணனுக்கு இந்த அறிவையும் கொடுத்தனையே
கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

2. “எனக்குத் தெரியும் எனக்குத் தெரியுமெனச்
சொன்ன பலரும் அகந்தையில் சென்றனர்.
எனக்குத் தெரியவில்லை,தெரியவில்லையெனச்
சொன்ன பலரும் மறதியில் சென்றனர்.
தெரிந்தோம் என்பதும் தெரியவில்லையென்பதும்
ஞானத்தின் முட்டுக்கட்டை.
தெரிந்தால் அறிவு, மறந்தால் அறிவீனம்
தெரிந்தும் தெரியாதவன் தெளிந்த
நீரின் கமல கபிலசித்த மல்லிகாஜூனன் தானே”

3. “அத்வைதம் பேசமுடியும் கோடி தடவைகள்.
தூயபக்தி நன்னடத்தையில் உறுதியோடு
ஒரு தடவை ஒழுகமுடியுமா?
சொற்படி நடந்து , நடப்பது போல் சொல்கின்ற
தூயபக்தி நன்னடத்தையில் உயர்ந்தோர்தம்
பதம் வணங்கி வாழ வைப்பாய் ஐயனே,
கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

4. “எண்ணம் விரிய இலிங்கமென்றானது
எண்ணம் பிரிய கல்லென்றானது
எண்ணம் ஒன்றாதபோது யாதொன்றும் ஆகாது
கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

5.  “களிமண் ஒன்று சட்டிகள் பன்னூறு
மனம் ஒன்று செயல்கள் பன்னூறு
தந்தை ஒருவன் சந்ததிகள் பன்னூறு
கபிலசித்த மல்லிகார்ஜூனனுள் உலகங்கள் பன்னூறு”

6.  “தாங்கள் வேதப்பிரியனல்லன் ஐயனே;
தாங்கள் சாத்திரப் பிரியனல்லன் ஐயனே ;
தாங்கள் நாதப் பிரியனல்லன் ஐயனே ;
தாங்கள் புகழ்ச்சிப் பிரியனல்லன் ஐயனே;
தாங்கள் உத்திப் பிரியனல்லன் ஐயனே;
பக்திப் பிரியனென நம்பினேன்
காத்திடுவாய் கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

7. “பெண் அழிந்தபின் மண்ணின் விருப்பமேன்?
மண் அழிந்தபின் பொன்னின் விருப்பமேன்?
முக்கண்ணன் ஆனபின் மூன்றின் விருப்பமேன்?
கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

சித்தாந்தி வீரசங்கய்யா

பெயருக்கேற்றாற் போல சித்தாந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர். ’கோளாகார விஸ்வ விரகிதலிங்க ’இவரது முத்திரையாகும்.

“நீராலான முத்தை அமைதியான நீரில் போட
அந்நாளின் நீர் அதுவென முத்து கெட்டியாகுமா?
அல்லது மீண்டும் அது நீராகுமா?
இவ்விரண்டின் பேதமறிந்தால்,
துவைதம், அத்துவைதம் அறிந்தவரென்பேன்.
இதுவன்றி வெற்றி தோல்விக்குச் சமர் புரியும்
கல் மனத்தவருக்கு எங்குள்ளதோ
கோளாகார விஸ்வவிரகித இலிங்கமும் அதன் சாத்தியமும்”

சுங்கத பங்கண்ணா

சுங்கம் வசூலிப்பது இவரது காயகம். ’பங்கேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

1. “உணவு மீது முனைப்பு
உறக்கம் மீது முனைப்பு
பெண்மீது முனைப்பிருப்பது போல
இலிங்கம் மீதுமிருக்க வேண்டும்
சிவலிங்கத்தில் கவர்ச்சி கொண்டால்
தன்னையே கொடுப்பான் சென்ன பங்கநாத தேவன்”

2.  “உடல் போர்க்களமானது
புலன்களின் கூட்டம் சிதைந்தது
உடலரசன் தடுமாறினான்
சுயமெனும் ஆற்றலின் பேரரசன் வென்றான்
பங்கேவரனின் அன்பினால்“

சூளே சங்கவ்வா

’நிர்வச்சேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

“ஒருவனுக்கு நேரமொதுக்கி
வேறொருவனோடு கூடினால்
நிர்வாணமாக்கி அடிப்பாரையா
விரதக்கேடுடையவனோடு சேர்ந்தால்
காய்ச்சிய கம்பியால் கை செவி மூக்கறுப்பாரையா
இதையறிந்து விரும்பேன், விரும்பேன்
உம்மீதாணை நிர்வச்சேஸ்வரனே.”

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *