Category: தொடர்கள்

  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 31

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (4)

    சண்பை வேந்தர் முன்பு சென்று பணிந்த மங்கையர்கரசியாரையும், குலச்சிறையாரையும் தம் மலர்க்கரங்களால் எடுத்தருளியவர், அவர்களுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் உணர்விலா சமணர்களை அவர்கள் கண்டு மகிழும்படி வென்று விதிப்படி பாண்டிய வேந்தனை வெண்ணீறு அணிவிப்பான் எனக் கூறியருளினார். அதன்படி ஞானசம்பந்தர் எம்பெருமான் திருவருள் பெற்று பாண்டிமாதேவியின் அழைப்பினை ஏற்று அரண்மனை சென்றடைந்தார். ஞானப்பிள்ளையாரின் திருவடியைத் தொழுது வரவேற்றவர்கள் மன்னன் படுத்துக்கொண்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்று அவர் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளச் செய்தனர். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் மகிழ்ச்சியுடன் அவரோடு உரையாடும் முறையில் அவர்தம் ஊர் குறித்துக் கேட்டவரிடம் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.

     

    சமணர்கள் அச்சமுற்றாலும் அதனை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி `உங்கள் உறுதிப் பொருளைக் கூறி வாது செய்து வென்றவர்கள் மதத்தை ஏற்போம்` எனக்கூறினர். `மன்னனும், வாது செய்வதெல்லாம் வேண்டாம் என்றும் தமது உடற்பிணியை யார் இறையருளால் நீக்குகிறார்களோ அவர்கள் பக்கமே தாம் சாரப்போவதாகவும், நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றும் கூறினார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணை நிற்க வாதில் வெல்வோம்` என்றார். அது கேட்ட சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை தாங்கள் குணப்படுத்துகிறோம் என்றும் வலது பக்கம் அவர் தீர்க்கட்டும் என்று கூறி குண்டிகை நீரைத் தெளித்து பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் அது தீயில் பட்ட நீராகக் கொதிக்க நோய் மேலும் கூடியது. ஆனால் ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திருநீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப்பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது.

     

    மந்திர மாவது நீறு

      வானவர் மேலது நீறு

    சுந்தர மாவது நீறு

      துதிக்கப் படுவது நீறு

    தந்திர மாவது நீறு

      சமயத்தி லுள்ளது நீறு

    செந்துவர் வாயுமை பங்கன்

      திருஆல வாயான் திருநீறே.

     

    ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப்

    புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

    தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!

    பாண்டிய மன்னன் முற்றாகக் குணமுற்றுத் தெளிந்து எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கிப் போற்றினான்.

     

    பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம் என்று மனக்கணக்குப் போட்டனர். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் வாய்மையே பேசுமின்` எனப் பணித்தார். சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டிய மன்னனும் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.
    அத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சிவபெருமானே மெய்ப்பொருள் என உணர்ந்த ஞானசம்பந்தர் தாம் அதுவரை  அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். `போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் திருநள்ளாற்று இறைவனைப் போற்றி அவ்வேட்டினை எடுத்து மெய்ப்பொருளாகும் இவ்வுலக மாந்தருக்கு அறிவுறுத்தும் வகை இவ்வேடு அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வளரொளி` எனத்தொடங்கும் திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு கொழுந்து விட்டு எரியும் தீயில் வேகாது பசுமையாய்க் காட்சியளித்தது. சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது தீயில் இட்டும் முன்னையினும் பசுமையாக இருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப் பெறுவதாயிற்று.

     

    சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு நகைத்த மன்னனை நோக்கி `ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இரு தரப்பினரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் விட்டால் எவருடைய ஏடு நீரில் அடித்துச் செல்லாமல் எதிர்த்து வருகிறதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்` என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டார். அது கேட்ட சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவில் ஏற்றட்டும் என்றனர். மன்னனும் அவர்கள் ஆத்திரத்தில் அறிவிழந்துப் பேசிவிட்டதாகக் கூறி அதற்கு உடன் பட்டான்.

    ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் `அதி நாதி` என வடமொழி மந்திரத்தை எழுதி ஆற்றில் இட்டனர். அவ்வேடு ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே கடலை நோக்கி விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், தம் திருக்கரத்தால்,

    வாழ்க அந்தணர்

      வானவர் ஆனினம்

    வீழ்க தண்புனல்

      வேந்தனும் ஓங்குக

    ஆழ்க தீயதெல்

      லாம்அரன் நாமமே

    சூழ்க வையக

      முந்துயர் தீர்கவே

     

    என்னும் திருப்பதிகத்தை எழுதி அதனை வைகையாற்றில் இட்டனர். வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு எதிர் ஏறிச் சென்றது. குலச்சிறையாரும் அந்த ஏட்டினையொட்டி குதிரை மீது ஏறிச் சென்றார். இத்திருப்பாட்டில் `வேந்தனும் ஓங்குக` என ஞானசம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறன் ஆக மாறினான். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வண்ணியும் மத்தடும் மதிபொதி சடையினன்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ்வேடு வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று சேர்ந்தது. அதனை குலச்சிறையார் வணங்கி எடுத்து வந்தவர், நின்றசீர் நெடுமாறனிடமும், மங்கையர்கரசியாரிடமும் காட்டினார். மக்களும் இறைவன் திருவருளை எண்ணி வியந்துப் போற்றினர்.  ஏடு நின்ற இத்திருக்கோயில் இன்றும் திருவேடகம் என்று வழங்கப்படுகிறது.
    வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். பாண்டிய மன்னன் கட்டளைப்படி குலச்சிறையாரும் அதை நிறைவேற்றினார். ஞானசம்பந்தர் பாண்டிய மன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று `வீடலால வாயிலாய்` என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.

    ஆளுடைய பிள்ளையார் மதுரையில் சில நாள் தங்கியிருந்து ஆலவாய் அப்பனைப் பரவினார். பின்னர் பாண்டிய மன்னன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் ஆகியோரோடு திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், குற்றாலம், திருநெல்வேலி முதலிய தலங்களை வழிபட்டு திருஇராமேச்சுரம் சென்றடைந்தார். திருமால் இராமாவதாரத்தில் சிவ வழிபாடு செய்த இராமேசுவரத்தை அடைந்து அங்கு இராமநாதரைத் தரிசித்து அங்கிருந்தபடியே ஈழத்தலங்களாகிய திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய தலங்களை நினைந்து போற்றினார். இராமேச்சுரத்திலிருந்து ஆடானை, புனல்வாயில், மணமேற்குடி ஆகியவற்றை வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார் அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.

     

    பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டுச் சோழ நாட்டையடைந்த பிள்ளையார் திருக்களர், திருப்பாதாளீச்சுரம் முதலிய தலங்களையும் வழிபட்டு முள்ளிவாய்க்கரை என்னும் ஊரைச் சேர்ந்தார். அங்கு முள்ளியாறு எனும் ஆறு உள்ளது. ஆற்றின் மறுகரையில் கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலம் உள்ளது. அங்கு சென்று பரமனைப் பாடும் அவாவினால் சம்பந்தர் தம் அடியார் குழாத்துடன் முள்ளியாற்றின் கரையை அடைந்தார். முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடக்காரர்கள் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக்கொண்டு கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றி, `கொட்டமே கமழும்` என்ற திருப்பதிகத்தை இசைத்துத் தன் நாவன்மையே கோலாகக் கொண்டு ஓடத்தைச் செலுத்தினார். ஆறாவது பாடல் பாடும்போது ஓடம் கரையை அடைந்தது. ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய திருநள்ளாற்று இறைவன் மீது `பாடகமெல்லடி` என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.

    ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.
    திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்தபோது அப்பர் வரவைக் காணாது `அப்பர் எங்குற்றார்?` என அடியவர்களை வினவினார். அவ்வுரை கேட்ட அப்பர் `உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்` என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையிலிருந்து இறங்கி `இவ்வாறு செய்தருள்வது தகுமா?` எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். அப்பர் `திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச் சூழும் பெருவேலி ஆயினீர்` எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர் அந்நாடு செல்லும் விருப்புடையவரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக் கேட்ட ஞானசம்பந்தர் தொண்டை நாடு செல்ல விரும்பினார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து பயணம் மேற்கொண்டனர். ஞானசம்பந்தர் காவிரி வடகரையை அடைந்து நெய்த்தானம் ஐயாறு பழனம் முதலிய தலங்களை வணங்கி, சீர்காழிப் பதியை அடைந்து தோணிபுரப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார்.

    தொண்டைநாட்டில் உலா

    தொண்டை நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் விருப்பத்துடன் சீர்காழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து திருத்திணைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திருஇரும்பை, மாகாளம் முதலிய தலங்களை வழிபட்டு அப்பரடிகட்கு அருள் செய்த, தற்போது பண்ருட்டி என வழங்கும் ஊரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அழகிய ஆலயமான திருவதிகை வீரட்டானத்தைச் சென்றடைந்தார். அங்கு வீரட்டானத்து இறையைத் தொழுது போற்றியவர், பின்னர் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய நடுவன்’ எனும் திருப்பதிக இசை பாடி திருவோத்தூர் எனும் திருத்தலத்தை அடைந்து இறைவனைப் போற்றினார். திருவோத்தூர் தற்போது செய்யாறு திருவத்தூர் என வழங்கப்படுகிறது.

     

    திருவோத்தூரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். அவர் ஆலயத்தருகில் அன்பர்கள் வேனிற்காலத்தே பருகுவதற்காகப் பனை மரங்கள் நட்டு நீர் வார்த்து வளர்த்து வந்தார். அடியவர்க்கெனத் தான் வளர்த்த, வானுற ஓங்கி வளர்ந்த அப்பனை மரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனைக் கண்ணுற்ற சமணர்கள் அவ்வடியாரைக் கேலி செய்து உன் சிவனருளால் ஆண் பனையெல்லாம் பெண் பனையாக மாறி காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞானசம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, `பூத்தேர்ந்தாயன` என்னும் பதிகம் பாடிய அளவில்,

     

    குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்    

        அரும்பு கொன்றை யடிகளைப்    

        பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்    

        விரும்பு வார்வினை வீடே.    

    என முடிக்கும்போது ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றதைக் கண்ட அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழை பொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.

     

    திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம், காமகோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங்களைப் போற்றி, காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங்காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து `துஞ்சவருவாரும்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அவ்வூரை விட்டகன்று பாசூர் வெண்பாக்கம் காரிகரை ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு காளத்தியை அடைந்தார். கண்ணப்பரின் பக்தித் திறம் போற்றி திருக்காளத்தி இறைவரைப் பணிந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் பலநாள் தங்கிப் பரவினார். அங்கிருந்தே வடதிசையிலுள்ள திருக்கயிலாயம், கேதாரம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் போற்றிப் பதிகங்கள் அருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு பணிந்து திருவொற்றியூரை வந்தடைந்தார்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 30

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (3)

    திருஞானசம்பந்தர் திருப்புகலூர், வர்த்தமானிச்சுரம் ஆகிய தலங்களை வணங்கச் சென்றார். முருக நாயனார் எனும் அடியவர் வர்த்தமானச்சுரத்துப் பெருமானை நாளும் பூவும், பட்டும் கொண்டு அலங்கரித்து, அகில் கொண்டு புகைத்து ஐயன் அழகில் அவர்தம் அடி பரவும் அத்திருத்தொண்டர் வழிபடும் திருக்கோயில் வர்த்தமானிச்சுரம் எனப் போற்றிப் பாடியருளினார். முருக நாயனார் எதிர் கொண்டழைக்கத் திருப்புகலூர் சென்ற ஞானப்பிள்ளையார் ஆலயம் சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிப் போற்றி முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்தார். ஞானப்பிள்ளையார் திருப்புகலூரில் உள்ளார் என்ற செய்தியறிந்த அப்பரடிகள் ஆரூர்ப் பெருமானின் ஆதிரைப் பெருவிழாவினைக் கண்டு களித்து திருப்புகலூர் வந்து சேர்ந்தார்.

    அப்பர் பெருமான் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் ஆராத அன்புடன் அவரை எதிர்கொண்டழைத்து அளவளாவி மகிழ்ந்தார். திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரைத் திருநாளின் சிறப்பை விரித்துரைக்கக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரைத் திருப்புகலூரில் இருக்கச் செய்து விற்குடி வீரட்டத்தைப் பணிந்து விழா கண்ட ஆரூரைத் தொழுது வருவதாகக் கூறி திருவாரூருக்கு எழுந்தருளினார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த நகர மக்கள் எதிர்கொண்டு போற்றினர். ஞான சம்பந்தர் திருவாரூர்ப் பூங்கோயிலை அடைந்து `சித்தம் தெளிவீர் காள்` என்பது முதலிய பல திருப்பதிகங்களை அருளிப் பரவி வழிபட்டார். அரனெறியைத் தரிசித்தார். பின்னர் வலிவலம் கோளிலி முதலான தலங்களை அடைந்து வழிபட்டு மீண்டும் திருவாரூரை அடைந்து தங்கியிருந்து வழிபட்டு, வழியிடையே பனையூரைத் தொழுதுப் பின்னர் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். ஊர் எல்லையில் முருக நாயனார் முதலிய அடியவர்கள் வரவேற்கத் திருப்புகலூரை அடைந்து இறைவனை வழிபட்டு முருகநாயனார் திருமடத்தில் திருநாவுக்கரசர், நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியவர்களோடு உரையாடிக் கலந்து மகிழ்ந்திருந்தார்.

     

    ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் நீலநக்கர் சிறுத்தொண்டர் முதலானோர்க்கு விடையளித்து இறைவன் வீற்றிருக்கும் பல திருத்தலங்களையும் வழிபட விரும்பிப் புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அப்பர் உடன் வருவதால், முத்துச்சிவிகை பின்வர, தானும் அவருடன் நடந்து செல்லலானார். அதைக்கண்ட அப்பர் பெருமான் இறைவன் அளித்த சிவிகையில் வராமல் நடந்து வரும் வகையில் அதைப் புறக்கணிப்பது தகாது என்றும், தன்னுடனேயே பல்லக்கில் பவனி வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள எண்பதாண்டு முதியவரான அப்பர் பெருமானை நடக்க வைத்துத் தாம் மட்டும் சிவிகையில் செல்வது சரியாகாது என்று எண்ணிய  ஞானசம்பந்தர் அப்பரை முன்னே விடுத்து அவர் செல்லும் திருத்தலங்களைத் தொடர்ந்து சென்று வழிபட்டார்.

     

    இருவரும் அம்பர் மாகாளத்தை வணங்கித் திருக்கடவூர் சென்றனர். அங்கு குங்குலியக்கலய நாயனார் அவர்களை வரவேற்க இருவரும் கடவூர் வீரட்டத்தைத் தொழுது போற்றி அந்நாயனார் திருமனையில் அமுது கொண்டு திருக்கடவூர் மயானம் ஆக்கூர் மீயச்சூர் பாம்புரம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவீழிமிழலை எனும் திருத்தலத்தை வந்தடைந்தனர். அப்பரடிகளும் ஞானசம்பந்தரும் திருவீழிமிழலையில் வீழிமிழலைப் பெருமானை வணங்கி அங்கு தங்கியிருந்தார்கள். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது, காழிப்பதியை விட்டு வந்து வெகுநாட்கள் ஆகிறது, தங்களோடு சீர்காழிக்கு வந்து சில நாட்கள் தங்கியருள வேண்டுமென விண்ணப்பித்தனர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி, அவர்களைத் திருமடத்தில் தங்க வைத்துத் தாமும் துயில் கொண்டார்.

     

    பெருமான் அவர் தம் கனவில் தோன்றி, தம்மைத் திருமால் வணங்க, இந்திரனால் இங்கு வரவழைக்கப்பட்ட விண்விழி விமானத்தே தாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை வீழிமிழலையிலேயே காட்சியளிப்பதாகக் கூறக் கேட்டு பெருமான் கருணை வெள்ளத்தை நினைந்து மகிழ்ந்து அதிகாலை விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக்காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு `மைம் மருபூங் குழல்` எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடி வியந்தார். காழி மக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.

    ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த சமயம் அங்கு மழையின்றி, நீர்வரத்தும் குன்றி, நதிநீர் குறைந்து, வளம் இன்றி நாடு வறட்சியுற்றதால் பஞ்சம் ஏற்பட்டது. உணவு உற்பத்தி குறைந்து வறுமையுற்றதால் உயிர்களெல்லாம் பசியால் வாடின. மக்களோடு அடியார்களும் துயருற்றனர். அதனை அறிந்த பிள்ளையார் `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் பெருமானை எண்ணியவாறு இருவரும் கண்ணயர்ந்தனர்.

     

    உறங்கிய பெருமக்களின் கனவில் பெருமான் தோன்றி நாட்டின் பஞ்சம் நீங்கும் காலம் வரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும் பொற்காசு அளிப்பதாகக் கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்பரடிகளுடன் ஆலயம் சென்றார். கனவில் கண்டதுபோல் கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமான் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிப்பதாக பறை அறிவித்துச் செய்தியளித்தனர். அடியவர்கள் அனைவரும் உணவு உண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில், நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்ந்தும் உணவளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், பணியாளர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும், நாவுக்கரசர் அளிக்கும் காசு நல்ல காசு என்பதையும் அறிந்தார். அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாமதம் ஏற்படுதலையும் அறிந்தார் ஞானசம்பந்தர். அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார்.

     

    வாசி தீரவே, காசு நல்குவீர்

    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

     

    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

     

    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

     

    நீறு பூசினீர், ஏற தேறினீர்

    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

     

    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

    நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.

     

    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

     

    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

     

    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

     

    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

     

    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

    வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.

     

    காழி மாநகர், வாழி சம்பந்தன்

    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

     

    சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.

     

    ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வழிபட்டுக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு வரவேற்க, தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிற திருமறைக்காடு சென்று அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகியபோது வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக்கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததையும் மக்கள் மற்றொரு புறத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருவதையும் கண்ட ஞானசம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டும் என்று எண்ணி அப்பரடிகளிடம், அத்திருக்கதவுகள் திறக்க வேண்டி திருப்பதிகம் பாடியருள வேண்டுமென வேண்டினார். அப்பர் பெருமானும் `பண்ணினேர் மொழியாள்` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார். அப்பதிகப் பொருட் சுவையில் ஈர்க்கப்பட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் மகிழ்வுடன் ஆலயத்தினுள் சென்று மறைக்காட்டுறையும் இறைவனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமெனவும் வேண்டினார்.
    ஞானசம்பந்தர் `சதுரம் மறை` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாட, அந்த முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொள்ள ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் திருமடம் சேர்ந்தனர்.

     

    அப்பர் திருமடத்தைச் சார்ந்து தான் 10 பாடல்கள் பாடி அரிதில் திறக்கவும், முதல் பாடல் சம்பந்தர் பாடிய உடனே மூடியதையும் நினைத்துப் பார்த்து இறைவன் திருவருள் குறிப்பை உணராது திருக்கதவந் திறக்கப் புகுந்தது தவறெனக் கருதி அம்மடத்தின் ஒரு பால் துயில் கொண்டார். அவர்தம் மனக்கருத்தை அறிந்த சிவபெருமான் அவர் எதிரே சைவ வேடத்துடன் தோன்றி, `நாம் வாய்மூரில் இருப்போம். நம்மைப்பின் தொடர்ந்து வருக` எனப் பணித்தார். அப்பர் பெருமான் கை, தலை குவித்து பின் தொடர்ந்து சென்றார். அப்பெரியவர் அண்மையில் இருப்பது போலக் காட்டி மறைந்தார். சண்பை வேந்தர் எழுந்து அப்பரடிகள் பற்றி வினவ, அடியார்கள் அப்பர் வாய்மூர் சென்றமையைத் தெரிவித்தனர். அப்பரடிகளை அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந்தார்.

     

    ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பரடிகள் அகமகிழ்ந்து தாம் திருக்கதவம் திறக்கப் பாடிய திருப்பதிகத்தினினும் சிறப்புடைய செந்தமிழ் பாடித் திருக்கதவம் அடைப்பித்த ஞானசம்பந்தர் வருகையைக் கூறி அவருக்காக திருக்காட்சி நல்க வேண்டினார். வாய்மூர் பெருமான் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல் காட்சியைக் காட்டியருள ஞானப்பிள்ளையார் `தளிரிள வளரென` எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளினார். அவ்வருட் காட்சியைக் கண்ட அப்பரடிகளும் பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் திருவாய்மூரில் சில நாட்கள் தங்கியிருந்து மகிழ்ந்தவர்கள் மீண்டும் திருமறைக்காடு சென்று சேர்ந்தனர்.

     

    பாண்டிநாடு சமண சமய இருளில் மூழ்கியிருந்த காலம் அது. பல்லாயிரம் சமணத் துறவிகளைத் தோற்றுவித்து  ஆனைமலை முதலிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்டு தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். சைவத் திருக்கோயில்கள் அனைத்தும் சமணப் பாழிகளாக மாற்றமடைந்தன. அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டிய மன்னனையும் சமண சமயத்தில் சேர்த்தனர். மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத் தலைப்பட்டனர். பாண்டிய மாதேவியான மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைபிடித்து காத்து வந்தனர். இந்நிலையில் ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் இறையருள் பெற்ற அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து பரிசனங்களை அனுப்பி வணங்கித் தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக் கொண்டனர். ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் மறைக்காட்டீசர் திருக்கோயில் சென்று வணங்கினர். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் விருப்பத்தை அப்பரிடம் தெரிவிக்க, அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் `பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக்கோர் அளவில்லை. அதை நானே அனுபவித்திருக்கிறேன். ஆயினும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது` எனத் தடுத்தருளினார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி `நாம் பரவுவது நம் பெருமான் கழல் ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது` எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க `வேயுறு தோளிபங்கன்` என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். பாடல் கேட்டு வந்த அப்பரடிகள் தானும் உடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டார். சம்பந்தர் அவரது வயது கருதி அவரை சோழ நாட்டுத் திருத்தலங்களை வழிபட்டு இருந்தருள வேண்டினார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்கள்.

     

    திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் அமர்ந்து அகத்தியான்பள்ளி, கோடிக்குழல் முதலிய தலங்களை வணங்கிச் சோழ நாட்டிலிருந்து தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றத்து இறைவனைப் பணிந்து மதுரை மூதூர் மருங்கணைந்தார். மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து குலச்சிறையாரை ஊர் எல்லையில் அவரை வரவேற்குமாறு பணித்திருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கி, மங்கையர்கரசியாருக்கும் அமைச்சருக்கும் திருவருளால் நன்மைகள் விளைய வேண்டும் என வாழ்த்தினார். குலச்சிறையாரும், சம்பந்தப் பெருமான் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையவராவோம் என்றார். தங்கள் நாட்டில் இனி திருநீற்றொளி விளங்குவது உறுதி எனவும் முகமனுரை கூறியவர் மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதையும் தெரிவித்தவர், மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் `மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது` எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருவாலவாய்` எனக் கூறக்கேட்டு `மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறையாருடன் வலங்கொண்டு பணிந்து `நீலமாமிடற்று` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார்.

    மங்கையர்க்கரசியார் ஆலவாய் இறைவர் திருக்கோயிலில் வழிபாடு முடித்தவர், கோயில் முன்றிலில் திருஞானசம்பந்தரைக் கண்டு அவர்தம் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளையார் தம் மலர்க்கரங்களால் அவரை எடுத்தபோது தாங்கள் செய்த தவப்பயனால் சம்பந்தப் பிள்ளையாரைத் தரிசிக்கும் பேறு பெற்றதாகக் கூறினார். ஞானசம்பந்தரும் புறச்சமயச் சூழலிலும் சிவனடித் தொண்டினை மறவாது போற்றும் அவர்களைக் காணும் பொருட்டே அங்கு வந்ததாகக் கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பியவர், திருக்கோயில் புறத்தில் சென்று குலச்சிறையார் காட்டிய திருமடம் ஒன்றில் அடியவர்களோடு எழுந்தருளியிருந்தவர்களுக்கு அரச மாதேவியாரின் கட்டளைப்படி குலச்சிறையார் நல்விருந்தளித்து உபசரித்தார்.

    பகற்பொழுது கழிந்து இரவு வந்த நேரத்தில் ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர்கள், அந்தணர்களின் வருகையை அறிந்த சமணர்கள் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டவர்கள், தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்கவும் அனுமதி பெற்றனர்.

    ஆனால் சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை என்பதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். அந்த மடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். `இத்தீ அரசன் முறை செய்யாமையால் நேர்ந்தது என்பதால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறை என்றாலும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகட்டும் என்று கூறி `செய்யனே திரு` என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
    பொழுது விடிந்து, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியதைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் பேரச்சம் கொண்டனர். இத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டில் ஞானசம்பந்தப் பெருமானை வரவழைத்த குற்றத்துக்குத் தாங்கள் இறப்பதே சரியான தண்டனையாக இருக்கும் என்று எண்ணினர். ஆனாலும் திருமடத்தில் இடப்பட்ட தீயால் எவருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாததால் மன ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய் பற்றி வருத்தியதை அறிந்து அச்சமுற்று அரசனைக் காணச் சென்றனர். எவ்வளவு முயன்றும் மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் அந்த வெப்பு நோயைக் குணப்படுத்த இயலவில்லை.
    அப்போது அமைச்சர் குலச்சிறையார் அரசனை அணுகி, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளதால் அவர் வந்தால் இந்நோய் தீரலாம்` என்றார். பாண்டிய மன்னனும் ஞானசம்பந்தர் என்ற திருநாமத்தைக் கேட்ட உடனேயே அவருடைய அயர்வு நீங்கியதை உணர்கிறார். அதனால் அவரை அழைக்கும்படியும் கூறினார். ஆனால் சமணர்கள் அரசனிடம் சென்று அவருடைய இந்த நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் சமணர்களாகிய தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் நடுநிலை பிறழ முடியாது என்று மறுத்தான்.

     

    குலச்சிறையாரும் அரசியாரும் ஞானசம்பந்தரை தரிசித்துத் திருமடத்திற்குத் தீயிடப்பட்ட செயலுக்கு மிகவும் வருந்தியதோடு, வெப்பு நோயால் வாடும் மன்னன் பற்றி எடுத்துரைத்து சம்பந்தப்பெருமான் எழுந்தருளி மன்னனின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்று  விண்ணப்பித்துக் கொண்டனர். ஞானசம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று `தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம்` எனக் கூறிப் புறப்பட்டுத் திருக்கோயிலை அடைந்து `காட்டு மாவது உரித்து` என்ற திருப்பதிகத்தால் பாடிப்பரவினார்.  சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க `வேத வேள்வியை` என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 29

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (2)

     

    திருஞானசம்பந்தர் எனும் அந்த அருட்குழந்தையை சீர்காழியின் மக்கள் அனைவரும் திரண்டெழுந்து வந்து வரவேற்று அவருடைய இல்லம் சேர்ப்பித்தனர். ஏழாவது வயது தொடங்கியது அக்குழந்தைக்கு. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து `மறை நான்கும் தந்தோம்` என்று மந்திரங்கள் மொழிந்தனர் மறையோர். ஆனால் ஏதும் ஓதாதுணர்ந்த அந்த அருட்குழந்தை வேதங்களையெல்லாம் எடுத்து இயம்பினார். வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்களுக்கு இருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, அந்தி நேரத்தில் அந்தணர்கள் ஓத வேண்டிய மந்திரம் வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, `துஞ்சலும் துஞ்சல்` என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி அருளினார். ஞானசம்பந்தப் பெருமான் சீர்காழியில் தங்கியிருந்த நாட்களில் மொழி மாற்று, மாலைமாற்று முதலிய பல திருப்பதிகங்களைச் சித்திரகவிகளுக்குரிய இலக்கியங்களாகப் படைத்து சீர்காழி இறைவனைப் பாடி இன்புற்றார். திருநீலகண்டயாழ்ப்பாணரும் அவர்தம் துணைவியார் மதங்கசூளாமணியாரும் அப்பதிகங்களை யாழில் இணைத்து இசைத்து மேலும் சிறப்பு செய்து வாழ்ந்து வந்தனர்.

    அருட்குழந்தையின் அற்புத அருளிப்பாட்டினைக் கேள்வியுற்ற அப்பரடிகள் அத்தவச் செல்வனை காணப் பெரிதும் விரும்பி சீர்காழி நோக்கிப் புறப்பட்டார். உபநயனச் சடங்கு முடிந்து ஞானசம்பந்தர் சீர்காழியில் தங்கியிருக்கும் பொழுது, கல்லைப் புணையாகக் கொண்டு கடலிடைக் கரையேறிய நாவுக்கரசர் பெருமைகளைக் கேட்டறிந்திருந்தவர் அவர் தன்னைக் காண வருகின்றார் என்பதை அறிந்து அன்பர்களோடு சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தனர். தூய வெண்ணீறு பூசிய பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் நெஞ்சும் அன்பு பாய்வது போல் கண்ணீரும்கொண்டு முதுமைக் கோலத்தில் வந்த திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் வணங்கினார். நாவுக்கரசரும் அவரை வணங்கித் தன்னை வணங்கிய ஞானசம்பந்தரைத் தம் மலர்க்கையால் எடுத்து `அப்பரே` என அழைக்க அவரும் அடியேன் என மகிழ்ந்துரைக்க, இருவரும் அளவளாவி மகிழ்ந்து திருத்தோணியப்பரை வழிபட திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் ஞானசம்பந்தர் அப்பரைத் தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று, இருவரும் திருவமுது கொண்டு அளவளாவி மகிழ்ந்தனர். சில நாட்கள் சீர்காழிப் பதியில் தங்கிப் போற்றிய அப்பர் பெருமான் பிரியா விடைபெற்றுச் சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் மேற்கொண்டார்.

    திருஞானசம்பந்தர் தன் தந்தையாரான சிவபாதஇருதயரிடம் மீண்டும் தமது பயணத்தைத் தொடரும் விருப்பத்தைத் தெரிவிக்க, தமது பிள்ளையைப் பிரிய மனமில்லாத தந்தை சில தலங்கட்கு உடன் வருவதாகக் கூறி தாமும் அவரோடு உடன் செல்ல திருப்பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது.

    திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில், புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந்தார். பண்டைய நாளில் மழவ நாடு என்று அழைக்கப்பட்ட, திருப்பாச்சிலாச்சிரமம் எனும் அழகிய ஊர், தற்போது திருச்சி மாவட்டத்தில் திருவாசி என வழங்கப்படுகிறது. குறுநில மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக இருந்த அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் தம் முன்னோர் வழி ஈசனடியவராக இருந்தவர். வளர்ந்து மங்கைப் பருவம் எய்தியுள்ள அவனது மகள், பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்த வேளையில் உணர்வுகள் இருந்தும், உணர்ச்சிகள் இல்லாததொரு மயக்க நிலையை எட்டியிருந்தாள்.

     

    தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் கொல்லிமழவன் அவளை பாச்சிலாச்சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தி நம்பிக்கையுடன் பெருமானை அனுதினமும் வேண்டி நின்றார். இந்நிலையில் .திருஞானசம்பந்தர் திருத்தலப் பயணமாக அங்கு வந்ததை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தின் கொடிமரத்தின் முன் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு மன்னனை அழைத்து அப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நோயைப் பற்றி அறிந்து ஈசனருளை வேண்டிப் பணிந்து, `துணிவளர்திங்கள்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.

     

    துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்     

            சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்    

        பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ     

            வாரிட மும்பலி தேர்வர்    

        அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி     

            லாச்சிரா மத்துறை கின்ற    

        மணிவளர் கண்டரோ மங்கையை வாட     

            மயல்செய்வ தோஇவர் மாண்பே.  

     

    அப்பெண் மயக்கம் தெளிந்து நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவனும் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கினான்.

    திருப்பாச்சிலாச்சிராமத்துப் பரமனைத் தாள்பணிந்துப் போற்றிய ஞானசம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான பல தலங்களையும் வழிபட்டுத் திருக்கொடிமாடச் செங்குன்றூர் எனப்படும் திருச்செங்கோடு எனும் திருத்தலத்தைச் சென்று சேர்ந்தார். அங்கு பல மாதங்கள் தங்கியிருந்து மாதொருபாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் என்பதால் அப்பகுதியில் தோன்றும் பனி நோய் என்னும் குளிர் சுரம் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீலகண்டப் பெருமானைப் போற்றி `அவ்வினைக்கு இவ்வினை` என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்களுக்கு மட்டுமின்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.

     

    அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
    உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
    கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
    செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

    சம்பந்தப்பெருமானின் நினைவு இல்லம் அமைக்கப்பட வேண்டிய இடமான, அந்நாட்களில் அப்பெருமான் தங்கியிருந்த அத்திருமடம் இன்றும் திருச்செங்கோடு திருத்தலத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

     

    திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டு, பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக்tகூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக்கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்த அந்த காலம் இளவேனிற் பருவம் தொடங்கிய காலம். திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் திருத்தலம் வந்தடைந்தார். அந்த உச்சிப் பொழுதில் கடும் வெப்பம் தாக்க அதனைச் சற்றும் பொருட்படுத்தாது பயணத்தைத் தொடங்கினார்.

     

    அப்போது இறையருளால் சிவபூத கணங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு `எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர்` எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். இறைவன் திருவருள் இதுவானால் ஏற்றுக்கொள்ளத் தகுவது எனக்கூறிப் பணிந்தார். ஞானசம்பந்தப் பெருமான் இறைவனது பெருங் கருணையை வியந்தவாறு `பாடல் மறை` பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களையும் வழிபட்டுத் திருவாவடுதுறையைச் சென்று சேர்ந்தார்.

     

    வழிபாடு செய்து தங்கியிருந்தபோது சிவபாத இருதயர் அன்பு மகனைக் காண வந்தவர், தான் வேள்வி செய்தற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் `இடரினும் தளரினும்` என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார்.

     

    இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே

     

    சிவபூதம் ஒன்று ஆயிரம் பைம் பொற்காசுகள் நிரம்பிய உலவாக்கிழியை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழியனுப்பி வைத்தவர், இப்பதிகத்தை நம்பிக்கையோடு ஓதும் அடியவர்களுக்கும் வழித்துன்பம் நீங்கி, இன்பம் பெருகும் என்பதையும், சம்பந்தர் வாக்கு சத்தியவாக்கு என்பதையும் விளங்கச் செய்கிறார்.

    ஞானசம்பந்தரும், அடியார்களும் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் எனும் அருட்பதியை அடைந்தனர். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர் என்பதால் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாணரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர்.

     

    பாணர் தம் உறவினர்களோடு உரையாடுகையில் பிள்ளையாரின் திருப்பாசுரங்களை யாழில் வாசிக்கும் பெரும்பேறு பெற்றமையை சிந்தை மகிழச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசைச் சிறப்புக்கு பாணரின் யாழ் வாசிப்பே காரணம் எனக் கூறினர். அதைக் கேட்டு பதைபதைத்த பாணர் மனம் பொறாது சிந்தை நொந்து ஞானசம்பந்தரைப் பணிந்தவர், யாழ்க்கருவியில் அடங்காத திருப்பாசுரத்தை பாடியருள வேண்டும் என விண்ணப்பித்தார். ஞானசம்பந்தரும் கண்டத்திலும் கருவியிலும் அடங்காத,  இசைக் கருவிக்கு அப்பாற்பட்ட கூறுடைய `மாதர் மடப்பிடியும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

     

    மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்  

        நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் 

    பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்  

        அவர் படர் சடை நெடு முடியதோர் புனலர் 

    வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை  

        இரைந்து தாழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந்து தாழிவினி 

    கரை மலர்ச்சிறை வண்டறை  

        எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

     

    யாழ்ப்பாணர் எப்போதும் போல அப்பாடலைத் தம் கருவியில் வாசிக்கத் தொடங்கியவர், அப்பாடல் யாழ்க்கருவியில் அடங்காததை உணர்ந்து நடுக்கமுடன் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தவர், அதனை உடைத்தற்கும் ஓங்கினார். ஆனால் ஞானசம்பந்தர் ஓங்கிய கையைப் பிடித்து, அதனைத் தடுத்து, இறைவன் திருவருட்கருணையெல்லாம் இவ்யாழில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் சிந்தையில் அளவுபடாப் பதிக இசை, செயலிலும் எய்தாதலின், இந்த யாழ் கொண்டே இறைவர் திருப்பதிக இசையினை இயன்றவாறு வாசிப்பீர், ஏழிசையாய் உள்ள எம்பெருமான் திருப்புகழை எவ்வாறு கருவியால் கட்டுப்படுத்த இயலும் என்று கூறினார். பாணரும் பின்னர் அப்பாடலை யாழில் இட்டு வாசித்தார். சில நாட்கள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து `போகமார்த்த பூண் முலையாள்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்று ஈசனை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.

     

    சாத்தமங்கை என்பது சோழ நாட்டுத் திருத்தலம். தற்போது நாகப்பட்டிணம் தாலுக்காவில் அமைந்துள்ள தலம் இது. சீலமிக்க நீலநக்கர் எனும் அந்தணர் ஒருவர் அங்கு வாழ்ந்து வந்தார். திருச்சாத்த மங்கையில் அயவந்தி என்னும் ஆலயத்திலுள்ள பெருமானையும், அடியவர்களையும், தம் குருநாதரான பிள்ளையாரையும் போற்றிப் பரவும் பெற்றியர் அவர். ஞானப்பிள்ளையார் தம் ஊர் நோக்கி வரும் செய்தியறிந்து பெருமகிழ்வுற்றவர், அவரை எதிர்கொண்டழைத்துத் தம் திருமனையில் திருவமுதளித்து உபசரித்தார். இறைவனை வழிபட்டவர், அத்தலத் திருப்பதிகத்தில் நீலநக்கரின் அன்பின் திறத்தையும் பாடினார். அவர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்து திருநாகைக் காரோணமுடையாரைப் பணிந்து, பின்னர் பல பதிகளையும் வழிபட்டுத் திருச்செங்காட்டங்குடியை அடைந்தார். திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சுரம் சென்று `பைங்கோட்டு மலர்ப் புன்னை` எனத் தொடங்கிப் பதிகம் பாடிப் பரவினார். அத்திருப்பதிகத்தில் சிறுத்தொண்டர் பக்திச் சிறப்பைப் பாராட்டித் திருமருகல் சென்றடைந்தார். திருஞானசம்பந்தர் மருகற் பெருமானை வழிபட்டுச் சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். அப்பொழுது ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது.

     

    ஊரே ஆழ்ந்த அமைதியில் இருந்த அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. தொடர்ந்து விடியும்வரை அந்தக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஞானசம்பந்தர் அதிகாலை எழுந்து புனித நீராடி ஆலயம் செல்லும் வழியில் அழுகுரல் வந்த திக்கு நோக்கிச் சென்றார். அங்கு ஒரு பழைய மடம் இருந்த்து. அங்கு அவர் கண்ட காட்சி மிக அவலமானதாக இருந்தது. அம்மடத்தின் ஒரு புறத்தே ஒரு மனிதன் இறந்து கிடக்க மற்றொரு புறத்தே ஒரு பெண் ஆறாத்துயரத்தோடு கதறியபடி இருந்தாள். சம்பந்தப் பெருமானைக் கண்ட அந்தப் பெண் அவர் திருப்பாதங்களில் விழுந்து கதறினாள். தன் விவரமும் கூறினாள். வைப்பூர் எனும் ஊரைச் சேர்ந்த தாமன் செட்டியார் என்பவரின் மகள் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவனுக்கு மகளிர் எழுவர்.  இறந்து கிடக்கும் அவன் தன் மாமன் மகன் என்றும் கூறினாள்.

     

    வணிகனான அவன் முறைப் பெண்ணான தன்னை உடன் அழைத்துக் கொண்டு தனது ஊருக்குச் செல்லக் கிளம்பியிருந்தான். மாலை நேரம் ஆனதால் மேலும் பயணத்தைத் தொடர முடியாமல் திருமருகல் ஆலயத்தின் அருகிலுள்ள ஒரு திருமடத்தில் தங்கியுள்ளார்கள். இரவில் அவள் மாமனை நாகம் தீண்டிவிட, அதன் விடம் தலைக்கேறி மயங்கிச் சரிந்துள்ளான் அவன். அவளோ மணமாகாத நிலையில் அவனைத் தொடவும் முடியாதவளாய் செய்வதறியாது குழம்பி நிற்கிறாள். பெற்றோருக்கும் கூடத் தெரியாமல் அவனுடன் வந்தவள் என்பதால் மேலும் திகைப்புற்று அழுது அரற்றினாள். அவளுடைய தந்தை அவனிடம் பெரும் பொருளைப் பெற்றுக்கொண்டு அவளுடைய தமக்கைகளைத் தருவதாகக் கூறிவிட்டு, அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஒவ்வொருவரையும் வேறு ஒரு மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டதால், தந்தையின் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அவனை மணமுடிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறுகிறாள். அவன் மீது கொண்ட காதலால் அவள் தன் வீட்டை விட்டு வெளிவரவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினாள்.

     

    ஞானசம்பந்தரும் அவள் கதையைக் கேட்டு மனம் நெகிழ்வுற்றாலும், இறந்தவர்களையெல்லாம் எழுப்புவது தன் பணியல்ல என்று நினைத்தாலும் ஆண்டவனையே சரணடைந்து சத்தியத்தைக் காக்க வந்த அடியவளுக்கு இது நேர்ந்திருக்கலாகாது என்று கருதி மருகல் பெருமானைப் பணிந்து அம்மங்கைக்கு நீதி நல்க வேண்டி நின்றார். `சடையாயெனுமால்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞானசம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
    திருஞானசம்பந்தர் திருமருகலில் பெருமான் திருவருளில் சிலநாள் மூழ்கியிருந்தபோது, சிறுத்தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். திருமருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து `அங்கமும் வேதமும்` என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத்தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச்சுரத்தை வழிபட்டுக் கொண்டு, பின்னர் சிறுத்தொண்டருக்கு விடையருளித் திருப்புகலூர் எனும் அருட்தலத்தை சென்றடைந்தார்.

    தொடரும்

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 28

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

     

    திருஞானசம்பந்தர் வரலாறு

    `வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

    மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத

    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

    என்று சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில், இவர் வரலாற்றை முதன்முதலில் குறிப்பிட்டு அருளியதோடு, திருஞானசம்பந்தர் பெருமைகளைத் தாம் அருளிய தேவாரத் திருப்பதிகங்களிலும் போற்றிப் பாடியுள்ளார். நம்பியாண்டார் நம்பிகள், இரண்டு பாடல்களில் இவர் வரலாற்றை அந்நூலில் விளக்கியதோடு பதினொராம் திருமுறையில் இலங்கும் ஆறு பிரபந்தங்களில் திருஞானசம்பந்தர் வரலாற்றையும், அவர் தம் அருள் நலங்களையும், அவர் அருளிய தேவாரத் திருமுறைகளின் பெருமைகளையும் தெளிவுற விளக்கியுள்ளார். பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவரான திருஞானசம்பந்தர் பெருமானின் அருள் வரலாற்றைப் பெரியபுராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத்துள்ளார்.

    சிவநெறி செழித்தோங்கிய சீர்மிகு திருப்பதியாம் சீர்காழி எனும் அருள் நகரில் அவதரித்தவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சுவாமிகள். ஊழிக்காலத்தே உலகெலாம் அழிந்தாலும், பன்னிரண்டு ஊழியிலும் அழியாது அடியாருக்கு அருள் சுரக்கும் அருட்பதியாகி நின்றமையால், பிரமபுரம், புகலி, வேணுபுரம், தோணிபுரம், சீரபுரம், சீர்காழி, வெங்குரு, பூந்தராய், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம் எனும் பன்னிரண்டு திருப்பெயர்களைக் கொண்டது இவ்வூர்!

     

    வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

    பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

    சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

    அந்தணர் குலத்தில் சிவபாத இருதயர் என்னும் வேதியர், அவர்தம் அருமைத் துணைவியார் பகவதியார் எனும் இல்லறத்தை நல்லறமாகக் கருதி, இறைவழிபாடு, அடியார் வழிபாடு, குருவழிபாடு ஆகிய முத்திற வழிபாட்டிலும் சிறந்து விளங்கும் அருட்பேராற்றல் பெற்ற இணையருக்குத் தவப்புதல்வனாய் அவதரித்தவர், திருஞானசம்பந்தர். வேத நெறி வளர்ச்சி குன்றியிருந்த தமிழகத்தில் அப்போது சமண புத்த சமயங்கள் தலைதூக்கி நின்றன. இதனைக் கண்டு மனம் நொந்த சிவபாத இருதயர் இந்த மன்பதை வாழ, சிவநெறி உலகெலாம் பரவி தமிழ்ச் சமுதாயத்தை தழைத்தோங்கச் செய்யவும், தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் காக்க நல்லதொரு ஞானக்குழந்தை ஒருவரைத் தங்களுக்குத் தந்தருளுமாறு திருத்தோணிபுரத்து இறைவனை வேண்டித் தவம் புரிந்தனர். இறைவனின் இன்னருளால் பகவதியாரும் கருக்கொண்டு, சைவமே அவ்வம்மையார் மணி வயிற்றில் உருக்கொண்டது!

    வேத நெறி தழைத்து ஓங்க

      மிகு சைவத் துறை விளங்கப்

    பூத பரம்பரை பொலியப் புனித

      வாய் மலர்ந்து அழுத

    சீத வள வயல்

      புகலித் திருஞான சம்பந்தர்

    பாத மலர் தலைக் கொண்டு

      திருத் தொண்டு பரவுவாம்

    ஒரு திருவாதிரைத் திருநாளில், சிவநெறி சிறந்து விளங்கவும், தமிழ் மக்கள் செய்த தவம் நிரம்பவும், தவநெறி தழைக்கவும் ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தருளினார். அனைத்துயிர்களும் மகிழ்வுற்றன. திருப்பெயரிடுதல், தொட்டிலிற் கிடத்தல் போன்று அனைத்துச் சடங்குகளும் உரிய காலங்களில் நிகழ்ந்தன. பகவதி அம்மையார் அத்தெய்வக் குழந்தைக்கு  இறையன்பைத் தம் திருமுலைப்பாலுடன் கூட்டி ஊட்டி வளர்த்து வந்தார். குழந்தையின் அழுகையை சேக்கிழார் பெருமான் புனிதவாய் மலர்ந்தருளினார் என்று அழகாகக் குறிப்பிடுகிறார். ஆளுடையப் பிள்ளையாருக்கு வயது இரண்டாண்டுகள் நிரம்பின. மூன்றாவது வயதின் தளர் நடைப்பருவத்தில் பிள்ளையார் ஏனைய குழந்தைகளோடு வீதியில் விளையாடும் நிலையை எய்தினார். நீடுதுயில் கொண்டுள்ள சைவத்தைச் சிவநெறியைத் தட்டி எழுப்பித் தரணிக்கெல்லாம் பரப்ப வந்த செந்தமிழ்ச் செல்வனுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தால் சிவநெறி தழைக்க, சைவம் சிறக்கக் கால தாமதமாகும் எனக் கருதியதால் சேக்கிழார் பெருமான் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கவில்லை போலும்!

    ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வழக்கம்போல் தம் வழிபாட்டு நெறியினைச் செய்வதற்கு, வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயிலின் உள்ளிருக்கும் பிரம்மதீர்த்தத்திற்குப் புறப்பட்டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கட்டிக் கொண்டு அழுதார்.

    கண் மலர்கள் நீர் ததும்பக்

      கைம் மலர்களால் பிசைந்து

    வண்ண மலர்ச் செங்கனிவாய்

      மணி அதரம் புடை துடிப்ப

    எண்ணில் மறை ஒலி பெருக

      எவ் உயிரும் குதூகலிப்ப

    புண்ணியக் கன்று அனையவர்

      தாம் பொருமி அழுதருளினார்

    தந்தையாரும் தம் மைந்தனை உடனழைத்துக் கொண்டு சென்று பிரம்ம தீர்த்தக்கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தையைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத்தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப `அம்மே அப்பா` என அழைத்து அழுதருளினார். அருளுடையப் பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளிய வேளையில் எம்பெருமான் உமையம்மையிடம் `அழுகின்ற பிள்ளைக்குத் தன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டப் பணித்தார். அம்மையாரும் அவ்வாறே சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார்.

    குளித்து முடித்து வந்த தந்தை குளக்கரையில் தங்கள் தவச்செல்வன் கையில் பொற்கிண்ணத்துடன், எச்சிற்பால் உண்ட வாயும், இன்ப நடம் புரியும் பாங்கைக் கண்டு சினந்தவர், அருகிருந்த சிறுகோல் எடுத்து யார் கொடுத்த எச்சில் பால் இது என்று வெகுண்டு கையை ஓங்கினார்.

    போதையார் பொற்கிண்ணத்து

    அடிசில் பொல்லாதென

    தாதையார் முனிவுறத்

    தான் எனை ஆண்டவன்

    காதையார் குழையினன்

    கழுமல வளநகர்ப்

    பேதையாள் அவளொடும்

    பெருந்தகை இருந்ததே

     

    எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி

    உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்

    கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)

    அண்ணலை அங்கு அழுகைதீர்த்து

    அங்கணனார் அருள்புரிந்தார்.

     

     

    சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

    பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்

    உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்

    தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

    எனச் சேக்கிழார் பெருமான் போற்றி உரைத்தலைக் காணலாம்.

    தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்

            காடுடை யசுடலைப் பொடி பூசியென் னுள்ளங்கவர்கள்வ

            னேடுடை யமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த

            பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே”

    சிவஞானச்சம்பந்தப் பெருந்தகையார், தலைக்குமேல் கையைத் தூக்கி வேண்டியபடி தம் சிறு விரல்களால் எதனாலும் கட்ட முடியாத பரம்பொருளைச் சுட்டிக்காட்டி தம்மெதிரேத் தோன்றிய தோணிபுரத்து இறையை தம் தந்தையாருக்கு அடையாளம் காட்டினார். ஞானக்குழந்தை தாம் பாடிய முதல் பதிகத்தின் முதல் அடியிலேயே தமிழ் மொழியைத் தலைக்கேற்றி மந்திரங்களுக்கெல்லாம் மூலக்கூறாகிய, ‘ஓம்’ எனும் ஓங்காரத்தினைத் தமிழ் என்றும் பெயரின் முதல் எழுத்தாம், ‘த’ மெய்யுடன் இசைத்துத் ‘தோ’ எனத் தொடங்கிப் பாடினார். தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தனக்கு ஞானப் பாலளித்த உமை அம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் `தோடுடைய செவியன்` என்ற முதற்பெரும் பாடலால் கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அதனைக் கேட்ட தந்தையார் சிவபாத இருதயர் தாம் அடிப்பதற்காக ஓங்கிய கோல் நெகிழ்ந்து வீழும் வண்ணம் வியப்பும் வெருட்சியும் மேலிட்டவராய் நின்றார். ஞானசம்பந்தப் பெருமானை அழைத்துக்கொண்டு ஆலயம் சென்று  எம்பெருமானை வணங்கிப் போற்றி மீண்டார். இச்செய்தி நகர் முழுவதும் பரவிய நிலையில் அன்பர்கள் ஞானசம்பந்தரைப் போற்றி வரவேற்க, சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தம் தோள்மேல் அமர்த்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் தம் இல்லம் சென்றடைந்தார்.

    உமையம்மையார் அளித்த ஞானப்பாலை உண்ட திருஞானச்சம்பந்தர் திருநெறியத் தமிழ் பாடி தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்தவர் மறுநாட் காலையில் துயிலெழுந்து நீராடி ஈசனை வணங்கிப் போற்றி, தன் தாய்வழிப் பாட்டனார் ஊரான நனிபள்ளி முதலிய ஊர்களை வணங்கி பின்பு சீர்காழி சேர்ந்தார். `காரைகள் கூகைமுல்லை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீர்காழிப் பதிக்குத் திரும்பினார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று. இது ஞானசம்பந்தர் வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரையாகும்.

     

    சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை எழ அத்தலத்தை தம் தந்தையாரின் தோளில் மீதேறி அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று `மடையில் வாளை` எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தை அழகுற தம் பிஞ்சுக் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். அதனால் பிள்ளையார் தம் பிஞ்சுக்கரங்கள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம்பந்தப் பெருமானார்க்கு அளித்தருளினார். அவரும் அத்தாளத்தைத் தலைமேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிய அத்திருத்தலமே திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தல யாத்திரையாகும். அவ்வாறு திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பிய ஞானசம்பந்தப் பெருமான் நேரே ஆலயம் சென்று `பூவார் கொன்றை` எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் பரவியவர் பின்னர் தம் மாளிகையைச் சென்றடைந்தார். நம் தமிழ்ச் சமுதாயத்திற்குச் சிவனடி பரவும் ஒரு நெறியே தம் திருநெறி எனப் போர்முரசு கொட்டி வழிப்படுத்தினார்.

     

    திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புதத்தைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீர்காழிப் பதியை அடைந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீலகண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து மகிழ்ந்தார். பின்னர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றடைந்தார். தென் திசைவாயில் வழியே ஆலயத்திற்குள் சென்றவர் பேரம்பலத்தைக் கண்டு வணங்கியவர், `கற்றாங்கு எரியோம்பி` `ஆடினாய் நறுநெய்` என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். திருவேட்களத்தில் தங்கியிருந்து நாள்தோறும் தில்லைக் கூத்தனை வழிபட்டார். அங்குத் தங்கியிருக்கும் நாட்களில் திருக்கழிப்பாலை, திருநெல்வாயில் முதலிய தலங்களை வழிபட்டார்.

    செல்லும் வழியில் திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தை அடைந்தபோது திருநீலகண்ட யாழ்ப்பாணர் அப்பதி அவருடைய பதி எனக் கூறக் கேட்ட சம்பந்தப் பெருமான் மாதவம் செய்த பதி அது என்று கூறி மகிழ்ந்தார்.

    ஞானசம்பந்தர் எருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் திருபெண்ணாகடம் ஆகிய தலங்களை வணங்கிக்கொண்டு திருநெல்வாயில் அரத்துறை செல்லப் புறப்பட்டார். தந்தையார் தோள்மேல் அமர்ந்து செல்ல மனம் இன்றித் திருவடி நோக நடந்தே வருவதைக் கண்ட தந்தையாரும் அடியவர்களும் மிகவும் பரிவுற்றனர். திருநெல்வாயில் அரத்துறை அணுகியபோது மாலை நேரம் நெருங்க, வழி நடந்த களைப்பு ஏற்பட்டதால் ஞானசம்பந்தர் அடியவர்களோடு மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார்.

    அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் களைப்பை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி `ஞானசம்பந்தன் தம்மைக் காண வருகிறான் என்றும், அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள்ளதாகவும், அவற்றை எடுத்துச் சென்று கொடுத்து பாலகனை அழைத்து வரப் பணித்தார். எம்பெருமான் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி தாம் அளிக்கும் பொருள்களை ஏற்றுக்கொண்டு வருக` எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப்பொருட்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து “எந்தை ஈசன் எம்பெருமான்` என்ற திருப்பதிகத்தால், இறையருளை வியந்து அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார். திருநெல்வாயில் அரத்துறையில் சில நாள் தங்கியிருந்து புறப்பட்டுச் சிவிகையில் விசையமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம் புலியூர், வாழ்கொளிப்புத்தூர், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர், முதலிய தலங்களைப் பணிந்து திருப்பிரமபுரம் மீண்டருளினார்.

     

    தொடரும்

     

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம்  – பகுதி 27

     

    63 நாயன்மார்கள் வரலாறு   – 24. நமிநந்தியடிகள் நாயனார்

    நமிநந்தியடிகள் நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்து, வேத வேள்விகளால் சிவபெருமானை ஆராதித்து, இரவும் பகலும் சிவ சிந்தனையோடு திகழ்ந்த, அடியவர்கள்பால் மாறாத அன்பு கொண்டவர். தூய திருநீறு அணிவதே மெய்ப்பொருள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தவர். “அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் நாயனார் பெருமான். சோழ வளநாட்டில் திருவாரூருக்குத் தெற்கே திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் ஆறாவது மைல் தொலைவில், தற்போது திருநெய்ப்பேர் என்று அழைக்கப்படும் ஏமாப்பேரூர் எனும் தலத்தில் அவதரித்த இவர், திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானை வழிபடுவது வழக்கம். சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஆரூர் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இத்தலத்தின் மூலவர் வான்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராசன் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டுள்ளார்.

    இவ்வாரூர் திருக்கோயில் திருமதிலுக்கு அருகில் அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச் சுற்றில் உள்ள இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.  நமிநந்தியடிகள் அரநெறி அண்ணலை கண்ணீர் சொரிந்து வழிபட்டார். அத்திருக்கோயிலில் அழகாக விளக்குகள் பல ஏற்றி, அனைவரும் வந்து வழிபட வகை செய்ய வேண்டும் என்றும் விரும்பினார். அப்போது கதிரவன் மறையும் பொழுது. தமது இல்லம் சென்று நெய் கொண்டு வந்து விளக்கேற்றலாம் என்றால் அதற்கு போதிய நேரம் இல்லை. ஆதலால் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, சமணர் வீடு என்று அறியாமல் எம்பெருமானுக்கு விளக்கேற்ற நெய் வேண்டுமென்று கேட்டார். அவர்கள் நெய் கொடுக்க மறுத்ததோடு “உங்கள் இறைவன் கையில் தீயை வைத்துள்ள அவருக்கு விளக்குக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ? அவ்வாறு விளக்கு ஏற்ற வேண்டுமாயின் தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றுங்கள்” என்று ஏளனம் செய்தனர்.

    கையில் விளங்கும் கனல் உடையார்

      தமக்கு விளக்கு மிகை காணும்

    நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர்

      ஆகில் நீரை முகந்து எரித்தல்

    செய்யும் என்று திருத் தொண்டர்க்கு

      உரைத்தார் தெளியாது ஒரு பொருளைப்

    பொய்யும் மெய்யும் ஆம் என்னும்

      பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார்.

    சமணர்கள் எம்பெருமானை ஏளனம் செய்ததை எண்ணி அழுது தொழுத நாயனார், அரநெறியப்பரின் சந்நிதியை அடைந்து, “இறைவா, சமணர்கள் கூறிய வார்த்தைகளால் என்னுடைய மனம் மிகவும் வருத்தமுற்றுள்ளது. இம்மொழிகளைக் கேட்பதற்கு என்ன பாவம் செய்தேனோ?” என்று மனதிற்குள் வேண்டினார். அப்போது வான்வெளியில் ஒரு குரல் ஒலித்தது. நமிநந்தி! கவலை வேண்டாம். திருவிளக்குப் பணி நிறைவடைய நெய்தானே வேண்டும். ஏளனம் செய்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வை. அவர்கள் சொன்னது போலவே, கோயில் அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து விளக்கில் ஊற்று. விளக்கு பிரகாசமாய் எரியும், என்று அருளினார்.

    பெருமகிழ்ச்சி அடைந்த நமிநந்தியடிகள் நாயனார், உடனே திருக்குளத்திற்கு ஓடிச்சென்று, ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி திருக்குளத்து நீரை எடுத்துக் கொண்டு வந்து ஒரு விளக்கில் ஊற்றி, திரியை முறுக்கிவிட்டு விளக்கை ஏற்றினார். அதிசயத்திலும் அதிசயம்! உலகம் வியக்க விளக்கு பிரகாசத்துடன் எரிந்தது. இதனைக் கண்டு பரவசம் அடைந்த நமிநந்தியார், குளத்து நீரினைக் கொண்டு திருக்கோவில் முழுவதும் விளக்குகளை ஏற்றினார். இரவு முழுவதும் விளக்குகள் எரியும் வண்ணம் எல்லா விளக்குகளிலும் நிரம்ப நீரினை ஊற்றி வைத்தார். இதனைக் கண்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். நீரால் நமிநந்தியடிகள் விளக்கு ஏற்றியதைக் கேள்விப்பட்ட சமணர்கள் வெட்கம் அடைந்தனர். இரவு நெடுநேரம் அறநெறியப்பரின் சந்நிதியில் இருந்துவிட்டு நமிநந்தியார் தமது இருப்பிடம் திரும்பி சிவவழிபாட்டினை முடித்துவிட்டு நித்திரை கொண்டார்.

    சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும்

      சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி

    ஆதி முதல்வர் அரநெறியார் கோயில்

      அடைய விளக்கு ஏற்றி

    ஏதம் நினைந்த அருகந்தர்

      எதிரே முதிரும் களிப்பினுடன்

    நாதர் அருளால் திரு விளக்கு

      நீரால் எரித்தார் நாடு அறிய

    வீட்டில் அனுதினமும் வழிபாடு செய்வதற்காக நள்ளிரவில் புறப்பட்டுச் செல்வார். மீண்டும் திருவாரூரை அடைந்து திருக்கோயிலின் உள்ளும் புறமும், நீரினால் விளக்கேற்றினார். ‘நீரினால் விளக்கிட்டமை நீள் நாடறியும் அன்றே’ என்று நாவுக்கரசர் பெருமானார் பாடியருளினார்.

    திருவாரூருக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராசப் பெருமாள் எழுந்தருளுவார். மக்களுடன் நமிநந்தியடிகளும் அங்கு சென்று வழிபட்டு வீடு வந்தவர், வீட்டிற்குள் நுழையாமல் வெளியிலேயே அமர்ந்தவாரு, மனைவியை அழைத்து, பல தரப்பட்ட மக்கள் கூட்டத்தின் நடுவில் இருந்ததால் குளித்துவிட்டுத்தான் வழிபாடு  செய்ய வேண்டும் என்பதால் வெந்நீர் தயார் செய்யவும்  கூறினார். உடல் அசதி காரணமாக மனைவி உள்ளே சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் நமிநந்தியடிகள் நாயனார் திண்ணையில் கண்ணயர்ந்துவிட்டார். அப்போது அவருடைய கனவில் பேரொளியாகத் தோன்றிய திருவாரூர்ப் பெருமான், திருவாரூரில் பிறந்த அனைவருமே நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய் என்று கூறினார்.

    மேன்மை விளங்கும் திருவாரூர்

      வீதி விடங்கப் பெருமாள்தாம்

    மான அன்பர் பூசனைக்கு வருவார்

      போல வந்து அருளி

    ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார்

      எல்லாம் நம் கணங்கள்

    ஆன பரிசு காண்பாய் என்று அருளிச்

      செய்து அங்கு எதிர் அகன்றார்.

    கண் விழித்து எழுந்த நமிநந்தியடிகள் நாயனார் நடந்தவற்றை மனைவியிடம் கூறி, தன் தவறான எண்ணத்தை நினைத்து வருந்தினார். திருக்கோயிலுக்கு வந்தவர்கள் யாராயினும் அவர்கள் சிவனடியார்கள் என்று கருதாதது மிகப்பெரிய குற்றம் என்று வருந்தினார். பின்னர் குளிக்காமலே உடனே சென்று வழிபாடு செய்யலானர். விடியற்காலை எழுந்து வழிபாட்டை முடித்துவிட்டு திருவாரூர் நோக்கிச் சென்றார். கனவில் பெருமான் குறிப்பிட்டது போன்று அவர் திருவாரூரில் பிறந்து வாழும் அனைவரும் சிவனடியார்களாகவும், ஒளிப்பிழம்பாகவும் விளங்கும் காட்சியைக் கண்டார். உடனே நமிநந்தியடிகள் நாயனார் தலைக்கு மேல் கைகூப்பி வணங்கினார். எம்பெருமான் திருமுன் வீழ்ந்து வணங்கி மன்னிப்பும் வேண்டினார். திருவாரூரையே தமது இருப்பிடமாகக் கொண்டு திருத்தொண்டு பல செய்து வந்தார்.

    பங்குனி உத்திரப் பெருவிழாவைத் துவக்கி வைத்ததும் இவ்வடியாரே ஆவார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூர் பெருமானுக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனி உத்தரப் பெருவிழாவை சிறப்புறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார்.

    சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், திருநாவுக்கரசு நாயனாரால் தேவாரப்பதிகத்தில் தொண்டற்காணி என்று சிறப்பித்துப் பாடப்பட்டார்.

    சிவபெருமானால் ‘உலக மக்கள் அனைவரும் சமமே’ என்று அறிவுறுத்தப்பட்டவர் நமிநத்தியடிகள்.

    நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர்

        நமிநந்தி யடிகடிரு விளக்கு நல்க

    வெண்ணெயம ணர்கள் விலக்க நீரா லாரு

        ரிலங்குமா னெறியாருக் கேற்று நாளிற்

    கண்ணமணர் கெடக்கண்பெற் றடிகள் வாழக்

        காவலனா னிபந்தங்கள் கட்டு வித்தே

    யண்ணலருள் காண்டாரு ரமர்ந்து தொண்டர்க்

        காணியெனு மரசினரு ளடைந்து ளாரே.

     

    நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

     

    சிவாலயத் திருத்தொண்டுகளில் திருவிளக்குத் திருத்தொண்டு மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

    விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்

     துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்

     விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்

    அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே

    என்ற தேவாரப் பாடல் விளங்கச் செய்கிறது.

    சிவ வடிவம் ஒளிமயமாதல் என்பதனை, தேவாரத்தில் “திருவையாறகலாத செம்பொற் சோதி” என்றும்,

    திருவாசகத்தில், ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்சோதி” – “சோதியாய்த் தோன்றும் உருவமே” – “சோதியே சுடரே சூழொளி விளக்கே” என்றும், திருவிசைப்பாவில் “ஒளிவளர்விளக்கே” – “சுடரொளி விளக்கினுள்ளொளி விளக்குந் தூயநற் சோதியுட் சோதி” எனவும், கந்தரலங்காரத்தில் “ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு தூங்கார்” எனவும் வருவனவற்றாலும் அறியலாம்.

    மெய்யுணர்வு பெற்ற நிலையில் ஆன்மாவும் ஒளிமயமாகவேயிருக்குமெனல், விளக்கினை யேற்றி வெளியை யறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கை விளக்கும் விளக்கவர்தாமே” என்னும் திருமந்திரத்தால் அறியப்படும்.

    “தாவியவனுடனிருந்துங் காணாத தற்பரனை

    ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்

    நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்

    கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே”

     எனும் தேவாரப் பாடலால் அறியலாம்.

     “விளக்கில் விளக்கும் விளக்கவர்தாமே” என்ற திருமூலர் கூற்றுக் கிலக்கியமாய் விளங்கித் திகழ்ந்தவர் நமிநந்தியடிகள்.

    வென்றிவிடையார் மதிச்சடையார் வீதிவிடங்கப் பெருமாள் தாம் என்றுந் திருவாரூராளும் இயல்பின் முறைமைத் திருவிளையாட்டொன்றுஞ் செயலும் பங்குனியுத்தரமாந் திருநாள் உயர்சிறப்பும் நின்று விண்ணப்பஞ் செய்தபடி செய்தருளும் நிலைபெற்றார்” எனவும்,

    “இன்ன பரிசு திருப்பணிகள் பலவுஞ்செய்தே ஏழுலகும் மன்னு பெருமைத்திருவாரூர் மன்னரடியார் வழிநிற்பார் அன்ன வண்ணந் திருவிளையாட் டாடியருள எந்நாளும் நன்மை பெருக நமிநந்தியடிகள் தொழுதார் நாமுய்ய” எனவும் உள்ள திருத்தொண்டர் புராணச் செய்யுள்களால் அறியப்படும்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரியபுராணம் எனும் பேரமுதம் – பகுதி 26

                                                63 நாயன்மார்களின் வரலாறு – 23. திருநீலநக்க நாயனார்

     

    வேத உள்ளுறை ஆவன

      விரிபுனல் வேணி

    நாதர் தம்மையும் அவர்

      அடியாரையும் நயந்து

    பாதம் அர்ச்சனை புரிவதும்

      பணிவதும் என்றே

    காதலால் அவை இரண்டுமே

      செய் கருத்து உடையார்

    சோழமண்டலத்தில், காவிரி ஆறு பாய்ந்தோடி வளப்படுத்தும் தன்மை கொண்ட  சாத்தமங்கை எனும் ஊரில் திருநீலநக்க நாயனார் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து கிழக்கே ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்வூர் நம்பியாரூரரால் தம் திருத்தொண்டத்தொகையில்,’ஒலி புனல் சூழ் சாத்தமங்கைஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தரின் திருமணத்தை தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.”
    திருநீலநக்க நாயனாரை
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்” என்று போற்றுகின்றார். திருச்சாத்தமங்கை இன்று மக்கள் வழக்கில் சீயாத்தமங்கை, செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அமைந்திருக்கும் திருதலத்தில் அயன் என்னும் நான்முகன்வழிபட்டதால் அயவந்தி எனப்பட்டது. மறையவர்கள் மிகுதியாக வாழ்கின்ற இவ்வூரின் இறைவன் திருநாமம் மலர்க்கண் அம்மை என்றும் அயவந்தீசுவரர் என்றும் பார்வதி தேவி இருமலர்க்கண்ணம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். திருநீலநக்க நாயனார் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் என்பதால் மறையொழுக்கம் வழுவாமல் ஆகமவிதிப்படி எந்நேரமும் வேத பாராயணம் செய்வார். இத்திருக்கோயிலில் அருமறைப் பொருளில் தெளிந்த இவர் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்துகொண்டு, அங்கு வரும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையும் செய்து வந்தார். திருச்சாத்தமங்கையில் வாழும் மறையவர்கள் திருநீற்றினைப் போற்றி அதன் பெருமையை வளர்த்து மூன்று வகையான அக்னியை வளர்த்தனர்.

    சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் உகந்த நாளான திருவாதிரை நன்னாளில்தான் ஞானப்பால் உண்டார் சம்பந்தப் பெருமான். அப்படிப்பட்ட ஒரு திருவாதிரை நன்னாளில், திருநீலநக்க நாயனார் அயவந்தீசுவரருக்குப் பூசை செய்வதற்காக பூசைக்குரிய பொருட்களுடன் தம் மனைவியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று இறைவனை வலம் வந்து வணங்கி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் இறைவன் திருமேனியில் சிலந்தி ஒன்று விழுந்தது. அதனைக் கண்ட திருநீலநக்க நாயனாரின் மனைவியார் விரைந்து சென்று தாய்மையுணர்வுடன் வாயினால் ஊதியவாறு அந்த சிலந்தியை விரட்டி அடித்தார். இதனைக் கண்ட திருநீலநக்க நாயனார் கோபமடைந்தார். வழிபாட்டில் எச்சில் படுவது பாவம் என்பதால் ஆகம நெறிக்கு புறம்பாக சிவபெருமானை எச்சில் செய்த உம்மை இக்கணமே துறந்தோம் என்று கூறி, மாலைப்பொழுது ஆனதால் வீட்டிற்குத் திரும்பினார்.  அச்சங்கொண்டு நடுங்கிய நாயனாரின் மனைவியும் மன வேதனை மேலிட செய்வதறியாது கோயிலிலேயே தங்கி விட்டார். இருள் சூழ்ந்திருக்க எம்பெருமானை வணங்கியபடியே அந்தக் காரிருளில் நடுங்கியபடியே கோயிலுக்குள் தங்கியிருந்தார். நாயனார் வீட்டில் சென்று படுத்து உறங்கினார்.

    நீலநக்க நாயனாரின் உறக்கத்தில் ஒரு கனவு தோன்றியது. அயவந்தித் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அயவந்திநாதர் தோன்றினார். எம்பெருமான் நாயனாரிடம், அவருடைய மனைவியார் ஊதிய இடம் நீங்கலாக மற்ற இடமெங்கும் சிலந்தியினால் ஏற்பட்ட கொப்புளம் என்று கூறி தம் திருமேனியைக் காட்டியருளினார். மனைவியின் எச்சில் பட்ட இடம் எம்பெருமானுக்கு அமுதநீராயிற்று எனவும் அதுபடாத இடமெல்லாம் கொப்பளமாக மாறியதையும் பெருமான் கனவில் காட்டியதை உணர்ந்து தவறு செய்துவிட்டோமே என்றும் வருந்தினார். கண் விழித்த திருநீலநக்க நாயனார் எம்பெருமானுடைய திருவருளை வியந்து ஆடிப்பாடி கூத்தாடி, கோயிலுக்குச் சென்று அயவந்தீசுவரரைத் தரிசனம் செய்து விட்டு மனைவியை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.  

    நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை

        நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி

    யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்

        குமியாத விடநாத னுறுநோய் காட்டக்

    காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக்

        காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து

    வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி

        விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் காலத்தில் வாழ்ந்தவரான திருநீலநக்க நாயனாருக்கு அவர்மீது அதீத ஈடுபாடும் பக்தியோடும் நெருங்கிப் பழகினார். ஒருநாள் ஞானசம்பந்தப்பெருமான் திருநள்ளாறு சென்றுவிட்டு திருசாத்தமங்கை வந்தபோது அவரை வரவேற்க திருசாத்தமங்கையில் பந்தல் போட்டு, தோரணங்கள் கட்டி, மேளதாளத்துடன் வரவேற்றார். அன்று இரவு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநீலநக்க நாயனார் இல்லத்தில் தங்க முடிவெடுத்தவர், தம்முடன் வந்திருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் அவர் இல்லத்திலேயே தங்க இடம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு திருநீலநக்க நாயனார் சற்றும் தயங்காமல், தாம் செய்யும் வேள்விக் குண்டத்திற்கு அருகில் யாழ்ப்பாணருக்கு உறங்க இடம் அளித்தார். குலம் பார்க்காமல் மகிழ்வோடு அடியாரின் விருப்பத்தை நிறைவேற்றிய திருநீலநக்க நாயனாரின் பெருமையை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்தீசுவரரின் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


    திருநீலநக்க நாயனார் அவ்வப்பொழுது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இருக்கும் தலங்களுக்குச் சென்று தம்முடைய நட்பை வளர்த்துக் கொண்டார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமணத்தினைக் கண்டு களிக்க மனைவியுடன் திருப்பெருமணநல்லூரை அடைந்தார். அத்திருமணத்தை, திருமண வேள்விச் சடங்கினை தாமே முன்னின்று நடத்தி வைத்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் கூடிய அடியார் திருக்கூட்டத்துடன் சிவசோதியினுள் கலந்து இன்புற்றனர்.

    திருநீலநக்கர் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருவாசகத்தில்,

    சொற்பதங்கடந்த அப்பன் தாளதா

    மரைக ளேத்தித் தடமலர்

    சூட்டமாட்டா ஆளலா தவரைக்கண்டால்

    அம்மநாம் அஞ்சுமாறே

    உயிர் பாச நீக்கம் பெற்று சிவப்பேறடைதல் உள்ளார்ந்த ஆன்மிகத் தகுதியை உண்டுபண்ணுதற்கும் பெருஞ்சிவப்பேற்றை அடைந்து பேரின்பமடையச் செய்வதுமே சிவபூசையின் சாராம்சமாகும்வேதத்தின் முதற்பொருளான அடியார்களைப் போற்றலும், எம்பெருமானை அர்ச்சிப்பதுமாகிய இரண்டுமே வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர் திருநீலநக்க நாயனார். அருள் நூல்களின் சாரமாக விளங்குவது மெய்ப்பொருளாக விளங்குவது திருநீறே ஆகும். உயிர்களைக் காப்பதும் திருநீறே ஆகும். சைவத்தில் சிவபூசையானது சுத்த நிலையிலுள்ள ஆன்மாக்கள் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக வற்புறுத்தப்பட்டுள்ளதாகும். திருமந்திரத்தில், யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை” எனவும் போற்றப்பட்டுள்ளது.

     தேவாரத்தில்,

    அருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரும்

    அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே  

    ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில்

    உண்பதின்முன் மலர்பறித்திட்டுண்ணாராகில்

    அருநோய்கள் கெட வெண்ணீறணியா ராகில்

     அழியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

     பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்துஞ் செத்துப்

    பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே

    என்று போற்றப்படுதலும் குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள், பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி ஏத்தாதாரில்லை” என்ற அருளிப்பாட்டின் மூலம் சிவபூசை அனைவர்க்கும் உரித்தானதென்று விதித்துள்ளதும் அறியத்தக்கது.

     சிவனடியார் வழிபாடும் சிவபூசைக்குச் சமமான மகிமையுடைத்ததாகும். சிவபெருமானை பூசிப்பவர்களின் உள்ளத்தில் சிவபெருமானே தோன்றி அருள் அளிப்பதற்கொப்ப சிவனடியார் வழிபாட்டுக்கும், வழிபடுவோரிடத்தில் சிவம் தோன்றி விளங்குதலால் அறியலாம் என்பது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளபடி,

    எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும்

    அஞ்சனமுங் கண்டாலுள்கி உவராதே

    அவரவரைக் கண்டபோதில் உகந்தடிமைத்

    திறம் நினைந்தங் குணர்வே மிக்கு

    இவர்தேவர் அவர் தேவரென்று பேசி

    இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே

    பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

    கன்றாப்பூர் நடுதறியைக்காணலாமே

     எனவும், திருமந்திரத்தில் “மஞ்சன மாலை நிலாவியவானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமுதாம் உபசாரமெட்டெட்டொடும் அஞ்சலியோடுங் கலந்தர்ச்சித்தார்களே” எனவும் வருவனவற்றாலறியப்படும்.

     “வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாமுள” என்கிறார் திருமூலர்.

    தாம் பூசிக்கும் சிவலிங்கத்தின் திருமேனியில் விழுந்த சிலந்தியை அயலில் நின்ற தம் மனைவியார் எம்பெருமானை பச்சிளங் குழந்தையாகக் கருதி வாய் நீர்பட ஊதி உமிழ்ந்து விட்டமை மாபெரும் தவறு என்று நினைத்தவர் உடனடியாகத் தான் அவரைத் துறந்து விட்டதாகச் சொல்லி அகற்றிவிட்டார்.

    விழுந்த போதிலங் கயனின்ற மனைவியார் விரைவுற்
    றெழுந்த ச்சமோ டிளங்குழ வியில்விழுஞ் சிலம்பி
    ஒழிந்து நீங்கிட வூதிமுன் றுமிப்பவர் போலப்
    பொழிந்த வன்பினா லூதிமேற் றுமிந்தனர் போக.

    என்ற சேக்கிழார் வாக்கினால் அறியலாம்.

    “ஈசனறியும் இராப்பகலுந் தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிந்தறிவார்களை” என்ற திருமூலர் கூற்றுக்கிணங்க நாயனாரது இறை அன்பையும் தம் மனைவியாரது தாய்மைப் பரிவுடனான அன்பையும் சீர்தூக்கி இருவரது ஆக்கத்துக்கும் ஏற்றவகையில் அருளிய சிவபெருமானின் கருணையை அறியச்செய்கிறது.

    திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் தங்க இடம் கொடுக்க வேண்டி ஞானசம்பந்தப் பெருமான் சுவாமிகள் இந்நாயனாரைக் கேட்டுக் கொண்டதும் சுவாமிகள் அவர்களுக்குத் தமது சிவபூசை மேடையிலேயே இடங்கொடுத்ததும், சைவசமயத்தில் சாதியொழிந்த இடம் இது என்ற பக்குவநிலையை எடுத்துரைப்பதையும் அறியலாம்.  . சிவபெருமான் மீது கொண்ட பற்றே அனைத்திலும் சிறந்தது என்ற சுத்த நிலையில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் மனைவியாரும் உண்மைச் சிவனடியார்களாகிவிட்ட நிலையில் பாணர் என்ற பெயர்க்குரிய அவர்களின் சாதி, குல நிலைகள் முற்றாக அற்றொழிந்தவாயின.

    சீல மெய்த் திருத்

      தொண்டரோடு அமுது செய்தருளி

    ஞாலம் உய்ந்திட நாயகியுடன்

      நம்பர் நண்ணும்

    காலம் முற்பெற அழுதவர்

      அழைத்திடக் கடிது

    நீல நக்கனார் வந்து அடி

      பணிந்து முன் நின்றார். 

     

    நின்ற அன்பரை நீல

      கண்டப் பெரும் பாணர்க்கு

    இன்று தங்க ஓர் இடம்

      கொடுத்து அருளுவீர் என்ன

    நன்றும் இன்புற்று நடு

      மனை வேதியின் பாங்கர்ச்

    சென்று மற்று அவர்க்கு

      இடம் கொடுத்தனர் திருமறையோர். 

     

    ஆங்கு வேதியில் அறாத

      செந்தீ வலம் சுழிவுற்று

    ஓங்கி முன்னையில் ஒரு

      படித்து அன்றியே ஒளிர

    தாங்கு நூலவர் மகிழ்வுறச்

      சகோட யாழ்த் தலைவர்

    பாங்கு பாணியாருடன் அருளால்

      பள்ளி கொண்டார்.

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 25

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 22. அப்பூதியடிகள் நாயனார்

     

    அந்தமினற் றிங்களுர் வருமப் பூதி

        யருமறையோர் திருநாவுக் கரசி னாமம்

    பந்தரிடை யெழுதக்கண் டரக மெய்தப்

        பணிந்துபரி கலநேடிப் படப்பை சேர்ந்த

    மைந்தனுயி ருயர்கதலி யிலைமேற் றுஞ்சும்

        வாளரவு கவரவுடன் மறைத்தல் கேட்டுச்

    சிந்தைமகிழ்ந் துயர்பதிக மருந்தாற் றீர்த்துத்

        திருவமுது செயவருளைச் சேர்ந்து ளாரே.

    ப்பூதியடிகள் சோழநாட்டின் திங்களூர் எனும் ஊரில் பிறந்தவர். நால்வர் பெருமக்களாலும் பாடப்பெற்ற அருட்தலமான திருஐயாறு எனும் ஊருக்கு ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ளது திங்களூர். இவ்வூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் அப்பூதியடிகள். திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினைப் பற்றி கேள்விப்பட்டு அவரை மிகவும் மதித்து வந்தவர், அவரை முன்பின் பார்த்திராமலே அவர்மீது அளப்பரிய அன்பும், பக்தியும் கொண்டு அவரையே தம் குருவாக எண்ணி போற்றி வந்தார். நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் குருபஞ்சாட்சரம் என்று அழைக்கப்படும். அந்த வகையில் தம் குருவின் திருநாமமாகிய திருநாவுக்கரசு எனும் பெயரை குருபஞ்சாட்சரமாகப் போற்றும் அப்பூதியடிகள் தம் மனைவி, மக்கள், மனைப் பொருட்கள் அறச்சாலைகள் போன்று அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்றே பெயர் சூட்டினார். அவருடைய நான்கு குழந்தைகளுக்கும் திருநாவுக்கரசர் என்றுதான் பெயர் சூட்டினார். அவர் வீட்டிற்கும் திருநாவுக்கரசர் பெயர்தான், அவருக்கு எல்லாமே திருநாவுக்கரசர் என்ற வகையில் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் அளித்தல், சத்திரம் அமைத்தல், நீர்ப்பந்தல் அமைத்து தாகம் தீர்த்தல் போன்ற அறப்பணிகளையும் செய்து வந்தார்.

    களவு பொய் காமம் கோபம்

      முதலிய குற்றம் காய்ந்தார்

    வளம் மிகு மனையின் வாழ்க்கை

      நிலையினார் மனைப் பால் உள்ள

    அளவைகள் நிறைகோல் மக்கள்

      ஆவொடு மேதி மற்றும்

    உள எலாம் அரசின் நாமம்

      சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார்

    என்கிறார் சேக்கிழார் பெருமான், அப்பூதியடிகளின் பெருமையைப் பற்றி.

    திருநாவுக்கரசர், தம் பெயரால் பல அறப்பணிகள் செய்யும் அப்பூதியடிகள் அப்படி செய்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று சிந்தித்தவராய், அப்பூதியடிகள் இருக்கும் இடம் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.  இந்த நற்தொண்டினைப் பற்றி அறிந்து உள்ளம் மகிழ்ந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளைக் காணும் பொருட்டு அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். ஆனால், அவர்தான் திருநாவுக்கரசர் என்பது அப்போது அப்பூதியடிகளாருக்குத் தெரியாது. எதிர் நின்ற நாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, தாம் முன் செய்த தவமே கருணை பொழியும் திருமுகத்தையுடைய அத்தவச் செல்வர் தங்கள் மனைக்கு எழுந்தருளியது என்று கூறி அவர் வந்த காரணம் குறித்தும் கேட்டார். திருப்பழனநாதரை வழிபட்டு வரும் வழியில் தண்ணீர்ப் பந்தலைக் கண்டதோடு அவர் புரியும் அறம் பலவும் கேட்டறிந்து அப்பூதியாரைக் காண வந்ததாகக் கூறுகிறார்.

    தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா

    மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே

    யினமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள்பிரா

    னனமார் வயற்றிங்க ளுரினில் வேதிய னப்பூதியே.

    திருநாவுக்கரசர், அப்பூதியடிகளை நோக்கி, “அடியார்களுக்கு உங்கள் சொந்தப் பொறுப்பில் செய்யும் அனைத்து அறப் பணிகளுக்கும் ஏன் நீங்கள் உங்கள் பெயரை வைக்காமல் வேறொருவரின் பெயரை வைத்திருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் மிகவும் மனம் வருந்திய அப்பூதியடிகள், பெரியவர் வாயில் நல்ல வார்த்தைகள் வரக்கூடாதா என்று நொந்து போனார். சமணர்களும், நாடாளும் மன்னனும் சேர்ந்து செய்த சூழ்ச்சியினைத் திருத்தொண்டின் உறைப்பால் வென்ற நாவுக்கரசர் திருப்பேரா வேறோரு பேர் என்று கூறி புரியாமல் பேசுகிறீரே” என்றவர், அத்திருப்பேரே தமது தாரக மந்திரம் என்று வாய் குளர மொழிந்தார்.  அதுமட்டுமல்லாமல் நாவுக்கரசரின் மகிமையை அறியாத அவர் சமணர் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லையே என்றும் கேட்டார். பின்னர் அவருடைய ஊரையும், பேரையும் குறித்தும் கேட்டார்.

    அப்போது நாவுக்கரசரும், தன்னைக் கடைத்தேற்ற எவ்வழியும் காணாது அதிகைப் பெருமானாரால் கொடுஞ்சூலையினால் ஆட்கொள்ளப்பட்டு சிவனருளை உணர்ந்த சிறியேன், தாம் என்று சூசகமாக பதிலிறுத்தார். இதனைக் கேட்ட அப்பூதியடிகளார் மீப்பெரும் அதிர்ச்சிக்குள்ளானவர், யாரை தன் வாழ்நாளில் காண வேண்டும் என்று தவம் புரிந்து காத்துக் கிடந்தாரோ, யார் பெயரால் அனைத்தறங்களும் செய்து வந்தாரோ, தம் செல்வங்கள் அனைத்திற்கும் எவர் பெயரை வைத்து ஓயாமல் மூலமந்திரமாக எண்ணி செபித்துக் கொண்டிருந்தாரோ, அப்பெயருக்குரிய பெருமானார் தம் கண் முன்னால் நிற்பதைக் கண்டு செய்வதறியாது திகைத்தவர், ஆடினார், பாடினார், மனைவி, மக்களையெல்லாம் அழைத்து வந்து அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கச் செய்தார். தாமும் கண்ணில் நீர் பெருக கைகூப்பியவராய் நாவுக்கரசர் மலரடிகளே சரணம் என்று அடியில் வீழ்ந்தார். அப்பரடிகளும் அவரைத் தம் திருக்கரத்தால் வாஞ்சையுடன் எடுத்தருளினார். அப்பரடிகளின் திருவடியை பூவும், நீரும் கொண்டு பூசனை செய்தார்.

    தன்னுடைய இல்லத்திற்கு திருநாவுக்கரசரே வந்திருப்பதை அறிந்த அப்பூதியடிகள் மகிழ்ந்து கூத்தாடி, உணவு உண்ணுமாறு வேண்டினார். அவரும் அந்த அன்பிற்கு இசைந்ததால் திருஅமுது படைக்கத் தயாரானார்கள். காய்கறிகளும், கனி வகைகளும் கொண்டு தூய நற்புனிதமான உணவைத் தயார் செய்தனர். தங்கள் புதல்வன் மூத்த திருநாவுக்கரசை, திருநாவுக்கரசருக்கு பரிமாறும் பொருட்டு அருகில் இருந்த தோட்டத்தில் இருந்து வாழைக்குருத்து அரிந்து வரும்படி அனுப்பினார். அங்கு அவன் வாழைக் குருத்தை அரியும் போது கொடிய நாகம் ஒன்று அவன் கரத்தைத் தீண்டிவிட்டது. நஞ்சு ஏறுவதை அறிந்தும் அவன் ஓடிச்சென்று வாழைக்குருத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து சிரமம் பாராமல் வந்து தாயின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு அப்படியே அவர் பாதங்களில் சரிந்து விழுந்தான். விடம் தீண்டி அன்பு மகன் உயிர் இழந்தது தெரிந்தும் வேதனையை வெளிக்காட்டாமல் நாவுக்கரசரை அமுது செய்விப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அந்தப் பெரிய தலைவாழைக் குருத்தில் உணவு பரிமாறி அப்பரடிகள் திருவடியில் விழுந்து வணங்கி அமுதுண்ண அன்புடன் அழைத்தனர். திருநாவுக்கரசர் பூசனை முடித்து தாம் திருநீறு அணிந்த பின்னர் அப்பூதியடிகளுக்கும், அவர்தம் மனைவியார் மற்றும் குழந்தைகளுக்கும் திருநீறு வழங்கினார். அப்போது மூத்த திருநாவுக்கரசு எங்கே, அவனையும் அழையுங்கள் திருநீறு பூச வேண்டும் என்றார். நடந்த உண்மையைச் சொன்னால் நாவுக்கரசர் உணவருந்த மாட்டாரே என்று நினைத்த அப்பூதியடிகள், “இப்போது இங்கு அவன் உதவான்” என்றார். அவர் வார்த்தைகளில் இருந்த தடுமாற்றத்தைக் கவனித்த நாவுக்கரசர், “இந்தப் பதிலை என் உள்ளம் ஏற்காது. என் செய்தான்? உண்மையைக் கூறுங்கள்” என்றார். அதற்குமேல் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்தவர், மகனுக்கு நேர்ந்த அவலத்தையும் பாயினால் மூடி வைத்த பாங்கினையும் உள்ளவாறு கூறினார்.

    இதனைக் கேட்ட நாவரசர், இப்படியும் யாரேனும் செய்வார்களோ என்று வருந்தி, ஆவி போன மகனின் சவத்தை பாயிலிருந்து எடுத்து தன் முன் கொண்டு வரும்படி பணித்தார். அச்சவத்தை நோக்கி சிவபெருமான் அருளும் வண்ணம் அவர் அருளாகிய திருமேனிகள் அமைந்த அளப்பரிய தோற்றத்தை ஒன்று முதல் பத்து வரையாக வைத்து எண்ணும் நிலையாற் பத்துப் பாடல்களைப் பாடியருளினார்.

    ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை

    ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

    ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது

    ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

     

    பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்

    பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன

    பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை

    பத்து கொலாம் அடியார் செய்கை தானே.

    பாம்பு கடித்து உயிர் துறந்து பாயிற் கிடத்தப்பட்ட மைந்தன் உறங்கி எழுபவன் போல் எழுந்தவன் அப்பரடிகளின் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். அன்போடு திருநீறு பூசி வாழ்த்தினார். ஆயினும் அப்பூதியடிகளும், அவரது மனைவியாரும் அப்பர் பெருமானால் உணவருந்த முடியவில்லையே என்று வருந்தினர்.  இதனை அறிந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் புதல்வர்களை இரு புறமும் இருத்தி உணவருந்தி சில காலம் திருப்பழனத்தில் அப்பூதியடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பல பதிகங்களைப் பாடியருளினார் .

    அப்பூதியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருநாவுக்கரசு என்னும் மந்திரத்தைச் சொல்லியும், எழுதியுமே முத்தி பெற்றவர் அப்பூதியடிகள்.  சைவ சமயத்தில் சிவபெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதியடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமானை வணங்கியே வீடுபேரு அடைந்தார்.

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

    ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது

    வேதநான்கினும் மெய்ப்பொருளாவது

    நாதன் நாமம் நமச்சிவாயவே

    என்று தேவாரத்திலும்,

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்

    சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

    சிவசிவ என்றிடத் தேவருமாவர்

    சிவசிவ என்ன சிவகதிதானே.

    என்று திருமந்திரத்திலும் கூறுவது போன்று அப்பூதியடிகள் நாவுக்கரசரைக் காணாமலேயே அவர்மீது பக்தி கொண்டு அவரையே தம் குருவாகவும் ஏற்றுக்கொண்டார். சைவ சமயத்தில் சிவபஞ்சாட்சரம் மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. அதே போன்று நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் குரு பஞ்சாட்சரம் என்று போற்றப்படுகின்றது. அப்பூதியடிகளும் தம் குருவின் நாமமாகிய திருநாவுக்கரசு என்ற பெயரை குரு பஞ்சாட்சரமாகப் போற்றி, திருநாவுக்கரசரை நேரடியாகக் காணாவிட்டாலும் செவிவழியாக அவருடைய பெருமைகளையும், திருத்தொண்டினையும் அறிந்து அவர் மீது தீராத பேரன்பு கொண்டார். ஆகையால், நாவுக்கரசரின்  திருப்பெயரிலேயே மடங்களும், தண்ணீர் பந்தல்களும் அமைத்து வறியவர்களுக்கும், அடியார்களுக்கும் அனைத்து உதவிகளையும் மனிதநேயத்துடன் செய்து வாழ்ந்து வந்தார்.

     

     “நம்மை உடையவர் கழல்கீழ் நயித்த திருத்தொண்டாலே

    இம்மையிலும் பிழைப்பது என என்போலவாரும் தெளிய

     

    அப்பூதியடிகள் ‘திருத்தொண்டு’ என்பதனை இறைவனுக்கு மட்டுமன்றி சிவனடியார்களுக்கும், எளியவர்களுக்கும் விருந்தோம்பல் செய்வதையும் தம் அன்றாட வழிபாடாகவே செய்து கொண்டிருந்தார்.

     

     ஆதியோடு அந்தம் இல்லான் அருள்நடம் ஆடும்போது

    கீதம்முன் பாடும்அம்மை கிளர்ஒளி மலர்தாள் போற்றி

    சீதாமூர் வயல்சூழ்  திங்களூரில் அப்பூதியாராம்

    போதமா முனிவர் செய்த திருத்தொண்டு புகலுற்றேன்

     

    அப்பூதியடிகள் தம்மைநாடி வந்தவர்களுக்குச் செய்யும் அனைத்து உதவிகளையும் சிவபெருமானுக்குச் செய்யும் தொண்டாகவே எண்ணிச் செய்ததை சேக்கிழார் பெருமான் அப்பூதியடிகளை அறிமுகப்படுத்தும் பாங்கில் இருந்தே அறியலாம்.

    தங்கள் தவப்புதல்வனான மூத்த திருநாவுக்கரசை அருகிலிருந்த தோட்டத்தில் வாழைக்குருத்து அரிந்து வரச்சொல்லி அனுப்புகிறார். விரியாத குருத்தினை குறிப்பாக எடுத்து வரச்சொல்கிறார். விரிந்த இலையில் காகம் முதலான பறவைகள் எச்சம் இட்டிருக்கலாம் என்பதற்காகவே குருத்து இலையை அரிந்து எடுத்து வரச்சொல்கிறார். ஆனால் இறைவனின் திருவிளையாடலாக குருத்திலைக்குள் நாகம் இருந்து தீண்டிவிட நஞ்சு ஏறிய சிறுவன் உயிர் இழக்கிறான். நல்ல திருப்பணியைச் செய்ய பெரும்பேறு பெற்றேன் என்ற மகிழ்வுடன் சென்றவனுக்கு நாகம் தீண்டினாலும், ‘பாம்பு தீண்டிய வேகத்தில் உண்டாகிய  கொடிய நஞ்சால் நான் இடறிக் கீழே விழும் முன்னர் இலைக்குருத்தினை தாயிடம் கொண்டு சேர்ப்பேன்’ என்று தீர்மானித்து ஓடிவந்தான். தன் உயிர் நீங்கினும்  அடியாராக வந்த நாவுக்கரசருக்கு திருஅமுது படைப்பதில் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது  என்ற எண்ணம் மிக்க சிறந்த தொண்டராக மூத்த திருநாவுக்கரசர் படைக்கப்பட்டுள்ளார்.

     

    பெறல் அரும் புதல்வன் தன்னைப்பாயினுள் பெய்துமூடிப்

    புறமுனை முன்றில் பாங்குஓர் புடையினில் மறைத்துவைத்தே

    அறஇது தெரியாவண்ணம் அமுதுசெய்விப்போம் என்று

     

    தம் மகனின் உயிர் பிரிந்த நிலையிலும் சடலத்தை பாயினுள் வைத்துச் சுருட்டி தன் மனையின் புறத்தே உள்ள முற்றத்தில் மறைத்து வைத்த பின்பு நாவுக்கரசருக்கு திருஅமுது படைப்பதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டார். அடியார்களையும் வறியவர்களையும் விருந்தினர்களையும் தமது இல்லத்தில் எவ்வித சூழ்நிலை இருந்தாலும் இன்முகத்துடன் வரவேற்று, முகமலர்ச்சியுடன் உபசரித்து அனுப்ப வேண்டும் என்ற உயரிய கொள்கையை தமக்கு மட்டுமல்லாமல் தம் பிள்ளைகளுக்கும் கடமையாக்கியுள்ள அப்பூதியடிகளின் வரலாறு போற்றுதலுக்குரியது.

     

    திருச்சிற்றம்பலம்.

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 24

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 22 காரைக்கால் அம்மையார்

     

    நம்பியாரூரர் தம் திருத்தொண்டத்தொகையில், ‘பெருமிழலைக் குறும்பர்க்கும், பேயார்க்கும் அடியேன்’ என்று குறிப்பிடுகிறார். நம்பியாரூரர் காரைக்கால் அம்மையாரை பேயார்க்கும் அடியேன் என்று சொல்வதன் காரணம் என்ன என்று அறிய வேண்டுமானால் அம்மையாரின் வரலாற்றை முழுமையாக அறிய வேண்டும். நம்பியாரூரருக்குப் பின் வந்த சேக்கிழார் பெருமான் காரைக்கால் அம்மையாரின் சுவையான வரலாற்றை சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நயம் என அனைத்து வகையிலும், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் விரித்து விருந்து படைத்துள்ளார். காரைக்காலில் தோன்றிய அம்மையார் மகப்பேறு பெற்று தாய்மை அடையாமலே அனைவராலும் அம்மையே என்று அழைக்கப் பெற்றவர்.

    நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு

    மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ்

    செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன்

    கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே.

    இறைவன் திருவருளை தமிழகமெங்கும் பரப்புவதற்கு காரைக்கால் அம்மையார் முன்னோடியாக விளங்கியவர். தற்போது புதுவை மாநிலத்தில் இருக்கும் சோழ மண்டலத்தின் துறைமுகப்பட்டினமான காரைக்கால் எனும் ஊரில், மிகச்சிறந்த வணிகர் குடியில், வணிகர் குலத்தலைவரான தனதத்தன் என்பவரின் அருமை மகளாகப் பிறந்தவர் இவர். புனிதவதி என்பது இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்.

    தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க

        தனதத்தன் றரும்புனித வதியார் மாவின்

    செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு

        திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க

    வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி

        யம்மையே யெனநாத னப்பா வென்று

    பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற்

        புனிதனட மனவரதம் போற்றி னாரே.

    புனிதவதியார் சிறுமணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைப் பருவத்திலேயே இறைவன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டும், அடியவரை அடிபணிந்து வணங்கியும் இருப்பாராம். அம்மையார் தமது ‘அற்புதத் திருவந்தாதி’ எனும் அரிய நூலில்,

    பிறந்த மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்

    சிறந்த நின் சேவடியே சேர்ந்தேன்நிறந்திகழும்

    மைஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

    எஞ்ஞான்று தீர்ப்பது இடர்

    என்று குறிப்பிடுகிறார். மங்கைப் பருவம் அடையும்போது பேரழகுப் பெட்டகமாகத் திகழ்ந்த புனிதவதியார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நாகப்பட்டினத்தில் வணிகர் குடியில் வாழ்ந்த நிதிபதி என்பவருக்கு பரமதத்தன் என்ற மகன் இருந்தான். இவனுக்கு புனிதவதியாரை பெண் கேட்டு வந்தனர். தனதத்தரும் இதற்கு இசைவளிக்க திருமணமும் உறுதியானது. செல்வச் செழிப்பு மிக்க தனதத்தனுக்கு ஒரே பெண் குழந்தை. வாழப்போகும் ஊர் மிக அருகில் இருந்தும், அருமை மகளைப் பிரிய மனமில்லை தந்தையாருக்கு. ஆனாலும் மகளை வீட்டோடு வைத்திருப்பது மரபன்று என்பதால் தனதத்தர் தம் வீட்டின் அருகிலேயே ஒரு தனி வீடு அமைத்தார்.  திருமணம் முடிந்த பின்பு பரமதத்தன் நாகப்பட்டினத்தினை விட்டு காரைக்காலுக்கே வந்து அந்த வீட்டில் புனிதவதியுடன் சேர்ந்து வாழ்ந்தான். புனிதவதியாரும், பரமதத்தனும் இல்லறத்தை இனிது நடத்தினர். அம்மையார் வாழ்ந்த அந்த வீடே தற்போது காரைக்காலில் உள்ள அம்மையார் திருக்கோயிலாகும். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்கு வரும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன்னும், மணியும் புத்தாடையும் அளித்து வந்தார்.

    இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனைக் காண வந்த வணிகர் ஒருவர் அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார். பரமதத்தன் அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் அந்த மாங்கனிக்காகவே வந்தவர்போல் பசியினால் வருந்திய நிலையில் அவர் வீட்டிற்குச் சென்றார். புனிதவதியார் அவரை வரவேற்று அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்தார். ஆனால் அந்நேரத்தில் கறியமுது குழம்பு தயாராகவில்லை. சிவனும் சிவனடியாரும் வேறு அல்ல என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் தயிர் சோறுடன் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, மகிழ்ந்து புனிதவதியாரை வாழ்த்திச் சென்றார். அங்குதான் இறைவனின் திருவிளையாடல் ஆரம்பித்துவிட்டது.

    மதிய உணவிற்காக கடையிலிருந்து வீட்டிற்கு வந்த கணவருக்காக புனிதவதியார் உணவு படைத்து, காய்கறிகளுடன் கணவன் கொடுத்தனுப்பிய மாங்கனியையும் வைத்துப் பரிமாறினார். உணவோடு மாம்பழத்தை உண்ட பரமதத்தன் அதன் சுவையில் மயங்கியவன் தான் அனுப்பிய மற்றொரு மாங்கனியையும் எடுத்து வரும்படி கேட்கிறான். அம்மையார் பிரிதொரு கனியை அடியவருக்கு அளித்துவிட்ட நிலையில் கணவன் ஆசையோடு கேட்கும்போது தர இயலாத நிலை அவருடைய தாய்மை உணர்வு வேதனை கொள்ளச் செய்தது. இல்லை என்று சொன்னால் அவன் மனம் ஏமாற்றம் அடையுமே, என்ன செய்யலாம் என்ற தடுமாற்றத்துடன் அறைக்குள் சென்றவர், இறைவனை நோக்கி மனம் உருகி கண்ணீர் விட்டு அழுகிறார். அம்மையின் கண்ணீரைக் கண்ட எம்பெருமான் அம்மையாரின் கரத்தில் ஒரு அதிமதுரக் கனியை அருட்கனியாக அருளினார். அவரும் அக்கனியை எடுத்துச் சென்று மகிழ்வுடன் கணவனுக்குக் கொடுத்தார். அதனை வாங்கிச் சுவைத்த கணவனோ அதன் தேவாமிர்தச் சுவையில் மயங்கி, மூவுலகிலும் கிடைத்தற்கரிய இத்தகைய அற்புதக் கனி எப்படிக் கிடைத்தது, இது நான் அனுப்பிய கனியாக இருக்க வாய்ப்பே இல்லை. அமுதத்தை விட சுவை மிகுந்த இக்கனி உனக்கு எப்படி கிடைத்தது என்று அழுத்தமாகக் கேட்டான். கணவனிடம் உண்மையை மறைப்பது பெரும் பாவம் என்ற கொள்கையுடைய புனிதவதியார் இறையருளால் பெற்ற கனியே அது என்ற உண்மையைச் சொன்னால் கணவன் நம்புவானோ, மாட்டானோ என்ற தயக்கம் ஏற்பட்டாலும் ஈசனருளால் கிடைத்த கனி என்று கூறினார். ஆனால் அம்மையாரின் பெருமையை சற்றும் உணராத பரமதத்தனோ, ஈசனருளால் கிடைத்த கனி என்றால் இதே போன்று மற்றுமொரு கனியை வரவழைத்துக் கொடு பார்க்கலாம் என்றான்.

    புனிதவதியார் கணவனிடம் தான் உரைத்தது பொய்யாகி விடுமோ என்று வருந்தி எம்பெருமானிடம் கண்ணீர் மல்க மீண்டும் ஒரு கனி அருளும்படி வேண்டி நின்றார். அப்போது அம்மையாரின் கரங்களில் மீண்டுமொரு கனி வந்து விழுந்தது. ஆனால் ஐயத்தின் பிடியில் சிக்கிக் கிடந்த கணவனின் கரங்களுக்குச் சென்ற அந்த மாங்கனி அடுத்த சில நொடிகளில் மாயமாய் மறைந்தது. அதிர்ச்சியடைந்த பரமதத்தனோ இப்புனிதவதி சாதாரண பெண் அல்ல. தெய்வப் பெண்ணான இவருடன் வாழ்வது தகாத காரியம் என முடிவு செய்தான்.

    அதற்கேற்ப சில நாட்கள் சென்றபின் பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடு செல்லப்போவதாகக் கூறிச் செல்கிறான். ஆனால் பெரும் பொருள் ஈட்டித் திரும்பியவன் மனைவி இருக்கும் இடத்திற்கு வராமல் பாண்டி நாட்டின் துறைமுகப் பட்டினமான தூத்துக்குடி சென்று அங்கு வேறு ஒரு பெண்ணை மணமுடித்து மகவு ஒன்றையும் பெற்றிருந்தான். தனதத்தன் உறவினர் மூலம் பரமதத்தன் தூத்துக்குடியில் இருப்பதை அறிந்து புனிதவதியாரை அவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். உறவினர்களுடன் சென்ற புனிதவதியாரும் ஒரு பொது இடத்தில் இருந்துகொண்டு பரமதத்தனுக்கு செய்தி அனுப்பினர். ஆனால் பரமதத்தனோ புது மனைவி, குழந்தையோடு வந்து நின்றான். வந்தவன் புதிய குடும்பத்துடன் புனிதவதியாரின் காலில் விழுந்து வணங்கினான். இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில், இதென்ன கூற்று, கட்டிய மனைவியின் காலில் விழுவதா, எங்களுக்கே அவமானமாக இருக்கிறது என்றனர். அதற்கு பரமதத்தனோ  புனிதவதியாரைப் பார்த்து, இவர் பெண் அல்லள், பெருந்தெய்வம் என்பதாலேயே வணங்குகிறேன். அதுமட்டுமல்ல என் குழந்தைக்கும் அம்மையாரின் பெயரான புனிதவதி என்றே சூட்டியிருக்கிறேன் என்றான். அனைவரும் வணங்க வேண்டியவர் இவர் என்றும் உறுதியாகக் கூறினான். இதனைக் கேட்ட புனிதவதியாரும்,

    ஈங்கு இவன் குறித்த கொள்கை

      இது இனி இவனுக்காகத்

    தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி

      கழித்து இங்கு உன் பால்

    ஆங்கு நின் தாள்கள் போற்றும்

      பேய் வடிவு அடியேனுக்குப்

    பாங்குற வேண்டும் என்று பரமர்

      தாள் பரவி நின்றார்.

    அதுநாள் வரை தன் கணவனை தெய்வமாகப் போற்றி வந்த புனிதவதியார் அப்போது கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, அடுத்த நொடியே புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, “சுவாமி! இவனுடைய கொள்கை இதுவாயின், இனி இவன் பொருட்டுத் தாங்கிய இந்த அழகு தசைப் பொதியை நீக்கிச் சொல்லும் மனமும் கடந்து திகழும் ஐயன் திருவடிகளைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினால், மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். தன் பேய் வடிவு பற்றி அம்மையாரே தம் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்ற நூலில்,

    கொங்கை திரங்கி நரம்பெழுந்து

      குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்

    பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர்

      நீள்கணைக் காலோர்பெண்பேய்

    தங்கி அலறி உலறுகாட்டில்

      தாழ்சடை எட்டுத் திசையும்வீசி

    அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள்

      அப்பன் இடந்திரு ஆலங்காடே. 

    என்று பாடுகின்றார்.

    எம்பெருமான் “தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு” என்று அருளிச்செய்தார். பேய்வடிவு பெற்ற அம்மையார் கயிலை சென்று கயிலைநாதனை வழிபட தலையினாலே நடந்து சென்றார். இறைவன் புனிதவதியாரை அம்மையே என்று அழைக்க அம்மையாரும் அப்பா என்று அவர் அடியில் வீழ்ந்து கயிலைநாதனிடம் வேண்டினார்.

    இறவாத இன்ப அன்பு வேண்டிப்

      பின் வேண்டு கின்றார்

    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு

      உண்டேல் உன்னை என்றும்

    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்

      நான் மகிழ்ந்து பாடி

    அறவா நீ ஆடும் போது உன்

      அடியின் கீழ் இருக்க என்றார். 

    காரைக்கால் அம்மையார் அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடினார்.

    இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
    படரும் நெறி பணியாரேனும் சுடர் உருவில்
    என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
    அன்பறா தென்நெஞ் சவர்க்கு    

    என்று தம் நெஞ்சத்தில் சோதிவடிவாய் நீங்காதிருக்கும் அவர்பால் என் அன்பு ஒருபோதும் குறையாது, மாறவும் மாறாது என்ற நெஞ்சுறுதியுடன் நின்றார் காரைக்கால் அம்மையார்.

    காரைக்காலம்மையார் புராணம் சொல்லும் கருத்து

    சமயம் என்பது அறிவைச் சார்ந்தது அல்ல, இதயத்தோடு தொடர்புடையது என்பதை முதன் முதலில் உலகுக்கு எடுத்துக் கூறியவர் அம்மையார். வேள்விகள், விரதங்கள், கடுமையான தத்துவ விசாரணைகள் போன்ற எதுவும் தேவை இல்லை. பெருமானிடம் உண்மையான அன்பு செலுத்துவது மட்டும் போதும், வேண்டுவது அனைத்தையும் தருவான் என்ற கருத்தை உரக்கச் சொன்னவர் அம்மையார்.

    ஓர் அருட்கனி புனிதவதியாரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாயம் மகப்பேறே பெறாத அவரை காரைக்கால் அம்மையாராக மாற்றிவிட்டது. ஆம். அம்மையின் கரத்தில் கிடைத்த அருட்கனியால் பேய் ஆனார். பின் தெய்வமானவர் எம்பெருமான் நடம் பயில அவன் திருவடிக்கீழ் இருந்து பாடும் பேறு பெற்றார். சிவபெருமான் “அம்மையே” என்று அழைத்தருளினமையானும், இவர் திருத்தலையாலே நடந்தருளிய திருவாலங்காட்டை மிதித்தற்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அஞ்சி யருளினமையானும் அறிய முடிகின்றது. காரைக்கால் அம்மையாரைத் தம் குருநாதர் என்கிறார் இவர். அம்மையார் தோன்றிய முந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னே தோன்றியவரான ஞானசம்பந்தப் பெருமான் இறைவன் திருவருள் தாங்கி அந்தணர் குலத்திலே அவதரித்தவர். மூவாண்டிலே உமையம்பிகையின் சிவஞான இன்னமுது உண்ணடிசில் என ஊட்டப்பெற்றவர்.

    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
    மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
    மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
    ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே       

    என்று குலசேகர ஆழ்வார் வித்துவக் கோட்டுப் பெருமானிடம் கூறுவதும் ஈண்டு நோக்கத்தக்கது.

    இறைவன் உமையவளிடம், எல்லா உலகங்களையும், உயிர்களையும் பேணிக் காக்கின்ற தம்மைப் பேணுவது தம் தாயாகிய இவ்வம்மையே என்கிறார். எம்பெருமான் அம்மையே என உய்ய அழைத்ததால்தான் இன்றும் சைவ உலகிலும், புதுவை மாநிலத்திலும் அம்மையார் என்றால் அது காரைக்கால் அம்மையாரையேக் குறிக்கும். உலகில் அனைவரும் தம்மிடம் அழகைக் கேட்க இவ்வம்மையார் மட்டும் பேய் வடிவை வேண்டிப் பெற்றாள் என்றார். இறைவனுக்கோ அவன் அடியாருக்கோ நாம் ஒன்று செய்தால் அது பன்மடங்காகத் திரும்பி நம்மை வந்தடையும் என்ற தத்துவத்தை சேக்கிழார் பெருமான் அருமையாக எடுத்துரைக்கின்றார். சமயக்குரவர்களான சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோருக்கு முன் பதிகம் என்ற வகையில் முதலில் அம்மையார் பாடியதால் அது மூத்த திருப்பதிகம் எனப்படுகிறது. ஆலயங்களில் இருபுறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க, காரைக்கால் அம்மையார் மட்டும் அமரும் உரிமை பெற்றுத் தனிச் சிறப்புக்கு உரியவராகக் கருதப்படுகிறார். காரணம் இவர் தோன்றியிராவிடில் சைவம் இல்லை, மற்ற சிவனடியார்களும் இல்லை என்பதனால் தான். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப்பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் என்றால் அது மிகையில்லை. அப்பர் முதலான சமயக்குரவர்கள் அம்மையார் வகுத்துக் கொடுத்த பாதையில்தான் சென்றுள்ளார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் அம்மையார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறைவனை வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், வெவ்வேறு வகையில் வணங்கினாலும் முழுமுதற் பொருள் ஒன்றே என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் அம்மையார் என்பதே சிறப்பு. அம்மையார் வணிகர் குலத்தில் பிறந்திருந்தாலும் வேதத்தின் மெய்ப்பொருளை முழுமையாக உணர்ந்து, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவிலிகளை நோக்கி, எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் என்று கூறி, தெய்வங்களுக்குள்ளே வேறுபாடுகள் இல்லை, வழிபடு முறைகளிலும் உயர்வு தாழ்வு இல்லை, முழுமுதற் கடவுள் ஒன்றே என்ற வேத சாரத்தைத் தன் எளிய தமிழில் அறிவுறுத்தியவர் அம்மையார். சைவர்கள் திருமாலையும் வணங்குகிறார்கள். தொல் பழம் தெய்வங்களையும் வணங்குகிறார்கள் என்றால் இந்தப் பரந்த மனப்பான்மை வருவதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார் என்பதையும் மறுக்க இயலாது. சைவம் இன்று உலகளாவப் பரவி நிற்பதற்கு முதல் காரணமாக இருப்பவர் அம்மையார் என்பதும் மறுக்கவியலாது!

     

    திருச்சிற்றம்பலம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 23

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 21. பெருமிழலைக் குறும்ப நாயனார்

    கொண்டல்பனி வளர்சோலை மிழலை நாட்டுக்

        கோதில்புகழ்ப் பெருமிழலைக் குறும்ப னார்சீ

    ரண்டர்பிரா னடியவருக் கடியா ராகு

        மாதரவா லணுக்கவன் றொண்டர்க் காளாய்

    மண்டொழுமெண் டருசித்தி வாய்த்து ளார்தாம்

        வன்றொண்டர் வடகயிலை மருவு நாண்மு

    னெண்டிகழு மறைமூல நெறியூ டேகி

        யிலங்கொளிசேர் வடகயிலை யெய்தி னாரே.

    இயற்கை அழகு களிக்கூத்தாடும் திருநகரில் தோன்றிய நாயனார் பெருமான் இவர். தற்போது புதுக்கோட்டை என்று அழைக்கப்படும் நகரின் அண்மையில் அமைந்துள்ள தொன்மையான நாடு மிழலை நாடு. பெருமிழலை என்பது இந்நாட்டின் தலைநகரம். மா, பலா, வாழை, தென்னை, பாக்கு போன்ற வளமான சோலைகள் சூழ்ந்த அழகிய நகரம். இத்தகைய சிறப்பு மிக்க பெருமிழலையில் வாழ்ந்த பெரியவர் மிழலைக் குரும்பனார். குரும்பர் என்ற மரபின் குறுநில மன்னர்கள் அக்காலத்தில் வாழ்ந்திருந்தனர். இவர்கள் வழி வந்தவரே மிழலைக் குரும்பனார். ஊர்ப்பெயரும், நாட்டின் பெயரும் இணைந்து பெருமிழலைக் குரும்பர் என்று இவர் பெயர் வழங்கலாயிற்று.

    சூதம்நெருங்கு குலைத் தெங்கு

     பலவும் பூகஞ்சூழ் புடைத்தாய்

    வீதிதோறும் நீற்றின் ஒளிவிரிய

      மேவி விளங்கு பதி

    நீதிவழுவா நெறியினராய் நிலவும்

      குடியால் நெடு நிலத்து

    மீதுவிளங்கும் தொன்மையது மிழலை

      நாட்டுப் பெரு மிழலை

    சிவனடியார்களுக்குத் தேவையான தொண்டினை அவர்கள் கேட்காமலேயே அவர்தம் குறிப்பறிந்து தொண்டாற்றும் குணம் படைத்தவர் பெருமிழலைக் குரும்ப நாயனார். நாடோறுந் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந்திரவியங்களைக் கொடுப்பவர். அச்சேவையின் இன்பத்தை தனது முதன்மையான கடமையாகக் கருதி நாடினார்.  நம்பியாரூரர் எனும் பெருமகனாரைத் தம் குருநாதராக ஏற்றிப் போற்றியவர். அவரை கையாற்தொழுது, வாயாற் புகழ்ந்து, கருத்தால் எண்ணி நெகிழ்ந்து வழிபடுபவர். நம்பியாரூரரின் திருநாமத்தை உச்சரித்தவாரே மணிகண்ட சேவடியைச் சேர்ந்து உய்யும் உயரிய நெறியைக் கண்டறிந்தவர். இதன் காரணங்கொண்டே அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டமாசித்திகளும் கைவரப் பெற்றார். சிவபெருமானின் திருநாமம் ஐந்தெழுத்தால் ஆனது போல் நால்வர் பெருமக்களின் திருநாமங்களும் ஐந்தெழுத்தால் ஆனது. குருபஞ்சாச்சரம் என்ற திருநாமத்தால் குறிப்பிடுவர். இவ்வரிய அட்டமாசித்திகளை, அப்பூதியடிகள் திருநாவுக்கரசு என்ற குருநாமத்தை எழுதியும், சொல்லியும், இடையறாது தியானித்தும் திருவருளைப் பெற்றார்.

    நாளும் நம்பி ஆரூரர்

      நாமம் நவின்ற நலத்தாலே

    ஆளும் படியால் அணிமாதி

      சித்தியான அணைந்த அதற்பின்

    மூளும் காதலுடன் பெருக

      முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்

    கேளும் பொருளும் உணர்வுமாம்

      பரிசு வாய்ப்பக் கெழுமினார்.

    இவ்வாறு அளவற்ற பக்தியுடன் குரும்ப நாயனார் அடியவர்களுக்குத் தொண்டு செய்தும், குருநாதர் திருவடிகளைத் தொழுதும் நிறைவாக வாழ்ந்துவந்தார். வன்தொண்டர் நம்பியாரூரர் சேரர் தலைநகரான, சேரமான் பெருமாள் நாயனாரால் ஆளப்பட்ட கொடுங்கோளூரை அடைந்தார். திருவஞ்சைக்களத்திலுள்ள இறைவனைத் தொழுது பதிகம் பாடினார். அப்பதிகம் பாடும்வரை தனக்கு நடக்கப்போகும் அற்புத நிகழ்வான திருக்கயிலை வாசம் கிடைக்குமென அறியார் ஆரூரர்.

    அஞ்சைக் களத்து நஞ்சுண்ட

      அமுதைப் பரவி அணைவுறுவார்

    செஞ்சொல் தமிழ் மாலைகள்

      மொழியத்தேவர் பெருமான் அருளாலே

    மஞ்சில் திகழும் வடகயிலைப்

      பொருப்பில் எய்தவரும் வாழ்வு

    நெஞ்சில் தெளியஇங்கு உணர்ந்தார்

      நீடு மிழலைக் குறும்பனார்.

    தம் பதிகத்தின் எட்டாவது பாடலாக,

    வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் 

    விளங்கும் குழைக் காதுடை வேதியனே

    இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் 

    தலை பத்தொடு தோள் பல இற்று விழக்

    கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் 

    கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று 

    அறுத்தாய் கடலங்கரை மேல்மகோதை 

    அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

    என்ற பாடலைப் பாடியபோது எம்பெருமான் கயிலைமால் வரையிலிருந்து வெள்ளானையை அனுப்பி வைத்தார். அந்த வெள்ளானையின் மீதேறி நம்பியாரூரர் கயிலைமால் வரைக்குச் சென்றார். பெருமிழலைக் குரும்பர் தம் யோகநெறியால் சுந்தரர் மறுநாள் கயிலை செல்வார் என்பதையும் உணர்ந்தார். தம் சீடர் அறிந்த இந்த அரிய செய்தி, சுந்தரர் பெருமானுக்கே தாம் மறுநாள் கயிலை செல்லப் போகிறோம் என்று அறியார். ஆனால் இதையறிந்த பெருமிழலைக் குரும்ப நாயனார் தமது குருவான நம்பிஆரூரர் இல்லாத ஊரில் தமக்கென்ன வேலை, கண்ணின் மணியிழந்து ஒளியின்றி வாழும் சில குருடர்களைப்போல தன்னால் வாழ முடியாது என்று உறுதி பூண்டார். தம் அகக்கண்களை இழந்து இருண்ட உலகில் வாழ முடியாது என்று எண்ணினார்.

    மண்ணில் திகழும் திருநாவலூரில்

      வந்த வன் தொண்டர்

    நண்ணற்கு அரிய திருக்கயிலை

      நாளை எய்தநான் பிரிந்து

    கண்ணில் கரிய மணிகழிய

      வாழ்வார் போலவாழேன் என்று

    எண்ணிச் சிவன்தாள் இன்றேசென்று

      அடைவன் யோகத்தால் என்பார்

    இன்றே சிவன்தாள் சென்றடைவேன் என்று உறுதியாக நின்றார். தம் யோகப்பயிற்சியினால் பிரமநாடி வழி பிராணவாயுவைச் செலுத்தி நல்லறிவு மேற்கொண்டு மதிமண்டலத்தில் செலுத்திப் பிரவணத்தார் திறக்கப்பட கபால நடுவாயிலின் மூலம் முதல்வர் திருப்பாதங்களை அடைந்தார். சிவயோக நெறி நின்ற பெருமிழலைக் குரும்ப நாயனார் கருவி காரணங்களை ஒருமுகப்படுத்தி சுழுமுனை நாடி வழியே பிராணவாயுவைச் செலுத்திப் பிரம்மாந்திரம் வழியே சென்று மேலைப் பெருவழிச் சார்ந்து கபாலத்தினைத் திறந்து ஒளி வடிவாகத் திருக்கயிலையைச் சென்று அடைந்தார்.

    நாலு கரணங்களும் ஒன்றாய்

      நல்ல அறிவுமேல் கொண்டு

    காலும் பிரமநாடி வழிக்கருத்துச்

      செலுத்தக் கபால நடு

    ஏலவே முன்பயின்ற நெறிஎடுத்த

      மறை மூலம் திறப்ப

    மூல முதல்வர் திருப்பாதம்

      அணைவார் கயிலைமுன் அடைந்தார்

     

    பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    குருவே சிவம்!

     

    சிவனே சிவஞானி யாதலாற் சுத்த 

    சிவனே யெனவடி சேரவல் லார்க்கு 

    நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் 

    பவமான தின்றிப் பரலோக மாமே

    தெளிவு குருவின் றிருமேனி காண்ட

    றெளிவு குருவின்றிருவார்த்தை கேட்ட 

    றெளிவு குருவின் றிருநாமஞ் செப்ப

    றெளிவு குருரூபஞ் சிந்தித்த றானே

    எனத் திருமந்திரத்திற் கூறுமாற்றால் அறிகிறோம். பிரபஞ்சப் பேராற்றலின் திருவருளை எளிமையாகப் பெறக்கூடிய சிறப்பான சாதனம் குருவருள். குருவின் திருவருளால் வேண்டும் அனைத்தும் பெறலாம். குரு நேரடியாகத் தோன்றாவிட்டாலும், குருவை மனத்தால் நினைந்து வழிபட்டு பெறவேண்டியவற்றைப் பெறலாம். துரோணரை மானசீகமாகக் குருவாகக் கொண்ட ஏகலைவன் வித்தையில் அர்ச்சுணனைவிட ஆற்றல் மிக்கவனாக விளங்கினான்.

    மின்சார விளக்கு எரிவதற்கும், எரியாமல் இருப்பதற்கும் அமுத்தான் (சுவிட்ச்) அவசியத் தேவையாக உள்ளது. நம் ஆன்மா எனும் விளக்கு இறையருள் எனும் ஒளியைப் பெற குருவருள் எனும் அமுத்தான் அவசியமாகிறது!

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 20

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 19. திருநாவுக்கரசு நாயனார் (பகுதி – 1)

     

    திருநாவுக்கு அரசுவளர்

      திருத்தொண்டின் நெறிவாழ

    வருஞானத் தவமுனிவர்

      வாகீசர் வாய்மைதிகழ்

    பெருநாமச் சீர்பரவல்

      உறுகின்றேன் பேருலகில்

    ஒருநாவுக்கு உரைசெய்ய

     ஒண்ணாமை உணராதேன். 

    உழவாரத் தொண்டர் என்று போற்றப்படும், தேவார மூவருள் இரண்டாமவரான திருநாவுக்கரசர் நாயனார் பைந்தமிழோடு பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த பெருமகனார். இவர் சமண சமயம் சார்ந்தபோது, ‘தரும சேனர்’ என்ற பட்டப் பெயரோடு திகழ்ந்தவர். இப்பெருமான் தமிழையும், கலைகளையும் சிவபரம்பொருளாகக் கண்டு மகிழ்ந்து உளம் கனிந்து பாடுகின்றார்.  சிவபெருமானையே ஆசிரியன் என்றும் தமிழன் என்று கூறி மகிழ்வது அழகு. திருநாவுக்கரசு நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றுகின்றார்.

    “தேவாரப்பதிகத்தைப் பாடினபடியால், நீ இனி நாவுக்கரசு என்ற பெயருடன் உலகில் நிலைத்திருப்பாய்” என்று சிவபெருமானார் அசரீரி வாக்கு அருளினார். திருஞானசம்பந்த நாயனார், இந்நாயனாரை ‘அப்பர்’ (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் தாண்டக வேந்தர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
    கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டில், திருவாமூரில், குறுக்கையர் குடி எனும் சைவ வேளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் தம்பதியினருக்கு மூத்த குழந்தையாக திலகவதியார் எனும் திருமகளும், இரண்டாவதாக ஒரு ஆண் மகவும் அவதரித்தனர். இந்த ஆண் மகவுக்கு மருள்நீக்கியார் எனும் திருநாமம் சூட்டப்பெற்றது.

    திருநாவுக்கரசர் அவதரித்த திருமுனைப்பாடி எனும் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தேவாரம் பாடிய மூவர் பெருமக்களான, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரில் இருவர் அவதரித்த தலம் திருமுனைப்பாடி.

    “மண்மேல் நம்மைச் சொற்றமிழ்ப் பாடு என சிவபெருமானே கேட்க ஆலால சுந்தரரும் அருந்தமிழால் பாடினார். கல் மிதக்கச் செய்தும், மறைக்கதவம் திறந்தும், பாம்பு கடித்த பாலகனைப் பாரறிய எழுப்பியும் பெருமானே சால நீ பசித்தாய்” எனக் கூறிக் கட்டமுது கொடுக்கக் கன்னித்தமிழால் கல்லும் கரைந்துருகக் கவி பாடிய நாவுக்கரசுப் பெருமானும், ஆரூரரும் அவதாரம் செய்த நாடு இந்நாடு என்பது பெருஞ்சிறப்பாகும்.

    அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும்

    பிறந்தருள உளதானால் நம்மளவோ? பேருலகில்

    சிறந்த்திரு முனைப்பாடி திறம்பாடும் சீர்பாடு

    என்கிறார் சேக்கிழார் பெருமான். சைவம் சார்ந்து அடியவர் பெருமக்களைப் பாடுவதே தம் பிறவிப் பயன் என்று கருதிய நாவுக்கரசர், ‘தொண்டர் புராணம்’ பாடினார். புகழ்மிக்க சான்றோர்களும் அருளாளர்களும் தோன்றும் நாடு வளம் கொழிக்கும் என்ற வகையில் நாவரசர் திரு அவதாரம் செய்த திருமுனைப்பாடி எனும் பதி வளமோடிருப்பதில் வியப்பேதுமில்லையே?

    மாசற்ற மதியினைப்போல் வளர்ந்து வந்த மருள் நீக்கியாரின் தமக்கை திலகவதியாரின் பன்னிரண்டாம் அகவையில், பண்டைய நாளின் வழக்கப்படி திருமணப் பேச்சு ஆரம்பித்தது. அறிவும் அழகும் நற்குணமும், குடிச்சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற கலிப்பகையார் என்ற வேளாண் குடித்தலைவருக்கு திலகவதியாரை மணமுடிக்க விரும்பி பெரியோர் சிலரை புகழனார்பால் அனுப்பினர். தந்தையாரும் தம் அருமை மகளைக் கொடுக்க இசைவளித்து அனுப்பினார்.

    இச்சமயத்தில் வடநாட்டு மன்னன் ஒருவன் படையெடுத்து வர கலிப்பகையாரும் கடமை பெரிதென வடநாடு நோக்கி படை கொண்டு சென்றவர் நீண்ட நாட்கள் நடந்த போரால் திரும்பவில்லை. இதற்கிடையே நாவுக்கரசரின் பெற்றோரும் நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தனர். பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தனர். போர்க்களம் சென்ற கலிப்பகையாரும் வீர மரணம் அடைந்தார்.

    பெற்றோர் கலிப்பகையாருக்கு மணமுடிக்க இசைந்ததால், தான் அவருக்கே உரியவள் ஆதலால் தன் உயிரை அவர் உயிரோடு இசைவிக்கத் துணிந்தார் அக்கன்னி திலகவதியார் எனும் கற்புக்கரசி. அதுகண்ட மருள்நீக்கியார் தம் தமக்கையார் திருவடிகளில் விழுந்து, தாய்க்குத் தாயான தமக்கையும் உயிர் துறக்கத் துணிந்தால் தாமும் அதற்கு முன் உயிர் துறப்பேன் என்று சபதமேற்றார் மருள்நீக்கி. நெக்குருகி நின்ற திலகவதியாரும் தம்பியார் உளவாக வேண்டும் என்ற விருப்பினால், நூல் தங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத்தவம் புரிய முடிவெடுத்தார்.

    தம்பியார் உளர் ஆக வேண்டும்

      என வைத்த தயா

    உம்பர் உலகு அணைய உறு

      நிலை விலக்க உயிர் தாங்கி

    அம் பொன் மணி நூல் தாங்காது

      அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி

    இம்பர் மனைத் தவம்

      புரிந்து திலகவதியார் இருந்தார். 

    இவ்வம்மையாரையே திருப்புகழ் எனும் தேனமுதத்தில் அருணகிரியார்,

    “மாது புகழை வளர்க்கும் திருவாமூர்” என்று போற்றினார்.

    மனைத்தவம் புரிந்த தமக்கையார் தம் தம்பியாரை கல்வி கேள்விகளில் மிக்க சான்றோனாக வளர்த்தார். தமிழகத்தில் அப்போது சமணம் தலைத்தூக்கியிருந்த காலம். உலக நிலையாமை, செல்வம் நிலையாமை என நிலையாமையையே நிலைக்களனாகக் கொண்டது சமணம். மருள்நீக்கியாரின் வாழ்வியல் சூழலில் ஏற்பட்ட பேரிழப்புகள் அவர்தம் மனத்தில் பெருஞ்சுமையாக நிலையாமையை எண்ணி எண்ணிச் சுழன்றது. நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கையல்லேன் எனத் தேர்ந்து கொல்லாமை மறைந்தொழுகும் சமண சமயம் சாய்ந்தார். சமண சமய நூல்கள், வேத நூல்கள் கற்று ‘தரும சேனர்’ எனும் புதிய பெயரோடு, சமண மதத்துறவியாகவும், அச்சமண மடாதிபதிகளில் ஒருவராகவும் ஆனார். அந்நாளில் பாடலிபுத்திரம் (இந்நாள் கடலூர்) எனும் ஊர் சமண சமயத் தலைவர்களின் தலைமை இடமாகவும் புகலிடமாகவும் இருந்தது. சமண சமயக் கொள்கைகளை விளக்கி மக்களை அச்சமயத்தின்பால் ஈர்த்தார்.

    தம்பியாரின் இந்நிலைக் கண்ட தமக்கையாரோ சிந்தை நொந்தார். மனம் தாளாது இருந்தவர் திரு அதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு ஒரு திருமடம் அமைத்து வீரட்டானப் பெருமானுக்கு திருப்பணி செய்து அப்பெருமானைப் புகழ்ந்து பாடி வழிபட்டு இருந்தார். தம்பியாகிய மருள்நீக்கி சைவம் நீங்கச் சமணம் சார்ந்து வாழும் பெருந்துயரை எம்பெருமானிடம் முறையிட்டு, தம்பி மீண்டும் சைவம் வரல் வேண்டும், அதற்குத் திருவருள் புரிய வேண்டும் என்று அனுதினமும் வேண்டி வழிபட்டு நின்றார்.

     மன்னு தபோ தனியார்க்குக் கனவின்

      கண் மழ விடையார்

    உன்னுடைய மனக் கவலை ஒழி

      நீ உன் உடன் பிறந்தான்

    முன்னமே முனியாகி எனை

      அடையத் தவம் முயன்றான்

    அன்னவனை இனிச் சூலை மடுத்து

      ஆள்வம் என அருளி. 

    சூலை நோயால் மருள்நீக்கியை ஆட்கொள்வோம் என்று திலகவதியாரின் கனவில் தோன்றி அருள்பாலித்துச் சென்றார் சிவபெருமான். தருமசேனராம் மருள்நீக்கியின் வயிற்றில் ஏற்பட்ட சிறிது வலி பன்மடங்காகப் பெருகி சமணத் துறவிகளின் மந்திரங்களுக்கும், மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் உயிர் போவது போன்ற வலியால் துடிதுடிக்கச் செய்தது. தாய்க்குத் தாயான தமக்கையாரின் நினைவு வர அவரை உடனே காண விழைந்தார். நம்பிக்கைக்குரிய ஒரு சமையல்காரரை அனுப்பி தமக்கையாருக்கு செய்தி சொல்லச் செய்தார்.

    நன்று அறியா அமண் பாழி

      நண்ணுகிலேன் எனும் மாற்றம்

    சென்று அவனுக்கு உரை

      என்று திலகவதியார் மொழிய

    அன்று அவனும் மீண்டு போய்ப்

      புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். 

    செய்தி கொண்டு போனவன் தமக்கையோடு வருவான் எனக் காத்திருந்த தருமசேனர் தனியாக வந்தவரைப் பார்த்து திடுக்கிட்டு கேட்டபோது, அம்மையார் அங்கு வர மறுத்த செய்தியைக் கூறினார். சூலை நோயிலிருந்து விடுவிக்க இயலாத சமண மதத்தை நம்பி இனியொரு பயனும் இல்லை என்று உணர்ந்து தமக்கையாரின் திருவடியையே சரணமாக அடைவேன் என்று சூலுரைத்து, அனைத்தையும் விடுத்து, வெள்ளாடை தரித்து திருவதிகைக்குக் கிளம்பினார்.

     அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு

      எய்தி இதற்கு இனி யான்

    எவ்வாறு செய்வன் என

      ஈசர் அருள் கூடுதலால்

    ஒவ்வா இப் புன் சமயத்து

      ஒழியா இத்துயர் ஒழியச்

    செவ்வாறு சேர் திலக வதியார்

      தாள் சேர்வன் என.

    தம்பியாரின் நிலை கண்டு வருந்திய திலகவதியார், அவருக்குத் திருநீறளித்து வீரட்டானப் பெருமானைத் தரிசித்து வரப் பணித்தார். திருக்கோயிலை வலம் வந்து வணங்கி எழுந்த மருள்நீக்கியார் உள்ளுணர்வு உந்த செந்தமிழ்ப் பதிகம் பாடலானார். திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் சிவபெருமான் மேல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்னுந் தேவாரத் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

    நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை

      அன்பு உறுசிந்தையில் நேசம் மிக

    மாற்றார் புரம் மாற்றிய வேதியரை

      மருளும் பிணி மாயை அறுத்திடுவான்

    கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்

      எனநீடிய கோதில் திருப்பதிகம்

    போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்

      போமாறு எதிர் நின்று புகன்றனரால்.

    உடனே சூலைநோய் நீங்கிற்று.

    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

      கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

      பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

      குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

      வீரட்டா னத்துறை அம்மானே. 

    அந்தப் பாடலின் இனிமையில் கரைந்த சிவபெருமான், “செந்தமிழ்ச் சொல் மலர்களால் ஆன திருப்பதிகமாகிய பாமாலையை நீ பாடியமையால் இன்று முதல் உன் நாமம் திருநாவுக்கரசு என ஏழு உலகமும் ஏத்துக” என அசரீரியாக வானில் ஓர் ஒலி ஒலித்தது.

    சிவாலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்து, ஆலயங்கள் அனைத்தும் கவனிப்பாரின்றி செடி கொடிகள் முளைத்து  சிதைந்து போன கட்டடங்களாக ஆன நிலையில்தான் தருமசேனரான மருள்நீக்கியார் சைவத்துக்கு மீண்டார். கோயில் கோபுரங்களில் மரம் வளர்ந்து தகர்த்தது. கோயிலைச் சுற்றிலும் புல்லும் பூண்டும் முள் செடியும் வளர்ந்தன. மக்கள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்ட இந்த நேரத்தில்தான் அப்பரடிகள் சைவம் சார்ந்தார். அது முதல் திருநாவுக்கரச நாயனார் சைவத் தொண்டு செய்யலானார். தம் கரங்களில் புல், பூண்டு அகற்றும் ‘உழவாரம்’ என்ற கருவியை எடுத்துச் சென்று ஆலயத் திருப்பணிகளை செய்து மக்களையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்தினார். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர்.

    திருவதிகை சென்ற தங்கள் சமண மதத் தலைவர் தமக்கையாரிடம் சென்று சைவம் சார்ந்தார் என்ற செய்தியை அறிந்த சமணர் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். பின் பல்லவ மன்னனிடம் சென்று, தருமசேனர் சூலைநோய் என்று பொய் கூறி சைவ சமயம் சேர்ந்ததால் நம் சமண சமயம் தாழ்ந்தது எனக்கூறி அவரைக் கோபமூட்டினர். மன்னனும் தன் ஆணையை மீறிய அவனைத் தண்டித்து ஒறுத்தல் வேண்டும் என்றார். நாவுக்கரசரை கைது செய்து வரும்படியும் ஆணையிட்டார். மன்னனின் ஆணையை ஏற்று அமைச்சர்களும், அதிகாரிகளும் திருவதிகை நோக்கிச் சென்று, நாவுக்கரசுப் பெருமான் திருமடத்தில் அவரைப் பார்த்து, பல்லவ மன்னனின் ஆணையைப் பற்றிக் கூறினர்.

    நாவுக்கரசரும் “மறு மாற்றத் திருத்தாண்டகம்” எனும் செந்தமிழ்ப் பாமாலையால் பதிலளித்தார்.

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

            நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

            இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

            சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

            கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

    ஆனால் அமைச்சர்களும் சேவகர்களும் அப்பரடிகள் திருவடியில் வீழ்ந்து, மன்னவன் ஆணையை நிறைவேற்றாவிட்டாலும், மன்னன் தங்களை தண்டிக்காமல் இருப்பதற்காகவாவது வரவேண்டும் என்று பணிந்து வேண்டினர். அப்பரடிகளும் இறைவன் சிவபெருமான் உடனிருக்க அங்கு செல்வதில் தடையில்லை என்று கூறி பல்லவன் அரண்மனை நோக்கிச் சென்றார். பல்லவ மன்னனோ நாவுக்கரசரை சந்திக்காமலேயே விசாரிக்காமலே தண்டனை அளித்தான்.

    நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்பு கொதிக்க வைக்கும் அறை) அடைத்து வைத்தான். தில்லைக் கூத்தப்பெருமான் திருவடியை நினைந்து வழிபட்டவருக்கு எந்தத் தீங்கும் நேராது உயிர் பெற்றார்.

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே.

    எனப் பாடினார். எட்டு நாட்கள் கடந்து நீற்றறையை நீக்கியபோது இறையருளால் நாவரசர் அன்றலர்ந்த செந்தாமரை போல் புன்னகைத் தவழும் திருமுகத்தோடு காட்சியளித்தார்.

    அடுத்ததாக நஞ்சு கலந்த பாலடிசில் பருகத் தந்தனர்.

    துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
    அஞ்செழுத் தோதில் நாளு மரனடிக் கன்ப தாகும்
    வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
    நஞ்சழ தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.

    அந்த நஞ்சும் அவரை ஒன்றும் செய்யவில்லை.

    அடுத்ததாக யானையை விட்டு மிதிக்கும்படி ஆணையிட்டான். ஆனால் அந்த யானை அவரை வணங்கிச் சென்றது. இதனால் வேறு வழி இன்றி திருநாவுக்கரசு நாயனாரை ஒரு கல்லில் கட்டி கடலில் வீசும்படி அரசன் ஆணையிட்டான்.

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்,
    பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினு,
    நற்றுணை யாவது நமசி வாவே.

    என்று வீரம் பொங்கப் பாடினார் திருநாவுக்கரசு நாயனார். இதனால் கட்டிய கல் பூவாக மாறி கடலில் மிதந்து வந்தது. திருநாவுக்கரசு நாயனாரும் கரை வந்து சேர்ந்தார். சிவபெருமானின் அருளைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனம் மாறி இறுதியில் பல்லவ மன்னனும் சைவ சமயத்தைத் தழுவினான். அப்பரடிகளின் திருவடிகளில் வீழ்ந்து சமணம் விட்டு சைவம் சார்ந்தான். அவனால் உருவாக்கப்பட்ட சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துத் தகர்த்து அக்கற்களைக் கொண்டே ‘குணபரவீச்சுரம்’ என்னும் திருக்கோயில் கட்டினான்.

    தொடரும்

     

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்  – பகுதி 19

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 18. சண்டேசுவர நாயனார்

     “அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழ்ந்துள்ள சண்டேசுவர நாயனார் திருச்சேய்ஞலூர் எனும் சோழ வளநாட்டில் மணியாற்றங்கரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற திருத்தலத்தில் அவதரித்தவர். இவ்வூரில் எச்சதத்தன் என்ற ஓர் அந்தணன் வாழ்ந்தான். பவித்திரை என்பவள் அவனுடைய இல்லத்தரசி. இவர்களுக்கு விசார சர்மா எனும் திருமகன் பிறந்தார். விசார சர்மா தமது இளம் பிராயமான ஐந்து அகவையிலேயே வேத ஆகமங்களின் உட்பொருள்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்ற தீவிர எண்ணம், அவர் உள்ளத்தில் இருந்த சிவாகம உணர்வை வெளிப்படுத்தியது. ஏழு வயதில் அவருக்கு குல மரபின்படி உபநயனம் நடந்தது. வேதம் ஓதும் பயிற்சியில் ஈடுபட்டவருக்கு, ஆசிரியர் வேதத்தின் பொருளை கற்பிக்கும் முன்னரே இவருக்கு நன்கு விளங்கியது.

    ஒரு நாள் விசார சர்மா தன் உடன் பயிலும் வேதம் ஓதும் மாணவருடன் விளையாடச் சென்றார். அப்போது பசுங்கன்றை ஈன்ற பசு ஒன்று ஆயனை முட்டியது. சினம் கொண்ட அந்த ஆயன் அதனை தடி கொண்டு அடித்தான். அதனைக் கண்ட விசார சர்மா அவனைக் கடிந்து கொண்டு மேலும் அந்த பசுவை அடிக்கா வண்ணம் தடுத்து நிறுத்தினார். உலகில் வாழும் உயிர்களில் மேன்மையுடையது பசுக்கள். எம்பெருமானும், எம்பிராட்டியாரும் உலா வரும் விடைத்தேவரின் குலமான பசுவை கருணையே இல்லாமல் அடிக்கின்றாயே என்று கூறி, இனி தாமே பசுவை மேய்க்கச் செல்வதாகவும் கூறிவிட்டார். அதன்படியே காலையிலேயே பசுக்கூட்டங்களை அழைத்து வந்து மேயச் செய்து பின் அவற்றை நிழலில் ஓய்வு கொள்ளச் செய்து, நீர் பருக வைத்து மிக்க அன்போடு நடத்தினார். மாலை மாடுகளை அவரவர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவார். பசுக்களை அன்புடனும், ஆதரவுடனும் பேணிக்காத்ததால் பசுக்கள் முன்னைவிட அதிகமாகப் பால் கரந்ததும் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியளித்தது. விசார சர்மா உள்ளத்திலோ தானே சுரந்திருக்கும் பசுவின் மடியிலிருந்து கொட்டும் பாலை சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து சிவபூசை செய்ய வேண்டும் என்றும் எண்ணம் தோன்றியது. மணியாற்றங்கரையில் வெண்மணலால் சிவலிங்கம் அமைத்தவர், ஆத்தி மர மலர்களையும், தளிர்களையும் சேகரித்து, பாலினால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டி , மலர்களால் அர்ச்சித்து வழிபட்டார்.

    இதனைக் கண்ட ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசார சர்மா பாலை வீணாக்கித் தரையில் கொட்டுவதாகப் பழி கூறினான். அவர்களும் பால் வீணாவதாக நினைத்து, விசார சர்மாவின் தந்தையான எச்சதத்தனிடம் மகனை கண்டிக்கும்படி அறிவுறுத்தினார். எச்சதத்தனும் தன் மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.

    மறுநாள் மாடு மேய்க்கச் சென்ற விசார சர்மா அறியாதவாறு எச்சதத்தன் அவரைப் பின்தொடர்ந்தார். விசார சர்மாவும் வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத் திருமேனிக்கு மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி குடங்களில் பாலை கொண்டு வந்து சிவபூசையைத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைக் கவனித்துக் கொண்டிருந்த ஊரார் சொன்னது சரியே எனத்தோன்ற, கோபங்கொண்டு, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்தார்.  அவர் ஆத்மார்த்தமாக சிவபூசையில் ஈடுபட்டிருந்ததால், எச்சதத்தன் அடித்ததைக் கூட உணரவில்லை.  ஆனால் எச்சதத்தனோ சிவனுக்காக கறந்து வைத்திருந்த பாலை தன் காலால் எட்டி உதைத்ததால் அபிசேகப் பால் முழுவதும் சிந்தியது. அதனைக் கண்டதும் விசார சர்மாவும் தன்னிலை உணர்வு வந்து, சிவபூசைக்கு ஊறு விளைய வைத்ததால் தன்னருகில் இருந்த கழியை எடுத்து எச்சதத்தனின் கால்களை நோக்கி வீசினார்.  அந்தக் கழியானது மழுவாக மாறி எச்சதத்தனின் இரண்டு கால்களையும் வெட்டியது. எச்சத த்தன்அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆனாலும் நடந்தது எதையும் அறியாமல் மீண்டும் சிவலிங்கத்தைப் பூசிப்பதில் கவனம் செலுத்தினார் விசார சர்மா. பக்தியில் கட்டுண்ட சிவபெருமான் உமையோடு விடைமீது தோன்றி, எம்மீது கொண்டிருந்த பக்தியால் தந்தையையே வெட்டிச் சாய்த்த உமக்கு இனி நானே தந்தை என்று அணைத்துத் தடவி உச்சி மோர்ந்தார். இனிமேல் நாம் உண்பனவும் உடுப்பனவும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டீசன் எனும் பதத்தை அளித்து தன்னுடைய திருமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்தார். கால்களை இழந்த எச்சதத்தன் இறையருளால் சிவலோகத்தை அடைந்தார்.

    இறைவனின் அருள்வாக்கின்படி, இன்றும் இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களை சண்டேசுவரருக்கு படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள். சிவபக்தியால் தந்தையையும் கொல்லத் துணிந்த சண்டேசுவரருக்கு ஈசனே தந்தையானார் என்பதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சண்டேசுவரருக்கு தனி இடம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

    .

    சண்டேசுர நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    செம்மை வெண்ணீற்று ஒருமையினார்

      இரண்டு பிறப்பின் சிறப்பினார்

    மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு

      வேதம் முறை பயின்றார்

    தம்மை ஐந்து புலனும் பின்

      செல்லும் தகையார் அறுதொழிலின்

    மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும்

      போற்றும் மறையோர் விளங்குவது.

    பண்ணின் பயனாம் நல் இசையும்

      பாலின் பயனாம் இன் சுவையும்

    கண்ணின் பயனாம் பெருகு ஒளியும்

      கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்

    விண்ணின் பயனாம் பொழி மழையும்

      வேதப் பயனாம் சைவமும் போல்

    மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின்

      பெருமை வரம்பு உடைத்தோ.

    சண்டேசுவர நாயனார் அவதரித்த சேய்ஞலூர் எனும் ஊரின் பெருமையைப் பற்றி பேசும் சேக்கிழார் பெருமான் இவ்வூரில் சிறப்புற்று விளங்கிய அந்தணர்கள் திருநீறு பூசி சிவநெறியில் நிற்கும் தன்மையர். இப்பிறப்பிலே ஞானக்கண் திறக்கப் பெற்று இருபிறப்பாளர் என்று அழைக்கப்படும் தன்மையர். முப்போதும் எரிவோம்பும் பெற்றியர். சுகேத பத்தியம், ஆசுவணீயம், தட்சிணாக்கிளி என்பனவாகிய மூன்று வேள்விகளையும் செய்பவர்கள். நான்கு வேதங்களையும் முறையாகப் பயின்றவர்கள். நாம் ஐந்து புலன்களின் வழிச்செல்கின்றோம். அவ்வூர் பெருமக்கள் தங்கள் கருத்தின் வழிப்புலன்களைச் செலுத்துவோர். ஐம்புலனும் அகத்து ஒடுக்கும் அருட்செல்வர். வேதங்களைத் தானம், ஈதல், ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும், ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர் வாழும் ஊர் என்று சேக்கிழார் பெருமான் எண் அலங்கார வகையில் அருமையாகப் பாடியுள்ளார்.

    பண்ணின் பயனாம் நல் இசையும்

      பாலின் பயனாம் இன் சுவையும்

    கண்ணின் பயனாம் பெருகு ஒளியும்

      கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்

    விண்ணின் பயனாம் பொழி மழையும்

      வேதப் பயனாம் சைவமும் போல்

    மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின்

      பெருமை வரம்பு உடைத்தோ. 

    சோழர்கள் மரபில் முடிசூட்டிக் கொள்வதற்குரிய புனித தலங்களில் சேய்ஞலூரும் ஒன்றாகும். பண்ணின் பயன் நல்லிசை. பாலுக்குப் பயன் இன்சுவை. கண்ணுக்குப் பயன் கண்ணொளி. கற்ற நூல்களின் கருத்து ஐந்தெழுத்து. வானுக்குச் சிறப்பு மழை பொழிவது. வேதத்திற்குப் பயன் சைவம். மண்ணிற்குச் சிறப்பு சேய்ஞலூர் என்கிறார்.

    சூரபத்மன் முதலான அரக்கர்களை ஒடுக்கித் தேவர்களின் துன்பத்தை நீக்கும் பொருட்டு, கயிலை மால்வரையிலிருந்து புறப்பட்டு தெற்கு வந்து இறங்கிய முருகப்பெருமான் மண்ணியாற்றின் தென்கரையில் வந்து இறங்கிய முருகப்பெருமான் விச்வதர்மனால் ஒரு திருநகரை உண்டாக்கினார். அங்கு சிவலிங்கம் அமைத்து சிவபூசை செய்தார். அதனாலேயே இவ்வூர் சேய்ஞலூர் என்று அழைக்கப்பட்டது என்கிறார் ஈரோடு தங்க விசுவநாதன் அவர்கள்.

    திருஆப்பாடி பாலுகந்தீசுவரர் கோயிலில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கருவறையின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பாகும்.

    திருச்சிற்றம்பலம்

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்  – பகுதி 18

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 17. திருநாளைப்போவார் நாயனார்

    நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

    போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

    மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

    மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

     

        நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ

            நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்

        பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்

            பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி

        வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த

            வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற

        மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்

            விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

    சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்ட தொகையில் செம்மையே திருநாளைப் போவாருக்கும் அடியேன் என்று போற்றும் நந்தனார், சோழமண்டலத்தில், கொள்ளிட நதியின் அருகிலுள்ள மேற்காநாட்டில், நீர்வளமும், நிலவளமும் மிக்கதாய் விளங்கிய ஆதனூர் என்ற சிற்றூரில் புலையர் குலத்தில் அவதரித்தவர்.

    பகர்ந்துலகு சீர் போற்றும்

      பழைய வளம் பதியாகும்

    திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன்

      செழுமணிகள் திரைக் கரத்தால்

    முகந்து தர இரு மருங்கும்

      முளரி மலர்க் கையேற்கும்

    அகல் பணை நீர் நன்னாட்டு

      மேற்காநாட்டு ஆதனூர்

    வயல் வளம் நிறைந்த இவ்வூரில் வானுயர்ந்த மாட மாளிகைகள் நிறைந்தும், செல்வத் திருமகளின் பேராசிகளினால் கொழிக்கும் பேறு பெற்ற மக்கள் வாழும் ஊர் என்று போற்றிப் புகழ்கிறார் சேக்கிழார் பெருமான்.

    வயல் வளமும் செயல் படு

      பைந் துடவையிடை வருவளமும்

    வியலிடம் எங்கணும் நிறைய

      மிக்க பெரும் திருவினவாம்

    புயலடையும் மாடங்கள் பொலிவு

      எய்த மலியுடைத்தாய்

    அயலிடை வேறு அடி நெருங்கக்

      குடி நெருங்கி உளது அவ்வூர்.

    நந்தனார் பிறந்த ஆதனூர் எனும் அவ்வூரின் செல்வச் செழிப்பை மட்டுமல்லாமல், அவ்வூரின் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடங்களான புயல் தங்கும் இடங்களும் நல்கிய குடிசைகளையும், புலைப்பாடியின் அழகினையும்  காட்சிப்படுத்திச் சமுதாய வேறுபாடுகளை மன வேதனையுடன் சுட்டிக் காட்டுவதையும் காணலாம்.

    இத்தகைய சேரிப்பகுதிகளின் புலையர்களின் ஊர்த்தலைமையாக பதவியேற்று ஒப்பற்ற தலைவராக வாழ்ந்தவர். உலகியல்பின்படி இல்லாமல் சிவன்பால் அதீத பக்தி கொண்ட செம்மையான சிந்தை கொண்டவர். சிவபெருமானின் மீது சிறுவயது முதலே மாறாத பக்தி கொண்டு திகழ்ந்தவர், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு அருந்தொண்டு ஆற்றி வந்தார். இறைவனின் கோவில்களுக்கு நேரடியாகச் சென்று சிவதொண்டு புரிய முடியாதபோது தம்முடைய இயற்தொழிலொடு இணைந்த சிவதொண்டினை செய்து வந்தார். கூலி வேலை செய்தும், முரசுகளுக்கு தோல் தைத்து கொடுத்தும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, சிவபெருமானுடைய கோயில்களுக்கு பயன்படுத்தும் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார், ஆராதனைப் பொருளான கோரோசனை போன்ற நறுமணப் பொருள்களை இறைவனுக்காகக் கொடுப்பதற்காக, நந்தனார் ஒவ்வொரு நாளும் கோயில்களை நோக்கிச் செல்வார். கோயில் வாயிலில் நின்று, தாம் கொணர்ந்த பொருட்களைக் கொடுத்துவிட்டு, அங்கு நின்றபடியே கோயிலைப் பார்த்து ஆடிப் பாடி மகிழ்வார். கோயிலையும், கோபுரத்தையும் தரிசித்து இன்பமுறுவது அவருக்கு மகிழ்ச்சி.

    நந்தனாருக்கு மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரைத் தரிசித்து, தம்மால் இயன்ற அளவு திருப்பணிகள் செய்து மகிழ வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. பாடல் பெற்ற தலமான திருப்புன்கூர், வைத்தீசுவரன் கோயில் என வழங்கு புள்ளிருக்கு வேளூர்க்கு 2 மைல் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். புன்கு எனும் புங்க மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலம் என்பதால் இது புன்கூர் எனப் பெயர் பெற்றது. நந்தனார் இக்கோயிலை அடைந்தவுடன் அன்பின் மேலீட்டால் உள்ளம் உருகி, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட திருக்கோயிலைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து ஆடிப்பாடி கோயில் முன் நின்றார்.

    அப்போது சிவலோகநாதரின் முன்னால் இருந்த பெரிய நந்தி சிவலோகநாதரைப் பார்க்க முடியாமல் மறைத்துக் கொண்டு இருந்தது. நந்தனார் தாம் தேடி வந்த சிவபெருமானின் தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்று கண் கலங்கி வேதனையுடன் நின்றார். பின்னர் வாசலிலிருந்து திருப்புன்கூர் ஈசனை நினைத்து மனமுருகிப் பாடினார். மனம் கனிந்த சிவபெருமான் நந்தனார் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகியதும் நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது. இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். சிவலோக நாதரைப் ஆடிப் பாடி ஆனந்தக் கூத்தாடியவர், திருக்கோயிலை பன்முறை வலம் வந்தார். பின்னர் அவ்வூரைச் சுற்றி வருகையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார். பள்ளத்தைப் பார்த்ததும் நந்தனார் ஊற்றுக்கேற்ற பள்ளமான அவ்விடத்தைச் சீராக வெட்டிக் குளமாக்கத் தீர்மானித்தார். இரவென்றும் பகலென்றும் பாராமல் சிவநாமத்தைச் சிந்தையிலேகொண்டு தம்முடைய உடல் வலிமையால் அவ்விடத்தில் குளத்தை வெட்டி முடித்த பின்புதான் மன நிறைவோடு ஆதனூருக்கு திரும்பினார்.

    இவ்வாறு பல தலங்களுக்குச் சென்று, தொண்டு புரிந்து வந்த நந்தனாருக்குத் தில்லை சிதம்பர நடராசரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ஆனால் மிகப்பெரிய கோயிலான அதில் வெளியில் இருந்து ஆடலரசனை தரிசிக்க முடியாது என நினைந்து வருந்தினார். ஆனாலும் இரவும், பகலுமாக தில்லை நாதரையே எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும் ‘நாளைப் போவேன்’ என்று துணிவார். ஆனால் பொழுது புலர்ந்ததும், அக்கால கட்டுப்பாட்டினை நினைந்து புறப்படாமல் நின்று விடுவார். மறுபடியும் அவரது உள்ளம் உந்த, ‘நாளைக்குப் போகலாம்’ என்று ஆறுதல் அடைவார். மீண்டும் ஆவல் எழும் போதெல்லாம் “நாளைப் போவேன்” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். இவ்வாறு நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒவ்வொரு நாளாகக் கழித்துக் கொண்டிருந்தார். இதனால் எல்லோரும் நந்தனாரை திருநாளைப் போவார் என்று அழைத்தனர்.

    தில்லை செல்லாவிட்டால் தம் வாழ்நாள் வீண் என்ற எண்ணம் நந்தனாருக்கு ஏற்பட, ஒருநாள் துணிவு கொண்ட நெஞ்சத்தோடு தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையை அடைந்தவர், கோவிலின் மதிற்சுவர் அருகே வேத ஒலியும், வேள்விப் புகையும் வருவதை உணர்ந்தார். கோவிலுக்குள் சென்று இறைவனின் திருநடனத்தைக் காண்பதற்குத் தமக்கு தகுதி இல்லையே என்று மனமுருகியவர் மதி‌லை வணங்கி, இரவும் பகலும் திருமதி‌‌லையே வலம் வந்துகொண்டிருந்தார். சோர்வு மிகுதியால் கோவிலின் அருகே படுத்து உறங்கிவிட்டார்.
    அப்போது நந்தனாரின் கனவில் தோன்றிய நடராசர், நந்தனே உன் விருப்பப்படி உமக்கு அமைக்கப்பட்ட செந்தீயில் மூழ்கி எழுந்து முப்புரிநூலோடு நம் காட்சி காண வருவாய் என அருள் செய்தார். அதே சமயத்தில் அங்குள்ள தில்லைவாழ் அந்தணர்கள் கனவிலே தோன்றி என்னை வழிபட்டு மகிழும் நந்தனார் “மதிலின் புறத்தே படுத்திருக்கிறான்” நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து என் சந்நிதிக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.
    துயிலெழுந்த நந்தனார் இறைவனின் அருளை எண்ணி வியந்தவர் ஆனந்தக் கூத்தாடினார். மறுநாள் தில்லைவாழ் அந்தணர்கள் மகிழ்ச்சியோடு எழுந்து நடராசப் பெருமான் பணித்தபடி மதிலின் புறத்தே இருந்த நந்தனாரைக் கண்டு “அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம்” பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் “நெருப்பிடை மூழ்கி எழுக” என்று வேண்டிக் கொண்டனர். “இறைவனின் ஆணைப்படி நடக்கட்டும்” என்று நந்தனார் கூறினார்.

    அந்தணர்கள் திருமதிலின் தெற்கு வாயிலுக்கு புறத்தே நெருப்பை மூட்டி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.  மூட்டிய தீயினை வலம் வந்து நடராசப் பெருமானை சிந்தையில் நிறுத்தி தீயினுள் மூழ்கி எழுந்த நந்தனார் உருத்திராட்சமாலையும், முப்புரி நூலும் தரித்த தேகப்பொலிவுடன் திருவெண்ணீறு அணிந்து மாமுனிவர் கோலத்துடன் தீயிலிருந்து வெளிப்பட்டார். நந்தனார் இறைவன் ஆணை வழி உருவாக்கப்பட்ட செந்தீயில் மூழ்கி எழுந்தபோது நந்தனார் பிரம்மனைப்போல் எழுந்தார் என்றார் சேக்கிழார். தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, அகமகிழ்ந்து அவரை வாழ்த்தி வணங்கினர். வானவர் மலர் மாரி பொழிந்தனர். சிவகணங்கள் வேதம் முழங்கினர். நான் மறைகள் ஒலித்தன. தில்லைவாழ் அந்தணர்கள் உடன் சென்றார் திருநாளைப் போவார் நாயனார். தம்மை கனவில் அழைத்த கூத்த பெருமான் சந்நிதியை நோக்கிச் சென்றார். பெருமானார் நடமாடும் மன்றுள் சென்றார். யாரும் நந்தனாரைக் காணமுடியவில்லை. கூத்த பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

    தில்லை வாழ் அந்தணரும் உடன்

      செல்லச் சென்று எய்தி

    கொல்லை மான் மறிக் கரத்தார்

      கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி

    ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு

      உய்ய நடம் ஆடும்

    எல்லையினைத் தலைப்பட்டார்

      யாவர் களும் கண்டிலரால்.

     

    திருநாளைப்போவார் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    பிறந்த குலத்திற்கும், இறை அன்பிற்கும் தொடர்பில்லை என்று நிரூபித்தவர் திருநாளைப் போவார் நாயனார்.

    ஐயரே அம்பலவர் அருளால்

      இப் பொழுது அணைந்தோம்

    வெய்ய அழல் அமைத்து உமக்குத்

      தர வேண்டி என விளம்ப

    நையும் மனத் திருத் தொண்டர்

      நான் உய்ந்தேன் எனத் தொழுதார்

    தெய்வ மறை முனிவர்களும் தீ

      அமைத்த படி மொழிந்தார்

    ஐயர் என்பது பிறப்பு வழி வருவதல்ல. வாழ்வில் உயரிய செந்நெறியால் பெறுவது என்பதே நம் தமிழர்களின் கொள்கை. ஒரு புறம் மாட மாளிகையையும், பிறிதொருபுறம் குடிசைகளும் இருப்பதனை சமுதாய வேறுபாடுகளாகக் காட்சிப்படுத்துகிறார் சேக்கிழார் பெருமான். 12-ம் நூற்றாண்டில் வரலாற்றுத் தகவலாகப் பதிவு செய்யப்படும், ஊர் எல்லையில் வயற்காட்டினை ஒட்டி அமைந்த சேரிக்குடில்களைப் பற்றி எடுத்துக்காட்டுகிறார். மிகப்பழமையான வீட்டின் கூரைகளின் மீது கரைக் கொடிகள் படர்ந்திருக்கும். கோழிக் குஞ்சுகளும், நாய்க்குட்டிகளும் வலம் வந்து கொண்டிருக்கும். கரிய நிறமுடைய சிறுவர்கள் தங்கள் இடுப்பில் இரும்பினாலான அரைஞாணைக் கட்டிக்கொண்டுள்ளனராம்.  இத்தகைய சேரி வாழ்க்கை முறையை இன்றும் காண முடிவதும் வேதனைக்குரிய செய்தியாகும்.

    அன்றைய சமுதாய அமைப்பின் காரணமாக மிகச்சிறந்த சிவபக்தரான நந்தனார் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. வெளியே நின்று அழுது தொழுது இசையால் பாடிப் பெருமான் காட்சி கிடைக்கவில்லையே என சிந்தை நொந்த சமுதாயக் கொடுமையை விளங்கச் செய்கிறார். சேக்கிழார் பெருமான் ஐயர் என்ற சொல்லாட்சியை, தாழ்த்தப்பட்டவர்களாகத் தீண்டத்தகாதவர்களாக மக்கள் நினைத்தவர்களையே ஐயரே என அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பிறப்புவழி ஐயர்களாகக் கருதப்பட்டவர்களைக் கொண்டே அழைக்க வந்தார். பிறப்பு வழி அந்தணர்களாக யாரையும் ஐயரே என்று விளக்கவில்லை.

    திருநாளைப்போவார், தனது சாதியின் காரணமாக சமூகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இறைவனின் தாமரைப் பாதங்களில் மகிழ்ந்த ஒரு சிறந்த பக்தர். கோயில்களுக்கு வெளியே எங்கு கண்டாலும் நின்று, பாடுவார், பாடுவார், ஆடுவார், எங்கும் நிறைந்திருக்கும் அந்த மகிமையில் மகிழ்ச்சி அடைவார். ஆனந்தத்தினால் ஆடல் பாடல்கள் புண்ணியம் என்பது,

    நிருத்த மெந்தைமுன் யாவர் நிகழ்த்தினும்

     விரித்த பானு வயுதம் விரிகதிர் 

    பொருந்து தேரிற் புலவ ரரம்பையர்  

    கருத்தி னாடகங் காண்பர் சிவபுரி.

    நாயன்மார்களில் பண்ணார்ந்த இன்தமிழால் இசைத்தொண்டு செய்தவர்கள், திருநாளைப்போவார், ஆனாயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பரமனையே பாடுவார் ஆகிய நால்வர் ஆவர்.

    திருச்சிற்றம்பலம்.

     

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 17

     

    63 நாயன்மார்களின் வரலாறு  – 16.  உருத்திர பசுபதி நாயனார்

    பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும்

        பசுபதியா ரெனுமறையோர் பணிந்து செந்தே

    னங்கமல மடுவினிடை யல்லு மெல்லு

        மகலாதே யாகளமா யமர்ந்து நின்று

    திங்கள்வளர் சடைமுடியா னடிகள் போற்றித்

        திருவெழுத்து முருத்திரமுந் திகழ வோதி

    மங்கையிட முடையபிரா னருளான் மேலை

        வானவர்க டொழுமுலகின் மன்னி னாரே.

     

    சோழ வளநாட்டில் உள்ள திருத்தலையூர் எனும் ஊரில் அந்தணர் குடியில் பிறந்தவர் பசுபதி எனும் சிவனடியார். அனுதினமும் தாமரைத் தடாகத்தில், கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு, இரு கைகளையும் உச்சிமேல் குவித்துக் கொண்டு இரவும் பகலும் முறை வழுவாது உருத்திர பாராயணம் செய்து வந்தவர். வேதம் எனும் அறிவு நூல், வட மொழியில் உள்ள, ரிக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களை உள்ளடக்கியதாகும். அதர்வணம் என்பது மற்ற மூன்று வேதங்களின் தொகுப்பாகும். இந்த மூன்று வேதங்களின் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதம். ஏழு காண்டங்களை உடைய இந்த யஜூர் வேதத்தின் மையத்தில் உள்ள காண்டத்துள் பதினொரு அனுவாகங்களை உடையது திருஉருத்திரம் என்பது. 101 வரிகளை உடைய இதில் 51வது வரியில், ‘சிவாய’, ‘சிவதராய’ என்ற திரு ஐந்தெழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படுகிறது. வேதத்தின் கண்மணி ஐந்தெழுத்து என்பதாம். அவ்உருத்திரத்தை பிரார்த்தனை செய்து வந்ததால் இந்நாயனார் உருத்திர பசுபதி நாயனார் ஆனார். பின்னாட்களில் இந்த உருத்திரமும் வேதத்தில் சேர்க்கப்பட்டது.

    மறையின் பயனாக உருத்திர மந்திரம் திகழ்வதைச்  சேக்கிழார் பெருமான்,

    அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை

    வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே  திருமலர்

    பொகுட்டிருந்தவன் அனையவர் சில நாள்

    ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.

    என்றார். அன்போடும், மகிழ்வோடும் உருத்திர பாராயணம் செய்து சிவபெருமானின் திருவடியைச் சென்று அடைந்தார் உருத்திர பசுபதி நாயனார். சேக்கிழார் பெருமான், அருந்தவப் பயனான வேத பாராயணம் செய்வோருக்கு பக்தியும் ஈடுபாடும் மிகமிக அவசியம் என்பதை,

    தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி  நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்”

    என்று மொழிகிறார். அந்த வேத மந்திரத்தை நியதியுடன் ஓதிய நிலையோடு பெருமானது “ஆடு சேவடி அருகுற அணைந்தனர்”  என்கிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

    “உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்” என்று சேக்கிழார் மகிழ்கிறார்.

     

    உருத்திர பசுபதி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    “உருத்திர பசுபதிக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப் பெற்றவர் இந்நாயனார் பெருமான். இந்நாயனார் அவதரித்த தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்கள் உள்ளன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் என இரு இடங்கள் இவ்வாறு உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள சிவாலயங்களில்  உருத்திர பசுபதி நாயனாரது மூர்த்தம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    அன்றாட வாழ்வில் அறிந்தும், அறியாமலும் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகச் சொல்லப்படுவது உருத்திர மந்திரம் என்பர் பெரியர். அதனைச் செய்வோரும் செய்விப்போரும் அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறுவர். அதுமட்டுமின்றி பிணிகளிலிருந்து விடுபட்டும், நீண்ட ஆயுளைப் பெறுவார். மக்கட் செல்வமும் பெறுவர் என்பது போன்று அளவிட முடியாததாகப் பயன்களைப் பெறுவர் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தம்மைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்காமல் பிழை பொறுக்குமாறு வேண்டுதலை அளிக்கிறது.

    புரட்டாசி மாத அசுவினி நன்னாளில், உருத்திர பசுபதி நாயனார் சிவபெருமானது திருப்பாத கமலங்களை அடைந்ததை முன்னிட்டு அந்நாளில்  அவரது குருபூசை  பலதலங்களில் நடைபெறுகின்றன.

    தமிழ் வேதமாகிய தேவாரத்தின் திருத்தாண்டகத்தில்,

    இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி 

    யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் 

    பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி 

    நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே

    என்பதைக் காணலாம்.

    திருச்சிற்றம்பலம்

     

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்  – பகுதி 16

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 15 முருக நாயனார்

    மன்னுதிருப் புகலூர்வாழ் முருகனாரா

        மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார்

    சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து

        திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக்

    கன்னிமதிற் கழுமலநா டுடைய நாத

        காதன்மிகு மணங்காணுங் களிப்பினாலே

    யின்னல்கெட வுடன்சேவித் தருளான் மீளா

        திலங்கு பெரு மணத்தரனை யெய்தி னாரே.

    சோழநாட்டில் திருப்புகலூர் என்ற ஊர் எல்லையில்லாப் புகழ் கொண்ட ஊர். அப்பரடிகள் பன்னெடுநாட்கள் தங்கித் தொண்டு செய்து வந்த ஊர். சித்திரை சதயத் திருநாளில் பூம்புகளூர் புண்ணியன் திருவடி சார்ந்த இடம். நம்பி ஆரூரருக்கு, செங்கல் தங்கக் கட்டியாக மாறிய அற்புதம் நிகழ்ந்த இடம். இங்கிருந்த நாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பரடிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்க நாயனார் தங்கியிருந்ததாகச் சேக்கிழார் பெருமான் பாடியருளினார். இந்து சமய ஆய்வு மாநாடு நடைபெற்ற இடம் இது. இத்தகைய சீர்மிகு திருப்பதியில் தோன்றியவர் முருக நாயனார் எனும் பெரியார். மறையவர் குலத்தில் தோன்றியவர் இவர். முப்போதும் சிவத்திருமேனி தீண்டும் பேறு பெற்றவர். ஞான நெறியில் நின்ற இவர் சிவபெருமான்பால் உருகும் மனத்தால் வழிபாடு செய்யும் பேராளர். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்கின்ற நான்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிலே இட்டுக்கொண்டு வந்து, தனியிடத்திலிருந்து, அறுவகையான திருமாலைகள் கட்டி, அத்தலத்திலுள்ள வர்த்தமானீச்சரம் என்னும் ஆலயத்தில் அருள்பாலிக்கின்ற பரமசிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தும், பஞ்சாட்சர மந்திரத்தை ஓதியும் வழிபடுபவர்.

    ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண்

      புகலூர் அது தன்னில்

    மான மறையோர் குல மரபின்

      வந்தார் முந்தை மறைமுதல்வர்

    ஞான வரம்பின் தலை நின்றார்

      நாகம் புனைவார் சேவடிக் கீழ்

    ஊனம் இன்றி நிறை அன்பால்

      உருகு மனத்தார் முருகனார்.

    புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
    அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
    எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
    நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.

    என்பது திருமந்திரம்.

    பூவொடு நீர் சமந்தேத்தி என்பார் அப்பரடிகள்.

    பூக்கை கொண்டு அரண் பொன்னடி போற்றிலார்

    காக்கைக்கே இறையாகி கழிவாரே என்பார் அப்பர்

    ஞானசம்பந்தப் பெருமானை தம் நண்பராகப் பெற்றவர் முருக நாயனார். இவர்தம் மலர்த் தொண்டை ஞானசம்பந்தர் தம் தேவரத்தில் போற்றினார். முருக நாயனார் பெருமான் அலங்கரித்து தூர நின்று பார்த்துப் பார்த்து மாற்றியமைத்து கண்கள் குளிரக் கண்டு களிப்பவராம் இந்நாயனார்.

    இப்படி நாளும் நாளும் மலர் தொண்டு செய்து ஞானசம்பந்தப் பெருமான் திருமண நாளில் அப்பெருமானோடு சிவசோதியில் கலந்தார்.

    முருக நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    பூக் கொய்து மாலைதொடுத்துச் சிவனுக்குச் சாத்தல் என்பது பெரும் புண்ணியமாம். சிவபெருமானுக்கு உரியனவெனச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பலவகைப்பட்ட மாலைகள் செய்து, சிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், பஞ்சாட்சரம் செபித்தலும், மிகச்சிறந்த புண்ணியமாம்.

    மரப்பூக்கள்  – மந்தாரம், கொன்றை, சண்பகம்

    செடிப்பூக்கள்  – நந்தியாவட்டம், அலரி, மல்லி

    கொடிப்பூ   – சம்பங்கி, சாதிமுல்லை

    அறுவகை மாலைகள்

    கருக்கிக் கட்டுவது இண்டை

    இணைத்துக் கட்டுவது மாலை

    தண்டிற்கட்டுவது கண்ணி

    தொகுத்துக் கட்டுவது தொடை

    பிணைத்துக் கட்டுவது பிணையல்

    கோர்ப்பது கோவை

    என நால்வகைப் பூக்களையும் அறுவகையாகத் தொடுத்து ஆறு காலமும் அலங்கரித்து வழிபாடு செய்வார் முருக நாயனார். மலர் வழிபாட்டிற்கு இன்றியமையாதது.

     நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவாநித்தலுமெம் பிரானுடைய கோயில்புக்குப்

    புலர்வதன்மு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

    தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்று

    மலைபுனல்சேர் செஞ்சடையெம்மாதீ யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே.

     

    பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்

    நாக்கைக் கொண்டர னாம நவில்கிலா

    ராக்கைக் கேயிரை தேடி யலமந்து

    காக்கைக் கேயிரையாகிக் கழிவரே.

    என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும்,

    முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்

    பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ்

    சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ

    ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே.

    என்னும் திருவாசகத்தானும்,

    நிலத்திற் றிகழ்ந்த நறுமலரு நீருற் பவித்த போதெவையும்-

    புலத்தி னழுந்தா வன்பினொடும் போதானந்தன் கழற்க ணிந்தோர்-

    மலத்தி னநாதி முத்தன்மல வயிரி யுறையுஞ் சிவலோகத்-

    தலத்திற் புகுந்து நலத்தகைய தலைவராகி நிலவுவரால்.

    என்னும் சிவபுண்ணியத் தெளிவானும் உணரலாம்.

    இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்முருக நாயனார். இவர் விதிவழுவாது சிவனிடத்து இடையறாத மெய்யன்போடும் இப்புண்ணியத்தைச் செய்தமையாலேயே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குத் தோழராகிய பெரும்பேற்றைப் பெற்றவரானார்.

    ஏந்து முலகுறு வீரெழி னீலநக் கற்கு மின்பப்

    பூந்தண் புகலூர் முருகற்குந் தோழனைப் போகமார்ப்பைக்

    காந்துங் கனலிற் குளிர்ப்படுத் துக்கடற் கூடலின் வாய்

    வேந்தின் றுயர்தவிர்த் தானையெப் போதும் விரும்பு மினே.

    என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவந்தாதியிற் போற்றுவதைக் காணலாம்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 15

    63 நாயன்மார்களின் வரலாறு – 14. மூர்த்தி நாயனார்

    “மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் போற்றுகின்ற, 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்த்தி நாயனார், சிவபெருமானின் இலிங்கத் திருமேனியில் சந்தனக் காப்பு செய்வதற்கு சந்தனக் கட்டைகள் கிடைக்காது தம்முடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்.

    அப் பொற் பதிவாழ் வணிகக்

      குலத்து ஆன்ற தொன்மைச்

    செப்பத் தகு சீர்க் குடி

      செய்தவஞ் செய்ய வந்தார்

    எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து

      ஏறுவார் தாள்

    மெய்ப் பற்று எனப் பற்றி

      விடாத விருப்பின் மிக்கார்

    சிவபெருமானுக்குத் தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்து வந்த நாயன்மார்களின் வரிசையில் மூர்த்தி நாயனார் சொக்கநாதரைத் தவிர மற்றொரு எண்ணமேதும் இல்லாத சற்று வேறுபட்ட சிந்தை கொண்டவர். மதுரை சொக்கநாதருக்கு சந்தன காப்பிடுவதற்கு, தினந்தோறும் அபிசேக‌, அலங்கார‌த்திற்கான‌ சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது அன்றாட கடமையாகக் கொண்டிருந்தவர். இந்த திருப்பணிக்குப் பகை அரசர் இடையூறு செய்தும் மூர்த்தி நாயனார் மனந்தளர்ந்து விடாமல் சிவனாருக்குச் சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர்.

    தென்பாண்டி நாட்டின் தலைநகரமாம் மதுரைத் திருநகரில், வைசியர் குலத்தில் அவதரித்தவர் மூர்த்தி நாயனார். பெரும் வணிகராக இருந்த போதிலும் தினந்தோறும் சொக்க‌நாத‌ருக்கு சந்தனக் காப்பிடுவதற்கு, சந்தனத்தை அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைத் தமது அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தவர்.

    வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம்

        வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத்

    தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த வூறுந்

        தவிர்ந்தமணர் வஞ்சனையுந் தவிர மன்ன

    னிழந்தவுயி ரினனாக ஞால நல்க

        வெழில்வேணி முடியாக விலங்கு வேட

    முழங்குபுக ழணியாக விரைநீ றாக

        மும்மையுல காண்டருளின் முன்னி னாரே.

    துறவு நெறி நின்ற இந்நாயனார் பெருமான் சிவபெருமானுக்குச் செய்யும் பல்வேறு தொண்டுகளில், ஐயனைக் குளிர்விக்கும்பொருட்டு சொக்கலிங்கப் பெருமானின் இலிங்கத் திருமேனியில் சந்தனக் காப்பு செய்து வழிபாடு செய்வது அவருடைய முக்கியமானக் கடமையாகக் கொண்டிருந்தார்.

    ஒரு சமயம் வ‌டுகக் கருநாட்டு‌ ம‌ன்ன‌ன் ஒருவ‌ன் மண்ணாசையால் ம‌துரையை நோக்கி நால்வகைப் படையெடுத்து வந்து பாண்டியனை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். சந்தனச் சோலை சூழ்ந்த செந்தமிழ் மதுரையைத் தலைநகராக்கி அரசு புரியலானான். கருநாடக மன்னனான இவன் சமண சமயத்தைச் சார்ந்ததால், சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களைச் சமண சமயத்திற்கு மாற்ற முற்பட்டான். அவ்வாறு மாறாத சைவ சமயத்தவர்க்குப் பல வழிகளில் கொடுமைகள் புரிந்தான். சிவாலயங்களுக்குத் திருப்பணிகள் நடைபெறாமல் தடுக்கப் பல வழிகளில் துன்பத்தையும் கொடுத்து வந்தான். அடியார்கள் ஆற்றொண்ணாத் துன்பத்திற்கு ஆளாகக் காரணமானான்.

    அவ்வூரில் புகழ் பெற்று விளங்கிய மூர்த்தி நாய‌னாருக்கும் கொடுமைகள் பல செய்தான். எனினும் அவர் சொக்கநாதருக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியை இடைவிடாது தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார்.
    அவ‌ர் செய்து வ‌ந்த‌ இறைத் தொண்டுக்கும் இடர்கள் பல செய்தான். பெருமான் திருப்பூச்சுக்குத் தேவையான சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு சதி செய்தான். அப்படிச் செய்தால் அவ‌ர் ம‌ன‌ம் மாற‌லாம் என்றும் திட்ட‌மிட்டான்.  மதுரை முழுவதும் எங்கு தேடியலைந்தும் சந்தனக்கட்டை கிடைக்காமல் தம் உயிர் மூச்சான எம்பெருமானுக்கு சந்தனக் காப்பு செய்யும் பணிக்கு இடையூறு வந்துவிட்டதை எண்ணி நொந்து போனார். தொண்டுக்கு துணை நிற்க வேண்டிய மன்னனே இத்தகைய துன்பம் தருவது எத்தகைய கொடுமையான செயல்?

    நாள் முழுக்க அலைந்து திரிந்து மிகவும் சோர்வுடன் கோயிலுக்குத் திரும்பினார். மனம் மிகவும் கவலையுற்று கோயிலில் சந்தனம் அரைக்கும் கல்லின் அருகே நின்று கொண்டிருந்தார். கல்லைப் பார்த்தவர் அடுத்து சந்தனம் அரைக்கும் தன் கரங்களைப் பார்த்தார். அப்போது ‘எம்பெருமானே, சந்தனக் கட்டைதான் கிடைக்கவில்லை, ச‌ந்தனம் அரைக்கும் இந்தக் கட்டையின் முழங்கைகள் இருக்கின்றனவே. தன் கரங்களையே சந்தனக் கட்டையாகக் கருதிச் சந்தனக் கல்லில் தன் முழங்கையை வைத்துத் தேய்த்தார். தன்னுடைய இரண்டு முழங்கைகளையும் சந்தனம் உரைக்கும் கல்லில் வைத்து உரைக்கத் தொடங்கினார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து கல்லில் உரைத்துக் கொண்டே இருந்தார். அவருடைய முழங்கைகளில் தோல் கிழிந்து எலும்பு நொறுங்கி உள்ளிருக்கும் சதை வெளியே வந்தது. சந்தனக் கல் முழுவதும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது.  இத‌ற்குமேல் சொக்க‌நாத‌ரால் பொறுக்க‌ முடிய‌வில்லை.

    நட்டம் புரிவார் அணி நற்றிரு

      மெய்ப் பூச்சு இன்று

    முட்டும் பரிசு ஆயினும்

      தேய்க்கும் கைமுட்டாது என்று

    வட்டம் திகழ் பாறையின்

      வைத்து முழங்கை தேய்த்தார்

    கட்டும் புறந்தோல் நரம்பு

      என்பு கரைந்து தேய

    என்பார் இந்நிகழ்வை எடுத்துரைக்கும் கவிமொழியில், சேக்கிழார்  பெருமான்.

    கருங்கல்லும் கரையும் வண்ணம்  இரத்தம் கொட்ட, எலும்பு நொறுங்க, சதை கிழிந்து தொங்க மூர்த்தியார் செய்யும் செயல் கருணை வடிவான கண்ணுதல் பெருமானுக்கும் வானொலி வழி ஒலித்தார்.

    “மெய்யன்பனே, என்பால் கொண்ட மாறாத அன்பினால் இத்தகையக் காரியம் செய்யத் துணிந்தாயே. நிறுத்து உன் செயற்பாட்டை. உனக்குத் துன்பம் தந்தவன் வலிய கைப்பற்றியிருக்கும் இந்நாடு நாளை உன் வசப்படும். அநீதியை விலக்கி நீதியை நிலைநாட்டி நல்லாட்சி புரிந்து, திருத்தொண்டும் புரிந்து இறுதியில் எமது திருவடி சேர்வாயாக” என்று சிவபெருமான் அச‌ரீரியாக‌க் கூறினார். மூர்த்தி நாயனார் அதைக் கேட்டு கல்லில் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவருடைய கைகள் முன்போல் மாறின.  அவ்வடியார் மேனியும் ஒளிபெற்றது. சந்தனம் சொக்க‌நாத‌ர் கோயில் முழுவதும் மணத்தது. அவ்வடியாருக்குத் தீங்கு செய்த மன்னனோ அன்றிரவே மாண்டான். பொழுது விடிந்தது. மன்னருக்கு உரிய ஈமக்காரியங்கள் அமைச்சர்களால் நிறைவேற்றப்பட்டன. அடுத்து மன்னருக்கு உரிய இடம் அவருக்கு ஏதும் வாரிசுகள் இல்லாததால் வேறு ஒருவரால் நிரப்பப்பட வேண்டியதாகியது.

    அன்றைய நாட்களில் இப்படிப்பட்ட சூழலில் மன்னனைத் தேர்ந்தெடுக்க பட்டத்து யானையை அலங்கரித்து அதன் கண்களைக் கட்டி அதன் துதிக்கையில் ஒரு மாலையை கொடுத்து விடுவர். யானை யார் கழுத்தில் மாலையைப் போட்டு அவனைத் தூக்கி தன்மீது அமர்த்திக்கொண்டு வருகிறதோ அவரே மன்னனாவார். அந்த மரபுப்படி யானை அலங்கரிக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, வலம் வரச் செய்தனர். வலம் வந்த யானையும் கோயிலில் ஒரு பகுதியில் நின்றிருந்த மூர்த்தியார் கழுத்தில் மாலையிட்டு அவரைத் தூக்கி தன் பிடரியில் அமர்த்தியது. மக்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. அமைச்சர்களும் அகமகிழ்ந்து மூர்த்தியாரை வணங்கி ஆட்சித் தலைமை ஏற்க வேண்டினர். அதற்கு மூர்த்தியாரும் திருநீறே திருமுழுக்காகவும், உருத்திராக்கமே அணிகலன்களாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் விளங்க வேண்டும். அதற்கு உடன்பாடு என்றால் செய்யலாம் என்றார். அதற்கு அமைச்சர்களும், அறிஞர்களும் சான்றோர்களும் தங்கள் விருப்பம் எதுவோ அதன்படியே செயல்படலாம் என்றனர்.

    வையம் முறை செய்குவன்

      ஆகில் வயங்கு நீறே

    செய்யும் அபிடேகமும்

      ஆக செழுங்கலன்கள்

    ஐயன் அடையாளமும் ஆக

      அணிந்து தாங்கும்

    மொய் புன் சடைமாமுடியே

      முடி ஆவது என்றார். 

    அதன்படி மூர்த்தி நாயனாருக்கு மணிசூடப்பெற்றது. அவர்தம் ஆட்சியின் சின்னமாகத் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடி ஆகிய மூன்றும் திகழ்ந்தது. பொய்ச்சமயமாகிய ஆருகதம் நீங்கவும், மெய்ச்சமயமாகிய சைவசமயமே எங்கும் விளங்கவும், பெண்ணாசை சிறிதுமின்றி, நெடுங்காலம் திருநீறு உருத்திராக்கம் சடைமுடி என்கின்ற மூன்றினாலும் அரசாண்டு, பின் பன்நெடுங்காலம் ஆட்சிபுரிந்து வையகம் காத்து மக்கள் மகிழ வாழ்ந்து எம்பெருமான் திருவடி நிழல் சார்ந்தார்.

     

    திருமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    மதுரையம்பதி எனும் மூர்த்தி நாயனார் பிறந்த இம்மண்ணின் பெருமையை மாணிக்கவாசகர், திருவாசகத்தில் எடுத்துரைப்பதைக் காணலாம்.

    பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

    பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,

    விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,

    கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை

    மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு

    புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!

    எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். “மதுரை மண் சுமந்த” – என்று மதுரை மண்ணின் பெருமையைச் சொல்கிறார் மாணிக்கவாசகர். அந்த மண்ணை சிவ பெருமான் தூக்கிச் சுமந்தார். வேறு எந்த ஊர் மண்ணையும் தூக்கிச் சுமக்கவில்லை. வந்தியம்மை என்ற மூதாட்டிக்காகப் பெருமான் பிட்டுக்கு மண் சுமந்து அடிபட்ட தலம்.

    “மண் சுமந்த கூலி கொண்டு” – முதலில் சுமந்தார், பின் கூலி கொண்டார்.

    கடம்பவனக் காட்டில் முளைத்தெழுந்த சொக்கலிங்கப் பெருமானை தேவர்கள் பூசை செய்ததனை ஒருநாள் இரவு வணிகன் ஒருவன் கண்டு அப்போது நாடாண்ட குலசேகரப் பாண்டியன் கேட்டு அக்கடம்பவனக் காட்டைத் திருத்தி கோயிலும், நகரமும் அமைத்தான். அப்பொழுது சிவபெருமான் தம் தலையிலிருந்த அமுதத்தைத் தெளித்து புனிதமாக்கியதால் மதுரை என்ற பெயர் உண்டாயிற்றாம். இந்தக் கடம்பவனம், மதுராபுரி, நான்மாடக்கோயில், திருவாலவாய் எனப் பல பெயர்களைக் கொண்டுள்ளது. மூவர் பெருமக்களாலும் பாடல் பெற்ற அருட்தலம். பொற்பலகை கொடுத்து இசை பாடவைத்து சொக்கலிங்கப் பெருமான் நீலகண்ட யாழ்ப்பாணருக்கு அருள் செய்த அருட்தலம். மங்கையர்கரசியார், நெடுமாறர், குலச்சிறையார் ஆகிய மூன்று நாயன்மார்கள் வாழ்ந்த சிவப்பதி.

    சந்தனக்காடு மலிந்த பொதியமலை தென்றலை கொடுத்து மகிழ்வு செய்யும் அழகிய நகரமும் இதுவே.

    சூழும்இதழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள்

    தாழ்வு இன்றி என்றும் தனி

      வாழ்வது அத் தையல் ஒப்பார்

    யாழின் மொழியில் குழல்

      இன்னிசையும் சுரும்பும்

    வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்

    சிவபெருமானுக்குச் சந்தனக்காப்புக் கொடுத்தல் மட்டுமே தமது சீரிய கடமை என்று சிவபக்தியில் திளைத்திருந்த மூர்த்திநாயனார் வாழ்ந்திருந்தார்.

    மும்மைப் புவனங்களின் மிக்கது

      அன்றே அம் மூதூர்

    மெய்ம்மைப் பொருளாந் தமிழ்

      நூலின் விளங்கு வாய்மை

    செம்மைப் பொருளுந்

      தருவார் திருஆலவாயில்

    எம்மைப் பவந் தீர்ப்பவர்

      சங்கம் இருந்தது என்றால்.

    சிவபெருமானுக்குச் சாத்தும் பொருட்டுச் சந்தனக் காப்புக் கொடுத்தல் உத்தம சிவபுண்ணியமாம். எம்பெருமானின் திருமேனி குளிர்வது போன்று அனைத்து உயிர்களும் குளிர்விப்பதற்கு ஒப்பாகும். சந்தனக் குழம்போடு பனிநீர் குங்குமப்பூ கோரசனம், கத்தூரி பச்சைக் கற்பூரம் முதலிய நறுமணப் பொருட்களைக் கொட்டி இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து வழிபட்டால் சிவலோகத்தில் இன்புற்றிருக்கலாம்.

    சிவனுக்குச் செய்யும் தொண்டுகள் எல்லாவற்றுள்ளும் கந்தம் சாத்தலே சிறந்தது என்கிறது சிவாகமம்.

    சாத்துக சாந்துபனி நீர்பளிதங் குங்குமமுஞ் – சேர்த்தியுளத் தாதரவு செய்து.”

    “கூட்டுவித்தா ரும்பளிதங் குங்குமஞ்சாந் தம்பனிநீர் – தீட்டும் விதி தன்னைத் தேர்ந்து.”

    சோமவார விரத கற்பத்தினும்,

     “சுகந்த கந்தஞ் சுலவிய லேபன

    முகந்தலிங்கத் தொருதினஞ் சாத்தினோ 

    ரிகந்து பாவ மிமையவர் கோடியாண் 

    டகந்தெ ளிந்தங் கரன்பதி நண்ணுவார்.”

    எனச் சிவபுண்ணியத்தெளிவினும் கூறுதல் காணலாம்.

    இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மூர்த்தி நாயனார். இவர் தாம் நாடோறும் தவறாது செய்யச் சங்கற்பித்த இத்திருத்தொண்டை, அது பற்றி அரசன் தமக்குச் செய்த இடுக்கண் மிகுதி கண்டும் தவறாது செய்தமையானும், சந்தனக் கட்டை பெற முடியாத இடர் வந்த பொழுது தமது முழங்கையைச் சந்தனக் கல்லிலே தேய்த்த பெருந்தன்மையானும், தாம் நாடாளும் அரசராய் பொறுப்பேற்றபோதும் துளியும் செருக்கு உறாது இப்பணியைத் தாமே செய்தமையானும், தெளியப்படும். இவர் தமது சரீரத்திற் சிறிதும் பற்றின்றி, சிவனே தமக்கு அனைத்துமாவார் என்று துணிந்து, அவரையே இடைவிடாது பற்றி நின்று தொண்டு செய்த மெய்யன்பர் என்பது இச்செயற்கருஞ் செயலால் உணரலாம்.

    சிவனடியார்களுக்குத் தீங்கு செய்தோர் நரகத்து வீழ்ந்து வருந்துவர் என்பதை தெளிவுற மொழியும் இந்நாயனார் புராணம்.

    காட்டுமுள் ளொளியைக் கண்ட கண்ணனைக் கயந்து சொல்லக் 

    கேட்டவர் கேட்பித்தார்கள் கெழுமின ருடன்பட் டார்முன்

    மூட்டின ரென்ற வைத்து மூடருங் கூடிமூழ்கி 

    மீட்டிடு வாருமின்றி யெரிநிர யத்துள் வேவார்

    எனச் சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால், உணரலாம். சிவனடியாருக்கு இடுக்கண் செய்த அந்த மன்னனும் இவ்வாறே நரகத்து வீழ்ந்தமை தெளிவாதலால், சிவனடியார்களுக்கு மறந்தும் தீங்கு நினையாமல் இருக்க வேண்டுமென்பதை உணர்த்துகிறது. இதனை, உருத்திராக்கம்

    தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய்

    காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய்

    வேண்டுவார் வேண்டியதே யீவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லா

     மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன்றானே

    என்றார் திருநாவுக்கரசு நாயனார்.

    இம்மூர்த்திநாயனார் அரசர் வாழ்விற் சிறிதும் பற்றிலர் ஆயினும்; சிவபெருமானின் ஆணைக்கு அடிபணிந்து, அவரது திருவருள் வழி நின்று, தமது ஆளுமையால் உலகம் உய்யச் செய்யும் எண்ணத்தால் இசைந்தருளினார்.

    கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனே 

    லண்டம் பெறினு மதுவேண்டேன் – றுண்டஞ்சேர்

     விண்ணாளுந் திங்களாய் மீக்குலக மேழினுக்குங் 

    கண்ணாளா வீதென் கருத்து

    என்றார் காரைக்காலம்மையார்.

    அருடரு சீர்த்தில்லை யம்பலத் தான்ற னருளினன்றிப் 

    பொருடருவானத் தரசாதலிற் புழு வாதனன்றாஞ்

    சுருடரு செஞ்சடை யோனரு ளேற்றுற விக்கு நன்றா 

    மிருடரு கீழேழ் நரகத்து வீழு மிருஞ்சிறையே

    என்றார் நம்பியாண்டார் நம்பி.

    மெய்யுணர்வு உடையார்க்கு திருநீறும், சாந்தமும், உருத்திராக்கமும் ஆபரணமாகும் என்பதை விளங்கச் செய்தவர் மூர்த்தி நாயனார். இதன் பெருமையை,

     ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த

    பாரெல்லாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை

    சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி

    நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்டவன்றே

    என்னும் திருவிளையாடற்புராணச் செய்யுளால் உணரலாம்.

    திருச்சிற்றம்பலம்

    Share