Month: August 2026

  • “லிட்டில் பாய்” – சுடோமு யமகுச்சி

    TOKYO, Japan – Photo shows the late Tsutomu Yamaguchi speaking in Nagasaki in June 2009 about his experience of surviving the 1945 atomic bombings of Hiroshima and Nagasaki. The Japanese Embassy in London has sent a written protest against the BBC for introducing him as ”The Unluckiest Man in the World” in its TV program that aired on Dec. 17, 2010, with the show’s personalities and the audience laughing. A producer of the show has apologized via e-mail. (Photo by Kyodo News Stills via Getty Images)

    1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, இதே நாளில் அமெரிக்கா, ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. அதன் கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி. இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது.

    தனிமனித வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி. சமுதாயத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி. ஹிரோஷிமா நாகசாகி என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் கூட ஒரு முறை உடல் சிலிர்த்து அதிர்ந்துவிடுவார்கள். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியைக் கொண்ட அந்த அணுகுண்டு 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை சுடுகாடாக்கியது. குண்டு விழுந்த ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் நொடியில் எரிந்து சாம்பலானார்கள். 70% கட்டிடங்கள் அழிந்து மண்ணோடு மண்ணாயின. அங்கு வசித்த 3,50,000 மக்களில் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர்.

    குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. விண்ணை முட்டும் மரண ஓலமும், கை, கால், தலையில்லாத குழந்தைகளின் பெற்றோரின் கதறல் என அல்லோகல்லோலப்பட்டது ஹிரோஷிமா.

    அடுத்த மூன்று நாட்களில், நாகசாகி நகரத்தின் மீது, குண்டு மனிதர் (ஃபேட் மேன்) என்ற குண்டு மீண்டும் வீசப்பட்டது. 6.4 கிலோ புளுட்டோனியம் உள்ளிட்ட இதன் எடை 4,670 கிலோ. ‘குட்டிப் பைய’னைவிட திறன்மிகுந்த இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர். 1945 ஆக்ஸட் 8-ம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பான் வேறு வழியில்லாமல் அதே மாதம் 14-ம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்ததும் என தொடர்ந்த பேரிடர்களைச் சந்தித்து வந்தது. நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சினால் நடுங்கிப்போனது ஜப்பான். இச்சம்பவங்கள் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக, கை,கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி குழந்தைகள் பிறக்கின்றன. அணுகுண்டின் தாக்கத்தால் மாதக்கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாகப் பரிதவித்து கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தவர் பலர். வேதனையில் துடிப்பவர்களுக்கு
    சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும், செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. அடுத்தடுத்து மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி, ஜப்பானியக் கப்பல் பொறியாளர். இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது. தீயில் கருகி சாம்பலான பீனிக்ஸ் பறவை மீண்டும் மீண்டும் எழுந்து வருவதுபோல் உறுதியான சிந்தை கொண்டவர்களே வாழ்க்கையின் எத்தகைய பேரிடரையும் கடந்து வென்று வருபவர்கள். தன் மூலதன பங்குகளில் சுமார் 40% அழிந்துபட்ட நிலையிலும் 1960களின் பிற்பகுதியில், வியக்கத்தக்க வகையில் ஜப்பானிய பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டதோடு, தொடர்ந்து இலாபங்களைக் குவித்ததுதான் ஆச்சரியமான செய்தி. மேற்கத்திய நாடுகளின் சவால்களை எதிர்கொண்ட ஜப்பானியர்கள் செல்வந்தர்களாக மாறியவர்கள், அவர்களுடைய சமூக, பொருளாதார, கல்வி முறைகளுக்கு ஈடாக, போராடி தங்களை தயார்படுத்திக்கொண்டனர். ஜப்பானை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றிய மக்களின் கடின உழைப்பும் தியாகமும் அதிசயிக்கத்தக்கது. இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்குப் பின்னர் 20-ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ள ஜப்பான் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தில் அதன் பங்கு கணிசமானது. மக்களின் கடுமையான உழைப்பினால் தொழில்துறை உற்பத்தி 1951-ல் மீண்டுவர ஆரம்பித்து 1960-ல் 350 சதவிகிதத்தை எட்டி உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தது. அரசாங்கத்தின் வெற்றிகரமான பொருளாதார சீர்திருத்தம் ஒரு காரணம் என்றாலும் மக்கள் எஃகு, நிலக்கரி, பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, ஜவுளி உற்பத்தியிலும் முன்னிலை வகித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

    #ஹிரோஷிமா #நாகசாகி #லிட்டில்பாய் #ஜப்பான் #உழைப்பு #அனுகுண்டு #அழிவு #hiroshima #nagasaki #japan #Japanhardwork #TsutomuYamaguchi #சுடோமுயமகுச்சி

    Share
  • கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    சக்தி சக்திதாசன்

    “கலைமகள் கைப்பொருளே”

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் என்ற தொடரில் இன்று நாம் ஆராயப் போகும் பாடல், “கலைமகள் கைப்பொருளே”.

    வசந்த மாளிகை எனும் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் , வாணிஸ்ரீ சம்பந்தப்பட்ட காட்சி.

    திரைப்படத்தில் இது ஒரு எளிய காட்சியாகத் தோன்றுகிறது.

    அன்பிற்காக ஏங்கும் ஒரு இளைஞன். செல்வம் இருந்தும் மனநிம்மதி இல்லாத வாழ்க்கை.

    தவறான பழக்கங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவன்.

    அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் வரும் ஒரு இளம் பெண்.

    கவனிப்பாரற்று மூலையில் கிடந்த வீணையை எடுத்துத் தூசி தட்டி இசைக்கிறாள்.

    கதைக்கு இது போதும்.

    ஆனால் கவியரசருக்கு அது போதாது.

    அவரது சொற்கள் கதையைத் தாண்டி மனித வாழ்க்கைக்குள் நுழைகின்றன.

    அதையும் தாண்டி ஆன்மாவின் வாசலைத் தட்டுகின்றன.

    வீணை என்பது வெறும் இசைக்கருவி அல்ல.

    அது மனித மனம்.

    அதன் நரம்புகள் மனிதனின் எண்ணங்கள்.

    அதை மீட்டும் விரல்கள் இறையருள் அல்லது ஞானகுருவின் வழிகாட்டுதல்.

    இவ்வாறு பார்க்கத் தொடங்கும்போது இந்தப் பாடல் முழுவதும் ஒரு ஆன்மீக உபநிடதமாக நமக்குள் விரிகிறது.

    **”கலைமகள் கைப்பொருளே
    உன்னை
    கவனிக்க ஆளில்லையோ”**

    இங்கு வீணையைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி, உண்மையில் மனிதனைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி.

    ஒவ்வொரு மனிதனும் கலைமகளின் படைப்பே.

    ஒவ்வொரு உயிரும் இறைவனின் அற்புதமான வடிவமைப்பு.

    அளவற்ற திறமைகள், கருணை, அன்பு, அறிவு, ஞானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொக்கிஷம்.

    ஆனால் அந்தப் பொக்கிஷத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள்?

    பெரும்பாலான மனிதர்கள் வெளி உலகத்தை வெல்வதற்காக வாழ்கிறார்கள்.

    ஆனால் தங்களுடைய உள்ளத்தை அறிந்து கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை.

    வீணை தூசி படிவது போல மனித மனமும் ஆசை, அகந்தை, பொறாமை, பயம், கோபம் ஆகிய தூசிகளால் மூடப்படுகிறது.

    அந்தத் தூசியை துடைக்காமல் இசை வராது.

    மனதைத் தூய்மைப்படுத்தாமல் ஆன்மீகம் மலராது.

    **”விலையில்லா மாளிகையில்
    உன்னை
    மீட்டவும் விரலில்லையோ”**
    இந்த “விலையில்லா மாளிகை” என்பது மனித உடல்.

    உலகிலுள்ள எந்த அரண்மனையையும் விட விலைமதிப்பற்றது.

    ஏனெனில் இதில் உயிர் இருக்கிறது.

    உணர்வு இருக்கிறது.

    சிந்தனை இருக்கிறது.

    ஆன்மா இருக்கிறது.

    இவ்வளவு அற்புதமான உடலுக்குள் இருக்கும் மனம் இசைக்கப்படாமல் கிடக்கிறது.

    வீணை தனியாக இசைக்க முடியாது.

    அதை மீட்டும் விரல்கள் வேண்டும்.
    அதேபோல மனித வாழ்க்கைக்கும் விழிப்புணர்வு வேண்டும்.

    அது தியானமாக இருக்கலாம்.
    ஞானமாக இருக்கலாம்.

    குருவின் உபதேசமாக இருக்கலாம்.

    இறையருளாக இருக்கலாம்.

    **”உன்னிடம் ஆயிரம் ராகங்களே
    என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே”**

    இந்த வரிகளில் கவியரசர் மனிதனின் எல்லையற்ற ஆற்றலைச் சொல்கிறார்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணற்ற திறமைகள் உறங்கிக் கிடக்கின்றன.

    அதேபோல ஆன்மீகப் பயணத்திற்குத் தேவையான எல்லா விதைகளும் அவனுக்குள்ளேயே உள்ளன.

    அன்பு…
    கருணை…
    மன்னிப்பு…
    அமைதி…
    தியாகம்…
    பேரானந்தம்…

    இவை வெளியிலிருந்து வருவதில்லை.

    அவை அனைத்தும் உள்ளேயே இருக்கின்றன.

    ஆனால் அவை விழித்தெழ வேண்டும்.

    ஒரு விதைக்குள் முழு மரம் இருப்பது போல, ஒரு மனிதனுக்குள் முழுமையான ஞானியின் சாத்தியமும் மறைந்தே இருக்கிறது.

    அதனால்தான் கவியரசர் “ஆயிரம் ராகங்கள்” என்று கூறுகிறார்.
    அதாவது எண்ணற்ற பரிமாணங்கள்.

    எண்ணற்ற உயர்வுகள்.

    எண்ணற்ற சாத்தியங்கள்.

    **”இசையறிந்தோர்கள் மீட்டுங்களே
    இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களே”**

    இது பாடலின் மிக ஆழமான ஆன்மீக வரிகளில் ஒன்று.

    இசையறிந்தோர் என்றால் வீணை வாசிப்பவர்கள் மட்டுமல்ல.

    வாழ்க்கையின் இசையை அறிந்தவர்கள்.

    உள்ளத்தின் மொழியை அறிந்தவர்கள்.

    ஞானிகள்.
    சித்தர்கள்.
    மகான்கள்.
    உண்மையான குருக்கள்.

    நமக்குள் இருக்கும் இறையொளியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

    அவர்களால் நம்மை விழித்தெழச் செய்ய முடியும்.

    அப்படி யாரும் இல்லையெனில்,
    “எனக்காவது வழி காட்டுங்கள்” என்று பணிவுடன் வேண்டுகிறது இந்த வரி.

    ஆன்மீகத்தின் முதல் படி பணிவே.

    “எனக்கெல்லாம் தெரியும்” என்று நினைப்பவன் கற்றுக்கொள்ள மாட்டான்.

    “எனக்குத் தெரியாது” என்று ஒப்புக்கொள்பவனே ஞானத்தை அடைகிறான்.

    “நான் யார் உன்னை மீட்ட வரும்”
    இது சாதாரண வசனம் அல்ல.

    இது மனிதனின் நித்தியக் கேள்வி.
    “நான் யார்?”

    இந்தக் கேள்வியே அனைத்து ஆன்மீகப் பயணங்களின் தொடக்கம்.

    உடலா நான்?
    மனமா நான்?
    எண்ணமா நான்?
    பெயரா நான்?
    புகழா நான்?
    இல்லை.

    இவை அனைத்தையும் கடந்து நிற்கும் சாட்சியே நான்.

    இந்த உணர்வை நோக்கிச் செல்லும் அழைப்பாகவே இந்த வரி ஒலிக்கிறது.

    **”ஏனோ துடிக்கின்றேன்
    அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்”**

    மனிதனின் அமைதியின்மைக்கு இதைவிட அழகான விளக்கம் இருக்க முடியுமா?

    ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    பணம்.
    புகழ்.
    பதவி.
    உறவுகள்.
    வெற்றிகள்.

    இவற்றையெல்லாம் அடைந்த பிறகும் ஏன் ஒரு வெறுமை?

    ஏனெனில் ஆன்மா இறைவனைத் தேடுகிறது.

    ஆனால் மனம் பொருள்களைத் தேடுகிறது.

    இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டம்தான் மனிதனின் தவிப்பு.

    அந்தத் தவிப்பின் காரணம்.

    தெரியாததால் அவன் வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிகிறான்.

    “சொர்க்கமும் நரகமும் நம் வசமே”
    இது ஆன்மீகத்தின் மிகப் பெரிய உண்மை.

    சொர்க்கம் ஒரு இடமல்ல.

    நரகம் ஒரு இடமல்ல.

    அவை மனநிலைகள்.

    அன்பு நிறைந்த மனம் சொர்க்கம்.

    வெறுப்பு நிறைந்த மனம் நரகம்.

    மன்னிக்கும் மனம் சொர்க்கம்.

    பகை கொள்ளும் மனம் நரகம்.

    தியானம் செய்யும் மனம் சொர்க்கம்.

    அமைதியற்ற மனம் நரகம்.

    வெளியில் சொர்க்கத்தைத் தேடுபவன் ஏமாறுகிறான்.

    உள்ளே சொர்க்கத்தை உருவாக்குபவன் ஞானியாகிறான்.

    “நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே”

    மனம் எப்போதும் வெளியில் ஓடுகிறது.

    ஆனால் ஆன்மாவின் குரல் எப்போதும் உள்ளிருந்து அழைக்கிறது.

    அந்தக் குரலைக் கேட்பதே தியானம்.

    அந்தக் குரலைப் பின்பற்றுவதே ஆன்மீகம்.

    அந்தக் குரலோடு ஒன்றுபடுவதே முக்தி.

    “சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே”

    மனித சமுதாயம் சட்டங்களால் நிலைப்பதில்லை.

    சத்தியத்தாலும் தர்மத்தாலுமே நிலைக்கிறது.

    சத்தியம் இல்லாத அறிவு அழிவைத் தரும்.

    தர்மம் இல்லாத அதிகாரம் கொடுமையை உருவாக்கும்.

    ஆகவே மனிதன் முதலில் தன்னுள் சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும்.

    பிறகு தர்மத்தை வாழ வேண்டும்.

    அப்போதுதான் உலகமும் அமைதியடையும்.

    “இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே”

    ஆன்மீகத்தில் இறைவன் பல வடிவங்களில் பேசுகிறார்.

    சில நேரங்களில் குருவாக.

    சில நேரங்களில் நண்பனாக.

    சில நேரங்களில் வாழ்க்கை அனுபவமாக.

    ஆனால் மிக உயர்ந்த வடிவம் தாய்மை.

    தாய் கண்டிப்பாள்.

    ஆனால் அன்பால்.
    தாய் திருத்துவாள்.

    ஆனால் கருணையால்.
    அதேபோல் இறையருளும் மனிதனை வழிநடத்துகிறது.

    இந்தப் பாடல் முழுவதும் அந்தத் தாய்மையின் அழைப்பாகவே ஒலிக்கிறது.

    கவியரசர் கண்ணதாசனின் பெருமை என்னவென்றால், அவர் எழுதிய பாடல்களை ஒரு காதல் பாடலாகவும் ரசிக்கலாம்.

    ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவும் சிந்திக்கலாம்.

    ஒரு ஆன்மீக உபதேசமாகவும் அனுபவிக்கலாம்.

    இந்தப் பாடலில் வரும் வீணை, ஒவ்வொரு மனிதனின் இதயம்.
    அதன் நரம்புகள் நமது எண்ணங்கள்.

    அதன் இசை நமது வாழ்க்கை.
    அதை மீட்டும் விரல்கள் ஞானமும் இறையருளும்.

    அந்த இசை ஒலிக்க வேண்டுமெனில் முதலில் நம்மீது படிந்துள்ள அறியாமை என்னும் தூசியை அகற்ற வேண்டும்.

    அப்போதுதான் நமக்குள்ளே உறங்கிக் கிடக்கும் ஆயிரம் ராகங்கள் விழித்தெழும்.

    ஆயிரம் கீதங்கள் ஒலிக்கும்.

    அப்போது மனித வாழ்க்கை வெறும் வாழ்வாக இருக்காது.

    அது இறைவன் இசைக்கும் ஒரு தெய்வீக வீணையாக மாறிவிடும்.

    “உன்னிடம் ஆயிரம் ராகங்களே; என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே” என்ற கவியரசரின் வரிகள்,

    ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் உறங்கிக் கிடக்கும் அளவற்ற ஆன்மீகச் செல்வத்தை நினைவூட்டும் நித்திய மந்திரமாக என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    அன்பினியோரே!

    அன்பு வணக்கம்.

    நீங்கள் நலமா ?

    நான் நலமேயுள்ளேன்.

    எனது இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் எனும் இந்த தொடரின் இனிவரும் ஐந்து மடல்களும் இன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைகளை ஐந்து பகுதிகளாக பிரித்து அலசும் மடல்களாக வரும்.

    வாரமொரு பகுதியாக வரைய இருக்கிறேன்.

    அன்பானவர்களே ! நான் கவிஞனுமில்லை, கலைஞனுமில்லை, ரசிகனுமில்லை, பெரிய எழுத்தாளனுமில்லை.

    இங்கிலாந்தில் கடந்த 51 ஆண்டுகளாக வசிக்கும் ஒரு 69 வயதான சாதாரண புலம்பெயர் தமிழன் என்பதே எனது தகுதி.

    ஈழம் எனது அடையாளம், தமிழ் எனது முகவரி.

    இன்றைய. அவசர உலகிலே அரசியல் மாற்றங்கள் இமைக்கும் பொழுதினில் நடந்தேறுகின்றன.

    நான் இப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கும் போதே அதை மறுதலிக்கும் நிகழ்வுகள்.

    அப்படி நான் பதிவிடுவதற்கு மாக எதுவும் நடப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல .

    அதற்காக முன் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறேன்

    மாற்றத்தின் வாசலில் நிற்கும் பிரிட்டன்

    51 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழும் ஒரு புலம்பெயர் தமிழனின் அரசியல் சாட்சியம்

    பகுதி – 1

    ஐம்பத்தொரு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெறும் கால அளவல்ல.

    அது ஒரு நாட்டின் அரசியல் பரிணாமத்தை கண்முன்னே பார்த்து பதிவு செய்யும் நீண்ட பயணம்.

    நான் இங்கிலாந்தில் காலடி எடுத்து வைத்த காலத்தில், இந்நாடு இன்னும் தனது பேரரசின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தது.

    தொழிற்சாலைகளின் புகை வானத்தை மூடியிருந்தது.

    தொழிலாளர் சங்கங்கள் அரசியலில் வலுவான தாக்கம் செலுத்தின. குடியேற்றம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்று காணும் அளவுக்கு சமூக ஊடகங்கள் அரசியலை வடிவமைக்கவில்லை.

    இந்த ஐம்பத்தொரு ஆண்டுகளில் நான் பல பிரதமர்களைக் கண்டிருக்கிறேன்.

    பல தேர்தல்களை நேரில் அனுபவித்திருக்கிறேன்.

    மக்களின் மனநிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் கவனித்திருக்கிறேன்.

    அரசியல் என்பது வெறும் கட்சிகள் மோதும் களம் அல்ல.

    அது மக்களின் நம்பிக்கைகளும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் சந்திக்கும் இடம் என்பதை இந்த நாடு எனக்குக் கற்றுக் கொடுத்தது.

    ஒரு ஜனநாயகத்தின் வலிமை அதன் அரசாங்கத்தில் மட்டும் இல்லை.

    ஆட்சியை மாற்றும் உரிமையை மக்கள் அமைதியாகப் பயன்படுத்தும் பண்பாட்டில்தான் இருக்கிறது.

    அந்த வகையில் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்கும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

    கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துப் பார்த்தாலே பிரிட்டிஷ் அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் ஆழமானவை.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரெக்சிட், அதன் பொருளாதார விளைவுகள், வாழ்க்கைச் செலவின் உயர்வு, தேசிய சுகாதார சேவையின் சவால்கள், குடியேற்றக் கொள்கைகள், உலக அரசியல் மாற்றங்கள் இவை அனைத்தும் மக்களின் அரசியல் சிந்தனையையே மாற்றியுள்ளன.

    ஒரு காலத்தில் இரண்டு பெரிய கட்சிகளான லேபரும் கன்சர்வேடிவும் மாறி மாறி ஆட்சி செய்த அரசியல் அமைப்பு, இன்று பல திசைகளில் இழுக்கப்படுகிறது.

    வலதுசாரி தேசிய உணர்வை முன்வைக்கும் சக்திகள் வலுவடைகின்றன.

    மைய அரசியலை வலியுறுத்துபவர்கள் புதிய கூட்டணிகளைத் தேடுகின்றனர்.

    இளைஞர்களின் வாக்கு முறையும், வயதான வாக்காளர்களின் முன்னுரிமைகளும் மாறுபடுகின்றன.

    இந்த மாற்றங்களின் மையத்தில் இன்று ஒரு புதிய அரசியல் சமநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

    இன்றைய பிரதமராக உள்ள ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் இயக்கத்தின் மரபை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி.

    அவருடைய தலைமையால் லேபர் கட்சி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில், நைஜல் ஃபராஜ் தலைமையிலான ரீபோர்ம் கட்சி, பாரம்பரிய வலதுசாரி அரசியலை முற்றிலும் மாற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

    இதனால் கன்சர்வேடிவ் கட்சி தனது அரசியல் அடையாளத்தை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இன்னும் மத்திய அரசியலின் குரலாக இருக்க முயற்சித்தாலும், இரு துருவங்களுக்கிடையில் தனது இடத்தை உறுதிப்படுத்த போராடுகிறது.

    இவை வெறும் கட்சிகளின் கதைகள் அல்ல.

    இவை பிரிட்டிஷ் சமூகத்தின் உள்ளார்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்புகள்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரச்சாரங்கள் தெரு மேடைகளிலும், செய்தித்தாள்களிலும் நடந்தன.

    இன்று அவை கைப்பேசியின் திரையில் நடக்கின்றன.

    ஒருகாலத்தில் குடும்ப மரபே வாக்கை நிர்ணயித்தது.

    இன்று ஒரு வைரல் காணொளி கூட வாக்காளரின் மனதை மாற்றுகிறது.

    இந்த மாற்றத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில், அரசியல் என்பது நிலையாக இருக்கும் கட்டிடம் அல்ல காலத்தோடு வடிவம் மாறும் உயிருள்ள அமைப்பு என்பதையே நான் உணர்ந்திருக்கிறேன்.

    இந்தக் கட்டுரையில் நான் எந்தக் கட்சியையும் புகழவோ, குறைக்கவோ முயலவில்லை.

    ஒரு பாமர மனிதனின்அரசியல் ஆய்வாகவும், ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், வெற்றியையும் சவால்களையும் பார்த்து வாழ்ந்த புலம்பெயர் தமிழனாகவும், நான் கண்ட உண்மைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு நாட்டின் அரசியல் அதன் நாடாளுமன்றத்தில் மட்டும் எழுதப்படுவதில்லை.

    அது பேருந்து நிறுத்தங்களில் பேசப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் விவாதிக்கப்படுகிறது.

    பல்கலைக்கழகங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

    குடியேற்றக் குடும்பங்களின் உணவுமேசைகளில் அனுபவமாகப் பகிரப்படுகிறது.

    அந்த உயிருள்ள அரசியலின் சாட்சியாக இந்த ஆய்வை நான் பதிவு செய்கிறேன்.

    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    03.08.2026

    அடுத்த வாரம் ………

    (தொடரும் – பகுதி 2: “ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை: அரசியலமைப்பும் அரசியல் பயணமும்”)

    Share
  • சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆர நவமணி மாலைகள் ஆட
    அம்மை யோடப்பன் ஆடினார் நடனம்
    ஆடும் அரவம் அசையா நின்றது
    அமரர் அனைவரும் அரகரா என்றனர்

    நாரதர் தம்புரா நயமாய் மீட்டினார்
    நந்தியின் மத்தளம் சேர்ந்துமே ஒலித்தது
    வாணியின் வீணை வழங்கிய நாதம்
    மாதொரு பாகனின் ஆட்டத்தில் கலந்தது

    மண்ணும் மகிழ்ந்தது விண்ணும் மகிழ்ந்தது
    மாதொரு பாகனின் அடியார் மகிழ்ந்தார்
    திருமுறைச் செல்வர்கள் திருவடி தொழுதனர்
    ஆனந்தக் கடலில் அனைவரும் மூழ்கினர்

    வேதம் அனைத்தும் கையைக் குவித்தது
    தத்துவம் எல்லாம் தம்மை மறந்தது
    தீமைகள் அனைத்தும் தெறித்து ஓடின
    நன்மைகள் மலர்ந்து நறுமணம் எழுந்தது

    மாதொரு பாகன் ஆடா நின்றால்
    பூமியில் எதுவும் அசையா நின்றிடும்
    இறைவனின் நடனமே இயக்கும் சக்தி
    சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    Share
  • அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!

    அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    காலனைக் காலால் உதைத்ததும் சிவமே
    கண்ணப்பன் கண்ணை ஏற்றதும் சிவமே
    ஆலமாம் விஷத்தை உண்டதும் சிவமே
    அனைத்துமாய் எங்கும் இருப்பதும் சிவமே

    பிட்டுக்காய் மண்சுமந்து நின்றதும் சிவமே
    பிரம்படி ஏற்றிட வந்ததும் சிவமே
    கெட்டவர் ஆயினும் கேட்டிடும் வரத்தைக்
    கொட்டியே கொடுப்பதும் சிவமே ஆகும்

    விண்ணும் சிவமே மண்ணும் சிவமே
    உண்ணும் உணவெலாம் கொடுப்பதும் சிவமே
    எண்ணம் சிவமே எழுத்தும் சிவமே
    இயக்கம் சிவமே இயக்குநர் சிவமே

    ஆதியும் அந்தமும் இல்லா சிவமே
    அனைத்துக்கும் ஆதியாய் அமைந்தது வியப்பே
    சோதியின் தொடக்கம் யாருக்குந் தெரியா
    சோதியாய் ஆனதும் யாரெனத் தெரியோம்

    விடை தெரியாத வினாக்கள் பற்பல
    விடை தெரியாது தவிக்கிறோம் யாவரும்
    மாலும் தேடினார் அயனும் தேடினார்
    விளங்கா நிலையில் சிவத்தை நாடினார்

    உப்புக் கடலருகே உவப்பான நீருக்கு
    உயர்வான மலைகளிலே உன்னத மருந்திருக்கு
    சிப்பிக்குள் முத்திருக்கும் சிலந்திக்குள் திறனிருக்கு
    எப்படித்தான் வந்ததுவோ எவருக்கும் தெரியாது

    இருப்பார்க்கு இருப்பான் இல்லார்க்கு இல்லான்
    இல்லானே என்பார் இயற்கையே என்பார்
    ஏகனும் அவனே அநேகனும் அவனே
    இயற்கையும் அவனே இயக்கமும் அவனே

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது
    அணுவாயும் இருப்பான் அதைத்தாண்டி இருப்பான்
    ஆணவத் தோடவனைத் தேடினால் தெரியான்
    அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய் !

    Share
  • புரிதல் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-613 010.

    சந்திரன் தனது ஆசிரியரின் வீட்டின்முன் சாலையோரத்தில் தனது மிதிவண்டியை நிறுத்தினான்.  நுழைவாயில் கதவின் வழியே எட்டிப்பார்த்தான்.  வீட்டுத் திண்ணையில் முன் அறையைப் பார்த்தபடி தமது வகுப்பு மாணவர்கள் முருகனும், இராமனும் நின்றிருந்தனர்.  சந்திரன் சுற்றுச்சுவர் வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தான்.

    “டேய் முருகா, இராமா ரெண்டுபேரும் ஏன் வெளியயே நிக்கிறீங்க…….. உள்ளே போவோம்”? என்றபடி வீட்டினுள் சந்திரன் நுழைந்தான்.  முன் அறையில் இருந்த மேஜையில் பரிசுப் பொருள்களும், சால்வைகளும் நிறைந்திருந்தன.  ஆசிரியர் பணியாற்றிய பள்ளியின் ஆறாம்வகுப்பு மாணவர்கள் அறையில் நிறைந்திருந்தனர்.  அன்று பணி ஓய்வு பெற்றிருந்த அவர்களின் வகுப்பாசிரியர் புண்ணியகோடி நாற்காலியில் அமர்ந்தபடி மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.  அப்பொழுது உள்ளே நுழைந்த சந்திரன் சுவரில் ஒரு கையை வைத்தபடி நின்றான்.  ஆசிரியர், “சந்திரா விலகி அந்தபக்கமா நில்லுடா     கையைக் கொண்டுபோய் சுவிட்ச் போர்டு மேல வச்சிருக்க…. கரண்ட் புடிச்சுக்கப் போகுது….” என்று அதட்டினார்.  வேகமாகக் கையை எடுத்தபடி சற்று தள்ளி நின்றான்.  ஆசிரியர் சுற்றிலும் பார்த்துவிட்டு, உன் கூட்டாளிங்க எங்க என்றார்.

    சந்திரன் மெதுவாக வாசலைப் பார்த்து,  “உள்ள வரலியா? எல்லோரும் இங்கதான் இருக்கிறோம்” என்றான்.  இராமன் உள்ளே வந்தான்.  அனைவருக்கும் தேநீர் வழங்க தொடங்கினார்  ஆசிரியரின் மனைவி.  அனைவரும் தேநீர் அருந்தி கொண்டிருக்கும்போது சுவர்க்கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது.

    “சார்  மணி ஐந்து ஆகிடிச்சு.. நாங்க கிளம்புறோம்.  உங்க ஓய்வுக்காலம் நல்லா இருக்கனும் சார்..”  என்று சந்திரன் சொன்னதை அனைத்து மாணவர்களும் ஆமோதித்ததோடு, அன்று ஓய்வு பெற்றிருந்த ஆசிரியரோடு பள்ளியில் இருந்து வீடுவரை வந்த மாணவர்கள் வீடுதிரும்பத்தொடங்கினார்கள்.  ஒருமாணவன் மனதுக்குள் இருந்து வந்த பிரிவுத்துன்பத்தில் கண்கலங்கி விம்மத் தொடங்கினான்.  பிற மாணவர்கள் கண்களும் கலங்கின.

    “ஸ்கூலுக்கு எதுத்தாப்புல தான வீடு இருக்கு.  நினைக்கிற போது நீங்க வந்திடலாமே.  நானும் வருவேன், எல்லோரும் நல்லா படிக்கணும்.   நல்லா வரணும்”    என்றார் ஆசிரியர்.  தொடர்ந்து பேசினால் குரல் உடைந்து நா தழுதழுக்கும் போலிருந்தது.  அடக்கியபடி புன்னகையுடன் நின்றார்.

    “வாரோம் சார்” என்றபடி செல்லத்தொடங்கிய மாணவர்களை நோக்கி கைகளை அசைத்து விடைகொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.   மாணவர்கள் அனைவரும் சென்றிவிட்டநிலையில் திண்ணையில் தூணில் சாய்ந்து ஒதுங்கி நின்றுகொண்டிருந்த இராமன் கண்ணில் பட்டான்.

    “இராமா என்னடா இங்க நிக்குற….” என்றார் புண்ணியகோடி.

    “இல்ல சார் முருகனும் இங்கதான் நின்னுகிட்டு இருந்தான்.  இப்பதான் போனான்”.

    “அவன் உள்ள வந்தானா …. கண்ணுல படலயே….”

    “இண்ணைக்குக் காலையில முருகன் பாக்கெட்ல இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தத பார்த்திட்டு நீங்க திட்டி தீர்த்ததோட அடிச்சிங்கல சார் … அதுதான் தயங்கி நின்னுட்டான். நீங்க அடிச்சது அவன்மேல உள்ள அக்கறையிலதான்கிறத சொல்லி  அவனைத் தேத்திக்கிட்டு இருந்தேன்.  நீங்க வெளியே வர்த பார்த்ததும் உங்ககிட்ட முகத்தக்காட்டக்கூட தயங்கி ஓடிப்போயிட்டாள்…. இத தெரியப்படுத்ததான் நிக்கிறேன் சார்…” என்றான் இராமன்.

    இதனைக் கேட்டதும் ஆசிரியரின் மனம் வலித்தது.  “எனக்குத் தெரியாதா என்ன…. முருகனுக்கு அந்தப் பழக்கம் கிடையாதுன்னு     ஆனா  அந்த பாக்கெட்ட வெளியில தூய்மைப் பணியாளர்கள் குப்பைப்கு வைத்திருந்த நெருப்புல போட சொல்லியும் போடாம நின்னுகிட்டிருந்தானே  அதாண்டா கோபம்”  என்றார் குற்ற உணர்வோடு.

    “அந்த பாக்கெட்ட அவன் நிக்கர்பாக்கெட்ல பின்பண்ணி விட்டதோட இன்றைக்கு முழுவதும் அப்படியே இருக்கணும்னு சொன்னதுல ரொம்பவே நொந்துட்டான் சார்….”

    “அப்படியே தான் வைத்திருந்தானா”?

    “ஆமா சார்.  இப்பதான் ஓடிப்போகும்போது பின்ன கழட்டிட்டு பாக்கெட்டுக்குள்ள வைத்தான்”.

    “என்னடா சொல்ற….. ”

    “முருகன் ரெம்ப நல்லபையன் சார்.  பத்தாம் வகுப்பு படிக்கிற கோகுல்தான் காலையில் பிரேயர் முடிஞ்சு வரும்போது அவன்கிட்ட இருந்தா மாட்டிகிடுவோம்னு இவன் பாக்கெட்ல போட்டுட்டான்.  பத்தாம் கிளாஸ் டீச்சர் அவங்க பசங்கள செக் பண்றதா சொல்லியிருந்தாகளாம் சார்…. அதனாலதான்…..”

    “இந்த பையன் உண்மைய சொல்லியருக்கலாம்ல…”

    “பயம் சார். கோகுல் அண்ணா சாயங்காலம் கேட்கும் போது கொடுக்கணும்னு மிரட்டிட்டுவேற போனான் சார்….”

    “அட பாவமே….. நாளைக்குக் காலையிலயே முருகன அவன் வீட்ல போயி பார்க்கிறேன்.  அப்பதான் என் மனது ஆறும்.  நீ பத்திரமா போயிட்டு வாடா….” என்று சிரித்தபடி வழியனுப்பினார்.  ஆனால் அவர் மனம் கனத்திருந்தது.  தனது மொத்த பணிக்காலத்தில் எந்த ஒரு மாணவனையும் இப்படி தண்டிக்காதவர், தமது கடைசி பணிநாளில் தவறிழைத்துவிட்டோமே என கண் கலங்கினார்.

    ••••

    மறுநாள் கலையில் மழைபெய்து கொண்டிருந்தது.  மழை நிற்பது போல் தெரியவில்லை. வீட்டுத்திண்ணையில் நின்றபடி எப்பொழுது மாணவன் முருகனைப் பார்க்கலாம் என துடித்துக் கொண்டிருந்த புண்ணியகோடி மனைவியிடம்   “ரெயின் கோட்ட எடுத்திட்டு வா…  பக்கத்து ஊருவர போயிட்டு வந்திடுறேன்”, என்றார்.

    வீட்டினுள் இருந்து வெளியே வந்த அவர்  மனைவி,   “இன்னயில இருந்து ஓய்வா இருப்பீங்கணு பார்த்தா….. மழையில எங்கபோறீங்க….  உங்க மழைக்கால பொக்கிசம் ரெயின் கோட்ட பிடிங்க…” என்றபடி கொடுத்தார்.

    அதனை மாட்டிக்கொண்டு,  “வந்து விசயத்தைச் சொல்கிறேன்…” என்றபடி இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

    ••••

    வீட்டு மாடியில் இருந்து கொட்டிய மழை நீருக்கு அடியில் முருகன் மகிழ்ச்சியாகக் குளித்துக்கொண்டு இருந்தான்.  வாசலில் நின்று மகனைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தை கதிர்,  “இயற்கை கொடுத்த  ஃபீரீ ஷவர்ல  ஃபிரீயா குளியல்….. செருப்பு இல்ல, துணி இல்ல இயற்கையோட இயற்கையா நீ  ஃபிரீயா ஆட்டம் போடுறத பார்க்கும்போதுதான்  தெரியுது சந்தோசத்திற்கு எதுவுமே தேவையில்லைன்னு…”     என்றார்.

    எந்த கவலையுமின்றி ஆட்டம் போட்டவனுக்குத் தந்தையின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் வெட்கம் மேலிட்டது.  உதடுகளின் ஓரத்தில்  அரும்பிய சிரிப்பை அடக்க முடியன்றான்.  கன்னத்தில் விழுந்த சிறுகுழி அவனின் வெட்கத்தை வெளிப்படுத்தியது.  உடம்பைக் கூச்சத்தால் குலுக்கிக் கொண்டு   “அப்பா ஒரு ஐஞ்சு நிமிசம்பா”  என்றான்.

    கதிர் மகனின் மகிழிச்சியான முகத்தைப் பார்த்தார். அதை கெடுக்க மனமில்லாமல்  “சரி சரி சீக்கிரமா”? என்றபடி நிமிர்ந்தார்.  வெளியே தெருமுனையில் முருகனின் ஆசிரியர் வண்டியில் வருவதைக் கண்டதும், வாசலில் உட்புறமாக இருந்த குடையினை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்.  மதில்சுவர் தாண்டி தெருவிற்கு வந்தார்.  ஆசிரியரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    ஆசிரியர்  புண்ணியகோடி முருகனின் வீட்டருகில் வந்துவிட்டார்.  கதிரைக் கண்டதும் தெருவோரத்தில் வண்டியை வைத்துவிட்டு,   “வணக்கம் சார்”   என்றார்.

    “வணக்கம் சார்    நேற்று பணி ஓய்வு பெற்றுவிட்டதா கேள்விப்பட்டேன்.  ஓய்வுக்காலம் சந்தோசமா அமையட்டும் சார் .  கொட்டுற மழையில இந்த பக்கமா….. ஏதாவது விசயமா சார்”?

    “இல்ல முருகன பார்க்கணும்னுதான் வந்திட்டு இருந்தேன்.   நேற்று என்னோட கடைசி வேலைநாள்ல பார்த்து….. செய்யாத தப்புக்கு முருகனை தண்டிச்சிட்டேன்.  அதான்…”

    வெளியே அப்பா யாருடனோ பேசுவதைக் கேட்டான் முருகன்.  அது புண்ணியகோடி சாருடைய குரல்.  வேகமாக நகர்ந்து சுவர் அருகே வந்தான்.  அப்பாவிடம் ஆசிரியர் பான்மசாலா கதையை விளக்கும் சம்பவம் தொடர்ந்தது.

    “என்னாச்சு சார்… பெரிய அசம்பாவிதம் நடந்தமாதிரி முகத்த வச்சிருக்கீங்க…”

    “நம்ம ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு படிக்குற ஒருத்தனுக்கு பான்மசாலா பயன்படுத்துற கெட்ட பழக்கம் இருக்கு சார்.  நேற்று கிளாஸ்ல திடீர் செக்கிங் நடக்கபோகுதுனு தெரிந்சதும, தான் மாட்டிக்கிடக்கூடாதுன்னு அவங்கிட்ட இருந்த பான்மசாலா பாக்கெட்ட முருகனோட நிக்கர் பாக்கெட்டுக்குள்ள நைசா சொருகிவெச்சிருக்கான்.  அது தெரியாம முருகன நாலு சாத்து சாத்திட்டேன்…” என்றார் ஆசிரியர் கவலையுடன்.

    கதிர் உண்மையான ஆனந்தத்தோடு, “நிஜமாவா சார். எனக்கு நின்றுபோன இதயத்துடிப்பே வந்தது போலிருக்கு”.

    “என்ன சொல்றீங்க…”

    “நேற்று ஆபீஸ்ல இருந்து லேட்டத்தான் வந்தேன்.  வந்ததும் முருகன பார்க்கலாம்னு போனேன்.  அவன் கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருந்தான்.  யூனிஃபாம்  சட்டய கூட கழட்டல.  ஆனா நிக்கர கழற்றி கையில் பிடித்தபடி தூங்கினான்.  ஒழுங்கா படுக்க வைக்கறதுக்காக நிக்கர பிடித்து இழுத்தேன்.  டொப்னு உள்ள இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தது.  எனக்கு என்னென்னமோ தோணுச்சி.  இந்தப்பழக்கம் எப்படி வந்திருக்கும்.  எப்படி திருத்தப்போறோம்னு யோசிச்சி யோசிச்சி இரத்த அழுத்தமே  ஏறிடுச்சி சார்.  அன்பாலதான் திருத்தணும்.  இத பெரிசாக்கிடக்கூடாதுங்குற பயத்துல அவங்க அம்மாகிட்டகூட சொல்லல சார்…. முருகனுக்கும் தெரியாது, இப்பதான் நிம்மதியா இருக்கு சார்.  ரொம்ப நன்றிங்க சார்…”

    மழையின் வேகம் அதிகரித்தது.  முருகனின் அப்பா முகமெல்லாம் புன்னகையோடு ஆசிரியரை உள்ளே அழைத்தார்.

    “வாங்க சார்… வீட்டுக்குள்ள வாங்க … சூடா ஒரு காஃபி சாப்பிடலாம்.  மழை நின்னுதுக்கப்புறம் போய்க்கலாம்”.

    “பரவாயில்ல சார்.  நான் வந்த வேலையைச் சரியா முடிச்சிட்டு கிளம்புறேன்.  முதல்ல உங்க பையன் முருகன பார்க்கணும்”.

    “வாங்க சார்…. கொட்டுற மழையில முருகன் குளிச்சிட்டு இருக்கான்…” இதனைக் கேட்டதும் மீண்டும் முருகன் மாடியில் இருந்து விழும் மழைநீரில் பெரும்வெட்கத்தோடு குளியலைத் தொடர்ந்தான்.

    கதிரும், ஆசிரியரும் பேசிக்கொண்டே வீட்டின் முற்றத்திற்கு வந்தனர்.  முருகன் ஆசிரியரைப் பார்த்ததும் நாணினான்.  அவரிடம்,

    “நீங்க அப்பாகிட்ட பேசுனதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன் சார்…. என்னய புரிஞ்சுகிட்டதே போதும்சார்…” என்றபோது ஆசிரியர் புரிந்து கொண்டாரே என்ற நிம்மதியும், நன்றியும், சிறுவனுக்கே உரிய வெட்கமும் ததும்பி வழிந்தன.

    கதிர் முருகனிடம், “இப்பதான் முழுமையா தெரிஞ்சுகிட்டார் சார்…” என்றபடி சிரித்தார்.

    “உங்க அப்பா சொன்னது உன் நல்ல மனச மட்டும் இல்ல…. இந்த மழை குளியல்ல உன்னோட மொத்த லட்சணத்தையும் பார்த்ததுதான்”, என்ற ஆசிரியரின் கேலிப் பேச்சைக் கேட்டதும் அவன் இதழ்களில் அரும்பிய சிறுபிள்ளைத்தமான புன்னகை, சூழலை அழகாக மாற்றியது.

    மேலிருந்து கொட்டும் மழைநீரின் குளிரும், ஆசிரியரின் கேலிப்பேச்சும் சேர்ந்து முருகனுக்கு உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. அவனது சிலிர்ப்பு குளிரால் வந்ததா, தம்மை முழுமையாகத் தெரிந்துகொண்டார்கள் என்ற மகிழ்வால் வந்ததா, அல்லது சட்டென ஏற்பட்ட வெட்கத்தால் வந்ததா என சொல்லமுடியாதபடி குறுநகையோடு நின்றான் முருகன்.

    Share
  • எங்கும் இருப்பான் முருகனே!

    எங்கும் இருப்பான் முருகனே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கால் வண்ணம் கண்டேன்
    கழல் தொழுது நின்றேன்
    வேல் வண்ணம் கண்டேன்
    விழுந்து நான் விட்டேன்

    மால் மருகன் முருகன்
    மா அடியைப் பற்றினேன்
    பால் வண்ணங் கண்டேன்
    பரவசத்தில் மூழ்கி விட்டேன் !

    சேல் கொண்ட கண்ணழகி
    தேவ யானை கண்டேன்
    மனத்தால் அரு கணைந்த
    வனக்குறவர் மகள் கண்டேன்

    ஒளவை பால் அன்பால்
    அமுதத் தமிழ் கொட்டியது
    அருணகிரி மேல் அன்பால்
    அருந்து கிறோம் தத்துவப்பால்

    திருமுகன் வைத்த அன்பால்
    குமரகுரு தமிழ்ப் பாலை
    பக்தி மயம் ஆக்கியே
    பருகிடவே வைத்து விட்டார்

    வஞ்சத்தால் மனம் மாறா
    வஞ்சகராம் சூரர் தமை
    வெஞ்சினத்தால் வேர் அறுத்த
    வேல்முருகன் கால் பணிந்தேன்

    பால் எல்லாம் முருகனே
    பல் சுவையும் முருகனே
    வேல் என்றால் முருகனே
    நால் வேதம் முருகனே

    எல்லாப் பாலிலும் முருகனே
    எல்லாச் சுவையிலும் முருகனே
    இல்லா இடமே இல்லையே
    எங்கும் இருப்பான் முருகனே!

    Share