மீனாட்சி பாலகணேஷ்

(பந்தாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

பெண்குழந்தைகளின் விளையாட்டுகளென இன்னும் பல உள்ளன. பிள்ளைத்தமிழ் நூல்கள் விரித்துரைப்பதென்பன சிலவே! அவற்றுள் கடைசியாக நாம் காணப்போவது பந்தாடல் பருவம்.

பத்துப்பருவங்களுக்குள் பிள்ளைப்பருவ நிகழ்வுகளைப் பாடும் வழக்கினின்று வழுவாது பாடவேண்டி, அனைத்து விளையாட்டுகளையும் ஒரு பாடலிலேயே அம்மானைப் பருவத்தில் கூறிவிடுவதும் உண்டு! பக்தி, கலைநயம், கற்பனை அனைத்தும் கலந்தோடும் பிள்ளைத்தமிழ்ப் பருவப் பாடல்கள் இலக்கியச்சுவையிலும் மிகச் சிறந்தவையாகும்.

பாடல்களைக் காணுமுன் பந்தாடுதல் பற்றிய மற்ற இலக்கியக் குறிப்புகளைக் கண்டு மகிழலாமே!

பந்தாடுவது பெண்களுக்கு ஒரு இன்பமான பொழுதுபோக்கு; அருமையான விளையாட்டு! சங்ககாலத்திலிருந்தே  ‘பந்தாடுதல்’ பெண்களுடன் மட்டுமே இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளது.

மதுரை மாநகரின் கோட்டைவாயிலில் மன்னர்கள் பெண்கள் விளையாடும் பந்தையும் பாவையையும் கட்டித் தொங்கும்படிச் செய்திருந்தார்களாம். இதன்பொருள், ‘எம்மை வெல்லும் ஆண்மையாளர் எவரும் இல்லை! பகைவர்களை நாங்கள் பந்தும் பாவையும் விளையாடும் பெண்களைப் போன்று எண்ணுகிறோம். வீரம் மிகுந்தோர் யாராவது இருந்தால் இவற்றை வந்து அறுக்கலாம்,’ என்பதாகும் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது!

            ‘வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
         பொருநர்த் தோய்த்த போரருவாயில்1 என்பன பாடல் வரிகள்.

நெட்டி, பஞ்சு, பட்டுநூல், மயில்பீலி, மயிர் இவற்றால் பின்னி பந்துகளைச்செய்து சோலைகளிலும் மாடங்களிலும் விளையாடிக் களித்தனர். இவர்கள் விரைந்து பந்துவிளையாடும்போது குதிரையின் குளம்படிச் சத்தம்போல ஒலியெழுந்ததாம்; சிலம்பும் மேகலையும் கைவளைகளும் ஒலிக்கப் பெண்கள் பந்தாடினார்களாம்! எத்துணை பாடல்கள்! வருணனைகள் – சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும்!

சீவகசிந்தாமணியின் விமலையார் இலம்பகப்பாடல் ஒன்று பந்தடிக்கும் லயத்துடன் ஒத்திருப்பதைப் படித்து ரசிக்கலாமா?

இராசமாபுரத்து வீதிகளின் அழகைக்காணச் சீவகன் சென்று கொண்டிருக்கிறான்; விமலை எனும் அழகியபெண் பந்தாடிக்கொண்டிருந்தாள். அவள் எவ்வாறு பந்தடித்து விளையாடினாள் எனச் சீவக சிந்தாமணி விளக்கும் விளையாட்டின் வழிமுறைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன!

விமலை தனது உள்ளங்கையில் பொருந்தும்படி ஐந்து பந்துகளை வைத்துக்கொண்டு மேலே வீசியாடுகிறாள். ஒரு மலர்மாலையைச் சுற்றிமொய்க்கும் வண்டுகளைப்போல் அவை அவளைச்சுற்றிக் கீழேவந்து உடனே அவள் கைகளால் அடிக்கப்பட்டு மேலெழும்பிச் செல்லுகின்றனவாம். திரும்பக் கீழே விழுவதில்லை! பந்துகளின் போக்கையே பார்த்துக் கொண்டிருக்கும்அவளுடைய கண்களில் அழகான பிம்பமாகத் திரிகின்றனவாம்!

         அங்கையந்த லத்தகத்த ஐந்துபந்த மர்ந்தவை
         மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
         பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்தல் இன்றியே
         செங்கயற்கண் புருவம்தம் முளுருவம்செய்யத் திரியுமே2!

மேலே அடிக்கப்பட்ட பந்துகள் சில அவளுடைய முல்லைமாலையில் மறைந்தன; பின்பு அவள் கையை வந்தடைந்தன.  கருங்கூந்தலைத் தாண்டிப்பறந்த பந்துகள் முகத்தருகே வந்தனவாம்; தலையில் மறைந்தவை மார்பில் மாலையருகே வந்துசேர்ந்தன. சில கைவிரலில் அமர்ந்தன. இவ்வாறு பந்துகள் எங்கே என்று காண்பவர் வியக்கும்படி அவற்றை வீசியும், அடித்தும் வேகமாக ஆடினாள் விமலை. இப்படியெல்லாம் ஆடினால் என்னவாகும்? மார்பில் பூசிய குங்குமமும் பொற்சுண்ணமும் நெற்றிச்சந்தனமும் வியர்வையில் கரைந்து கொங்கைகளிடையே வழிந்தோடியது வானவில் போன்று இருந்ததாம். ஆடியாடி அவளும் சிறிது தளர்ச்சி அடைந்துவிட்டாள் போல இருக்கிறதே! அவள் கையிலிருந்து ஒருபந்து நழுவி, மார்பிலணிந்த முல்லைமாலையைத் தொட்டுக்கொண்டு வீதியில் வந்துகொண்டிருந்த சீவகன்முன்பு போய் விழுந்ததாம். பின்பு என்னவாயிற்று? கண்ணோடு கண்ணிணை கலந்து திருமணத்தில் முடிந்தது என்கிறது சீவக சிந்தாமணி! இங்கு இதைச் சொன்னது விமலையார் பந்தாடும் அழகை விவரிக்க மட்டுமே!!
—————————
அம்பிகையும், மற்றப்பெண்களைப்போல் பந்தாடுவதில் விருப்பமுள்ளவள் என்பது தேவாரத்தில் காணும் வர்ணனைகளால் விளங்குகிறது. ‘பந்தணை விரலி’ எனச் சம்பந்தப்பெருமான் அம்பிகையைப் பற்றிக் கூறியுள்ளார். சுந்தரரும் கூட, ‘பந்தும் கிளியும் ஆகியனவற்றை எப்போதும் கரங்களில் வைத்திருப்பவளான அம்பிகையின் சிந்தைகவர்ந்த நாதனாகிய இறைவன் வாழும் ஒற்றியூர்,’ என ஈசனையும் அவன் வாழும் ஊரையும் சிறப்பிக்கிறார்.

         பந்தும் கிளியும் பயிலும் பாவை
         சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
         எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
         உந்தும் திரைவாய் ஒற்றி யூரே3 (சுந்தரர் தேவாரம்- திருவொற்றியூர்)

கைலாயத்திலிருந்த பார்வதிதேவிக்கு ஒரு சமயம் பந்துவிளையாடும் ஆசை ஏற்பட்டது; உற்சாகமாக அவளும் தோழியருடன் நீண்டநேரம் பந்து விளையாடுகிறாள். நேரம் சென்றதே தெரியவில்லை. இவள் விளையாடுவதற்காக சூரியனும் மறையாமல் வெளிச்சம் தருகிறான். மறைந்தால் விளையாட்டு தடைப்பட்டுவிடுமே; அதனால் அம்பிகை தன்னிடம் கோபித்துக்கொண்டால் என்னசெய்வது என்று ஒருபுறம் பயம்வேறு! இதனால் மாலை மயங்காது போயிற்று; முனிவர்கள் எல்லாரும் சந்தியாவந்தனம் செய்யமுடியாமல் திண்டாடினார்கள்.

சிவபிரானிடம் சென்று அவர்கள் முறையிட, அவர், சூரியனைக் கடிந்துகொண்டு, நேரம்காலம் கருதாமல் விளையாட்டில் ஈடுபட்ட அம்பிகையைப் பசுவாகும்படி சபித்தார். மனம்வருந்திய பார்வதி சாபவிமோசனத்தை வேண்டுகிறாள். சிவன் பந்தினைக் காலால் எற்ற அது பூமியில் ஒரு சரக்கொன்றை மரத்தடியே விழுகின்றது. அந்த மரத்தினடியே உள்ள சிவலிங்கத்திற்குப் பசுவான அம்பிகை பால்சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்கிறார் பெருமான். ‘பந்து அணைந்த தலம்’ ஆதலால் ‘பந்தணைநல்லூர்’ என இத்தலம் வழங்கப்படுகிறது. காலப்போக்கில் ‘பந்தநல்லூரு’ம் ஆகிவிட்டது! அப்பந்தும் அச்சிவலிங்கத்தின் சடையில் விழுந்து கலந்தது.

திருமால் பசுவான தன் தங்கையைக் காக்க இடையனாக பூமிக்கு வருகிறார். நாள்தோறும் பசுக்களை மேய்த்து வருகிறார். ஒருநாள் பார்வதியான அப்பசு புற்றிலிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பாலை முழுவதும் அதன்மீது சொரிந்து வழிபடுகிறது. அப்பூசையால் மகிழ்ந்த சிவபிரான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதிக்குக் காட்சிதந்து அவளை அணைத்துக் கொள்கிறார். பசுவடிவு நீங்கிய அவளும் மேலும் வடக்குநோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டாள். தவத்தால் மகிழ்ந்த சிவபிரான், முனிவர்கள் – தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பராசக்தியைத் திருமணம் செய்து கொண்டார். கல்யாணசுந்தரர், பசுபதீஸ்வரர் (பசுவின் பதியாக வந்தவர்) எனும் பெயரையும் பெற்றார். அச்சிவனது சிரசில் பந்தணைந்த அடையாளம் இன்றும் காணப்படுகின்றது.

இது அம்பிகையின் பந்தாடும் ஆசைபற்றிய அருமையான ஒரு புராணக்கதை. சீவகசிந்தாமணியில் பெண்கள் பந்து விளையாடும் முறையைப் பார்த்தோம். ஆகவே இது மிகவும் நுட்பமாக, கைவேகத்தையும், கண்- கை- கால் ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டையும் விவேகத்தையும் கொண்டு விளையாடப்படும் ஆட்டம் என அறியலாம். நாள்தோறும் நன்கு பயிற்சி செய்யவும் வேண்டும்.

            ____________________________

இத்தனை அழகும் நயமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த விளையாட்டிற்கு மற்றவற்றைப்போல் பாடல்கள் இல்லையோ என எண்ணவேண்டா. சிலப்பதிகாரத்தில் பெண்கள் பாடியாடுவதாக சில பாடல்களைக் காணலாம். கண்ணகிக்குக் கோவிலெடுத்து வழிபடும்போது பெண்கள் மூவேந்தர்களின் புகழையும் பாடி ஆடிக் களிக்கிறார்கள். பந்திற்குக் ‘கந்துகம்’ எனவொரு அழகான பெயருமுண்டு. பெண்கள் பந்தடிக்கும்போது பாண்டியமன்னர்களின் புகழைக்கூறி ‘கந்துகவரி’யைப் பாடுகிறார்கள்.

“பொற்கொடி போன்றபெண்ணே! நமது அழகான பொன்மாலைகளும் மின்னல்போல ஒளிவீசும் மேகலைகளும் அசைந்தாடும்படி, ‘எங்கள் பாண்டியமன்னன் நீடூழி வாழ்க! தேவர்களின் ஆரத்தை மார்பிலணிந்தவன் வாழ்க!’ எனக்கூறிப் பந்தடிப்போமாக!” என்று ஒருத்தி பாடுகிறாளாம்.

“விரைந்து வரும் இப்பந்து நமது கையில் இருந்ததும் இல்லை! நீண்ட நிலத்திலிருந்து அந்தரத்தே எழுந்ததும் இல்லை பாராய்! என்று உலகத்தோர் கூறும்வண்ணம் பாண்டியமன்னன் வாழ்க எனப்பாடிப் பந்தடிப்போம்!” என இன்னொருத்தி பாடுகிறாள்.

துன்னிவந்து கைத்தலத்து இருந்ததில்லை நீணிலம்
தன்னினின்றும் அந்தரத்து எழுந்ததில்லை தானெனத்
தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே
தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே4.

இது அவர்கள் வெகு விரைவாக இப்பந்தாட்டத்தை ஆடுவதனைக் குறிக்கின்றது. பந்தைத் தூக்கி எறிந்து பிடித்து விளையாடும் விளையாட்டல்ல இப்பந்தாட்டம்! பந்தடித்தல் என்று ஒருத்தியே  பந்துகளை மேலே வீசி அவை கீழேவிழுமுன் ஓடியோடிப்பிடித்து உயரப்பந்தடித்து விளையாடும் விறுவிறுப்பான பந்தாட்டம் இதுவாகும்! நல்ல உடற்பயிற்சியும் கூட!

            _____________________________

கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை எனும் காப்பியம் உதயணன் எனும் மன்னனின் பிரதாபங்களைக் கூறுவது.

இதில் ‘பந்தடி கண்டது’ எனும் காதையில் பந்துகளைச் செய்யும் முறை விரிவாக விளக்கப்படுகிறது.

தொழில் நுணுக்கம் அறிவோரால் செய்யப்பட்ட பந்துகள் நெட்டியும் பஞ்சும் இடையிடையே வரிந்து கட்டிய  உலண்டு நூலும் சேர்த்து அழுத்தி அவையிவற்றை அமைவாக உருட்டிக்கட்டி, மேலே மயிற்பீலியும் மயிருங்கொண்டு நன்றாகப் பின்னி, அவற்றின்மேல் நூலாலும் கயிற்றாலும் நுண்ணியதாகச் சுற்றி அழகாகக் கையிற்கொண்டு அழுத்தி, அதன்மேல் பாம்புத்தோல் போலவும் மயில் தோகையின் கண் போலவும் அழகிய நீர் நுரை போலவும் தோன்றும்படி தைத்துப் பிடித்த மென்மையினையுடையனவும் பல்வேறு தொழில் திறம் அமைந்தனவுமாகிய பந்துகளை வைத்து (விளையாடினர்).

                   கிடையும் பூளையு மிடைவரி யுலண்டும்
                            அடையப் பிடித்தவை யமைதியிற் றிரட்டிப்
                            பீலியு மயிரும் வாலிதின் வலந்து
                  நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்
                            கோல மாகக் கொண்டனர் பிடித்துப்
                            பாம்பின் றோலும் பீலிக் கண்ணும்
                    பூம்புன னுரையும் புரையக் குத்திப்
                            பற்றிய நொய்ம்மையிற் பல்வினைப் பந்துகள்5.

பெருங்கதையின் வத்தவ காண்டத்தில் பந்தடி கண்ட காதையில் வாசவதத்தையும் பதுமாவதியும் தங்கள் தோழியரின் பந்துவிளையாடும் போட்டியைக் காண்கின்றனர். வயந்தகனும் உதயணனும் மறைந்து நின்று பந்தடி காணுகின்றனர். தோழியர்கள் இராசனை, காஞ்சனமாலை, அயிராபதி, விச்சுவலேகை, ஆரியை ஆகியோரின் ஒப்பற்ற பந்தாட்டம் விளக்கமாகக் கூறப்படுதலைக் காணலாம். இத்தகைய விரிவான வேகமான, வியக்கவைக்கும் ஆட்டமிதுவா என பிரமிக்க வைக்கும் விளக்கங்களைக் கண்டு மகிழலாம்.

இனி பிள்ளைத்தமிழைக் காணச் செல்லலாமா? முன்பே கூறியதுபோல, நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ளதில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றே பெண்குழந்தையின் பந்தாடல் பருவத்தைப் பத்துப்பாடல்களில் அழகுற விவரிக்கின்றது.

சிவகாமசுந்தரி அன்னை  வெள்ளிமலையாகிய கைலாயத்தில் பிரம்மாண்டமான மலைகளாகிய பந்துகளைக் கையில் எடுத்து விறுவிறுப்பாகப் பந்தாடி மகிழ்கிறாள். அப்போது அவளுடைய சிவந்த தாமரை மலரடிகளின் குதிகால் பந்துகள் அசைந்தாடுகின்றன; பந்தினையொத்த திருமுழந்தாள் அசைந்தாடுகிறது. பந்துபோன்ற வடிவில் முடியப்பட்ட உச்சிக்கொண்டை உடன் ஆடுகின்றது. குங்குமம் பூசிய கொங்கைகள் பந்தாடுகின்றன; இருவிழிகளும் பந்துகள் செல்லும் பாதையையே நோக்குவதனால் அவையும் அதே வேகத்தில் சுழன்றாடுகின்றனவாம்.

நமது உள்ளங்களையும் உவகையில் பந்தாடச் செய்கின்ற பாடல்!

            செந்தாமரைப் பதம் பந்து அசைந்தாட
                   வரும் திருமுழந்தாள் பந்துமே
         திண்புவி பதிந்தாட இனிய பந்துக்
                   கொண்டை சென்றுடன் பந்தாடவே
         நந்தாத குங்குமக் கொங்கை
                   பந்தாட இருநயனங்கள் ஆடவே
         ……………………………………………..
         பந்தாட வேதண்ட மூதண்ட கூட
                   நற்பந்து விளையாடி அருளே!
         பங்கயச் சிவகாம சுந்தரி என்
                   அம்மையே! பந்து விளையாடி அருளே6!     

அன்னை பராசக்தி தனது ஆணைப்படி இவ்வுலகில் அனைத்தையும் நடத்துவிக்கிறாள் எனப் பெரியோர் கூறுவர்! பிள்ளைத்தமிழ் நூல்களில் அன்னை பராசக்தி சிறுவீடுகட்டி விளையாடுவதெனக் கூறுவது, அன்னையானவள் இந்த உலகங்களைப் படைப்பதனையும், அம்மானை, பந்து, கழங்கு முதலியன விளையாடுவது அவற்றைத் தனது ஆணைப்படி காத்து இயக்குவதனையும், சிவனெனும் பித்தன் அச்சிற்றிலை அழிப்பது, உலகங்களை அழிப்பதனையும், இச்செயல்கள் தொடர்ந்து இடைவிடாது சுழற்சியாக நடந்துகொண்டே இருப்பதையும் உட்பொருளாக விளக்கும்.

இப்பருவத்தின் பத்துப்பாடல்களும் ஒவ்வொரு நயத்தை விளக்கும். மூன்றாம்பாடல் பலவிதமான விதங்களில் தோன்றும் உயிரினங்களான முட்டையினின்று விளைபவை, கருப்பையினின்று பிறப்பவை, வியர்வையினின்று தோன்றுவன எனும் தத்துவன (நுண்ணுயிரிகள்!), ஊர்வன, பறப்பன, நடப்பன, கிடப்பன, இருப்பன ஆகிய வெவ்வேறு உயிர்களைப் படைத்தும், அடுத்தடுத்த பிறவிகளில் வெவ்வேறாக மாறிமாறிப் பிறப்பதற்கும் ஆகிய நிலைமையுடைய உயிர்க்கூட்டங்களை பந்தென அடித்து விளையாடுபவளான உமையம்மையே!

            ………………………………………………
         தத்துவன ஊர்வன தவழ்ந்திடுவ நிற்பன
                   தனித்தனி பறப்பனவுமே
         ………………………………………..
         பத்திபெறு பல்லுயிர்ப் பந்தடித்து ஆடும்
                   உமைபந்து விளையாடியருளே7 என வேண்டுவதாக அமைந்த பாடல்.
வேறொரு பாடலில் இசை சங்கீதத்துடன் பந்தடித்தருளுக என்பார்.

மற்றொன்றில், அணிந்துள்ள அணிமணிகள் செய்யும் தாளத்துடன் இணைந்து பந்தடித்தருளுக என வேண்டுவார்.

வேறொன்றில் எங்கள் பந்தபாசங்கள் தீரும்வண்ணம் பந்தடித்தருளுக என்பார்.

ஆக, இறைவியின் பந்தாடும் செயலானது உயிர்களின் பந்தபாசத்தை நீக்குவதும், ஐந்தொழில் புரிவதும் ஆகியவற்றினை அவள் எளிதாகக் காலந்தோறும் பந்தாடும் விளையாட்டாகவே செய்துவருவதனை உணர்த்துகின்றது.

இந்தப் பந்தாட்டத்தில்தான் என்னவெல்லாம் கற்பனைகள். கருத்துக்கினிய புனைகதைகள், காட்சிகள்! காலங்கள்தோறும் பலவகைப்பட்ட விளையாடல்களின் உள்ளங்கவர் காட்சிகளைப் பிள்ளைத்தமிழ் எனும் ஒப்பரும் ஒரு பிரபந்தத்தின் இனிய பாடல்களாக்கி அளித்த அருமைத் தமிழின் பெருமை தனித்துவமானது அன்றோ?

இத்துணை நாட்கள் பிள்ளைத்தமிழின் நயமான பருவங்களையும் அவை தொடர்பான பாடல்களையும் கண்டுகளித்தோம்.

விரைவில் இதுபோன்ற வேறொரு தொடருடன் சந்திப்போம்.

வணக்கம்.

(நிறைந்தது).

                        ________________________________

 பார்வை நூல்கள்:

  1. நக்கீரர் – திருமுருகாற்றுப்படை.
  2. திருத்தக்க தேவர்- சீவக சிந்தாமணி – விமலையார் இலம்பகம்.
  3. சுந்தரமூர்த்தி நாயனார் – திருவொற்றியூர் தேவாரம்.
  4. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம் – கந்துக வரி.
  5. கொங்குவேளிர் – பெருங்கதை – வத்தவகாண்டம்- பந்தடி கண்டது.
  6. 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

  1. இந்த அற்புதமான தொடர், இந்தப் பகுதியுடன் நிறைவு பெறுகிறது. உரிய படம் கிடைக்காததால், கட்டுரை ஆசிரியர் மீனாட்சி பாலகணேஷ் தாமே இந்தப் படத்தை வரைந்துள்ளார். பிள்ளைத் தமிழ் குறித்து ஆராயும் எவருக்கும் இந்தத் தொடர், நல்ல வழிகாட்டியாக இருக்கும். இந்தச் சீரிய பங்களிப்புக்காக முனைவர் மீனாட்சி பாலகணேஷ் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *