அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (22.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி – 285

  1. அருள்தரும் வேலன்…

    வனத்து வள்ளிக் குறத்தியுடன்
    வான மகளை மணந்தவனை,
    சினத்தில் வந்த சூரனையே
    சீறும் வேலால் அழித்தவனை,
    தனமும் கலையும் தருபவனை
    தானே மயிலில் வருபவனை
    மனத்தில் எண்ணிப் பணிந்திடுவாய்
    மறவா தருள்வான் வேலவனே…!

    செண்பக ஜெகதீசன்…

  2. படக்கவிதைப் போட்டி 285

    வள்ளி தெய்வானையுடன்
    வடிவேல் முருகன்
    வேலினைக் கையிலேந்தும்
    வெற்றி வேல்முருகன்

    சூரனை வதம் செய்த
    ஆறுமுக வடிவழகன்
    கடலையே முறியடித்த
    மக்கள் சூழ் மால்மருகன்

    வேழனின் இளையவனிவன்
    புவி வலம் வந்த மருகன்
    ஆறுமுகன் ஏறுமுகன்
    அழகுமுகன் செந்தில் நகைமுகன்
    இவனே குறவஞ்சி மகன்
    தணிகை மகன் சாந்த முகன்

    காரிருள் விலக்கும் கந்தனவன்
    அடியார் கொஞ்சுமுகன்
    அருள் மழை பொழியும் மாலன்
    இவனே சரவணன் சக்திமகன்

    சுதா மாதவன்

  3. ஆறுபடையப்பன்

    நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து
    ஆற்றுப்படுத்தி நக்கீரன் நலம்பெற்று வாழ
    போற்று தெய்வயானை மணமுடித்த கோலமுடன்
    பரமசினக் குன்றமர்ந்து அருளும் பெருமானே!

    வியாழனவர் தவமியற்ற, தூயசுடர் தனிலுதித்து
    தாய்சக்திவேல் தொடுத்துத் தீயசூரன் தனையழித்து
    ஆழிசூழ் புவனங்காக்கச் சேவற்கொடி ஏந்தி
    சேயோனாய் குன்றழித்து நின்ற செந்தில்நாதா!

    பானுவும் தேனுவும் இலக்குமியுடனே
    பேணிடும் வேல் கொண்ட கரத்துடனே
    சுத்த ஞான சித்தம் கொள் பக்தர் நலங்காக்க
    தென்பொதிகை பழனிபதி நின்ற பாலகுருநாதா!

    ஓரெழுத்து மந்திரத்து பொருள் மறந்த காரணத்தால்
    பிரமனையே சிறைபிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்து
    சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை
    ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!

    துள்ளிவரு வேலெடுத்து சூரர்தலை கிள்ளி
    சினம்விடுத்து தேவவேழ வாகனத்திலேறி
    வள்ளிமலைப் பெண் மயக்கி மணமுடித்து
    குன்றுதோறும் ஆடிநிற்கும் ஞானவஜ்ரவேலா!

    சிலம்பாற்றங் கரையினிலே இளைப்பாற வந்தவளின்
    ஞானப்பசிதீர நாவல் பழந்தானுதிர்த்து
    அழகுமாமன் சூடும் அரளி மாலையேந்தி
    சோலைமலை தானமார்ந்த வெற்றிவேலா!

    ஆறுபடை மீதுறைந்து நீயருளுகின்ற போதும்
    கூறுதமிழ் நல்லுலகம் சென்றவிடந்தோறும்
    குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இடம் எனவே
    செந்தமிழால் போற்றித்தொழும் கந்தகுருநாதா!!!

  4. சின்ன மயில் சிலுசிலுக்க
    சின்ன இடை தளதளக்க
    சித்தர் போற்றும் சீமானே சிங்காரவேலா நீ வருவாய்

    பட்டாடை பளபளக்க
    பார்ப்பவர் மெய்மறக்க
    பாவங்களை போக்கிடவே
    பாலகனே நீ வருவாய்

    செஞ் சிலம்பு சலசலக்க
    சேவல்கொடி படபடக்க
    செந்தூரில் நின்றாடும்
    தேவாதி தேவனே நீ வருவாய்

    பால்குடம் பொங்க பொங்க பக்தர்களும் பாடி வர
    பாவங்களை போக்கிடவே
    பால முருகனே நீ வருவாய்

    சக்திவேல் மினுமினுக்க
    சங்கடங்கள் பறந்து
    சரணங்கள் பாடிவந்தேன்
    சண்முகா நீ வருவாய்

    சங்கத்தமிழ் துதி துதிக்க
    தங்கத்தேர் குலு குலுங்க
    வெள்ளிதண்டை ஒலி எழுப்ப
    வள்ளியோடு நீ வருவாய்

  5. முப்பாட்டன் முருகனுக்கு அரகரோகரா -எங்க
    முத்துக் குமரனன்றோ அரகரோகரா
    எப்பாடு பட்டாச்சும் அரகரோகரா -எங்களை
    எலக்ஷ்னிலே வெல்ல வைப்பாய் அரகரோகரா.

    ஊர் முழுதும் சுத்தி வந்தோம் அரகரோகரா -எமக்கு
    ஒரு வழியும் தெரியலையே அரகரோகரா
    தேரிழுத்தும் நாம் வருவோம் அரகரோகரா -எங்களை
    தேர்தலிலே ஜெயிக்க வைப்பாய் அரகரோகரா

    வேலெடுத்து நாம் வருவோம் அரகரோகரா-எமக்கு
    வெற்றியை நீ தந்திடுவாய் அரகரோகரா
    காலலுக்க நடக்கின்றோம் அரகரேகரா -எங்க
    கட்சியை நீ வெல்ல வைப்பாய் அரகரோகரா

    கள்ளவோட்டுப் போட்டாலும் அரகரோகரா- எங்களை
    காட்டி நீயும் கொடுத்திடாத அரகரோகரா
    வெள்ளமென ஓட்டு வந்து அரகரோகரா- எமக்கு
    விழுந்திடவே வேண்டுமையா அரகரோகரா

    அரவிந்த மலரெடுத்து அரகரோகரா – உனக்கு
    அர்ச்சனைகள் செய்திடுவோம் அரகரோகரா
    தரவேண்டும் ஆதரவை அரகரோகரா-எங்கும்
    தாமரையே பூக்க வேண்டும் அரகரோகரா

    வெற்றிவடி வேலவனே அரகரோகரா – எமக்கு
    வேறுவழி இல்லை ஐயா அரகரோகரா
    பொற்பாதம் பணிந்து நின்றோம் அரகரோகரா -நாங்கள்
    போடும் வேஷம் வெல்ல வேண்டும் அரகரோகரா.

  6. ஆதங்கத்துடன்…. அரகரோகரா

    ஆறுமுகத்தோனே உன் அண்ணன்
    ஆனை முகத்தானெங்கே?
    ஆதிமுதல்வனென அவனை
    அனுதினமும் துதிபாடி
    ஆளுக்கொரு சிலைசெய்து
    ஆற்றங்கரையில் கரைத்தோம்
    அழகாய் தீபம் ஏற்றி உன் அப்பன்
    அண்ணாமலையாரைத் தொழுதோம்
    ஆடித்தபசில் கைகூப்பி உன்
    அன்னையையும் வேண்டினோம்
    அடுத்துவரும் கார்த்திகையில்
    அன்புடன் வணங்குவோம் உன்னையும்
    அகிலமெல்லாம் வியக்க சூரனை வென்ற நீ
    அடங்க மறுக்கும் நோய்த்தொற்றால்
    அவதியுறும் எம்மக்களின் துன்பம்
    அறியாது வள்ளிதெய்வானையுடன்
    அளவளாவி நிற்கின்றாயோ?
    ஆலயத்தில் இனியுனக்கு பன்னீர் சந்தன
    அபிஷேகமில்லை சுத்திகரிப்பான்தான்
    அலங்காரத்துடன் போடுவோம் முகக்கவசமும்
    அத்தொல்லையுணர்ந்தாவது வேல் கொண்டு விரட்டி
    அடித்துத் துரத்த மாட்டாயா கொரோனாவை
    ஆதங்கத்துடன்….. .
    -நாங்குநேரி வாசஸ்ரீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *