நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 45

மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் – பொறாஅன்
கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
‘இரந்தூட்குப் பன்மையோ தீது’.

பழமொழி 45 . இரந்து ஊட்குப் பன்மையோ தீது

இந்தக் கோயில் வாசல்ல உக்காந்து பிச்சையெடுப்பேன்னு என்னிக்காவது கனவாது கண்டிருப்பேனா. அம்மா இருந்த வரை நல்லா பாத்துக்கிட்டாங்க. நானும் படிச்சவதான். அதனால அஞ்சு ரூபாசேத்து போடுங்க தட்டுலன்னா பிச்ச எடுக்கமுடியும். பசி காதை அடைக்குது. கண்ணை மூடி யோசிக்க ஆரம்பித்தாள் கோமு. கல்லூரியில இளங்கலை வேதியியல் படித்திட்டிருந்த காலம். அரசு கல்லூரிங்கறதால இலவச விடுதியில தங்க அனுமதி. ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை அம்மா வருவாங்க. எண்ணை சீயக்காய் எல்லாம் வாங்கித்தந்து குளிச்சிட்டு சாப்பிடும்போது தொட்டுக்க வச்சிக்கோன்னு மிக்சர் வாங்கித் தருவாங்க. இது மாசத்துக்குரெண்டு தடவ கண்டிப்பா நடக்கற ஒரு விசயமா இருந்திச்சு. நான் ஏதோ படிச்சு பெரிய கவுரவப் பதவியில உக்காந்து அவங்களக் காப்பத்தப் போறதா கனவு கண்டாங்களோ என்னவோ. அப்படித்தான் இருக்கணும். அவங்க பெத்த ரெண்டு பசங்களும் ஊருக்கு நோயா தண்ணியடிச்சுட்டு தொந்தரவு குடுத்துட்டு அலைஞ்சாங்களே.

படிக்கிற காலம் நல்லாத்தான் இருந்திச்சு. அப்பறம் படிப்பு முடிஞ்சு வீட்டுக்கு வந்தவொடனே தான் உலகம் தெரிய ஆரம்பிச்சுச்சு. எங்க அண்ணன்களால பாதிக்கப்பட்ட எல்லாரும் என்னய எதிரியாப் பாக்க ஆரம்பிச்சாங்க. அது புரியாம எனக்கு படிச்ச கொழுப்புனு சொல்லி அண்ணனும் என் சர்டிபிகேட்ட எரிச்சுட்டான். அண்ணன் ரெண்டுபேருக்கும் பாதிநாள் ஜெயில்வாசந்தான். போலீஸ் வரதும் போரதுமா இருந்தாங்க வீட்டுக்கு.

அம்மா வருத்தத்திலயே சீக்கிரம் செத்துட்டாங்க. தனியா அந்த வீட்ல நான் பட்டபாடு. என் சுயநம்பிக்கையே செத்துப்போச்சு. மானத்தோட வாழ முடியுமாங்கற கேள்விக்குறியோட கட்டின துணியோட வீட்டவிட்டு ஓடி வந்தேன். இதோ திருச்செந்தூர் கோவில் வாசல் பிச்சக்காரினு பட்டமும் கிடைச்சிருச்சி.

கோவில் அய்யர் பாவம் பாத்து தினமும் பிரசாதம் கொஞ்சம் குடுப்பாரு. அவங்க வீட்டம்மாவும் உடுத்தறதுக்கு  துணி குடுக்குது. வாசப்பக்கம் பெருக்கி சுத்தப்படுத்தி வைப்பேன். அவ்வளவுதான்.

இப்ப ஒருவாரத்துக்கு முன்னதான் இந்த ஆறு பசங்களும் வந்தாங்க. அதுல செம்பட்டனு ஒரு பையன் என்னயப் பாத்தவொடனேயே அக்கா அக்கானு ஒட்டிக்கிட்டான். எங்கேந்தோ தப்பிச்சு ஓடி வந்தாங்களாம். அவங்க முதலாளி சாப்பாடு ஒண்ணும் போடாம அடிச்சு அடிச்சு வேல வாங்கியிருக்கார் போல. ரெண்டு நாள் இங்க படுத்துக்கிடந்தாங்க. அப்பறம் இவன்மட்டும் என்கூட இருக்கப்போறேன்னு சொன்னதால உட்டுட்டுப் போயிட்டாங்க. பாவம் செம்பட்ட கை ரெண்டும் காச்சிக்கெடக்கு. இப்ப அவன அய்யர்கிட்ட ஏதாவது சாப்பிட வாங்கிட்டுவான்னு அனுப்பிச்சிருக்கேன். அவரு பிரசாதம் குடுக்கற நேரந்தான்.

செம்பட்டையின் குரலால் யோசனை கலைந்தது.

அக்கா இன்னிக்கு அய்யர் ஒண்ணுமே குடுக்கல. போ போன்னு விரட்டி உட்டுட்டார். ரொம்ப பசிக்குதுக்கா. வேற ஏதாவது யோசனை சொல்லேன். ஆமாங்கா. மத்த அஞ்சுபேரும் திரும்ப வந்துட்டீங்களா.

நான் எங்கடா போவேன். அஞ்சு ரூபா இருக்கு. இதுக்கு ஏதும் கழிச்சுப்போட்ட பழம் கெடைக்குமானு கோவில் வாசல் கடைக்காரர்கிட்ட கேட்டுட்டு வாங்க. அனுப்பினேன்.

ஏ கோமு. நோக்கு புத்தியிருக்கா. இவ்ளோ பேர அனுப்பி உடறியே பிரசாதம் வாங்க. பாவம் பாத்து உனக்குசாதம் குடுத்துண்டிருந்தேன். சரி போனா போறது ஒரு பிள்ளையாண்டான் தானேனு புதுசா சேந்தவனுக்கும் சேத்துக் குடுக்கறேன். இப்ப என்னடான்னா ஒரு படையையே அனுப்பறியே.

நாங்களும் எங்காத்துல சாப்பட வேண்டாமா. முருகன் எனக்கு அந்த அளவு வசதியக் குடுக்கலம்மா. யாசகம் கேக்கப் போறச்சே கூட்டமா போகக் கூடாது. அப்டிப்போனா குடுக்கணும்னு மனசு இருக்கறவாக் கூட எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாதுனு பயந்து ஒளிச்சு வச்சுண்டு இல்லன்னு சொல்லிருவாளாம். இரந்து ஊட்குப் பன்மையோ தீது  னு பழமொழியே இருக்கு. இதையெல்லாம் படிக்காத உங்கிட்ட சொல்லிண்டிருக்கேனே உனக்கெப்படி புரியும். சொல்லிக்கொண்டே இருக்கும் தயிர்சாதத்தை என் பாத்திரத்தில் போட்டுவிட்டுப் போகிறார் அய்யர். அவருக்கு எப்படித்தெரியும் நான் படித்தவள் எனக்கும் இந்தப் பழமொழி தெரியும்னு.

பாடல் 46

இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) – எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியா தவரே
‘இருதலையும் காக்கழித் தார்’.

பழமொழி 46 – இருதலையும் காக் கழித்தார்

இவ்வளவு வருசம் கழிச்சு என் அப்பானு சொல்லிக்கிட்டு உள்ள நுழைஞ்சிருக்கிற மனுசன மனசு ஒத்துக்க மாட்டேங்குது. அம்மா என்னடான்னா

அப்பாக்கு தண்ணிகொண்டு குடு, காப்பி குடுனு என்னய உபசரிக்கச் சொல்லறாங்க. கல்லூரி மாணவியான எனக்கு மனதுக்குள் பல கேள்விகள்.

எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலேந்து இந்த ஆள் நம்ம கூட இருந்ததேயில்ல. உங்கப்பா எங்கனு எவ்ளோ பேர் கேட்டிருப்பாங்க. அப்பயெல்லாம் எனக்கு அவமானமா இருக்கும் தெரியுமா. எவ்ளோ அழுதிருப்பேன். என் ப்ரெண்ட்ஸ் என்ன உங்கப்பா வேற யார்கூடவாவது ஓடிப்போயிட்டாரான்னெல்லாம் கேட்டு அவமானப்படுத்தி இருக்காங்க.   அப்பயெல்லாம் அந்த மனுசன் இருக்காருனு சொல்லி என்ன பிரயோசனம். நீ வேணும்னா உங்கப்பா செத்துட்டாருனு சொல்லிடுனு சொல்லியிருக்க.

திடீர்னு காவி வேட்டி கட்டிக்கிட்டு பண்டாரம் மாரி ஒரு ஆளு வராரு. நீ இவர்தான் உங்கப்பாங்கற. அவரும் என்னமோ பாசமா இருக்கற மாதிரி உருகிக்கிட்டிருக்காரு.

என்ன கேட்டாலும் அம்மாவிடம் பதில் இல்லை.

எல்லா விசயத்தையும் செல்லம் மாமாகிட்டதான் புலம்புவேன். அவர் நான்சின்னதா இருக்கும்போதுலேந்து பக்கத்துவீட்ல இருந்தவரு. அவரும் அவரோட மனைவியையும் தான் நான் மாமா அத்தைனு கூப்பிடறது. எனக்கும் நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களாம்.

அப்பா அம்மா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால யாரும் பேசமாட்டாங்களாம். அப்பா எங்கள விட்டுட்டுப்போனவொடனே எங்க தங்களுக்கு பொறுப்பு வந்துடுமோனு இன்னும் தூரமா விலகிட்டாங்க.  எனக்கு ஆறுவயசிருக்கும் போதுலேந்து அம்மாதான் கஷ்டப்பட்டு வளத்தாங்க.

மொதல்ல லட்சுமி அக்கா கடையில கூடமாட உதவிக்கு நின்னாங்க. அப்பறம் இப்ப நாங்களே தனியா சிப்ஸ், முறுக்கு எல்லாம் போட்டு விக்கறோம். வியாபாரம் நல்லா போயிட்டிருக்கு. மனஓட்டத்துடன் காலும் நடந்ததால் செல்லம் மாமா வீட்டுக்குள் வந்துவிட்டேன்.

அத்தை ஆரம்பிக்கிறாங்க. இங்க பாரும்மா நீ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. உங்கம்மா என்னடான்னா எம் புருசன் பதினைந்து வருசத்துக்கு முன்ன இந்த ஊர உட்டுட்டுப் போனவுடனே திருவண்ணாமலையில போய் துறவி ஆயிட்டாரு. இவ்ளோ வருசத்துக்குப் பின்ன அவருக்கே மனசுல தோணிச்சாம் ஊருக்குப் போயி நல்லபடியா மனைவி குழந்தையோட வாழ்க்கை நடத்துனு. அதனால வந்துட்டாராம். அப்டிங்கறாங்க.

இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு. இந்தமாதிரி குடும்பத்தையும் காப்பாத்தாம துறவறத்துக்குப் போறென்னு அதையும் ஒழுங்கா செய்யாம பாதியில திரும்பி வரவங்க காவடி எடுக்கறேன்னு சொல்லிட்டு அதோட ரெண்டுபக்கத்துப் பொருட்களையும் நீக்கிட்டு வெறும் தண்ட மட்டும் தூக்கிட்டுப் போறது மாதிரிதான். ஊர் சிரிப்பாச் சிரிக்கும். அதத்தான் ‘இருதலையும் காக் கழித்தார்’ னு பழமொழியாச் சொல்லுவாங்க.  ஆனா எனக்கென்னமோ இந்த மனுசனப் பாத்தா பொறுப்பில்லாம ஊதாரியா கெட்ட பழக்கங்களோட சுத்திட்டிருந்துட்டு இப்போ வயசானப்புறம் போக்கிடம் இல்லாம நூறு ரூபாய்க்கு காவித்துணி கட்டிக்கிட்டு பட்டையப் போட்டுக்கிட்டு வந்து கதை சொல்ற மாதிரிதான் தோணுது. இன்னும் கெட்ட பழக்கங்கள் இருக்கா இல்லையானு தெரிஞ்சுக்காம வீட்டுக்குள்ள சேக்காத. அவ்வளவுதான் சொல்லுவேன். என்னை உசுப்பேற்றிவிட்டாள் அத்தை. யோசனையுடன் எழுகின்றேன் வீட்டுக்குச் செல்ல.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *