Month: May 2014

  • மனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை – பகுதி 1

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

     

    sundaranarபேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை
    (1855- 1897)

    நம் செந்தமிழ் மொழியை முத்தமிழ் என முன்னோர் வழங்குவர். இயல், இசை, ’கூத்து’ என்னும் நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகத் தமிழ் தொன்றுதொட்டு இலங்கி வருகின்றது. தொல்காப்பியர், நாடகத் தமிழுக்குரிய மெய்ப்பாடுகளைப் பொருளதிகார மெய்ப்பாட்டியலில் மிக விரிவாக விளக்கியுள்ளார். நாடகம் எழுதுவதற்கான இலக்கண நூல்களும் அந்நாளில் இருந்தனவென்பதைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் எடுத்துக்காட்டியுள்ளார்.

    அகத்தியம், குணநூல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற தமிழ் நாடக இலக்கண நூல்கள் பண்டை நாளில் வழக்கிலிருந்தன. அல்லிக்கூத்து, கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம் போன்ற கூத்துக்களைப் பண்டைத் தமிழர் போற்றியுள்ளனர். எனினும் தமிழில் நாடக இலக்கிய நூல்கள் கிடைக்காமல் போனது நம் தவக்குறைவே. மேலும், கலைகளைப் பற்றிக் குறிப்பாக நாடகக் கலை பற்றி, நாகரிகக் கலப்பால் தமிழர்களிடையே மாறுபட்ட எண்ணமும் நிலவுவதாயிற்று.

    தமிழ்நாட்டில் பல நாடகங்கள் நடிப்பதற்காகத் தோன்றினாலும், இலக்கிய நாடகங்களாக அவை மிளிரவில்லை. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற்றபின் ஆங்கில மொழியும், இலக்கியமும் செல்வாக்குப் பெற்றன. சேக்ஸ்பியரின் நாடகங்கள் ஆங்கிலம் கற்ற தமிழர்களிடம் பாராட்டுப் பெற்றன.

    இச்சமயத்தில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்த பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளையவர்கள், ‘மனோன்மணீயம்’ என்றவோர் அரிய நாடக நூலைத் தமிழ்மக்கள் படித்தின்புறவும், நடித்து மகிழவும் படைத்துத் தந்தார். இந்நாடக நூலே இன்றளவும் தமிழ் நாடக இலக்கியத் துறையில் தன்னேரில்லா நாடக இலக்கியமாக விளங்கிவருகின்றது என்றால் மிகையன்று.

    இந்நூல், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகச் சென்னைப் பல்கலைக்கழக இடைநிலை (Intermediate), இளங்கலைப் பட்ட வகுப்புக்களில் நாடக இலக்கியமாகத் திகழ்ந்த பெருமை பெற்றது. ஆங்கில நாடக இலக்கியத்தைப் போலவே ஐந்து அங்கங்களையும் (Acts) பல உட்களங்களையும் (Scenes) கொண்டது இந்நூல். நாடக நூலின் ஐந்து அங்கங்களை, நாடக இலக்கணிகள், முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்று குறிப்பிடுவர். மனோன்மணீயமும் இவ்வைந்து உறுப்புக்களைப் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘The Secret Way’ – இரகசியவழி என்ற நூலைத் தழுவியே மனோன்மணீயத்தைப் படைத்துள்ளார். எனினும், இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலன்று; மூலக்கதை ஆங்கில மொழியில் அமைந்ததாயினும் மனோன்மணீயம் தமிழ்நாட்டுச் சூழலில் தமிழ் மண்ணில் தோன்றிய முதல் நூலே போன்று விளங்குகின்றதென்பதனை இந்நூலைக் கற்பார் நன்குணர்வர்.

    நாடகம் நடைபெறும் இடங்கள், தண்டமிழ் மதுரையும், தீந்தமிழ்த் திருநெல்வேலியும் சேரவேந்தனின் திருவனந்தபுரமும் ஆகும். இவையெல்லாம் தமிழ் மணக்கும் நன்னிலங்கள் அன்றோ! அம்மட்டோ! நாடகத்தில் இடம்பெறும் நாடக மாந்தர்களை நினைப்பின் அவர்கள் எல்லாரும் தமிழ்ப் பண்பாட்டினை வெளிப்படுத்துகின்ற நன்மக்கள்; நனிநாகரிகர். சீவகவழுதி பாண்டிய மன்னன்; சுந்தர முனிவர் குலகுரு; குடிலன் கேடுசூழ் அமைச்சன்; மனோன்மணி மன்னனின் ஒரே மகள்; நற்பண்புகளின் உறைவிடம். வாணி மனோன்மணியின் தோழி; நடராசனின் காதலி; அறிவில் சிறந்த நங்கை. நடராசன் சுந்தர முனிவரின் சீடன். புருடோத்தமன் சேரவேந்தன்; மனோன்மணியின் காதலன்; நற்பண்பினன். நாராயணன் மன்னனின் நலம்நாடும் நற்குடிமகன். பலதேவன் குடிலனின் மகன். சகடன் வாணியின் தந்தை; பொருளாசை மிக்கோன்.

    நாடக மாந்தர் மட்டுமல்லர், நாடகக் கதையும் தமிழ் நாகரிகத்தின் இரு கண்களாக விளங்கும் அகமும் புறமும் – காதலும் வீரமும் செறிந்து விளங்குவது. இதனைப் பின்புலமாகக்கொண்டு நடைபோடுவதே இம்மனோன்மணீய நாடகம். இந்நாடகத் தொடக்கம்கூட இந்நாட்டு நாகரிகத்தையும், பண்பாட்டினையும் பறைசாற்றுவதாகும்; அதனைக் காண்போம்.

    பாண்டிய மன்னன் சீவகவழுதியின் அரசவைக்கு மன்னனின் குலகுரு சுந்தர முனிவர் எழுந்தருளுகின்றார். மன்னன், தம் குருவை வணங்கி இனிய நன்மொழி கூறி வரவேற்கின்றார். அவ்வரவேற்புரை மன்னனின் மாண்பினைச் சுட்டுவது.

    “வருக! வருக! குருகிரு பாநிதே!
    திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
    அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
    குருகுல விசயன் கொடித்தேர்ப் பீடமோ
    யாதென ஓதுவன்?”

    இம்மொழிகள் நம் பண்பாட்டினை உலகிற்கெடுத்துரைப்பதல்லவா? கருணை முனிவ! அருள் வள்ளலே! வருக! தங்களின் பொன்னார் திருவடிகள் தீண்டப்பெற்ற இச்சிறுகுடில் வேதங்களின் முடிவுப் பொருளோ? தென்முகக் கடவுள் வீற்றிருக்கும் ஆலமரத்தின் நல்ல நிழலோ? கண்ணபிரான் கீதை அருளிய அருச்சுனனின் தேர்ப் பீடமோ? அப்புகழுரைகள் தன் குருவிடம் மன்னன் காட்டிய நல்லெண்ணத்தின் வெளிப்பாடேயன்றோ?

    மேலும், இந்நாடகக் காப்பியத்தில் தமிழ்நாட்டின் இயற்கைஎழில் கவினுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நடராசனின் தனிமொழியில் இடம்பெற்றுள்ள புல், வாய்க்கால், நாங்கூழ்ப்புழு பற்றிய செய்திகள் இயற்கை வருணனைகளோடு குறிப்புப் பொருளைச் சுட்டுவனவாகவும் அமைந்துள்ளன. இதனினும் மேலாக நாஞ்சில்நாடு எனப்பெறும் நன்செய்நாட்டு வளங்கூறும் பகுதி – இயற்கையெழிலைக் கற்பார் உள்ளம் களிகூர எடுத்துக்கூறும் பகுதியாகும். மனோன்மணீயம் கூறும் நன்செய்நாட்டு வளம் பத்துப்பாட்டின் பல நூற்பகுதிகளின் பிழிவெனக் கூறலாம். மருதமும் நெய்தலும் மயங்கிய திணைமயக்கப் பகுதிச் செய்திகள் தமிழ் மாணாக்கர் அனைவரும் படித்தின்புறவேண்டிய பகுதியாகும்.

    மேலும் இந்நூல் சுட்டும் நுண்பொருளாக அறிஞர்கள் சுட்டுவதையும் காணலாம். சீவகன் ஜீவாத்மாவாகவும், அவனை ஆட்டுவிக்கும் குடிலன் மாயா சக்தியாகவும், மனோன்மணி சுத்த தத்துவமாகவும், அவள் தோழி வாணி புத்தி தத்துவமாகவும், நடராசன் உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்தம வேந்தனை அனுக்கிரக சக்தியாகவும், சுந்தர முனிவரைக் கருணாமூர்த்தியாகிய ஞானாசிரியராகவும், மதுரையை மூலத்தானமாகவும் சுட்டுவர். இதனால் இந்நூல் தத்துவக் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டு விளங்கும் நன்னூல் என்பதும் அறியத்தக்கதாகும். மற்றும் கருணாகரரும், நிட்டாபரரும் சிலந்திப் பூச்சியை எடுத்துக்காட்டித் தம் சித்தாந்த, வேதாந்தக் கருத்துக்களை விளக்கும் பகுதி இந்நூலின் மேலாந்தன்மையை அங்கையின் நெல்லியாய்த் தெளிவுபடுத்தும்.

     இனி, இந்நூலில் இடம்பெற்றுள்ள சுவைமிக்க ’சிவகாமி சரிதை’யை அடுத்த பகுதியில் காண்போம்.

    (வளரும்)

     

    Share
  • மன நல ஆலோசனைகள்

    அன்பு நண்பர்களே,

    vimalaஇன்று முதல் (23-05-2014) நம் வல்லமையில் மன நலம் என்ற புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருமிகு. எம். விமலதாரணி, ஹோமியோபதி மருத்துவம் மற்றும் மன நல ஆலோசகர் உளவியல் சார்ந்த பல கருத்தரங்குகளை நடத்தி வருபவர், மற்றும் திரு. ஆ.கார்த்திகேயன் , வழக்கறிஞர், மன நல ஆலோசகர் ஆகிய இருவரும் நம் வல்லமை வாசகர்களுக்கான மன நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்க இசைந்துள்ளனர். இவர்கள் சென்னை அண்ணா நகரில் (மேற்கு) காவியா ஹெல்த் ஹோம் எனும் மனநல ஆலோசனை மையம் நடத்தி வருகின்றனர். இம்மையத்தில் மாணவர்களுக்க்கான சிறப்பு மன நல ஆலோசனை, கல்வி மற்றும் தொழில் சார்ந்த வழிநடத்தல், குடும்ப நல ஆலோசனை வழங்கப்படுகிறது. இவர்கள் உளவியல் மற்றும் சட்டம் சார்ந்த பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். திரு ஆ. கார்த்திகேயன் மற்றும் திருமிகு எம். விமலதாரணி ஆகியோரிடம் தங்கள் பதிலைப் பெறுவதற்கு, vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு தங்கள் வினாக்களை அனுப்பலாம். பெயர் குறிப்பிட விரும்பாவிட்டால் அதையும் தெரிவிக்கலாம். இவர்களிடம் அண்மைக் காலத்தில் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இங்கே:

    கேள்வி:1

    எனக்கு வயது 21. என் அக்காவிற்குத் திருமணமாகி விட்டது. என் அப்பா பத்து ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துKarthi விட்டார். 43 வயதான என் தாய் சமீப காலமாக வேறு நபருடன் நட்பாக பழகி வருகிறார். எங்கள் உறவினர்களில் சிலர் இதை தவறாகப் பேசுகின்றனர். இதைப் பற்றி அம்மாவிடம் கேட்கவும் பயமாக இருக்கிறது. சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. என்ன செய்வது?

    பதில்: நமது சமூகத்தில் ஆண் பெண் நட்புறவை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதுவும் விதவைப் பெண் ஒரு ஆணுடன் நட்பாக பழகினாலும், தவறான ஒரு ஆணுடன் நட்பாகப் பழகினாலும் தவறான நோக்கிலான பார்வைகளே அதிகம். உங்களுக்கு உங்கள் தாயை பற்றித் தெரியாதா? மற்றவர்கள் தவறாக பேசுகின்றனர் என்பதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. நீங்களும், உங்கள் தமக்கையும் உங்கள் தாயாரிடம் பேசலாம். அந்த நபர் நல்லவராகவும் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை உடையவராகவும் அவரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த நட்பை சரியாகப் புரிந்து கொள்கின்றனர் என்றால் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

    கேள்வி: 2

    எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நானும் என் மனைவியும் எதோ இயந்திரம் போல ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறோம். பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் எங்கள் திருமணம் நடந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களுக்குள் எந்த ஈடுபாடும் வளரவில்லை. நாங்கள் இருவருமே மனப்பூர்வமாகப் பிரிந்து விட நினைத்தாலும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் கட்டாயப்படுத்தலும் மிரட்டலும் எங்களுக்கு சமீப காலமாய் விரக்தியை ஏற்படுத்துகிறது.

    பதில்: உங்களிடம் எந்த ஈடுபாடும் இல்லை என்கின்றீர்களேத் தவிர உங்களுக்குள் வெறுப்பு உள்ளது எனச் சொல்லவில்லை. நீங்கள் ஈடுபாடு எனச் சொல்வது தாம்பத்திய வாழ்விலா?அல்லது பொதுவான அனைத்து விஷயங்களிலுமா என்பது பற்றி உங்கள் கேள்வியில் தெளிவில்லை. சரி விவாகரத்து பெற்று விடுகிறீர்கள் என வைத்து கொள்வோம். பின்னர் என்ன செய்வதாக உத்தேசம்? மறுமணமா?அல்லது தனியாகவே இருந்து விடப் போகிறீர்களா?

    உங்களுக்கு கட்டாய மணம் செய்துவிட்டனர் என்ற கோபம் கூட தற்போதைய ஈடுபாடில்லா வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கலாம் அல்லவா? நீங்களும், உங்கள் மனைவியும் மனம் விட்டு இதுபற்றிப் பேசி இருக்கிறிர்களா? உங்கள் இருவரின் வாழ்விலும் வேறு நபர் குறிக்கீடு ஏதும் இல்லை என்றால், பிரச்சனை என்னும் மாய வலையிலிருந்து உங்களால் மிக எளிதாக வெளியே வந்து விட முடியும். மனநல ஆலோசகரை அணுகுங்கள்.

    கேள்வி : 3

    என் கணவருக்கு நான் இரண்டாம் தாரம். மூத்த மனைவி இறந்து விட்டார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். நான் அவனை கண்டிப்பதால் மற்றவர்கள் என்னைத் தவறாக நினைப்பார்களா?

    பதில்: அந்தப் பையனை நீங்கள் உங்கள் சொந்த மகனாகத்தான் கருத வேண்டும். அப்படி நினைத்தால் இந்த பயமே உங்களுக்கு தோன்றாது. குழந்தைகள் தவறு செய்யும் போது கடமை உணர்வோடு அவர்களைத் திருத்த வேண்டும். அதே போல் அந்தப் பையனையும் தவறு செய்தால் திருத்துங்கள் அரவணைக்கும் போது பாசமும் காட்டுங்கள். குழந்தைகளைக் கண்டித்தும், அரவணைத்தும் வளர்த்தால் அவர்கள் பாதுக்காப்பாக உணர்வார்கள். அதே நேரத்தில் கண்டிப்பு என்பது குழந்தையின் மனநிலைக்குத் தக்கப்படி அளவோடு பக்குவமாக இருக்க வேண்டும்.

    கேள்வி : 4

    எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. நான் என் மனைவியிடம் பாசமாக இருக்கிறேன். எதேச்சையாக அவள் பெட்டியில் அவள் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற சீட்டை கண்டுபிடித்தேன். ஆனால் அவளோ, அவள் பெற்றோரோ இதைப் பற்றி எதுவும் கூறாததால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன். மேலும் என் மனைவி மன நோயாளியாக இருப்பதால் அவளிடம் நான் எப்படி நடந்து கொள்வது?.

    பதில்: உங்கள் மனைவிக்கு எத்தகைய பாதிப்பு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இது அச்சத்துக்கோ, ஆபத்துக்கோ உரியது இல்லை. மன நோயும் உடல் நோயைப் போலவே குணப்படுத்தக் கூடியது தான். உங்களிடம் உங்கள் மனைவி இதை மறைத்ததற்கு காரணம் அவளுடைய நோய் குணமாகி இருக்கலாம். அல்லது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு அவரை வெறுத்து விடலாம் என்பதற்காகக் கூட இருக்கலாம் அல்லவா? எப்படி ஆனாலும் உங்கள் மனைவிக்கு இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் நீங்கள் இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம். தேவையெனில் அவரிடம் பேசி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு அவசியம் ஏற்பட்டால் நீங்களே ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கலாம்.

    Share
  • பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் குரலும் வாழ்வும் ஒளிபரப்பு, மு.இளங்கோவன்

    முனைவர் மு. இளங்கோவன்

    தமிழிசை மீட்புப் போராளியாக இருந்து தமிழகம் முழுவதும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணம் செய்து தமிழிசை பரப்பிய இசைமேதை பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணி தமிழுலகம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பணியாகும். இந்த இசையறிஞரின் வாழ்க்கையையும், பாடலையும் பொதிகை தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

    அன்புகூர்ந்து தாங்கள் பார்ப்பதுடன் தமிழர்கள் அனைவரும் பார்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடவும் வேண்டுகின்றேன். அயலகத்தில் வாழ்பவர்கள் இணையம் வழியாக நேரலையாகப் பார்க்கமுடியும்.

    http://tamiltv.tv/dd-podhigai-live/

    இந்த இணைப்பில் நேரலையாகப் பார்க்கமுடியும்

    பொதிகை தொலைக்காட்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசைப் பணி அறிமுகம் ஆகும் நாளும் நேரமும்

    நாள்: 24.05. 2014 சனிக்கிழமை இந்திய நேரம் : முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை

    நம் பண்படு மீட்க போராடியவரை நாம் இதயத்தில் வைத்துப் போற்றுவோம்

    அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி

    குறிப்பு: ப. சுந்தரேசனார் குறித்த ஆவணப்படம் தயாராகிக்கொண்டுள்ளது. முழுமை பெற்றதும் தமிழர்களின் அரிய செல்வப்புதையல் பெற்ற மனநிறைவு அனைவருக்கும் உண்டாகும்.

    மேலும் விவரங்கள் அறிய

    http://muelangovan.blogspot.in/

    முனைவர் மு.இளங்கோவன் Dr.Mu.Elangovan Assistant Professor of Tamil K. M. Centre for Postgraduate Studies, Government of Puducherry, Puducherry-605 008, India

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 7

     – சு.கோதண்டராமன்

    தேவர்கள் யார்?

     

    தேவ என்ற சொல் ஒளி விடுதல் என்ற பொருளுடைய திவ் என்ற வேரிலிருந்து வந்தது. அதிலிருந்து தோன்றிய சொற்கள் பல உண்டு. தேவ என்ற சொல்லும், ஆகாயம் எனப் பொருள்படும் த்யௌ, தெய்வீகமான என்று பொருள் படும் திவ்ய முதலான அதன் பிற வடிவங்களும் ரிக் வேதத்தில் சுமார் 3000 தடவைகள் வருகின்றன. வேறு எந்தச் சொல்லும் இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப் படவில்லை. எனவே தேவர்கள் தாம் ரிக் வேதத்தின் முக்கியப் பொருள் என்று கொள்ளலாம்.

    ரிக் வேதம் முழுவதும் தேவர்களைப் போற்றும் துதிப் பாடல்கள் தாம். இந்திரன், அக்னி, வாயு, ஸவிதா, வருணன், மித்ரன், அர்யமான், மருத்துகள், அசுவினி தேவர் எனப்படும் இரட்டையர், பூமி, ஆகாயம், பிரஹஸ்பதி, பிரம்மணஸ்பதி, ருத்ரன் எனத் தேவர்கள் பலராவர்.

    தேவர்கள்

     

    தேவர்கள் என்றால் இமையாத கண்களும், கீழே நிலத்தில் படாத கால்களும் உடையவர்கள் என்று புராணங்களில் படித்திருக்கிறோம். அதை எல்லாம் சற்று நேரம் மறந்து விட்டு ரிக் வேதத்தின் படி தேவர்கள் என்போர் யார், அவர்களின் இயல்பு என்ன என்பதைக் கவனிப்போம்.

    ரிக் வேதத்தின்படி தேவர்கள் என்போர் ஒளி வடிவான உடல் உடையவர்கள். சூரியன், அக்னி முதலானோர் மட்டுமல்ல, வாயு, மருத் போன்ற நம் கண்களுக்குப் புலப்படாத தேவர்களும், நதி, நீர் போன்ற பொருட்களும் கூட ஒளி வடிவமான உடலைப் பெற்றிருப்பதாக வேதம் கூறுகிறது.

    தங்கம்
    தேவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கத்துடனான ஏதாவது தொடர்பு கூறப்படுகிறது. மருத்துகள் ருக்மவக்ஷஸ் (தங்க ஆபரணம் அணிந்தவர்), தங்கரதத்தில் பயணிப்பவர் என்று கூறப்படுகிறது. சவிதா ஹிரண்யபாணி (தங்கக் கையர்) எனப்படுகிறார். சந்தியா வந்தனத்தில் வரும் ஹிரண்யயேன சவிதா ரதேன ஆ தேவோ யாதி என்ற ரிக் மந்திரம், சவிதாவும் தங்க ரதத்தில் பயணிப்பவர் என்று காட்டுகிறது. பூஷன், இந்திரன் இருவரும் தங்க ஆயுதம் கொண்டவர்கள். இந்திரனின் வஜ்ராயுதம் தங்கத்தால் ஆனது. வருணனின் கவசம் தங்கத்தால் ஆனது (ஹிரண்யத்ராபி). இந்திரனே தங்க மயமானவர் என வர்ணிக்கப்படுகிறார். அவர் தன் பக்தர்களுக்கு தங்க ரதம் பரிசளிக்கிறார். ருத்ரன் தங்கம் போலப் பிரகாசிப்பவர் எனப்படுகிறார். அக்னியின் கேசமும், கொம்புகளும் தங்கமயமானவை (ஹிரண்யகேசி, ஹிரண்யச்ருங்க). மித்ரனும் வருணனும், பூமியும் ஆகாயமும் பொன் மேனி கொண்டவர்கள். மின்னல் தங்க ரதத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

    இவை எதையும் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. தேவர்கள் ஒளி வடிவமானவர்கள் என்பதைத் தான் இது குறிப்பிடுகிறது.

    தேவர்களுக்குள்ளே சவிதா எனப்படும் சூரியன் சிறப்பிடம் பெறுகிறார். சவிதா என்ற பெயர் வரும்பொழுதெல்லாம் தேவ என்ற அடைமொழி பெரும்பாலான இடங்களில், அதாவது 60 சதவீதம் இடங்களில், வருகிறது. இதற்கு மாறாக, இந்திரனுக்கு இந்த அடைமொழி 12 சதவீத இடங்களிலும், உஷஸுக்கு 23 சதவீத இடங்களிலும், அக்னிக்கு 30 சதவீத இடங்களிலுமே கொடுக்கப்படுகிறது.

    உதாரணத்திற்குக் காயத்ரி மந்திரத்தையும் அதற்கு அடுத்த இரண்டு மந்திரங்களையும் பாருங்கள்.

    தத் ஸவிது: வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத். 3.62.10
    தேவஸ்ய ஸவிது: வயம் வாஜயந்த: புரந்த்யா பாகஸ்ய ராதிம் ஈமஹே 3.62.11
    தேவம் நர: ஸவிதாரம் விப்ரா: யக்ஞை: ஸுவ்ருக்திபி: நமஸ்யந்தி தியா இஷிதா 3.62.12

    யஜுர்வேதத்தின் முதல் மந்திரத்திலும் சவிதா தேவ என்ற அடைமொழியுடன் கூடவே வருகிறது.

    தேவ: வ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே

    சூரியனின் ஒளியைக் கருதியே இந்த அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கையான ஒளி கொண்ட சூரியன் தான் முதல் தேவன் என்பது ரிக் வேதத்தின் கருத்து எனலாம். சூரியனுக்கு அடுத்தபடியாக ஒளியுள்ள பொருளாகிய அக்னியும் தேவ என்ற சொல்லின் நேர்ப் பொருளுக்கு உரியதாக உள்ளது.

    தேவிகள்
    தேவர்களில் பெண்பாலரும் உண்டு. அவர்கள் தேவி எனப்படுகின்றனர். உஷஸ், அதிதி, பூமி, நதி, நீர் ஆகியவை பெண் தெய்வங்களாகும். த்யௌஸ் எனப்படும் ஆகாயம் பொதுவாக ஆண்பாலாகக் கருதப்பட்டாலும், ஆகாயம் பூமி இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் சொல்லான ரோதஸீ என்பது இரு பெண்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தேவபத்னி என்ற சொல் பல இடங்களில் வருகிறது. ஆனால் தேவர்களின் இந்த மனைவிமார்களைப் பற்றிக் குறிப்பிடும்படியான தகவல் எதுவும் இல்லை.

    உறவு முறைகள்
    தேவர்களிடையே தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய உறவு முறைகள் இல்லை. ருத்ரனின் மகன்கள் மருத்துகள் என்றும், சூரியனின் மகள் உஷஸ் என்றும் நீரின் மகன் அக்னி என்றும் கூறப்பட்டாலும், இவற்றை நாம் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

    இரண்டு உதாரணங்களைப் பார்ப்பதன் மூலம் அதற்கான காரணம் தெரியும். அக்னியை இரண்டு தாய்மார்களின் மகன் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் என்பதை நேரடியாகப் பொருள் கொள்ள முடியாது. இரண்டு அரணிக் குச்சிகளைச் சேர்த்துக் கடைந்தால் அக்னி தோன்றுகிறது என்பதைத் தான் இப்படிக் கூறுகிறது வேதம்.

    உஷா சூரியனின் மகளாகவும் கூறப்பட்டிருக்கிறாள். அவளை சூரியனின் மனைவியாகவும் வேதம் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால், சூரியனைப் போலவே பிரகாசமாக, ஆனால் உருவத்தில் சிறியதாக இருப்பதால் உஷா சூரியனின் மகளாகக் கூறப்படுகிறாள். தினம் தோறும் சூரியனுக்கு முன் எழுந்து விடுவதால், சூரியனிடமிருந்து இணை பிரியாமல் இருப்பதால் மனைவியாகக் கூறப்படுகிறாள்.

    கருத்தை விளக்குவதற்காக அவ்வப்போது பயன்படுத்தப்படும் இந்த உறவு முறைச் சொற்களை நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே தேவர்களிடையே உறவு முறைகள் இல்லை.

    வசிக்குமிடம்
    தேவர்களில் பெரும்பாலானவர்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். அதனால் அவர்களுக்கு திவக்ஷஸ், த்யுக்ஷஸ் என்ற பெயர் உண்டு. நதிகள் முதலான பூமியிலேயே வாழும் சில தேவர்களும் உண்டு. ஆகாயம், நீர், நிலம் என மூன்று இடங்களில் வாழ்பவர் அக்னி.

    உணவு
    தேவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் பெயர் ஹவிஸ். அதை அவர்கள் நேரடியாக நம் கையிலிருந்து பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அக்னியை நாக்காக உடையவர்கள் (அக்னி ஜிஹ்வா) என்று பெயர் உண்டு. ஹவிஸ்ஸை அக்னியிடம் சேர்ப்பித்துவிட்டால் அக்னி அதை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்குத் தருவார். அதை உண்டபின் அவர்கள் யக்ஞ பூமிக்கு வருவார்கள். நாம் போட்டு வைத்திருக்கிற பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோமபானத்தைக் குடிப்பார்கள்.

    சோமபானம்
    எல்லாத் தேவர்களும் சோமபானத்தில் விருப்பமுள்ளவர்கள் என்றாலும் இது இந்திரனுக்கு மிக விருப்பமானதாகக் கூறப்பட்டிருக்கிறது. சோமத்தினால் உற்சாகம் அடைந்த இந்திரன் பல வலிமையான செயல்களைச் சாதிக்கிறான் என்கிறது வேதம். சோம பானத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பல நலன்களைக் கொடுப்பார்கள் எனவும் கூறுகிறது.

    தேவர்கள் நாம் அளிக்கும் உணவை உண்டாலும் அவர்களுக்கு உணவு அவசியம் இல்லை. நாம் உணவு அளிக்காவிட்டாலும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. நம்முடைய பணிவின் அடையாளமாகத் தான் அவர்கள் அதைக் கருதி ஏற்றுக் கொள்கிறார்கள். அதே போல சோமத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் அதையும் அவர்கள் நம்முடைய பக்தியின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறார்களே அன்றி சோமம் இல்லாமலும் அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ முடியும்.

    அமரர்கள்
    தேவர்கள் அமர்த்யர்கள் எனப்படுகிறார்கள். அதாவது சாகா நிலை பெற்றவர்கள். மனிதனைப் போலவோ மற்ற பிராணிகளைப் போலவோ அவர்கள் இறந்து போவதில்லை. எனவே அவர்கள் நம்முடைய பல தலைமுறை முன்னோர்களைப் பார்த்திருக்கிறார்கள். இனி வரவிருக்கும் பல தலைமுறைகளைப் பார்க்கப் போகிறார்கள்.

    ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: (பிறந்தவர் இறப்பது உறுதி) என்ற கீதை உரை தேவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பிறந்தவர்கள். ஒரு முறை அல்ல, இருமுறை பிறந்தவர்கள் என்று ரிக் 6.50.2 கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு இறப்பு இல்லை.

    பரஸ்பர சார்பு
    தேவர்கள் எல்லோருமே வலிமை, அறிவு, செல்வம் மிக்கவர்களாகக் கூறப்படுகிறார்கள். தேவர்களில் உடல் குறையோ, குணக் குறையோ, அறிவுக் குறையோ கொண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோருமே மனிதர் பால் அன்பு உடையவர்கள். அவர்கள் மனிதர்க்கு வலிமையின் ஊற்றாக விளங்குகிறார்கள். கூப்பிட்டால் உடனே வந்து காப்பாற்றுகிறார்கள். பிரார்த்தனை செய்து சோம பானம் கொடுத்துவிட்டால் அவர்கள் மகிழ்ந்து பசு, குதிரை, குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள், தங்கம், ரயி எனப்படும் செல்வம், ஆரோக்யம், வேலைக்காரர்கள் என எதை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். எல்லாத் தேவர்களும் கொடையாளிகள், ஸுதானு, தானுனஸ்பதி என்று சிறப்பிக்கப் பெறுகிறார்கள். அவர்கள் நாம் செய்யும் பிரார்த்தனையால் வலிமை பெறுகிறார்கள். இவ்வாறு தேவர்களும் மனிதரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள்.

    பேச்சு
    தேவர்கள் செயல் வீரர்கள். பொதுவாக அவர்கள் பேசுவதில்லை. இந்திரன் பேசுவதாக சில சூக்தங்கள் இருந்தாலும் அவை இயற்றிய ரிஷிகளின் கருத்தே, நாடக பாணியில் சொல்லப்பட்டனவாக அறிகிறோம். தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    ஒற்றுமை
    தேவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வருணன், மித்ரன், அர்யமான் மூவரும் சேர்த்தே போற்றப்படுகிறார்கள். இந்திரனுக்கு மருத்துகள் உதவி புரிகிறார்கள். சில சமயங்களில் இரண்டிரண்டு தேவர்கள் சேர்த்தே வணங்கப்படுகிறார்கள். – அக்னி விஷ்ணு, அக்னி சோமன், அக்னி மருத்துகள், இந்திரன் அக்னி, இந்திரன் பிரஹஸ்பதி, இந்திரன் பூஷன்.

    பகை
    மனிதர்கள் தங்கள் பகைவர்களாகிய தஸ்யுக்களையும் ராட்சசர்களையும் வெல்வதற்கு தேவர்களின் உதவியை நாடுகிறார்கள். அவர்களுடன் மனிதர் சார்பாகத் தேவர்கள் போரிடுகிறார்கள். எல்லாத் தேவர்களுக்கும் ஆயுதங்களும் ரதங்களும் உண்டு. தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் இடைவெளியிலும் பயணிக்கிறார்கள். கடல்களோ மலைகளோ அவர்களது ரதங்களைத் தடுப்பதில்லை.
    இவ்வாறு தேவர்கள் ஆரோக்யம், சாகாமை, செல்வம், வலிமை, அறிவு எல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. எப்பொழுதேனும் ராட்சசர்களுடன் நடக்கும் போரில் தேவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

    படம் உதவி: விக்கிபீடியா, http://ta.wikipedia.org/s/33z9

    Share
  • பாஞ்சாலியின் சபதம்!

    -கவிநயா

    வெகு நாட்களுக்குப் பின் ஒரு படைப்பு…தொலைக்காட்சியில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததன் பாதிப்பு…

    பாராளும் சக்கரவர்த்தியின் மனைவியான திரௌபதியின் நிலையைப் பார்க்கையில் எழுந்த தவிப்பு!

    துரியோதனாதியரின் அட்டூழியத்தை இப்போது பார்க்கும்போதுகூட, நாமே எழுந்து சென்று நாலு போடு போடலாமா என்று நமக்கே அத்தனை ஆத்திரம் வருகையில், பீஷ்மரும் விதுரரும் துரோணரும் எப்படி இந்த அதருமத்தை இத்தனைதூரம் வளர விட்டார்கள் என்ற ஆச்சர்யமும் ஆதங்கமும் ஏற்படுகிறது. அதருமத்தை வளர விடுவதுதான் தருமமா?!

    பாரதி ஏற்கனவே எழுதிவிட்டான்…அதனால் என்ன, நானும் எழுதலாம்தானே? சில நிமிடங்கள் அவன் எழுதியதை மனதிலிருந்து தள்ளிவைத்துவிட்டு, இதனை வாசிக்க வேண்டுகிறேன்!

    DRAUPADI

    பாஞ்சாலியின் சபதம்

    1.

    அண்டம் நடுநடுங்க
    அலைகடலும் இடம்மாற
    தென்றல் காற்றதுவும்
    சீற்றங்கொண்டு தடம்மாற
    செய்யும் செயல்யாவும்
    கைநழுவிப் புலம்மாற
    வையம் முழுவதுமே
    காரிருளில் தடுமாறப்
    பெய்யும் மாமழையும்
    பொய்த்துவிட்டுப் போயிருக்க
    உய்யும் வகையின்றி
    உயிர்களெல்லாம் பரிதவிக்கத்
    தருமம் தலைகுனியத்
    தவமுனிவர் தவித்துநிற்க
    சாத்திரம் சொன்னதெல்லாம்
    நீர்த்துவிட்ட பேச்சாக…!

    2.

    தீயில் உதித்து வந்த
    தேவதைக்கும் இந்நிலையோ?
    உலகை ஆளவந்த
    உத்தமிக்கும் இத்துயரோ?
    கண்ணிழந்த மன்னனவன்
    மனதாலும் குருடானான்
    பெண்ணின் துயர்த்தீயை
    வளர்த்துவிட்ட நெய்யானான்!
    சொல்லில் அடங்காத
    வேதனைக்கு வித்திட்டான்
    புல்லுக்கும் கீழான
    புத்திரரைப் பெற்றிட்டான்!
    வினையை விதைத்திட்டால்
    அறுத்திடவும் வேண்டுமென
    அறியாமல் அறிவிழந்தான்
    அத்தினாபுர அரசன்!

     3.

    ஐயோ என்றழுத
    அன்னைக்குத் துணையில்லை
    ஐவரை மாலையிட்டாள்
    ஆனாலும் பலனில்லை
    கண்ணீர் விட்டழுதாள்
    காப்பாற்று வாரில்லை
    கதறித் தானழுதாள்
    கற்பரசி திரௌபதையாள்!
    விவேக விதுரரவர்
    வேதனையால் தலைகவிழ்ந்தார்
    பிதாமகர் பீஷ்மருமே
    பேசாதிருந் தாரே!
    தருமத்தின் வாழ்வுதன்னைச்
    சூதாட்டம் கவ்வியதே
    அதருமப் பிடியினிலே
    அவையோரும் சிக்கினரே!

     4.

    துஷ்டன் துரியனுமே
    தம்பிக்கு ஆணையிட
    துச்சாதன அரக்கன்
    துகிலுரிய வந்துவிட்டான்!
    வீரர் ஐவருமே
    வீணாக நின்றிருக்க
    வில்லும் கதையம்பும்
    வேலையற்றுப் போயிருக்கக்
    கதறிப் பரிதவித்த
    கண்மணியாள் திரௌபதியும்
    கூவி அழைத்திட்டாள்
    கார்மேகக் கண்ணனைத்தான்!
    கண்ணா கோவிந்தா
    நீயேயென் கதியென்றாள்
    துவாரகையை விட்டெனக்குத்
    துணையாய்வா என்றழுதாள்!

    5.

    கூப்பிய கரமிரண்டும்
    சிரசின்மேல் வீற்றிருக்கக்
    கூறிய சொல்லிலெல்லாம்
    ஹரிநாமம் ஒலித்திருக்க
    மூடிய விழியிரண்டில்
    கண்ணீர் பெருகிவர
    நாடிக் கலந்துவிட்டாள்
    கண்ணனவன் திருவடியில்!
    கமலத் திருவடியே
    சரணமெனக் கொண்டுவிட்டாள்
    கண்ணன் தனையன்றி
    துணையில்லை என்றுவிட்டாள்
    செதுக்கிய சிற்பம்போல்
    சேயிழையாள் சமைந்துவிட்டாள்
    ஒதுக்கிவிட்டாள் அனைவரையும்
    ஒருவனையே பற்றிவிட்டாள்!

     6.

    கண்ணன் வந்துவிட்டான்
    வண்ணத் துகிலுருவில்!
    பெண்ணிற் கருளிவிட்டான்
    பிரியமுடன் மனமிரங்கி!
    துஷ்டத் தம்பியும்
    இழுத்துக்கொண் டிருக்கையிலே
    விதவிதமாய் மேலாடை
    முளைத்தபடி இருந்ததுவே!
    பட்டாய்ப் பருத்தியாய்ப்
    பகட்டாய்ப் பலநிறமாய்
    கண்டவர் மயங்கிடவே
    மலையெனவே குவிந்ததுவே!
    இழுத்துக் களைத்துவிட்டான்
    அற்பத் தம்பியுமே
    கரமிரண்டும் சோர்ந்திடவே
    நிலைகுலைந்து விழுந்துவிட்டான்!

    7.

    துரியன் தலைகவிழ்ந்தான்
    பாண்டவரோ தலைநிமிர்ந்தார்!
    போனஉயிர் வந்ததுபோல்
    அவையோரும் விழித்தமர்ந்தார்!
    பீமன் சூளுரைத்தான்
    துரியன்தொடை பிளப்பதாக!
    விஜயன் சூளுரைத்தான்
    கர்ணனைத்தான் மாய்ப்பதாக!
    துஷ்டர்தம் செந்நீரைப்
    பூசிக் குளித்தபின்னே
    குழல்முடிப்பேன் அதுவரையில்
    குழல்முடியேன் தானெனவே
    பாஞ்சாலத் திருமகளாம்
    பாரதத்தின் நாயகியாம்
    திரௌபதையும் சூளுரைத்தாள்
    திக்கெட்டும் எதிரொலிக்க!

     

    Share
  • வெடித்துப் பிறந்தவள்

     

    கே. ரவி
    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்large_276238
    தங்கும் வரையித் தரையே நிச்சயம்

    ஒவ்வோர் அடியாய்த் தாங்கிக் கொண்டு
    ஓலமெல் லாமுள் வாங்கிக் கொண்டு
    வெவ்வே றான மரஞ்செடி கொடிகள்
    விதவித மான காய்கனி வகைகள்
    வளர விரிந்து தன்மடி தந்து
    மெளன மேவடி வாக இருக்கும்
    பூமித் தாய்க்கிங் கீடிணை யுண்டோ

    காற்று வந்து புழுதி வாரித்
    தூற்றி னாலும் பொறுமை யாக
    ஏற்றுக் கொள்ளும்
    தென்றல் வந்து
    சீண்டி னாலும் சிரித்துக் கொள்ளும்
    தேசங்க ளாகப்
    பிரித்துக் கொண்டு போர்புரிந் தாலும்
    ஒரேமு னைப்பில் ஒரேஏ கதியில்
    சுழன்று கொண்டேஇருக்கும்
    சூரியத் தேவனைச் சுற்றிச் சுற்றியே

    அவளே சற்று நடுங்கும் வண்ணம்
    அமைதி இழந்து குலுங்கும் வண்ணம்
    என்ன நடந்தது யாரழு தாரோ
    எங்கோ ஒருகண் ணகியா இல்லை
    இரணியன் மீண்டும் வந்துவிட் டானா
    தேவகு மாரனைச் சிலுவையில் அறைய
    யாரோ திட்டம் இடுகின் றாரோ
    மாமுனி வர்தவம் கலைப்ப தற்கே
    மீண்டும் ஊர்வசி ஆடுகி றாளோ
    குழந்தை பசியில் கதறிய ழத்தாய்
    கையில் சல்லிக் காசும் இன்றிக்
    கலங்கி நிற்கும் காட்சியோ இந்த
    நிலநடுக் கத்துக் கென்ன காரணம்
    ஊழிக் கூத்துக் (கு) ஒத்திகையோ
    பாழில் வெடித்துப் பிறந்தவள் தானே

    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்
    தங்கும் வரையித் தரைதான் நிச்சயம்.

    21-05-2014

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன் – ஆயிரத்தில் ஒருவன்

    -ஜெயஸ்ரீ ஷங்கர் kannadasan - jayasri

     

    முன்னுரை

    கவியரசர் கண்ணதாசனைப் பற்றி எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது?  என்று நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ‘இல்லை’ என்ற பதிலே என்னுள்ளிருந்து வந்தாலும், அவரது எழுத்தின் பரம ரசிகை என்ற அந்த ஒரு தகுதி  போதாதா, என்று என்னையே நான் தேற்றிக் கொள்கிறேன். ஊர்க் குருவி ஒன்று உயரப் பறக்கும் பருந்தானதாக எண்ணம் கொண்டு சின்னஞ் சிறிய சிறகுகளை  விரித்து வானத்தைப் பார்க்கிறேன். சரி…எழுதலாம்.

    எனது தந்தை திரு. பேரை. சுப்ரமணியன் அவர்கள் கண்ணதாசனின் நண்பராம். ஒரு சமயம், மதராஸில்  இருந்து 1965-இல் கவிஞர் செகந்திராபாத் வந்திருந்த போது எங்கள் வீட்டுக்கும் நண்பர் எனும் முறையில்  எனது தந்தையைக் காண வந்திருந்தார். அப்போது நான் சிறுமி.  கவியரசர் எங்கள் இல்லம் வந்திருந்த அந்த நாளை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

    ‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து’ என்று மானசீகமாகக் கவியரசர் கண்ணதாசன் அவர்களையே வணங்கிக்கொண்டு எனது பார்வையில்  அவர்களின் பன்முகங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.

    வானவில் ஒன்றுதான் அதில் வண்ணங்கள் ஏழு; ஸ்வரங்கள் ஏழுதான் அதனுள் பிறப்பது எத்தனை ராகங்கள்? அது போலத்தான் கவியரசருக்குள் பல மனங்கள்.

    அவர் தனது வாழ்நாளில் பல அவதாரங்கள்  எடுத்து வாழ்ந்திருப்பது கவிஞரின் வாழ்வில் ஒரு வரப்பிரசாதம் ஆகும். என்னைப் பொறுத்தமட்டில், கண்ணதாசன் என்னும் அந்தக் கோடிப் புண்ணியம் செய்த ஆன்மா, வெறும் மானிடன் அல்லன்! அதையும் தாண்டித் தனது பிறப்பைப் பல்லாண்டு காலங்கள் உயிர்ப்புடன் இருக்க வரம் கொண்டு வந்த கர்மயோகி!

    கலியுகத்துக் கண்ணனின் மற்றுமொரு அவதார புருஷராகவும் அவரை எடுத்துக் கொள்ளலாம். கண்ணன்பால் அவர் கொண்ட அன்புக்கும், சரணாகதிக்கும் அவரின் எழுத்துகளே சாட்சி. கண்ணனைச் சாமான்ய மக்களுக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான்.

    கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்
    ஏழைக்
    கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்…”

    என்ற பாடல் ஒலிக்காத மனங்களும் உண்டா?

    ஒரு சராசரி மனிதன்,  எண்ணங்களையே அஸ்திவாரமாகக்  கொண்டு, எண்ணங்களையே  வண்ண வானவில்லாக மாற்றி வானம்தொட்ட அவரது இலக்கையும் கடந்து நின்றது சத்தியமே. எந்த முகத் திரையும் இன்றி, தனக்குள் இருந்த நல்லவனும், தன்னை வழி நடத்தும் தீயவனும் எல்லாம் நானே என்று பகிரங்கமாகத் தன்னைத் தானே விமரிசித்துக் கொண்ட புனிதன் அவர்.

    எல்லோரும், ’ஊரே  தன்னை நல்லவன் ’என்று போற்றி மதிக்க  வேண்டும் என நினைக்கும் மனிதர்களிடையே,  “எப்படி எல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்; ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோக்கியதை எனக்கு உண்டு” என இத்தனை ஆணித்தரமாகத் தனது அனுபவத்தை மற்றவர்க்கு அனுபவப் பாடமாக  எடுத்துச் சொல்லும் தைரியம் எத்தனை மனங்களுக்கு கைவல்யமாகும்? சிந்தித்துப் பார்க்கிறேன்.

    ’எனது பார்வையில் கண்ணதாசன்’ என்பவர் யார்? அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்பதைத் தவிர,  ஒரு இலக்கியவாதி, சிந்தனையாளன் என்பதையும் மீறி, மனிதனுக்குள் இருக்கும் தேவையற்ற ‘நெஞ்சத்து நஞ்சாகிய’  தீய குணங்களை மனத்திற்கு வெளியே நிறுத்தி வைத்ததால், அவருக்குள்  இறைவனே குடி கொண்டார்!

    ஆம். அவரது எண்ணங்களே வளைந்து  வில்லானது; வில்லிலிருந்து சீறிய அம்பானது; உருவிய வாளானது; சுழலும்  பம்பரமானது; சாட்டையடியானது; பறக்கும் பட்டமானது; உயர்த்தும் ஏணியானது;  கரை சேர்க்கும் தோணியானது; பாதை உணர்த்தும் கைவிளக்கானது; கொட்டும் அருவியானது; காட்டாற்று வேகமானது; மகுடிக்கு ஆடும் பாம்பானது; துடித்த மனத்திற்கு மயிலிறகானது; எழுத்துகள் எல்லாம் அவருக்கு அடிமை பூதமானது!

    ஒரு எண்ணத்தின் அவதாரம் அத்தனை வடிவங்கள் பெறும்போது, அந்த எண்ணங்கள் கைவரப் பெற்றவர் எத்தனை பக்குவம் பெற்றவறாயிருந்திடல் வேண்டும்?  அப்பேர்ப்பட்ட அவரது எழுத்துகளைப்  படிக்கப் படிக்க ஆனந்தம் மனத்தை ஆளுகிறது!

    நான் படைப்பதனால் என் பேர் இறைவன்

    என்று சொன்னவர் தான் அவர். ஆனால், படைப்பது மட்டுமா செய்தார்? அவரது திரையிசைப் பாடல்கள் எத்தனையோ நெஞ்சங்களை வாழ வைத்துக் காத்து இரட்சித்திருக்கிறது. அவரது சிந்தனை எத்தனையோ நெஞ்சங்களில் ஊடுருவிச் சென்று அதனுள் கிடந்த நஞ்சுகளை வெளியேற்றி அழித்திருக்கிறது. இன்றும் காலத்தைக் கடந்து  அதன் செயல்பாடு நடந்து கொண்டே இருப்பதால், கண்ணதாசன் மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவே தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார் என்று சொன்னாலும், அது மிகையாகாது.

    அவரது எண்ணப்  பொக்கிஷங்கள் நல்ல நல்ல புத்தகங்களாக மாறி , அவரே அவற்றையெல்லாம்  பாரி போல வாரி வாரி வழங்கி இருக்கிறார்.

    கோபத்தையும், பொறாமையையும், பேராசையையும் ஒருவர் தன்  இதயத்தின் வெளியில் நிறுத்தினால், அவரின் நெஞ்சம் முழுதும் அன்பு, பாசம், காருண்யம், அமைதி, ஆனந்தம், வீரம், செல்வம், நகைச்சுவை, அழகு  என்று மும்மடங்கு பலன் குடி கொள்ளுமாம். இதைச் சிறப்பாக வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அனுபவ ஏட்டில் பொறித்து நமக்குத் தந்த காலத்தைக் கடந்து வாழும் சித்தர் அவர்.

    சாதாரணமாக, புதிய பாடல்கள் பிறந்ததும் பழைய பாடல்கள் மறக்கப்பட்டு   விடும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது கவிதை நயமும், உணர்வுப் பிரயோகமும் தான் காரணம் ஆகும்.

    கவியரசர்  தமது  வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த நிகழ்வுகளைப் பல்வேறு சூழ்நிலையில் திணித்துப் பாடலாக வடித்தார். அது எந்தவொரு  சராசரி மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்துடனும்  இணைந்துவிட்டதால், ஒவ்வொரு பாடலும் ரசிகர்களாகிய நம் மனதை விட்டு இன்றளவும் நீங்காது பதிந்து விட்டது.

    காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசனைப்  போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு. அதற்கும் வழியிருக்காது…எத்தனை உயர்ந்த தர்மங்கள் செய்தவர், பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றிருப்பார்.  எனக்கான நிறைவு என்னவென்றால், அவர் வாழ்ந்திருந்த காலத்தில் நானும் வாழ்ந்து வந்தேன் என்பது தான்!

    காதலும், கண்ணதாசனும் கடலும் அலையும் போல ஒன்றிணைந்தவர்கள் என்பது நாமறிந்ததே. காதலையே உயிர்த் துடிப்பென கொண்டவர் கவியரசர். காதலின் அத்தனை பரிமாணத்தையும் ரசித்து, உணர்ந்து, தேன்கூடாகக் கட்டி வைத்தவர். காதலென்ற மாய உணர்வுக்கு இதயத்துக்கு இதயம் உருக்கொடுத்த பிரம்மன்! அவர் எழுதிய வரிகளில் இல்லாதவை எதுவும் காதலிலேயே இல்லை எனலாம். காதலின் கர்ப்பக்கிரகம்வரை சென்று வந்து எழுதியவர்  நமது கண்ணதாசன்!

    ’யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது…?’

    இந்த ஒரு வரியில், காதல் நுழைந்த இதயத்தின் முதல் துடிப்பை  இதைவிட அழகாக யாராலும் சொல்லிவிட முடியாது.

    உடலுக்குள் குருதிக்கு பதிலாக எண்ணங்களே ஓடத் தமது எழுதுகோலுக்குள் உணர்வுகளை நிரப்பி அத்தனை உணர்வுகளையும்  அருவியெனக்  கொட்டித் தீர்த்தவர் அவர். அவரது ஒவ்வொரு படைப்பிலும் சமூகச் சிந்தனை நிறைந்திருக்கும். சோர்ந்த இதயங்களைத்  தமது   எழுத்தைக் கொண்டே உற்சாகப்படுத்துவார்.  எவரது கற்பனைக்கும் எட்டாத வார்த்தைகள் கூட அவருக்கு கிட்டும்!

    அவரது திரையிசைப் பாடலுலகில்  பல்லாயிரக்கணக்கான பாடல்களுள் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற நிலை உருவாகும் போது,

    உங்களுக்காக நானே சொல்வேன், உங்களுக்காக நானே கேட்பேன்,
    தெய்வங்கள்
    கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?
    உள்ளத்தில் நல்லோர் தானே உயர்ந்தவர் இல்லையா?”

    இந்த வரிகளில் திரையிசையையும் மீறி, ஒரு தவிப்பு… மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என்ற  கோரிக்கையாக வைப்பார்  கவிஞர்.

    சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
    சொல்லாத
    சொல்லுக்கு விலையேதும் இல்லை

    அனைவருக்குமான பொக்கிஷம்  இந்தப் பாடல். ‘சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை’ எனும் போது, சில சமயங்களின் பேசும் மௌனங்கள்  விலை மதிப்பில்லாதது, மேலும்  பெருந்தன்மை என்ற குணத்துக்கும் மகுடம் சூட்டி வார்த்தைகளால் விளையாடி இருக்கிறார் கவியரசர்.

    கடைசியாகக் கவியரசர் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் அவர் தமது ஆழ் மனக் கடலிலிருந்து நமக்கு எடுத்துத் தந்த வலம்புரிமுத்து.

    அந்திப்  பகல் உன்னை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை
      இதைத் தான் கேட்கிறேன்

    இந்த வரிகளில் மனம் சொக்கும் இதமான தாலாட்டு தொனிக்கிறது. இன்றும் நம் ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

    கொட்டித் தீர்க்கும் அருவியாய், காட்டாற்று வேகமாய், தெளிந்த நீரோடையாய் அவரது வாழ்வில் தான் எத்தனை சுருதிகள்…நல்ல எழுத்தென்பது அறிவை உழுவதற்குச் சமம். தமது காலம் முடிவதற்குள், அவர் நமக்குத் தந்திருக்கும் பொக்கிஷங்கள் கணக்கிலடங்காதவை. தன்னையே உருக்கி ஒளி தரும் மெழுகுத்திரியாகி  இரவும் பகலுமாக எழுதியெழுதித்  ‘தானம்’ செய்த பரந்தாமன்.

    இப்போது திரைக்குப் பாடல் எழுதக்கூட இங்கே கவிஞர் தட்டுப்பாடு. ஒரு பெரிய இலக்கிய ராஜவீதியிலிருந்து மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுவிட்டோம். இதன் முடிவு…நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பை இன்றைய இளைஞர்கள் இழந்து விட்டனர். பொருள் பொதிந்த பாடல்கள், சிந்தையைச் சீர் செய்யும் நளினங்கள் எதுவுமின்றிக் கேட்கப்படும் இசைக்குள் தொலைந்து போகிறார்கள். ஒரு சமுதாயச் சீர்கேடு மெல்ல உருவாகி வருகிறது. பாசத்தைப் பக்குவமாகச் சமைத்து விருந்து படைத்துக்கொண்டிருந்த ‘அன்னபூரணியை’ நாம் இழந்து விட்டோம். ‘அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்!’.

    அவரோ பெரிய விழுதுகள் தாங்கிய ஆலமரம். இன்றோ, நாம் அந்த மரத்தின் மகாத்மியத்தைப் பற்றிப் பேசிச் சிலிர்க்கிறோம்.

    அர்த்தமுள்ள இந்துமதம்: ஒரு மதத்தின் தன்மையை, புனிதத்தை ஆராய்ந்து அவரவரின் கடமைகளை வகுத்துச் சொன்னது.

    குடும்ப சூத்திரம்: அந்தரங்கம் பற்றிய தொகுப்பு; குடும்பத்துக்கு வழி சொல்லியது.

    அனுபவ மொழிகள்: சிந்தையைத் தூண்டும் ஆரோக்கிய பானம்.

    பகவத் கீதை: இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த இடைவெளியை நீக்கியது.

    மனவாசம் , வனவாசம்: கவிஞரின் மனத்தை, வாழ்க்கையை அரசியல், பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நமக்குக் காட்டிய சரித்திரம்.

    கடைசிப் பக்கம்: வாழ்வியலை நடைமுறைக்கு எளிமையாய்ச் சொல்லித் தருவது.

    ஜாதி, மத பேதமின்றி குரான், இயேசு காவியம்  என்று அவர் தொட்டுச் செல்லாத இலக்கியப் படைப்புகள் இல்லையே. அவரது படைப்புகளுக்கு நிகர் அவரே.

    முடிவுரை

    அவரைப் பற்றி எழுதும் போதே இதயம் புல்லரிக்கிறது.  ’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது’;  எனது பார்வையில் கண்ணதாசன் ஆயிரத்தில் ஒருவனாக, கடையெழு வள்ளலைப்போல் ‘கலியுக வள்ளல்’ என்பேன்.

     

    Share
  • வீதியில் கிடைத்த ஞானம்

    இசைக்கவி ரமணன்

     

    வார்ப்பிலேயே நான் ஊர் சுற்றி. புதிது புதிதாய் மனிதர்களைத் தெரிந்து கொள்வதில் எனக்குக் கொள்ளை மகிழ்ச்சி. கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், மனம்திறந்து பேசத் தயாராக இருக்கிறார்கள் பலர். வெகு சிலரோ, கை குலுக்கினால், மறைவாக விரல்களை எண்ணிப் பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான இந்தியர்கள் ‘ஹலோ’ சொன்னதுமே நம் வேலை, சம்பளம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்! சிலருக்கு இந்த மாதிரிக் கேள்விகள் மிகவும் எரிச்சல் மூட்டுவதால், அவர்கள் பிரேதத்தை எழுப்பினாற்போல் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள். அட, அதுதான் அவர்களுக்கு எத்தனை இயல்பாக வருகிறது! என்னைப் பலமுறை, பலரும் இந்தக் கேள்விகள் கேட்டதுண்டு. சொல்லத் தயங்கக் கூடிய அளவுக்குச் சம்பளம் நான் ஒரு போதும் வாங்கியதில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்! ஒருமுறை சென்னை மின்சார ரயிலில்:

    “ஓஹோ! அது பெரிய பத்திரிகையாச்சே! நல்ல சம்பளம் இருக்குமே!”

    – ம்

    “ என்ன ஒரு அம்பதாயிரம் இருக்குமா?”

    ஆஹா! இவர்களுக்குத்தான் என்ன நம்பிக்கை! அதற்கு எத்தனை பூஜ்ஜியங்களோ? ஐந்தாம் தேதி சம்பளம். ஆறு, ஏழு, எட்டு வரை தேதிகள் சரியாகவே இருக்கின்றன. அப்புறம் உடனே 28, 29, 30 என்று வந்துவிடுமே! முதல் வாரமே முப்பதாம் தேதி வருகிற கதையை இவருக்கு எப்படித் தெரிவிக்க!

    “அட, ஒரு அஞ்சு பத்து முன்ன பின்ன இருக்குமோ என்னமோ?” விடுவதாயில்லை அவர்.

    உடனே, பக்கத்தில் இருப்பவர், “அட் என்னங்க நீங்க இதெல்லாம் போயி அவருகிட்ட கேட்டுகிட்டு? அவருதான் பத்திரிகைப் பேரைச் சொல்லிப் பதவியையும் சொல்லிட்டரில்லெ? அப்புறம் நாமாத் தெரிஞ்சுக்க வேண்டியதுதானே? இதெல்லாம் கேக்கணுமாக்கும்? என்னங்க தம்பி நாஞ் ஜொல்றது? என்ன ஒரு அறுபது எழுபது இருக்கத்தானே செய்யும்!,” என்று என்னையும், அவரையும் மாறி மாறிப் பார்த்தபடிச் சொன்னார்.

    அறுபது எழுபதா?? குபீரென்று சிரித்து விட்டேன். அவர்கள் ரசிக்கவில்லை. நிலைமையைச் சமாளிக்க அவர்களிடம் சொன்னேன். “ஒண்ணுமில்லைங்க; ஒரு ஜோக் நெனவுக்கு வந்துது. ரெண்டு பேர் பேசிக்கறாங்க. ஒருத்தர் இன்னொருத்தரைக் கேக்குறாரு : ‘ஏங்க எங்க வேலை செய்யறீங்க?’ அவரு, ‘நான் …பத்திரிகையிலெ மேனேஜரா இருக்கேன்.’ கேட்டவரு உடனே, ‘பேஷ் பேஷ்! அப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க?’ ன்னாரு.

    நம் சக பயணிகளுக்கு இதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. சம்பளம் என்னன்னு கேட்டா நேராச் சொல்ல வேண்டியதுதானே என்பது போல் முறைத்துக் கொண்டார்கள். முதலில் கேட்டவரைக் கேட்காதே என்று சொன்னவர், முணுமுணுத்தார்: ‘ஆமா, பத்திரிகைக் காரங்க சம்பளத்தத்தான் ரொம்ப நம்பி இருக்காங்களாக்கும்.’ சரி, இனிமேல் எங்கே போனாலும் சம்பளச் சீட்டைக் கொண்டு போக வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். அவர், தமிழ்ப் பத்திரிகையை ஒரு உதறு உதறிப் பிரித்து அதில் முகத்தை மறைத்துக் கொண்டார்.

    ரயில் ஒரு நிலையத்தில் நிற்கும் முன்னே இளைஞனொருவன் இறங்க முயன்று அசிங்கமாக விழுந்தான். நிறையச் சிராய்த்திருக்கும். கண்ணாடி போட்டிருந்த அந்தக் கறுத்த மனிதர் சொன்னார், “ பாத்தீங்களா! பெத்தவங்க எவ்வளவு பாடுபட்டுப் பணத்தச் செலவழிச்சி படிக்க வச்சி அனுப்பறாங்க. இங்கெ என்னடான்னா பொறுக்கி மாதிரி விளுந்து கெடக்குறானே!” பக்கத்தில் இருந்தவரோ, “இதுக்குத்தாங்க சொல்றேன். புருசன் பொண்டாட்டி சேரும்போது பாத்துச் சேரணும்,” என்றார்! கறுத்த முகம் ரொம்பக் கருத்துப் போயிற்று!

    ‘சூடா கட்லேஸ்’ என்று வந்தான் வேர்க்கடலைப் பையன். தூரத்திலிருந்து ஒரு குரல், ‘ஏய் கடல! இங்கிட்டு வா!’ நம்ம பயல் அதைக் கவனித்தது மாதிரித் தெரியவில்லை! உடனே மறுபடியும், ‘ஏய்! என்ன கூப்டேனில்லா? வா இங்கிட்டு!’ உடனே இவன், ‘யோவ் சொம்மா அலியாதெ! அல்லாம் வர்றாங்க இரு.’ என்றான். இந்த இருதுருவத் தமிழ் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த (கேட்டபடியே எழுத சிஃபியில் சம்மதிக்க மாட்டார்கள்!!!) நான் பயலைப் பார்த்து லேசாய்ச் சிரித்தேன். அவனும், தனக்குத் தோழமை கிடைத்தது போல், அழகாய்ச் சிரித்தான். நான் வாங்குவேன் என்று தெரியும் போல! அவனே வந்து கையில் கடலையைக் கவிழ்த்தான், கொஞ்சம் கூடுதலாக! ‘துன்னு, நல்லாருக்கும்,’ என்ற பாவனையில் புருவத்தை உயர்த்தினான்.

    காரணமே இல்லாமல் என்னிடம் இனிமையாக இருக்கிறார்கள். அதேபோல் காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் கடுமையாக இருக்கிறார்கள். எங்கள் அலுவலக காண்டீனில் ஒருவர் காப்பி கலந்து தருவார். நாங்கள் வரிசையாக நின்று டபரா டம்ளரை எடுத்துக் கொண்டு போகவேண்டும். ஒவ்வொருவரையும், தேவையே இல்லாமல் பல்லைக் கடித்துக்கொண்டு திட்டுவார். என் முறை வரும்போது, திடீரென்று அவர் முகத்தில் புன்னகையும், அந்த உணர்ச்சி மாற்றத்தில் நெற்றியில் வியர்வையும் அரும்பும்.

    யோசித்துப் பார்க்கிறேன். நான் எங்கே போனாலும் எல்லோரும் என்னிடம் சரளமாகவும், ரொம்பவும் பேசுகிறார்கள். ஆட்டோவில் போனால் அவ்வளவுதான்! முக்கால் மணி நேரம், ஓட்டுனர் தன் கதையை ஒரு காட்சி மிச்சம் வைக்காமல் சொல்லி விடுவார்! ஒருமுறை ஓர் ஆட்டோக்காரர் பர்ஸிலிருந்து அவரது வைப்பாட்டிப் புகைப்படத்தை கனமுடையாக எனக்குக் காண்பித்து வெட்கம் வேறு பட்டுக்கொண்டார். அதெல்லாம் பரவாயில்லை. பேச்சு சுவாரசியத்தில் அவர்கள் என்பக்கமே திரும்பிக் கொண்டு பேசிக்கொண்டே ஓட்டுவார்கள்; அதுதான் வயிற்றில் புளியைக் கரைக்கும்!

    நெடுந்தொலைவு பேருந்தில் பயணம் செய்யும்போது, ஓட்டுனரும், கண்டக்டரும் நல்ல நண்பர்களாகி விடுவார்கள். அதற்கு ஒரு காரணமும் உண்டென்று வைத்துக் கொள்ளலாம். நிறுத்தும் இடத்திலெல்லாம், அவர்களது வால்போலவே இருப்பேன். விட்டுவிட்டுப் போகமாட்டார்கள் என்ற தைரியத்தில் நிதானமாகச் சாப்பிடலாம்! அப்படியும் ஒருமுறை, மைசூருக்கும், பெங்களூருக்கும் நடுவில், இயற்கை அன்னை ஒரேயடியாக அழைக்க, கண்டக்டரிடம் சொல்லிவிட்டுத்தான் இறங்கினேன். மறந்துபோய் அவர் விசில் ஊதிவிட்டார். இங்கேயோ, பாசனத்திட்டம் கட்டுக்கடங்காமல் இறங்கிக்கொண்டிருக்க, திடீரென்று பேருந்து கிளம்பிவிட, நான் திரும்பவௌம் முடியாமல், நிறுத்தவும் முடியாமல் பட்ட அவஸ்தை! அப்புறம், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஓர் ஆட்டோவில் பாய்ந்து, ஓட்டுனர் முன் பத்து ரூபாய்த் தாளை நீட்டவும், அவர் பேருந்தைத் துரத்தினார். ஒரு சிறு தெருவைத் தாண்டி மெயின் ரோட்டில் நுழையப் போகிறது பேருந்து. அதற்கப்புறம் அதைப் பிடிக்க வாய்ப்பேயில்லை. இரு வண்டிகளும், பக்கம் பக்கமாகச் சென்ற தருணம், நான் பேருந்தின் ஓட்டுனரைப் பார்த்துக் கையசைத்துக் கத்தினேன்! அவரோ, நான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் என்று நினைத்து, பலமாகக் கையாட்டி கியரை மாற்றினார். ஆட்டோக்காரர் கிட்டத்தட்டத் தற்கொலை ரீதியில் குறுக்கே பாய்ந்து நிறுத்த, நான் தாவி ஏறினேன். நடந்ததைப் புரிந்துகொண்ட கண்டக்டர், தலையைச் சொறிந்தபடியே ‘த்சொச்சொச்சோ’ என்றார். கன்னட மொழியில், அதைவிடவும் பெரிதாய் மன்னிப்புக் கேட்டிருக்க முடியாது! பேருந்து ஓட்டுனர்களுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நான் தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பேன். அதற்கு அவர்கள் விளக்கம் சொல்லத் துவங்கி தங்கள் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிக் கவிழ்ப்பார்கள். நான் ஆர்வத்தோடு கேட்பேன்!

    மனிதர்கள், கேட்பதே பேசுவதற்காகத்தான்! என்ன, கேட்கிறீர்களா?!

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 5

    — சி. ஜெய பாரதன்

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 5

     image

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    Mukkonakkilikal - 17

    Mukkonakkilikal - 18

    Mukkonakkilikal - 19

    Mukkonakkilikal - 20

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (109)

     

    – சக்தி சக்திதாசன்
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    அதற்குள் மற்றொரு வாரம் வந்து விட்டதா? கால ஓட்டத்தின் வேகம் கணிக்க முடியாதபடி இருக்கிறது. இயந்திர வாழ்க்கை போல எமது வாழ்க்கை எந்த வித காரணங்களுக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது..

    உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனக் கணிக்கப்படும் பாரத தேசத்தின் தேர்தல் மிகவும் ஒழுங்கான முறையில் நடந்து முடிந்திருக்கிறது.

    தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியதற்கான சான்றாகத் தென்படுகிறது.

    நான் எந்தவொரு அரசியல் சாயமும் அற்றவன். யார் பதவிக்கு வந்தாலும் நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும், சராசரி மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கான விழுமியங்களும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று விரும்புபவன்.

    உலகில் மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்பதே யாதார்த்தமான கருத்து. ஒரு நாட்டில் சமத்துவமான ஆட்சி நிலவ வேண்டுமெனில் அந்நாட்டின் அரசாட்சியில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம்.

    ஓரே கட்சி பலவருடங்கள் ஆட்சியில் நீடித்திருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த செயலாக இருக்காது.

    இக்காலகட்டத்தில் இந்திய மக்கள் முற்றுமுழுதாக தேசியரீதியில் ஒரு மாற்றத்தை வேண்டி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

    அரசியல் கட்சிகள் அதுவும் தேசியரீதியிலான அரசாங்கத்தில் பிரதமராக அல்லது நாட்டின் தலைவராக வருபவர்கள் அத்தகையதோர் குடும்பத்தில் பிறந்தவர்களாகவோ அன்றி வாழ்க்கை வசதியில் மேல்நிலையில் உள்ளவர்களாகவோ இருக்கும் நிலையைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது.

    ஆனால் நடந்து முடிந்த இந்தியத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து உழைப்பினால் உயர்ந்து வந்தவர் என்பதனால் நாட்டின் அடிமட்ட மக்களின் வாழ்வின் சுபீட்சத்திற்கு வழிவகுப்பார் எனும் நம்பிக்கை ஒளி சிறுகீறலாக உள்ளத்தின் ஓரத்தில் எழத்தான் செய்கிறது.

    இன்றைய இங்கிலாந்து நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்களை உற்று நோக்கினால் அவர்கள் அனைவரும் வாழ்வில் மேல்நிலையிருப்பவர்களே.

    இங்கிலாந்தின் முக்கியமான கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி எனும் மூன்று கட்சிகளின் தலைவர்களான பிரதமர் டேவிட் கமரன், எட் மில்லிபாண்ட், நிக் கிளேஹ் என்பவர்களின் வாழ்வாதாரங்களைப் பார்க்கும் போது அவர்கள் வாழ்க்கை வசதிகளின் அளவுக்கோட்டில் மேல்நிலையிலேயே உள்ளார்கள்.

    ஊடகங்களில் இத்தலைவர்கள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடிவு காணப்போகிறோம் என்று கூறி அதற்கான வழிமுறைகளைக் கொள்கைப்பிரகடனங்களாக வெளியிடும் போது இவர்களுக்கு எப்படி நமது வாழ்வின் தேவைகளின் அவசியம் புரியப் போகிறது என்று சாதாரண மக்கள் அங்கலாய்ப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

    கடந்தவாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த லேபர் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் இரண்டு இடங்களில் சரியான வகையில் மட்டிக் கொண்டார். வானொலிப் பெட்டியில் நீங்கள் சாதாரண மக்களின் அன்றாடச் சிக்கல்களை நன்கு அறிந்ததாகச் சொல்கிறீர்களே உங்களுடைய குடும்பத்தின் வாராந்த செலவு என்ன என்று கேட்கப்பட்டபோது 80 ஸ்ரேலிங் பவுண்ஸ் என்று குறிப்பிட்டு விட்டார் போங்கள் !

    போச்சுடா ? கணவன், மனைவி இரண்டு குழந்தைகள் எப்படி வாராந்த 80 பவுண்ஸ் செலவில் வாழ்லாம் என்று நாலா திக்குகளிலும் இருந்து கருத்துக்கள் எகிறிப் பாய்கின்றன.

    அது மட்டுமின்றி அடுத்த தேர்தலில் தாம் அரசமைக்க வேண்டுமானல் கன்சர்வேடிவ் கட்சி வசமிருக்கும் தொகுதிகளில் 58 ஜக் கைப்பற்ற வேண்டிய லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் 58 தொகுதிகளில் ஒன்றுக்கு விஜயம் செய்திருந்தார்.

    அவ்விஜயத்தின் போது அவரைப் பேட்டி கண்ட ஊடகவியலாளர் அப்பகுதியின் லேபர் கட்சியின் அமைப்பாளரின் செயற்பாடுகளைப் பற்றி வினவும் போது, எட் மில்லிபாண்ட் அவ்வமைப்பாளரின் பெயரைக் கூறி அவர் நகராட்ச்சியின் தலைவராக நன்றாகச் செயற்படுவதாகக் கூறினார். அங்கேதான் மற்றொரு சர்ச்சை லேபர் கட்சியின் தலைவருக்கு எழுந்தது,

    ஆமாம், அவ்வூடகவியளாளர் என்ன அப்படிக் கூறிவிட்டீர்கள் இப்பகுதி நகராட்ச்சியில் அதிகாரத்திலிருப்பது கன்சர்வேடிவ் கட்சி, பின் எப்படி உங்கள் கட்சி அமைப்பாளர் நகராட்ச்சிச் சபையில் தலைவராகச் செயற்பட முடியும் ? என்றாரே பார்க்கலாம்!

    நாட்டின் எதிர்க்கட்சியின் தலைவர், நாட்டின் அடுத்த பிரதமர் என்று தன்னை எண்ணிக் கொண்டிருப்பவர் தமது கட்சி வெற்றியடைய வேண்டிய ஒரு தொகுதியின் பிரச்சாரத்திற்காக வரும்போது அத்தொகுதியின் நகரசபை ஆட்சி அதிகாரம் யார் கையிலிடுக்கிறது என்பது கூடத் தெரியாமல் வருவதா?

    இவரா எமது நாட்டை வழிநடத்தப் போகிறார்? எனும் கேள்வி மிகவும் பலத்த சத்தத்துடன் பல ஊடகங்களில் குறிப்பாக கன்சர்வேடிவ் கட்சிக்குச் சார்பான ஊடகங்களில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

    பன்னாட்டு அரசியல் இன்று பல மாற்றங்களுக்குள்ளாகி மீண்டும் ஒரு அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    மக்களுக்காக அரசியல்வாதிகளா? இல்லை அரசியல்வாதிகளுக்காக மக்களா? எனும் கேள்வி இன்னமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது.

    modi_emoஆனால் இந்தியாவின் இன்றைய பிரதமர் தெரிவு மிகவும் நெஞ்சை நெகிழ்வூட்டும் விதமாக அமைந்துள்ளது. முதற்தடவையாக ஒரு பிரதமர் நாடளுமன்றத்தினுள் காலடி வைக்கும் போது தலை வணங்கி விட்டுச் சென்றதைப் பார்க்கும் போது பாராளுமன்ற அரசியலில் அவர் வைத்திருக்கும் அலாதியான மரியாதை மனதுக்குத் தெம்பூட்டுகிறது.

    அவர் பேசும்போது மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசிக் கண்ணீருடன் இந்திய தேசத்தைத் தன் தாயாகவும் இந்திய மக்களைத் தன் சகோதரர்களாகவும் கருதிப் பேசியது மிகவும் உற்சாகமூட்டுவதாகவும் உலகெங்கும் உள்ள ஜனநாயக அரசியல் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும் அமைந்திருந்தது.

    மிகவும் எதிர்பார்ப்புக்களுடன் பதவியேற்கும் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, அவரது திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதன் மூலம் மற்றைய நாட்டு அரசியல் தலைவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைவார் என எதிர்பார்க்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

     

    படம் உதவி: http://amritasabat.blogspot.com/   –    http://www.coastaldigest.com/images/stories/pictures/May2014/May15/modi_emo.jpg

    Share
  • வான்மதி

    — சங்கர் சுப்ரமணியன்

    young-romantic-indian-couple“நன்கு யோசித்து சொல் வான்மதி… இது நம்முடைய கடைசி சந்திப்பாக கூட இருக்கலாம். உன்னுடைய பக்கமிருப்பு என்னுள் கிளர்ந்தெழ செய்யும் உணர்வுகளையெல்லாம் என் வாழ்நாளில் உணரவே முடியாமல் போய் விடுமோ என்றேதான் நான் கவலை கொள்கிறேன். அண்ணன், அம்மா, அப்பா இப்படியான உறவுகளிலிருந்து நீ எப்படி… விடுபட்டு வெளிவந்து விடுவாய் என்று கவலைகொள்கிறாய் . உன் கவலையும் எண்ணமும் எனக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றுகிறது . முதலில் உன்னை புரிந்து கொள். உனக்கே நீ செய்வது சரியென்று தோன்றுகிறதா ..நம்முடைய பழக்கமெல்லாம் பொய்யாகித்தான் போகணுமா… நன்றாக யோசித்துகொள். மறுமுறை எடுத்து கூற நான் உன் பக்கமில்லாமல் போகலாம்…”

    கவலையும் கோபமும் கலந்து அவன் நிற்க . அவள் வார்த்தைகளற்று எதிர் நின்றாள். அவள் வீடும் இவனுமென அவளுடைய மனம் முடிவெடுக்க முடியாமல் தவித்தது. யார் பேச்சு நியாயம் என்பதை எப்படி யோசித்தாலும் அவிழ்க்க முடியாத முடிச்சாக இறுகிக் கொண்டே போனது அவளுக்கள். சார்புதன்மை கொண்ட பெண்னினமே இப்படித்தானோ எனறு அவள் இனம் மேலே வெறுப்பாக உணர்ந்தாள். யாரையும் கஷ்டப்படுத்தாமல் எந்த முடிவும் இல்லையோ. கடவுள் எதற்காக எதிர்மறையான சந்தர்ப்பங்களை வைத்து வாழ்க்கையை சோதிக்கிறான் என்பது புரியாத புதிராகத்தான் உள்ளதாகவே அவளுக்கு தோன்றியது. இலேசான தலையசைப்பும் முகச்சுழிப்புமாக அவன் எழுந்து நடந்தான் . சுற்றியிருந்த வயல்வெளிக்கு நடுவில் அமந்திருந்த அந்த அழகு குன்றின் மேற்புறம் வளர்ந்திருந்த அந்த வேப்ப மரத்தின் நிழலில் இருவர் மட்டும் தனித்திருந்தனர்.

    “ஒவ்வொருமுறை பிரச்சனைகள் வரும்பொழுதெல்லாம் உன்னை உன் மனதிற்குள் முடிக்கொள்ளவே முயலுகிறாய். நானொருவன் உனக்காக எதுவும் செய்ய காத்திருக்கிறேன் என்ற உணர்வு ஏன் உனக்கு வராமலே போகிறது வான்மதி. இதுவரை நடந்துமுடிந்த அத்தனை பிரச்சனைகளும் நான் உன்னை மீட்டு வரும் எல்லைக்குள் இருந்தது. ஆனால் நீ இப்பொழுது எடுக்கும் இந்த முடிவு என்னையே எல்லை கடந்து தூரதள்ளிவிடும். சரியான சிந்தனைகளில் நாம் தீர்மானிக்கும் கணங்களே நம்முடைய வாழ்க்கையின் முன்னிருந்து நம்மை வாழ்தலுக்கு அழைத்து செல்வதாகத்தான் நான் நம்புகிறேன். உறவுகள் எப்பொழுதுமே நம்மை முழுமையாக வெறுத்து தள்ளுவதில்லை. காலம் முன்னிருந்து காயங்களை ஆற்றி சேர்த்து வைத்துவிடும். நாம்தான் அவர்களுக்கான தியாகம் என்பதான கற்பனையான எண்ணத்தில் சுயம் இழக்கிறோம்”

    அவளுடைய இழப்பு என்பது மீட்டெடுக்க முடியாத மரணம் என்பதாகத்தான் அவன் உணர்ந்தான். அவன் மனம் சமாதானப்படுத்த ஆயிரம்ஆயிரமாக வார்த்தைகளை கோர்த்து காத்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் இவள் இல்லையென்றானால் இனி இல்லவே இல்லை என்பதை எண்ணும் பொழுதே இதயம் நடுங்கியது. ஆனால் அவளோ தடுக்க முடியாத உள்ளக்குமுறலில் உடைந்து அழுதாள் . அவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கரைபுரண்டு வெளியேறிக்கொண்டிருந்தது.

    “வான்மதி உன்னை அழவைக்க வேண்டும் என்பதற்காக நான் பேசவில்லை . உன்னை நன்கு உணர்ந்ததாலே பேசுகிறேன். முடிவுகளை உன் குடும்பத்திற்கென்று எடுக்காதே. அவர்களை சமாதானப்படுத்தும் சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி கொள்ளலாம். ஆனால் சந்தரப்பங்களை இழந்தபின் வருத்தத்தில் வாழ்க்கை கஷ்டப்படும். நாளை நான் ஊருக்கு கிளம்புகிறேன் ஒனறிரண்டு மாதங்கள்தான் நான் இந்தியாவிலே இருக்கும் நிலை ஏற்படலாம். ஆகையால் கடைசியாக நான் நாளை ஊருக்கு செல்லும் பேருந்தில் உனக்கும் என் பக்கத்து இருக்கையை எடுத்திருப்பேன். நன்றாக யோசித்து முடிவெடு வான்மதி . உன் முடிவு எதுவென்றாலும் எனக்கு பூரண சம்மதமே. என்னை கஷ்டப்படுத்துவதாக நினைத்து உன்னை வருத்தி கொள்ளாதே. நம் வாழ்க்கை பயணங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.” என்றபடி பக்கமாக அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து இறுக்கி பிடித்து கொண்டான். இப்படியான இருப்போடு காலம் கடந்து வாழ்ககை இங்கேயே முடிந்து விடாதா என்ற ஏக்கமே அவள் நெஞ்சில் நிறைந்தது.

    “ஏய் வன்மதி எப்படி இருக்கேடி” குரல் கேட்டு திரும்பி பார்க்க தோழி நின்றிருந்தாள்

    “என்னடி இவ்வளவு லேட்டா வர்ற . ஊர்விட்டு போய்விட்டா பழகியதெல்லாம் மறந்திருவியோ” புன்னகையுடனும் பார்த்த சநதோஷமாகவும் ஒடிச்சென்று தோழியின் கை படித்து உரிமையுடன் வான்மதி கேட்டாள்

    “கொஞ்சம் லேட்டாயிருச்சுடி. அதுக்கே இப்படியா… எங்க யாரையும் கானோம். உன்னோட வீட்டுக்காரரும் இல்ல” என்றபடி புன்னகையுடன் தோழி அவள் பக்கமாக வந்தாள். “அப்பா எல்லாரையும் அழைச்சுட்டு டவுனுக்கு போயிருக்கார். நான்தான் இன்னைக்கு ஊரச் சுத்திட்டு நாளைக்கு சேர்ந்துகிறேன்னு சொன்னேன். அப்பா சிரிச்சுக்கிட்டே உன்னை வரச்சொல்லட்டான்னு கேட்டாரு. அதுக்குதான் நான் போகறத தள்ளிபோடுறேன்னு அவருக்கு புரிஞ்சிரிச்சுன்னு தெரிஞ்சு நானும் சிரிச்சுட்டேன்” என்றாள் புன்னகையுடன்

    இருவரும் பக்கமாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். இருபக்கமும் திறந்த அவர்கள் மனது வார்த்தைகளை அள்ளிக்கொட்டியது சரளமாக. ஆடி ஒடி அலுத்தபடி, ஊருக்கு ஒதுக்குபுறம் ஆலமரத்தடியில் ஒத்தையில் தனித்திருந்த பிள்ளையாரின் பக்கமாக இருவரும் அமர்ந்து காரணமின்றி சிரித்ததில் ஆரம்பித்த பேச்சு, தட்டாம் பூச்சி பிடிக்க மார்க்குச்சியை வைத்துக்கொண்டு தெருவெங்கும் சேர்ந்து திரிந்தும், ஒன்றுகூட கிடைக்காமல் அழுதபடி வீடு வர அண்ணன் இருவருக்குமாக பிடித்துகொடுத்த தட்டாம் பூச்சியுடன் நாள் முழுவதும் வளையாடிக் களித்தது, வம்பு பேசும் பையன்களிடம் எனக்காக அவள் இட்ட சண்டை. வெளிநாட்டிலிருந்து வந்த அப்பா கொண்டு வந்ததில் அவளுக்கு பிடித்ததென மறைத்து எடுத்து வந்து கொடுத்தது. அம்மாவிடம் கூட பேச முடியாத இளமையின் இரகசியங்களை பரிமாறிக்கொண்டது என எல்லாமுமாக கடந்த பேச்சு அவனிடம் வந்தது.

    “என்னடி அவனை மறந்துட்டேல்ல” என்று தோழி மெதுவாக கேட்டதும் அவள் கண்களில் வேகமாக கண்ணீர் திரையிட…

    “ஏய்…இதுக்குதான் அத பேசவே வேண்டாம்னுதான் இருந்தேன். ஸாரிடி..” தோழி வருத்தத்துடன் அவளை சமாதானப்படுத்த முயல…

    “என்ன சொல்லனே தெரியல… என்னால அவன் நினைப்பு இல்லாம ஒரு நாள் கூட இருக்கவே முடியலடி… அவனுக்கு என்னை பத்தி சரியா தெரிஞ்சிருக்கு . எனக்குதான் என்னையே தெரியல….நல்லா தூங்கிகிட்டு இருக்கிற நட்ட நடு ராத்தரியில அவன் பக்கத்தில உட்கார்ந்து தலைகோதி விடுறமாதிரி இருக்க.. சடக்குன்னு தூக்கத்திலருந்து விழிச்சா…அப்பறம் மனசு பூரா அவன் நினப்பு புகுந்துகிட்டு இராப்பூரா தூக்கமே வரமாடக்குதிடி.. எப்பவாவது என்னோட புருஷன் எந்திரிச்சு பார்த்தா …ஒன்னுமில்லைங்க வீட்டு நினைப்புன்னு சொல்லி சமாளிக்கிறேன். அவன என்னால மறக்க முடியும்னு தோனலடி . நினப்பு ஒருபக்கம் நிசம் ஒருபக்கம்னு என்னைய இரண்டா சாமி பிரிச்சு கொடும படுத்துற மாதிரு இருக்கு. எதுக்கு இப்படி பொய்யா வாழணும் பேசாம எதையாவது குடிச்சிட்டு செத்து போய்ரலாம்னு கூட இருக்கும். ஆனா இந்த மனுஷன் என்ன தப்பு செஞ்சுதுன்னு என் புருஷனுக்காக வாழுறேன்.”

    “ஏய் என்னடி இது காலம்னு ஒன்னு இருக்கு கன்டிப்பா அது நம்மை மாத்திடும். நீ வீனாப்போட்டு மனச கொளப்பிக்காத… நம்ம பொம்பள சென்மமே அடுத்தவளுங்களுக்காக வாழ்றதுக்குதானே..புருஷனையும் ஆத்தா வீட்டையும் நினைச்சு… அவன மறக்க முடியலன்னாலும் அவனோட நினைப்பை குறைச்சுக்கோடி….”

    “முடியும்னு தோனல.. ஆனா விடுறதுக்கு முடிவெடுத்த மாதிரி மனச கொண்ணுக்கவேண்டியதுதான். அவன எப்படியாவது என்னோட வாழ்க்கைல திரும்ப ஒருதடவை பரர்க்கனும்… பார்த்து உன் நினைப்ப என்னால என்னோட உசருல இருந்து பிரிக்கவே முடியலன்னு அவன்கிட்ட சொல்லி கதறி அழனும்னு தோனுதுடி.. ஊருக்கு ஏதும் வந்தானாடி. எப்படி இருக்கிறான்னு ஏதாச்சும் விஷயம் உனக்கு தெரியுமா…”

    “வந்தாண்டி.. வந்து இந்த ஊர்ல இருந்த சொத்த எல்லாம் அவனை வளரத்த பெரியப்பா பேருக்கே எழுதுக்கொடுத்துட்டான். ஊர்ல அவனோட சொந்தக்காரங்கெல்லாம் யோசிச்சு செய்ப்பான்னு சொன்னாங்க. என்னை பெரியப்பா குறையில்லாம புள்ளையாத்தான் வளர்த்தார். மாடசாமியை நான் என்னுடை சொந்த அண்ணனாத்தான் பார்க்கிறேன் . இதப்பத்தி வேற யாரும் பேசவேண்டாமனு சொல்லிட்டான்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு. சிங்கப்பூர்ல இப்ப வேலை பார்க்கிறானாம். கல்யாணம் இங்கேயே முடிச்சுக்கிலாம்னு அவனோட பெரியப்பா மூலம் பேசிப்பார்த்தாங்க. அவன் ஒரேடியா வேண்டாம்னு சொல்லிட்டானாம். அவனுக்கு மனசுக்கு பிடிச்சவங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டானாம்” என்றாள் தோழி

    “இப்படித்தான் தீர்மானமானிக்கிற பாதையிலதான் மனசு போகணும். மனசு பாதையை தேடக்கூடாதுன்னு எப்பவுமே அவன் சொல்லுவான்….” என்றாள்.

    “என்னடா இப்ப ஜென்னியோட அடிக்கடி உன்ன பார்க்கிறேன்” என்று புன்னகையுடன் கேட்ட நண்பனின் பக்கமாக திரும்பி பார்த்தான்.

    “ஜென்னிக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய எண்ணங்களும் விருப்பங்களும் நேர்பாதையில் பயணிப்பதில் எங்களுக்கே வியப்பாகத்தான் உள்ளது. வாழ்க்கையைத்தேடி நாம் ஓடுவதாகவும், அதுவே விரும்பி நம்மை நோக்கி வருவதுவுமான சுற்றுப் பயணத்தில் இது இரண்டாவதாக எனக்கு படுகிறது. என்னை சுற்றி வரும் இந்த வாழ்க்கையில் ஜென்னியோடு பயணித்தால் சுகமாக இருக்கும் என்பதாக தோன்றுகிறது. கடக்கும் எல்லா கணங்களையும் இருவருமாக சேர்ந்து கடக்க விரும்புகிறோம். அவளுடன் இருக்கும்பொழுது இவ்வுலகம் எனக்கு இன்னும் கொஞ்சம் அழகில் மெருகேறி மின்னுவதாக தோன்றுகிறது. ” என்றான்

    “ஜென்னியோட ப்ராஜக்ட் முடியப்போகுதே. அவள் விசாவை எக்ஸ்டென்ட் பண்ண போகிறாளா”

    “நாங்கள் இருவரும் இங்கிலாந்திலே குடியேறிவிடலாம் என்று தீர்மானித்துள்ளோம். அனேகமாக இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் இந்த ப்ராஜக்ட் முடிந்து அவள் திரும்ப இங்கிலாந்து செல்லுவதற்கு முன் எங்கள் திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் சேர்ந்தே அங்கு போய் என்னுடைய விசாவை மாற்றி கொள்ளலாம் என்றுள்ளோம்.”

    “ஜென்னியின் வீட்டில் பேசியாகிவிட்டதா…” நணபனின் கேள்விக்கு

    “சரியான தோழி என்பதாகவே மனத்தில் இருத்தியிருந்த ஜென்னியை, வாழ்க்கையும் ஜென்னியுடனே என்று நான் தீர்மானித்த கணம். அவளுடைய குடும்பத்தை சந்தித்தபின்தான் என்றால் அது ஒன்றும் மிகையில்லை. அப்பா அம்மா இருவருமாக இங்கு வந்திருந்த பொழுது அவள் என்னையும் அவள் வீட்டிற்கு அழைத்திருந்தாள். அறிமுகமற்றவன் எனபதாக ஒரு கணம் கூட நான் உணரவில்லை அவர்களுடன் இருந்தபொழுது. எது செய்தாலும், எங்கு செல்ல முடிவெடுத்தாலும் ,எது பேச ஆரம்பித்தாலும் , எல்லோருக்கும் அது பிடித்தமானதாக இருக்கிறதா அல்லது எல்லோரும் அந்த மனநிலைக்கு மாறுவதற்கு உகந்ததான முடிவா என்று நன்கு ஆராய்ந்தபிறகே ஆரம்பிக்கிறார்கள். உடன் வருபவர்களே முக்கியம் என்பதாக யாருக்கேனும் உடன்படாத மனநிலை ஏற்பட்டால் அத்தனையும் கலைத்து வீடு திரும்ப எப்பொழுதும் தயார் நிலையலே அவர்களது செயலோ பயணமோ அமைகிறது. எதற்காக இப்படி என்று ஆச்சரியத்துடன் நான் கேட்டால் . என் அப்பாவின் எண்ணம் உடன் வாழும் மனிதனின் சந்தோஷத்திற்கு பின்தான் உலகம் என்பது என்றாள். அற்புதமான அந்த குடும்பத்து உறுப்பினர் என்பதில் நான் பெருமையாக உணர்கிறேன்” பேசி முடிக்கும்பொழுது பெருமிதம் கலந்த புன்னகை அவன் முகத்தில் வழ்ந்தது

    “சந்தோஷம்… ஊரில் யாருக்காவது தெரியப்படுத்த வேண்டுமெனில் தெரியப்படுத்து. இங்கு செய்யப்படவேண்டிய ஏற்பாட்டுக்கு நான் பொறுப்பு” புன்னகையுடன் நண்பன் கூற

    “ஊருக்கு நான் எப்பொழுதும் ஒரு காட்சி பொருளாகவே இருக்கிறேன். பெற்றோர்களின் இழப்பு, பெரியப்பாவின் வளர்ப்பு, போராட்டமான வாழ்க்கை , இப்பொழுதோ சுகமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு வேலைக்காரன். எதிலும் அவர்களின் இருப்பு பார்வையாளர்கள் என்பதாகவே எனக்கு தோன்றும் . ஆகையால் அவர்களைப்பற்றி பெரியதாக எனக்கொன்றும் கவலையில்லை. பெரியப்பாவிடம் மட்டும் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் கடந்தமுறை நான் ஊருக்கு செல்லும்போதே அவர் தளரந்திருந்தார். அதனால் இப்பொழுது நான் அனுப்பும் பணத்தில் அவருக்கென்றும் மருத்துவ செலவுக்கென்றும் தனித்தனியாக அனுப்புகிறேன். ஆகையால் அவராலும் வரமுடியாது. பெரியப்பா தவிர வீட்டில் என்னுடைய வளர்ச்சியல் பிடித்தவர்களும் இல்லை, வெறுத்தவர்களும் இல்லை. அவர்களுக்கு நான் அவர்கள் ஊரில் வாழ்ந்த ஒரு ஊர்க்காரன்” என்றான்

    “உன்னை தேடுபவர்கள் என்று யாருமே ஊரில் இல்லையா…” நணபன் மறுபடியுமாக கேட்க

    “அப்படி தேடுபவர்கள் யாரும் ஊரிலில்லை. எனக்கென்று இருந்த சொத்துகளையும் நான் பெரியப்பா பேருக்கு மாற்றி விட்டதில் என்னுடைய பெரியப்பா வீட்டில் அனைவருக்குமே சந்தோசம் . என்னை வளர்த்ததற்கு என்னால் அவர்களுக்கு இப்படியாக கைமாறு செய்யமுடிந்ததில் எனக்கும் சந்தோசம். வாழ்க்கை என்னும் இந்த நதிமூலத்தில் கடந்து வந்த பாதைகளை விட சேரும் கடல்தான் முக்கியம் என்று நான் நம்புகிறேன். பதித்து கடந்த தடங்களை திரும்பி பார்க்க எனக்கு எப்பொழுதுமே விருப்பமாய் இருப்பதில்லை. எனக்கு எதுவும் இழப்பென்று தோன்றவில்லை . அடுத்த முயற்சிக்கான உந்து சக்தியாகத்தான் என்னுடைய முந்தைய தோல்விகள் அமைவதாகவே எனக்கு எப்பொழுதும் தோன்றும்..”

    “டேய்… வான்மதி ஞாபகம் இல்லையா.. மறைக்கிறாயா…” லேசான கோபம் கலந்து வேகத்துடன் நணபன் கேட்க..

    “வான்மதி……” நீளபெருமுச்சு விட்டபடி பெயரை மெதுவாக உச்சரித்த அவன்

    “அவள் ஞாபங்களின் உயிர்ப்புகளை நான் மறக்கவோ , மறுக்கவோ அவசியம் இல்லை. அது அதுவாகவே என்னுள் கலந்திருக்கட்டும” அவனுடைய கண்களில் கண்ணீர் மெல்லிய திரையிட்டு அவன் விழி மறைத்தது.

    பட உதவி: http://www.123rf.com/

    Share
  • காதல் நாற்பது (6)

    தனித்த வாழ்வு வேண்டாம்!

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    jay

    என்னைவிட்டு விலகிச் செல்
    என்றாலும்
    உன் நிழலில்தான்
    நிற்க வேண்டும் என்று
    உணர்வு வரும் எனக்கு!

    என் முன்வாசலில் தனித்து நின்று
    ஏகாந்தியாய்
    இருக்க விருப்பமில்லை!
    ஆணை இடுவேன்,
    ஆத்மா நற்பயன் அடைய!

    சூரிய வெளிச்சத்தில் பிறருக்கு நான்
    கை அசைக்கப் போவதில்லை
    மௌனமாய்!

    என் உள்ளங்கை தன்னை
    உன்கரம் தொடுவதால் உண்டாகும்
    இன்ப உணர்வை
    இழந்திட மனமில்லை!

    உன் நெஞ்சு என்னிதயமுடன்
    பின்னிக் கொண்டு
    இரட்டைத் துடிப்பு எழும்போது
    பரந்த புவித் துயர்கள்
    பிரிக்க முனையும்
    இருவரையும்!

    திராட்சையின் சுவைதனை ஒயின்
    பானமும் தருவது போல்
    காணும் என் கனவிலும்,
    புரியும் என் பணியிலும்
    உருவாய் இருப்பது நீயேதான்!
    கடவுள்மீது முறையிட்டுத்
    தொடரும் வழக்கில் அவர்
    காதில் விழுவது உன் பெயரே!

    கடவுள் எனை நோக்கின்
    காண்பது,
    கண்ணுக் குள்ளிருக்கும்,
    இருவரின்
    கண்ணீர்த் துளிகள் !

    ********************

    Poem -6

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    http://members.aol.com/ericblomqu/brownine.htm

    Go from me. Yet I feel that I shall stand
    Hence forward in thy shadow. Nevermore
    Alone upon the threshold of my door
    Of individual life, I shall command
    The uses of my soul, nor lift my hand
    Serenely in the sunshine as before,
    Without the sense of that which I forbore–
    Thy touch upon the palm. The widest land
    Doom takes to part us, leaves thy heart in mine
    With pulses that beat double. What I do
    And what I dream include thee, as the wine
    Must taste of its own grapes. And when I sue
    God for myself, He hears that name of thine,
    And sees within my eyes the tears of two.

    ********************

     

    Share
  • தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை….

    –கவிஞர் காவிரி மைந்தன்

     

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை….

     

     

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்சுதந்திரம் என்பது ஒரு மந்திரச் சொல்லாய் முழங்கிய காலம் இந்தியாவில் உண்டு! வந்தே மாதரம் என்றும் மக்கள் தெருவெங்கும் உரக்கக்குரல் கொடுத்த உரிமைக்குரல்கள் கண்ட விடியல்தான் நாம் பெற்ற சுதந்திரம்!

    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் கவிஞர் முத்துலிங்கம் கற்பனையில் உருவானது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அது கவிஞரின் உள்ளத்தில், அடிமனதில், குடிகொண்ட உணர்வுகளின் பிரதிபலிப்பாய் காணலாம்!

    புரட்சிப்பாடலில் இடையே பூத்திருக்கும் கற்பனையைப் பாருங்கள்! கவித்துவச் சிந்தனையின் செழுமை முழுமைபெற்ற கவிஞருக்கு வாய்க்கும் அரிய வரிகளிவை!
    தென்பாங்குத் தென்றல் பண்பாடும்நாட்டில்..

    அடக்கு முறைக்கு அடங்க மறுத்த புரட்சியாளனாய்.. கதையின் நாயகன் புறப்பட்டு வருகையில்.. கண்ணில்படும் அவலங்கள் அவன் கருத்தில் நிறைகின்றன சொல்லும் பொருளும் ஒன்றையொன்று இங்கே ஆள்கின்றன. அதனால் கவிதை வாழ்கிறது!

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் அளித்த தேவகானங்கள் – பல்விதமானவை என்பதற்கு இப்பாடலும் தக்கதோர் சாட்சியாகும்.
    டி.எம்.எஸ். குரலில் எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களில் இதுவும் ஒன்று!
    இதில் புலவர் முத்துலிங்கம் பங்களிப்பு கணிசமானது! அதுவே கவிதையானது!!

    http://youtu.be/bMKijer7fZg
    காணொளி: -http://youtu.be/bMKijer7fZg

    திரைப்படம் – மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன் – பி.சுசீலா
    இசையமைப்பு – மெல்லிசைமன்னர் எம்.எஸ்.வி.
    பாடலாசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்
    பாடல்: தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
    ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
    பொதுவுடைமைச் சமுதாய் மலர்ந்திட வேண்டும்

    கண்கவரும் கலைகளெல்லாம் வளர்ந்தது இங்கே
    களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
    நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் எங்கே
    நிமிர்ந்தெழுந்தால் தடைகளெல்லாம் உடைந்திடும் இங்கே

    வீரமுண்டு வெற்றியுண்டு.. விளையாடும்களம் இங்கே உண்டு
    வா வா என் தோழா..
    பூனைகள் இனம்போல பதுங்குதல் இழிவாகும்
    புலியினம் நீயெனில் பொருதிட வாராய்.. (வீரமுண்டு)

    தென்பாங்குத் தென்றல் பண்பாடும் நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
    நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
    நெஞ்சங்கள் துடித்தேங்கலாமோ வா. வா.. என் தோழா..

    தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
    தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
    ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

     

     

    Share
  • அன்னை தெரேஸாவின் பொன்மொழிகள்!

    -தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

     

    annai Therasa for jayabarathan (1910-1997)

    இரத்த உறவில் நான் அல்பேனிய மாது
     குடி உரிமையில் நான் இந்திய மாது
     நம்பிக்கையில் கத்தோலியச் சேவைக் கன்னி. 
      (அன்னை தெரேஸா)

     

    என்றும் தன்னலம் பேணி,
    ஏது காரண மின்றி
    எவ்வித நியாயமு மின்றித்
    தாறுமாறாய்
    ஒவ்வாது நடப்பர் மாந்தர்!
    ஆயினும்
    மன்னித்து விடுக மாந்தரை!

    அருட்பணி செய்துநீ வருகையில்,
    சுயநலம் பேணி முடிவில்
    சுருட்டப் போவதாய்
    உன்மேல்
    குற்றம் சுமத்துவர் மாந்தர்!
    ஆயினும்
    அருட்பணி ஒன்றே மேற்கொள்!

     சாதனை புரிந்து
    வெற்றிநீ பெற்றால்,
    போலித் தோழர் சிலர் ஒட்டுவார்!
    பொய்வேடப்
    பகைவர் சிலர் கிட்டுவார்!
    ஆயினும்
    வெற்றியை நோக்கியே முற்படு!

    நேர்மையாய் நடந்து
    வெளிப்படையாய்ப் பேசி
    வேலை செய்யும் உன்னை
    மானிடர்
    ஏமாற்றி விடுவர்!
    ஆயினும்
    நேர்மையாய் நட!
    வெளிப்படையாய்ப் பேசு!

    பல்லாண்டு கட்டிய உந்தன்
    மாளிகையை
    யாராவ தொருவர்
    துண்டாக் கிடுவர் ஓர் இரவில்!
    ஆயினும்
    உண்டாக்கிவிடு மீண்டும்
    உன்னருள் மாளிகை
    தன்னை!

    பணியில் மூழ்கிஉன் நெஞ்சில்
    அமைதிநீ காணும் போது,
    ஆனந்தம் மேவும் போது
    உன் மீது
    பொறாமைப் படுவர் மாந்தர்!
    ஆயினும்
    ஆனந்தம் அடைவாய் உன்
    அருட்பணியில்!

    இன்று புரிந்த உனது
    நல்வினைப் பணிகளை எல்லாம்
    அடுத்த
    நாளே மறப்பர் மாந்தர்!
    ஆயினும்
    நல்வினைப் பணியே மேற்கொள்!

    உன் முழுத்திறப் பணியைத் தினமும்
    உலகுக் களித்த போதும்
    இன்னும் தேவைப் பணிக்கு
    இருந்தே தீரும் புவிக்கு!
    ஆயினும்
    உன்னால் இயன்ற அருட்பணியை
    முழுத் திறமுடன்
    உலகுக் களிப்பாய் நீயே!

    **************

    1.     http://en.wikipedia.org/wiki/Mother_Teresa [May 10, 2014]

    2.     http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-bio.html [September 5, 1997]

    3.     http://www.biography.com/people/mother-teresa-9504160#awesm=~oEQ5Ymt76MENH7

    4.     http://www.vatican.va/news_services/liturgy/saints/ns_lit_doc_20031019_madre-teresa_en.html

    **************

    Share
  • இயற்கை எனும் ஆசான்

     
    கோபாலன்

    images (2)

    விரிந்து விளங்கும் வானம் போல் பரந்த மனம் கொள்ள வேண்டும்

    உயர்ந்து நிற்கும் மலை போல உயரிய லட்சியத்துடன் வாழ வேண்டும்

    ஓயாத கடல் அலைகள் போல் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் உழைக்க வேண்டும்

    கண்ணுக்குத் தெரியாது உயிரூட்டும் காற்று போல் விளம்பரமின்றி உதவ வேண்டும்

    நெருங்க முடியாத நெருப்பு போல் தீயவை அணுகாது தூய்மையாய் வாழவேண்டும்

    உலகைத் தாங்கி நிற்கும் நிலம் போல் பொறுமையுடன் பொறுப்புகளைச் சுமக்கவேண்டும்

    மலையிலே பிறந்து நிலத்திலே விரைந்து அமைதியாய் கடலில் கலக்கும் நதி போல்

    பிறப்பு முதல் மூப்பு வரை ஆடி ஓடி வாழ்ந்து இறுதியில் அமைதியாய் இறைவனடி நாட

                                                                                                வேண்டும்.

     

     

    Share