-மேகலா இராமமூர்த்தி

கள்ளமில்லாப் புன்னகைப் பூக்களை காமிராவுக்குள் அடைத்து வந்திருப்பவர் திருமிகு. நித்தி ஆனந்த். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்கு ஏற்றதெனத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!

”பொங்கிவரும் மழலையரின் மங்கலச் சிரிப்பதனில் 
தங்காது பறந்திடும்நம் துயரமெல்லாம் வெகுதூரம்!”

இனி, கவிஞர்கள் வருகிறார்கள்… மழலையர் குறித்துக் கவிசொல்ல!
நம் மனம் வெல்ல!

*****

தாயில்லாப் பிள்ளைகளின் முகத்தில் புன்னகை ஒளிரத் தன்னைத் தியாக தீபமாய் மாற்றிக்கொண்ட அக்காவின் தூய அகத்தைப் போற்றுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

தியாக தீபம்…

மானாவாரிப் பயிராய்த்
தானாய் வளரும்
தாயில்லாப் பிள்ளைகள்..

பெற்றவர்கள் இல்லாதபோது
மற்றவர்கள் போற்ற
உடன்பிறப்பு உறுதுணையாகிறது,
அன்னையாய் தந்தையாய்
ஆகிறாள் அக்காவே..

உடன்பிறப்புகளின்
உதட்டுச் சிரிப்பு நிலைக்க
அவள்
உருகும் மெழுகுவர்த்தியாய்
உதவி,
தன்சுகம் மறந்த
தியாக தீபமாய் ஒளிர்கிறாள்…!

*****

”வாழ்க்கைப் பயணம் தருகின்ற வலிகளால் சிரிப்பைத் தொலைத்துவிடாதீர்கள்! காலங்கள் கடந்தாலும் தொடரட்டும் இந்தக் களிப்பு!” என்று மழலையருக்கு அறிவுரை பகர்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

சிரிப்புத் தொடரட்டும்!

கள்ளமில்லா
வெள்ளைச் சிரிப்பு!
கடவுள் வாழும்
உள்ளங்களின் சிரிப்பு!
வித்தை காட்டுபவர் செய்த
வேடிக்கையால்
விளைந்த சிரிப்போ!
விலங்கினக் குரங்கின்
சேட்டைகளால்
எழுந்த சிரிப்போ!
வளர வளர
வாழ்க்கைப் பயணத்தில்
வருகின்ற சோதனைகளின்
வலிகளால்
வாய்விட்டுச் சிரிக்காமல்
நோய்த் தொற்றுக்கு ஆளாகி
நொறுங்கி விடாதீர்கள்!
காலங்கள் பல கடந்தாலும்
தொடரவேண்டும்
இந்தக் களிப்பு!

*****

அறிவைச் சொல்லிக் கொடுப்பதில் மாற்றங்கள் கொண்டு வந்து
வெற்றி காணுங்கள்! அதைவிடுத்து அறிவைச் சோதிக்கத் தேர்வு என்பது
தீர்வு ஆகுமோ? என்று மழலையர்க்குப் பொதுத்தேர்வு நடத்துவதன் பாதகத்தைத் தன் பாவில் விளக்குகின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

ஐந்தாவது
எட்டாவது
வகுப்பு
மாணவர்கள்
கண்டிப்பாக
அரசு பொதுத்தேர்வு
அறிவித்தீர்கள்

பிஞ்சு மனதில்
அச்சமோ அச்சம்

நடந்தது என்ன

ஒன்று முதல்
பதினொன்று
வரையில்
தேர்வே இல்லை

ஒன்பது வரையில்
ஆல்பாஸ்

குழந்தையும் தெய்வமும்
ஒண்ணுன்னு
உணர்த்தி விட்டது
காலக் கடிகாரம்

மாற்றம் வேண்டும்
ஆணிவேரில்
கிளைகளில் அல்ல

அறிவைச் சொல்லி
கொடுப்பதில்
மாற்றங்கள்
கொண்டு வந்து
வெற்றி காணுங்கள்!

அதை விட்டுவிட்டு
அறிவை சோதிக்கத்
தேர்வு என்பது
தீர்வு ஆகுமோ?

மழலைப் பள்ளி
மகத்தான
மாற்றங்கள்
கண்டால்

மற்ற பள்ளியில்
புரிதல் எளிது!

ஜப்பானியக்
கல்விமுறை
மழலைப் பள்ளிக்கே
முன்னுரிமை

தேசப் பற்று
ஒழுக்கம்
தற்காப்புக் கலை
வாழ்வியல் பாடமாக!

அதை விட்டு விட்டுத்
தேர்வில் மட்டுமே
மாற்றங்கள் என்பது
தடுமாற்றங்கள்!

*****

”காமிராவைக் காவிக்கிட்டுக் கனபேரு திரியிறாக
சாமிக்கிட்ட வேண்டிக்குங்க காத்துக்கச் சொல்லி – நம்ம
சந்ததியின் தலையை காதைப் பார்த்துக்கச் சொல்லி.” என்று இந்நிழற்படத்தை எடுத்த நிபுணர் அனைவரையும் முழுமையாகப் படத்தில் கொண்டுவராததைப் பகடி செய்து பாட்டெழுதியிருக்கின்றார் திரு. சித்தி கருணானந்தராஜா.

கொலை வெறி

அண்ணாவின் தலையை வெட்டி அக்காவின் காதறுத்து
என்ன மட்டும் உருப்படியா விட்டிருக்காரு – அவரு
எங்க ஊரு தலைசிறந்த போட்டோக் கிராபரு

சிரிச்சுக்கிட்டு நிக்கச்சொல்லி சிதறாமப் பதறாம
மறிச்சு வச்சி எங்களையவர் படமெடுத்தாரு – அண்ணன்
மண்டையைில்தான் பாதியில்லை பேத்துப்பிட்டாரு

தலைவெட்டி நித்தியண்ணன் தரமான காமிராமென்
கொலைவெறியில் நின்னுக்கிட்டு படமெடுத்தாரு – எங்களைக்
கொல்லாமல் விட்டுவிட்டார் கடவுள் காத்தாரு.

காதைவெட்டி அக்காவின் கதை முடிக்கப் பாத்தாரு
வேதனையைத் தாங்கிக்கிட்டு சிரிச்சு நின்னாளு – அவளு
வீரமுள்ள பொண்ணு நெல்ல விவரமான ஆளு

கொத்துனாலும் கொதறினாலும் நித்தியண்ணன் கொலைவெறிய
எத்தனைதான் தரமின்னாலும் நாங்க தாங்குவோம் – அவரு
எடுக்கப் போகும் படத்துக்கெல்லாம் போஸு குடுப்போம்.

இரக்கமுள்ள மனிதரவர் என்னை மட்டும் வுட்டுப்பிட்டார்
சிரத்தை வெட்டி அரியாமத் தப்ப விட்டாரு – அவரு
சிந்தையில கனிவிருக்கு உயிரைத் தந்தாரு.

காமிராவைக் காவிக்கிட்டுக் கனபேரு திரியிறாக
சாமிக்கிட்ட வேண்டிக்குங்க காத்துக்கச் சொல்லி – நம்ம
சந்ததியின் தலையை காதைப் பார்த்துக்கச் சொல்லி.

அரகரோகரா சாமி அரகரோகரா
அரகரோகரா சாமி அரகரோகரா

*****

”கடற்கரைச் சோழிகளாய், காந்தக் கதிர்களாய், கபடமில்லா நகைசிந்தி என்றும் மகிழ்ந்திருங்கள்” என்று மழலையரை வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

கண்களைச் சுருக்கி
வெண்பற்களைக் காட்டும்
உங்கள் புன்னகை
அதில் எத்தனை வெகுளித்தனம்!!

முத்துப் பற்களாய் முல்லைப் பூக்களாய்
கடற்கரைச் சோழிகளாய்க்
காந்தக் கதிர்களாய்
இதில் கள்ளமில்லை கபடமில்லை
இப்படியே நகைத்திரு
சுற்றமும் நட்பும் என்றும் சூழ
சிரித்திருங்கள் மகிழ்ந்திருங்கள்

*****

”சென்றதை எண்ணி வருத்தமில்லை; வருவதை நாடி ஏக்கமில்லை; இன்றைய பொழுதின் இன்பமதை இயல்பாய்க் கொண்டாட மறப்பதில்லை” என்று பிள்ளைகளின் குணத்தை எதார்த்தமாய்த் தம் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

பிள்ளைப்பருவம்

பட்டிதொட்டி அனைத்திலுமே
பகைமை கொண்ட அனைவரையும்
முட்டிமோதி வெற்றி கொண்டு
பட்டம் சூடும் சூழ்ச்சியில்லை…

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
ஒட்டிக் கட்டி முடித்து வைத்து
கவலைக் கடலில் தத்தளித்துத்
துன்பம் கொள்ளும் நிலைமையில்லை!

தோல்விக்கு அஞ்சும் வீரமில்லை
வெற்றிக்கு வாடும் வாட்டமில்லை
அச்சம் நாணம் இச்சை இல்லை
ஏதும் இல்லையென்ற வாட்டமில்லை

சென்றதை எண்ணி வருத்தமில்லை
வருவதை நாடி ஏக்கமில்லை
இன்றைய பொழுதின் இன்பமதை
இயல்பாய்க் கொண்டாட மறப்பதில்லை

கள்ளம் கபடம் சூதுமின்றி
வெள்ளை உள்ளம் கொண்டு
பிள்ளைகள் வாழும் வாழ்க்கையைப்போல்
இன்பம் ஏதும் உலகிலில்லை

*****

மழலையரின் மனத்தைப் பல்வேறு உளவியல் கோணங்களில் ஆராய்ந்து எழிலார் கவிவடித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…

சிரித்து வாழ வேண்டும்
சிரித்து வாழ வேண்டும்
சிரித்து வாழ்கிறோம்
நிகழ்காலமே முக்காலமென!

இறந்த கால நினைப்பேது?
எதிர்காலச் சிந்தனையேது?

சிரித்து சிரித்து வாழ்கிறோம்
அரை வயிற்றுக் கஞ்சி
அழுக்கடைந்த ஆடை
வறுமை இல்லை
மனதின் எண்ணத்திற்கு!

சிரித்தே வாழ்கிறோம்
சிரித்தே வாழ்கிறோம்
நிகழ்காலமே
முக்காலமென!

எக்காள ஏளனம் இல்லை
எவர் மீதும் பொறாமை
எண்ணம் எள்ளளவும் இல்லை!

சிரித்தே வாழ்கிறோம்
சிரித்தே வாழ்கிறோம்
நிகழ்காலமே முக்காலமென!

அன்பு தானே வலிமை
புகட்டியது எளிமை

பெரியோரை மதிக்கிறோம்
பெரியோரைத் துதிக்கிறோம்

சிரிக்கும் சிரிப்பு
தருமாமே ஆரோக்கியம்!

ஆரோக்கியம் தானே
வாழ்வின் பாக்கியமே!

மனிதருக்கு
இறைவன் தந்த வரம்
சிரிப்பு தானே!

சிரிக்க மறந்தால்
சிரிப்பைத் துறந்தால்
பூரிப்போ பரிதவிப்பிலே!

சிரிப்போம்
சிரிப்போம்
சிரித்துக்கொண்டே
மற்றவர்களையும்
சிரிக்க வைப்போம்!

”அரைவயிற்றுக் கஞ்சி குடித்தாலும், அழுக்கடைந்த ஆடை உடுத்தினாலும் அன்பே வலிமையாய்க் கொண்டு, எண்ணத்தில் ஏழ்மையின்றிச் சிரித்து மகிழும் மழலையர் இவர்” என்று எளிய வாழ்க்கையிலும் இனிமைகாணும் குழந்தைகள் மனத்தைத் தம் கவிதையில் படம்பிடித்திருக்கும் திரு. சீ. காந்திமதிநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *