SANYO DIGITAL CAMERA

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

அண்ணாகண்ணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி – 274

  1. வாழ்க்கைப் பாடம்…

    பச்சை இலையுடன் முருங்கையிலே
    பழுத்தே யுதிரும் இலைகளெல்லாம்
    நிச்சய மாக ஓரிடத்தில்
    நிலைத்தே யென்று மிருப்பதில்லை,
    இச்சை கொண்டே கீரையாயினும்
    இயல்பாய்ப் பழுத்து வீழ்ந்திடினும்
    அச்ச மில்லை மரத்திற்கே
    அதுதான் வாழ்க்கைப் பாடமதே….!

  2. முனைவர் செ.நீதி

    உதவிப்பேராசிரியர்

    பான்செக்கர்ஸ்மகளிர்கல்லூரி
    தஞ்சாவூர்.
    274 படக்கவிதைப்போட்டி

    வாழ்க நீ

    முருங்கையே! உன்இதழ் சிந்தும் புன்னகைக்கு வணக்கம்
    சமதர்மத்தை நிலைநாட்டி நிற்கும்~நீ|மரம்அல்ல
    உச்சி முதல்அடி வரை உன்னதத்தை மறைத்து வைத்துள்ள
    கற்பகத்தரு!மனிதாபிமானத்தின் மறுவுரு!
    முறித்துப் போட்டாலும் முளைத்துவிடு
    வெட்டிப்போட்டாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் எழுந்துவிடு என்ற
    தன்னம்பிக்கையைத் தளைக்கச் செய்யும் குரு நீ
    சத்துக்களைச் சத்தமிடாமல் தந்து கொண்டிருக்கிறாய் – அன்றாட
    வீடுகளில் வெந்து கொண்டிருக்கிறாய்
    காற்றோடு ஆடுகிறாய் புயல்காற்றோடு ஓடுகிறாய்
    எத்தனை முறை உன்னை அசைத்துப்போட்டாலும்
    அசந்துப் போகாத பூமித் தாயின் வீர மகன் நீ
    முருங்கையே உன்கை ஏழைகளின் நம்பிக்கை
    ஒட்டிய வயிறுகளைத் தட்டி எழப்பும்கை
    புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோவுக்கும் பிடித்தக்கை
    உழைத்து உழைத்து உலகுக்குச் சோறுவூட்டும்
    பாட்டாளிகளுக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு நீ மரம்அவன்மனிதன்
    உன் கரம் துண்டிக்கப்பட்டால் முளைத்து விடும்அவன்கரம்
    துண்டிக்கப்பட்டால் சோற்றுக்கு அலையும் நாள்வரும்அந்த நாள்
    வந்துவிடக்கூடாது என்றுதானே
    வறுமையெனும் கொள்ளைக் காரனிடமிருந்து
    பாட்டாளியைக் காக்க காவலனாய் நிற்கிறாய் அவன் இல்லத்தில்!
    உன்பசுமையான இதழ்களுக்குச் சத்தமில்லாத முத்தமே
    என் அன்புக் காணிக்கை! வாழ்க நீ ! வளர்க நீ!.

  3. இளமையும் முதுமையும்

    பல் விழுந்த‌
    கிழவி போல்
    பரிதபமாய்
    பழுத்த இலைக் காம்பு!
    பக்கத்தில்
    பச்சை பட்டுடுத்திய
    பருவப் பெண் போல்
    பச்சை இலைக் காம்பு!

    இலைக் காம்புகளுக்கிடையே
    ஏதோ சலசலப்பு.
    உற்றுப் பார்த்து
    ஒட்டுக் கேட்டேன்.
    பச்சை இலைக் காம்பு பரிகாசத்துடன் பேசியது,

    “பழுத்த இலைக் காம்பே,
    நான்
    பசியால் வாடும்
    உயிரினங்களுக்கு
    உணவாகப் போகின்றேன்!
    நீயோ,
    மேலும் பழுத்து
    யாருக்கும் பயனின்றி
    மண்ணில் புதையுண்டு
    மாளப் போகின்றாய்!”

    பதிலுக்குப்
    பழுத்த இலைக் காம்பு‌
    பணிவுடன்,
    “என்னைத் தாங்கிய
    மரத்தை வளர்த்த
    பூமித்தாய்க்கு
    என் பழுத்த இலைகளால்
    அர்ச்சனை செய்து
    புண்ணியம் தேடிக்கொள்வேன்”
    என்றது!

    பச்சை இலைக் காம்பு
    வெட்கித்
    தலைகுனிந்தது!

    இளமை
    இறுமாப்பு கொண்டு
    முதுமையைப் பழித்தல்
    முற்றிலும் தவறென்று
    இலைக்காம்புகளின்
    உரையாடல்
    இவ்வுலக மானிடருக்கு
    உணர்த்துகின்றதோ!

    கோ சிவகுமார்
    மண்ணிவாக்கம்,
    சென்னை.

  4. பிள்ளையை
    அடித்து வளர்
    முருங்கையை
    ஒடித்து வளர்

    அகிம்சை பாடம்
    நடத்துகிறாய்
    இம்சை செய்பவருக்கும்
    பலன்கள் தருகிறாயே

    பெயரில் தான்
    இருக்கிறதே கை
    ஏன் நீட்ட மறுக்கிறாய்

    மரம் என்பதாலே
    மனித இனம்
    ஒடிக்கிறது
    நீ வளர

    புரிந்து தான்
    தெரிந்து தான்
    பலன்கள் தருகிறாயே

    உன்னிடம்
    ஒரு கேள்வி

    நீ ஏன் கனி தருவதில்லை

    காயிலேயே
    காயப்படுத்தி
    விடுகிறோம்
    என்பதாலா

    உன்னிடம்
    கற்க வேண்டிய வை
    ஏராளம் ஏராளம்

    கீரை வகைகளில்
    கறிவேப்பிலை யாக
    மரமானவனே

    இவை ஆகட்டும்
    பூ வாகடும்
    காய் ஆகட்டும்
    ஒவ்வொன்றும்
    ஒவ்வொரு
    மருத்துவ குணம்

    சமூகத்திற்கும்
    வீட்டிற்கும்
    நாட்டிற்கும்
    மனிதனாக
    பிறந்தால்
    பயன்பட வேண்டும்
    நீ கற்றுத்தரும்
    பாடம்

    நான்
    கற்றுக்கொண்ட
    பாடம்

    சீ.காந்திமதிநாதன்
    கோவில்பட்டி

  5. படக்கவிதைப் போட்டி 274

    பச்சைப்பசேல் இலைத்துளிகள்
    சார்ந்து வளரும் செடிகொடிகள்
    பார்ப்பதற்கு கண் குளிர்ச்சிதான்
    மண் வளத்தைக் குறிக்கும் அது சிறப்புதான்

    தோட்டத்தின் அழகுதனை
    நிர்ணயிக்கும் பசுமை இலை
    வளமான சுற்றுச்சூழல் என
    வார்த்தையிட்டுச் சொல்லிடலாம்

    பறவைகளும் அதனூடே
    பறந்து வந்தாடுகையில்
    குதூகலமோ குறைவில்லை
    நறுமணமும் நலியவில்லை

    பசுமைத் தாயக இந்தியாவில்
    பசுமை புரட்சி ஏற்படுத்தி
    பசுமையோடே காத்திடுவோம்

    சுதா மாதவன்

  6. சுற்றம்

    தளிரா?மரமா?
    தனி மனிதனா? சமூகமா?

    விதை வீழ்ந்து
    சிறு முளை விட்டு
    நாற்றாகி, தளிராகி,
    சேற்றில் கால் பரப்பிச் செடியாகி,
    கிளை விரிந்துப் பெரு மரமாகி நின்றாலும்
    தளிர் இல்லா மரத்தை யாரும் கண்டதுண்டோ?
    ஆகையின்…
    தளிரே மரத்தின் ஆதாரமோ?

    எனில்…
    பற்றும் கிளையின்றி தண்டின்றி
    உணவளிக்கும் வேரின்றி
    மரத்தின் துணையின்றி
    தளிருக்கு வாழ்வு ஏது?
    ஆகையின்…
    மரமே தளிருக்கு ஆதாரமோ?

    மரமின்றித் தளிரில்லை
    தளிரின்றி மரமில்லை

    அதுபோன்று
    பிறப்பு முதல் இறுதிவரை
    உருத்து காட்டும் உறவு வேண்டும்
    பொறுப்பு கொண்டு காத்து நிற்கும்
    சிறப்புக் கொண்ட சுற்றம் வேண்டும்
    மனிதம் வாழ நற்சமுகம் வேண்டும்
    சமூகத்தில் நல்ல மனிதன் வேண்டும்

    ஒன்றில்லாமல் மற்றொன்று இருப்பதில்லை
    சுயநலத்தால் சுற்றம் என்றும் வாழ்வதில்லை

  7. படக்கவிதைப் போட்டி 274

    துரித சுவைகளின்
    அடிமை நாக்குகள்
    சிவந்த நஞ்சு நாவின்
    நிறமே பிடித்து உண்ணும்

    பிறிதோர் உயிர்க்குருதி
    காணும் குரூரப் பேருவகை
    பெருவெளியில் நீயோ
    பழுத்தும் பழுக்காமலும்
    பயனின்றி உதிர்கிறாய்

    கொல்லையில் ஊன்றினால்
    குழம்பு காய் கூட்டோடு
    குலம் தழைக்க வைப்பாய்
    வித்துக்களை உருவாக்கும்
    சத்துக்களைக் கொண்டதால்
    பிரம்ம விருட்சம் நீ

    இருந்தும் என்ன
    வேருக்கு நீரூற்ற நேரமில்லை
    எங்களுக்கே தாகம் தீர்க்க
    நெகிழிநீர் போதவில்லை
    முற்றியது கலி

    நீயாகவே காய்ந்து போ
    இல்லை கண்ணைப் பறிக்கும்
    வண்ணக் குரோட்டனாய் மாறு
    அப்போது நாங்கள் ஆராதிப்போம்

    – ‘அன்புத்தோழி ‘ ஜெயஸ்ரீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *