நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 41

மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)
ஆற்றும் பகையால் அவர்களைய – வேண்டுமே
வேற்றுமை யார்க்குமுண் டாகலான் ‘ஆற்றுவான்
நூற்றுவரைக் கொன்று விடும்’.

பழமொழி – ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’

என்ன சார். ரொம்பதான் உறவு கொண்ட்டாடுறீங்க. பெங்களூர்ல பத்து வருசம் ‘இருந்துட்டு வந்தவொடனே எங்களயெல்லாம் மறந்துட்டு போயும் போயும் இவன்கூட சுத்திக்கிட்டு திரியிறீங்க. இவன் யாருங்கற உண்ம தெரிஞ்சா கிட்ட கூட போக மாட்டீங்க. வரிசையாக வீடுகள் இருக்கும் எங்கள் பகுதியில் முன்பு என் வலது பக்கத்து வீட்டு மாடியில குடியிருந்தார் வேலு. இப்ப வேற தெருவுக்கு மாத்தி போயிட்டார். அவர்கூட நான் சுத்தரதப்பத்திதான் என் இடது பக்கத்து வீட்டு உரிமையாளர் நளின் குமுறிக் கொண்டிருக்கிறார்.

அவர் சொல்வது எல்லாம் உண்மதான். இங்க வந்ததுலேந்து நான் வேலு கூடதான் சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா நான் தெரியாம இதச் செய்யல. அவர் குணம் என்னனு தெரிஞ்சிக்கிட்டேதான் பழகறேன்.

முந்தைய விசயங்களை யோசிக்க ஆரம்பித்தேன். வேலுவோட ஹவுஸ் ஓனர் அதான் என் வலது பக்கத்து வீட்டு உரிமையாளர் எவ்ளோ தொல்ல குடுத்திருப்பார் எனக்கு. வேற எந்த வேலையும் இல்லாதமாதிரி வேணுமினே மொட்டைமாடியில இருக்கற வாட்டர் டேங்க் மூடிய எடுத்துவிட்டுடறது, துணி காயப்போடற கொடிய அறுத்து விடரது. குப்பையப் பூரா எங்க வீட்டுப்பக்கமே தள்ளிவிடரது இந்த மாதிரி.  காலையிலேந்து சாயங்காலம் வரை சின்னச்சின்ன விசயத்துக்கும் சண்டை இழுத்துக்கிட்டே இருப்பாரு.

உங்க வீட்டு தென்ன மரத்திலேந்து தேங்கா விழுந்து எங்க சன்னல் கண்ணாடி உடைய வாய்ப்பிருக்கு, நீங்க உங்க வீட்டு கேட்ட மதிய நேரத்துல சரியா சாத்தாம வைக்கறதால திருடன் உங்க காம்பவுண்ட் வழியா எங்க வீட்டுக்கு வர வாய்ப்பு இருக்கு. இப்டி பல கற்பனைப் புகார்கள். ஒருகட்டத்துல அவர் தொல்ல தாங்க முடியாம. அவர்கூட பாசமான நண்பராப்பழகிடலாம்னு நானும் மனைவியும் முயற்சித்தோம். ஆனா அந்த சிடுமூஞ்சி மனுசன் யார்கூடயும் பழகத் தயாரியில்ல. அடுத்தவங்கள தொல்ல குடுக்கறதுமட்டும் தான் அவருக்கு சந்தோசம் தரும் போல.

இவர் தொல்ல தாங்க முடியாமதான் சென்னையிலிருக்கிற சொந்தவீட்ட விட்டுட்டு பெங்களூருக்கு மாத்தல் வாங்கிட்டுப்போனேன். இப்ப பத்துவருசம் கழிச்சும் இந்த மனுசன் மாறல.

கீழ இவர் குடியிருந்துக்கிட்டு மாடி போர்சன வாடகைக்கு விட்டுட்டு  வாடகைக்கு வரவங்கள தொல்ல பண்ணியே கொல்லறார் போல. இப்ப நான் பழகிக்கிட்டு இருக்குற வேலுவும் இவர் வீட்டு மாடியில குடியிருந்தவர் தான். இவருக்கு சரியான ஜோடி.

எங்கள மாதிரி வாயத் திறக்காம வசவு வாங்கிக்கிட்டு இருக்கல. நல்லா பதிலுக்கு பதில் குடுத்திருக்கார். அவர் காலி பண்ணிப்போனதிலேந்து இப்ப வரை வேற யாரையும் அந்த வீட்டுக்கு வர உடாம வதந்தி பரப்பிக்கிட்டு இருக்காராம்.

பக்கத்து வீட்டுக்காரர் மூஞ்சியில இப்ப எள்ளும் கொள்ளும் வெடிக்கறதப் பாக்க சந்தோசமா இருக்கு. ஜன்ம சனியத் தூக்கி தலையில வச்சிக்கிட்ட மாதிரி உன்னய வாடகைக்கு வச்சேன்னு கத்துவாராம். இன்னும் அவர் மாடி போர்சன் காலியாவே கிடக்கு.

எது எப்படியோ. இனிமே என்கிட்ட வாலாட்ட மாட்டார். முடிஞ்சா வேலுகிட்டேந்து தப்பிக்க சமரசமாத்தான் பேசுவார். நிலைமையை நளினிடம் விளக்கினேன். ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’ ங்கற பழமொழி மாதிரி எதிரிக்கு எதிரியையே நண்பனா ஆக்கிக்கிட்டிருக்கேன். தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லவன்  தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவன், அப்டினு பழமொழி நானூறே சொல்லுதே. சொல்லிவிட்டு சந்தோசமாக நடந்து சென்றேன். வேலுவைத் தேடி.

பாடல் 42

பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி ‘இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று’.

பழமொழி – இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று

கோவை வ.ஊ.சி மைதானம் அன்று களை கட்டியிருந்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு சுகந்தனை சந்திக்கப்போகிறேன். பார்க்க எப்படியிருப்பானோ? யோசித்துக்கொண்டே கல்லில் உட்கார்ந்தேன்.

எதிரில் ஊதினால் பறந்து போகிற மாதிரி ஒல்லியா ஒரு பையன் அவன் அம்மாவுக்குத் துணையா பேல்பூரி விற்றுக்கொண்டு நிற்கிறான். நல்லா எண்ண தேச்சி தலைவாரி பளீரென்ற முகத்துடன்.

அக்கா பஞ்சு மிட்டாய் வேணுமா, பாப்கான் வேணுமா இன்னோரு சின்னப் பையன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து விற்கிறான். மெதுவா பக்கத்திலிருந்த ஐஸ்காரனிடம் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன். இங்க எப்படி இவ்வளவு சின்ன பையங்க வித விதமா வியாபாரம் பண்றாங்க. பத்து வருசத்துக்கு முன்ன இப்டி இல்லயே. என் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே

ஏம்மா இந்த ஊருக்குப் புதுசா. அதான் கேக்கற. ஒரு ஐஸ் வாங்கிக்கோயேன் அவன் தொடர்வதற்குள் நான் சுதாரித்துக்கொண்டேன் முன்பின் தெரியாத இவன்கூட நான் ஏன் பேசறேன். கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்தேன். அவன் இன்னும் என்னயே பாத்துக்கிட்டிருக்கான். சுகந்தனப் பாத்துட்டுக் கெளம்பிற வேண்டியதுதான். பத்துவருசம் முன்ன பக்கத்திலிருந்த ஹாஸ்டல்ல தங்கி தனியார் கம்பெனியில வேலை பாத்ததால தினமும் இந்த பார்க் வரது வழக்கம். அதனால இந்தச் சின்னச் சின்ன மாறுதல்கள் கூட கண்ணுக்குப் படுது.

முன்னயெல்லாம் நானும் மாதவியும் கொஞ்சம் கூட யோசிக்காம சுகந்தன் கிட்டேந்து சேவ் பூரி வாங்கி ஒருநாளப் போல சாப்பிட்டிருக்கோம். இப்ப இவ்ளோ நேரம் உக்காந்திருக்கேன். ஒண்ணுமே சாப்பிடத்தோணல. யாரப் பாத்தாலும் சந்தேகம் வேற வருது. வயசாக ஆக மனசு குரங்காகிடும் போல. அல்லது சென்னைவாசி ஆயிட்டதால பிளாட்பார தள்ளுவண்டியிலேந்து வாங்கிச் சாப்பிடறது தப்புனு தோணுதோ. தெரியல.

யோசித்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில்யாரோ கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஆமாம் என்னயத் தான் கூப்பிடறான். சேட்டுக்கடையில வேலை பாக்கற மார்வாடிப் பையன். இந்த நேரத்துல இவன் எதுக்குக் கூப்பிடறானோ. யோசித்துக்கொண்டே போனவுடன் தீதீ சீக்கிரம் கடைக்கு வா. யாரோ வெய்ட் பண்றாங்க.

கடைக்குள் ஜிப்பா, பைஜாமா அணிந்த ஒரு நபர் உட்கார்ந்திருக்கிறார். சேட்டு அந்த நபருக்கு தேநீர் உபசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

வா பொண்ணு. ரொம்ப நேரம் வெயிட் செய்யுது இல்ல. இங்க பாத்தியா யாரு வந்திருக்கான்னு. தானே தொடர்கிறார். இது நிம்பிள் சுகந்தன். உன்னையப் பத்தி நிறைய சொல்லியிருக்கு.

ஓ அந்த நபர்தான் சுகந்தனா. எழுந்து வணக்கம் சொல்கிறான். பார்க்க என்னைவிட பெரிய தோற்றம். அவன் வெளியே அழைக்கவே நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். அவன் இப்போ அரசாங்க அதிகாரியாம். அவன் நல்ல நிலைமையில இருக்கறதப் பார்த்தப்புறம்தான் அவங்க அம்மா இறந்தாங்களாம். இப்போ சேட்டின் உறவினர் பெண்ணைத்தான் இவன் கல்யாணம் பண்ணியிருக்கானாம். என்ன ஆச்சரியம். இவன் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள்.

என்ன அக்கா. ரொம்ப யோசிச்சுட்டே நடக்கறீங்க போல. ரெண்டு தடவ கேட்டுட்டேன். இந்த இடத்த அடையாளம் தெரியுதான்னு. சரி பரவாயில்ல. இங்க நில்லுங்க செல்பி எடுத்துக்கலாம்.

ஆமாம் இந்த இடத்தில்தான் அவன் அம்மா சேவ் பூரி கடை போட்டிருந்தாள். நானும் மாதவியும் தின வாடிக்கையாளர்கள். சுகந்தன் ஒல்லியான சின்னப் பையன். அவன்தான் கலந்துதருவான். ஒருதடவை நாங்கள் போனப்போ அவன் அழுதுகொண்டிருந்தான்.அவன் அம்மா தினமும் பேனாவக் குடு, நோட்டக்குடுனு தொல்ல பண்றாம்மா.சாப்பாட்டுக்கே வழியில்ல. இதுல இவனுக்கு படிப்பு எதுக்கு. சொன்னா அழறான். இவனுக்கு புத்திசொல்லுங்க என்றவுடன் நாங்கள் தீர்மானித்தோம்.

ஒவ்வொரு வருசமும் பள்ளிக்கட்டணம் புத்தகங்கள் மற்றும் படிப்புக்கான இதர செலவுகளுக்கு நானும் மாதவியும் உதவினோம். அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவொடனே நான் சென்னைக்கு போயிட்டேன். அப்பறம் ஒருவருசம் மாதவிக்கு பணம் அனுப்பி அவனுக்கு உதவி செய்யச் சொன்னேன்.  அவளும் அங்கேயிருந்து கிளம்பினப்புறம் இவன் என்ன ஆனான்னு நாங்க யோசிக்கவேயில்ல. இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று னு போனவாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில ஒரு பழமொழி கேட்டேன். அதுல ஒருத்தருக்கு உதவ ஆரம்பிச்சப்புறம் பாதியில நிறுத்தக் கூடாது.அப்டி நிறுத்தரத விட தொடக்கத்திலயே உதவ ஆரம்பிக்காம இருக்கறதே

நல்லதுனு சொன்னார்.

அப்பதான் எனக்கு சுருக்குனுச்சு. சுகந்தனுக்கு நானும் மாதவியும் ஆச காட்டி மோசம் பண்ணின மாதிரி செஞ்சுட்டோம். பாவம் அவன் படிச்சு முடிச்சானோ என்னவோ? ஒருவழியா அவனக்கண்டு பிடிச்சு பாத்தும் ஆச்சு. நல்லவேள இந்த சேட்டுக்கும் நாங்க இவனுக்கு உதவறது தெரிஞ்சதால நாங்க பாதியில நிறுத்தினப்பறம் அவர் தொடர்ந்து உதவி செஞ்சு அவனப் படிக்க வச்சிருக்கார்.

அக்கா பேல்பூரி சாப்பிடலாமா. நான் முதலில் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஒல்லி பையனருகில் நிற்கிறான் சுகந்தன்.

அக்கா இப்ப இவன்தான் எனக்கு தத்துப்பிள்ளை. உங்கள மாதிரி நான் இவன் படிக்கறதுக்கு உதவிக்கிட்டிருக்கேன்.

யோசிக்காமல் சட்டெனச் சொன்னேன். என்னய மாதிரி பாதியில நிறுத்திடாதே. கடைசி வர உதவி செய். சிரித்துக்கொண்டே தலையாட்டுகிறான் சுகந்தன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *