Category: நறுக்..துணுக்…

  • நயமான நான்கு மணிகள்!

    -மேகலா இராமமூர்த்தி

    நான்மணிக்கடிகை எனும் தமிழ் நீதிநூல் ஒன்றிருக்கின்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படும் இது இரத்தினத் துண்டுகள் போல் நான்கு அருமையான நீதிகளைச் சொல்லிச்செல்கிறது. அதனால் பெற்ற காரணப்பெயரே நான்மணிக்கடிகை என்பது.

    அதிலிருந்து ஓர் அழகிய பாடல்!

    கொடுப்பின் அசனங் கொடுக்க – விடுப்பின்
    உயிரிடை யீட்டை விடுக்க வெடுப்பிற்
    கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
    வெகுளி கெடுத்து விடல். 

    ஒருவருக்கு நாம் ஒன்றைக்கொடுக்க விரும்பினால் அவர்கள் வயிறுநிறைய உணவைக் கொடுக்க வேண்டுமாம். ஏன்? போதும் எனும் நிறைவு ஒருவனுக்கு உணவில் மட்டுந்தான் ஏற்படும். மற்ற எதிலும் ஏற்படுவதில்லை!

    ஒன்றை விட்டுவிட வேண்டுமென்றால் உயிர்மீதுள்ள பற்றை விற்றுவிட வேண்டுமாம். நல்ல கருத்துதான்! ஆனால் அஃது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்றே தோன்றுகிறது. பின்னே…நூறுவயது வாழ்ந்தாலும் மனிதர்க்கு வாழ்ந்தது போதும் எனும் எண்ணமும் நிறைவும் வரக்காணோமே! 

    மனிதனுக்கு உயிர்மீதிருக்கும் பற்றினை வள்ளுவப் பெருந்தகை அழகான உவமை ஒன்றின் வாயிலாக விளக்குவார். சூதாடுகின்ற ஒருவன் அதில் எத்தனை முறை தோற்றாலும் அதனைப் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் விருப்பதோடு சூதாடுவதைப் போல, (தருமபுத்திரனைவிடவா இதற்குச் சான்று வேண்டும்?), எத்தனை துன்பம் உயிருக்கு வந்தாலும் உயிர்மீதிருக்கும் பற்றும் காதலும் மனிதர்க்குப் போவதில்லை என்கிறார். 

    இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற் றுயிர். 

    அடுத்து, நாம் ஒருவருக்கு உதவவேண்டும் என்று விரும்பினால் நம் சுற்றத்தாரிலேயே ஏழ்மை நிலையில் இருப்பவர்க்கு உதவ வேண்டும் என்கிறது நான்மணிக்கடிகை. ஆனால் நடைமுறை என்ன? சுற்றத்தாரில் யார் நம் ’ஸ்டேட்டஸுக்கு’ ஏற்றாற்போல் இருக்கிறார்களோ அவர்களோடு மட்டும் நெருங்கியிருப்பதும், உடன்பிறந்தாரே ஆயினும் ஏழைகளாக இருந்தால் அவர்களைக் கழற்றிவிடுவதுமே இந்நாளில் அதிகம் காணக்கூடியதாய் இருக்கின்றது.

    அவ்வளவு ஏன்…இல்லானை இல்லாளுக்கும் பிடிப்பதில்லை; ஈன்றெடுத்த தாய்க்கும் பிடிப்பதில்லை. அப்புறம் மற்றவருக்கு எப்படிப் பிடிக்கும்?

    ஆனால், அறவழியில் நடக்கவிரும்புவோர் வறுமையில் உழல்வோர்க்கு உதவிசெய்து அவர்களைக் கைதூக்கி விடுவதையே விரும்புவர் என்ற அடிப்படையில்தான் இந்தப்பாடலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    சரி…ஏதாவது ஒன்றை நாம் ஒழிக்க வேண்டுமென்றால் எதை ஒழிப்பது?

    இதற்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லக்கூடும். சிலர் கடனை ஒழிக்க வேண்டும் என்பார்கள்; வேறுசிலர் தமக்குத் தொல்லைதரும் எதிரிகள் கூட்டத்தை ஒழிக்கவேண்டும் என்பார்கள். ஆனால் நான்மணிக்கடிகை சொல்வது, நம்மிடம் இருக்கும் சினத்தை நாம் ஒழிக்கவேண்டும் என்பதே.  இந்தச் சினம்தானே எல்லாத் தீச்செயல்களுக்கும் ஆதிமூலமாய் அமைகின்றது?

    ”சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்று அதன் இயல்பைக் கூறும் வள்ளுவர்,

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லும் சினம் என்று எச்சரித்திருப்பதையும் இங்கே நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    எனவே நம்மை நாடிவரும் இரவலர்க்கு உணவுதந்து, நிலையில்லா மனித உயிர்மீது நாம் கொண்டிருக்கும் பற்றைச் சற்றே குறைத்து, வறுமையில் வாடும் சுற்றத்தார்க்கு நம்மால் இயன்றஅளவில் உதவி, நண்பரையும் பகைவராக்கும் சினத்தை ஒழித்து நன்முறையில் வாழ்ந்தால் வீடும் நாடும்  நலம்பெறும் என்பதே நான்மணிக்கடிகை நமக்குச் சொல்லும் நன்னெறி!

     

     

     

    Share
  • இராணுவ வீரர்களின் தற்கொலை?

    பவள சங்கரி

     

    எல்லைப் புறங்களில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர்கள், பணியில் இறப்பதைவிட தற்கொலை செய்து இறப்பது அதிகமாக உள்ளதாம். இந்தப்போக்கு 2011இல் 100 பேர் பணியில் இறந்தால், தற்கொலை செய்து இறந்தவர் எண்ணிக்கை 110 ஆக இருந்தது. ஆனால் 2016/17 களில் இந்த நிலை பன்மடங்கு அதிகரித்து பணியில் இறப்பவர்கள் எண்ணிக்கை 700 ஆகவும் தற்கொலை செய்து இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக சுமாராக 950 ஆக உள்ளது. இந்த தற்கொலைக்கான காரணங்கள், குடும்பத்தை விட்டு வெகு நாட்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் மன உளைச்சல் என்று கூறப்படுவது கருத்தில் கொள்ளவேண்டியது. அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு இதற்கான சரியான தீர்வைக் காண்பதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்தது என்பதை உணர வேண்டும்!

    இராணுவத்திலிருந்து சமீபத்தில் சுமாராக 5000 வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிதாக வீரர்கள் சேரவில்லை என்று தலைமைத் தளபதி கூறியுள்ளது வேதனை அளிக்கக்கூடியது. அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்கள், குறிப்பிட்ட காலங்கள் நம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை சட்டமாக்குவதுதான் இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும். மேற்கத்திய நாடுகளில் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேற்கத்திய நாடுகளில் பொது மக்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளாவது இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
     
    இலண்டன் மாநகரின் பட்டத்து இளவரசர் என்றாலும், அமெரிக்காவின் குடியரசுத் தலைவரின் மகன்களாக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி!
     
    இந்தியக் குடிமக்களும் இது போன்று இராணுவத்தில் பணியாற்ற கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம்.
    Share
  • 4,500 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி!

     

    பவள சங்கரி

     

    செருமனியில் உள்ள மாஃக்சு பிளான்க் என்ற அறிவியல் – மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும், உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வன உயிர்க்கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய மொழி சார்ந்த ஆய்வின் முடிவில், தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பாக தமிழ் மொழி மிகப்பழமையான மொழி என்றும், செழுமையோடு இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமசுகிருத மொழியும் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் தமிழ் மொழியின் இலக்கியங்கள், காப்பியங்கள், கல்வெட்டுகள் போன்றவைகள் சிதையாமல் உள்ளது போன்று சமசுகிருத்தத்தில் இல்லையென்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக கி.மு. முதலாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிற்குச் சென்று அந்நாட்டையே உருவாக்கியவள் தமிழ் நாட்டுப் பெண்ணாக இருக்கலாம் என்பதற்கும் இந்த ஆய்வு ஆதாரமாக இருக்கின்றது!

    Share
  • வேலியையே மேயும் பயிர்கள்?

     

    பவள சங்கரி

     

    நீரவ் மோடியின் பஞ்சாப் தேசிய வங்கியின் மோசடி அலையில் விஜய் மல்லய்யாவின் 9,000 கோடி மறக்கப்பட்டது. இந்தியாவிற்கு மல்லய்யாவை கொண்டு வருவதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்ற நடுவர் சொன்ன கருத்துகள் வேதனைக்குரியது .. கடன் அளித்த வங்கித் துறையினரே பல தவறுகள் செய்திருக்கும்போது விஜய் மல்லய்யாவை எப்படி குற்றவாளி என்று அறிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கு தொடர்ந்த இந்திய அரசு வங்கி நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர்தான் இந்த வழக்கை தொடுத்தனரா என்ற ஐயம் எழுகிறது. வங்கித் துறையின் செயல்பாடுகள் இந்திய பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியதாக உள்ளது.

    Share
  • காச நோய் …

    பவள சங்கரி 

     

     

    காச நோயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய விலை அதிகமான வெளிநாட்டு மருந்துகள் நமது அரசிடம் 1000 பேருக்கு மட்டுமே உள்ள நிலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1,30,000 பேர் (நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள்) இந்த மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு அந்த நிறுவனங்கள் அனுமதி தர மறுக்கின்றனவாம். இந்தியாவில் இந்த மருந்தை தயாரிப்பது மட்டுமே விலை குறைவாகக் கிடைப்பதற்குரிய தீர்வாக அமையும். மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களின் மற்ற தயாரிப்புகளின் மீது கட்டுப்பாடு விதித்தாவது அல்லது உலக சுகாதார மையம் மூலமாகவாவது தக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும்…. 🙁

    Share
  • இன்றைய இளைய தலைமுறையினரின் பரிதாப நிலை ..

    பவள சங்கரி

    இந்தியாவில் 14 முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களில் 25% பேர் தங்களுடைய சொந்தத் தாய்மொழியில் படிக்க முடியாதவர்கள். இதில் 76% பேர் பணத்தைக்கூட கணக்குப் பார்க்கத் தெரியாதவர்கள். இதில் 36% பேருக்கு தங்கள் நாட்டின் தலை நகர் எது என்று கூடத் தெரியவில்லை என்று 2017 ஆம் ஆண்டுக்கான கல்விக் கணக்கெடுப்பு (Annual status Education report) அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களால் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ என்ன பயன் வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை ..

    Share
  • காச நோய் கொடுமை ..

    பவள சங்கரி

    டி.பி. எனும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 500 உரூபாய் வழங்குவதற்கான திட்டத்தை மத்ய அரசு வகுத்துள்ளது. உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் இருந்தால் தயவுசெய்து இந்தச் செய்தியை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே. ஆண்டு தோறும் 28 இலட்சம் மக்கள் நம் இந்தியாவில் மட்டும் இந்த காச நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 17 இலட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுகிறார்களாம். அரசு இலவசமாக இதற்குரிய மருத்துவத்தை ஆரம்பச் சுகாதார நிலையம் மூலமாக வழங்கிவந்தும் பாதிக்கப்பட்ட 11 இலட்சம் பேர்கள் தங்கள் நோயைக் குணப்படுத்திக்கொள்ள முன்வருவதில்லை. இதில் 25 இலட்சம் பேருக்கு மாதம் 500 உரூபாய் உதவித் தொகையாக அளிக்கவும், 2025க்குள்ளாக 90% காச நோயை ஒழிக்கவும், 2030க்குள் காச நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை 95% தடுத்து நிறுத்தவும் மத்ய அரசு முடிவு செய்து திட்டம் வகுத்துள்ளது வரவேற்கத் தக்கது.

    Share
  • துப்புரவில் சாதனை!

    பவள சங்கரி

    மைசூர் மாநகரத் துப்புரவுப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து சாதனை படைத்து இன்று நாட்டிற்கே வழிகாட்டிகளாக ஆகியுள்ளனர்! இன்று இந்தியாவிலேயே மைசூர் மாநகரம் மிகவும் சுத்தமான நகராக மாறியுள்ளது மட்டுமல்லாமல் இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் பல இலட்சங்களை வருமானமாகப் பெற்று வருகின்றனர். நகர் முழுவதையும் பல பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்கும், ஒரு குழுவை அமைத்து, அவரவர்க்குரிய தேவையான இயந்திரங்களைக்கொண்டு சரியானத் திட்டமிடல், மறுசுழற்சி முறை, தொய்வில்லாத செயல்பாடுகள் மூலமாக சாத்தியமாக்கி சாதனைப் படைத்துள்ளார்கள்! தூய்மைப்பணியில் இரட்டை வருமானம் பார்க்கும் சாதுர்யமான நண்பர்களை உளமாரப் பாராட்டுவோம்!

    Share
  • அந்தாதி – தமிழின் இனிமை!

    பவள சங்கரி

    முதல் வரியின் இறுதிச் சொல் அடுத்த வரியின் முதற் சொல்லாக வருவதுதான் அந்தாதி எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று கருதியே அந்தாதி இலக்கியம் தோன்றியுள்ளது. தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.
    குறிப்பிடத்தக்க அந்தாதிகள் இதோ:

    (1) முதல் திருவந்தாதி – பொய்கை ஆழ்வார்
    (2) இரண்டாம் திருவந்தாதி – பூதத்தாழ்வார்
    (3) மூன்றாம் திருவந்தாதி – பேயாழ்வார்
    (4) சடகோபரந்தாதி – கம்பர்
    (5) திருவரங்கத்தந்தாதி – பிள்ளைப் பெருமாளையங்கார்
    (6) கந்தரந்தாதி – அருணகிரிநாதர்
    (7) திருவருணை அந்தாதி – எல்லப்ப நாவலர்
    (8) அபிராமி அந்தாதி – அபிராமி பட்டர்
    (9) திருக்குறள் அந்தாதி – இராசைக் கவிஞர்

    11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்

    (1) அற்புதத் திருவந்தாதி – காரைக்காலம்மையார்
    (2) சிவபெருமான் திருவந்தாதி – கபிலதேவ நாயனார்,
    (3) சிவபெருமான் திருவந்தாதி – பரணதேவ நாயனார்
    (4) கயிலைபாதி காளத்தி
    பாதி அந்தாதி – நக்கீர தேவ நாயனார்
    (5) திருவேகம்பமுடையார்
    திருஅந்தாதி – பட்டினத்தடிகள்
    (6) திருத்தொண்டர் திருஅந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
    (7) ஆளுடைய பிள்ளையார்
    திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
    (8) பொன்வண்ணத்தந்தாதி – சேரமான் பெருமாள் நாயனார்
    19ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள் தோன்றியுள்ளன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்?

    பவள சங்கரி

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மிக எளிமையான உடையில் இருந்தாராம். கையிலே ஒரு தடியும், மேனியில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சென்றாராம். சுவாமியின் எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவருடைய தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடியிள்ளார். சிறிதும் கோபம் கொள்ளாத சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் தவழும் முகத்துடன், “அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது” என்று சொல்லி விட்டு சங்கடம் ஏதுமின்றி அவ்விடம்விட்டு அகன்றாராம். இதில் நாம் உணர வேண்டியது 2 செய்திகள். ஒன்று, சுவாமிகள் தமது சொந்த மண்ணின் மீது கொண்ட மதிப்பு! அடுத்தது தம் நன்னடத்தையின் மீது கொண்ட அதீத நம்பிக்கை!

    Share
  • நீலிக்கண்ணீர் என்றால் என்ன?

    பவள சங்கரி

    வணிகக் குலத்தைச் சேர்ந்த நீலி என்கிற பெண் தீய எண்ணம்கொண்ட தன் கணவனால் கொல்லப்படுகிறாள். பின் அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவள் பேயாகி, மனைவி போன்ற தோற்றத்துடனே வருகிறாள். கையில் ஒரு கரிக்கட்டையைக் குழந்தையாகக் கொண்டு மாய லீலைகள் செய்கிறாள். அப்பா என்று குழந்தையும் அன்பாக விளிக்கிறது. அவனோ அச்சத்தில் உடன் செல்ல மறுக்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். ஊர் மக்கள் அவள் பேய் என்பதை அறியாமல் அவனை நீலியோடு சென்று குடும்பம் நடத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அது தன் மனைவி அல்ல, பேய் என்று அவன் அச்சத்தோடு வாதிடுகிறான். ஆனால் மக்கள் அதை நம்பாமல் ஒருவேளை அவன் பேய் என்று சந்தேகிக்கும் அந்தப் பெண்ணால் கொல்லப்பட்டால் தாங்களும் தீக்குளிப்போம் என்று சமாதானம் செய்கிறார்கள். ஆனால் பேயான நீலி அவனைக் கொன்றுவிட அந்த மக்கள் சொன்னதுபோல் தீப்பாய்கிறார்கள். இங்கிருந்து தான் நீலிக்கண்ணீர் என்ற பதம் வருகிறது. நீலி தன்னைக் கொன்ற கணவனைப் பழி வாங்கினாலும், எந்த பாவமும் செய்யாத சிலரும் உயிர் துறந்தது வசைக்குரிய ஒன்றாக மாறியிருப்பதைக் காண வேண்டியிருக்கிறது. பக்திக்காலத்தில் பெரும்பாலும் நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதையும், வாணிகர்கள் துன்பம் அடைந்ததற்கும் குறியீடாகச் சொல்லப்பட்ட கதையாகக் காணமுடிகிறது.

    படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்
    பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்
    கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்
    ………………
    (விவேக சிந்தாமணி—பாடல் 30)

    Share
  • தீபாவளி பலகாரம்!

    பவள சங்கரி

    தீபாவளி நெருங்குகிறது.  கடைகளில் பலகாரம் வாங்குவோர் கவனம்! டெங்கு, விசக்காய்ச்சல்கள் என நோய்கள் தீவிரமாகியுள்ள இந்த சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!

    பதிவு பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே இனிப்பு வகைகள் வாங்கவேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவுரை! தரமான மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும். கலப்பட பொருட்கள், அதிகமான நிறமிகள் உபயோகிக்கக்கூடாது. பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பாளர் பெயர் போன்றவைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிக்கும் இடம், விற்கும் இடம் சுத்தமாக ஈ, கொசு, பூச்சிகள் வராமல் காக்கப்பட வேண்டும். இது பற்றி புகார் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அல்லது மாநில உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கோ புகார் அளிக்கலாம்.

    Share
  • முகநூல் மோகம்?

    பவள சங்கரி

    உலக அளவில் முகநூல், சிட்டுரை போன்ற இணைய தளங்களை அதிக அளவில் பயன்படுத்துவோர்  இந்தியர்களே! இதில் பெண்களே மிக அதிகமாக  பங்கேற்கிறார்களாம். பத்திற்கு எட்டு பெண்களுக்கு இதன் மூலமாக பல்வேறு விதமான தொல்லைகள் ஏற்படுகிறதாம். குறிப்பாக நட்பு வட்டத்தில் இருப்பவர்களாலேயே அத்தகைய பல பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது…  எந்தவொரு புதிய கண்டுபிடிப்புகளாலும் நன்மை, தீமை இரண்டும் சம அளவிலேயே இருக்கின்றன. அதை உணர்ந்து எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் பயன்படுத்துவது அவரவர் கையில்தான் உள்ளது என்பதை விளங்கச் செய்கிறது..

    Share
  • தம்படம் மோகம்!

    பவள சங்கரி

    எச்சரிக்கை! தம்படம் (செல்ஃபி) 4 முறைகளுக்கும் மேல் எடுப்பவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறார்களாம்.. அதன் பிறகு தன்னிலை மறந்து ஓடும் ரயில், மலை முகடுகள், அதள பாதாளம், பொங்கி வரும் அலைகள் போன்ற எதைக்கண்டும் அஞ்சாமல், இயற்கையின் இயல்பைக்கூட உணரமுடியாமல் உயிரிழக்கிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை 400 பேர் இதனால உயிரிழந்திருப்பது அதிர்ச்சியான தகவல்.. விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் 🙁 தம்படம் எடுக்கும் உபரி உபகரணங்கள் (செல்ஃபி ஸ்டிக்) பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக விதவிதமாக விளம்பரம் செய்து குறிப்பாக இளைஞர்களை விட்டில் பூச்சிகளாக விழவைப்பது கண்டிக்கத்தக்கது!

    Share
  • கொரிய – தமிழ் கலாச்சார ஒற்றுமை!

    பவள சங்கரி

    வளர்பிறை (சுக்ல பட்சம்) என்பது ஒவ்வொரு மாதத்திலும் 15 நாட்களுக்கு வருவது. சந்திரன் அமாவாசையிலிருந்து சிறிது, சிறிதாக வளர்ந்து வருவதை வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்கிறார்கள். நம் பாரம்பரிய சடங்குகள் பெரும்பாலும் இந்த காலகட்டங்களிலேயே நடத்தப்பெறுகின்றன.
    கொரியர்களின், முழு இராசி சுழற்சி 60 ஆண்டுகளைக் கொண்டதாக உள்ளது. இவர்களின் சந்திர நாட்காட்டி 60 வித்தியாசமான பெயர்களைக் கொண்டுள்ளது. நம் இராசி சுழற்சிகளும் 60 ஆண்டுகளும், வித்தியாசமான பெயர்களைக்கொண்டும் உள்ளதும் நாம் அறிந்ததே.

    முன் காலங்களில் மனித ஆயுள் குறைவாகவே இருந்தது. ஒருவர் முழுமையான இராசி சுழற்சியான 60 ஆண்டுகளைக் காண்பது அரிதாகவே இருந்தது. அப்படி முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்களை அவர்கள் குழந்தைகள் மகிழ்ந்து, உற்றார், உறவினர், நட்புகளுடன் உற்சாகமாகக் கொண்டாடி தங்கள் பெற்றோரை வாழ்த்தி வணங்குவது வழக்கத்தில் உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றும் இதை மணிவிழா அல்லது 60ஆம் கல்யாணம் என்று கொண்டாடப்படுகிறது. இதே பாரம்பரியப் பழக்கம் கொரிய நாட்டிலும் வழிவழியாக வழங்கி வருகிறது என்பதே சுவையான தகவல்!

    Share