நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 39

தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
‘ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும்’.

ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்

இன்னிக்குத் திரும்ப அதே ஊருக்குப் போயிட்டிருக்கேன். அதுவும் கல்லூரிப் பேராசிரியர் வேலையை ஏத்துக்கிடறதுக்கு. மனசு சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் ஒரு ஓரத்தில் பழைய நினவுகள் வருத்தின.

எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் அந்த ஊர்ல. அப்பா இறந்தவொடனே வேற வழியில்லாம பள்ளிப்பட்டிப்பத் தொடர முடியாமப் போயிருச்சு. அம்மாவோட ஆப்பக்கடை வருமானத்த வச்சி ஒண்ணும் பண்ண முடியல. அப்போதான் அந்த பழக்கடைக்காரர் அம்மாவ ஆசை காட்டி பத்தே வயதான என்னயக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு.

அப்டி ஒண்ணும் அது பெரிய கடையில்ல.. அவர் வீட்டு வாசலக் கடையா மாத்திருந்தாரு. எனக்கு அங்க எடுபிடி வேல. ஆனா சம்பளத்த சரியா அம்மாகிட்ட குடுத்துடுவாரு. காலையில எழுந்ததிலேந்து அவர்கிட்ட குட்டு அடி வாங்கிக்கிட்டே கடையைப் பெருக்கி, பழங்களைஅடுக்கி வச்சி, ஜூஸ் போடற டம்ளர்களக் கழுவி தொடைச்சி வச்சி அப்பாடானு கொஞ்சம் ஒக்காந்தா அவரு சம்சாரம் கூப்பிட்டிடும்.

அவங்க செல்ல மகன பள்ளிக்கு அனுப்பறதுக்காக அவன் பின்னால நான் நிக்கணும். அவன் ஆறுவயசு சின்னப் பையன்தான்.  அவனக் குளிப்பாட்டி சீருடை போட்டுவிட்டு அவனோட ஷூவப் பாலிஷ் போட்டு வச்சு பஸ்ல ஏத்திவுடற வர எனக்கு வேலைதான். அதுக்கப்புறம்தான் மிச்சம்மீதி இருக்கறதச் சாப்பிடத் தருவாங்க. ரெண்டுவேளச் சாப்பாடுதான். காலையில ஆறுமணிக்கு வந்தா ராத்திரி எட்டுமணிக்குதான் வீட்டுக்குப் போகமுடியும்.

நான் செஞ்ச புண்ணியம். கடைக்குத் தினமும் ஜூஸ் குடிக்க வந்த சின்னசாமி ஐயா உனக்கு படிக்க விருப்பம்னா சொல்லு உம் முதலாளிக்குத் தெரியாம நான் படிக்க வைக்கறேன்னாரு. எட்டாம் வகுப்புவரைக்கும் படிச்சிருக்கறதால திறந்த நிலைத்தேர்வு எழுதி பத்தாம்வகுப்புல தேர்ச்சிபெறலாம். அதுக்கப்புறமும் உனக்கு விருப்பம் இருந்தா முழுநேரப்பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டு மேல படிக்கவைக்கிறேன். என்ன சொல்றன்னு கேட்டவொடனே யாராச்சும் உதவ மாட்டாங்களானு காத்துக்கிட்டிருந்த எனக்கு கேக்கவா வேணும்.  அப்புறமும் விசயம் தெரிஞ்சு பழக்கடை முதலாளி என்னபாடு படுத்தினார். பொறுமையா எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டேன். இப்போ சின்னசாமி ஐயா ஆசிர்வாதத்தோட கல்லூரிப்பேராசிரியராவும் ஆயிட்டேன்.

யோசித்துக்கொண்டிருக்கும்போதே கல்லூரியின் நிறுத்தம் வரவே. இறங்கி உள்ளே நுழைந்தேன். முறைப்படி செய்ய வேண்டிய வேலைகள் முடிந்தவுடன் மனத்திற்குக் கட்டுப்பட்டு பழக்கடை முதலாளியைப் பார்க்கச் சென்றேன்.

என்ன ஆச்சர்யம். அதே வீடு. எந்த மாற்றமும் இல்லை. உள்ளே மாலை போடப்பட்ட அவரது மனைவியின் புகைப்படம்.

வாங்க சார். எனப் பணிவாக வரவேற்று தன் முன் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் இவன் யார். யோசிக்கும் முன்பே அவனாகவே தொடர்ந்தான். நீங்க வரப்போறதா சின்னசாமி ஐயா சொன்னாரு. அப்பாவுக்கு வாதம் வந்து நாக்கு இழுத்துக்கிச்சு. பேசமுடியாது. உள்ள படுத்திருக்காரு. நான் நீங்க வேலைக்குச் சேந்த கல்லூரியில பியூனா இருக்கேன். என்ன செய்ய. எல்லாம் விதி. எனக்குச் சரியா படிப்பு வரல. அத விடுங்க.

மொதமொதல்ல எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. என்ன சாப்பிடறீங்க கேட்டுக் கொண்டே உள்ளே சென்ற அவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். ஓ இதத்தான்  ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்னு பழமொழியாச் சொல்லுவாங்க போல. எளியாரை வருத்த அவர் கண்ணீர்

வருத்தியவரை அழித்து விடும்னு தமிழ்ல படிச்சது என் நினைவுக்கு வருது.

பாடல் 40

ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
‘ஆற்றுணா வேண்டுவ தில்’.

பழமொழி -‘ஆற்றுணா வேண்டுவது இல்’

என்ன சார் மலேசிய மாநாடு எல்லாம் சிறப்பா நடந்ததா. கேட்டுக் கொண்டே உள்ளே வருகிறார் தெரிந்த மனிதர். அவரை அப்படித்தான் சொல்ல வேண்டும். நண்பன்னு சொன்னா அது அந்த சொல்லுக்கே அவமானமாப் போகும். எப்படா கீழ விழுவேன் கைகொட்டி சிரிக்கலாம்னே காத்துக்கிட்டு இருக்குற மனுசன். என்கிட்ட மட்டுமில்ல. இன்னும் பலபேர் இவரப்பத்தி இப்டித்தான் பேசிக்கிறாங்க.

இன்னதுன்னு இல்லாம எல்லாத்துக்கும் எடக்கு. யாரப்பாத்தாலும் வயித்தெரிச்சல். நாலுவீடு தள்ளி குடி இருக்கிற இவர் அரசு அலுவலகத்துல குமாஸ்தாவ வேல பாத்து ரிடையர்ட் ஆனவர். அப்பப்ப நியூஸ்பேப்பர் கேட்டுவந்து தானே பழகிக்கிட்டாரு அவ்வளவுதான். வயசில பெரியவர்னு மரியாதை குடுத்தது தப்பாப்போச்சு.

என்னசார் மாநாடு எப்டி நடந்ததுனு கேட்டேன். நீங்க மாநாட்டுக்குப் போயிருக்கீங்கனு சங்கரன் சொன்னதிலேந்து ஆச்சரியம். வாயத்திறந்து நாலுவார்த்த தொடர்ந்து பேச மாட்டேங்கிறீங்க. நீங்க எப்படினு. என்னதான் பேராசிரியரா இருந்தாலும் வகுப்பறை வேற. மாநாட்டில பார்வையாளர்கள் வேறதானே. என்ன நான் சொல்றது.

என்னயப் பத்தி நான்சொல்றதுக்கு முன்னயே தானே நான் இப்டித்தான்னு ஊகிச்சு அத என்கிட்டயே புரூவ் பண்ணிட்டு இருக்கிற சன்மம் இவர்.

நான் என்ன சொல்லி என்ன ஆகப்போறது. மௌனம் சாதித்து விட்டேன். அவர் தொடர்ந்து கொண்டே போனார்.

புரியுது புரியுது போன எடத்துல பணம் அதிகம் செலவு ஆகியிருக்கும். இப்பயெல்லாம் ஹோட்டல்கள்ல சாப்பாடா போடறான். நம்ம ஊர்லயே ஒரு தோசை தொண்ணூறு ரூபாய் விலை சொல்றான். அஞ்சு நாள் தங்கிட்டு வந்திருக்கீங்க. சும்மா செலவு பிச்சிக்கிட்டு போயிருக்கும்.

நீங்க ஒண்ணு செய்யுங்க சார். அடுத்த முறை போகறதுக்கு முன்ன என்கிட்ட சொல்லுங்க. எனக்கு நிறைய நண்பர்கள் வெளிநாட்டுல இருக்காங்க. சாப்பாட்டுக்கு அவங்ககிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன். கொஞ்சம் செலவு மிச்சமாகும் பாருங்க. அவர் பேசிக்கொண்டே போக எனக்கு எரிச்சல் தலைக்கு ஏறியது.

நல்ல வேளை. சங்கரன் வந்துவிட்டார். இந்த ஆளுக்கு அவர்தான் சரி. பதிலுக்கு பதில் நல்லா குடுப்பாரு.

என்ன இங்க பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஒருவழியா நம்ம பேராசிரியருக்கு கிடைச்ச மரியாதய ஒத்துக்கிட்டீங்களா. இனிமே அவர்கிட்ட பாத்தே பேசுங்க.  சும்மாவா கருத்தரங்கத்த தலைமை வகிச்சு நடத்திட்டு வந்திருக்காரு. ‘ஆற்றுணா வேண்டுவது இல்’னு பழமொழியே இருக்கே. படிச்ச அறிவாளிகளுக்கு போற எடத்துக்கு கட்டுச்சோறு கொண்டுபோகணும்னு அவசியம் இல்லங்கறது அதோட அர்த்தம். . எல்லாரும் தானா வந்தே உபசரிப்பாங்களாம். என்ன சார் உங்களுக்கும் விருந்து உபசாரம் எல்லாம் தடபுடலா நடந்திருக்குமே. எந்த ஓட்டல்ல தங்க வச்சாங்க.

பட்டுசால்வ எல்லாம் போத்தி அசத்தியிருப்பாங்க. உங்களுக்குக் கிடைச்ச பரிசுப்பொருள் சால்வை எல்லாம் எடுத்துட்டு வாங்க. அப்டியே எடுத்த போட்டோக்களையும் காட்டுங்க. அதப்பாத்தாவது நாங்க சந்தோசப்பட்டுக்கிறோம்.

அவர் பேசிக்கொண்டே போக, தெரிந்த மனிதரா அறிமுகப்படுத்தப்பட்ட நம்ம ஆளு முகத்தப் பாக்கணுமே. அசடு வழியறத மறச்சிக்கிட்டே தனக்கு ஏதோ முக்கிய வேலை இருக்கறதா பாவ்லா பண்ணிக்கிட்டு எழுந்தரிச்சு போக முயற்சி செய்யறாரு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *