நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 57

கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
பொல்லாத தில்லை ஒருவற்கு – நல்லாய்!
‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’.

பழமொழி -‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை’, ‘இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’

அக்கம்பக்கத்து வீடுகள்ல எங்கயோ காலையிலிருந்தே சண்டை. காலங்காத்தால ரம்யமான சேவல் கூவற சத்தத்தக் கேட்டு கண்விழிச்சதுதான் தாமதம். வாசல்ல ஒரே சலசலப்பு. இந்த ஊர்ல இது சகசம்தானேன்னு விட்டுட்டேன்.

தினமும் பொழப்பில்லாம ரெண்டு பேர் சண்ட போடறதப் பாக்கவே துண்ட கக்கத்துல இடுக்கிக்கிட்டு வந்து நின்னு பாக்கற வெத்துவேட்டுகளுக்கு நடுவுல நானும் ஒண்ணா நின்னு பாக்க விருப்பப்படல.  இது ஒரு விவசாயக் கிராமம்னு சொன்னா கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனா இந்தத் தெருவுல இருக்கறதுல பாதிபேர் முதலாளி வர்க்கம். அவங்க தன் சொந்த வயல்ல இறங்கி வேலை பாக்க மாட்டாங்க. வெறும் மேற்பார்வை மட்டுந்தான். சாப்பிட்டுட்டு சும்மா உக்காந்து இருக்குற இந்தக் கூட்டந்தான் தினமும் யாரை வம்புக்கு இழுக்கனு உறண்டிகிட்டு நிக்கும். நல்ல வேளை கல்லூரி படிப்புங்கற பெயர்ல வெளியூர் ஹாஸ்டல்ல தங்கி படிக்கறது நல்லதாப் போச்சு. அப்பப்ப இங்க வந்து பொழுதுபோக்க இவங்க நடவடிக்கையப் பாத்துட்டுப் போயிடலாம். இருந்தாலும் இந்த ஊருக்கு நாம ஏதாவது செய்யணும்….. யோசிச்சுக்கிட்டே வீட்டுக்குள்ள நடந்துக்கிட்டு இருந்தேன்.

அம்மாகிட்ட வாசல்ல என்ன சத்தம்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா மனசு சொல்லியது. வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வர அம்மா நான் கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லாம குளிக்கக் கிளம்பிட்டாங்க. அதுக்குமேல தொடர விருப்பமில்லாம மொட்டைமாடிக்கு ஏறிப்போனேன். காலைநேர சூரியன் அழகாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தான். பறவைகள் எல்லாம் பிரேக்பாஸ்ட் சேகரிக்க பறந்துக்கிட்டு இருக்கு. எங்க வீட்டு பப்பாளி மரத்துல அணில் கூட ஓட ஆரம்பிச்சிடுச்சு. பக்கத்துவீட்டு அத்தை வத்தல் போடறதுக்காக மேல வந்து பார்வையிடறாங்க. வேட்டித் துணிய விரிச்சு அது பறக்காம இருக்க கல்ல வச்சிட்டு என்னயக் கூப்பிடறாங்க. நானும் சுவர் ஏறிக்குதிச்சு அவங்க வீட்டுப்பக்கம் போறேன்.

தம்பி திரும்பத் திரும்ப ஏறி இறங்க முடியல. என் கூட வந்து சாமான்கள் எடுத்துக் குடேன்னு சொன்னதால அவங்க கூட போய் காக்காய் விரட்ட கருப்புக் குடை, வத்தல் கூழ கிண்டிவுட ஒரு கரண்டி, தண்ணி மூணையும் நான் எடுத்துக்கிட்டேன். அத்தை சூடானகூழ துணியவச்சு லாவகமா எடுத்துட்டு  மேல ஏறறாங்க. நானும் அவங்க பின்னாலயே போய் சாமான வச்சுட்டு நிக்கறேன். கைய நீட்டச்சொல்லி ஒரு கரண்டி வத்தல் கூழ வாயால ஊதி என்கையில உடறாங்க.

நான் நக்கி சாப்பிட்டுக்கிட்டே அவங்க வத்தல் போடற விதத்தப் பாத்துட்டு நிக்கறேன். பக்கத்து கம்பத்துல நிக்கற காக்கா பொறாமையோட என்னயப் பாத்துட்டு அவங்க சொந்தத்தையெல்லாம் கத்திக் கூப்பிடுது. இவங்ககிட்டயே கேக்கலாமேனு நினைச்சு கீழ என்ன சத்தம். யார் சண்டபோட்டுக்கிட்டாங்கனு கேட்டதுதான் தாமதம் அத்தை பொலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

அத ஏம்பா கேக்கற. நம்ம பக்கத்துவீட்டு அலமுவும் அவளுக்கு அடுத்தவீட்டு செல்லாவும் தான் கத்திக்கிட்டிருந்தாங்க. செல்லா வீட்ல நாலுநாள் முன்ன அவங்க மாமியார் செத்துட்டாங்கல்ல அப்ப பூவெல்லாம் தூவி அமக்களப் படுத்தி தூக்கிட்டுப் போனாங்க.  வாசல்ல பாடையில பிணத்தை வச்சி கட்டறதுக்காக வைக்கல் கயிறு திரிப்பாங்கயில்ல அப்பத்துலேந்து இவங்க வீட்டு வாசல்ல வைக்கல் விழுந்திரிச்சு, பூ விழுந்திரிச்சுனு ஒரே ஆர்ப்பாட்டமாம். பிணத்த தூக்கிட்டுப் போனவுடனே கழுவி உட்ட தண்ணி தன் வீட்டுக் கோலத்த அழிச்சிடுச்சுனு அழுதாளாம். அதுலேந்து அவளுக்கு மனசே சரியில்லயாம். அதனால தினமும் செல்லாவ வாசல் தெளிக்கவுடாம கத்திக்கிட்டே இருக்கா. நாங்களும் சொல்லிப்பாத்தோம்.

காலையில நான்தான் எதிர்வீட்டு டீச்சரக் கூப்பிட்டு இதுங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். என்ன பிரச்சினை அலமுனு டீச்சர் கேட்டவொடனயே ஆரம்பிச்சிட்டா.

எழவு வீட்டுத்தண்ணி எங்க வீட்டு கோலத்துப்பக்கத்துல தினமும் வரதால எங்க வீட்ல பல பிரச்சினைகள் தொடங்கிருச்சு. வர வர ராத்திரி தூக்கமே வரமாட்டேங்குது. நல்லா சாப்பிட்டுட்டு இருந்த எம்பொண்ணு இப்பயெல்லாம் சரியா சாப்பிடறதேயில்ல. இதெல்லாம் அந்தத் தண்ணிய மிதிச்சதிலேந்துதான் நடக்குது. அதுக்குதான் செல்லாவ பரிகாரம் பண்ணிடுனு சொல்றேன். அவ வீட்டுத் தண்ணி எங்க வீட்டுக்கு வராதபடி நடுமத்தியில மேடுகட்டச்சொல்றேன். அவள் முடிச்சவொடனே செல்லா ஆரம்பிச்சா

நான் ஏன் மேடுகட்டணும். வானம் பாத்த இந்த பூமியில மழை கொட்டோ கொட்டுனு கொட்டட்டும். எங்க வீட்டு மண்ணயெல்லாம் கரைச்சிக்கிட்டு அவ வீட்டுல கொண்டு சேக்கட்டும்னு சாபம் போட ஆரம்பிச்சா. சண்ட பெரிசா ஆயிடுச்சு. வீட்டு ஆம்பிளைகளும் ஒருத்தருகொருத்தர் திட்டிக்கிட ஆரம்பிச்சாங்க. நிறுத்தறதுக்குள்ள உம்பாடு எம்பாடு ஆகிப்போச்சு.

பாவம் டீச்சர் ‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை’, ‘இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’னு பழமொழி சொல்லிட்டு இந்த மாதிரி ஆளுங்களுக்கு அறிவுரை சொல்லப்போனா நம்மளயும் அவமானப்படுத்தி உட்டுருவாங்கனு வருத்தப்பட்டுட்டுப் போயிட்டாங்க. படிக்காத ஜென்மங்ககிட்ட பேசப்போனது என் தப்புதான். இப்ப பாரு இந்தக் கூழ் முழுக்கயும் போட்டு முடிக்கறதுக்குள்ள வெய்யில் வந்துடும். புலம்பிக்கிட்டே தன் காரியத்தப் பாக்கறாங்க அத்தை.

அங்க என்னடா பேச்சு. அம்மாவின் குரல் கேட்டுத் திரும்பினேன். அம்மா குளத்துக்குப்போய் துணி துவைச்சு குளிச்சிட்டே வந்துட்டாங்க. துணி காயப் போட மொட்டை மாடிக்கு வந்திருக்காங்க. இதுக்குமேல இங்க நின்னா வசவு விழும். என் வேலையைப்பார்க்க கீழே இறங்கிப்போறேன்.

பாடல் 58

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
‘இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
எழுதினான் ஓலை பழுது’.

பழமொழி – ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது’

பொழுது விடிஞ்சாச்சு. இன்னிக்கு எந்தக் கோயிலுக்கு கூட்டிக்கிட்டுப் போகப் போறாங்களோ? ஒருவேளை இன்னிக்கு ஜோசியம் பாக்கப் போகணுமோ?. கடந்த

ஒரு வருசமா இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சநாள்ல நான் என்ன படிச்சேன்னே மறந்துருவேன் போல. திருச்சியில தங்கி என்ஜினியரிங் படிச்சேன்னு பேரு. அங்கேயும் அம்மா வந்து வீடு எடுத்து சமைத்து போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப என்னடான்னா இந்த சுத்து வட்டாரத்துக்குள்ளயே வேலை தேடிக்கணுமாம். மெட்ராஸ் பக்கம் போகணும்னா அரசாங்க வேலை கிடைச்சாதான்னு சொல்லிட்டாங்க. இங்க கூடி எவ்வளவு முயற்சி பண்ணியும் எம் மனசுக்குப்பிடிச்ச மாதிரி வேலை அமைய மாட்டேங்குது.  ஓரிரண்டு இடத்துல வேலைக்குச் சேந்த பிறகு நான் உட்டுட்டு வந்துட்டேன்னுதான் இந்த ஆர்ப்பாட்டம். இப்ப என் கிரகம் சரியில்லயாம். அதுக்காக கோயில்கோயிலா கூட்டிக்கிட்டு சுத்தறாங்க. ஜோசியக்காரனுக்கு என்ன. அவன் வருமானத்துக்காகத் திரும்பத் திரும்ப வரச் சொல்லி பரிகாரம்னு பெயர்ல ஏதோ பூசை போட்டுட்டு அப்பப்ப ரெண்டு கோயில் பெயரச்சொல்லி இங்க போயிட்டுவந்து என்னயப் பாருங்கனு அனுப்பி உட்டுடறான்.

யோசிச்சுக்கிட்டே எங்க வீட்டு வாசலில வந்து நிக்கறேன். ஸ்ரீரங்கம் வெள்ளைக் கோபுரம் பக்கத்துல இருக்குது எங்க வீடு. எவ்வளவு அழகான ஊர். ஒரு தடவ காலார நடந்துட்டு வரலாம். காலங்காத்தாலயே எங்கெங்கேயிருந்தோ மக்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க. ரங்கா ரங்கானு பக்திப் பரவசத்தோட கோயிலுக்குப் போவாங்க. வேடிக்கை பாத்துக்கிட்டே நடந்த என்னய யாரோ கூப்பிடறாங்க.

என் வயதொத்த பையன்கூட ஒரு ஆண்ட்டி நின்னுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் கழுத்துல துளசி மணிமால போட்டிருக்காங்க. அவங்களுக்குப் பின்னால நிக்கற பஸ்சப் பாத்தா இவங்க இஸ்கான் குரூப்னு தெரியுது. ஆனா இவங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும். யார் இவங்க. யோசிச்சிட்டு இருக்கும்போதே ஏய் சுதர்சனா… உங்க வீடு எங்க இருக்கு. பக்கத்திலதானா. நான் டூர்ல வந்ததால தனியா பிரிஞ்சு வரமுடியாது. உன் ப்ரெண்ட் சாவித்ரி வந்திருக்கானு சொல்லி ரொம்ப பக்கம்னா உங்கம்மாவ சீக்கிரம் கூட்டிக்கிட்டு வாயேன் என்கிறாள்.

யோசனையோட வீட்டை நோக்கி விருவிருனு நடக்கிறேன். அம்மாக்கு ஆயிரத்தெட்டு பெரெண்ட். காலையிலேந்து ராத்திரி வரை யார் கூடயாவது போன்ல பேசி புலம்பிக்கிட்டேதான் இருப்பாங்க. இவங்க யாரோ.

விசயத்தைச் சொன்னவொடனேயே அம்மா எல்லாத்தையும் அப்பப்படியே போட்டுட்டு எம் பின்னால வந்துட்டாங்க. எனக்கு எந்த அறிமுகமுமே இல்லாத அந்த ஆண்ட்டி என்னயப் பாத்து

பாவம் உன் அம்மா. உன்னயப்பத்தி கவலைப் பட்டு எவ்வளவு இளைச்சுப் போயிட்டா. நாள் முழுக்க உன் நினைப்புதான். கொஞ்சம் அம்மாவுக்கு சப்போர்ட்டா இருக்க முயற்சி பண்ணுப்பா என அறிவுரையை உதிர்த்துவிட்டு தன் பையனைப் பார்த்து இவன் கூட கொஞ்சம் பேசி அட்வைஸ் பண்ணுடாங்கறாங்க.

அவங்க பையன்னு அறிமுகப்படுத்தப்பட்ட நபர் விட்டேத்தியா பேச ஆரம்பிச்சார். கூல் மேன். எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். ஏதோ இப்போதான் லண்டன்லேந்து வந்து இறங்கினமாதிரி அளப்பறை. எனக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. என்னயப் பாருங்க. நான் டில்லியில கால்சென்டர்ல வேலை பாக்கறேன். நல்ல எக்ஸ்போசர் கிடைக்குதுனு பெருமை வேற அடிச்சிக்கிறாரு.

பூ  இவ்வளவுதானா. என அந்த நபரை எடை போட்டுவிட்டு அம்மாவப் பாத்துக்கிட்டு நின்னேன்.

இவனுக்கு விதிச்சது இதுதான்னு இருந்துடவேண்டியதுதான் போல. ஒருவேலையில நிலைச்சு நிக்க மாட்டேங்கறான். நானும் வேண்டாத கடவுள் இல்ல. அவன் விதிய மாத்த இனி படைச்ச கடவுளால கூட முடியாது. . நீயாவது உன் பிள்ளைகூட சந்தோசமா இருனு புலம்பிக்கிட்டு நிக்கறாங்க. அதுக்குமேலயும் கேட்க விருப்பமில்லாம கிளம்பி வந்த நான் ஒரு முடிவோட லெட்டர் எழுதி மேசை மேல வச்சிட்டு என் சென்னை நண்பன் அறிவுரைப்படி அவன் வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்.

நல்லவேளை எனக்கு அப்டி ஒரு நல்ல நண்பன். விசயத்தச் சொன்ன வொடனேயே  ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுதுனு பழமொழியே இருக்குடா. எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. நம்ம தலையெழுத்துனு ஒத்துக்கிட்டு அதச் சரிபண்ண அத எழுதின கடவுளமட்டும் கும்பிட்டுக்கிட்டே உக்காந்து இருந்தா எதுவும் சரியாகாது நாமதான் முயற்சிபண்ணணும். நீ முதல்ல கிளம்பி வா. கொஞ்சநாள் உங்கம்மா அழுவாங்க. நல்ல வேலை கிடைச்சப்புறம் முயற்சியால விதியையும் மாத்திடலாம்னு அவங்களுக்குப் புரிஞ்சுடும். அப்டிங்கறான்.

அவனின் பேச்சைக்கேட்டப்புறம் நான் யோசிச்சேன். நான் நல்லா முன்னேறி திரும்ப வந்தப்புறம் கூட அம்மா அதுக்கும் காரணம் கடவுளும் ஜோசியமும்னு சொல்லுவாங்களோ என்னவோ. சிலபேரைத் திருத்த முடியாது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *