-மேகலா இராமமூர்த்தி

ஓவியமா? செதுக்கிய சிற்பமா? என்று நம்மை மலைக்கவைக்கின்ற இந்தக் காட்சியை அழகாய் ஒளிப்படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து வழங்கப்பட்டிருக்கின்றது இப்படம்; ஒளிப்பட நிபுணர்க்கு என் நன்றி!

“வையத்திலே பெண்ணொருத்தி மையமாக வீற்றிருக்க,
திண்ணென்ற மூட்டையொன்று அவள்பின்னே சாய்ந்திருக்க,
காளைகளைப் பூட்டிக்கொண்டு காளையிவன் கிளம்பியது
வணிகத்துக்கோ வேறெதற்கோ விளம்பிடுவீர் வையத்தீரே!”

வையம் என்ற சொல்லுக்கு உலகம் என்ற பொருளோடு வண்டி என்ற பொருளுமுண்டு!

இந்தக் காட்சிக்குப் பொருத்தமாய்க் கவிதை தீட்டக் கவிஞர்களை அழைக்கின்றேன் அன்போடு! வருக… உம் கவிதைகளைத் தருக!

*****

”கட்டைமரத்தில் செய்த இவ்வண்டி கண்ணுக்கழகாக இருந்தாலும், அந்நாளில் காணக்கிடைத்த  உண்மை வண்டிகள் இந்நாளில் மறைந்துவிட்டனவே!” என்ற தம் ஏக்கத்தைக் கவிதையில் வெளிப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

கலையை ரசிப்போம்…

கண்ணுக் கழகாய்க் கட்டைவண்டி
கட்டை மரத்தில் செய்துவிட்டார்,
வண்ணம் பலவும் பூசியேதான்
வனப்பு மிக்கதாய் ஆக்கிவிட்டார்,
உண்மை வண்டிபோ லிருந்தாலும்
உண்மையில் வண்டிகள் மறைந்தனவே,
எண்ணிப் பார்ப்போம் அந்தநாளை
எழுதிய கலைஞனை வாழ்த்திவிட்டே…!

*****

”வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம் சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை; ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட ஏதும் செய்திட நாம் முனைவதில்லை” என்று ஓடப்பர்களின் அவலநிலையெண்ணிக் கவலுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

மூக்கணாங்கயிறு!

உழைக்கும் மக்கள் பிழைத்து வாழும்
வழிகள் ஏதும் கிடைக்கவில்லை
அழைக்கும் திசையில் அலையும் நிலைமை
மாற்றம் ஏதும் கிட்டவில்லை!

வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம்
சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை
திகதிகள் மாதங்கள் ஆண்டுகள் மாறினும்
அகதியாய் வாழ்வதில் மாற்றமில்லை!

ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட
ஏதும் செய்திட நாம் முனைவதில்லை
ஊழலில் கொழுத்தோர் ஏறி முன்னேற
இழுமாடுகள் போலே மாறிவிட்டோம்
வாக்குகள் விற்று நல்லோரை வீழ்த்தி
மூக்கணாங்கயிற்றை அவரிடம் கொடுத்துவிட்டோம்
அமிழ்தம் கிட்ட வாய்ப்புகள் இருந்தும்
கழுநீர்ப் பானையில் சுவைக்கின்றோம்!

*****

வண்டியைக் கண்டதும் தம் உளத்தில் ஊறிய வெவ்வேறான எண்ணங்களைத் தம் கவிதைகளில் வனப்புற வெளிப்படுத்தியுள்ளார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டுகின்றேன்!  

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

இரட்டைக் காளைப் பூட்டி விட்ட எங்க மாட்டு வண்டி
இறுக்கிப் பிடிச்சக் கயிற்றோட வண்டிக்கார அண்ணே
ஆடியாடி உடம்பை அசைக்கும் எங்க பாசக்கார அண்ணி
எல்லாச் சுமையும் சுமக்கத்தானே எங்க மாட்டு வண்டி!

சல்சல்லுனு பறக்கப் போற எங்க வண்டியப் பாரு
சீறிப் பாயும் சிங்கமாகக் கிளம்பப் போறான் பாரு
தாவித்தாவிப் புழுதி கிளப்பத் தயாராயிட்டான் பாரு
மொத்தத்திலே நம்ம விமானம் இது என்பதைக் கூறு!

கிராமத்துக்கே பெருமை சேர்க்க இந்த மாட்டுவண்டி
குடும்பத்தோடு குதூகலமாய் நாம் போகப்போற வண்டி
மனசு முழுக்க சந்தோசத்தை வாரிக் கொடுக்கும் வண்டி
வாங்க நாமும் பயணம் செய்வோம்
நம்ம மாட்டு வண்டி!
அட நம்ம இரட்டை மாட்டு வண்டி!
வாழ்க்கைத் தத்துவம் சொல்லுற வண்டி!

”கிராமத்துக்கேப் பெருமை சேர்க்க இந்த மாட்டுவண்டி; குடும்பத்தோடு குதூகலமாய் நாம் போகப் போற வண்டி” என்று கிராமத்து மாட்டுவண்டிப் பயணத்தை நினைவுகூரும் திருமிகு. சுதா மாதவன், ”நம்ம இரட்டை மாட்டுவண்டி; வாழ்க்கைத் தத்துவம் சொல்லுற வண்டி” என்று முத்தாய்ப்பாய்த் தம் கவிதையை முடித்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *