நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 43

யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று – கூடப்
படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
‘இடைநாயிற்(று) என்பிடு மாறு’.

பழமொழி – இடை நாயிற்கு என்பு இடுமாறு

துபாயிலிருந்து கிளம்பி ஒருவழியா இந்தியா வரப்போறோம். கொரோனா தொற்றுவியாதி பிரச்சினையால எங்க எல்லாருக்கும் தற்காலிகமா வேலை இல்ல. நல்ல வேளை. இந்தியன் மென்டாலிடி ஒருத்தருக்கொருத்தர் நல்லா உதவி செய்யறாங்க. ஒரு சர்தார்ஜீ பையா தான் இப்போ எங்க எல்லாரையும் தங்க வச்சி சாப்பாடு போட்டுக்கிட்டிருக்கார். விமானசேவை தொடங்கினவொடனே ஊரப்பாத்துப் போய்ச் சேரணும்.

க்யா பாயி.. என் வங்காளச் சகோதரன் அழைக்கிறான். ஆமாம் அப்படித்தானே சொல்லணும். நம்ம நாட்ல நம்ம ஊர்ல பாதுகாப்பா இருக்கற வரதான் சாதி சொந்தம் பக்கத்துவீடு பக்கத்து ஊரு இந்தப் பிரச்சினையெல்லாம். நம்ம மாநிலம்விட்டு அயல் மாநிலம் போனாலே நம்ம தமிழ் பேசற எல்லாரும் சொந்தக்காரங்களாத் தெரியுவாங்க.

அயல் நாட்டுல கேக்கவே வேணாம். எந்த மொழி பேசினாலும் நான் இந்தியர்னு சொன்னாப் போதும் கண்ணுக்கு பங்காளிமாதிரி தான் தெரியுவான். இப்ப இத எல்லாத்தையும் விட்டுட்டு திரும்ப ஊருக்குப் போகணும். அங்க போய் முன்ன மாதிரி இருக்க முடியுமா தெரியல.

வங்காளச் சகோதரனிடம் புலம்ப ஆரம்பித்தேன்.

என் ஊருக்குப்போகவே எரிச்சலா வருது. எனக்கு விவரம் தெரியற வர எங்க ஊர்க்கும் பக்கத்து ஊருக்கும் சண்டை. நாள் முழுக்க வேற வேலையே இல்லாத மாதிரி பக்கத்து ஊரப் பத்தி குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நம்ம சரவணன் அந்த ஊரச் சேந்தவன். உனக்கே தெரியும் நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ பாசமா இருக்கோம்னு. இப்போ ஊருக்குப் போனா பாத்துக்கக்கூட முடியாது. முடிந்த அளவு புலம்பிவிட்டேன். கொஞ்சம் மனசு லேசானது.

அவன் அறிவுரை கூற ஆரம்பித்தான். வெளிநாட்டுக்குப் போய் வந்ததால உங்க கிராமத்துல தனி மரியாதை குடுப்பாங்க. அதுமாதிரி தான் அவனுக்கும் அத உபயோகிச்சு இளைஞர்களக்கூட்டி எடுத்துச் சொல்லுங்க. யோசிக்க செய்ய நிறைய விசயங்கள் இருக்கு.  இந்த மாதிரி வயல், வரப்பு கடவுள் இந்த சண்டையிலேயே உங்க காலத்தக் கழிச்சிடாதீங்கனு. நீங்க படிச்சு வந்த மாதிரி இந்த இரண்டு வருசத்துல கண்டிப்பா கொஞ்சம் பசங்க படிச்சு வெளிய வந்திருப்பாங்க இல்ல. உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்குமே.

இல்லை. நானும் அவனும் வந்ததிலேந்து ஊர்ப்பக்கம் போகவேயில்ல. என்னவோ மனசுக்குப் பிடிக்கல. அவங்களுக்கு ஒண்ணும் பணத்துக்கெல்லாம் பிரச்சினையில்ல. வயல், சொத்துநிறையவே இருக்கு. இப்ப வேற வழியே இல்ல. அங்கதான் போயாகணும்.

அடப்பாவிகளா. ஆச்சரியம் விநய் போசுக்கு. உங்க குடும்பத்தார் வரச்சொல்லி வற்புறுத்தலியா. உனக்கு ஒரு சகோதரி இருக்கறதா வேற சொன்ன. இது ரொம்ப தப்பு. ரெண்டு பேரும் சுயநலமா இருந்திருக்கீங்க. இப்ப போனவுடனே உங்களால ஊருக்கு என்ன செய்ய முடியும்னு யோசனை பண்ணுங்க. பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கணுமே தவித்து அதுலேந்து ஓடி ஒளிய நினைக்கக் கூடாது.

என்னவோ நண்பனின் அறிவுரை சரியெனப்பட்டது. ஊருக்கு வந்ததிலேந்து எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி தோணுது. ரெண்டுநாளுக்குமேல பொறுக்க முடியல. அக்காவிடம் கேட்டேவிட்டேன். என்ன ஆச்சு நம்ம ஊர் மக்களுக்கு எப்ப பாத்தாலும் அங்க வெட்டு இங்க குத்துனு தகவல் சொல்லிக்கிட்டேயிருப்பாங்க. இப்ப யாரும் பேசறதேயில்ல. ஊரடங்கால எல்லாரும் மாறிட்டாங்களோ?

ஓ அதுவா. அய்யா வேற வழியில்லாம ஊர்ப்பக்கம் காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த ஊர் மாறி வருசம் ஆச்சு. எப்ப பாத்தாலும் சண்டையிழுத்துக்கிட்டு அலைஞ்ச கிழக்கு ஊர்ப்பண்ணையாரோட அடியாட்களுக்கு நம்ம ஊர் பேக்டரியில நிரந்தர வேலை போட்டுக்குடுத்தவொடனே அந்த ஆள் தனியாநின்னு வாலாட்ட முடியாம அடங்கிட்டாரு. எல்லாம் உன்கூட படிச்சானே நிரஞ்சன். அவனோட ஐடியாதான். நல்ல பையன். ஊருக்கு நல்லதுபண்ணிட்டான்.

இடை நாயிற்கு என்பு இடுமாறுனு பழமொழி இருக்குல்ல. ஆடுகளத் திருட நினைக்கறவன் முதல்ல அந்த வீட்ல வளக்கற நாய்க்கு எலும்புத்துண்டு போட்டுப் பழக்குவானாம். அது கத்தாம இருக்கறதுக்காக. அதுமாதிரிதான் நிரஞ்சனும் அந்தப்பண்ணையாரோட ஆட்டத்த நிறுத்த அவரோட அடியாட்களுக்கு வேலை போட்டுக்குடுத்து நம்ம பக்கம் சேத்துக்கிட்டான். இப்பவாவது நல்லது பண்ணணும்னு நினைச்சீங்கன்னா அவன் கூட சேந்து ஏதாவது திட்டம் போடுங்க. சொல்லிவிட்டுச் சென்றாள் உள்ளூர்ப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாய்ப்பணிபுரியும் என் சகோதரி.

பாடல் 44

அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் – படைபெற்று
அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
‘இடையன் எறிந்த மரம்’.

பழமொழி – ‘இடையன் எறிந்த மரம்’

அமுதவல்லி எனும் நான் வேலைக்கான நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வந்திருக்கேன். சென்னை எனக்குப் புதுசுதான். ஆனா இந்தக் கம்பெனியில எப்படியும் வேல வாங்கிரணும். அப்பதான் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தக் காப்பாத்திக்க முடியும்.

சரி. முதல்ல நம்மகிட்ட கேக்கப்போற கேள்விகள் என்னதா இருக்கும்னு யோசிப்போம்.

பக்கத்திலிருந்த நபர் மெதுவா ஆரம்பிக்கிறார். மேடம் எத்தன வேகன்சி இருக்குனு தெரியுமா? உங்களுக்கு இந்தக் கம்பெனி பத்தின விவரத்த யார் சொன்னாங்க.

நான் ஏதும் சிபாரிசுக்கடிதம் கொண்டு வந்திருக்கேனான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக நாசூக்கா கேக்கறாராமா.

என் நிலைமை இப்படியா ஆகணும். எத்தன பேருக்கு அப்பா சிபாரிசுக்கடிதம் கொடுத்திருப்பார். எவ்வளவு பேர் அவரால பொழச்சிருப்பாங்க. பட்டியல் ரொம்ப நீளந்தான். ஆனா ஒருத்தருக்குக்கூட இப்ப கண்ணு தெரியலயே.

அரைமணி நேரத்துக்கப்புறமும் யாரும் வரல. நாங்க ரெண்டுபேர் மட்டுந்தான் உக்காந்திருக்கோம். திரும்பவும் பக்கத்து நபர் பேச முயற்சிக்கிறார். அவருக்கு என்ன பிரச்சினையோ. நான் என் மவுனத்தைக் கலைத்தேன்.

மொதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க சார். நீங்க உள்ளூரா. ஏதோ கேக்கறதுக்குன்னே காத்துக்கிட்டு இருந்தமாதிரி பேச ஆரம்பித்து தொடர்ந்து தன் நிலைமையப் புலம்பறார்.  அவரப் பொறுத்தமட்டிலும் உள்ள ஒரு வேகன்சிதான் இருந்திச்சுன்னா நான் விட்டுக்கொடுத்துடுவேன்னு நினைச்சு பொலம்பறார்.

அப்டிப்பட்ட நிலமையிலா நான் இருக்கேன். அப்பா சேலத்துல பெரிய தொழிலதிபராத்தான் இருந்தாரு. ஆனா வரவன் போறவன்கிட்டயெல்லாம் வாக்கு குடுத்து அவுங்களுக்குத் தேவையானத செஞ்சிக்கிட்டே இருந்ததால தன் தொழில்ல கவனம் செலுத்தல.  பலவித ஏமாற்றங்கள். பொய்ப் புகழ்ச்சிக்கே மயங்கிக்கிட்டு இருந்த அவர கூட இருந்தவங்களே ஏமாத்திட்டாங்க. மொத்த சொத்தும் போச்சு. ஆனாலும் அவர் குணம் மட்டும் மாறவே இல்ல. அப்பறமும் யார் வந்து கேட்டாலும் கடன் வாங்கியாவது செஞ்சுகுடுத்து பெயரக் காப்பாத்திக்கிட்டு இருந்தாரு. கடைசியில கடன் அதிகமாகி மிச்சமிருந்த அம்மாவோட நகைகளையும் வித்து அடைச்சு நடுத்தெருவுக்குவந்துட்டோம். நல்லவேள நான் பிளஸ்2 முடிச்சிட்டதால அந்த தகுதிக்கு ஏத்த வேல தேடிக்கிட்டு பொழைக்கலாம்னு இங்க வந்திருக்கோம். இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் சூப்பர்வைசர் போஸ்ட் எனக்குக் கிடைச்சா நல்லா இருக்கும்.

பொறுமையா கேட்டுக்கொண்டிருந்த அந்த பக்கத்து நபர் மனம் மாறிட்டார் போல. ஒருவேள ஒரு காலியிடம்தான் இருந்துதுன்னா நீங்களே சேந்துக்கோங்க. உங்க நிலைமை என்னய விட மோசம். ‘இடையன் எறிந்த மரம்’னு பழமொழி கேள்விப் பட்டிருக்கீங்களா.  அதுதான் உங்கப்பா நிலமையும். இடையன் கொஞ்சம் கொஞ்சமா கிளைய ஒடிச்சே ஒரு மரத்த அழிச்சுடுவானாம். பொருள் முழுக்க கையவிட்டு போனப்புறமும் அது இருக்கறமாதிரியே பந்தா பண்ணிக்கிட்டு எதுக்கு கடன்வாங்கி உதவி செய்யணும். இனிமேலயாவது உங்கப்பாவ கன்ட்ரோலா இருக்கச் சொல்லுங்க. தன் பங்கு அறிவுரையை உதிர்க்கிறார் அந்த நபர்.

உள்ளேயிருந்து இன்னும் அழைப்பு வரவேயில்லை. இருவரும் காத்திருக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *