திருச்சி  புலவர் இராமமூர்த்தி

சென்றடி  வணங்கி  நின்று  ‘’செய்தவ  வேடங்   கொண்டு
வென்றவற்   கிடையூ   றின்றி  விட்டனன் ‘’ என்று  கூற ,
‘’இன்றெனக்  கையன்  செய்த தியார்   செய்ய  வல்லர்’’ என்று
நின்றவன்  தன்னை  நோக்கி   நிறைபெருங்   கருணை   கூர்ந்தார்!

பொருள்

சென்று அரசரை அடிவணங்கி நின்று கொண்டு, “செய்த தவவேடங் கொண்டதனாலே வென்றவனைக்  காப்பாற்றிக்   கட்டளைப் படி கொண்டுபோய் விட்டனன்“ என்று (தத்தன்) சொல்ல, “இன்று எனக்கு ஐயனாகிய நீ செய்ததுபோல யாவர் செய்யவல்லவர்?“ என்று (அவனுக்கு நன்றி கூறுமுகத்தால) நன்மொழி கூறி, (வணங்கி) நின்றானாகிய அவனை நோக்கி, நிறைந்த பெருங்கருணை கூர்ந்தார் (அரசர்).

விளக்கம்

செய்தவ வேடத்தான் , என்ற தொடர் , இயல்பாகத்  திருநீறு  அணியாமல் வஞ்சனையாகச்  செய்து கொண்ட  வேடம்  என்பதையும் , சிவபக்தி மேலிட்ட நாயனாரைப் பொய்தவ வேடத்தினை துணையாகப் போர்த்திக்கொண்டு வென்றவனாகத் தன்னை வியந்து கொண்டவன் முத்தனாதன். பசுத்தோல் போர்த்த  நரி  என்று கருதலாம்; செய்தவ வேடங்கொண்டு வென்றவன் என்ற தொடர், முத்தநாதன் படைகொண்டு  பகைத்திறத்தால்  வெல்ல இயலாமல் , சூழ்ச்சியால் வெல்ல எண்ணி, அவ்வாறே  தான்  நினைந்தசெயலைச்செய்து, வென்றுவிட்டதாகக் கருதிய அவன், உண்மையில்  அரசன்கட்டளையால் அறிந்துகொண்டதைத் தத்தன் இங்கே குறிப்பிட்டான் என்ற பொருள்கொண்டது. அதனால்  வேடத்தால் கருதியது முடித்த முத்தநாதனை  அவ்வேடத்தால் தப்பிப்போக உதவியதாகத் தத்தன் கருதியதால் அரசரிடமும் வென்றவன் என்ற சொல்லையே கூறினான் என்ற   பொருளையும்   குறித்தது.

இன்று எனக்கு  ஐயன்  செய்தது  யார் செய்ய வல்லார் ?- என்ற தொடர்    

இன்று – எனக்கு – ஐயன் – செய்தது யார் – செய வல்லார்?

இதுபோழ்து அரசர் கூறிய இந்த நன்மொழியில் ஒவ்வொரு சொல்லும் மிகப்பொருத்தமும் பொருளாழமும் உடைமை குறித்தது!. இன்று எனக்கு – நான் வன்மையனாய் அரசியலில் வீற்றிருக்கும் போது அச்சம் – தன்னலம் முதலிய பல காரணங்களால் யாவரும் என் மொழிவழி நிற்பர்; நான் வலியிழந்து குருதி சோர வீழ்ந்து சிறிது போதில் ஆவியும் சோர நின்ற இன்று இச்சமயத்தில் என் மொழிவழி நிற்றல் அரிது; ஐயன் பகைவன் என்று வாளால் எறியலுற்ற உன் கருத்துக்கு மாறான இப்பணியை இன்று சொற்கடவாது இயற்றலினால் நீ பெரியனாயினை; ஐயன் – முன்னிலை குறித்த படர்க்கைச் சொல். பெருமையும் அருமையுங் குறித்தது; தாதனாகிய தத்தனை ஐயன் – என்றது அவன் தம்பாற் செய்து நிறை வேற்றின கடமையின் நன்மைக்காகவும், வேடம் போற்றிய முறையைக் கடைபோகக் காத்த வுதவிக்காகவும் நன்றி பாராட்டிய அருமைப்பாடும் குறித்தது; செய்தது – (சிலர் செய்வேன் என்று சொல்லுவர்; ஆயின் செய்யார்;) நீ சொல்லியபடியே செய்து முடித்தனை; யார்செய வல்லார்? என்ற வினா எதிர்மறை குறித்தது. நீயே செய்ய வல்லாய் என்ற உடன்பாட்டினும், வேறு எவரும் செய்கலார் எனும் எதிர்மறைக்கூற்று உறுதிப்பாடுடையது; யார் வல்லார்? என்ற வினா அதனினும் மிகவும் உறுதி உணர்த்தும் வழக்கு.

இங்கே  ஷேக்ஸ்பியரின்,  ‘’அந்தோனியும்  கிளியோபாத்ராவும்’’ என்ற நாடகத்தில் போர்க்களத்தில்  தோற்று விடுவோம் என்ற எண்ணத்தில் அந்தோனி  தன் மெய்க்காவலன்  ஈராஸிடம், ‘’அந்நியர் கைவாளால்  சாவதை விடத்  தன்  நாட்டு வீரனால்  கொல்லப் படுவதே நன்று! ஆதலால் ஈராஸ்,   நீ    உடனே வாளை உருவி, என்னைக் கொன்று விடு!’’ என்று ஆணை இடுகிறான். தயங்கிய  ஈராஸ் ஒரு முடிவுடன்  தன்  வாளை  எடுத்து , ‘’என் அரசனின் இறப்பை எப்படித் தாங்குவேன்!’’ என்று மனத்துள் எண்ணி இதோ கொல்கிறேன்! என்று தன்னையே  மாய்த்துக் கொள்கிறான். அந்தோனி  அவன் வீழ்வதைக் கண்டு,  ‘’ஆ!  என்னினும் மும்மடங்கு நேர்மை கொண்ட வீரனே! நீ எனக்கு அறிவுறுத்தும் ஆசான் ஆகி விட்டாய்!’’  என்று போற்றுகிறான் !

‘’EROS

Farewell, great chief. Shall I strike now?

MARK ANTONY

Now, Eros.

EROS

Why, there then: thus I do escape the sorrow

Of Antony’s death.

Kills himself

MARK ANTONY

Thrice-nobler than myself!
Thou teachest me, O valiant Eros!’’

என்று  போற்றும் உணர்ச்சிகரமான காட்சி,  நம்  நினைவுக்கு வருகிறது!

என்று – என்று தம் திருவாக்கினாலே அருண்மொழி கூறி; நோக்கி – கண்ணினாலே அருட்பார்வை செய்து; நிறை பெருங் கருணை கூர்ந்தார் – தம்  திருவுள்ள நிறைந்த பெரிய தண்ணருளை அவனிடத்துச் செய்தார்.  இவைமுறையே மொழி, மெய், மனம் என்னும் மூன்று கரணங்களாலும் தத்தனை நாயனார் ஆசீர்வதித்து அருளிய தன்மை குறித்தன. தத்தன் பெற்றது பெரும் பேறன்றோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *