நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 27

உறுகண் பலவும் உணராமை கந்தாத்
தறுகண்மை ஆகாதாம் பேதை, – ‘தறுகண்
பொறிப்பட்ட வாறல்லால், பூணாதுஎன் றெண்ணி,
அறிவச்சம் ஆற்றப் பெரிது‘.

பழமொழி –  பேதை எதையும் செய்யமாட்டான்

வியாபாரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் திடீரென அவனுக்கு என்ன வந்துவிட்டது. இந்த ஐந்து வருடத்தில் அவன் எப்படியெல்லாம் விருத்திசெய்திருப்பான் என கோட்டை கட்டிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். ஏன் இப்படி. என்னவாக இருக்கும்.

தீபாவளி பலகாரங்கள் எதுவும் இனிக்கவில்லை. மனம் ஒரு குரங்குதானே. அதனால்தானோ என்னவோ முன்னால் தட்டு நிறைய வீட்டில்செய்த இனிப்புகள் இருந்தும் எதையும் கையில் எடுக்க மனம் வரவில்லை.

நண்பனின் தந்தை அவனைத் திட்டும்போதெல்லாம் எப்படி வக்காலத்து வாங்கி இருக்கிறேன். மனம் யோசனையில் ஆழ்ந்தது.

நீ எதுக்கும் லாயிக்கில்லாதவன்டா. உக்காந்து தின்னே காலத்தக் கழிச்சிரு. உன் சோம்பேறித்தனத்த வளக்கறதுக்கு எட்டு காரணத்தச் சொல்லு. வெளியில இறங்கி உலகத்தப்பாத்ததானே பிழைக்கிற வழி தெரியும். நாலு சுவத்துக்குள்ள உக்காந்து நீயும் உங்கம்மாவும் கோட்ட கட்டிக்கிட்டே இருங்க. ஏண்டாப்பா நீ கூடவா இவனுக்கு புத்தி சொல்லக்கூடாது. ஏதோ சென்னைக்குப் போகப்போறதா கேள்விப்பட்டேனே. உண்மையா.

ஆமா அங்கிள். நான் எங்க சித்தப்பா வீட்ல போய் இருந்துக்கிட்டு வேல தேடப்போறேன்.

எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சவொடனே இவனையும் கூப்பிட்டுக்கறேன். ஒப்புக்குச் சொன்ன வார்த்தை அன்று.

பள்ளிப்படிப்பில் தொடங்கி கும்பகோணம் கல்லூரி வரை நானும் என் நண்பன் நாகுவும் ஒண்ணாத்தான் படிச்சோம். அவன் கொஞ்சம் பயந்த சுபாவம். எதிலயும் ரிஸ்க் எடுக்க மாட்டான். அவங்க அம்மாவும் அந்தக் கொணத்த திசை திருப்பி பலமான கடவுள் நம்பிக்கைய விதைச்சாங்க. நாளாவட்டத்துல அது கடவுள் நம்பிக்கையா இல்லாம கடவுள் பயமா மாறிப்போச்சு. டேய் பரீட்சைக்கு முன்ன பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டுட்டு வரேன். கோபிச்சுக்கப் போறாருங்கற அளவில்.

இதை அவன் அம்மாவின் பார்வைக்கு கொண்டு சென்றபோது நல்லது தம்பி நான் அவனுக்கு புத்தி சொல்றேன் என்றாள். அவள் புத்தி சொல்லி வளர்த்தவிதத்தைத் தான் நான் இப்ப பாக்கறேனே. போனவாரம் தீபாவளி அன்று அவன் அப்பாவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

கால ஓட்டத்தில் ஒருவரையொருவர் மறந்து வேலை, திருமணம் என்று வேறு வேறு திசைகளை நோக்கி பயணித்து விட்ட பின் அவரின் குரல் என் கடந்த காலத்தை மீண்டும் வரவழைத்ததுபோல்….

தம்பி நான் உங்க நண்பர் நாகுவோட அப்பா பேசறேன். ஊர மறந்துட்டீங்க போல. இந்தப்பக்கமே வரதில்ல. முடிஞ்சப்போ குடும்பத்தோடவந்து எங்க வீட்ல தங்கிட்டுப்போங்க. உங்க நண்பரும் சந்தோஷப்படுவாரு. உங்கபையனும் என் பேரனும் சேந்து விளையாடலாம்.

கேட்க நன்றாக இருந்தது. இதோ வந்தேவிட்டோம். என்ன ஆச்சர்யம். நாகு மட்டும் மாறவேயில்லை. ஏதோ கடை வைத்து நடத்துகிறானாம். அதைப்பெரிசாக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அதே ஓட்டுவீட்டில்தான் வசிக்கிறார்கள்.

எனக்கு என்னடா குறைச்சல். சாப்பாட்டுக்கு கடை வருமானம் இருக்கு. போய்வர சைக்கிள் வாகனம் இருக்கு. ஒத்த பையன். நாம படிச்ச பள்ளிக்கூடத்திலயே அவனையும் சேத்திருக்கேன். நல்லாப் படிக்கிறான். மனைவி நச்சரிப்புதான் தாங்கமுடியல. வருமானம் பத்தாதாம். எங்கப்பாவும் அவகூட ஜால்ரா போடறார். வங்கியில கடன் வாங்கி கடையை விரிவுபடுத்துனு.

நீயே சொல்லு. கடவுள் யாருக்கு எது கொடுக்கணும்னு விதிச்சிருக்காரோ அதுதானே கிடைக்கும்.  அதுக்குமேல ஆசப்பட்டா அவருக்குக் கோபம் வராதா. இந்த விஷயத்துல எங்கம்மா தான் சரி.  என்னய தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லச் சொல்லியிருக்காங்க. கடவுளா மனமிரங்கி கொடுத்தா கொடுக்கட்டும். இல்லன்னா விதிவிட்ட வழினு இருப்பேன். அவன் பேசப்பேச எனக்கு ஆச்சரியம்

‘அறிவச்சம் ஆற்றப் பெரிது’ என்னும் பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. தனக்கு வந்து சேர்ந்த துன்பம் பலவற்றுக்கும் காரணம் அறியாமலேயே அது விதிப்பயன் என்றெண்ணி தீர்க்க முயற்சிக்காமலிருப்பவன் பேதையாவான். ஆம் நாகுவும் ஒரு பேதையே.

பாடல் – 28

சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
பட்ட இழுக்கம் பலவானால் – பட்ட
பொறியின் வகைய கருமம்; அதனால்,
‘அறிவினை ஊழே அடும்’.

பழமொழி – ‘அறிவினை ஊழே அடும்’

நம்ம ராஜேந்தர் சாரோட வழக்கப் பத்தி கேள்விப்பட்டயா. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குடா. எவ்வளவு பொறுப்பான வாத்தியார். ஒழுக்கத்த நம்மளுக்கு கத்துக் கொடுத்தவரே அவர் தான். என்னால அவர் அப்படிச் செஞ்சிருப்பாருன்னு நம்ப முடியல. நீங்க கண்டிப்பா ஒருநாள் ரொம்ப பேமஸ் ஆவிங்க சார்னு நான்பலமுறை சொல்லியிருக்கேன். அதுக்காக இப்படியா. சென்னையிலிருந்து வந்திருக்கும் நான் என் பால்ய நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பு உள்ளூர் அரசுப்பள்ளியில் படித்த எங்களுக்கு இராஜேந்தர் சார் பன்னிரண்டாம் வகுப்பு கணித ஆசிரியர். அவராலேயே நல்ல மதிப்பெண் பெற்று சென்னை பொறியியற்கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்மட்டும் இல்லையெனில் எங்களில் பாதிபேரின் வாழ்க்கை ப்ளம்பர் மற்றும் பிட்டர் எனதான் கழிந்திருக்கும். பொறியியல் படிப்பை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

கடந்த ஒருவாரமாக ஊடகங்களில் அவரைப்பற்றி வரும் செய்திகளை மற்றவர்கள் போல் கடந்துபோக என்னால் முடியவில்லை. இப்போது நல்லபணியில் இருக்கும்நான் ஏதாவது ஒருவகையில் அவருக்கு உதவ வேண்டும். அதனால் தான் என் உற்ற நண்பனிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறேன். அவன் தற்போது நாங்கள் படித்த மேல்நிலைப்பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறான்.

ஆமாண்டா. நான் அந்தப் பள்ளியில ஆசிரியர்னாலும் சார எதிரில பார்க்க நேர்ந்தா இப்பவும் எழுந்து நிப்பேன். அவருக்குச் சரிசமமா உட்காற மனசு வராது. திடீர்னு அவரப் பத்தி புகார் வந்தவொடனே பள்ளிக்கூடமே ஆடிப்போயிடுச்சு.

அவருடைய கடைசி தம்பி தன் மகன டாக்டர் ஆக்கணும்னு விருப்பப்பட்டிருக்கார்போல. அதுக்காக சார்கிட்ட உதவி கேட்டிருக்காரு. தம்பி ஊர்ப்பக்கம் விவசாயம் பாத்துக்கிட்டிருக்கறதால சார் அவர் மகனத் தன் வீட்லயே வச்சி படிக்க வச்சிருக்கார். அப்பறம் கோச்சிங் சென்டர்ல சேக்கணும்னு நெனச்சப்போதான் வினையே தொடங்கிச்சு. நம்ம பள்ளியில புதுசா ஒரு கெமிஸ்டரி சார் சேந்திருக்கார். அவர் குடும்பமே கோச்சிங்சென்டர் வச்சு நடத்தறவங்க போல. அவர நம்பி நீட் கோச்சிங்காக தன் தம்பி மகன அவரோட சென்டர்லயே சேத்து விட்டுருக்காரு. சேரும்போது பத்துபக்கத்துக்கு ஒரு விண்ணப்பம் நிரப்பச்சொல்லியிருப்பாங்க போல. அதில கீழ எழுதியிருந்தத எல்லாம் சரியாவாசிக்காம கூட வேலை பாக்கறவர்தானேனு நினைச்சு சார் கையெழுத்து போட்டிருக்கார்.

இவருடைய தம்பி மகனுக்கு நீட் தேர்வுல சரியா மதிப்பெண் கிடைக்கல. ஆனா அவங்க உங்க தம்பிமகன் பெயரில வேற ஒருபையனும் எழுதி இருக்கான் அது க்ளியர் ஆயிருக்கு. நீங்க இருபதாயிரம் கட்டணம் எங்களுக்குக் குடுத்தீங்கன்னா உங்களுக்கு சீட் நிச்சயம்னு சொன்னாங்களாம். அப்ப அவருக்குக் கோபம் வந்திருச்சு. முறையாப் படிச்சு வாங்கினவங்க பாதிக்கப்படுவாங்கனு கூக்குரல் போட்டு போலீசுக்குத் தகவல் குடுத்துட்டாரு போல.

அப்பதொடங்கினது தலவலி. அந்த கோச்சிங் சென்டர் காரருக்கு அரசியல்ல பெரியபுள்ளிகளத் தெரியும்போல. பணம் குடுத்து சரிகட்டிட்டாரு. பழி முழுக்க சார்மேல வந்திருச்சு. பேராசப்பட்டு அவர் சென்டர நிர்ப்பந்தப் படுத்தினதாவும் அதுக்காக அவர் எழுத்துல எழுதிக்கொடுத்ததாவும் வழக்கு பதிவு பண்ணிட்டாங்க.

முன்ன அவர் படிக்காம கையெழுத்து போட்டது வினையாப் போச்சு. அதில தாங்கள் எந்த வழியிலாவது (ஆள் மாறாட்டம் செய்தோ/பிற வழியிலோ) நீட் தேர்வில் என்மகனைத் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன்னு எழுதியிருந்தத கவனிக்காம அவர் கையெழுத்துபோட்டிருக்கார் போல.

இப்போ என்னடான்னா….  என்னய்யா நீயே கையெழுத்து போட்டுட்டு கெடைக்கலன்ன வொடனே இவுங்கள மாட்டி விடப் பாக்கறனு போலீசு திட்டறதப் பாக்க சகிக்கல. இதத்தான் ‘அறிவினை ஊழே அடும்’ னு பழமொழியாச்சொல்லுவாங்க போல. அறிவாளி கூட தன்னோட தலையெழுத்தால சிலநேரம் அவத்தைப்படுவாங்கறது தான் அதோட அர்த்தம். .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *