Author: திவாகர்

  • தித்திக்குதே திருக்குறள் – 9 – சொல்லவல்லாயோ கிளியே!

    திவாகர்

    c1241a91-cbbc-41d0-ab7b-cdaf29b6e745

    அமுதகீதம்போல என்பெயரை எப்படியோ

    குமுதா குமுதாவென இனிமையாய்நீ

    பேசினாலும் என்னுள்பொங்கும் இன்பத்துக்கு

    ஊசியளவும் உன்பேச்சு இணையாகுமோடி

    நேற்றுவந்த கிள்ளைமொழிக் கிளியே

    சற்றே குமுதாகுமுதா எனக்கூவாமல்

    நடந்தகதை அத்தனையும் கேளடி

    தொடர்கதையாய் ஆயிரம் நாட்களடி

    நான்கண்டேன் வேதனையும் சோதனையும்

    அன்றொருநாள் அல்லிக்குளத்திலே அடியாள்

    நீராடும்போது மன்னரவர் பார்த்துவிட்டாரடி

    சீரும்சிறப்புமாய் என்னைக் கல்யாணம்

    செய்வேனெனச் சொன்னவரை சீண்டவில்லையடி

    வாய்பேச்சு வேண்டாம் வந்துஎம்தந்தையைப்

    பாருமென பொல்லாமன்னரை புறக்கணித்தேனடி

    பாரிலேநல்ல பெயருமில்லைதான் பார்க்கும்

    ஊர்ப்பெண்களிடம் பாதகம்வேறு செய்பவராம்

    கர்வமே தலைக்கொண்டு மாமல்லனாய்

    யாருக்கும் தொல்லையாய் இருப்பவராம்

    யார்தான் முன்வருவாரடி இவரைமணம்செய்ய?

    ஆனாலும் அவருமென்னைக் கவர்ந்ததனால்

    முன்வைத்தேன் ஒருகோரிக்கை அவரிடம்

    நான்வணங்கும் நாரணனை அவர்வணங்கி

    தானதர்மங்கள் அன்னமிடலென ஆயிரம்நாட்கள்

    ஏதுதுன்பம் வரினும் தொடர்ந்துசெய்துவந்தால்

    பேதைநான் மாலையிடுவேன் அவர்க்கேயென

    வீம்பாகச் சொன்னேனடி செல்லக்கிளியே

    நம்பினார் அவரென்னை அதுமுதலாய்

    நாளுமிந்த ஊரிலே விருந்தோம்பல்தான்

    ஆளும்அரசனெனும் பேற்றையும் மறந்து

    பிள்ளை மனங்கொண்டு விருந்திட்டாரடி

    நாளாகநாளாக அவர்விருந்தும் அதன்சுவையும்

    நாடுதோறும் வீடுதோறும் பெரும்பேரானதடி

    கடுகத்தனை சிரமமுமிலாமல் வந்தவர்க்கெலாம்

    பசியாற மனமகிழ்ந்துவிருந்திட்டார் வந்தவரும்

    ருசித்து உண்டாரடி ரசித்துமகிழ்ந்தாரடி

    காலமிது காலமடி கலியாளும்காலமடி

    சீலமிகு அடியவர்கள் நாள்தோறும்

    அதிகமானோரடி, விருந்துண்டால் கலியன்

    அதிமதுர விருந்தொன்றே உண்டாமென்றாரடி

    ஓராயிரம்நாட்களென ஏன்கேட்டேனோகி்ளியே

    வருவோர்க்கெல்லாம் விருந்தோம்பி விருந்தோம்பி

    ஏராளமாய் அவர்செல்வம் கரைந்துபோனதே

    அரசராயிருந்தவர் ஆளும்பதவி போனதே

    கடன்வாங்கினாரடி கிளியே காசுவேண்டியதால்

    உடனிருந்தோரை தனைவிடுத்து ஓடவைத்தாரடி

    கலங்கவில்லையடி கிளியே விருந்தினர்மனக்

    கலக்கம் விரும்பவில்லையடி கிளியேஅதனால்

    விருந்துச்செலவுக்குப் பொன்வேண்டி நாளும்

    பெரும்பொருள்வாங்க வழிஏதும் இல்லாது

    கொடும்கள்வனாகிப் போனாரடி கிளியேநான்

    படுகின்ற தொல்லைகளை நாரணனும்கண்டானோ

    ஏழைஇவள் சொல்லொன்றினால் மாமல்லன்

    பாழும் கொள்ளையில் ஈடுபட்டானென

    நேற்றிரவு அவனேஇவரெதிரே இவர்மேல்

    பற்றுமிகக்கொண்டு செல்வந்தன்போல வந்தானடி

    ’கலியனே! உன்பலங்கொண்டு முடிந்தாலென்

    கால்கழலினை எடுத்து விருந்துச்செலவுக்கு

    உன்னிஷ்டம்போல பயன்படுத்துக’ என்றானடி

    நாராயணனென அறியாத என்மன்னவர்தாம்

    கார்வண்ணன் கால்வளையம்கழற்ற முயன்றாரடி

    பாரளந்த பரமனவன் சீரடியில்தலைவைத்து

    கூர்பல்கொண்டு கழல்கடிக்கும் வேளையில்

    வாய்தவறி பல்லொன்று பாதத்தில்பட்டதுவே

    பாய்விரித்த பாம்பணையில் பள்ளிகொண்டவன்

    நேர்வந்து நின்று என்னவரை ஆட்கொண்டான்

    ’சீர்பெற்ற தமிழால்எனை எந்நாளும் பாடுக!

    உனைஉணர்வாய் கலியாஉலகுக்கே ஒப்பாவாய்

    திருமகள்போல் உள்ளவளாம் குமுதாவோடு

    திருமங்கைமன்னனாய் இனிதாயிரு’ என்றான்.

    சொல்லவல்லாயோ கிளியே! பசித்தவர்

    எல்லோர்க்கும் ஆயிரம்நாளாய் மனமகிழ்ந்து

    விருந்தளித்த என்னவர்க்கு நாராணனேமுன்வந்து

    விருந்துக்குவிருதாக தன்னையே அவர்க்களித்தான்

    தெள்ளியதமிழாய் நாவினிக்க அவர்பாடுவதைக்கேள்

    கிள்ளைமொழியால் நீயும்கற்பாய் அவர்தமிழை.

    குமுதாகுமுதா எனவென்பெயரைப் பேசாமல்

    அமுதமாய் கலியாகலியா எனசொல்லநீவல்லாயோ!!

    *************************************************************************************

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
    பருவந்து பாழ்படுதல் இன்று. (திருக்குறள் – 83)

    நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

    தித்திக்குதே திருக்குறள் – 9

    (விருந்தோம்பல் என்றதும் ஏனோ குமுதாவும் திருமங்கை ஆழ்வாரும் எங்கள் சொந்த ஊர் திருநகரியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட படைப்பு இது. திருவள்ளுவர் எல்லா விஷயங்களுக்கும் ஒரு குறள் வைத்திருப்பதால் இதற்கும் ஏற்ற ஒரு குறளை வைத்து எழுதப்பட்டது.)

    Share
  • தித்திக்குதே திருக்குறள் – 8

     

    அன்பே தெய்வம்

     04ae7493-c5f6-469a-b182-8711c1d60836

    திவாகர்

     

    உயிர்களிடத்தே அன்புசெய்ய வேணுமாய்

    ஆயிரம் முறைசொன்னாலும் கேளாமல்

    உந்தன் நலமொன்றையே கருத்தில்கொண்டு

    எந்தநாளும் உன்காரியம் செய்கின்றாய்

    பயன்பிறர்க்கும் அதன்பலனில் உண்டெனில்;

    சுயநலம் பேணுவதால் குறையில்லைதான்

    அறியவேணும் தம்பி நன்றாய்புரியவேணும்

    குறுகியயெண்ணங்கள் என்றும் துணைவாரா;

    உன்மீதே உனக்கன்பு என்றல்லாமல்

    அனைவர்மீதும் செலுத்துமன்பே உத்தமாம்

    உள்ளம்சிறிது உயிர்பெரிது என்றிருப்போர்

    கள்ளத்தன வாழ்க்கையே வாழ்வார்களாம்

    சற்றேகவனம் கொடுத்து சொல்வதைக்கேள்

    பற்றுமிகக் கொள்வாய் அன்பின்மீதே!

     

     

    அனாதையென்றே வந்தவனாம் அவனை

    ஆனந்தமாய் அருட்தந்தை ஆதரித்தார்

    சோறுண்டு சுகவாழ்க்கை வாழ்ந்தாலுமேனோ

    ஊறுவிளைப்பதிலேயே சுகம்கண்டான் அவன்

    தன்னலம்பார்த்தான் பிறர்நலம் கண்டானில்லை

    பின்னால் யாரும்குறைசொன்னால் அவர்க்கும்

    இன்னல்தந்தான் ஊரார்பலரை அவமதித்தான்

    இன்னும்பல தொல்லைதந்தான் கெடுதிசெய்தான்

    பெரும்வேதனையைத் தாங்காது ஊராரும்

    அருட்தந்தையிடன் சென்றார் ஊரிலே

    இவனொருவன் இருந்தால் இன்னும்பலர்

    இவனைப்போலவே திரிவர் என்றார்

    அருட்தந்தை அவரிடத்தே சமாதானஞ்செய்து

    பொருட்படுத்தாதீர் இவன்செயலை இனியும்

    யார்க்கும் தீங்குசெய்யாது வீட்டினிலே

    ஊரினிலே நல்லபெயர் வாங்கித்தருவேன்

    இவனுக்கென யாருண்டு என்னைத்தவிர

    அவப்பெயர்நீக்கி நல்லவனாக்கி காட்டுவேன்

    நம்பிக்கைதான் வைத்தார் அவருமிவனிடம்

    நம்பினார் கெடுவதில்லை வேதத்தின்தீர்ப்பு

    ’தம்பி, இனிநல்லதையே நினைக்கப்பழகு

    வம்புதனை விட்டுவிடு நல்லவனாயிரு

    நல்லதையே நினைத்து உனைவளர்த்தேனென

    நல்லபலவார்த்தை சொன்ன அருட்தந்தையை

    வன்கொடுமையாய் தன்கத்தியால் குத்திஅவர்தம்

    பொன்செல்வத்தை களவாடி ஊரைவிட்டோடினான்

    வழியில் காவலர்கள் பிடித்தனர்கட்டுப்போட்டு

    கழிகொண்டடித்தனர் கொள்ளை விவரம்கேட்டனர்

    பாரறிந்த நல்லவராம் அருட்தந்தைபெயர்சொன்னால்

    ஊர்க்காவலர் தம்மைவிட்டு விடுவரென்றெண்ணி

    அருட்தந்தை அவர்பிள்ளை தனக்காககொடுத்ததென

    பெரும்பொய்யொன்றைக் கூசாமல் சொன்னானே

    வல்லவராம்காவலரும் அவன்சொன்ன வார்த்தையால்

    நல்லவராம் அருட்தந்தை இல்லத்தில்சேர்த்தாரே

    அங்கேதரைதனில் குருதிவெள்ளத்தில் அருட்தந்தை

    அங்கம்துடிப்போடு படுத்துக்கிடக்க நிலையறிந்த

    காவலர்மருத்துவருக்கு ஆளனுப்பி காயம்பட்ட

    விவரத்தைக் கூறக்கேட்க அருட்தந்தையோ

    தன்மகனாம் இவனுக்கு மறுவாழ்க்கைக்கொடுக்க

    என்செல்வங்களாம் தங்கநகைகளைத் தந்தேனே

    இன்னும்ஏதேனும் தருவதற்கு பரண்மீதேறுகையில்

    தன்தவறால்கத்தி தடுமாறி தன்மீதுவிழுந்ததென

    தயக்கமின்றி அவர்பேச தடுமாறிபோனான்கள்வன்

    மயக்கம்வந்தது மனதும் தெளிந்ததுமாறிப்போனான்

    ’எந்தையே எனைக்காக்கும்தெய்வமே மன்னியும்

    சிந்தைதெளிந்தேன் உமதன்பினாலே மாற்றினீர்!

    காசுபணம்செல்வம் இவையே நம்பினேன்ஆனால்

    மாசற்றஅன்பே தெய்வம் என்போர்பெரியோர்

    நீவிர்காட்டிய அன்பால் எமையாட்கொண்டீர்

    நீவிர்தெய்வம்.. எனைமன்னியுமென கால்பற்றினான்

     

     

    தம்பி! கேட்டாயா இந்தக்கதையை

    நம்பிக்கை வைத்திரு அன்பின்மேலே

    அன்பால் கொடியவரை வெல்லலாம்

    அன்பைப் பிறர்மீது திருப்பினால்

    அன்பால் எதையும் வாங்கலாம்

    அன்பை மற்றவரிடம் காட்டினால்

    அன்பொன்றே நாமறிந்த ஆயுதமாய்

    அன்பொன்றே நாமறிந்த மந்திரமாய்

    அன்பொன்றே நாமறிந்த தெய்வமாய்

    என்றைக்கும் சிந்தித்துச் செயல்படுவாய்!!

     

     

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

    என்பும் உரியர் பிறர்க்கு. (திருக்குறள் – 72)

     

    அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உடமையாகக் கொண்டு வாழ்பவர். அன்பு உள்ளவரோ தன் உடல் பொருள் அனைத்தையும் பிறருக்காக என்றே கருதி உதவி அருளுபவர்.

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • தித்திக்குதே திருக்குறள் – 7

     

     

    மூன்று கேள்விகள்

    திவாகர்

    நன்றி: ஹிண்டு.காம்
    நன்றி: ஹிண்டு.காம்

    சோறுடைத்த சோழநாட்டில் பஞ்சமோபஞ்சம்
    அறிவுக்குப் பஞ்சம்வந்தததாம் சொல்கின்றான்
    ஆக்கியாழ்வான்; அவனடி பணியவேண்டுமாம்
    போக்கற்ற பண்டிதனாய் பிதற்றுகிறானென
    அவன்போக்கில் அவனை விட்டுவிட்டால்
    அவனேயனைத்தும் அறிந்தவனாய் ஊர்சொல்வர்
    பண்டிதன்கேள்விக்கோ பதில்சொல்வார் இல்லை
    பண்டையகாலத்து வேதமெல்லாம் அறிந்தவனாம்
    சாத்திரங்கள் ஓதியோதி நாத்தழும்பானவனாம்
    தோத்திரங்களெல்லாம் அவனுக்கே சொந்தமாம்
    கற்றோருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லைதான்
    கற்றோரே இங்கில்லையென இவன்கூவுகையில்
    கற்றாரொருவர் உளரேல் கொண்டுவாருமென
    கொற்றவன் கோபத்துடன் ஆணையிட்டான்
    ‘ஈசுவரமுனியே உமக்குமிஞ்சிய கற்றவர்தாம்
    காசினியிலுண்டோ வாதுசெய்ய வாரீர்
    சோணாட்டுத் திறமையெலாம் ஊருலகம்
    காணுமாறு உம்பாண்டியத்தியம் தெரியவேணும்’

    ‘ஆண்டவனையன்றி வேறேதும் நானினையேன்
    பாண்டித்தியமெல்லாம் பரமனுக்கே வெளிச்சமாம்
    அரசனிட்ட ஆணையென்றீர் அரசனிடம்சொல்லும்
    சுரம்வந்தவன்போல ஈசுவரமுனி ஆகிவிட்டேன்
    ஊரெல்லாம் போற்றுகின்றார் அவன்புகழை
    பாரினிலே பலகலைகள் பயின்றபண்டிதனாம்
    ஆக்கியாழ்வானிடம் வாதம்செய்வது கொடும்
    நாக்கைநீட்டும் தீப்பிழம்பில் வீழ்வதுபோலாம்
    வாழும்போதே ஊருக்குள் தலைகுனிவதைவிட
    பாழும்கிணற்றில் எனைத்தள்ளுவதே மேலாம்’
    ஈசுவரமுனியின் மகனாம் யாமுனன்கேட்டான்
    ‘பாசமுள்ள தந்தையே தலைகுனியவேண்டாம்
    ஆட்டமாடும் குழந்தையாய் வளர்க்காமலெம்
    பாட்டனிடம் பலகலைகள் பயிற்றுவித்தீர்
    பால்மணம்மாறா பாலகனாய் பார்க்கவேண்டா
    காலம் கனிந்திருக்க நாலுமறிந்தவனாய்
    கற்றவித்தையைக் காண்பிப்பேன் ஊரார்
    போற்றும்விதமாய் ஆக்கியாழ்வானை வென்று
    தந்தைக்கு மகனாற்றும் கடமையென
    சிந்தையிலே கொண்டெனை அனுப்பிவீரே’

    குழந்தையே தெய்வமாய் வந்ததெனத்தன்
    குழந்தையோடு தந்தைசென்றான் வாதுசெய்ய
    தேசத்து நல்மக்களெல்லாம் அதிசயித்து
    பாசத்தால் அவர்பின்னால் சென்றனரே
    கற்றாரும் சுற்றாரும் கலங்கியவராய்
    பற்றுடனே சபையினிலே பார்த்திருக்க
    யாமார்க்கும் அஞ்சோம் நமனையஞ்சோமென
    யாமுனனும் கலங்காமல் பதிலளித்தானே
    சுள்ளென சூட்டிகையாய் சொன்னவிதமும்
    பிள்ளையின் பதில்களத்தனையும் சரியேயென
    சுவையான சொற்கூட்டமென கண்டுகளித்து
    அவையோரும் சான்றோரும் பிரமித்தனராம்
    யாமுனனும் தன்முறைவந்ததும் சொன்னான்;
    யாம்கேட்கும் மூன்றே மூன்றுகேள்விக்கும்
    ஆக்கியாழ்வானோ மறுத்துப் பேசவேணும்
    ஆக்கியாழ்வான் அப்படி மறுக்கவில்லையெனில்
    எம்மறிவின்முன் அவரென்றும் தோற்றவரே
    சம்மதமெனில் செவிமடுப்பீர் எம்வார்த்தைகளை!

    உம்மைப் பெற்றதாய் ஒருமலடியல்லள்
    சிம்மமாய் அரசாளும் எம்ராஜன் ஓர்தர்மவான்
    அம்மையாய் அமர்ந்திருக்கும் அரசியும்பத்தினி
    உம்மால் மறுக்கமுடிந்தால் மறுத்துச்சொல்லும்

    முன்வந்ததே கோபம் ஆக்கியாழ்வானுக்கு
    சின்னஞ்சிறுவனே எப்படியிவைகளை மறுப்பதாம்
    என்னால்மட்டுமல்ல யாராலும் முடியாது
    உன்னால்முடியுமோ முடிந்தால் மறுத்துச்சொல்

    அன்பிலே அனைவருக்கும் மூத்தவளாம்
    அன்னையெனவே உலகம்செல்லும் வழக்குப்படி
    உம்மைப் பெற்றதாய் ஓர்மலடியென்பேன்
    இன்னொன்று பெற்றாளில்லை உமக்குப்பின்
    ஒன்றுபின்னொன்றாய் ஓரிரண்டு பெற்றிருந்தால்
    ஒன்றின் ஆயுள்முடிந்தாலும் அடுத்ததுமீறும்
    விதியின்செய்கை யார்தான் அறிவார்
    விதிவினை விளைவால் நீவிர்மறைந்தால்
    அன்னையவள் பிள்ளைஇல்லாமல் அழுவாள்
    பின்னை நினைக்கையில் இன்னொன்றினை
    பெற்றிருந்தால் பேறடைந்த பெருமையை
    பெற்றிருப்போம் ஆறுதல் அடைந்திருப்போம்
    ஒன்றேபெற்று மலடியாகிப் போனோமெனும்
    தொன்றேவரும் வழக்கை சொல்லிமாள்வாள்

    அரசனென்பவன் அனைவருக்கும் தலைவன்
    அரசனெவ்வழியோ மாந்தர் அவ்வழிதான்
    பொதுவாய் மாந்தரென்போர் நல்லோர்தீயோர்
    அதுபோல் தீயோர்செய்கை அதர்மத்தின்வழியே
    நல்லரசனென்போன் எத்தனைதான் தடுத்தாலும்
    பொல்லாதவர்தாம் பொழுதும் தோன்றுவரே
    மாந்தரிலே அதர்மங்கள் இருக்குமிவ்வுலகில்
    வேந்தன்மட்டும் தர்மவானாக இருப்பதெப்படி?

    உயர்பண்பின்சிகரமாம் மாதரசியார் அவர்தம்
    உயிருக்குயிராம் மன்னவர்தம் கரம்பற்றி
    மந்திரம்படித்து தீவலம்வந்து மணம்செய்தாரே
    மணம்செய்யுமுன் வரும்மந்திரங்கள் அறிவீரோ
    குணவதியாம் இம்மணமகளை தேவர்களாம்
    இந்திரன் சந்திரன் கந்தர்வன் இவர்களிடம்
    வந்தனம்செய்து பெற்றுக்கொள்கிறேனென்றே
    மந்திரம்சொன்னதே அதன்படி பார்க்கையில்
    சொந்தமனைவியே எப்படி பத்தினியாவாள்?

    அரசவைகலகலத்தது மாதரசி எழுந்தாள்
    கரகோஷம்விண்ணைப் பிளக்க மன்னவனும்
    வாதித்த ஆக்கியாழ்வானும் எழுந்துயாமுனன்.
    பாதம்பற்றி தூக்கினர்; கொஞ்சிமகிழ்ந்தனர்
    ‘யாமுனன்வாய் எம்மையாளவந்தவாய்
    பாமரனும் பார்மன்னரும் போற்றும்வாய்
    வாதினில் வென்ற ஞானக்குழந்தையானாய்
    ஏதினிக் குறையெமக்கு வேதவித்தகனே
    பெற்றவர்தம் பெரும்புகழைக் காத்தவனே
    கற்றபயன் இன்னதென்று காண்பித்தாய்
    சோழவளநாட்டுப் பெருமை காத்தவனே
    வாழ்நாள்முழுதும் இனி ஆளவந்தானாக
    அறிவில்பெரியோனாய் ஆற்றல்மிகுந்தவனாய்
    பெரும்பேறுபெற்று பெருவாழ்வு வாழ்வாயே’

    மகவை ஈன்றபொழுது கிடைத்தவின்பத்தைவிட
    மிகமகிழ்ச்சி தந்தாய் எந்தன்மகனேயென
    யாமுனனை அந்தஅவையை ஆளவந்தானை
    தம்மோடணைத்து உச்சிமுகர்ந்தாரே ஈசுவரமுனியே

    —————————————————————————————-

    தித்திக்குதே திருக்குறள் – 7
    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனுஞ் சொல். (குறள் – 70)

    மகன் தந்தைக்குச் செய்யும் கடமை ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லே ஆகும்.

    (மேலே உள்ளது வைணவ ஆச்சாரியாரான யாமுனாச்சாரியர் (ஆளவந்தார்) சரிதத்திலிருந்தகருத்து)

    Share
  • தித்திக்குதே திருக்குறள் – 6

    கூறாமல் சந்நியாஸம் கொள்

    திவாகர்.

    1ce9ac4f-e397-4da4-afd1-6bbb8c11ff45

    ஒருமுறை இருமுறையல்ல அண்ணே

    ஓராயிரம்முறை எடுத்துச்சொல்லியாச்சு

    மனையாள் மனதால் இணையவேணுமென

    மனசாட்சியாம்நான் மனதார சொல்லியாச்சு

     

     

    மணநாளன்று மெட்டிக்காகக் குனிந்தவன்

    மனையாள் கால்விரலைப்பிடிக்காது அவள்

    காலைப்பிடித்தாய் இன்றுவரை நிமிரவில்லை

    தலையணை மந்திரமென்று தந்தவளுக்குத்

    தலையசைத்து மந்திரத்தில் மயங்கிவிட்டாய்

    நாளெல்லாம் அவள்பேச்சு அவள்மூச்சு

    அவள்போக்கில் வாழப் பழகினாயே

    இருவரும் இணைந்து செல்லும்பாதைக்கு

    இறைவன் வாழ்க்கையென பேர்கொடுத்தான்

    இணைந்துசெல்ல இருவர் எதற்கென்றே

    பிணைக்கைதியாகி அவள்பின் சென்றாய்.

    மணப்பொருத்தம் பார்த்தவர்தாம் ஏன்மறந்தார்

    மனமொத்த தாம்பத்யத்யமே தகுதியானதென

    கணப்பொழுதேனும் உன்மனதைக் காயமாக்காமல்

    கணவனெனத்தான் உன்மனைவியவள் மதித்தாளா

     

    மனையாளுக்கு மறுபெயர் மனைச்செல்வமாம்

    உனையாளும் மனையாளோ மறந்தாளிதனை

    புதுமுகமாய் புக்ககத்தில் அடிவைத்தவள்தான்

    புதிதுபுதிதாய் குறைகளைக் கொண்டுவந்தாளே

    பழக்கமில்லா உறவுகளை அறவேவெறுக்க

    பழையமுகங்கள் ஒவ்வொன்றாய் வெளியேற

    ஊருணிநீரை வெறுமனேவீதியில் வீணாய்விட்டு

    கார்மேகநீரை காற்றில்பிடிப்பாராம் அதுபோல

    உன்வீட்டுச் செல்வங்கள் இவளெடுத்துவீணாக்கி

    பொன்வாங்கி மணிவாங்கி அதுவும்பயனற்று

    குறைசொல்லி கோள்சொல்லி தூக்கிவீசி

    கொடும்வார்த்தை வாய்பேச குணநலனும்

    கெட்டுப்போக நாள்போக நாள்போக

    ஊரிலே உலகத்திலேஉன்பெயரையும் வீணாக்கி

    உறவுகளென்று வந்தவரெல்லாம் வந்தவுடன்

    விரைந்துஓடும் வழிபார்க்க வைத்துவிட்டாள்

     

    எத்தனைகாலம்தான் பொறுப்பது என்பதல்லாமல்

    இத்தனையும் வேடிக்கையாய்ப் பார்த்தாய்தான்

    ஒருவார்த்தைசொன்னால் உன்னுள்ளே அச்சமாம்

    மறுவார்த்தை சுடும்வார்த்தையாய் கேட்பாயே

    மனையாளின் போக்குக்குத் தலையாட்டினாயே

    உன்மனப்பாங்கு அவளறிந்ததால் நிலைமாறினாள்

    உனைப்பெற்றவள் இன்றுவரை பொறுமைகாத்தாள்

    அன்னையுலகுக்கே அன்புதெய்வம் அவளாம்

    தன்மானத்தால் தலைநிமிர்ந்து வாழ்ந்தவளாம்

    உன்மனையாள் அவளையும் துரத்திவைக்க

    உனைப்பெற்ற பாவத்துக்குப் பலியானாயே

     

     

    வழக்கம்போல வாய்மூடி பயனற்றதாய்

    வாழ்ந்ததுபோதும் இதுவரை அண்ணே

    பொறுத்ததுபோதும் பொங்கட்டும்அண்ணே

    பேருபோனதெல்லாம் போகட்டும் அண்ணே

    உன்மனசாட்சிநான் சொல்வேன் கேள்அண்ணே

    உன்போன்றோருக்கென்றே வந்தசொல் அண்ணே

    தமிழில் வரமாய் தந்தசொல்அண்ணே

    தமிழ்தந்த அவ்வைவாயால் தரணிக்கேஅண்ணே

    ஓராயிரம்முறை சொன்னசொல் அண்ணே

    கூறாமல் சன்னியாஸம்கொள் இனியே.

     

     

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

    இல்லவள் மாணாக் கடை (திருக்குறள் -53)

     

    மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.

     

    தொடருவோம்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • தித்திக்குதே திருக்குறள் – 5

     

    இல்லாளைக் காப்பதற்கே அவன் வருவான்

     

    திவாகர்

    4cc22b24-a0a8-4540-9369-d6da16e66d07

    நம்பமுடியவில்லை தமயந்தி  நீசொல்வதை

    நம்பமுடியவில்லை என்மகளா சொல்வது

    மறுகல்யாணத்துக்கு சம்மதமென! விதியால்

    ஒருகல்யாணம் செய்து வாழ்விழந்தாய்

    தந்தைநான் மகளுக்கோர் மறுவாழ்வு

    வந்தால் மறுப்பவன் தந்தையல்லன்

    காட்டிலே கட்டியமனைவியை விட்டநளன்

    நாட்டுக்கினி திரும்புவது நிச்சயமில்லையே

    வருடங்கள் ஏழாயிற்றே எங்கேதான்

    இருப்பான் என்பதும் தெரியவில்லையே

    உயிருக்குயிராக இருப்பதாக முன்சொன்னவன்

    உயிரோடிருந்தும் எப்படித்தான் மறந்தானோ

    அல்லும்பகலும் அவனேகதியென யிருந்தவளை

    அல்லில் அல்லல்படுத்தி மறைந்தானே

    இல்லாளே இனியில்லை எனநினைத்து

    இல்லம்வரை கூடவிட்டுவர மறுத்தானே

    கல்நெஞ்சத்துக் கள்வனைப்போல நள்ளிரவில்

    நல்லாளை நன்மதியாளைப் பிரிந்தானே

    நல்லமனமில்லையம்மா அந்த நளனுக்கென

    சொல்லமனம் கூசினாலும் சொல்லவைத்தானே

    எண்ணியெண்ணி ஆறாமல் இருந்தேனே

    கண்மணி நல்லதோர் பதில்தந்தாயம்மா

    மறுமணம் சம்மதமென்றாய் இனிநீ

    மறுசொல் பேசாதே மற்றவையென்கையில்

     

    ஒருசொல் சொன்னேனேயென அப்பா

    ஓராயிரம் வசவுகள் பதில்தந்தீரே

    நளமகாராசன் என்கணவன் அவனைக்

    கள்வனாகக் கல்மனதாய் கடிந்தீரே

    ஓருயிராய் ஈருடலாய் வாழ்ந்தோம்

    ஆருயிருக்கும் அப்பாலும் அன்பாயிருந்தோம்

    அன்புக்கு மறுசொல் உண்டென்றாலது

    அன்பான நளச்சக்கரவர்த்தி என்பேனப்பா

    சொல்லின் செல்வன் என்கணவனப்பா

    நல்லறனும் காப்பவன் அவன்தானப்பா

    பெரும்பண்புக்கு பேர்போனவன் எவனென்றால்

    பெருமையாய்சொல்வேன் அதுவும் நளனேதானப்பா

    அன்பும்பண்பும் கொண்டநளச்சக்கரவர்த்தி

    எனையேன்விடுத்தான் ஆராய வேண்டுமப்பா

    சூதத்திலே நாட்டையும்வீட்டையும் இழந்தவன்

    சேதமும்சோகமும் தனக்குமட்டுமே என்றானப்பா

    தான்கொண்டகாதலிக்கு அத்துன்பம்வேண்டாமென

    நானென் தந்தையாரிடம் தனித்திருக்கச்செய்து

    தான்மட்டும் எனைவிடுத்துத் தனியேசெல்வானாம்

    ஏனிந்த தண்டனையென நான்கேட்க

    சுகத்தை மனையாளோடு பங்குபோடலாம்

    சோகத்தைப் பங்குபோட்டால் அது அறநெறியோ

    நாளாகநாளாக பிரிவென்பது மரத்துப்போகும்

    வேளைவந்தபின் முழுதுமெனை மறப்பாயே

    நாளும்பொழுதும் நளனேயென வாழ்ந்தவள்

    நாளாகநாளாக நளனை மறப்பேனோ

    நாட்டிலேசுகம் கண்டு நன்றாயிருந்தவளை

    காட்டில்வாழ்வதே  துன்பம் எனக்கண்டாயோ

    காடும்நாடும் நளனிருக்க வருத்தம்தாரா

    வீடுசென்றாலோ நளன்நினைவே துயரமாம்

    வாழ்ந்தாலும் உன்னோடுதான் என்வாழ்வே

    வீழ்ந்தாலும் உன்மடியில்தான் என்சாவே

    மன்றாடிநின்றவளை நன்றெனவே அன்றே

    தன்னோடு என்னையும் கூட்டித்தான்போனான்

    இரவுவந்ததப்பா இவரோடிருக்கையில் எனக்கு

    இரவும்பகல்போல இதமாக உணர்ந்தேனப்பா

    கட்டிலிலே பஞ்சுமெத்தையிலே படுப்பவளேயின்று

    கட்டாந்தரையில் எப்படித்தான் படுப்பாயோ

    கண்கொண்டு காணேனே கண்ணின்மணியே

    கண்ணுறங்கு இன்றுமட்டும் என்றானே

    பெண்படும் துன்பத்தைப் பொறுக்காமல்

    பண்பாளன் சொன்னானோ ஒருவார்த்தை

    புரியாமல் கண்ணுறங்கினேனப்பா புரிந்தது

    மறுநாள்காலையில் அவன்பிரிந்த காரணம்

    மனையாளின் மீதுவைத்த அன்பேயப்பா

    மனமுருகி அவனறநெறியை உணர்ந்தேனப்பா

     

    என்னவெல்லாம் சொல்கின்றாய் தமயந்தி

    சொன்னவார்த்தை அத்தனையும் உண்மையானால்

    மறுகல்யாணம் என்கின்ற உன்விருப்பமென்

    சிற்றறிவுக்கு சிறுபிள்ளைத்தனமாய் படுகின்றதே

     

    சிறுபிள்ளை விளையாட்டல்ல தந்தையே

    மறுகல்யாணம் என்றொரு மார்க்கத்தில்

    அறநெறியோடு சுயம்வரமெனும் ரூபத்தில்

    சிறப்பான என்கணவனை திரும்பப்பெறுவேன்

    உள்மனதொன்று இடித்துச் சொன்னதப்பா

    உள்ளங்கவர் கணவனை அழைத்துக்கொள்ளென

    இதுவேதருணம் என்றே சொல்லியது

    வதுவைசெய்தவன் வரத்தான் செய்வானென

    உயர்பண்பாளன் நளன் எங்கிருந்தாலும்

    சுயம்வரச்செய்தி அவன்செவிக்குச் செல்லுமப்பா

    அன்பையெல்லாம் என்மீதே வைத்தவனப்பா

    என்பால் எனைநினைந்து எங்கும்நில்லாமல்

    இல்லாளைக் காப்பதற்கே நளன்வருவான்

    இல்வாழ்க்கைப் பயனையும் அவன்தருவான்

     

    *******************************************

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது. (திருக்குறள் – 45)

    இல்வாழ்க்கை அன்பும் தர்மநெறியும் உடையதாய் விளங்கினால் அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

     

    தொடருவோம்.

     

     

    Share
  • உள்ளத்தில் ஊறவைத்த ஊனங்கள்

     

    திவாகர்

     e6c45fe1-e1a2-4984-896a-a2f8f14e2011

    என்னபேச்சு பேசிவிட்டாய் பேச

    உன்னால் எப்படித்தான் முடிந்ததோ

    என்மேல் காதலென்று சொன்னதெல்லாம்

    புனைகதையோ பொய்யோ முறையோ

    நான்மாயம் செய்யும் மர்மமங்கையோ

    நானுனக்கு செய்ததெல்லாம் துரோகமா

    நாணத்தோடு மாமனேயென நேர்மையாய்

    நான்மையல் கொள்வதெல்லாம் வேடமா

    நல்லமனத்தால் நான்செய்யும் சேவையை

    கள்ளத்தனமென கலங்காமல் தீர்ப்பளித்தாயே

    உள்ளத்தால் உண்மையாய் உறவாடாமல்

    உள்ளுக்குள்ளே ஊனத்தை ஊறவிட்டாயே

    உடலெல்லாம் விஷமென்று உளறினாயே

    உடல்மட்டும்தானே என்னில் உன்விருப்பம்

    சந்தேகம் என்கின்ற வெந்தணல்கொண்டு

    தேகத்தோடு என்னுள்ளத்தையும் காய்ச்சினாய்

    என்னபேச்சுபேசிவிட்டாய் அத்தனையும்

    உன்நாவால் திரும்பப்பெறமுடியுமோ

    அப்படியென்னதான் கண்ணால் கண்டாய்

    அப்படிநான் செய்ததை தவறென்பாயோ

     

    அனாதையென ஆதியிலெனை அவர்வளர்த்தார்

    அன்றாடம் அன்னம்போட்டு அறிவையும்

    சேர்த்து வளர்த்தசெம்மல் அவரையா

    பார்த்து சந்தேகம் வளர்த்தாய்?

    ஆசானாக என்னை வளர்த்தவரை

    ஆசைநாயகனாக வர்ணித்தாயே ஐய்யோ

    தாயும்தந்தையுமாக இருப்பவரை

    பேய்போல நினைத்துப் பிழைசொன்னாயே

    ஆசையோடா அவர்கால் பிடித்தேன்?

    பாசமும் நேசமும் அறியாதவனே

     

    உடல்நடுங்க சுரம்வந்து கொதித்து

    உடல்வலியோடு படுத்தவரின்

    காலைப்பிடித்துவிட்ட நானாதுரோகி?

    வாலைக்குழந்தையாய் அவரோடு

    காலமெல்லாம் வளர்ந்ததை அறியாயோ

    கால்பிடித்தது தொட்டது குற்றமோ

    பாசத்தோடுபிடித்துவிட்டதை இப்படி

    ஆபாசமாக பார்த்து ஏசலாமா

     

     

    பெண்ணினால்தோன்றி பெண்ணோடுவளர்ந்து

    பெண்ணென்றால் யாரென அறியாயோ

    அன்பின்வடிவம் பெண்ணென உணர்வாயோ

    சின்னத்தனமாய் சுயநலத்தைப் பேணிவிட்டாய்

    மனம்கனக்க என்னன்னவோ பேசிவிட்டாய்

    ஆசை என்மேல்கொண்டால் போதுமோ

    ஆசையைப் பாசமாக மாற்றவில்லையே

    கூசாமல் ஏசத்தெரிந்த உனக்கு

    நேசத்தைப் போற்ற முடியவில்லையே

    அழுக்காறு.மனத்தில்கொண்டு என்மனம்

    பழுக்கக்காய்ச்சி பேசி நோகடித்தாயே

     

    என்னபேச்சு பேசிவிட்டாய் பேச

    உன்னால் எப்படித்தான் முடிந்ததோ

    சுயநலத்தின்மேல் ஆவல்வைத்தாய்

    பயனில்லா வசவுகளை வீசிவிட்டாய்

    உன்னோடு முடிந்துபோச்சு என்னுறவு

    இனியும் காணாதுதனியே என்னைவிடு

    இன்னாசொல்லே சொல்பவனோடு 

    இனியும்வாழ்ந்தால் ஊரேயிகழும்

    ஒழுக்கமே உயிரினும் பெரிதென்பவளிடம்

    அழுக்கு எனச்சொல்லி அழவைத்தாயே

    அசூயையே உருவாய் வந்தவனே

    மாசில்லா மங்கைநான் விடைபெறுகிறேன்

     

    அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்

    இழுக்கா இயன்றது அறம் (திருக்குறள்-35)

     

    (பொறாமையும் ஆசையும் கோபமும் கடுஞ்சொல்லும்

    ஆகிய இந்நான்கு குற்றங்களையும் விட்டு நடப்பது அறமாகும்)

     

    தித்திக்குதே திருக்குறள்-4

     

     

     

     

    Share
  • சிற்பத்தின்பிழை சிற்பியின் பிழையன்று

     

     

    திவாகர்

    Tnayak-edited

    மீன்விழியாள் அருள்நல்கும் நல்

    மாநகர்மதுரையே விழாக்கோலத்தில்

    மன்னனுக்கு திருமணமாம் கோயிலிலே

    பொன்னனைய புதுமனையாள் கைபிடித்தான்

    கன்னல்மொழிபேசும் காரிகையோ கண்பார்த்தாள்

    கணவனவள் கண்மொழியை அறிந்தான்போலும்

    என்னவளே என்னவேண்டும் கேளென்றான்

    புன்னகையாய் ஒருவரத்தைக் கேட்டாள்

     

    ஐயனே என் மன்னவனே மீனாளின்

    கோயிலிலே என்னைக் கரம்கொண்டவரே

    ஆலயத்தில் சிலைகளெல்லாம் கண்டீரோ

    காலத்தால் சிதையாத கற்சிலைகளாம்

    அதுபோல அடியாளுக்கும் ஓர்சிலை

    ஏதோ ஓர்மூலையில் வைப்பீரா?

    மீனாளின் காலடியை எந்நாளும்நான்

    வணங்கி ஏங்குவதுபோல வடிப்பீரா

     

    மன்னனவன் மனம்மகிழ்ந்தான் அருகே

    அன்புமிகுமந்திரியார் நீலகண்ட தீட்சிதர்

    மன்னனவன்முகம் பார்த்து மனமறிந்தார்

    மன்னன்மனைவிபோல் அச்சிலைசெய்ய

    பொறுப்போடு பணி ஏற்றார்பின்னர்

    சிறப்பான சிற்பிகளை அழைத்தார்

    அழகானவள் அன்பானவளான அரசியாரின்

    பிழையில்லா சிலைவடிக்க ஆணையிட்டார்

     

    நாளும்பொழுதும் நன்றாகவே கழிந்தது

    நாளொருமேனி பொழுதொருவண்ணமாய்

    அரசியின் கற்சிலையும் உருப்பெற்றாலும்

    அறிவே உருவாம்நீலகண்டரும் நித்தமும்

    வருவார் குற்றம்குறை களையச்செய்வார்

    பெருமையாய் சிற்பியும் சிலைவடித்தார் 

    ஆனாலும் ஓர்குற்றம் ஓரிடத்தில்வந்ததே

    ஏனென்றுதெரியாமல் சிற்பியும் கலங்கி

    மீனாளின் அடிப்பொடியாம் நீலகண்டரிடம்

    தான்கண்ட குற்றத்தைக் காண்பித்தான்

     

    ஏதுசெய்வேன் சொல்வீரோ ஐயன்மீர்

    மாதரசி தொடையின் மேற்பகுதியில்

    உளிகொண்டு செக்கினாலும் ஆங்கோர்

    துளியிடத்தில் எத்தனைதான் செய்தாலும்

    புள்ளியாய் அவ்விடத்தில் நின்றுவிடுகிறதே

    எள்ளிநகையாட இடம்கொடுக்குமே

    காரணம்நான் அறியேன் மன்னர்வந்து

    பார்க்குமுன்னே சரிசெய்யவேண்டுமே

     

    தினம்சக்தியை உபாசிக்கும் நீலகண்டர்

    மனம் அதேசக்தியை நாடிக்கேட்டதுவே

    கண்களைமூடி தியானித்தவர் முன்மனக்

    கண்ணின்முன் காட்சிகிடைத்ததுவே

    சிற்பியாரே கவலையை விடுமின்

    கற்சிலையில்குற்றமில்லை மன்னன்

    மனைவியாரின் மேற்கால்பகுதியில்

    தினையளவுமச்சம் ஒன்றுண்டு அறிந்தேன்

    அங்கயற்கண்ணியின் அரியபக்தை அவள்

    ஆங்கதனால் அவள்சிலையும் இப்படியானதே

     

    கூடயிருந்த வீரனொருவன் இவர்சொல்கேட்க

    ஏடாகூடமாய் மன்னன்காதில் போட்டுவைக்க

    மன்னன் மனம்தள்ளாடி தடுமாறிப்போனதுவே

    என்னஇது எப்படியிது தான்மட்டுமே

    பார்த்ததாய் தான்நினைத்தால் தன்னைமீறி

    பார்முழுதும் பார்த்ததுபோல பறைகின்றார்

    யார்கொடுத்தார் இத்தனை தைரியமிந்த

    மூர்க்கதீட்சிதருக்கு..இனிவேண்டாம் இந்தமந்திரி

    நிற்காதே போவீரனே ஆணையிடுகிறேன்நான்

    கற்சிலையைப் பார்த்துப் பித்தாகிக்கிடக்கும்

    நீலகண்டன் கண்களிரண்டையும் உடனே

    காலம்தாழ்த்தாமல் தோண்டிப் பிடுங்கிவிடு

     

    பறந்தார்வீரர்கள் இருவர் கட்டளையை

    நிறைவேற்றவே நீலகண்டர் இல்லத்தில்

    அம்மையின்முன்னே கண்மூடிக்கிடந்தவர்

    அம்மையினருளால் நடந்ததை அறிந்தார்

    சிறியோன் இந்தமன்னன் என்னை

    அறிந்தோன் அல்லன் அறிந்தால்

    அழகிய அவன்மனைவி என்னில்லத்தில்

    குழந்தையாய் வளர்ந்ததை அறிந்திருப்பானே

    கோபம் அறிவையும் மறைக்கும்

    பாபம் செய்யவும் வைக்கும் ஐயோபாவம்,

    மன்னனுக்கு ஏனிந்தவருத்தம் தரும்செயல்

    மன்னராட்கள் வரும்வரை காத்திருப்பானேன்

    சிற்பியின் குற்றமல்ல சிற்பத்தின்குறை

    சிறப்பாய்காண்பித்தாளே இன்று அன்னைமீனாள்

    மன்னனின்குற்றமல்ல விதிசெய்தவினையே

    மன்னரை மன்னித்தருள்வாயே மதுரைமீனாளே

    வேண்டினார் கையிலே எரிகற்பூரம்ஏந்தினார்

    கொண்டுதழலைத்தம் கண்களிலே அப்பிக்கொண்டாரே

     

    மன்னனுக்குவிஷயம் போனது ஓடிவந்தான்

    மன்னித்துவிடுங்கள் என்றுதாள்பணிந்தான்

    அடியேன்சிறியேன் சிறியேன் என்றான்

    அடிபற்றிக்கொண்டே அழுதுபுரண்டான்

    தன்கண்போனாலும் தவறாக தண்டித்தவனை

    மன்னிக்கும்மாண்பு உடைய தீட்சிதரே

    பெரியோனே உம்மையினிப் பிரியேனென்றான்

    பெரியவள்மீனாளை மீண்டும்கண்வழங்க

    பெரியமனம் செய்து பாடவேண்டுமென்றான்

    பெரியவரும் மனம்கனிந்தார் மீனாளுக்கு

    ஆனந்தசாகரஸ்தவம் நூற்றெட்டு பாடினார்

    ஆனந்தமாய் அவர்பார்வை திரும்பியதுவே

     

    திவாகர்

     

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

    செயற்கரிய செய்கலா தார் (திருக்குறள் -26)

     

    செய்வதற்கு அருமையானவற்றை செய்பவரே பெரியோர்; செய்வதற்கு அரிய செயல்களை செய்ய மாட்டாதவர் சிறியர்,

    appayya-dikshithar-and-nilakantha-dikshithar

    (திருமலைநாயக்கரின் மந்திரியும் வேதாந்தியுமான அப்பய்யதீட்சிதரின் சகோதரி பேரன் நீலகண்டதீட்சிதர், அவர் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சி)

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • உயிர் பிரிந்து போகும் காண்!

     

    திவாகர்

    755f9efe-8196-4e23-bb3e-1723b76204b1

    மழையே மழையே மனமகிழ்
    மழையே மிதமாய் மிதமாய்
    பெய்யும் மழையே சுகமாய்
    சுகமாய் பொழியும் மழையே
    பையப் பையப் பெய்கின்றாய்
    வையம் வாழ்த்தப் பொழிகின்றாய்
    பார்க்கப் பார்க்க பரவசம்
    பாரெல்லாம் நனைகின்றதே
    சிறகு நனைக்கும் பறவைகளோடு
    பறந்து திரிந்து மழையுனூடே
    பரந்துகிடக்கும் வான்வெளியில்
    வரும்நீர் பருகத் தோன்றுதே

     

    பச்சை மரங்கள் அசைந்தாட
    இச்சைகொண்ட இலைகள்மேல்
    வலியும்தெரியா உணர்வுடனே
    வலுவில்லாமல் விழுகின்றாய்
    கருப்பைநிறைந்த மேகங்களின்
    கருவினைத் திறந்துவெளிவந்த
    பிறந்தகுழந்தைக்கிணையாக
    மிருதுவாய் வந்து விழுகின்றாய்
    பூவெல்லாம் கூட இதழ்தாங்கி
    சாவகாசமாய் கீழனுப்பி
    பூமித்தாய்க்கு பாரமிலாமல்
    சாமிதந்த வரம்போல
    வருத்தம்தராமல் பொழிகின்றாய்
    கருமேகத்தின் வண்ணம்கொண்ட
    குறும்புக்கண்ணன் அம்புகளாய்
    கரும்புத்தமிழ்மகள் கோதைசொல்படி
    சரங்களாய்மண்ணில் விழுந்துகொண்டு
    சரசரசடசடவென சப்தம்செய்து
    நிறைவாய் நித்தமும் பெய்கின்றாய்
    குறைகள்நிறைந்த பூவுலகில்
    குறையை நீக்கமுயல்கின்றாய்
    இறையும் இனிக்கப் பெய்கின்றாய்

     

    மறையாப்புகழ் கம்பனும்கூட
    இறையாய் உன்னைப்பாடினான்
    உப்புக்கடலுள் உள்ளேபாய்ந்து
    உப்பையெடுத்து உவர்ப்பைநீக்கி
    சிறப்பாய் செய்தநன்னீராக்கி
    வறுமையைப்போக்க பொறுப்புடனே
    மண்ணுலகமெல்லாம் உய்யப்பெய்த
    உன்னதமழையே உயர்ந்தமழையே
    என்னதவம் யாம் செய்தோமோ
    உன்னைப்பெறவே உலகத்தோரெலாம்

     

    ஒளியைப்பாய்ச்சும் நிலவுவேண்டாம்
    பளிச்சிடும்தோழன் மின்னலேபோதும்
    சுட்டெரிக்கும் சூரியனும் வேண்டாம்
    படபடவென முழங்கும் இடியேபோதும்
    கண்சிமிட்டும் தாரகைவேண்டாம்
    வண்ணம்காட்டும் வானவில்போதும்
    மழைத்தோழர்களே மழையோடுவாரும்
    விழாவெடுப்போம் வாழ்நாள்முழுதும்
    எங்கும்மழையால் பச்சைப்புற்களும்
    தங்கம்போல மின்னுகின்றனவே
    புல்லும்பூவும் மரமும்செடியும்
    நல்மழையால் நன்குசெழிக்கின்றதே
    மழையே நீயேஎம்தெய்வம்
    மழையே யாம்போற்றுகின்றோம்.

     

    அடடா என்ன இது.. ஏன் இப்படி
    படுக்கையிலிருந்து ஏன்விழுந்தேன்
    அடடே கனவும் ஏதும் கண்டேனோ
    சடசடவெனப்பொழிந்த மழைஎங்கே
    பளிச்சிட்டுவீசிய மின்னலெங்கே
    களிநடனத்தோசை இடியுமெங்கே
    சில்லென்ற சீரானகாற்றெங்கே
    அலகைநனைத்த அந்தப்பறவையெங்கே
    ஊரெல்லாம்சிறக்க உயர்வுதனைகொடுக்க
    சீராகப்பெய்தாய் எனக் கண்டதெலாம்
    கனவுதானா? பகலிலோர்கனவுதானோ
    கனவில்தான் சுகமானமழையோ
    கனவில்தான் மிதமானமழையோ
    கனவில்நான் கண்டதெல்லாம்பொய்யோ
    மாயைமழையில் நனைந்தேனா
    பொய்யாய்ப் பொழுதைக்கழித்தேனா

     

    சுட்டெரிக்கும் வெப்பமே சுடாதே
    சுடராய் கண்ணைப்பறிக்கும் சூரியனே
    இன்னும் எத்தனைநாள் இப்படித்தான்
    மன்னுயிரை மாய்ப்பாய் இங்கே
    அங்கேயும் எங்கேயும் பச்சைமரங்கள்
    எங்கள்கண்ணெதிரே கருகிப்போகுதே
    புல்லும்பூவும் காய்ந்துபோகுதே
    கல்லில் பாதம்பட்டு புண்ணாகுதே
    செய்தவமெல்லாம் வீணாகிப்போகின்றதே
    வெய்யிலே வாராமல் போய்விடு
    வெந்தணலில் துடிக்கவிடுவது நியாயமோ
    எந்தைமழையை எங்கேனும்கண்டால்
    கண்டவுடன் வரச்சொல்வீர் காத்திருப்போம்.
    வான்மழையின் ஒருதுளியேனும் இனியும்
    காணாதுபோனால் உயிர்பிரிந்துபோகும்காண்!
    —————————————————————————
    திவாகர்

     

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண் பரிது. (திருக்குறள்-16)

    (மேகத்திலிருந்து மழைத்துளி விழுந்தால் அல்லாமல் இவ்வுலகில் பசுமையான ஒரு புல்லின் நுனியையும் காண இயலாது)

    கூகிள் படத்திற்கு நன்றி.

    Share
  • ஹேமலேகையின் ஐயன் வழி

     

    திவாகர்

    6517a4a5-5557-49c9-b648-65f578c3fffd
    புராணக்கதைதான் இருந்தாலும்
    புனிதவதியின் கதையாம் கேளீர்
    ஹேமலேகை அவள் பெயர்
    வாய்த்தவன் பெயரோ ஹேமரூபன்
    பெயர்ப்பொருத்தம் மட்டுமா
    பிரேமப்பொருத்தம் கூட
    அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்?
    அவளன்பிலே கரைந்து போனான்
    மானேயென்றான் தேனேயென்றான்
    மடியில் புரண்டான் மதுவுண்ட
    வண்டுபோல சுற்றிச்சுற்றி வந்தான்
    வான்வழிமறந்து கீழே விழுந்த
    மங்கையே நானுனடிமை என்றான்
    பிரிவில்லை நமக்கென்றான் சற்றே
    பிரிந்தாலும் நீரகன்ற மீனாகி
    துள்ளித் தவித்து மீண்டான்
    நாளாக நாளாக நாட்கள்
    கழிந்தாலும் நாயகியோடு இமைப்
    பொழுதும் எல்லையில்லா இன்பம்தான்

    அவளோ அவனளவு போகத்தை
    விரும்பினாளில்லை.. கேட்டான்
    ஏனிந்த சோகம் பெண்ணே
    ஏனிந்த போகத்தில் மோகமில்லை
    இளமையில் இன்பமும் காதலும்
    கலவியும் காலத்தின் வரம்
    காலம் கரைந்து போனால்
    புலம்புவோம் கலங்குவோமே
    திரும்பவருமோ இந்தசுகம்
    திகட்டிப்போகுமா பேரின்பம்
    எனக்கெனப் பிறந்தவளே
    எனையாளும் தேவதையே
    உன்னழகை என்னால் வர்ணிக்க
    என்நாவில் வாத்தையில்லையே
    சாத்திரத்தில் சொன்னபடி பிரமன்
    பாத்திரத்தில் அமுதெடுத்து முறையாய்
    அளவெடுத்து அழகாய் அங்கமெலாம்
    பளபளவென பாங்காய்ப் படைத்திட்டான்
    எண்ணியெண்ணி ஏங்குகின்றேனென்
    எண்ணத்தில் நிறைந்தவளே ஏனிப்படி
    சோகத்தை சொந்தம் சேர்க்கிறாய்
    சுகத்தைவெறுக்கும் சுந்தரியே
    திருவாய் திறந்து பதில்சொல்வாய்
    திருவாய் உருவாய் வந்தவளே!

    ஹேமை புன்னகைத்தாள் மின்னலே
    இம்மண்ணில் வந்ததாய் மயங்கினான்
    என்னன்புக்குகந்தவரே..அன்பால்
    எனையாளும் பண்பாளரே
    ஏனிந்த பெருமோகம் என்மீது
    என்னதான் என்னிடத்தில் கண்டீரோ
    இதழ்விரிந்த கமலத்தில் இனிப்பான
    மதுவை இடைவிடாதருந்தும் தேனீ
    நிலைமறந்து உண்டு இரவானதும்
    நிலைதெரிந்து கூம்பிய மலருக்குள்
    சிக்கி வெளிவராமல் தவிக்குமாம்
    இடைவிடா யின்பம் நிலைக்குமா
    விடையறிந்தும் அறியா பேதையாய்
    நாளும் என்நினைப்பு இவ்வண்ணம்
    நாளாகநாளாக வலுக்கின்றதே

    மனத்துக்கண் மாசிலா மனையாளே
    முன்வினைப் பயன் அதுவும்
    நல்வினைப்பயனென்று ஒன்றுண்டு
    பல்லாண்டாய் செய்த தவப்பயனும்
    சேர்ந்துமாய் நாமிருவரும் ஒருவரானோம்
    இனி யோசனையேதுக்கடி கண்ணே
    மனக்கிலேசம் வேண்டாமடி பெண்ணே
    நல்லவரே வினைப் பயனைச் சொன்னீர்
    நல்வினையும் தீவினையும் நானும்
    நன்றாகத்தான் அறிவேன் ஆனாலும்
    சென்றுபோன சன்மத்தில் நாம்
    செய்தது எல்லாமும்நாம் அறியோமே
    பாம்பின்கால் பாம்பறியும் என்பதுபோல்
    நாம்யார், நம்வினைகள் எவை
    என்பதுநாம் அறிவோமோ சொல்வீர்
    முன்பிறவி வினையெல்லாம்
    முடிந்தவரை அறிந்துகொள்ள
    படித்தபுத்தகங்கள் ஏதுமுண்டோ
    நல்வினையால் நீர்கிடைத்தீர் நானும்
    பொல்லாவினையை ஏதும் முற்பிறவியில்
    செய்யாதிருந்தேன் என்பது நிச்சயமோ
    நல்வினையால் எனைக்கொண்டீரென்றால்
    சொல்வீரென் தீவினைக்கேற்ற பயனை

    ஆச்சரியமுற்றான் அவனும்
    பேச்சில்லாமல் போனான் கூட
    கற்சிலைபோல் இருப்பவள்மனதில்
    கற்றவரும் அறியா கேள்விகளா
    பேதைபோல இல்லாமல் பெரும்
    மேதைபோல கேட்கிறாளே
    முற்பிறவியில் செய்த வினைகள்
    முற்றும் அறிந்தவர் எவரோ
    நன்மைச்செயலையும் நாம்செய்திருந்த
    இன்மைச்செயலையும் பொறுப்பாய்
    தெரிந்து பொறுமையாய்ச் சொல்வார்
    ஊரில் யாரேனுமுண்டோ
    இருளும் ஒளியும், சோகமும் சுகமும்
    பெருமழையும் கொடும்வெய்யிலும்
    பேரும் பகையும் நல்லதுந்தீயதும்
    சேர்ந்தே வரும் இரட்டையரன்றோ

    நாயகனே..ஏனிந்த மௌனம்
    வாய்திறந்து சொல்லச்சொன்னீர்
    சொல்லிலேதும் தவறுண்டோ
    சொல்லக்கூடாதது சொன்னேனோ
    இன்றுவரும் இன்பமே நாளை
    கொன்றுபோடும் துன்பமாகாதோ
    பிரம்மன் அளவெடுத்த அங்கமெலாம்
    வெறும் பார்வைக்கே விருந்தன்றோ
    நாளை நரையோடிப் போகும்
    வேளைவந்தால் என் தேகமெலாம்
    வெறும் காற்றடைத்த மேனியாய்
    சிரமதசையில் காலத்தின் கோலமாய்
    அலங்கோலமாய் மாறாதோ சொல்வீர்
    காலம்வந்து நம்நிலை காண்பிக்குமுன்னே
    காட்சிகளை கண்டுகொளும் மன
    மாட்சிமை வேண்டாமோ நமக்கு
    காதலாய் இருக்கவேண்டிய காலத்தில்
    ஏதேதோ பேசிவிட்டேன் மன்னியுங்கள்

    கண்ணான கண்மணியே என்னேயுன்
    பெண்ணறிவின் வெளிச்சம்.. அடடா..
    மறுபடியும் சொல்கின்றேன் எந்தன்
    முற்பிறவியின் நல்வினைப்பயனாய்
    இப்பிறவியில் என்னவளாய் வாய்த்தநீ
    செப்பிய மொழியாவும் கேட்டேனே
    அதீதவிருப்பம் அழிவின் எல்லையென
    பதமாய் சொல்லிப் புரியவைத்தாய்
    புத்தியைக் கூர்செய்து பண்படுத்தி
    புதியவனாய் ஆக்கிய புண்ணியவதியே
    இருவினையை உணர்ந்தேனில்லை
    இருந்தாலும் இன்றென் ஆசானாய்
    உன்னிடம் நானுபதேசம் கேட்கின்றேன்
    முன்வினை முற்றும்தீர வழிசொல்வாயே

    எழில்நாயக என்ன வார்த்தையிது
    வழிசொல்ல நானொன்றுமறியேன்
    இருந்தும் நம்பெரியோன் ஐயன்
    பெருவார்த்தையொன்று உள்ளதே
    எல்லாவினையும் நில்லா ஓடுமாம்
    பொல்லாவினையைப் பொடியாக்குமாம்
    இருவினைதானே இளைத்துப்போகுமாம்
    பெருமையாய்ச் சொன்னான் பெரியோன்

    எத்தனைபிறவி எத்தனை எடுப்பினும்
    எத்தனை வினைகள் எத்தனைசெய்யினும்
    நல்லதே நடக்க ஓர்வழியுண்டு
    நல்லோர் நினைவில் என்றுமுறையும்
    இறைவன் என்பவன் ஒருவனுண்டாம்
    இறையை நினைத்து அன்புசெய்தோர்க்கு
    என்றும் குறைவில்லை என்றும்நன்றாம்
    என்றான் ஐயன் அவன்பேர்சொல்வோமே..

    ************************************************

    இருள்சேர் இருவினையும்சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (திருக்குறள்-5)

    இறைவனது மெய்ம்மை பொருந்திய புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவோரிடத்தில் நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை.

    Share
  • வாசம் வீசும் ரோஜாவும் தமிழ் எழுத்தாளர்களின் புண்ணிய பூமியும்

    திவாகர்

    ரோஜாவின் வாசம் பற்றி எழுதினால்தான் தெரியுமா என்ன.. ஆனாலும் எழுதத்தான் வேண்டும்.. விஷயம் இருக்கிறது ஏராளமாக.

    ஆனால் அதற்கு முன்னர் யாழ் நூலகத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகத்தை, சுமார் ஒரு லட்சம் கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் கொண்ட நூலகத்தை 1981 ஆம் வருடம் மே மாதத்தில் தீக்கிரையாக்கி அழித்தனர் சில கயவர்கள். தீக்கிரையானது அந்த நூலகக் கட்டடம் மட்டுமல்ல.. அறிவும் ஞானமும் உள்ளடக்கிய காமதேனுவை சுரக்கும் நூல்களும் கூட.

    அறிவே தெய்வம் என்பார்கள்;. கல்வியே செல்வம் என்பார்கள்; படித்துக் கொண்டே இருந்து அனுபவிப்பவனால் ஞானியாக முடியும் என்பார்கள்; பெரியோரின் புத்தகங்கள் வருங்கால சமூகத்துக்கு வழிகாட்டி என்பார்கள், அப்படிப்பட்ட செல்வத்தை, அறிவு தரும் தெய்வத்தை, தெளிவு தரும் ஞானத்தை சில தீயசக்திகள் அன்று யாழ்ப்பாணத்தில் அழித்து விட்டனர். யாழ் நூலகம் என்றல்ல, பாரதத்தின் புராதன ஓலைகள் கூட இப்படி ஏராளமாக அழிக்கப்பட்ட சரித்திரங்கள் இங்கே உண்டு. ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்த அமரசிம்ஹர் எனும் பேரறிஞர் மிகச் சிறந்தஞானி எனப் போற்றப்பட்டவர். இவர் எழுத்துகள் வெகு எளிதாக மனனம் செய்யக் கூடிய அளவில் எழுதப்பட்டு ஞானங்களை அள்ளி வழங்கிய நூல்கள். ஆதிசங்கரருடன் ஏற்பட்ட வாதத்தில் தோல்வியுற்ற விரக்தியில் இவர் தாம் எழுதிய பத்தொன்பது நூல்களையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டாராம். ஆனால் ஆதிசங்கரர் பதறிப்போய் தடுத்து நிறுத்திய முயற்சியால் ஒரே ஒரு நூல் மட்டும் காப்பாற்றப்பட்டது, அதுதான் அமரகோசா எனும் அரிய வடமொழி நூல். இது உதாரணம்தான்..

    மொகலாயப் படையெடுப்பால் அழிக்கப்பட்ட பழைய நூல் சேகரிப்புப் பொக்கிஷங்களைக் கணக்கெடுக்கவே முடியாது. நூலகங்கள் என ஏற்பட்டதே நூல்களைப் பாதுகாக்கத்தான். ஆனால் மனிதர்களின் அறிவீனத்தால் மட்டுமல்லாமல் இயற்கை சீற்றங்களால், கவனிப்பே இல்லாமையால் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூலகங்கள் எத்தனையோ உண்டு. பாரதநாடு பழம்பெரும் நாடு, பாரதத்தில் தோன்றிய ஞானிகள் எத்தனையோ தீபங்களை ஏற்றி உலகுக்கே வழி காண்பித்தார்கள். அந்த ஞான வார்த்தைகள் கூட ஏராளமாக காலத்தின் கோலத்தில் அழிந்து போய்விட்டனதாம்.

    ஆனால் அதெல்லாம் ஒரு காலம்.. இன்னும் கேட்டால் ஞான தீபத்தை மிகப் பிரகாசமாக ஏற்றிவைக்க இப்போது கனிந்து வரும் காலம் கூட. மேலை நாடுகளில் பலவித இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் மூலம் நூல் பாதுகாப்புத் தன்மையை இந்த கால மனித சமுதாயம் கண்டுபிடித்துக் கொண்டே வருகிறது. ஆனால் நமக்காக நம் மொழியைக் காக்க அதைப் பயன்படுத்தவேண்டுமே.. அப்படிப் பயன்படுத்தி நூல்களைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது சென்னை தரமணியில் இருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.

    eb6a29e6-4490-4ae0-84a0-7db4c4cfd8d3

    ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – இப்படிப்பட்ட நூலகம் ஒன்றினை இந்தியாவில் அதுவும் நம் தமிழ் மொழிக்காக தோற்றுவித்த அந்தப் பெரியவர் ரோஜா முத்தையா செட்டியாரை முதலில் தாள் பணிந்து வணங்கவேண்டும். ’கற்க, கசடறக் கற்க’ என்பார் திருவள்ளுவர், ஆமாம்,தமிழ் மொழியைப் பொறுத்தவரை கசடறக் கற்கவேண்டுமானால் ரோஜா மணம் வீசும் இந்த நூலகத் தோட்டத்துக்குதான் வரவேண்டும்.

    df5c6636-932f-4c27-8829-a7e1c978c764

    வாய்ஸ் ஆஃப் வள்ளுவர் குழுமம் தன் முதல் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று திட்டமிட்டபோது திரு பாலா (ஆர். பாலகிருஷ்ணன், ஐஏஎஸ்) இந்த நூலகத்தில்தான் கூடப் போகிறோம் என்ற சொன்னபோது தலைவர் திரு ராஜேந்திரன் (சுங்கத்துறை முதன்மை ஆணையர்) முதற்கொண்டு அனைவரும் ஒருமனதாக வரவேற்றோம். பாலா ஏற்கனவே சில வருடங்கள் தன் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காக இந்தநூலகத்தில் செலவிட்டுள்ளார். இங்கு சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காக தனி அறையே உண்டு. ஏராளமான ‘ரெஃபெரென்ஸ் மெடீரியல்ஸ்’ சேகரித்து வைத்துக் கொண்டு ஆராய்ச்சிக்காக பெரிய உதவி புரிந்து வருகிறது.

    தரமணியில் இயற்கை சூழலின் மத்தியில் குளிர்ச்சியான நிலையில் இந்த கட்டடத்தை தமிழக அரசு இரவலாகக் குத்தகை அளவில்தான் முப்பத்து மூன்று   வருடங்களுக்குத்தான் தந்துள்ளது. ஆனால் குத்தகை என்ற சொல்லை ஏன் இங்கு பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. தமிழுக்காக தன்னலமில்லா சேவையில் ஈடுபடும் இந்த ஆராய்ச்சி நூலகத்துக்கு இந்தக் கட்டடத்தினைக் கொடையாக அல்லவா தந்திருக்கவேண்டும் என்ற கேள்வி எழும்புகிறது. இந்தக் கேள்வி ஆட்சியாளர்கள் காதில் விழவேண்டுமென்று விரும்புகிறோம். ஏனெனில் இங்கே பாதுகாக்கப்படுகின்ற முக்கியப் புத்தகங்கள் அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் தமிழகத்தில் என்றல்ல தெற்காசியாவிலேயே வேறெங்கும் இல்லாத அளவுக்கு நுண்ணிய தொழில்நுட்பம் மூலமாகப் பாதுக்காக்கப்படுகிறது என்பதே தமிழனுக்குப் பெருமை அல்லவா.

    முதலில் இந்த நூலகத்தின் சில சாதனைகளை விவரித்து விடுவோம்.

    தமிழகத்தில் கிபி 1713 இல் பிரசுரிக்கப்பட்டு வெளியான முதல் தமிழ் நூலின் பிரதி ’அக்கியானம்’ (பைபிளின் ஒருபகுதி தமிழில்) இங்கே பாதுகாக்கப்படுகிறது.

    bbf1f794-806e-4ba6-b44b-3d7ec450062e

    தமிழில் முதன் முதலாக புத்தகத்தில் எழுதப்பட்ட திருக்குறள் பதிப்பு இங்குதான் பாதுகாப்பாக உள்ளது (பதினேழாம் நூற்றாண்டு),

    bb02c120-7c25-4cd6-9942-67fac0fd5ab4

    கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துக் கணக்குப் புத்தகம் அப்படியே இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதைப் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார்கள்.

    53f88019-ad67-49be-b037-9d51d27faafd

    சுமார் 20 லட்சம் பக்கங்கள் உள்ள மிகப் பழையப் புத்தகப் பெட்டகங்களை டிஜிடல் மூலமாக எதிர்காலத்துக்காக சேமிக்க வைக்கப்பட்டுள்ளது.

    நூல்கள் மட்டுமல்ல, ஓலைச்சுவடிகள், கிராமபோன் ரிகார்ட்கள் கூட இங்கே சேமிக்கப்பட்டு, தக்கமுறையில் நவீன தொழில் நுட்ப வசதிகளோடு இங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது.

    பழைய காலத்து உடைந்து போகும் நிலையில் உள்ள புத்தகமா.. கவலை வேண்டாம்.. உடனே இங்கு கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    1713 முதல் தமிழில் எழுதப்பட்ட அத்தனை நூல்களின் பிரதிகள் இங்கு உண்டு. உடைந்து போகுமே என்ற கவலை இல்லாமல் டிஜிடல் மூலமாக நாம் படிக்கமுடியும்,.

    இறக்குமதி செய்யப்பட்ட தரமான இயந்திரங்கள் மிகக் கவனமாக கையாளப்பட்டு இங்குள்ள புத்தகங்களையெல்லாம் டிஜிடல் மயமாக்கம் செய்கிறது.

    13790ec6-6c27-4246-8c34-86914a12999a

    நூலகத்தின் இயக்குநர் திரு சுந்தர் அவர்கள் பழைய நூல் பாதுகாப்புகள் எப்படியெல்லாம் செய்யப்படுகின்றன என்று விளக்கும்போது நாம் சற்று ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். அன்னை தமிழுக்கு, அன்னையின் பிள்ளைகளுக்கு, வருங்கால தமிழ்ச் சமுதாயத்துக்கு இது ஒப்பில்லாத சேவையாக கண் முன்னே படுகிறது. ஒவ்வொரு பழைய நூலையும் அவர் எடுத்துக் காண்பித்தபோதும் சரி, அதைக் கையாளும்போதும் சரி, இதை எழுதியவர்கள் மட்டும் இன்றிருந்தால் அந்த ஆத்மாக்கள் எத்தனை ஆனந்தப்படுமோ என்று வியக்கவும் வைத்தது. அதுவும் உடைந்து சுக்கு நூறாகும் பக்கங்களை பதப்படுத்தி நாம் கையாளும் வகையில் ஒரு புத்தகமாக உருவாக்கி வருகிறார்கள். சுந்தர் குழுவினரின் அயராத உழைப்பு இந்த நூலகத்தை உலகம் முழுதும் உள்ள பேரரறிஞர்களையும் இங்கே எட்டிப்பார்க்க வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஜான் ஹாரிஸ் எனும் இங்கிலாந்து அறிஞர் இவர்கள் திறமையைப் பாராட்டி, ’இந்த வகையான பாதுகாப்பு மிக உயர்ந்த உன்னத நிலையில் உள்ளது, இதே போன்று உலகம் முழுதும் செயல்பட்டால் உலகம் மிக வேகமாக கல்வியில் முன்னேறும்’ என்று தன் கைப்பட எழுதிப் பாராட்டியுள்ளார்.

    ஆஹா, இத்தனை உன்னதமான தமிழ்ப்பணியை ஏற்றுச் செய்யும் இந்த நூலகத்துக்கு வரவு எங்கிருந்து என்று கேள்வி கேட்கலாம்..தமிழக அரசாங்கம் கட்டடத்தை மட்டும் கொடுத்து, அதுவும் குத்தகையில் விட்டு விட்டு கையைக் கழுவிக் கொண்டது. சில காலம் முன்பு வரை சிகாகோ பல்கலைக்கழகம் ஆதரித்துவந்தது. இப்போதும் டிரஸ்டி மூலம் சில நல்ல உள்ளங்கள் பொருளுதவி செய்கின்றன.

    ஆனால் சுந்தர் குழுவினரின் முன்னே இருப்பது மாபெரும் மலையளவு வேலைக்கு இந்த பொருளுதவி எல்லாம் சுண்டைக்காய் போலத்தான்.. போதவே போதாது. நூலகத்தின் தேவைகள், வாசகர்களின் வருகையைப் போல நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மென்மேலும் புதிய கருவிகள் மேலை நாட்டிலிருந்து தருவித்துப் பெற வேண்டிய சூழ்நிலையில் பழைய இயந்திரங்களும் மேல்நிலைப்படுத்தும் தேவையும் அதிகரிக்கிறது. உதிரிபாகங்கள் கூட மேலை நாடுகளிலிருந்து தருவிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே உள்ள படிக்கும் இடங்களில் பார்வையாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் இன்னும் அதிகமான வசதிகள் செய்யவேண்டிய நிலை., வெகு முக்கியமாக ஆவணப் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டி ‘கம்பாக்ட் வகை ஸ்டீல் அலமாரிகள் தேவைப்படுகின்றன. இதெல்லாம் ஏதோ சிறிய அளவிதான் இங்கே எடுத்துரைத்துள்ளேன். மேலும் மேலும் தேவைகள் அதிகரிக்கும்போது அதன் சுமைகள் மிகப் பலமாகத்தான் நூலகத்தார் மீது வந்து விழுகின்றன.

    இன்னும் சொல்லப்போனால் இது நூலகம் மட்டுமல்ல. ஒரு சிறந்த ஆராய்ச்சிக் கூடமாகத்தான் நாம் பார்க்கவேண்டும். மேலை நாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களுக்கு அவர்கள் அரசாங்கமும் கொடையாளர்களும் தேவையான பொருளுதவியை தாராளமாக வழங்குவதால் மட்டுமே அவர்களால் இந்த புதிய நாகரீக உலகுக்கு ஏற்றவாறு பலவித வசதிகளையும் புதிய கண்டுபிடிப்புகளால் முன்னேற்றம் பெறுகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் இந்த வகையில் சேர்க்கப்படத்தான் வேண்டும்.

    தமிழர்கள் பொதுவாகவே மிகச் சிறந்த அறிவாளிகள் என்ற பெயரெடுத்தவர்கள். உலகெங்கும் உள்ள ஆராய்ச்சிக்கூடங்களில் தமிழர்களின் உன்னதப் பணி பல சேவைகள் மூலம் வெளிப்படத்தான் செய்கின்றன. உலகெங்கும் உள்ள தமிழர்களில் அறிவுச் செல்வத்தோடு பொருட்செல்வத்தையும் மிக அதிக அளவில் பெற்றவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையத்துக்கு அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் இங்கே தமிழ் எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். நம் வருங்காலம் மிகச் சிறப்போடு தமிழை எதிர்நோக்குகிறது என்ற நம்பிக்கையும் பெறுங்கள். அப்படிப்பட்ட தமிழ்ச்சேவை புரியும் இந்த நூலகத்தின் உங்கள் சேவையின் பங்கு என்னவென்று உங்களையே கேட்டுக் கொண்டு அதற்கான விடையயும் அந்த நூலகத்தோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிப் பகிர்ந்து கொண்டீர்களேயானால் தமிழன்னை உங்களைப் போன்ற மக்கட்பேறு பெற்றதற்காக பெரும்பாக்கியம் செய்திருக்கிறாள் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன்.

    விடைபெறும்போது சுந்தரிடம் சற்று தயக்கத்தோடு கேட்டேன் – என் புத்தகங்களும் இங்கே இருக்கின்றனவா.. அவர் உடனடியாக புன்னகைத்து ஐந்தே நிமிடத்தில் என் புத்தகங்களின் லிஸ்ட் ஒன்றைக் காண்பித்தார். புல்லரித்தது. எத்தனையோ அறிஞர்கள் பேரறிஞர்கள் எழுதிய புத்தகங்களோடு அடியேனின் எழுத்துகளும் கலந்துவிட்டதில் ஆனந்தம், ஒரு பெருமை..

    எழுத்தாளர்களின் புண்ணிய பூமி மணம் வீசும் இந்த ஆராய்ச்சி நூலகம் என்றுதான் சொல்லவேண்டும்.. ரோஜா மலருக்குக் கூட வாசத்தின் கால அளவு குறைவுதான்.. ஆனால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வாசம் எள்ளளவும் குறையாத வாடா மலர்.. தமிழன்னை தன் கூந்தலில் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட மலர்.

    தமிழைப் பாதுகாக்கும் இந்த மலரைத் தக்கபடி பாதுகாப்பது நம் தமிழர்களின் தலையாய கடமை.

    Share
  • பிரியே சகியே அன்பே ஆருயிரே

    திவாகர்

    c2311b6b-ff9e-48f3-888a-df00e3d8c069

    அன்புள்ள ராகி’,

    பிரியே சகியே அன்பே ஆருயிரே என்றெல்லாம் இந்தக் கடிதத்தைத் தொடங்கலாமே என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒருவேளை அது உனக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் என்ற ஒரு சந்தேகமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்ததால் இப்படிப்பட்ட ஃபார்மாலிடிக்குள் நுழையாமல் நேரடியாகவே சப்ஜெக்ட்’டுக்கு வரப் பார்க்கிறேன்.

    மூன்று மணி நேரமாக மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நீ கடைசியாக ராத்திரி மொபைலில் பேசும்போது உன்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று சொன்னேன் இல்லையா.. ஆனால் நீ காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.. நீங்க என்ன சொல்லவேணுமோ அதையெல்லாம் தூங்கறதுக்கு முன்னாடி ஒரு லெட்டெர் எழுதி நாளைக்கு மறக்காம போஸ்ட் பண்ணுங்க’ன்னு சொல்லி டபக்’கென வைத்துவிட்டாய்.

    உன் ஐடியா புரிகிறது. போன தடவை நீ சிம்லா சென்ற போது இதே போல ஒரு கடிதம் எழுதி அனுப்பியதை உன் அக்கா பரம ஆனந்தமாக ரசித்தாள் என்று சொல்லியிருந்தாய்.. அதே உன் அக்காவின் ஆனந்துத்துக்காக மறுபடியும் ஒரு கடிதம்தான் என்னிடமிருந்து வரட்டுமே என்று நீ எதிர்பார்க்கிறாய் போலும்.. ஆனாலும் அந்தக் கடிதம் எழுதி ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டபடியால் எனக்கு இந்தக் கடிதங்கள் எழுதும் கலையும் மறந்து விட்டபடியால், எப்படி ஆரம்பிப்பது எனக்கூட தெரியாமல் முழிப்பது வாஸ்தவமே.. ஆனாலும் நீ மெனக்கெட்டு கடிதம் கேட்டதால் அதை எழுத வேண்டிய கட்டாயத்தால் நான் கடந்த மூன்று மணி நேரமாக எப்படியும் எழுதி முடித்துவிட்டுத்தான் தூங்குவது என்று விடாப்பிடியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் ‘உன் வார்த்தைக்கு நான் எவ்வளவு தூரம் மதிப்புக் கொடுக்கிறேன்’ என்பதைப் புரிந்து கொள்ளவும்.

    நாம் போனில் பேசும்போதெல்லாம் நீயே பேசிக் கொண்டிருப்பதும் நான் ‘உம்’ கொட்டுவதும் வழக்கமாகிவிட்டதும் இந்தக் குழப்பத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாமோ என்னவோ..

    சென்றமுறை உன் அக்காவின் உடல்நலம் தேறுவதற்கு நானும், முக்கியமாக என்னுடைய கடிதமும் காரணம் என்று நீயே பலமுறை வருவோர் போவோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு நினைவு வந்து இப்போது கொஞ்சம் உற்சாகப்படுத்துகிறது. உன் அக்கா சந்தோஷப்படுவதற்காகவாவது நான் கடிதம் எழுதியே ஆக வேண்டும் என்று இந்த நடு இரவிலும் நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    கொஞ்சநேரம் முன்புதான் பக்கத்து ஃபிளாட்டு மோகன் வந்தார் (ன்). வாசற்கதவு இன்னும் தாழ்ப்பாள் போடவில்லையாதலாலும், நானும் என்னதான் எழுதுவது என்ற தீர்க்க யோசனையில் அப்படியே பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டிருந்ததாலும் வந்தவரை முதலில் கவனிக்கவில்லை. மோகன் “என்ன சார் மிஸ்ஸஸ் ஊர்ல இல்லைன்னதும் ஒழுங்கா செலவுக் கணக்கைக் காமிக்கணுமே’ன்னு கணக்குப் போடறீங்களா’ என்று கேட்டு அசடு வழிந்தார்.

    நான் அவர் மீது கோபப்படாமல் ‘இல்லை சார், லெட்டெர் எழுதுகிறேன் சார் லெட்டெர், அதுவும் என் அருமை மனைவிக்கு’ என்று நெஞ்சை நிமிர்த்தி கொஞ்சம் பெருமையாகச் சொன்னதும் அவருக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. அடக்கமுடியாமல் ஹாஹ்ஹா என சிரித்துவிட்டு ஏதோ பெரிய ரகசியத்தை அறிந்து விட்டவர் போல அவர் மனைவி பத்துவை (சாரி, பத்மான்னுதான் பேர். நீ அடிக்கடி பத்து..பத்து’ன்னு கூப்பிடுவாய் இல்லையா.. ஒரு ஃஃப்ளோ’வில் அப்படி எழுதிவிட்டேன்.. என்னைப் பொருத்தவரை அந்தம்மா பெயர் எப்போதும் பத்மாவதிதான் என்பதை நீ நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.. இதைப் பற்றி நமக்குள் வேறெந்த விவாதமும் தேவையில்லை)

    அந்த பத்மா உடனே ஓடிவந்துவிட்டாள். இவர் ஏதோ பெரிய ஜோக் சொல்வது போல ‘உனக்குத் தெரியுமா பத்மா.. நம்ம சார் தன்னோட சம்சாரத்துக்குக் கடிதம் எழுதறார் பார்..” என்று தன் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகச் சொல்லிவிட்டு அத்துடன் விடாமல் கோராமையாக ஹோஹ்ஹோ எனச் சிரித்தார். அந்த பத்மா என்னை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு ‘ராகினிதான் டெய்லி நூறுதரம் போன்’ல உங்களோட பேசறாளே.. இப்ப எதுக்கு லெட்டெரெல்லாம் போடறீங்க’ன்னு கேட்டதும் கொஞ்சம் யோசித்தேன். ’பார்த்தாயா.. நீ என்னிடம் நூறு தரம் பேசுகிறாயாம்.. காலையில் ஒரு அரை மணி நேரமும், ராத்திரி ஒரு மணி நேரமும் பேசுகிறாய் என்பது வாஸ்தவம்தான்.. நடுவில் நானாகத்தான் உனக்கு ஏதாவது ஒருமுறை போன் போட்டுப் பேசினால்தான் உண்டு. அது எப்படி இந்த பத்துவுக்கு (சாரி, பத்மாதான்) நூறு தடவையாக கண்களில் படுகிறது என்று நினைத்துப் பார்த்தேன்.

    இதற்குள் அவளே அவள் கணவனை என் முன்னாலேயே குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டாள். ’கல்யாண ஆன புதுசுல ஒரே ஒரு கார்டு போட்டவர் இவர். அதிலே ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.. மொட்டையாக நான் இத்தனாந்தேதி புறப்பட்டு வருகிறேன்.. ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்பவும்’னு கட்டளை வேற.. என்ன இருந்தாலும் ராகினி கொடுத்து வைத்தவள்,. பாருங்களேன்.. ராத்திரி இத்தனை நாழியாச்சு, இன்னும் உட்கார்ந்து அழகாக பொண்டாட்டிக்கு கடுதாசி போடணும்’னு உங்களுக்குத் தோணறதே’ என்று ஆதங்கப்பட்டாள்.

    உடனே அவள் கணவன் சமாதானம் செய்ய ஆரம்பித்துவிட்டான். “அதற்காகத்தான் பதிலுக்கு சண்டை போட்டு பட்டுப்புடவை ஒன்று உடனே உடனே வாங்கிக் கொடுத்தேனே.. மறந்து விட்டாயா’ என்று கேள்வி கேட்க, அவள் அந்தப் புடவை வாங்கியவுடன் அதிசீக்கிரம் கிழிந்து போன கதையை கொஞ்சம் பெரிய குரலில் விரிவாகச் சொல்லிக் கொண்டே போக, இந்த சப்தத்தைக் கேட்டு மாடி ஃஃபிளாட் சுப்பு மாமியும் அவள் மூன்றாவது தங்கையான அருணாவும் கடகடவென கீழே இறங்கி வந்தார்கள்.

    “ஏதோ பெரிய சப்தமா கேட்டுதே.. நீங்க தனியா வேறே இருக்கிங்களா, என்னவோ ஏதோ’ன்னு பயந்து வந்தோம்.. நல்ல காலம் கலகலவென பேசிண்டுதான் இருக்கீங்க..” என்று ஏமாற்றப் பெருமூச்சு விட்டு அவள் தங்கையை அறிமுகம் செய்ய முன்வந்தாள். நான் உடனே முந்திக் கொண்டு “தெரியுமே உங்க மூன்றாவது தங்கை அருணாதானே, பெங்களூர்ல இருக்காங்க இல்லே.. உங்க தக்காளி தொக்கு..’ என்று ஆரம்பித்தேன்.. அவளுக்கு உடனே என்னை நன்றாக ஞாபகம் வந்துவிட்டது.. ”ஆமாமா.. உங்களுக்குக் கூட நான் தக்காளித் தொக்குக் கொடுத்திருக்கேன் இல்லே.. (இவளுக்கு இதே வேலையோ என்னவோ) இப்போ நினைவு வந்தாச்சு.. உங்களுக்கு நான் ரெசிபி கொடுத்தேனே.. அதன்படி உங்க மிஸ்ஸஸ் செய்யறாங்களா” என்று ஏதோ டாக்டர் நோயாளியை ‘சரியாக மருந்தெல்லாம் சாப்பிடுகிறாயா’ என்பது போல கேட்க ஆரம்பித்தாள். உனக்குதான் தெரியுமே.. நான் தக்காளி தொக்கைக் கடைசியாக அன்று ஒருநாள்தானே பார்த்தேன்.. இதை எப்படி இவளிடம் சொல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதே நல்லகாலமாக மோகன் தலையிட்டான்.

    ”சார்.. அவங்க மிஸஸ்ஸுக்கு கடுதாசி எழுதிக்கொண்டிருந்தார், நாங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிகொண்டே இருக்கறச்சே.. நீங்களும்..” என்று அசடு வழிய சமாளித்தான்,

    அந்த அருணா உடனே “என்னது லெட்டர் ரைடிங்கா.. ரொம்ப இண்டரெஸ்டிங் சப்ஜெக்ட்டாச்சே.. என்னைக் கேட்டா காலேஜிலே ஒரு சிலபஸ் மாதிரி இதை வெக்கணும்’னு சொல்வேன். உங்களுக்குத் தெரியுமா.. மூணாம் வருஷம் எனக்கு கல்யாணம் ஆன புதுசுலே நான் என் வீட்டுக் காரருக்கு ஒரு கடுதாசி எழுதினேன். ரொம்ப கஷ்டப்பட்டு அகராதியெல்லாம் பார்த்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி அதை அவருக்கு போஸ்ட் பண்ணி அதை அவருக்கு போன்’லயும் சொல்லிட்டேன். ஆனா ரெண்டு மூணு நாளானாலும் அந்தக் கடுதாசி வரவே இல்லியாம். இவர் கடுதாசிக்காக காத்திருந்து அது வராமே கடைசியில் இவரே இங்கே வந்துட்டார்”.

    ”கடைசியில் அந்தக் கடிதம் என்ன ஆச்சு” என்று மிகப் பெரிய சஸ்பென்ஸோடு மோகன் ஆவலாகக் கேட்க பத்மா இவனை முறைக்க, அந்த அருணா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவள் எழுதிய கடிதம் அவளுக்குத் திரும்ப வந்ததையும் அவள் புருஷனை ஆயிரம் முறை அதைப் அவள் முன்பே படிக்க வைத்ததையும் பெருமையாகப் பீற்றிக் கொண்டாள். அடடா’ நீ இன்னும் இந்த அருணாவைப் பார்க்கவில்லை இல்லையா. என்னவோ தெரியவில்லை.. சரியாக நீ இல்லாத நாட்களில்தான் அதுவும் நான் கடிதம் எழுதும்போதெல்லாம் அவள் வருகிறாள்.. வேடிக்கையாக இருக்கிறது இல்லை..

    எப்படியோ என் கடித எழுத்துக்குத் தடையாக கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எழுந்து போனார்கள். போகிறபோது அந்த பத்மா என்னிடம் சிபாரிசு வேறு.. அடுத்த வாரம் அவள் ஊருக்குத் தனியே போகிறாளாம்.. அன்பா, அழகா ஒரு கடிதம் பொண்டாட்டிக்கு எழுதுவது எப்படின்னு அவள் புருஷனுக்கு நான் ஒரு டிரெயினிங் கொடுக்கணுமாம். அவனும் கூசாமல் ‘ யார் யாரோ எழுதறாங்க சார்.. நானும் ஒரு லெட்டர் எப்படியாவது எழுதணும் சார்.. ஸ்கூல் படிக்கறச்சே ‘லெட்டர் ரைடிங்’ கிளாஸே இருந்துச்சு சார்.. அப்பல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்லாம விட்டாச்சு. எப்படியாவது உங்கள்ட்ட கத்துக்கணும் சார்’ என்று ஏதோ மிகப் பெரிய ரகசியத்தை என்னிடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்’ என்பது போல கெஞ்ச ஆரம்பித்தான்.. அந்த பத்மாவும் ‘நீங்க எப்படியாவது ட்ரெயின் பண்ணித்தான் ஆகவேண்டும்’ என்று கட்டாயப் ’படுத்தி’விட்டுத்தான் சென்றாள் என்றால் பார்த்துக் கொள்ளேன்.. நான் ஒரு பதிலும் அவர்களுக்கு சம்மதமாகத் தெரிவிக்கவில்லை என்பதையும் உனக்கு சொல்லிவிடுகிறேன்..

    இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நான் ஏதோ கடிதம் எழுதுவதில் நிபுணன் என்று இவர்கள் நினைத்துக் கொண்டதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்ததும் அந்த ஒரு எண்ணத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு நோக்கத்தில்தான் எழுதினேன்.

    பழைய காலத்தில் இந்தக் காதலன் காதலிக்கு நீண்ட கடிதங்கள்லாம் எப்படியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதினார்களோ.. என்ன விஷயமாக வைத்து அத்தனை பெரிய கடிதங்கள் எழுதுகிறார்கள் என்று நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை கண்ணே, மணியே கற்கண்டே உன்னைக் காதலிக்கிறேன் என்று இம்போசிஷன் எழுதுவார்களோ என்னவோ.. இருந்தாலும் கடிதம் என்று வந்துவிட்டால் அதை எழுதிவிட்டு போஸ்ட் பண்ணி விட்டால் அதில் ஒரு திருப்திதான்..

    உனக்கு நினைவு இருக்குமோ என்னவோ.. நான் கூட உன்னை ஒரு தடவை கேட்டேன்.. ’நீ எனக்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமெனத் தோன்றினால் போல சும்மா ஒரு லெட்டர் எழுதிக் காண்பியேன்.’. என்று.. அதற்கு ’ஐயய்ய.. இப்படில்லாம் உங்களுக்கு ஆசையோ’ என்று நீ எனக்கு அழகுக் காட்டி சிரித்தது எனக்கு இன்னமும் நினைவுக்கு வருகிறது..

    அடடா, உன்னிடம் ஏதோ முக்கிய விஷயம் சொல்லவேண்டுமென போனில் சொன்னேன் அல்லவா. நீ கூட இந்தக் கடிதத்தில் எழுதி அனுப்பச் சொன்னாயே.. அது இந்த நிமிடம் வரை ஞாபத்துக்கே வரமேட்டேனென்கிறது.. ஞாபகம் வந்ததும் அதை போனிலேயே சொல்லி விடுகிறேனே..

    அப்புறம் உன் அக்காவை மிகவும் கேட்டதாகச் சொல்லவும் (போன தடவை இதை எழுதியதில் உன் அக்காவுக்கு பரம திருப்தி என்று நீ இங்கே வந்ததும் சொன்னது நினைவுக்கு வருகிறது. )

    மற்றவை போனில்

    உன் அன்புக் கணவன்.

    (வாசகர்களுக்கு அன்புக் கணவன் தன் மனைவிக்கு எழுதிய முதல் கடிதத்தை வாசிக்க http://www.vallamai.com/?p=40314 என்ற லிங்க்’க்கு செல்லவும்.

    Share
  • குழந்தையும் குட்டி தேவதையும்

    திவாகர்

    (இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை. இந்த அடிப்படையைச் சொன்ன என் நண்பன் வாசுவுக்கு இந்தக் கதையை சமர்ப்பணம் செய்கிறேன் – திவாகர்)

    ஒரு போலீஸ்காரனுக்கு இப்படிப்பட்ட சோதனைகளெல்லாம் சகஜம்தான் என்றாலும் இது வித்தியாஸமாக இருக்கிறதே என்று கவலைப்பட ஆரம்பித்தேன் நான். அதுவும் அந்தப் பெண் இடம் தெரியாமல் ராத்திரி வேளையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும்போது வெளியாட்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்.. நல்ல காலம் மீடியாக்காரர்கள் யாரும் அன்று பார்த்துத் தென்படவில்லை..

    ”சார், எப்படியாவது என் குழந்தை எனக்கு வேணும்.. சார்.. மனசு வையுங்க சார்.. நீங்க நினைச்சா எப்படியும் குழந்தை வந்துடும்.. இல்லைனா, அந்த அட்ரஸைக் கொடுங்க.. நானும் எங்க ஜனங்களும் அங்கேயே போறோம்.. சார்.. என் குழந்தை சார் அது.. என் குழந்தையை எங்கிட்ட காமிக்காம இப்படி சதி பண்றீங்களே.. இது நியாயமா..”

    எனக்கு உதவியாக ரைட்டர் உலகநாதன் கூட சொன்னான்..”ஏம்மா.. இப்படி அநியாயமா எங்க மேலே பழியைப் போட்டுப் பேசறே.. முதல்ல அழுவறதை நிறுத்து.. உனக்கு என்னவெல்லாம் எங்களாலே செய்ய முடியுமோ அத்தனை உதவியும் நாங்க பண்றோம் இல்லே….”

    அவள் கேட்கவில்லை..”என் குழந்தை இப்பவே வேணும் சார்.. எப்படியாவது கொண்டாங்க சார்..”

    நான் எழுந்துவிட்டேன்.

    “இதோ பாரும்மா.. நான் உனக்கு ஏற்கனவே சொன்னதுதான்.. உன் கம்ப்ளெயிண்ட் மேலே ஏற்கனவே போன்ல பேசியாச்சு..  ஆறு மாசம் குழந்தையை விட்டுட்டு இப்ப திடீர்னு வந்து உடனே அது வேணும்னா நான் எங்கே போவேன்.. நீ சொன்ன குழந்தையைப் பத்தி அத்தனை தகவலையும் சரிபார்த்தாச்சு. எல்லாமே அந்தக் குழந்தையோட அடையாளத்தோடு ஒத்துப் போறதையும் நாங்க ஒப்புக்கறோம். ஆனா கையிலே அந்தக் குழந்தை வரணும்..  ஒரு நாள் பொறுமையாயிரு.. நாளைக்கு இதே நேரத்துல எப்படியாவது உன் குழந்தையை உன்கிட்டே சேர்க்கிறது எங்க பொறுப்பு..” உலகநாதனைப் பார்த்தேன்.. “இந்தம்மாவையும் புருஷனையும் எங்கியாவது நல்ல இடமா பார்த்துத் தங்க வைய்யு.. ஏதாவது பணம் தேவைன்னா சொல்லு.. நான் தர்ரேன்..”

    வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். உலகநாதன் கூடவே வந்தான்.. ”சார், எப்படி சார், மல்லிகா நிச்சயம் வருமா சார்.. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு சார்.. மல்லிகா வராதுன்னு தோணுது.. ரொம்ப பிடிவாதமான பொண்ணுன்னு கேள்விப்பட்டிருக்கேன் சார்.. எல்லாமே சட்டபூர்வமா செஞ்சிருக்கு சார், கோர்ட்டுக்கு போய் டைம் கேக்கும்.. ஒருவேளை கோர்ட்டுக்குப் போனா ஏதாவது தீர்ப்பு கிடைக்கும்.. ஆனா ரொம்ப நாள் ஓடும் சார்.. இது ரொம்ப சிக்கலா போறது.. நாம் இந்த கேஸ்’லயிருந்து கழண்டுக்குவோம் சார்.. நம்ம சைட்’ல எல்லாமே கரெக்டாதான் பண்ணியிருக்கோம்.. ஆனா எனக்கு என்னவோ இந்தப் பொம்பளையைப் பார்த்தா பரிதாபமா இருக்கு சார்..”

    ”இல்லே உலகா.. மல்லிகா நல்ல பொண்ணு..  நான் பேசியிருக்கேன்.. நிச்சயம் வரும்.. வராக்காட்டி அப்போ ஏதேனும் செய்யலாம்.. இப்ப இந்தம்மாவை சமாதானம் செய்யு.. எவனாவது வெளியிலேர்ந்து ஸ்டேஷனைப் பார்த்தா தப்பா பேசுவான்.. முதல்லே அவங்களை வெளியே கிளப்பு.. நாளைக்குப்பகல் நேரத்துல வரச் சொல்லு..”

    நான் கிளம்பிவிட்டேன்.. வண்டியில் போகும்போது சில்லென்று உடலில் காற்று பட்டதுதான்.. ஆனால் மனம் மட்டும் குளிராகவில்லை.. குழப்பம் தீருமா.. தெரியவில்லை. மல்லிகா வந்தால்தான் தெரியும். அவள் வருவாளா..

    எல்லாம் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த பழைய கதைதான். இன்று புது உருவாக வந்து தொல்லை கொடுக்கிறது.. ஒருநாள் நள்ளிரவு வரும் நேரத்தில் ஒரு ரோந்து பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்றபோதுதான் மல்லிகாவிடமிருந்து போன் வந்தது.

    அந்த நேரத்தில் ஒலித்து வந்த அந்த பரபரப்பான குரல் எனக்குள் சற்று படபடப்பை அதிகரிக்கத்தான் செய்தது.

    ”என்ன மல்லிகா.. சொல்லு..பரவாயில்லே..”

    “நீங்க கொஞ்சம் வீட்டாண்ட வரணும்.. முடியுமா?.. நீங்க மட்டுமா வாங்க.. ஸ்டேஷனுக்குத் தகவல் தரவேண்டாம்.. காரணமாதான் சொல்லறேன்..”

    “சரி.. இதோ வந்துடறேன்..” கைபேசியை மூடிவிட்டு கிளம்பினேன்..

    மல்லிகா இதுவரை இப்படியெல்லாம் இரவில் கூப்பிட்டதேயில்லை.. ஏன் அவள் வேலை செய்யும்போது இருந்த மோசமான நிலையில் கூட இரவில் கூப்பிட்டதில்லை. மல்லிகாவைப் பற்றி விவரமாகத் தெரிந்தவன் நான். அட, நானென்று இல்லை. யார் அவளைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் முதலில் அவளைப் பற்றிச் சொல்வது மிகவும் நல்ல பெண்..என்றுதான்.

    பொதுவாக இந்தப் பெண்களே வேலைக்குச் செல்லக்கூடாதென்று ஒரு காலத்தில் நான் நினைத்ததுண்டு. அதுவும் போலீஸ் வேலைக்குச் செல்லும் பெண்கள் படும் சிரமம் சொல்லி மாளாதுதான்.. ஆனாலும் உலகம் அதுவும் நம் ஊரெல்லாம் அதிகம் மாறி விட்டது. தைரியமான பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்தான். அதிலும் மல்லிகா போன்று தைரியமான பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் பெண் என்பவள் ஆளப் பிறந்தவள்தான் என்று ஒரு புதிய எண்ணம் கூட வந்துவிட்டது.

    ஊட்டியில் பிறந்து வளர்ந்தவள். அதனால்தானோ என்னவோ நிறமும் அழகும் சற்றுக் கூடுதலாகவே கிடைத்ததோ என்ற ஒரு மாயை நினைப்பு எனக்கு உண்டு. வேலூரில் போலீஸ் வேலை கிடைத்து அவள் புதிதாக சேர்ந்தது முதலே அவளை அறிவேன். ஏதோ ஒரு அதிர்ஷ்டம் என்னை அவள் அருகிலேயே நிறுத்தி வைப்பது போல ஏறத்தாழ இருபது வருடங்களாக வைத்திருந்ததால் அவளின் கல்யாணம், அது நடந்த சில வருடங்களிலேயே ஒரு விபத்தில் கணவனை இழந்தது, ஆனாலும் வாழ்க்கையின் சோகத்தை சமாளித்தவிதமும் நான் அறிவேன். தன் சோகத்தை வெளிக் காண்பிக்க மாட்டாள். அதிசயப் பிறவிதான் என நினைக்கும் அளவுக்கு தன் கடமையில் நல்ல பெயரும் பெற்றவள். பெண்களுக்கே உரிய சோதனைகள் வரும்போதெல்லாம் அவள் அதை நாகரீகமான முறையில் கையாளும் விதமும், நடத்தை சரியில்லாத சில மேலதிகாரிகளின் நடவடிக்கைகளை தவிர்க்கும்போது கூட அவள் பொறுமையாக நடந்து கொள்வதும் அவர்களிடமிருந்து விலகிப் போவதும் நான் அறிவேன். நானும் பல சமயங்களில் அவளுக்காக பரிந்து பேசுவதும் அதனால் அவ்வப்போது சக அதிகாரிகளிடமிருந்து ஒரு ஏளனமான சிரிப்பும் கூட பரிசாகக் கிடைப்பதும் எனக்கே பழகிப் போனதுதான்.  என்னிடம் மட்டும் அவளுக்கு ஏதோ ஒரு பாசம் உண்டு என்பது தெரிந்தாலும் எந்த நிலையிலும் எந்த ஆண்மகனையும் அலைக்கழிக்காத பாங்கும் அவளுக்கு உண்டு என்பதை அறிந்தவன் என்பதால் அவள் மேல் எனக்கு பெருமதிப்பு கூட உண்டு.

    ஆனாலும் இந்தக் கூட்டத்தில் அவள் தனியாக நின்று போராட முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஒரு கேஸில் இவள் செய்யாத தவறுக்காக அரசாங்கத்தால் கண்டிக்கப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மூன்று மாதம் அஞ்ஞாத வாசமாக வீட்டிலேயே இருந்தாள். இந்த சமயத்தில் என் உதவியை தாராளமாக வழங்கினேன். மேலதிகாரிகளுக்கு அவள் நன்னடத்தைப் பற்றிய விளக்கங்களை எழுதியதோடு மட்டுமல்லாமல் என் மனைவியுடன் அவள் வீட்டுக்கு அடிக்கடி சென்று உதவுவதை வழக்கமாகக் கொண்டேன். மூன்று மாத சஸ்பெண்ட் முடிந்து விசாரணையில் இவள் மீது தவறு இல்லை எனத் தெரிந்து மறுபடியும் இவளை வேலைக்கு சேர்த்துக் கொண்டபோதுதான் யாருமே எதிர்பாராதவிதமாக இவள் ராஜினாமா செய்தாள். ஊட்டியிலிருந்து தன் தாயை வரவழைத்துக்கொண்டு தனியாக வசிக்க ஆரம்பித்தாள். நான் எதுவும் அவளிடம் கேட்பதில்லை.. என்னிடம் கூட அவள் அறிவுரையோ ஆலோசனையோ கேட்பதில்லை.. அவள் இஷ்டம்.. அவள் கஷ்டம்.. அவள்தான் அறிவாள் என்று சும்மா இருந்துவிடுவேன்.. ஆனால் அடிக்கடி அவள் எங்கள் வீட்டுக்கு வருவதும் நாங்கள் அவளிடம் செல்வது வழக்கமான ஒன்றுதான். அப்படிப்பட்டவள்தான் திடீரென இந்த இரவில் கூப்பிட்டிருக்கிறாள்.

    மல்லிகா வாசலிலேயே அந்த நேரத்திலும் காத்திருந்தாள். காட்பாடியின் அந்த மங்கலான தெரு விளக்கில் அவள் வீட்டில் மட்டும் முன் வாசல் விளக்கு போட்டு வெளிச்சமாய் காத்திருந்தாள்..

    ”என்ன மல்லிகா.. என்ன விஷயம்..?”

    ”உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேன் ஸார்.. எங்க பக்கத்து வீட்டுலதான் இந்த அதிசயம்..”

    அழைத்துக் கொண்டு போய் அந்த அதிசயத்தைத்தான் காண்பித்தாள்.. ஒரு டர்க்கி டவலில் அப்படியே போர்த்தப்பட்டு அந்தக் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. எட்டு மாதமோ ஒன்பது மாதமோ இருக்கும் என மனதுள் நினைத்தேன்..

    ”இந்தக் குழந்தை”.. என நான் ஆரம்பிக்குமுன் அந்த வீட்டுக்கார ஆசாமி என்னைக் குறுக்கிட்டான்.. பயந்தபடிதான் பேசிக்கொண்டு போனான்.

    ”ஒரு மணி முன்னாலே நம்ம வீட்டுத் திண்ணைல இந்தக் குழந்தை சத்தம் போட்டுச்சு.. ரொம்பப் பெரிசா அழலைன்னாக் கூட இருட்டாச்சுங்களா.. நல்லா கேட்டுதுங்க.. உடனே கதவைத் துறந்து வெளியே பார்த்தாக்க துண்டுக்குள்ள  இந்த குழந்தை மட்டும் கிடந்துச்சு சார்.. சுத்தி ஒரு பய இல்லே.. என்ன சார்.. எவ்வளோ அழகா இருக்கு சார் இந்த பெண் குழந்தை.. எப்படி சார் இங்க வுட அந்த மனுஷனுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ.. யார் வுட்டாங்களோ.. சார்..  பால் குடுத்தோம் சார்.. அழுவாம குடிச்சுது.. என்னமா சிரிச்சுது சார்.. இப்போதான் தூங்குது..”

    யாரோ இந்தச் சின்னக் குழந்தையைக் கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள். இந்தக் குடும்பம் பக்கத்து வீட்டு மல்லிகாவை எழுப்பி சொல்லியிருக்கிறது.. அவள்  எனக்கு போன் செய்து கூப்பிட்டிருக்கிறாள். இப்போது இந்தக் குழந்தையை என்ன செய்ய? மல்லிகாவே வழி சொன்னாள்.

    ”சார்.. காலை வரைக்கும் இவங்க கிட்டேயே இருக்கட்டும். சார்.. நீங்க வந்தீங்கன்னா நாளைக்கு ஏதோ ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா நீங்க துணையா இவங்களுக்கு இருப்பீங்க’ன்னுதான் தொந்தரவு பண்ணிட்டேன் சார்.. நாளைக்குக் காலைல கொஞ்சம் வெளில விசாரிச்சு வெக்கலாம். நைட்டுல ஓட்டற ஆட்டோக் காரங்க நீங்க சொன்னா கேப்பானுங்க.. அவங்ககிட்டே கேட்டா கூட துப்பு கிடைக்கும். எந்த பணக்காரன் பெத்த பிள்ளையோ.. சும்மா ஜொலி ஜொலின்னு ஜொலிக்குது..”

    ”இந்தக் குழந்தை வெளியூர்க் குழந்தைன்னா, அதுவும் இங்க வந்து ஒரு மணி நேரம்தான் ஆச்சு இல்லியா.. அப்படின்னா எதுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு போயிட்டு யாரானும் தேடறங்களா’ன்னு பாக்கறேன்.. நம்ம ஸ்டேஷனுக்கும் போறேன்.. யாராவது கிடைச்சாங்கன்னா உடனே சமாதானம் பண்ணிக் குடுத்துடலாம்.. கிடைக்கலைன்னா கேஸ் எழுதணும்தான்.. நீ சொல்ற மாதிரி இன்னிக்கு ராத்திரி குழந்தை இங்கேயே இருக்கட்டும்.. காலைல விசாரிக்கலாம். எதுனாச்சும் விசேஷமான விஷயமிருந்தா நீ என்னைக் கூப்பிடு..”

    நாம் கிளம்புமுன் மல்லிகாவிடம் தனியே பேசினேன்.. “எதுவும் துப்பு கிடைக்கலேன்னா வேலூர் குழந்தைகள் காப்பகம்’ எங்கியாவது பார்த்து கொடுத்துடலாம்  நாளைக் காலைல அதுக்கு வேண்டிய வேலை செய்யலாம். எதுக்கும் இந்த ஆளை நாளைக்குக் காலைல ஸ்டேஷனுக்குக் கூப்புட்டு வந்து ஒரு கம்ப்ளெயின் ஃபைல் பண்ண வெய்யு.. உனக்குதான் தெரியுமே.. நாளைக்கு எதுவும் பிரச்சினை வந்துடக் கூடாது பார்..”

    அவளிடம் சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.. குழந்தை முகம் நினைவுக்கு வந்தது. நல்ல சிகப்பு.. குண்டு முகம்.. தொட்டுப் பார்த்திருக்கலாம்தான்.. பஞ்சு போல இருந்திருக்கும். நல்லா சிரிக்குதாம்மே.. நாளைக்கு எதற்கும் தொட்டுப் பார்த்து அது சிரிப்பதைப் பார்த்து விடலாம்..

    பகல் நேரத்திலேயே ரயில் வரும் நேரம் தவிர எப்போதும் அமைதியாக இருக்கும் காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் அந்த நட்டு நடு நிசியில் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லைதான். ஒரு சுற்று வலம் வந்து பார்த்தேன்.. யாரும் நான் நினைத்தது போல யாரையும் தேடிக்கொண்டிருக்கவில்லை என்பதால் மறுபடியும் வெளியே வந்து பார்த்தேன். தெரிந்த ஆட்டோ டிரைவர்கள் கண்ணுக்குப் பட அவர்களை அழைத்து சாதாரணமாக விசாரித்தேன்.. ஒன்றும் விஷயம் தேறவில்லைதான்.. வீட்டுக்குச் சென்று விட்டேன். மனைவியிடம் விஷயம் சொல்லிவிட்டுப் படுத்துவிட்டேன்.

    விடிந்து விட்டதா என்பது தெரியாமல் இருந்தபோதுதான் திடீரென மனைவி எழுப்பினாள். “என்னங்க.. கொஞ்சம் எழுந்திருங்க.. மல்லிகா வந்திருக்குது.. கையிலே அந்தக் குழந்தை இருக்குது.. வாங்க..”

    இவள் குழந்தையுடன் ஏன் வந்தாள்.. ஆச்சரியமாக அறையிலிருந்து வெளியே வந்தேன்..

    ”என்ன மல்லிகா.. என்ன விஷயம்?”

    “இல்ல சார்.. ராத்திரிஏதாச்சும் விஷயம் தெரிந்ததா’ன்னு கேட்கலாம்னுதான் வந்தேன்..நீங்க போனவுடனே இந்தக் குழந்தையை என்னோட எடுத்து வந்துட்டு எங்கிட்டேயே படுத்துக்க வெச்சுட்டேன்.. ரொம்ப பாசமா அப்படியே சாஞ்சு தூங்குது சார்..”

    மல்லிகாவை ஆதூரத்துடன் பார்த்தேன். எனக்கு அவள் நிலை புரிந்தது.

    “நேத்துயாரும் கிடைக்கலே மல்லிகா.. இன்னிக்குப் போய் ஸ்டேஷன்’ல ஆளை அனுப்பி விசாரிக்கலாம்.. உனக்குத் தெரிஞ்ச குழந்தைகள் காப்பகம் எதுனா இருந்தா சொல்லு.. அங்கே கொடுக்க நான் அரேஞ்ச் பண்ணறேன்..”

    “அதைப்பத்திப் பேசத்தான் நான் காலைலையே ஓடி வந்தேன் சார்.. எதுக்கு சார் அநாதை இல்லம்.. அது இதுன்னு.. பேசாம எங்கிட்டயே இருக்கட்டும் சார்.. யார்னா வந்து ஸ்டேஷன்’ல கம்ப்ளெயின் பண்ணினா விசாரிச்சுட்டுக் கொடுத்துடுவோம் சார்..”

    ”அது சரிம்மா.. ஆனா இந்தக் குழந்தையை பதிவு செய்யப்பட்ட அநாதை இல்லத்துல விட்டாத்தானம்மா நாளைக்கு கேஸ் எதுவும் தடம் மாறாது. உனக்குத் தெரியாதா? உனக்கு இந்தக் குழந்தை ரொம்ப பிடிச்சுருக்கா?”

    சட்டென அவள் கண்கள் ஒளிர்ந்தன.. “ரொம்ப சார்..யாருமே வரலைன்னா நான் என்கிட்டேயே வெச்சு வளர்க்கிறேன் சார்..”

    அவள் சொன்னவிதம் என்னை என்னவோ செய்தது.. தாய்மைக்கே உள்ள குணம் எல்லாப் பெண்களுக்கும் இயற்கையிலேயே இறைவன் கொடுத்திருக்கிறான் போலும்..

    “மல்லிகா.. எதையும் யோசிச்சு செய்யு.  இந்தக் குழந்தையைப் பெத்தவங்க வந்து கேட்டா உடனே கொடுத்துடணும்மா.. இருந்தாலும் ஒண்ணு பண்ணு.. நம்ம ஸ்டேஷன்’ல லிஸ்ட்’ல இருக்கற அநாதை இல்லத்துல நமக்குத் தோதா யாராவது இருக்காங்களா’ன்னு பாரு. அங்கே போய் இந்தக் குழந்தையை சேர்த்துட்டு அப்ளிகேஷன் கொடுத்துட்டு அத்தோட ஒரு காபியும் வாங்கிக்கோ.. அவங்ககிட்டே பேசி குழந்தையை நீ வளர்க்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்னு அவங்ககிட்டேயிருந்து குழந்தையைத் திருப்பி வாங்கிக்கோ… நம்ம ஊர்’ல அநாதைக் குழந்தைங்களுக்கு பஞ்சமே இல்லே.. அவங்களோட இந்தக் குழந்தையும் சேருவதை விட உங்கிட்டே வளர்ந்ததுன்னா நல்லதுதானேம்மா.. ஆனா இப்போ நான் சொல்றது எல்லாமே இந்தப் பெத்தவங்க கிடைக்கறதைப் பொறுத்துதான்.. அவங்க கிடைச்சுட்டாங்கன்னா கொடுத்துடணும்மா.. ஞாபகம் வெச்சுக்கோ.. இல்லைன்னா குழந்தைக் கடத்தல் கேஸுன்னு ஆயிடும்.. உனக்குத் தெரியாத விஷயம் இல்லே இது.”

    “ஆமா சார்.. நீங்க சொல்றமாதிரியே ஏற்பாடு பண்றேன்.”

    ”சரி, இந்த விஷயத்துல என்னோட பூரண உதவி வழக்கம்போல இருக்கும்”

    அவள் முகம் மகிழ்ச்சியால் பூரிக்க குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே கிளம்பி விட்டாள்.

    அவளைப் பொறுத்தவரை வாழ்க்கையில் ஏதோ ஒரு நிம்மதியை இந்தக் குழந்தையில் பார்க்கிறாள் என்று புரிந்தது. அவளுக்கு இந்தக் குழந்தை இருந்தால் அவள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல காரணமும் அமைதியும் கிடைக்க ஆண்டவன் வழி செய்ததாகத்தான் நினைத்தேன்.

    அவள் போனது மனைவி கேட்டாள். “பாவங்க.. ஏதாவது ஏற்பாடு பண்ணி இந்தக் குழந்தை இவகிட்டேயே இருக்கும்படி செய்யுங்க..”

    “அப்படில்லாம் சட்டத்துல இடம் இல்லே.. பெத்தவங்க கிடைச்சு அவங்கதான் பெத்தவங்க.;ன்னு நிரூபணமாச்சுன்னா அவங்க கையிலே சேர்த்துடணும்.. இல்லாகாட்டி கேஸ் வேறவிதமா போகும்.. இதுவரைக்கும் நல்ல பேரோட இருந்திருக்கேன்.. இப்படியே இருக்க விடு.”

    அன்று முழுவதும் யாருமே அந்தக் குழந்தையைத் தேடி வரவில்லை.. மல்லிகா அநாதை இல்லத்தில் பதிவு செய்து, திரும்பவும் தத்து எடுத்துக் கொண்டதாக உறுதிப் பத்திரமும் உடனடியாக வாங்கிவிட்டாள். கெட்டிக்காரிதான். . அந்தக் குழந்தையும் அழகாக மல்லிகாவிடம் தன் சொந்தத் தாயாக நினைத்து பாய்ந்து சென்று அவள் மடியில் விழும்போதெல்லாம் அவள் முகம் காட்டும் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே. எனக்கே அதைப் பார்க்கவும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்ததது. இரவு ஸ்டேஷனுக்கு வந்திருந்தவள் ஏதோ முடிவுக்கு வந்தவள் போல பேசினாள்..

    ”சார்..நான் ஊட்டிக்குப் போகறேன் சார்.. இன்னிக்கு மிட் நைட் வண்டிக்கே கோயம்புத்தூர் போய் அங்கேயிருந்து ஊட்டி போயிடறேன் சார், அண்ணன் கூப்பிட்டுக் கொண்டே இருக்கறச்ச இனிமேயும் கேக்காட்டி நல்லா இருக்காது சார்.. அப்புறம் குழந்தையோட படிப்பு எல்லாம் ஊட்டியிலேயே ஏற்பாடு பண்ணனும் சார்.. உங்ககிட்டே சொல்லிட்டு போகலாம்னுதான் வந்தேன்.. நீங்க குடும்பமா அப்பப்ப அங்க வரணும் சார்..” முகத்தில் மகிழ்ச்சி ஏராளமாகத் தெரிய ஒருவித பதட்டமும் சேர்ந்து கொண்ட நிலையில்தான் பேசினாள்.

    என்ன இது.. ஒருநாள்தானே ஆயிற்று.. இன்னும் சில நாட்களாவது பார்க்கவேண்டாமா.. இந்தக் குழந்தையைத் தேடி யாரும் வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.. இவள் கொஞ்சம் பொறுமை காண்பிக்காமல் அவசரப்படுகிறாளோ..

    அவள் உடனடி முடிவு அசாதாரணமாகப் பட்டாலும் நானும் தலையசைத்தேன். ஒருவிதத்தில் எனக்கும் மகிழ்ச்சி அவளிடமிருந்து தொத்திக் கொண்டது. ஸ்டேஷனில் எல்லோரிடமிருந்து பிரியா விடை பெற்றாலும் என்னைப் பார்க்கையில் ஒரு விசேஷ அன்பு பிரதிபலித்ததை என்னால் உணர முடிந்தது.. அவளை அனுப்பி வைத்த போது என்னையுமறியாமல் என்னிடம் ஏற்பட்ட ஏதோ இனம் தெரியாத வருத்தத்தை எப்படி வெளிக்காட்டுவேன்..

    ஆனால் உடனடியாக வராத அந்தக் குழந்தையின் தாயும் தகப்பனும் இத்தனை நாட்கள் கழித்து வருவார்கள் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லைதான்.. குழந்தையைப் பற்றி ஆறு மாதங்களுக்கு முன் ஒரு கேஸ் கோப்பாகப் பதிவு செய்திருந்தாலும் அதன் தொடர்ச்சியாக அதை அனாதை இல்லத்தில் கொண்டு விடப்பட்டது என்பதையும் எழுதி அந்தக் கேஸையும் க்ளோஸ் செய்தாயிற்று. இப்போது இந்தத் தாய் வந்திருக்கிறாள்.

    சென்னையைச் சேர்ந்தவள் குடும்பத்துடன் கோவையிலிருந்து சென்னை திரும்பும்போது காட்பாடி ஸ்டேஷனில் ரயிலில் குழந்தையின் செயினுக்கு ஆசைப்பட்ட திருட்டுப் பயல் ஒருவன் பயணத்தில் தூங்கிக் கொண்டிருந்த இவர்கள் யாருமறியாமல் குழந்தையை அப்படியே தூக்கிக் கொண்டு போய் செயினை மட்டும் கழட்டி விட்டு, அந்தக் குழந்தையை அநாதையாக அன்று அந்த வீட்டில் போட்டுவிட்டு ஓடியிருக்கிறான். திருட்டுப்பயல்.. நல்லகாலம்.. செல்லாக் காசுக்காகக் கூட கொலை செய்யத் தயங்காத மனிதர்கள் ஏராளமாக இருக்கும் இந்தக் கால கட்டத்தில் இப்படி ஒரு குழந்தையைக் கொல்லாமல் விட்டிருக்கிறான் என்ற ஒன்றே அப்போதைக்கு சமாதானமாக இருந்தது. இருந்தாலும் அந்தத் தாய் அடுத்த நாள் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் புகார் கொடுக்க, அது அப்படியே இருக்க, இவளே பாவம் கோவையிலிருந்து ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் விசாரித்துக் கொண்டே இருந்திருக்கிறாள். இங்கே நம் ஸ்டேஷனுக்கும் அதுவும் நான் இல்லாத சமயத்தில் வந்தபோதுதான் புதிதாக சமீபத்தில் ட்ரான்ஸ்பர் ஆகிவந்த ரைட்டர் உலகநாதன் விவரம் தெரியாமல் மூடிக் கிடந்த ஃபைலைத் திறந்து அந்தத் தாயை அவள் குழந்தை முதலில் பதிவு செய்து வைக்கப்பட்ட அநாதை ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான். அத்தனை விவரங்களும் கிடைத்து, இதோ இப்போது நீதி கேட்டு போராட அந்தத் தாயும் அவள் புருஷனும் என்னுடைய ஸ்டேஷனுக்கு என்னிடமே வந்துவிட்டார்கள்.

    இது ஒருவிதமாகப் பார்த்தால் மிகச்சாதாரணமான கேஸ்தான்.. முதலில் குழந்தையின் தாயார் யார் எனத் தெரியாமல் போய்விட்டது. இப்போது அந்தத் தாய் கிடைத்துவிட நாம் குழந்தையை திரும்ப வாங்கிக் கொடுத்துவிட்டால் கேஸ் முடிந்துவிடும்தான். காணாமல் போன பொருட்கள் கிடைத்து விட்டால் உரிமையானவரிடம் ஒப்படைத்தது போலத்தான். இன்னும் இதைப் போன்ற கேஸ்கள் பொறுப்பான முறையில் நிறைவு செய்தால் எனக்கு பிரமோஷனுக்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கக் கூட செய்யும்.

    ஆனால் மல்லிகாவின் கையில் உள்ளதே இந்தக் குழந்தை… நான் மல்லிகாவிடம் கைபேசியில் பேசினேனே.. குழந்தையைக் கொண்டு வந்து கொடுக்கும்படி இரக்கமேயில்லாமல் அவளிடம் சொன்னேனே.. அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும் கடைசியில் கேட்டு முடித்தவுடன் பதில் ஏதும் சொல்லாமல் வந்த கேவலில் அவள் வேதனையை என்னால் உணரமுடிந்ததே.. ஆறு மாதம் தாய்மையை முழுமையாக அனுபவித்த அந்த சுகத்தை எப்படி அவளால் இழக்க முடியும்.

    குழந்தை பாசம் என்றால் காணாமல் போன பணம் பொருள் போலவா.. தாய்மைக்கு ஏதேனும் அரசாங்கம் சட்டத்தில் தனிச் சலுகை கொடுத்துள்ளதா..அதுவும் பெற்ற தாய் நீதி கேட்க, வளர்க்கும் தாய்க்கு இங்கே என்ன உரிமை இருக்கும்?. எனக்குப் புரிந்த இத்தனை விஷயம் மல்லிகாவுக்கும் புரிந்திருக்கும். புத்திசாலிப் பெண் அவள் வருவாள்.. குழந்தையை ஒப்படைப்பாள். அப்படி வரவில்லையெனில் போலீஸ் பாதுகாப்போடு இந்தத் தாயை ஊட்டிக்கு அனுப்பி வைக்கத்தான் வேண்டும்.. வேறு வழியில்லைதான்.

    போகும்போதே உலகநாதன் போனில் அழைத்தான்.. ‘சார்.. ஒரு குட் நியூஸ்.. இந்தம்மாவும் புருஷனும் நம்மோட ஒத்துழைக்க சம்மதம் சொல்றாங்க..”

    “என்ன உலகா.. என்ன சொல்லறே”

    உலகன் நிதானமாக விளக்கினான்.. அவன் சொல்லச் சொல்ல என் மனத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடத் தொடங்கியது.

    இந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் பணம் படைத்தவர்கள் இல்லை.. சாதாரண குடும்பம்தானாம். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கிறதாம்.. இது மூன்றாவது குழந்தை, உலகன் இவர்களிடம் ஏதோ பேசியிருக்கிறான். குழந்தை மல்லிகாவிடமே வளரட்டும்.. அவ்வப்போது ஊட்டிக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரட்டும். இப்போதெல்லாம் ஒரு குழந்தை ஹாஸ்டலில் போட்டுப் படிக்கவிட்டால் அது பாட்டுக்கு வளராதா என்ன.. அது போல மல்லிகாவிடமே வளரட்டுமே.. ஆனால் மல்லிகா ஏதேனும் இவர்களுக்கும் பண உதவி அவ்வப்போது செய்து வரவேண்டும்.. இதை உலகன் சொன்னபோது முதலில் அந்த தகப்பன் ஒப்புக் கொண்டு பின்னர் அவன் மனைவியையும் ஒப்புக் கொள்ள வைத்தானாம்.. குழந்தை நன்றாக வளரவேண்டும் என்று அவர்களுக்கும் ஒரு விருப்பம் இருக்காதா என்ன.. குழந்தையை  யாருக்கும்விற்கவில்லையே.. வளர்ப்பதற்கு இன்னொரு இடம் வாய்ப்பாகக் கொடுக்கிறோம்… என்றைக்கும் இவள்தான் அன்னை.. என்றெல்லாம் எடுத்துச் சொன்னபிறகு இவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறான் உலகன்..

    நான் அவனைப் பாராட்டினேன்.. மல்லிகா நாளை வந்தால் எவ்வளவு பணம் அவளால் தரமுடியும் என்றும் கேட்டு ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.. கேஸ் இவ்வளவு சுமுகமாக முடித்து வைத்திருக்கிறான் உலகன்.. நல்லதுதான்.

    என் மனதில் ஒருவகையான நிம்மதி பரவ அந்த நிம்மதியுடன் இர்வு தூங்கினேன். அடுத்த நாள் காலையிலேயே மல்லிகாவிடம் மறுபடி பேசினேன்.. டிரெயினில் அவள் அண்ணன் துணை வர குழந்தையுடன் வந்து கொண்டிருக்கிறாள். அவளிடம் நடந்ததைச் சொன்னேன். எத்தனை சந்தோஷமாகக் கூவினாள். வண்டி இறங்கினதும் நேரடியாக ஸ்டேஷன் வருவதாகச் சொன்னாள். அவள் சந்தோஷம் என்னுள் பரவ அதை அனுபவித்துக் கொண்டே கொஞ்சம் தாமதமாகத்தான் ஸ்டேஷன் சென்றேன்.

    நான் நுழைந்தபோது ஸ்டேஷனில் அந்தத் தம்பதியினர் இருந்தனர். முதல்நாள் செய்த ஆர்ப்பாட்டமெல்லாம் செய்யாமல் பெஞ்சில் உட்கார்ந்து உலகனிடம் பேசிக்கொண்டிருந்தனர். என்னைப் பார்த்தவுடனே ஒரு புன்சிரிப்போடு உலகன் என்னிடம் வந்தான்.

    ”சார், எல்லாம் நல்லபடியா முடியுது.. அந்தம்மா கூட குழந்தை நல்லபடியா இருந்தா போதுமின்னுதான் சொல்லறது.. பணம் கூட வேண்டாம்கிறது இப்போ..”

    ”மல்லிகா வந்துடுவா உலகன். அவளும் தன்னால் முடிந்த பண உதவியைச் செய்யறேன் நு சொல்லியிருக்கா..எல்லாமே மகிழ்ச்சியா இருந்தா நல்லதுதானே.. அவள் வரட்டும்.”.

    கொஞ்ச நேரத்தில் மல்லிகா வந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் கொஞ்சமும் தெரியாமல் மலர்ந்த முகத்துடன் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். ஆறு மாதத்துக்கு முன் பார்த்த குழந்தையா அது.. ஆஹா.. நன்றாக சதை பிடித்து தத்தித் தத்தி நடைபோட்டு கீழே இடறி தானே விழுந்து தானே எழுந்து கலகலவென சிரித்து வந்த ஒரு சில நிமிஷங்களிலேயே  போலிஸ் ஸ்டேஷனையே தலைகீழாய் மாற்றிவிட்டது.

    ist2_2304394-baby-girl

    குழந்தையாய் இங்கிருந்து சென்றது ஒரு குட்டி தேவதையாக திரும்பி வந்தது போலத்தான் உணர்ந்தேன். அழகான ஆடை.. கழுத்தில் இரண்டு பவுனுக்கும் மேலான கனமான சங்கிலி, கையில் தங்க வளையல்கள் ஜொலிக்க அந்தக் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன்.

    நான் பார்ப்பதைப் போலத்தான் அந்தத் தாயும் பார்ப்பதாக சட்டென உணர்ந்ததால் அவளைப் பார்த்தேன். ஆமாம்.. அப்படித்தான் பார்த்திருந்தாள். திடீரென என்ன நினைத்தாளோ பெஞ்சிலிருந்து எழுந்து ஓடி வந்து தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு முத்தமாரிப் பொழிந்தாள். அவள் கண்களில் நீர் மழையாய்ப் பொழிய அந்தக் குட்டி தேவதையை கட்டிக்கொண்டு உச்சி மோர்ந்தாள்..அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது..

    குழந்தையை சமாதானப்படுத்திக்கொண்டே அந்தக் குழந்தையின் நகைகளைக் கழட்டினாள். அப்படியே அவைகளை மல்லிகாவிடம் கொடுத்தாள்.. ”இந்த நகைக்காகத்தான்மா எவனோ ஒருவன் இந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனான்.. இத்தனை மாஸம் இவளைக் காப்பாத்தி இப்படி வளர்த்திருக்கியே.. உனக்கு எப்படி நன்னி சொல்றதுன்னு தெரியலே.. ஆனா இந்தக் குழந்தையை உன்னிடமே வெச்சுக்க விட எனக்கு மனசில்லை..இது என் குழந்தை.. நானேதான் வளர்க்கணும்..  நீ எப்ப வேணும்னாலும் இந்தக் குழந்தையைப் பார்க்க வரலாம்.. வேற எதுவும் எனக்குச் சொல்லத் தெரியலே”

    அந்தக் குழந்தை அவளிடம் இருக்க இருக்க சத்தம் போட்டு அழத் தொடங்கியது..திமிறியது கூட ஆனால் அந்தத் தாய் அதைப் பொருட்படுத்தவேயில்லை.. அவள் கதறக் கதற அந்தக் குழந்தையை மேலும் இறுக்கிக்கொண்டே பேசினாள். மல்லிகாவின் நிலையை என்னால் விளக்க முடியவில்லை.. அவள் இதை எதிர்ப்பார்க்கவில்லை. எத்தனை ஆனந்தத்தோடு உள்ளே வந்தாள்.. உடனடியாக அந்த ஆனந்தம் இப்படிப் பறிக்கப்பட்டுவிட்டதே.. ஏன் இப்படி இவளுக்கு மட்டும் ஆகவேண்டும்.

    மல்லிகா என்னிடம் வந்தாள்.

    “அம்மான்னா, அதுவும் பெத்த அம்மான்னா அம்மாவுக்கு உள்ள உரிமையே தனி.. அவங்க சொல்றது எல்லாம் சரி சார், குழந்தை அவங்ககிட்டேயே இருக்கட்டும் சார்.. இதோ நிறைய விளையாட்டுச் சாமான்லாம் இருக்கு சார்.. பேபிக்கு என்னென்ன பிடிக்கும் எது பிடிக்காது ந்னு ஒரு லிஸ்ட் எழுதி வெச்சிருக்கேன் சார்..  ராத்திரில ரெண்டு மணிக்கு மூணு மணிக்குன்னு எழுந்திருக்கும்.. கொஞ்சம் சமாதானப்படுத்தி தூங்கவெச்சா போறும்.. தூங்கிடுவா.. நாள் போக போகச் சரியாயிடும்.. ஜாக்கிரதையாப் பார்த்துக்கச் சொல்லுங்க சார்.. என்ன.. இப்ப அழுதாலும் போகப் போகச் சரியாயிடும்.. எனக்கு ஒண்ணும் வருத்தமில்லே சார்.. அவங்க குழந்தையை நான் எப்படி சார் சொந்தம் கொண்டாடமுடியும்.. எனக்கு ஒரு ஆறு மாசத்துக்கு அம்மாங்கிற ஸ்தானத்தைக் கொடுத்ததே பெரிசு சார்.. அவங்களைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க சார்..”

    அந்தத் தாயிடத்தில் அந்தக் குழந்தை சப்தம் போட்டு திமிறிக் கொண்டே அழ இந்தத் தாயோ மௌனமாக தனக்குள் அழுதுகொண்டே ஸ்டேஷனை விட்டு நிதானமாக வெளியேறிக் கொண்டிருந்தாள்.

    Share
  • ஆவக்காய்

    திவாகர்

    ஹெல்லோ.. யெஸ்.. சொல்லும்மா..

    மண்ணாங்கட்டி.. ஒரே ஒரு ரிங்க்’கே இப்படி போனை எடுத்துடுவீங்களா.. உங்களால எனக்கு ஒரு கால் வேஸ்ட்.. வெச்சுட்டு மறுபடி கூப்புடுங்க..

    ஓ யெஸ்.. ஓயெஸ்.. சரி, நீ வெச்சுடு.. நான் உடனே இப்பவே கூப்புடறேன்..

    …………………………………….

    ஹல்லோ.. சொல்லும்மா..

    சரி, அந்த ஆவக்காய் பார்சல் வந்துடுத்தா.. உங்களுக்குன்னு ஸ்பெஷலா பண்ணினேன்.. பாவம் தனியா ஏதுமில்லாம பச்சையா சாப்பிடறீங்களேன்னு.. அந்த பார்சல் வந்துடுச்சா..

    avakaya 033

    ஓ.. கையில கிடைச்சாச்சு ஆவக்காய்..

    ஒழுங்கா ஒழுகாம வந்துதா?..

    அது எப்படின்னா.. அதாவது..

    என்ன.. எண்ணெயெல்லாம் ஒழுகிப்போயிடுச்சா.. அடடே. நல்லாதானே பேக் பண்ணி அனுப்பிச்சேன்.. அது எப்படி ஒழுகும்..

    அத்தை ஏன் கேக்கறே.. கையிலே பிடிக்கறச்சே. கொஞ்சம் வழுக்..

    ஐய்யய்யோ.. வழுக்கிக் கீழே போட்டுட்டிங்களா? எவ்வளவு கஷ்டப்பட்டு சிரமப்பட்டு கையெல்லாம் எரிய பண்ணேன் தெரியுமா.. இப்படி டமால்’னு போட்டு உடைச்சுட்டு நிக்கிறிங்களே.. ஆமா, நான் பிளாஸ்டிக் பாட்டில்ல இல்லே அனுப்பிச்சேன்.. அது உடையாதே.. கீழே எல்லாத்தையும் கொட்டிட்டீங்களா?  ஐய்யோ பாவம்’னு பரிதாபப்பட்டு உங்களுக்கென்னு செஞ்சி அனுப்பி வெச்சேன் பாருங்க..

    இல்லல்லே.. சரியா கேட்காம ஏன் புலம்பறே..

    ஏன் கத்திச் சொல்லறீங்க.. யாராவது கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க.. பின்ன என்னதான் ஆச்சு..

    கையில பிடிச்சா வழுக்கற அளவுக்கு ஒழுகிருக்குன்னு சொல்ல வர்ரேன்..

    ஓ.. மை காட்.. நீங்க போடற சத்தத்துல எங்க நான் கஷ்டப்பட்டு பண்ண ஆவக்காயை பாட்டிலோட கீழே மண்ணோடு மண்ணா போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களோ’ன்னு பயந்துட்டேன்..

    ஹூம்.. நான் சத்தம் போட்டேனா.. இப்ப வரைக்கும் நீதான் காட்டுக்கூச்சல் போட்டுண்டுருக்கே.. அது சரி, என்ன எண்ணெய் ஊத்தினே..

    ஏன் கேக்கறீங்க..

    இல்லே.. ஆலிவ் ஆயில் ஊத்தினா டேஸ்ட் படு சூப்பரா இருக்குமாம்..

    யார் சொன்னாங்க

    வேற யார் சொல்வாங்க இதையெல்லாம்.. என் தங்கைதான் உன்னோட ஆவக்காய் பார்சல் வர டைமாப் பார்த்து அவ போன்’ல வந்தாளா.. சும்மா கொஞ்சம் பெருமையா இந்த ஆவக்காய் வந்ததைச் சொன்னேன்..

    போன மாசம் அவங்க வீட்ல சாப்பாடு போடறச்சே அவ பண்ணின ஆவக்காய் ஊறுகாயுக்கு பாமாயில் போட்டதா அவளே சொன்னாளே.. ’சீப் அண்ட் பெஸ்ட்’ன்னு சொன்னதுக்கு நான் அவகிட்டே நல்லெண்ணெய்தான் பெஸ்ட்’னு சொல்லிட்டு, அவ போட்ட்தைச் சாப்பிடாமதான் வந்தேனே..

    அப்ப, நீ நல்லெண்ணெய்தான் போட்டுருக்கியா?

    நல்லகாலம், என்னைக் கேட்டிங்களே.. இல்லன்னா நானும் உங்க தங்கை மாதிரியே சீப் பாமாயில் போட்டதாக எல்லார்ட்டயும் சொன்னாலும் சொல்வீங்க…

    அட, இதெல்லாம் எனக்குத் தெரியாதா.. காலத்துக்கு ஏத்த மாதிரி ஆலிவ் ஆயிலும் போடலாம்.. பாமாயிலும் போடலாம்..

    “விட்டா கிரிஸ்னாயிலும் போடலாம்னு சொல்லுங்க.. எது எதுக்கு எது போடணும்னு எனக்குத் தெரியாதா..

    அதுவும் சரிதான்.. சரி, சரி, எல்லாம் நான் பாத்துக்கறேன்..

    என்ன.. உங்க டோன் திடீர்’னு மாறுது.. ஒரு மாதிரி கேக்குது.. எங்க இருக்கீங்க..

    வேறெங்கே.. ஆபீசு’லதான்..ஏன் கேக்கறே?

    அப்ப.. ஆபீஸ் போன்’லேருந்து பேசுங்களேன்..

    அட, பரவாயில்லே.. ஆபிஸ் போன்’லாம் பெர்சனலுக்கு யூஸ் பண்ண மாட்டேன்னு உனக்குத் தெரியாதா என்ன…. என் போன்’லேருந்து பேசறேன்.. .

    ஏன் இப்போ உங்க டோன் கொஞ்சம் சத்தமா கேக்குது.. யாராவது உங்க எதிரே உக்காந்திருக்காங்களோ..

    ஹி ஹி.. எஸ்.. எப்படி கண்டுபிடிச்சே..

    சரி, சரி, யாரது.. அந்த ரோகிணியா..

    ஹய்யோ.. உனக்கு பயங்கர மூளை..

    என் மூளை இருக்கட்டும்.. இப்ப எதுக்கு என்னை இப்படி போட்டுக் கொடுத்தீங்க?

    என்ன.. இப்படி சொல்லிட்டே..

    அதான் ஆபீஸ் போனெல்லாம் பெர்சனலுக்கு யூஸ் பண்ண மாட்டேன்னு பெரிசா சொல்லி அந்த ரோகிணி முன்னாலே ஏன் பீத்திகிட்டிங்க’ன்னு கேக்கறேன்..

    அது.. அது.. அப்படியில்லே..

    எது எப்படியில்லே.. இப்ப பாருங்க அநாவசியமா என் பேரு கெடறது.. ஏதோ நான் எப்பவுமே ஆபீஸ் பணத்தை வேஸ்ட் செய்ய அட்வைஸ் பண்ண யோசனை சொல்லறதா அவ நினைக்கற மாதிரி பண்ணிட்டிங்களே..

    ஐய்யோ.. அது அப்படில்லாம் இல்லே.. ஜஸ்ட் லைக் தட்..

    எல்லாம் அப்படித்தான்.. இருந்தாலும் அந்த எக்ஸ்ட்ரா வார்த்தையை நீங்க சொல்லியிருக்கக் கூடாது..

    ம்..ம்..

    இதோ பாருங்க.. நான் ஏதோ நாலு நல்ல விஷயம் சொல்லலாம்னு போன் பண்ணினா என் மூட் கெடுத்திட்டீங்க..

    அடடா.. நான் சொல்ல வந்தது என்னன்னா..

    எதுவாயிருந்தா என்ன.. இனிமே நான் உங்களுக்கு மிஸ்ஸ்டு கால் கொடுக்கறதா இல்லே.. ஏதாச்சும் பேசணும்னா.. நானே பேசிடறேன்.. ஏதோ என்னாலே முடிஞ்ச அளவு குடும்பத்துக்காக நாலு காசு மிச்சம் பண்ணுவோமே’ன்னு கேட்டா ரொம்பவே பீத்திக்கிறீங்களே..

    நீ தப்பாவே புரிஞ்சுகிட்டே.. நான் எதையும் மனசுல வெச்சுண்டு பேசலே..

    ஓஹோ.. குரல் நார்மலா இருக்கு.. ரோகிணி எழுந்து போயிட்டாளாக்கும்..”

    “நிஜம்மாவே சொல்லறேன்.. நீ ரொம்பவே புத்திசாலி.. அவ இப்பதான் எழுந்து போனா..”

    “அசடு வழியறதை உங்க குரலே சொல்லுதே.. ம்ம்.. உங்களையெல்லாம் திருத்தவே முடியாது..

    “சரி.. சரி.. உன்னோட ஆவக்காயை இங்கே லஞ்ச்’ல  ஆளுக்கொரு பீஸ் கொடுக்கலாம்’னு இருக்கேன்.. உங்கிட்டேயிருந்து ஆவக்காய் பார்ஸல்’னு தெரிஞ்சதுமே எல்லாரும் ஆஹா.. ஓஹோ’ன்னு உன்னைப் புகழறாங்க.. இதோ அதையேதான் ரோகிணி கூட சொல்லிண்டே இருக்கறச்சே உன் கால் வந்துது..

    ஓஹோ

    ஆமா.. ரெசிபி என்ன’ன்னு கேட்டுண்டு இருந்தா..

    உங்கள்’ட்டயா..

    ஐ மீன், உன்கிட்டே கேட்டுச் சொல்லச் சொன்னா..

    ரெசிபி கிடக்கட்டும், முதல்ல என் நம்பருக்கு ஒரு 500 ரூபாய் டாப்-அப் பண்ணிடுங்க.. அப்பறம் அந்த ஆவக்காயுல அப்படியே பாதி எடுத்து இன்னொரு புது பாட்டில் வாங்கி சிந்தாம சிதறாம அதுல போட்டு எங்க தம்பி வீட்டுக்கு கொடுத்துடுங்க.. பாவம் எப்பப் பேசினாலும் எப்பக்கா ஆவக்காய் செய்யப்போறே’ன்னு கேட்டுண்டே இருக்கான். அவங்க மாமனாருக்கும் ஆவக்காய்’ன்னா உசிராம். அவர் வீட்டுக்கும் மறக்காம தனியா அனுப்பி வெச்சுடுங்க..

    ஓ.. சரி.. அனுப்பிடறேன்..

    அப்பறம் நம்ம எதிர்வீட்டுக்கும் ‘நான் செஞ்சு அனுப்பிவெச்சுதா’ கொஞ்சமா அழுத்தமா சொல்லி கொஞ்சம் கொடுங்க.. போன வருஷம் அவ ஒரு ஸ்பூன் சின்ன ஆவக்காய் பண்ணிட்டு ஏதோ அவளுக்குத்தான் எல்லாம் தெரியும்’னு ஒரே அலட்டல். சகிக்கமுடியலே.. என்ன நான் சொல்றது காதுல விழுதா..

    விழறது.. விழறது.. அப்ப எனக்கு?

    என்ன உங்களுக்கு?

    அதான் இந்த ஆவக்காய் எனக்கில்லையா.. எல்லாருக்கும் கொடுத்திட்டா நான் சாப்பிட என்ன பண்றதாம்?

    “ஐயோ கஷ்டகாலமே.. ஏன் ஆவக்காய்’னா இப்படி அலையறீங்க? உங்களுக்குன்னுதானே பண்ணி அனுப்பிச்சிருக்கேன்.. அவங்களுக்குக் கொடுத்தது போக மீந்ததெல்லாம் உங்களுக்குதானே.. சரி.. ரொம்ப நேரம் பேசிட்டீங்க.. ஆபீஸ்’ நேரத்துல உங்களை நான்தான் ஏதோ டிஸ்டர்ப் பண்றதா எல்லாரும் தப்பா நினைப்பாங்க.. போனை வெச்சுடுங்க..

    Share
  • சரிகமபத நீ..கல்யாணி

    திவாகர்

    ஸார்.. எதுக்கு இந்த விஷப்பரீட்சை.. சொன்னாக் கேளுங்க.. எனக்கு ஒரு ஞானமும் இல்லே.. கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் காத தூரம்..இல்லே இல்லே டெல்லி தூரம்.. அத்தோட ஏழு மணிக்கு ரிலையன்ஸ் க்ரூப் பார்ட்டி இருக்கு.. போகணும்..வுட்டுடுங்க ஸார்..”

    ”என்னப்பா.. என்ன சொல்லிட்டேனு இப்படிப் பெரீசா கத்தறே.. ரொம்ப முக்கியமான கச்சேரிய்யா.. இந்தம்மா ஏறத்தாழ ஒரு வருஷமா எந்தக் கச்சேரியும் பண்ணலே.ரொம்ப ஃபேமஸ்.. ஆர்கனைஸர்ஸ் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த அம்மாவின் அனுமதி வாங்கியிருக்காங்களாம்.. நானே போகணும்.. ஆனா என் கஷ்டகாலம்.. ராத்திரியானா வர்ர தலைவலி சாயங்காலமே வந்துடறது.. இதோ பார்.. நான் ரிடையர் ஆனவுடனே இந்த நாற்காலி’ல நீதான் உட்காரப்போறே! உனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்.. கர்நாடக சங்கீதம்’னா எனக்கும்தான் ஒரு எழவும் தெரியாது.. நான் அப்பப்ப எழுதல?.. அதனால.. நான் சொல்லிட்டேன்.. நீதான் அட்டெண்ட் பண்றே.. இன்னொண்ணும் சொல்லிடறேன்.. நம்ம சார்’ஜி கண்டிப்பா பாக்கற பத்தி இது.. இந்த விமர்சன ஆர்டிகிள்’ல கீழே உன் பேரை வேற போடப் போறேன்.. சார்’ஜி பாக்கணும்.. அட.. ந்னு மூக்கு’ல கையை வெக்கணும்.. ரிலையன்ஸ் க்ரூப் மீடிங் முக்கியம்தான். அதனால என்ன.. அந்த மாதிரி பார்ட்டிக்கு இன்னொரு சந்தர்ப்பம் வரும்.. ஆனா இந்தம்மா கச்சேரி சந்தர்ப்பமெல்லாம் உனக்கு வருமா? இப்போதைக்கு எனக்கும் உன்னை விட்டா வேற ஆளு இல்லே.. சங்கீதக் கச்சேரிக்கு போ.. போ.. சரிகமபத நீ’ன்னு எதையாவது எழுதித் தொலை.. அப்படியே பாடற அந்தம்மாவையும் முதல்லே பார்த்து ஒரு அவுட்சைட் பேட்டி எடுத்துக்கோ.. அதையும் பார்த்தா சார்’ஜிக்கு ஆத்மா குளிர்ந்து போகும்.. மனுசனுக்கு ரொம்ப ரொம்ப ஃஃபேவரைட்டாக்கும்.”

    வெற்றிலை மென்றுகொண்டே எடிட்டர் சொல்லிவிட்டார். பேசும்போது அவரையும் மீறி கொஞ்சம் சிவப்பு எச்சில் சொட்டுகள் என் மீது விழத்தான் செய்தன. அவரை இந்தச் சமயங்களில் பேசவைக்கக்கூடாதுதான்.. ஆனாலும் வேறு வழியில்லை.. இவர் உட்காரும் இந்த இருக்கை நாளை எனக்கு வரப்போகிறது.. இந்த விஷயத்தில் இவரும் நமக்கு சாதகம்தான்.. என்ன.. இதோ போகிறேன்.. அதோ போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர முடிவு எதுவும் எடுக்கவில்லை.. சார்’ஜி மனதில் நான் இன்னமும் ஆழமாகப் பதியவில்லை என்று அவ்வப்போது இவர் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறார்.

    ”இன்னொண்ணு.. இன்னைக்கு உன்னோட இந்த ஸ்டோரிக்கு கடைசி பக்கம் நாலு பத்தி கொடுக்கச் சொல்லி ஸ்பேஸ் ரிசர்வ் பண்ணியிருக்கேன்.. டக்கென்னு எல்லார் கண்ணுலயும் படும்.. போட்டோகிராஃபரிடம் சொல்லிட்டேன். மணிதான் வருவான். சமயம் பார்த்து எடுக்கறதுலே அவன் கில்லாடி.. அவன் எப்பாவாவது போய் எடுத்துடுவான். போட்டோவோட நீ ராத்திரி 12க்குள்ளே ஸ்டோரி ஃபைல் பண்ணிடு.. காலை’ல எழுந்ததும் ஸார்ஜி பாக்கறச்சே முதல் நியூஸ் ஐடம் உன்னோடதுதான்.. உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லறேன்.. கேட்டுக்கோ.. நியூஸ் பேப்பரை கடைசி பேஜிலேர்ந்து ஆரம்பிச்சுப் படிக்கிற பழக்கம் ஸார்ஜிக்கு எப்பவும் உண்டு..”

    நாங்கள் சார்’ஜி என்று சொல்வது எங்கள் பத்திரிகை முதலாளியான கிஷன்ஜியைத்தான்.. மிகப் பெரிய க்ரூப் கம்பெனிகளின் தலைவரான அவர் இந்தப் பத்திரிகையைக் கையால் தொடுவது கூட கிடையாது’ என்று இதே எடிட்டர்தான் ஒருமுறை தலையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவர் சங்கீதம் பற்றிய செய்தி மட்டும் பார்ப்பாராம்.. அதுவும் அவருக்கு பிடித்தமான பாடகியாமே.. கடவுளே.. என்ன நினைத்து என்னை இந்தப் பத்திரிகைத் தொழிலுக்கு அனுப்பி வைத்தாயோ..

    என் அறைக்குள் அமர்ந்ததும் குட்டி வந்தான். ‘என்ன சார்.. முகம் ஒரு மாதிரி இருக்கு.. எங்க போக சொல்லிச்சு கிழம்?” என்று கேட்டுக் கொண்டே காபியை மேஜையில் வைத்தான். ஆபீஸ்பையன் என்ற பேர்தான்.. ஆனால் எல்லாம் தெரிந்த இவனைத் தனியாக விட்டால் ஒரு பேப்பரையே நடத்திவிடுவான், என்ன.. எழுத சரியாகத் தெரியாது.. அவ்வளவுதான்.. ஆனால் இந்தக் காலத்தில் பத்திரிகையாளர்களுக்குக் கட்டாயம் எழுதத் தெரிந்துதான் ஆகணும்’ என்று யார் சொன்னது…

    “பாருடா.. பிஸினஸ் கரெஸ்பாண்டெட்’க்கும் கல்சுரல் கரெஸ்பாண்டெட்’க்கும் வித்தியாஸம் தெரிய வேணாமாடா.. இந்தம்மா கச்சேரிக்குப் போய் என்னத்த எழுதப்போறேனோ.. சங்கீதத்தைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாதேடா”..

    “ஸார்.. ஏன் கவலைப் படறே.. நான் சொல்றதைச் செய்யறியா..”

    “சங்கீதத்தைப் பத்தி நீ சொல்லறியா.. சொல்லு.. சொல்லு.. நான் இப்போ யார் என்ன சொன்னாலும் கேட்கற நிலைமைலதான் இருக்கேன்..”

    “சிம்பிள் சார்.. போனதபா நம்ம எடிட்டர் இந்தம்மா பாடின கச்சேரிக்குன்னு போனார்.. கூடவே வெத்தலைப் பெட்டியோடு நானும் போவேனில்லையா. இவரு முதல்ல என்னா பண்ணார் தெரியுமா.. சும்மா மேடை மேலே போனாரு.. அந்த சபா செக்ரடரி நின்னுகினு இருந்தாரா. அவர்கிட்டே ஏதோ முணுமுணுத்துக்கினே அந்த அம்மா பாடப் போற பாட்டோட லிஸ்ட் முளுசுமா கேட்டுக்கினார்.. அவங்ககிட்டே அதெல்லாம் டைப் பண்ணி ரெடியா இருக்கும் சார்.. கச்சேரி’ல சும்மா கொஞ்ச நேரம் முன்னாடி சீட்’ல உக்கார்ந்தார்.. நடுவுல ஏதோ போன் வந்தது மாதிரி கையில மொபைல் பிடிச்சுண்டே சடார்’னு எழுந்து வெளியே வந்தார்.. அவ்வளவுதான்.. அப்புறம் ஆபீசுக்கு வந்துட்டோம்..அந்த மாதிரி நீங்களும் பண்ணுங்க.. அந்த செக்ரடரி கொடுக்கற பேப்பர்ல இருக்கறதை அப்படியே எழுதப் போறிங்க.. நடுவுல ஆஹா அருமை.. ஓஹோ அது பிரமாதம், இது உசத்தி’ன்னு மசாலா போட்டுடுங்க..”

    அவன் சொன்ன ஐடியா அந்தக் கணத்திலேயே மிகவும் பிடித்துப் போனது.. இவனல்லவா உண்மையான பத்திரிகையாளன்..’ இருந்தாலும் குட்டி சற்று வேண்டுமென்றே அலுத்துக் கொண்டான்.

    ”ம்.. பேசாம இந்தக் கிழவன் உங்களுக்குப் பதிலா என்னிய அனுப்பிச்சிருக்கலாம்..”

    “அடேய் குட்டி, இந்தக் கிழம் போனதுமே நான் எடிட்டர்.. அப்படி வந்த உடனே உனக்கு டபுள் பிரமோஷன்..டா..”

    “என்ன சார்.. கனாக் காணறிங்களா?.. கிழம் போகும்கிறீங்க? ரெண்டு அட்டாக் பாத்தாச்சு, ஆபிஸ் செலவுல ஆபரேஷன் பண்ணிட்டு ஜாலியா அங்கே உட்கார்ந்திருக்கு.. இதோ சூடா வெங்காய பஜ்ஜி வேற வாங்கியாறச் சொல்லியிருக்கு.. நான் ஓடறேன்..” அவன் நிஜமாகவே ஓடிவிட்டான்.

    நான் என் நடையைக் கட்டினேன்.. அட, கச்சேரிக்கெல்லாம் பயமா.. சேச்சே.. ஊதிடலாம்.. நேரே ஆடிட்டோரியம் போகணும், எவனாவது செக்ரடரியைப் பார்த்துட்டு பாட்டோட லிஸ்ட் வாங்கணும்.. கொஞ்ச நேரம் அங்கே உட்கார்ந்திருக்கணும்.. அப்பறம் அப்படியே வெளியே வந்து காண்டீன்’ல ஏதாவது சூடா சாப்பிட்டவுடனே ஜூட் விட்டுட வேண்டியதுதான்.. அட, அந்தப் பாடகியை ஒரு சின்ன பேட்டி எடுக்கணுமே.. பார்க்கலாம்.. இதெல்லாம் ஒரு பிரச்னையா.. சமாளிச்சுடலாம்.. என் கண் முன்னே இன்னொரு அழகான காட்சி விரிந்தது. சார்’ஜி கை குலுக்குகிறார். அருமையா எல்லா சப்ஜக்ட்டையுமே எழுதறீங்க.. உட்காருங்க இந்த நாற்காலியில்’ என்று என்னை அமர வைக்கிறார். எடிட்டர் முகத்தில் பெருமை.. ’என் சீடனாச்சே’ என்று முதுகில் ஷொட்டுகிறார். தலையைச் சற்று அசைத்துக் கொண்டேன். கனவை நினைவாக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்தான்.

    நினைத்தவுடனே எளிதாகிவிட்ட மனதுடன் அந்த அகன்ற அரங்கத்துள் நுழைந்ததும் முதலில் என் கண்ணில் பட்டது திருமலை நாயுடுதான்.. திருமலை நாயுடு மிகவும் தெரிந்த தொழிலதிபர் என்பதோடு சென்னை மாநகர வியாபார சங்கத்துத் தலைவரென்பதாலும் அடிக்கடி நாங்கள் சந்தித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தங்களும் உண்டு. . அந்த சபாவுக்கும் அவர்தான் கௌரவத் தலைவராம்.. எனக்கு இப்படிப்பட்ட கச்சேரிகளில், அதுவும் சங்கீதத்தில், இவ்வளவு விருப்பம் இருக்கிறது என்பது தனக்கு தற்போதுதான் தெரியும் என்று எல்லோருக்கும் கேட்கும்படி கத்திச் சொல்லியதோடு அந்த சபா காரியதரிசியையும் அழைத்து என்னை அறிமுகம் செய்தார். அவரைப் பக்கத்தில் தள்ளிக்கொண்டே பேசினேன்.. ‘சார்.. உங்களைப் பத்தி எங்க எடிட்டர் ரொம்பப் புகழ்ந்து சொல்லிருக்காரு.. அது சரி, இவங்க பாடல் பாடற லிஸ்ட் கிடைக்குமா..” என்று கேட்டு வைத்தேன்.

    “அட, லிஸ்ட்’தானே.. எங்கிட்டே இல்லே.. இருந்தாலும் க்ரீன் ரூமுக்கு வாங்க.. அவங்க வந்துட்டாங்க.. அவங்ககிட்டேயே கேட்டுடலாம்.. அத்தோட ஒரு சின்ன பேட்டியும் எடுத்துடுங்களேன்.. அதுவும் நாளைக்கு பேப்பர்’ல வரட்டுமே, என்ன சொல்றிங்க.. சரிதானா.. சரிதான் சரிதான்..”

    பழம் நழுவிப் பாலில் விழுந்து அதை வாயிலும் ஊட்டினால் வேண்டாமென்றா சொல்வார்கள். ஆனாலும் அதை நான் விருப்பம் இல்லாமல் செய்பவனாகக் காட்டிக் கொண்டு அவரோடு சென்றேன். இன்னமும் அரை மணியாகும் ஆரம்பிக்க.. இந்த அம்மாளைப் பார்க்கவேண்டும்.. ஏதாவது பேசவேண்டும்.. பார்ப்போம்.. சங்கீதத்தில் எனக்கு என்னவெல்லாம் தெரியும்.. கல்யாணி ராகம், ம்ம்.. முகாரி.. ம்ம்.. ஆதி.. அட அது.. அது.. தாளமாச்சே.. ஒருவேளை ராகத்தோட பேர்தானா.. ச்சே.. எத்தனை சினிமா பார்த்தோம்.. ஆங்.. சங்கராபரணம்.. அப்பறம் ஆனந்த ராகம், இப்படி நிஜமாவே பேர் இருக்கோ இல்லையோ.. இந்த ராகத்தை அவாய்ட் பண்ணிடவேண்டியதுதான்.. தில்லானா மோகனாம்பாள், அடச்சே அது நாட்டியப்படம்.. பார்க்கலாம்.. முதல்ல இந்த லிஸ்ட் கையில கிடைச்சா போதும்.. அதுல ராகம் பேர் போட்டுருப்பாங்களே.. அதை முதல்ல வாங்குவோமே..

    ”முக்கியமான ஒரு வேண்டுகோள். கடைசில ஒரு வரி என் பேரை மட்டும் மறக்காம போடுங்கோ.. ஹி.. சும்மா ஒரு நாலு பேர் பார்வைக்கு, ரிகார்டுக்கு இருக்கட்டுமே.. என்ன சொல்றேள்.. சரிதானா? சரிதான் சரிதான்” என்று செக்ரடரி கேள்வியும் பதிலும் தானாகக் கொடுத்ததோடு அவர் விஸிட்டிங் கார்டையும் கூடவே கொடுத்தார். கல்யாணராமன் என்று பேர் போட்டிருந்தது.. அட.. இந்த ராகம்தான் தெரியுமே.. வேறு ஏதாவது ராகத்தின் பெயரை தன் பெயராக வைத்திருக்கக்கூடாதோ..

    நான் ஒன்றுமே பேசாமல் அதை வாங்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். அங்கே ஒரு வி.ஐ.பி. அறையில் கதவைச் சட்டெனத் திறந்து உரிமையாக செக்ரடரி உள்ளே நுழைய நானும் பின்தொடர்ந்தேன்..மெலிதான சப்தத்தில் வயலின் ஒலிக்க அதே குறைந்த சப்தத்தில் மிருதங்கத்தைத் தட்டிக்கொண்டிருந்தார் இன்னொருவர். கொஞ்சநேரம் அங்கேயே நின்று ரசித்தார்.

    ”அடடா.. சஹானா ராகத்துல பிச்சு உதறறேள்.. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. இதோ இவர்தான்..” அவர் சொல்வதற்குள் அந்தப் பெண்மணி முந்திக்கொண்டாள்.

    “ஐய்யோ.. இது சஹானா இல்லே பிலஹரியாக்கும்..” என்று சட்டென வெட்டியவளைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    எனக்கு என்னவோ இரண்டு புதிய ராகங்களின் பெயர்கள் கிடைத்த ஒரு சந்தோஷத்தில் ஒரு நமஸ்காரம் போட்டு வைத்தேன். வாத்தியக்காரர்கள் மெல்ல எழுந்து கொள்ள என்னை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்தாள். செக்ரடரி விடாமல் ’என்ன இருந்தாலும் நீங்க சஹானா பாடறதுன்னா நான் உயிரையே விட்டு விடுவேன்.. அப்படி ஒரு ஈர்ப்பு அந்த ராகத்துல’என்று அவரின் உயிரின் ரகசியத்தை மறுபடியும் பிடிவாதமாக ஒருமுறை அந்தப் பெண்மணியிடம் சொல்லி அசடு வழிந்துவிட்டுதான் அந்த அறையை விட்டு அகன்றார்.

    அறை காலியானதும் என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சம் முழித்தேன்.. இளமை கொஞ்சுகிறதுதான் என்றாலும் அருகாமையில் பார்க்க அவள் முக அழகு இயற்கையாகவே செழிப்பாக இருந்ததைக் கவனிக்கத்தான் செய்தேன். நெற்றியில் இருந்த சிறிய குங்குமப்பொட்டு அவள் முகத்தழகுக்கு மெருகூட்டியது கண்கள் வேறு குறும்பாகப் பார்த்ததாகப் பட்டது. அவளே ஆரம்பித்தாள்.

    “போனமுறை உங்கபேப்பர்’ல ரிவ்யூ ரொம்ப நல்லாதான் எழுதியிருந்தீங்க…. ஆனா எனக்கு ஒரு சின்னக் கோபம்..”

    குழந்தை போல பேசினாள். குரலில் கரகரப்பு இருந்ததும் அதை மெல்லமாகப் பேசும்போது ஒரு மயக்கமும் கூடவே வந்ததை உணர்ந்தேன்..

    ”அடடா.. எங்க மேல கோபமா?” நான் பொதுவாக கேட்டு வைத்தேன்..

    “உங்க எல்லார் மேலயும் கோபம்’ன்னு சொல்லலே..போனதடவை என் கச்சேரி முடியறதுக்கு முன்னாடி எழுந்து போயிட்டதா செக்ரடரி சொன்னார்.. சரிதானே..”

    அடக் கடவுளே.. இந்த எடிட்டர் கிழம் செஞ்சதை அப்படியே சொல்றாளே.. என மனதுள் நினைத்துக் கொண்டாலும் இவள் எதற்காக எங்கள் பத்திரிகைக்காரகளை மட்டும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.. வெளியே கொஞ்சம் அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்..

    “ஓ.. அது எனக்குத் தெரியாதே.. ஆனா..”

    “பரவாயில்லை.. அதனாலென்ன.. பத்திரிகைக்காரங்களுக்கு ஆயிரத்தெட்டு ஜோலி..” என்று முறுவலித்தவள் அடுத்து ஒரு இடியைப் போட்டு வைத்தாள். “அவர் வந்திருக்கிறார் இல்லையா?”

    “யார், எடிட்டரா?”

    “சேச்சே.. நான் சொல்றது கிஷன்’ஜிதான்.. வர்ரேன்னும் காலைல போன் போட்டு அவரே சொன்னாரே..”

    எனக்கு சட்டென வியர்த்தது.. சார்’ஜி வருகிறாரா.. ஐய்யோ..

    அவள் கண்கள் விரிய சிரித்தாள். “ஆனால் எங்காவது பின்னாடி உட்கார்ந்து போய்விடுவதுதான் அவர் வழக்கம்.. ரொம்ப சிம்பிள் பெர்ஸன்..” இவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது.. கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம்.

    “அவர் புரொக்ராம் தெரியல்லே மேடம்.. நான் என் ட்யூடியை செய்யவேண்டாமா.. நான்பாட்டுக்கு வந்துட்டேன்”

    “ம்ம்.. நான்பாட்டுக்கில்லே.. என் பாட்டுக்காக வந்தீங்க’ன்னு சொல்லுங்க.. நீங்க வெளிப்படையா சொல்லாவிட்டாலும் உங்க முகமே சொல்லுதே..” என்னை உற்றுப்பார்த்த அந்த பார்வை கலக்கினாலும், அவள் சாமர்த்தியம் என்னை சற்று தளர்த்தி உட்காரச் செய்தது..

    “அப்படின்னுதான் வெச்சுக்கணும்.. உங்க பாட்டுங்களைக் கேட்கக் கொடுத்து வெச்சுருக்கணுமே”..

    போனமுறை எடிட்டர் போற்றிப் புகழ்ந்தது போலத்தான் இந்த முறையும் எழுதவேண்டும்.. வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

    “ரொம்பப் புகழாதீங்க.. அப்படியே இதையும் சேர்த்து உங்க பேப்பரிலேயும் எழுதிடாதீங்க.. ஏன்னா.. புகழ்ச்சி ஒரு போதை இல்லையா.. நமக்கு எதுக்குங்க அந்தப் போதை.. என்னால் எந்தப் போதைக்கும் அடிமையாக முடியாது”

    இப்படிச் சொல்லிவிட்டு சிரித்தாள். போலியான சிரிப்பில்லாமல் மிக யதார்த்தமாக இருந்தது. நான் பொதுவாக சொல்லி வைத்தேன்..

    “இதெல்லாம் உங்க தன்னடக்கம்.ஆனா ஒண்ணு… எதை எழுதினாலும் என் மனதுக்குப் பட்டதைத்தான் எழுதப் போறேன்..”

    “உங்களை மாதிரி சங்கீத எக்ஸ்பர்ட்ஸ் எழுதறாங்கன்னா சும்மாவா.. உங்க மனசுக்கு என் பாட்டு ரொம்பவே பிடிச்சுருக்கு’ன்னு ஏற்கனவே சொல்லிட்டீங்களே.. ..”

    நான் எங்கே அப்படிச் சொன்னேன்’ என்று கேட்க விரும்பினேன்.. இருந்தாலும் பேச்சை மாற்ற விரும்பினேன்.. செக்ரடரியிடம் வாங்க விரும்பிய அந்த பாட்டு வகைகளை இவளிடமே கேட்டால் என்ன?

    “இன்னிக்கு புரோக்கிராம்’ல என்ன பாடல்கள் பாடப்போறிங்கன்னு லிஸ்ட் இருக்குமே.. கொஞ்சம் கொடுங்களேன்..”

    என் கள்ள மனத்தைப் படித்துவிட்டாளோ என்னவோ, கொஞ்சமாக முறுவலித்து இன்னொரு முறை குறும்பாக ஒரு பார்வை பார்த்தாள்

    “எனக்குத் தெரியும் நீங்க கேப்பீங்க’ன்னு.. ஆனா இந்தமுறை சஸ்பென்ஸ் வெச்சிருக்கேன்.. என் இஷ்டத்துக்கு நான் அந்த சமயத்துல பிடிச்சதெல்லாம் பாடப்போறேன்.. என்ன நான் சொல்றது பிடிச்சிருக்கா?”

    ஈசுவரா.. இதென்ன சோதனை.. சார்ஜி வருகிறார் என்கிறாள்.. கூடவே சஸ்பென்ஸ் கொடுத்து தான் பாடப்போகும் லிஸ்ட்டையும் மறைக்கிறாள்..

    “பொதுவா லிஸ்ட் வெச்சுத்தான் எல்லோரும் பாடணும்.. வாத்தியக்காரா கூட அப்பதான் சரியா ஒத்துழைப்பாங்க.. ஆனா இந்த தடவை இந்த வாத்தியக்காராளுக்கும் சேர்த்து ஒரு சோதனை.. முதல்லேயே சொன்னதாலே இப்ப அவங்களுக்கு வயித்தைக் கலக்கிண்டிருக்கு.. எப்படி என் ஸர்ப்ரைஸ்?’ என்று கலகலவென சிரித்தாள்.

    வாத்தியக்காரர்களுக்கு மட்டுமில்லை தாயே.. எனக்கும் வயிற்றைக் கலக்குகிறது.. என் மனத்துள் கிலேசம் அதிகரித்தது இவளுக்குப் புரியுமா.. ஆனால் என் மனதை இவள் கண்டுகொள்ளவில்லை என்பது அவள் அடுத்துக் கேட்ட கேள்வியில் புரிந்தது..

    “சரி, உங்களுக்காக ஒரு பாட்டு கேளுங்களேன்.. நான் பாடுகிறேன்.. ஆடியன்ஸ் எல்லோரும் அவங்களாகவே இது வேண்டும் அது வேண்டும் எனக் கேட்பார்கள். இப்போது நான் கேட்கிறேன்.. உங்களுக்கு எது வேண்டும்?” ஒரு மயக்கச் சிரிப்பு சிரித்தாள். கடவுளே.. எனக்கு எது வேண்டும்..

    பேட்டி நான் எடுக்க வந்தேனா?, இவள் என்னைப் பேட்டிக் காண்கிறாளா.. ஒரு நிமிடம் புரியாமல் பார்த்தேன். சட்டென வாயில் வந்ததை அப்படியே சொன்னேன்.

    “கல்யாணி’யில் ஒரு பாடல் பாடுங்களேன்..”

    இதைக் கேட்டதும் அவள் ஆச்சரியமாய் கண் விரித்துப் பார்த்தது அழகாகத்தான் இருந்தது.

    ”கல்யாணியா?”

    “ஆமாம்.. கல்யாணி ராகம் என்றால் மிகவும் பிடிக்கும்” என் மனது என்னைத் திட்டியது.. அடேய்.. இது எக்ஸ்ட்ரா உனக்கு’ என்றது..

    “ஓ.. கல்யாணி ராகம்னா அவ்வளோ இஷ்டமா.. அட, உங்கள் கிஷன்’ஜிக்கு மிகவும் பிடித்த ராகம் அதே கல்யாணி.. உங்களுக்குமா? உங்களுக்கு கல்யாணியில் உயிரா.. உங்கள் உயிரைப் போற்றி நிச்சயம் பாடுகிறேன்.. சரி..கல்யாணியில் என்ன பாட்டு வேண்டும்..”

    எனக்கு வேண்டும்.. நானே போய் வலையில் சிக்கிக் கொண்டேன்.. இன்று யார் முகத்தில் முழித்தோம்.. ஆஹா.. எனக்கு அந்த எடிட்டர் சீட்டே வேண்டாம்.. ஆளை விட்டால் போதும்’ என் மனதுள் ஏதோ ஒன்று சொல்லி அலறியது.

    “இந்த பாட்டுதான்னு சொல்லமுடியாது.. நீங்க எந்தப் பாட்டு பாடினாலும் அது இனிமையாகத்தான் இருக்கும்..”

    ’ஓஹோ’ என்று சொல்லி கலகலவென மறுபடி சிரித்தவள், “நீங்க இதையெல்லாம் இப்படியே நாளைக்கு பேப்பர்’ல போடப் போறீங்க’ன்னு தெரிஞ்சு போச்சு.. என்ன.. நான் சொல்றது சரிதானே..”

    “சரி, உங்களுக்குப் பிடிச்ச உங்க பாடல் எதுன்னு சொல்லுங்களேன்..”

    “அட, எனக்குப் பிடிச்ச அத்தனை பாடல்களையும்தான் பாடப் போறேனே..உங்களுக்காக அந்தக் கல்யாணியையும் சேர்த்துதான்”

    “இல்லே.. அப்படி சொல்ல வரலே. எல்லாப் பாடகர்களுக்குமே அவங்களுக்குன்னு ஒரு பிடிச்ச பாடல் இருக்கணுமே.. .. ரசிகர்களுக்காக சில பாடல்கள், உங்களுக்கு ஆத்ம திருப்திக்காக சில பாடல்கள்’னு பாடுவீங்க இல்லையா.. அந்த ஆத்மாவைத் திருப்தி தரும் ஒரு பாடல் சொல்லுங்களேன்..”

    அவள் மறுபடி ஏதோ ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். ஏதாவது கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டோமா என்ன..

    “நல்லா மடக்கறீங்க.. எந்த பாடகிக்கும் தான் பாடற அத்தனை பாடலுமே உசத்தியாதான் தோணும்.. சங்கீதத்துலயும் வெல்லப்பிள்ளையாரிலும் எந்தப் பகுதி இனிக்கும்’னு எப்படி சொல்றது? சரி, ஸர்ப்ரைஸிங்’னு சொன்னேன் இல்லையா.. இன்னிக்கு நான் பாடற அத்தனை பாடலுமே எனக்குப் பிடிச்சுப் பாடினதா எழுதிடுங்களேன்”

    அடக்கடவுளே.. எனக்கு உதவி செய்கிறாளா அல்லது உபத்திரவமாக ஏளனம் செய்கிறாளா.. ஏன் இந்த சபா செக்ரடரி நம்மை இப்படித் தனியா இவளிடம் மாட்டிவிட்டுப் போய்விட்டான்.. இவளிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா.. நீ நினைக்கிறா மாதிரி நான் சங்கீத எக்ஸ்பர்ட் இல்லேம்மா.. லிஸ்ட் இல்லாமல் சரியாக ரிவ்யூவெல்லாம் எழுதமுடியாது தாயே..’

    வேண்டாம்.. இவளிடம் எது சொன்னாலும் வம்பாகிப் போகும், போதாதற்கு கிஷன்ஜி பெயரை அடிக்கடி இழுக்கிறாள்..

    அதற்குள் அந்த சஹானா செக்ரடரி உள்ளே நுழைந்து குழைந்து மேடைக்குக் கூப்பிட்டதால் அவளும் எழுந்தாள். “சரி, பார்ப்போம் உங்க ரிவ்யூவை.. எப்படி எழுதப்போறிங்கன்னு இப்ப நினைச்சாலே மனசு ரொம்ப சந்தோஷப்படுது.. அந்த சந்தோஷத்தோடப் பாடப் போறேன்..வாங்கோ.. போகலாம்..” என்று கவர்ச்சிப் புன்னகை வீசிவிட்டு வெளியேற நானும் அவளுடன் ஏமாற்றத்துடன் வந்தேன்.

    எனக்குப் புரிந்தது.. இவள் என்னவோ ஏதோ எல்லோரையும் பரிட்சை செய்வதாக நினைத்துக்கொண்டு அந்த எல்லோரையும் மாட்டி விடுகிறாளோ.. கடவுளே.. என்ன இது.. இப்படி என்னை ஒரு இக்கட்டில் மாட்டி விட்டாய்..

    வேறு வழி தெரியாத நிலையில்தான் என்னுள் வைராக்கியம் வந்தது.. சரி எப்படியும் சமாளித்துதான் ஆகவேண்டும். ராகத்தின் பெயர் தெரியாவிட்டால் என்ன.. பேசாமல் முடிந்தவரை மொபைல் போனில் ரிகார்ட் செய்து கொள்வோம். ஒவ்வொரு பாடல் முதல் வரிகளை எழுதி வைத்துக் கொள்வோம்..

    திடீரென எங்கள் ஃபிளாட் மாடியில் குடியிருக்கும் டீச்சர் நினைவுக்கு வந்தாள். அவள் சங்கீதம் அறிந்தவள்.. அவளிடம் பாடல் வரிகளையும் நம் மொபைல் ரிகார்ட் செய்ததையும் வைத்துக் கேட்டால் சொல்லமாட்டாளா என்ன.. ஆஹா.. முடிந்து போச்சு கதை.. ஆனால் நேரம் போதாது.. ராத்திரியில் தொல்லை தருவதாக நினைத்துக்கொள்வார்களே.. என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளட்டும்.. இது ஒரு மாதிரியான சிக்கலான பிரச்னை.. பயந்தால் தீர்க்கமுடியாது.. எதையும் எப்படியும் சமாளிப்போம். நாளைக் காலை பத்திரிகையில் நம் ரிவ்யூ கொஞ்சம் நன்றாக வரவேண்டாமா.. இவள் வேறு பெரிதாக எதிர்பார்க்கிறாள்….

    மனதுள் கொஞ்சம் நிதானம் வந்தது.. ஆச்சு.. மணி ஆறரை.. எப்படியும் ஒன்பதுக்குள் கச்சேரி முடித்தாக வேண்டும். ஒன்பதரைக்கு வீடு, பத்துமணிக்குள் அந்த சங்கீத டீச்சரிடம் பாடம் கேட்டு விட்டு ஆபீஸுக்கு 11 மணிக்குள் போனாலும் கடைசி டெஸ்பாட்ச்சாக நம் ஆர்டிகிள் போட்டுவிடலாம். என்னுடைய மொபைலில் ரிகார்டிங் ஆன் செய்துவிட்டு மேடையில் கவனம் செலுத்தினேன். குங்குமப்பொட்டுக்காரி முகம் மலர அமர்ந்து பாட ஆரம்பித்தாள்.

    singer2முதலில் அவள் அழகு முகம்தான் மனதில் அப்படியே நின்றது. தூரத்திலிருந்து பார்த்தால் கூட அந்தக் குறும்பு பொங்கும் கண்களும் அழகான வட்டவடிவ குங்குமப்பொட்டும் கொஞ்சம் சலனத்தை ஏற்படுத்தியதுதான் .,, ஆனால் போகப்போக அவள் பாடப் பாட அவள் முகம் மறைந்து போய் அந்தக் குரலினிமையும் பாட்டுக்களின் நேர்த்தியும் வேறெங்கோ அழைத்துச் சென்றதுதான்.

    அவள் கச்சேரி செய்யும் விதமே தனிதான். இவள் பேசும் குரலிலிருந்த கரகரப்பு விலகி இனிமையான இசைக் குயிலாக மாறிய அனுபவமே அலாதிதான். கிஷன்ஜி என்றில்லை யார் வேண்டுமானாலும் இந்த இனிமையான குரலுக்கு அடிமையாக மாறி விடுவார்கள்தான்.. அவ்வப்போது என்னை வேறு உற்றுப் பார்க்கிறாள்.. ஒருவேளை நான் நடுவில் போகிறேனோ என்று சந்தேகப்படுகிறாளோ.. இல்லையில்லை.. இவள் கவனம் கொஞ்சமும் நம்மீது இல்லைதான்.. இசையின் இறுக்கமான அணைப்பில் இருக்கும் அவளுக்கு நான் கண்ணில் படமுடியாது என்றுதான் நினைத்தேன். எத்தனை அநாயசம்.. எத்தனை நளினம்.. அடாடா. இந்த எடிட்டர் தப்பு செய்துவிட்டார்..அவர் என்னை கட்டாயம் செய்து இங்கு அனுப்பி தவறு செய்து விட்டார். நான் வந்திருக்கக்கூடாது.. யாராவது தேர்ந்த இசை விமர்சகரை அனுப்பி இருக்கவேண்டும்.. இவள் இசைக்கு நானெல்லாம், என் எழுத்தெல்லாம் எம்மாத்திரம்.. என் எழுத்தில் இவள் இசை நயத்தைக் கொண்டு வரமுடியுமா..

    ஒன்பது மணிக்கு முன்பாகவே முடித்துவிட்டாள் என்றாலும் அவள் இசையின் தாக்கம் என்னைப் பரிபூரணமாக ஆக்கிரமித்திருந்தது. ராகங்கள் தெரிந்தால்தான் இசையை அனுபவிக்கமுடியுமா.. இவள் மந்திரக்காரிதான்.. மாயம் செய்பவள். இசையால் எல்லோரையும் மயக்கத் தெரிந்தவள்.. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சபையைக் கட்டிப் போடத் தெரிந்தவள்.. இவள் பேச்சில் கெட்டிக்காரி என்று நினைத்தது தவறு.. இசையையும் தன்னுள் அடக்கி ஆள்பவள், இவள் நினைப்புக்கேற்றவாறு அந்த இசையை தன் இஷ்டத்துக்கு திசை திருப்புபவள். இன்னமும் கச்சேரியை நீட்டித்திருக்கலாம்தான்.. இப்படி என்னையும் கூட நினைக்க வைத்ததுதான் இவள் வெற்றிதானே..

    இருந்தாலும் கடமையை மறக்காமல் என் வேலைகளை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நுழைந்தபோது மணி பத்தரையைத் தாண்டியிருந்தது. என்னுடைய மேஜையில் போட்டோகிராஃபர் மணி ஏற்கனவே போட்டோவின் பிரதி ஒன்றை வைத்திருந்தார். அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே கட்டுரையைத் தட்ட ஆரம்பித்தேன்..

    மனதுக்குள் ஒரு குரல் என்னைத் திட்டிக் கொண்டே இருந்தது. பிஸினஸ் எழுதறவன் இப்போ மியூசிக் எழுதறியா.. பார்த்து எழுது.. என்பது போல ஏதேதோ சொன்னாலும் மியூசிக் டீச்சர் பார்த்துப் பார்த்து கேட்டு கேட்டு ரசித்துச் சொன்ன ராக ஆலாபனைக் குறிப்புகளை அப்படியே கலந்தேன்.. கட்டுரை ரெடி.. இன்னொரு முறை படித்துப் பார்த்தேன்.. திருப்தியாக இருந்தது.. மணியைப் பார்த்தேன்.. பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.. மனதில் மகிழ்ச்சி ஏராளமாக உண்டாக ஏதோ ஒரு மிகப் பெரிய சாதனைப் படைத்து விட்ட திருப்தியுடன் அச்சுக்காக அனுப்பி வைத்தேன்.. சற்று நேரம் அப்படியே சாய்ந்துஅந்த மாலை நேரத்து இனிமையான பொழுதுகளை மறுபடியும் மனதில் திருப்பினேன்..

    வீட்டுக்குச் செல்லவேண்டுமா என்றுதான் மனதில் பட்டது.. ஒரு இனிமையான அனுபவத்தை அப்படியே இன்னொரு முறை ரசிக்கவேண்டும் என்ற ஆவலுடன் வெளியே வந்தேன்.. அறையில் இருந்த குளிரை விட வெளிக்காற்றின் குளிர் ஏராளமாக மகிழ்விக்க வீடு திரும்பினேன்.

    பசிக்கவில்லை.. ஏனென்று தெரியவில்லை.. சாப்பிடாமலேயே படுக்கையில் விழுந்தவனின் காதில் அந்த இசையும் அவள் குங்குமப்பொட்டு முகமும் சற்று சலனப்படுத்தியது. புரண்டு புரண்டு படுத்தேனே தவிர தூக்கம் வருவதாயில்லை..மீண்டும் மீண்டும் அந்த முகம் அவனை அலைக்கழித்தது. தூக்கமா இல்லை அரைத்தூக்கமா தெரியவில்லை.. மறுபடியும் அவள் வந்தாள்.. அந்த குங்குமப்பொட்டும் கருவிழிகளும் இப்போது சற்று அருகில் வந்தது. ‘சங்கீதம் என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமோ’ என்று கேட்டது.. ‘சரி, உனக்கு என்ன பிடிக்கும்.. கேள்.. உடனே பாடுகிறேன்.. என்றது’. நான் நினைவில் உளறினேன்.. ‘கல்யாணி ராகத்தில் பாடு’ என்றேன்.. ’ஏன் கல்யாணி என்றால் உயிரோ’ என்று கேட்டு கலகலவென சிரித்தாள். நானும் ‘கல்யாணி.. கல்யாணி…

    திடீரென்று குதித்து எழுந்தேன். அடக்கடவுளே.. நான் எழுதிய அந்தக் கட்டுரையில் இந்தக் கல்யாணி பற்றிக் குறிப்பிடவே இல்லையே.. இவள் நிச்சயம் எனக்காகப் பாடுவதாக சொல்லிச் சொல்லிச் சென்றாளே.. எங்கே போச்சு இந்த கல்யாணி? ஏன், நிச்சயம் பாடியும் இருப்பாள். ஸார்ஜிக்கு மிகவும் பிடித்த ராகமாயிற்றே.. அட, இந்த டீச்சரும் தப்பு சொல்லிவிட்டாளோ.. இல்லை.. நான் தவறு செய்துவிட்டேன்..ஒரு வார்த்தை கூட கல்யாணியைப் பற்றி எங்கும் எழுதவில்லையே.. ராகங்கள் ஏதாவது மாற்றி எழுதி விட்டேனோ.. கல்யாணியும் எங்கும் காணப்படாதது ஏன் என் அறிவுக்குத் தெளிவாகவில்லை.. கடவுளே.. நாளை ஒரு அபத்தமான கட்டுரை வெளியாகி ஊர் சிரிக்கப் போகிறதே..

    உடனே எங்கள் ஆபிஸ் பிரஸ்ஸுக்கு போன் செய்தேன்.. யாரும் எடுக்கவில்லை.. பிரிண்டர் போய்விட்டானா.. அடக்கடவுளே.. அவன் கைபேசியில் தொடர்பு கொண்டேன்.. நீண்ட நேரம் கழித்து எடுத்தான்.. ’அது சரி, நான் கொடுத்த மேட்டர் பிரிண்ட் ஆகிவிட்டதா’.. என்றதற்கு அவன் எரிச்சலாகப் பேசினான்.. ‘என்ன சார்.. மணி என்ன இப்போ.. மூணாகப் போவுதுல்ல.. பேப்பர் டெஸ்பாட்ச்சிங் டைம் சார்.. நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.. உங்க மேட்டர் சூபரா வந்திருக்கு.. கடைசிப்பக்கத்துல முதல் நான்கு பத்திதான்..” என்று சொல்லிவிட்டு கைபேசியை மூடிவிட்டான்.

    ஆஹா.. எவ்வளவு அழகாக திட்டம் போட்டு கச்சேரி முடிந்ததும் அடித்துப் பிடித்து ஓடி, தூங்கப் போன அந்த டீச்சரை எழுப்பி உட்காரவைத்து ஒவ்வொன்றாகக் கேட்கவைத்து எழுதி என்ன பயன்.. அட, நானாவது ஒரு வார்த்தை இந்தக் கல்யாணி ராகத்தைப் பற்றி அந்த டீச்சரிடம் ஞாபகம் செய்திருக்கவேண்டாமா.. அவளும் தவறுவது சகஜம்தானே..ஒரு அபத்தமான கட்டுரை அரங்கேறிவிட்டதே.. லட்சக்கணக்கில் ஊரெங்கும் பிரதியாக்கப்பட்டாகிவிட்டது..

    தியாகய்யாவின் கிருதிகள் முத்துசாமி தீட்சிதர் பாடல்கள் என்றெல்லாம் எழுதி அந்த தெய்வப்பாடல்களுக்கும் சேர்த்தா தவறிழைத்தேன்.. அரைகுறை ஞானம் கூட இப்போது சூன்யமாகப் போய்விட்டதே.. அவள் சபையில் பாடிய பத்துப் பாடல்களுமே தவறாக விளக்கப்பட்டதோ.. ஐய்யோ.. அப்படியானால் அவள் பாடியதில் எந்தப் பாடல் இந்தக் கல்யாணி?

    எனக்கு அந்தக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.. எடிட்டர் முதலில் திட்டுவார். கிஷன்ஜி ஏதும் சொல்லமாட்டார் என்றாலும் ‘அரைகுறைக்கெல்லாம் ஆசிரியர் பொறுப்பா’ என்று நம் பதவி உயர்வு கேஸை இழுத்து மூடி விடப்போகிறார்கள். அவள் அந்த இசை ராட்சஸி வந்தாள்.. இந்த முறை அவள் குரலில் இனிமை இல்லை..குரலும் கரகரப்பு அதிகமாகி காரமாக வந்தது.. ஏதோ கத்தினாள். நீயெல்லாம் ரசிகனா’ என்று திட்டுகிறாளோ..

    ஊம்ஹூம்.. அநாவசியமாக ஒப்புக்கொண்டுவிட்டேன். நான் சுயமாக இதுவரை ஈட்டிய என் புகழை இந்த ஒரு சங்கீதக் கட்டுரை ஒரேயடியாக வீழ்த்தி விட்டது.. அறியாத துறையில் தெரியாத ஆழத்தில் காலை விட்டால் முழுகவேண்டியதுதான்.. அதிகாலை வரை மனது துடித்துக் கொண்டே இருந்தது. பகல் வெளிச்சம் பளிச்செனப் பட்டதும் வாசலுக்கு வந்தேன். தரையில் போடப்பட்டிருந்த அந்த பேப்பர் எனக்கு ஒரு அவலட்சணப் பொருளாகத் தெரிந்தது. பயத்துடனே கடைசி பக்கத்தைத்தான் முதலில் பார்த்தேன். எல்லாமே நான் எழுதியதுதான்..கட்டுரைக்கடியில் பெயரை வேறு அழகாகப் பதித்த சோகத்தை என்னவெனச் சொல்வது.. இனி என்ன செய்ய.. எதுவுமே தெரியாதமாதிரிதான் இனி அலுவலகம் செல்லவேண்டும்..கண்ணீர்த் துளிகள் அந்தப் பத்தியில் விழுந்து பேப்பரை நனைத்தது.

    இன்று என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துக்கதினம்தான்..

    தூக்கம் ஒரேயடியாகப் போய்விட்டது. மதியம்தான் அலுவலகம் சென்றேன்.. அறைகள் காலியாக இருந்தன. இது கூட நல்லதுக்குதான்.. என் மேஜையில் இரண்டு கம்பெனி விழா அழைப்புகள் கிடந்தன.. ஆமாம்.. இப்படிப்பட்ட விழாக்களுக்குச் சென்று ஹலோ சொல்லி அவர்களைப் பேட்டி கண்டு எழுதுவதுதான் என் வேலை. எடிட்டர் நாற்காலிக்கு ஆசைப்படுவதற்குக் கூட ஒரு அருகதை வேண்டாமா.. தூக்கம் இல்லாதலால் சோர்வு அதிகமாக நாற்காலியில் சாய்ந்தேன்.. குட்டி சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் வந்தான்.

    ”என்ன சார், காலைலேர்ந்து மொபைல் ஆஃப் பண்ணி வெச்சிட்டிங்க.. உங்கள எங்கல்லாம் தேடறது.. தோ.. கொஞ்ச நேரம் போனா உங்க வீட்டுக்கே வந்திருப்பேன்..”

    எனக்குப் புரிந்தது.. ஏதாவது விளக்கம் கேட்பார்கள். கிஷன்’ஜி நேற்று கச்சேரிக்கு வந்திருக்கலாம்.. இன்று காலை பேப்பர் பார்த்திருக்க வேண்டும்.. எடிட்டர் தேடியிருக்கலாம்..

    குட்டி யாருக்கோ போன் செய்தான் தன் மொபைலில்.. “தோ இருங்க.. வந்துட்டார்..”

    கைபேசியை என்னிடம் கொடுத்தான். “சார் பேசுங்க.. அந்தம்மாதான்”

    ஓஹோ.. கழுத்துவரை முழுகிவிட்டோம்.. இனியென்ன.. இவளையும் சமாளிப்போம்.. இனி இவள் இருக்கும் திசை கூட போகக்கூடாது..

    “என்ன சார்.. என் மேல கோபமா.. காலைலேர்ந்து உங்களைத் தேடறேன்… ஆனால் உங்க கட்டுரை ரியல்லி சூபர்ப்.. அப்படியே பிரேம் பண்ணச் சொல்லிட்டேன்.. கிஷன்’ஜி காலைல போன் பண்ணி அரைமணி நேரம் ஒரே பாராட்டு மழைதான்.. நேத்து அவரால்ல வரமுடியலியாம்.. ஆனா உங்க ஆர்டிகிள் மூலமா விவரமா படிச்சுத் தெரிஞ்சுண்டதா சொல்லி ஆஹா ஓஹோ’ன்னு பாராட்டினாரா.. ரொம்பவே கூச்சமாயிடுச்சு.. எல்லாம் உங்க ஆர்டிகிள் செஞ்ச மாயை..”

    இவள் என்ன சொல்கிறாள்?

    “சரி புரியறது உங்க கோபம்.. நேத்து சொன்னேன் இல்லையா..

    எல்லாமே சர்ப்ரைஸிங்’ நு ஒரு பாலிஸி வெச்சுண்டு பாடப்போறேன்’னு.. அந்த சர்ப்ரைஸிங் உங்களுக்கும் சேர்த்துதான்.. ஆனா நீங்க எதையும் மனசுல வெச்சுக்காம இவ்வளோ அழகா ஒரு ஆர்டிகிள் ஒண்ணு எழுதி அசத்திட்டீங்க..நேர்த்தியா கலைக்கண்ணோட ஒவ்வொரு ராகத்தையும் அழகாக் குறிப்பிட்டு என்னோட புகழையும் நிறையவே ஏத்திட்டீங்க.. இப்படிக் கொடுத்தது உங்க பெரிய மனசைக் காட்டறது,, ஸோ.. உங்க ஆபிசுக்கு இன்னிக்கு சாயந்திரம் கார் அனுப்பறேன். நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்.. உங்களுக்கென்னு தனியா கல்யாணி ராகத்துல எத்தனை வேணும்னாலும் பாடறேன்.. கல்யாணி ராகத்தில் நேத்துப் பாடலியேங்கற குறையை, அதுவும் நீங்க கேட்டு நான் பாடலியே’ங்கற குறையை தீர்த்து வெக்கறேன்.. வர்ரீங்க இல்லே..”

    “க.. க.. கல்யாணி அப்ப..”

    ”ஆஹா! கல்யாணின்னு இவ்வளோ உருகறீங்களே.. நான் எவ்வளோ பெரிய தப்புப் பண்ணிட்டேன்னு இப்பத்தான் புரியறது.. நேத்தேப் பாடியிருக்கணும்.. கச்சேரில விளையாட்டா உங்களைப் பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிச்சேனே.. ஸாரி, இன்னிக்கு உங்க கல்யாணி விருந்து உங்களுக்கு மட்டும் விசேஷமா தரேன்.. கட்டாயம் வாங்க..”

    கையிலிருந்த கைபேசியை குட்டியிடம் கொடுத்தேன்..

    “என்ன சார்.. என்ன ஆச்சு?”

    “இன்னிக்கு சாய்ந்திரம் வீட்டுக்குக் கூப்பிடறா.. என் கட்டுரை ரொம்பப் பிடிச்சுருக்காம்.. ஆனா.. குட்டி.. என்னை இவள் சரியா ஏமாத்திட்டாடா.. எனக்காக ஒரு பாட்டு பாடறேன்’னு பிராமிஸ் பண்ணினவ.. ஆனா சபை’ல பாடலே.. நானும் மறந்து போயிட்டேன்.. கட்டுரைலயும் மறந்து எழுதிட்டேன்.. ஆனா டக்கெனு ஞாபகம் வந்தப்ப இவ கண்டிப்பா பாடியிருக்கா’ன்னு மனசார நினைச்சேண்டா.. ராத்திரி பூரா இந்த விஷயத்தை எழுதாம தப்பு பண்ணிட்டோமோ’ன்னு நான் பட்ட அவஸ்தை எனக்குதான் தெரியும்.. இப்ப என்னடா’ன்னா சிரிக்கிறா.. என்னை வீட்டுக்கு வரச்சொல்லி தனியா பாடறாளாம்.. நேத்து சாயந்திரமே அவகிட்டே பேசறச்சே பாக்கணுமே.. எதுக்குமே பிடிகொடுக்காமப் பேசினாடா.. அட, எவ்வளோ அழகா பிராமிஸ் பண்ணினா.. அவ்வளோ சிம்பிளா ஏமாத்திட்டாடா..இப்போ வரைக்கும் நான் மனசுக்குள்ளே கலங்கிண்டு இருந்தேண்டா.. நான் அவளுக்கு விளையாட்டுப் பொருளா மாறிட்டேனோ என்னவோ.. அப்படித்தான் இருக்கணும்”

    “அப்படியா சார், அடப் பாவமே.. நீங்க என்ன சார் பண்ணப்போறிங்க.. சாயங்காலம் அவங்க வீட்டுக்கெல்லாம் போவாதீங்க சார்.. ஏன்னா.. நாமளே போய் வலை’ல மாட்டப்படாது பாருங்க..”

    “சேச்சே.. என்னை என்ன மடையன்’னு நினைச்சியா.. அவஸ்தப்பட்டவங்க யாராவது மறுபடியும் போய் அதே அவஸ்தையை அனுபவிப்பாங்களாடா.. முட்டாள்தான் மறுபடி போவான்.. எதுக்கும் அவங்க போன் நம்பர் கொடுத்துட்டு போ.. கண்டிப்பா கறாரா பேசி ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு கட் பண்ணிட்டா போச்சு.. போடா.. ஒரு காபி எடுத்துண்டு வா.. தலையை வலிக்குது..”

    குட்டி போன் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்குப் பிறகு நான் அவளோடு பேசியதையும் அவள் குழைந்து பேசும் மயக்கக் குரலுக்கு மயங்கி அவள் வீட்டுக்கு ஓடியதையும் குட்டியிடம் நான் ஏன் சொல்லப்போகிறேன்…
    ————————————————————–

    படம்: ஓவியர் தேமொழி.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    images (4)இந்த வார வல்லமையாளராக டாக்டர் நா. கணேசனை விருது வாங்க அழைத்திருப்பதற்கு இரண்டு விசேஷ காரணங்கள் உண்டு. ஒன்று எனக்கு இதயத்துக்கு நெருக்கமான மகாகவி பாரதி, இரண்டு ஆந்திரத்தில் நான் மிகவும் மதித்துப் போற்றும் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு. இருவருமே சமகாலத்தவர், அதிலும் வீரேசலிங்கம் பந்துலு பாரதியை விட வயதில் மிக மூத்தவர் கூட (முப்பது வருடங்களுக்கும் மேலாக)

    ராஜமுந்திரியைச் சேர்ந்த வீரேசலிங்கம் பந்துலு வாழ்ந்த காலத்தில் ஆந்திராவின் நிலையைப் பார்க்கவேண்டும். எங்கும் ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக மலிந்த காலம், அதை அப்படியே வளர்த்து தமக்குச் சாதகமாக்கிக்கொண்ட ஜமீன்கள், அவர்களுக்குத் துணை நின்ற ஆங்கிலேயர், முரட்டுத்தனமான மூட நம்பிக்கைகள், ஒரு பெண் விதவையென்றால் அதிலும் நோய்கள் மலிந்த அக்காலத்தில் இளவயதில் மரணம் காணும் ஆண்களின் மனைவிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், விதவைப்பெண்கள் தாசி குலங்களில் தள்ளப்பட்டு இழிநிலைக்கு ஆளான காலகட்டம், கல்வியறிவே தெலுங்கு மாநிலத்தைத் தாண்டினால்தான் கிடைக்கும் என்ற நிலைமை, மேல்தட்டு வர்க்க அராஜகம் என்பது கட்டவிழ்ந்து கிடந்த நிலை, இவையெல்லாம் இந்த ஆந்திரத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவைகளா என்பதை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாகவும், பரிதாபமாகவும் இருக்கிறதுதான்.

    வீரேசலிங்கம் பந்துலு இந்த அநியாயங்களை தைரியமாக எதிர்த்தவர். பெண்கள் முன்னேற வழி வகுத்தவர். தாய்க்குலம் முன்னேறவில்லையென்றால் இந்த உலகமே தேவையில்லை என்று தைரியமாக எழுதியவர். இவர்தாம் தெலுங்கில் முதன்முதலாக நாவல் எழுதியவர். நூறு புத்தகங்களுக்கும் மேலாக எழுதியவர். அத்தனை புத்தகங்களுமே சீர்திருத்தக் கருத்தைத்தான் சொல்லும். விதவா விவாகத்தில் முன் நின்றவர். வீதிநாடகங்கள் மூலமாக விதவைப்பெண்களை தைரியப்படுத்தி மறுவிவாகத்துக்கு அவர்களைத் தயார்படுத்திய அதிசயத்தை இப்போதும் கூட ஆந்திர இலக்கிய உலகம் இவரைப் போற்றிக் கொண்டே இருக்கிறது.

    வீரேசலிங்கம் பந்துலு நம் மகாகவியின் இனிய நண்பர். வீரேசலிங்கம் பந்துலுவின் இந்த ஆந்திர புரட்சியும் சமூக சீர்திருத்தமும் உலகம் அறிய வேண்டுமென்ற கருத்தில் அவரைக் கதாநாயகனாகக் கொண்டு தமிழில் ‘சந்திரிகையின் கதை’ என்ற கதையை எழுதினார் பாரதி. கதையில் வீரேசலிங்கம் பந்துலுவைத் தவிர ஏனைய பாத்திரங்கள் கற்பனை என்றாலும் பாரதிக்கு மிகவும் பிடித்த ‘பெண் விடுதலை; என்ற நோக்கம் இங்கு மிக நன்றாகக் கையாளப்படுத்தப்பட்டுள்ளது.

    திரு நா. கணேசன் இந்த வாரம் மறைந்த ரா. பத்மநாபனின் எழுத்துக்களிலிருந்து சில வரிகள் வீரேசலிங்கம் பந்துலுவைப் பற்றி எடுத்துப் பதித்துள்ளார். திரு கணேசனுக்கு ஒரு நன்றியுடன் அந்த வரிகளை சற்று ஒரு முறை பார்ப்போம்.

    Bharati strongly believed in social reform, and therefore he had great admiration for Kandukuri Veeresalingam Pantulu (1848-1919). Veeresalingam was 34 years senior to Bharati, and he was a close friend and co-worker of Bharati’s first editor, G. Subramania Iyer Veeresalingam was a great social reformer of the times, and Bharati has brought in both Veeresalingam and G. Subramania Iyer as real life characters in his social novel (incomplete) titled “Chandrikaiyin Kathai” (The Story of Chandrika).

    The nove1 starts with the widowing of Visalakshi, paternal aunt of Chandrika, left helpless. Visalakshi goes to Madras with the orphaned Chandrika, to seek the help of G. Subramania Iyer to get her a husband. Iyer sends her to Veeresalingam with a letter.

    Visalakshi goes to Rajahmundry to be disappointed. She learns that Veeresalingam has gone to Madras and is staying at a house in Egmore. She comes to Madras and meets Pantulu, says Bharati:

    “… Inside, he was alone, seated in a deck chair and writing a book.

    “Visalakshi saluted him and gave him the letter from G. Subramania Iyer. Veeresalingam asked her to sit in the chair opposite him. She sat there with Chandrika in her lap, Veeresalingam Pantulu read the letter in full, and then asked her in Tamil, ‘What day is today?’ She replied in Telugu, ‘It is Budhavaaramu.’

    “Meeku Telugu vachchunaa?’ (Do you know Te1ugu?) Pantulu asked.

    “Avunu, chaala baaga vachchunu’ (Yes, I know it very well.) said Visahkshi.”

    Husband-Wife Team

    Bharati then goes on to narrate how Pantulu’s wife came in while he was querying Visalakshi about her attainments. All this is portrayed very naturally and the picture is effective.

    When Mrs. Pantulu learns of the reason for Visalakshi’s visit, she recalls that Gopala Iyengar, Deputy Collector in Tanjore, who had expressed an interest in marrying a widow, had called, and she thought this girl would suit him. There is a discussion between husband and wife on the matter. Visalakshi assures Veeresalingam Pantulu that she is willing to wed Gopala Iyengar, although he drinks, hoping to reform him after marriage.

    At this juncture Gopala Iyengar himself comes form downstairs. As he is fond of a good dinner, Pantulu asks his wife and Visalakshi to go down and prepare a sumptuous feast. After the feast, Pantulubroaches the subject with Iyengar and he readily agrees under the impression that the servant-maid, who was having the child Chandrika while Mrs. Pantulu and Visalakshi were inside the kitchen, was the prospective girl mentioned by Pantulu. Later when he sees Visalakshi, he says no and insists on his original choice. Despite, difficulties, Pantulu is able to arrange the inter-caste marriage of Gopala Iyengar and the Naidu servant-maid.

    As for Visalakshi, requesting Pantulu to arrange a husband for her somewhere else, she goes to stay with some relatives of hers. After some painful incidents she meets a youthful Sannyasi. They fall in love mutually. The young man renounces Sannyasa and marries the widow according to Brahmo rites, with the blessings of Veeresalingam Pantulu.

    சரித்திரத்தின் பொன்னேடுகளிலிருந்து சில தங்கங்களை நமக்கு அளித்த டாக்டர் . திரு நா. கணேசன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் நன்றிகளுடன் வாழ்த்துகளும்..

    கடைசி பாரா: திரு கிரேஸி மோகனின் திருமால் திருப்புகழ்

    “அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்

    கிருந்த வாறிருக்க -ரமணேசர் 
    புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை 
    நெருங்க ஞானவித்தை -அருள்வாயே 
    அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
    அமைந்த யோகநித்ரை, -வனமாலி 
    சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய 
    இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே 
    தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு 
    இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
    தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள் 
    முகுந்த வாவகத்துள் -குடியேற 
    புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில் 
    பறந்து வாயெனக்கு -துணையாக 
    உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும் 
    குடந்தை மாநிலத்து -பெருமாளே”

    அன்பு  நண்பர்களே,

    வணக்கம். கடந்த 23 – 29 ஏப்ரல், 2011 முதல் வல்லமையாளர் விருது  வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வாரம்  நூறாவது வாரம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த 100 வாரங்களில் சுமார் 90 வாரங்கள் திரு திவாகர் அவர்கள் அந்த வார வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தனித்த ஆற்றலை பலரும் அறியும் வகையிலும், மற்றவர்களுக்கும் அது ஊக்கம் கொடுக்கும் வகையிலும் விருது வழங்கி இப்பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நம் வல்லமையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். இடையில் அவருக்கு முடியாத சில தருணங்களில் திரு இன்னம்பூரன், பேரா. திரு நாகராசன் மற்றும் திரு. பெண்ணேஸ்வரன் ஆகியோரும் இப்பணியை  மேற்கொண்டனர். வல்லமையின் வளர்ச்சியில் பங்குபெறும் அனைவருக்கும் நம் பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகுக.  வருகின்ற வாரங்களில் திருமதி தேமொழி இப்பணியின்  பொறுப்பேற்றுள்ளார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கும் நம் வாழ்த்துகள். அனைவரும் அந்தந்த வார வல்லமையாளர்களுக்கான தங்கள் பரிந்துரைகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு வழங்கவும் வேண்டுகிறோம்.  நன்றி.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share