விமானப் பயணச் சீட்டுகளுக்கான ரீபண்டு – உச்சநீதிமன்றத் தீர்ப்பு

0

‘கலைமாமணி’ வீ.கே.டி. பாலன்

(தமிழ்நாடு சுற்றுலா – பயண மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவர்)

2020 ஜனவரி மாதத்தில் கொரோனா பரவ ஆரம்பித்து விட்டது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதம் வரையிலான பயணத்தை ரத்து செய்து முன் பதிவு செய்யப்பட்ட பணத்தைப் பயணியர் திருப்பிக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். விமான நிறுவனங்களோ, நாங்கள் விமான சேவையை இன்னும் நிறுத்தவில்லை, ஆகவே, கட்டாயம் நீங்கள் பயணத்தைத் தொடர வேண்டும். நீங்கள் பயணத்தை ரத்து செய்தால், உங்கள் பயணச் சீட்டுக்கான பணத்தை நாங்கள் தர முடியாது என அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் 15,000 கோடி ரூபாய் வரையிலான, பயணிகளின் மற்றும் பயண முகவர்களின் பணம், விமான நிறுவனங்களில் முடங்கிப் போனது.

இந்த ஆபத்தான சூழ்நிலையில் இந்தப் பணம் திருப்பிக் கிடைக்காவிட்டால் பல நிறுவனங்களை மூட வேண்டி வரும். வாடிக்கையாளர்கள் நெருக்கடி, போலீஸ், வக்கீல், பஞ்சாயத்து என்று முகம் கொடுக்க நேரிடும். முற்றிலும் தொழில் முடங்கிவிடும். இதனை எப்படிச் சீர்ப்படுத்துவது எனும் நோக்கத்தில் (tttha) தமிழ்நாடு சுற்றுலா – பயண மற்றும் விருந்தோம்பல் சங்கத்தின் தலைவராகிய நான் முதல் அடியை எடுத்து வைத்தேன்.

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு 08-02-2020 அன்று நிலைமையின் விபரீதத்தை உணர்த்தும் விதமாகக் கடிதம் எழுதினோம்.

விமானப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவில் (Civil Aviation Advisory Committee) இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாடினோம்.

இந்தியாவின் பழமையானதும் பெரிய சங்கமுமான டிராவல் ஏஜன்ட் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் (Travel agents Association of India) தலைவரான திருமதி ஜோதி மயால் அவர்களது ஆதரவையும் மற்றுமொரு தேசிய சங்கமான டிராவல் ஏஜெண்ட் பெடரேஷன் ஆப் இந்தியாவின் (Travel agents Federation of India) தலைவர் லுல்லு அவர்களின் மேலான ஆதரவையும் பெற்றுச் செயலில் இறங்கினோம்.

இதன் அடிப்படையில் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் ( Director general of Civil Aviation ) விமான நிறுவனங்களை அழைத்துப் பேசியதன் விளைவாக, கடன் இருப்பில் (credit cell) பணத்தை வைத்திருப்பதாகவும் அதிலிருந்து பயண முகவர்கள் ஒரு வருட காலத்துக்குள் பயணச் சீட்டுகளாகப் பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தார்கள்.

இது சரியான தீர்வாகாது என நாங்கள் சொல்லிவிட்டோம்.

அதையடுத்து பிரவசி, அபாய், டாஃபி ஆகியோர் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள். நாங்களும் தாய் அமைப்பும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை எங்களுக்குச் சாதகமான கருத்தை உச்சநீதிமன்றத்தில் சொல்ல வைத்தோம்.

அதனடிப்படையில், 2020 மார்ச் 25ஆம் தேதியில் இருந்து 2020 மே24 வரையிலும் உள்ள காலக்கட்டத்தில் விமானச் சீட்டு பெற்றிருந்தாலோ அல்லது முன்பதிவு செய்திருந்தாலோ உடனடியாக அதற்கான பணம் கொடுக்கப்பட வேண்டும்.

கடன் கூடு (Credit shell) ஒன்றை வைத்து அதில் வரவு வைத்துக்கொள்ள வேண்டும்.  விமான பயணச்சீட்டை உரிய பயணிக்கோ, வேறு எவருக்குமோ பயன்படுத்தலாம்.  2020 ஜூன் வரையிலும் 0.5% மேலதிகமாக விமான நிறுவனங்கள் கொடுக்க வேண்டும்.  31-03-2021 வரையிலும் 0.75% மாதாமாதம் கொடுக்க வேண்டும்.

மேற்கூறியவை அனைத்தும் உள்ளூர் மற்றும் சர்வதேசப் பயணச் சீட்டுகளுக்கும் பொருந்தும்
என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பயணச் சீட்டுக்கான பணம் கிடைத்துவிட்டது என்ற நிம்மதி பயணிகளுக்கும், பயண முகவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வரக் காரணமான மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், என் ஜி ஓ பிரவசி, அபாய், டாஃபி, தாய், தமிழக அரசு, மற்றும் எமது செய்திகளை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளுக்கும் பதிப்பித்த பத்திரிகைகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *