வழிவாணிபன் மியான் ஹுசைனின் ஜூஹூ அனுபவம்

0

மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி: மலையாளம்
தமிழில்: முனைவர் நா.தீபாசரவணன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

மும்பையின் பரபரப்பான நகரத்தில் வழிவாணிபக்காரனான மியான் ஹுசைன், வெயில் காலமானதால் தனது வியாபாரத்தை மாலையுடன் நிறுத்திவிட்டு தனது இருப்பிடமான சிஞ்ச் போக்கலிக்குத் திரும்பினார். வழக்கமாக இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவார். குழந்தைகள் அதற்குள் தூங்கி இருப்பார்கள். மியான் ஹுசைன் உறங்குவதற்குள் நடுநிசி ஆகிவிடும். குளித்து முடித்து வருகின்ற அவருக்கு உணவுப் பரிமாறுவதோடு நிலோஃபரின் வேலை முடிந்தது. அவள் மக்களுக்கு அருகில் சென்று சுருண்டுவிடுவாள். மியான் ஹுசைன் சாப்பிட்ட உடனே தனக்கு விருப்பமான கிராமஃபோனுக்கு அருகில் போவார்.

சொல்லவில்லையா……………………. அவர் ஒரு சங்கீதா ரசிகர். தன்னைவிட அவர் விரும்புவது கிராமஃபோனைத்தான் என்று நிலோஃபர் கூறுவாள். அவர் அதை மறுக்கமாட்டார்.

“அப்பா”,  ஹௌசான் வெளியில் கைநீட்டிக்கொண்டு சொன்னான்.

”உனக்கெப்பவும் அப்பாவோட நெனப்புதா” நிலோஃபர் ரொட்டிக்காக மாவு பிசைவதற்கிடையில் கொஞ்சம் சலிப்புடன் முனகினாள்.

ஹௌசான், அம்மாவைக் கவனிக்காமல் மீண்டும் அப்பா என்று கூறினான். அவன் சும்மா சொல்றானென்று நிலோஃபர் நினைத்தாள். ஆனால் கொஞ்ச நேரத்துக்குள் மியான் ஹுசைனின் சத்தம், காதுகளில் முழங்கியது. குண்டுவெடிப்போ, கலவரமோ நிகழ்ந்திருக்கும் என்ற குழப்பத்தில் அவள் குதித்து எழுந்தாள்.

”ஏ………………..என்னாச்சு?” அவள் வேகமாகக் கேட்டாள்.

ஒன்னுமில்ல எனக்கு ஜூஹூ வரை போற ஒரு வேலை இருக்கு” மியான் ஹுசைன் கூறினான்.

”ஜூஹூவில் என்ன?” நிலோஃபர் கேட்டாள்.

ஆனால் அவர் பதில் கூறவில்லை. அவருடைய முகம் உற்சாகப்பூர்வமாக இருந்தது. நிலோஃபரின் கன்னத்தில் தட்டினார். அவன் பிரமிப்புடன் பார்க்கவே ஒரு கசல் பாடிக்கொண்டே வியர்வை நாற்றமுடைய ஆடையை மாற்றினார். அவசரமாகக் குளித்து வந்தார். விசேஷ நாட்களில் மட்டும் அணியும் சில்க் ஜிப்பாவைக் கையில் எடுத்தார். அதை அணிந்த பிறகு, மசூதித் தெருவிலிருந்து வாங்கிய பர்ஃப்யூம் எடுத்து, கழுத்திலும் இரு கைகளுக்கிடையிலும் தொட்டுத் தேய்த்தார். அறை முழுக்க மணம் வீசியது.

”நில்லுங்க! ஜூஹூவில் என்னான்னு எங்கிட்ட சொல்லக் கூடாதா?” நிலோஃபர், ஹௌசானைத் தூக்கிக்கொண்டு அவருக்குப் பின்னால் சென்றாள்.

அவர் திரும்பி நின்றார். மும்பை நகரத்தில் நல்ல செல்வாக்குடன் இருக்கின்ற பரம்பரையில் பிறந்தது போன்ற முகபாவம் அவரது கண்களில் தெரிந்தது.

”ஜூஹூவில் என்னான்னு தானே தெரியணும். சொல்றேன்….. குலாம் அலி பாடறாரு”. மியான் ஹுசைன் கர்வத்தோடு கூறினான். தொடர்ந்து ஜூஹூவை லட்சியமிட்டு நடந்தார்.

ஹோட்டல் அறையில் ஜன்னல் வழியாக இரவு, ஜூஹூவைப் பார்த்து குலாம் அலி ஆச்சர்யத்துடன் கூறினார். “யெஹ் ஜஹத் பஹூத் அஜிப் ஹே”.

அதைச் சரியென்று கூறும் விதமாக கடல் அலை ஒன்று வந்தது. கடற்கரை, மக்கள் கூட்டத்தில் நிரம்பியது. சிறுவர்கள் கொக்கோ கோலாவினுடையவும், பெப்சியினுடையவும் காலியான டின்களைக் கடலில் வீசி எறிந்து விளையாடினர். அவை அலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் சென்றன. பேல்பூரியும் பழவகைகளும் குளிர்பானங்களும் விற்கிறவர்கள் மக்களைக் கவரும் விதமாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். தீப ஒளிகளுக்கு அப்புறம் காலத்தோடு கட்டப்பட்ட வானம். அதற்குக் கீழே மியான் ஹுசைன் உல்லாசமாய் நடந்தார்.

ஹோட்டல் கேட்டில் காக்கி யூனிஃபோம் அணிந்த காவல்காரன், மியான் ஹுசைனைச் சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தார். மியான் ஹுசைனோ ஒரு சிறு புன்சிரிப்புடன் ஜிப்பாவின் ஜோப்பிலிருந்து டிக்கெட்டெடுத்து நீட்டினார். அவன் சந்தேகம் தீர்ந்தது.

”மாஃபி மாங்கதா ஹூம். சாஹ்ப்” காவல்காரன் சலாம் வைத்தான்.

”டீக் ஹே” மியான் ஹுசைன் முன்னோக்கி நகர்ந்தார். அறையில் உட்கார்ந்து பேடா சாப்பிடுவதற்கிடையில் குலாம் அலி தெளிவான ஒரு சிரிப்புடன் கூறினார்: “ஹமேம் மும்பய் கி ஹர் சீஸ் பஸந்த் ஹே”

விநாயக் பாஹெ, கட்கோப்பில் ஒரு ஆடை ஆலையில் வேலை செய்யும் வேலைக்காரனும் ஹோட்டலின் கேட்டருகே ஒரே நேரத்தில் வந்தனர். விநாயக் பாஹெவின் கையில் சாம்னா பத்திரிகையின் ஒரு கோப்பி இருந்தது. நெற்றியில் குங்குமம். கொஞ்சம் பெரிய மீசை, சீக்கிரம் கோபம் கொள்ளக் கூடியவனே தான் என்கிறதை அழைத்துச் சொல்லும் விதமாக கண்களில் ஒரு பொலிவு தெரிந்தது.

”ஏய்!………….எங்கே போறீங்க” காவல்காரன் அவனை உற்றுப் பார்த்தான். ஹோட்டலின் வாடிக்கையாளராக எந்தத் தகுதியும் இல்லை என்ற வியூகத்தில் வந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றினான்.

விநாயக் பாஹெ நின்றார். அவருடைய கண்களில் கோபம் மின்னியது.

”சால, உனக்கு இவ்வளவு துணிச்சலா?”

விநாயக் பாஹெ தனது வலது கையை உயர்த்தினான். காவல்காரன் பின்னால் நகர்ந்தான். விநாயக் பாஹெ நேராக நடந்தார். காவல்காரனுக்கு தான் உடனே என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிக்க முடியவில்லை. அதற்குள் வரிசை வரிசையாகப் பத்துக்கும் மேலான வாகனங்கள் கேட்டிற்கு அருகில் வந்தன. அவற்றிலிருந்து இறங்கியவர்கள், கேட் வழியாக உள்ளே கூட்டமாகச் சென்றனர். விநாயக் பாஹெவும் அக்கூட்டத்தில் சேர்ந்தார்.

மியான் ஹுசைன் உற்சாகத்துடன் தனது இருக்கையிலிருந்து கொஞ்சம் முன்னால் தள்ளி உட்கார்ந்தார். ஆடிட்டோரியத்தில் கைத்தட்டல் அடங்கியது. குலாம் அலி காட்சி அளித்தார். இரு பக்கத்திலும் தபேலாவும், ஆர்மோனியமும். ஆடிட்டோரியத்தில் நிசப்தம் நிறைந்தது. குலாம் அலி பாடத் தொடங்கினார்.

ஜூஹூவில் காற்று வீசியது. மியான் ஹுசைனுக்குத் தனது மனது நிறைந்தது. நரம்பு மண்டலம் முழுவதும் உற்சாகம் அடையும் விதமான ஒரு மகிழ்ச்சியை அனுபவித்தார். தான் சிம்ச்போக்கலியில் வசிக்கின்ற வழிவாணிபக்காரன் என்பதை அவர் மறந்தார். கண்களை மூடி அவர் விண்மீன்களைக் கண்டார். விண்மீன்களுக்கிடையில் குலாம் அலியின் குரல் கடந்து சென்றது.

”போதும் நிறுத்து!” விநாயக் பாஹெ, ஆடிட்டோரியத்தில் கடந்து வந்து சத்தம் போட்டுக் கத்தினான்.

மியான் ஹுசைன் நடுங்கினான். விநாயக் பாஹெவும் உடன் இருந்தவர்களும் என்னவெல்லாமோ சத்தமாகக் கூறிக்கொண்டு மேடைக்கு நேராகக் குதித்தனர். ஆடிட்டோரியத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்களும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை. பார்வையாளர்கள் பலரும் செய்வதறியாது எழுந்தனர்.

விநாயக் பாஹெ ஒரு மைக்கைக் கைப்பற்றினான்.

”உங்க யாருக்கும் வெட்கமா இல்ல? பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருத்தனோட பாட்டக் கேட்டு மதிமறந்து உட்கார்றதுக்கு? அவங்க நம்ம ஆட்கள காஷ்மீரில் கொலை பண்ணீட்டு இருக்காங்க. நீங்க ஒரு பாகிஸ்தானியோட பாட்டக் கேட்டு வாஹ்……………..வாஹ்னு சொல்லறீங்க. இங்க இருக்கற சாப்பாட்டையும் சாப்பிட்டு வெட்கமானமில்லாத கூட்டம்.

மியான் ஹுசைனுக்கு அதைக் கேட்கச் சகிக்கவில்லை.

”பாகிஸ்தான் நம்மோட எதிரியாய் இருக்கலாம். ஆனா சங்கீதம் யாருடைய எதிரியும் அல்ல”

”நீ யாரடா, பன்னியோட மகனே!” விநாயக் பாஹெ அவன் மீது விழுந்தான்.

பின்னால் வேறு சிலரும்.

மியான் ஹுசைன் அவர்கள் உருவாக்கின வளையத்தில் அகப்பட்டார். அடியும் உதையும் வாங்கி அவரின் உடல் நசுங்கியது. வாய்க்குள் இரத்தத்தின் சுவை அனுபவப்பட்டது. கெட்ட வார்த்தைகள் செவிக்குள் நுழைந்தன. எவர் எவரோ அவரின் முகத்தில் துப்பினர். ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் அவர் கீழே விழுந்தார். வினாயக் பாஹெ அவரை மீண்டும் உதைத்தான். போடா நாயே! பாகிஸ்தானுக்கு. குலாம் அலி தனது அறையில் நிம்மதியில்லாமல் நடந்தார்.

”சூர் சப்கா ப்யாரா ஹோதா ஹை. யஹ் சீமா நஹி பெச்சான் தா” குலாம் அலி தனக்குத் தானே கூறிக்கொண்டார். மற்றுள்ளவர்கள் நிசப்தமாக நின்றனர்.

”தில் சே நிகலி ஆவாஸ் தோ துஷ்மனி பி பூலா தேதா ஹெ” யாரோ ஏதோ கூறத் துணிந்தனர். குலாம் அலி கையுயர்த்தி அவனை விலக்கினார்.

”குதா நெ இன்சான் பனாயா, ஒளர் ஹம் பேத் பாவ் கர்தா ஹெ” குலாம் அலி கோபத்தோடு ஜன்னலுக்கருகில் நடந்தார். வெளியில் ஜூஹூ. இரவில் கடல் விளக்குகள். வானம். மியான் ஹுசைன் ஒரு கை கடல் தண்ணி எடுத்து முகத்தைக் கழுவினார். “இன்ஷா அல்லா!” ஜூஹூவின் வெப்பம் தணிந்த தூசு படர்ந்த பாதை வழியாக அவர் இழுத்து இழுத்து நடந்தார்.

கொஞ்ச தூரம் சென்ற பிறகு தான் பின்னால் ஒரு அசைவைக் கவனித்தார். அலைந்து திரிகின்ற ஒரு நாய். மியான் ஹுசைன் நின்றதும் கொஞ்சம் தள்ளி அவரைப் பார்த்துக் கொண்டு அதுவும் நடந்தது. அவர் நின்று அதற்கு நேராகத் திரும்பினார்.

 ”எதுக்கடா நீ என் பின்னால வர்றே?. போ………………………பாகிஸ்தானுக்குப் போ………………………”

சர்வசக்தியும் உபயோகித்து நாயை எட்டி உதைத்தார். அது மூண்டுகொண்டே புழுதியில் தெறித்து வீழ்ந்தது. மியான் ஹுசைன் தடுமாறி நடந்து மீண்டும் அதனருகில் சென்றான். மறுபடியும் எட்டி உதைத்தார்.

”சொல்றது கேட்கலயா? போடா பாகிஸ்தானுக்கு”.

சத்தமிட்ட மியான் ஹுசைனின் குரல் அழுவது போலாயிற்று. வேதனை தாங்காமல் அவர் நிலத்தில் விழுந்தார். நாய் மெதுவாக எழுந்து, அவருடைய காலுக்கடியில் சென்று அமர்ந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *