அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (11.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 279

  1. வேண்டாம் அங்கு…

    வானில் மேகம் திரண்டுவந்து
    வையம் நனைய மழைபெய்தால்
    கோனி லிருந்து குடிகள்வரை
    கும்பிட் டேத்துவர் மகிழ்ச்சியிலே,
    தானியம் போலிலை உப்பதுவே
    தண்ணீர் பட்டால் கரைந்திடுமே,
    மேனி யுழைப்போர் உப்பளத்தில்
    மேகம் கண்டால் பதைப்பாரே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. படக்கவிதைப் போட்டி 279

    இருவர் தூக்கியும் சுமையின் பாரம்
    குறையவில்லை
    வாழ்க்கையின் பாரமும் அதுதானே

    வானத்தைத் தொட்டு விடுமோ பாரம்
    வாய்பிளந்து நோக்கின்றோம் கூடையைத் தான்

    எத்தனையெத்தனை இன்னல்கள்
    அத்தனையத்தனை பாரங்கள் பிறகு
    வந்தனவந்தன இன்பங்கள்
    வாழ்வின் நிதசுகத்தருணங்கள்

    மழலைகளைத் தூக்கினோம் உப்புமூட்டை
    உழைக்கும் வர்க்கமென பலமூட்டை
    புடைக்கும் நரம்பதிற் உடற்கூட்டை
    இறுதியில் நம்மீது அடுக்கிடுவர் மணற்மூட்டை

    மொத்தத்தில் பாரம் சுமந்திட மனிதனன்றோ
    வாழ்க்கையின் பாடமும் அதுவன்றோ

    சுதா மாதவன்

  3. உப்பும் மேகமும்

    ஆழக் கடலில் தான் விளையும்
    ஆதவன் அருளால் உரு கொள்ளும்
    கொடுவெப்பம் ஏறுகையில் உயிர் தரிக்கும்
    கொட்டும் மழையில் கரைந்து போகும்
    மானுடனின் பசிதீர தான் கரையும்
    வானுயர அதன் மேன்மை ஓங்கி நிற்கும்
    அளவுக்கு மிஞ்சுகையில் அதிர்ச்சியூட்டும்
    களவுசெய்ய ஒன்னாப் பெருஞ்செல்வம்
    படிக வடிவில் உருவானப் பெட்டகமாம்
    உப்பும் முகிலும் உலகம் காக்கும்

  4. பகலவன் பார்வை பட்டு
    பாற்கடலின் பரந்த கரை மடியில்
    படிகம் படிகமாய் படிந்த
    படியலின் பளிங்கு குவியல்

    அவியல் முதல் பொரியல் வரை
    அறிவியல் முதல் ஆன்மவியல் வரை
    அலைகளின் உவர்ப்பு நீருக்குள்
    அடங்கிய உப்புக்குள் அடக்கம்

    கூடை நிறைய வெள்ளை உப்பு
    கூட்டு உழைப்பில் விளைந்த உப்பு
    நாட்டுக்கு விடுதலை நல்கிய உப்பு
    நம்ம காந்தியார் காய்ச்சிய கல்உப்பு

    உப்பளத்தில் உழைத்து உழைத்து
    அப்பளமாய் ஆன உடம்பின்
    உப்பு வியர்வை உரமானது
    உப்பு நீர் கடலுக்கு உயிரானது

    வெண்மேகம் தாலாட்டுமா இங்கு
    வெயில் சுடும் தேகம் நீராடுமா
    கைகள் இணைந்து சேராமல் போனால்
    மெய்யுடல் ஒருவேளை பசியாறுமா

    வானமே எங்கள் எல்லை
    வாய்ப்புகளை என்றும் நாங்கள் நழுவவிட்டதில்லை
    வல்லமையோடு வலிமை கொண்டு உழைத்தால்
    வாழ்வில் என்றும் இல்லை தொல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *