இலங்கை வெடுக்குநாறிக் குன்றில் ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்

0

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

அருள்மிகு உமையம்மை உடனாய ஆதிலிங்கேச்சரர் வெடுக்குநாறிக் குன்றில் (அது மலையன்று; அது குன்று) திருக்கோயில் சார்ந்த அருளாட்சி.

வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே அங்கு அருளாட்சி.

ஆதி என்றாலே பழமையானது தொன்மையானது.

சைவத் திருக்கோயில் இருந்த இடங்களில் புத்தரும் சமணரும் வாழ்ந்த கதைகள் ஏராளம் ஏராளம்.

திருநாவுக்கரசு நாயனார் வடதளி பழையாறைத் திருக்கோயிலில் வழிபடச் செல்கிறார். நீண்ட வரலாறு கொண்ட பழைய சிவன் கோயில். சமணர்கள் அக்கோயிலை தமதாக்கிப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

அப்பர் பெருமானை வழிபட விட மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். சிவனை வழிபாடு செய்த பின்பே உண்பேன் என உண்ணாநோன்பு இருக்கிறார் அப்பர் பெருமான்.

தமிழர் வரலாற்றில் உணவைத் தவிர்க்கும் போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய வரலாற்று நாயகன் அப்பர் பெருமான்.

வண்ணங் கண்டு நான்உம்மை
   வணங்கி யன்றிப் போகேனென்
றெண்ண முடிக்கும் வாகீசர்
   இருந்தார் அமுது செய்யாதே
அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
   கரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ண மாக மன்னனுக்குக்
   கனவில் அருளிச் செய்கின்றார் தி12210296.

அங்கு வந்த சோழ மன்னன் சமணர் பள்ளிகளையும் ஓராயிரம் சமணர்களையும் அழித்தான். திருக்கோயிலைத் திறந்தான். அப்பர் சிவனை வழிபட்டார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, வடதளி பழையாறை நிகழ்ச்சி. 1,400 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி

காலத்தால் தொன்மையான சைவத்துக்குப் பின்வந்த புத்தரும் சமணரும் சைவத் திருக்கோயில்களைப் பூட்டினர். அருகே சமணப் பள்ளிகளை, புத்த பல சாலைகளை அமைத்தனர்.

அவ்வாறு சமணரும் புத்தரும் பள்ளிகள் அமைத்த இடங்களுள் ஒன்று வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதிலிங்கேச்சரர் திருக்கோயில்.

சைவ மீள்எழுச்சிக் காலத்தில் ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெடுக்குநாறிக் குன்று அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் மீண்டும் சைவர்களின் வழிபாட்டுக்கு வந்தது.

புத்தர் சமணர் இடையிட்டுப் பள்ளிகள் அமைந்திருந்தாலும் சைவ சமயப் பூசைகள்வழிபாடுகள் தொடர்ந்தன. இடையீடின்றி இன்றுவரை சைவர்களின் பூசைக்குரிய திருக்கோயிலாக அருள்மிகு ஆதி லிங்கேச்சரர் திருக்கோயில் தொடர்கிறது.

வெடுக்குநாறிக் குன்றுச் சிவன் கோயில் பூசைகள் கடந்த 2 வாரத்துக்கு முன் காவல்துறையால் நிறுத்தப்படும் வரை பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன.

வெடுக்குநாறிக் குன்றுக்கு வழிபடச் செல்லும் சைவ அடியவர்கள் அடையும் துன்பத்தைக் கண்ட நெடுங்கேணி காவல்துறைப் பொறுப்பதிகாரி ஈராண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றவர், வழிபாட்டில் ஈடுபட்டார். அடியார்கள் குன்றில் ஏறிச் செல்வதற்கு ஏணி ஒன்றைப் பொருத்திக் கொடுத்தார்.

இந்த ஆண்டு நெடுங்கேணிக்கு மாற்றலாகி வந்து பணிபுரியும் காவல்துறைப் பொறுப்பதிகாரி வெடுக்குநாறிக் குன்றில் சைவசமயப் பூசைகள் நடைபெறுவதைத் தடுக்க முயன்றார்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்ற நிகழ்ச்சி எனச் சைவ சமயப் பூசைகளைச் சுட்டிக்காட்டிய நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார்.

சைவ சமயப் பூசைகள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதிகளின் கீழ் அமையாது என நீதிமன்றம் அவரது விண்ணப்பத்தை ஏற்கவில்லை.

எனவே பூசைகள் தொடர்ந்தன. பத்து நாள் திருவிழாக்கள் நடந்தன. இறுதி நாளன்று பொங்கல் அன்னதானம் என ஆயிரக்கணக்கான சைவ மக்கள் கூடி வழிபட்டனர்.

முதல் நாள் திருவிழா நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். பூசகருடன் இணைந்து வழிப்பட்டேன். பூசை முறைகளில் பங்கு பற்றினேன்.

உடல் சிலிர்த்தேன். மெய் விதிர்விதிர்த்தேன். கை தலை மேல் வைத்தேன். கண்ணீர் ததும்பியது. உள்ளம் வெதும்பியது. தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருப்புராணம் என மனம் உருகிப் போற்றிகள் பாடினேன்.

26. 9. 2020 விழா இறுதி நாள்.

அதற்குப் பின் நெடுங்கேணி காவல் நிலையப் பொறுப்பதிகாரி நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டார்

1 தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்தான இடம் வெடுக்குநாறிக் குன்று.
2 பொங்கல் நிகழ்ச்சிக்காகத் தீ மூட்டினர், தொல்லியல் நிலைகளுக்குக் கேடு விளைவித்தனர்.
3 உணவு சமைப்பதற்காக பகிர்வதற்காக ஐந்து கொட்டகைகளை இடைக்காலமாக அமைத்தனர். அதனால் அங்குள்ள தொல்லியல் தடயங்கள் குலைந்தன.
4 திருவிழாவுக்காக ஆட்சி குழுவினர் துண்டு அறிக்கை வெளியிட்டனர், அடியார்களைத் திரட்டினர். தொல்லியல் தடயங்களுக்கு அடியார்களின் கூட்டம் சேதங்களை விளைத்தது.
5 புத்து சமயத்தவரும் இந்த இடத்தில் வழிபாடு செய்தவர்கள் என்பதற்கான சான்று இருப்பதால் சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைந்தது.
6 தொல்லியல் சட்டத்தின் 24வது அத்தியாயத்தின் 15ஆவது பிரிவிலும் 31 32 34 பிரிவவுகளிலும் மேற்காணும் 5 செயல்களும் குற்றமாக உள்ளதால் அறங்காவலர் இருவர் பூசகர் ஒருவர் ஆகிய மூவரையும் பிணையில் விட முடியாத சிறையில் அடைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் நெடுங்கேணி காவல்துறை பொறுப்பதிகாரி கேட்டார்.

தொடக்க நாளன்று வழக்கின் விண்ணப்பம் முழுமையற்றதால் குற்றச் சாட்டை ஏற்க மறுத்த நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார்.

தொல்லியல் ஆணையர் சான்றிதழான ஆவணத்தை நீதிமன்றத்தில் கொடுக்காததால் இரண்டாவது தவணையிலும் (23.10.2020) நீதவான் மூவரையும் தளையிட மறுத்தார். இரண்டாவது தவணைக்கு நானும் வவுனியா சென்று நீதிமன்றத்தில் பார்வையாளராக இருந்தேன்.

மூன்றாவது தவணை நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது.

வெடுக்குநாறிக் குன்று பூசைக்குரிய இடம் என்பதை அடுத்த தவணையில் நிலைநாட்டுவதே வழக்குரைஞர்களின் குறிக்கோள் இலக்கு. ஆட்சிக் குழுவினருக்கும் பூசகருக்கும் சைவ சமயத்தைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் கூறி அவர்களைத் தளையிட வேண்டாம் என வழக்குரைஞர் கூறுவர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *