Month: June 2018

  • சங்க இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்

     முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்,

    பேராசிரியர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம், 695 581.
    முன்னுரை

    சங்க இலக்கியம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினையும் எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாகவும் அழியாச்சான்றாகவும் விளங்குகின்றது. பழந்தமிழர் வாழ்வில் இடம் பெற்ற காதல் , மறம், புகழ் ஆகிய மூன்றும் ஆராயப்பட்ட அளவிற்கு அறிவியல் செய்திகள் ஆராயப்படவில்லை. அவை அறிவியல்  பூர்வமகாக ஆரயப்பட்டால் பழந்தமிழரின் ஆழமான அறிவியல் அறிவை அறிந்து கொள்ள  முடியும்.

    சங்க இலக்கியத்தில் தாவரங்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர் .பி.எல்.சாமி ‘’சங்க இலக்கியங்களில் செடி கொடி மரங்கள்’’ பற்றிப் பல செய்திகள் விளக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் செடி நூலார் (Botanist)     கண்டுபிடித்தவையோடு  ஒத்திருக்கின்றன என்ற கூறுவார்.

    தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம் ,வானவியல் ,சோதிடம், கணிதம் போன்ற கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது. மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தேல்ஸ் (கிமு 639-544), அனாக்ஸி மாண்டர் (611-547) ஷீனோபான்ஸ் (கிமு 576-480) எம்படோகில்ஸ் (கிமு 504-433) அரிஸ்டாட்டில் ( கிமு 384-322) போன்றோர் வெளியிடாத பல  அறிவியல் கருத்துக்களைத் தனது இலக்கண நூலில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அவற்றை உயிரியல் சிந்தனைகள், மருத்துவச்சிந்தனைகள், சார்பியல் கோட்பாட்டுச்சிந்தனைகள், தகவல் தொடர்பியல் சிந்தனைகள், வானவியல் சிந்தனைகள் எனப் பிரிக்கலாம். உயிரினப்பாகுபாட்டை உலகில் முதன்முதலில்  தொல்காப்பியர் பின்வருமாறு விளக்குகிறார்.

    ‘’ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

    இரண்டறிவதுவே அதனொடு நாவே

    மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

    ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

    ஆறறி வதுவே அவற்றொடு மனனே’’

    என்ற நூற்பாவால் (தொல்.., பொருள், மரபு, நூ.26-27 ) விளக்குகின்றார். உயிர்களின் பரிணாம வளர்ச்சியை உயிர்களின் உடம்பினோடும் அதனோடு இணைந்த மெய்,வாய், மூக்கு,கண்,செவி என்னும் ஐம்பொறிகளும், மனமும் ஆகிய ஆறுவகை வாயில்களையும்  பெற்று அறிவினால் சிறந்து விளங்கும் இயல்பினை அறிவியல் நோக்கில் குறிப்பிட்டுள்ள தொல்காப்பியரின் திறம் போற்றத்தக்கது.

    ‘’செஞ்ஞாயிற்றுச் செலவும்

    அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

    பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

    வளி திரிதரு திசையும்

    வறிது நிலைஇய காயமும் என்றிவை

    சென்றளந்து அறிந்தோர்போல என்றும்

    இனைத்து என்போரு முளரே  (புறம் 30.1-7)

    செஞ்ஞாயிற்றின் வீதியும் அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமும் காற்றியங்கும் திசையில் ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் ஆகிய இவற்றை அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையவென்று எடுத்துக்கூறும் கல்விடையோரும் இருந்தனர் என்ற அறிவியல் குறிப்பினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

    சூரியக்குடும்பம்

    சூரியக்குடும்பத்தின் ஒரு கிரகத்திலிருந்து வந்தவர்கள் தான் மக்கள் என்ற வானியல் அறிஞர்களின் கருத்திற்கு ஏற்றவாறு சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியும் பின்வரும் பாடலில் கூறுகிறது.

    ‘’சென்ற காலமும் வரூஉம் அமயமும்

    இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து

    வானமும் நிலனும் தாம் முழு துணரும்

    சான்ற கொள்கைச்சாயா யாக்கை

    ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்’’( மதுரை 477-481 )

    பழங்காலத்தில் வாழ்ந்து வந்த சைனர் வானம் ஏறுதல், கடலில் நடத்தல் போன்ற அறிவியல் செயல்களைச் செய்வதில் திறம் பெற்றிருந்தனர் என்பதை குறுந்தொகை 130 –வது பாடல் விளக்குகிறது.

    ‘’நிலம் தொட்டுப் புகா அர்வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்’’ என்ற பாடலில் தோழி தலைவியிடம் உன் தலைவன் நிலத்தில் புக மாட்டார் வானத்தில் ஏறார் கடலின் மீது நடவார் கவலைப்படாதே என்ற தேற்றுவதாக  அறிவியல் செய்தி வருகின்றது.

    வான வெளிப் பயணம் 

    வான வெளிப் பயணம் முன்னோர்கள் அறிந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் விமானிகளே இல்லாத விமானங்களை வானவெளியில் செலுத்தமுடியும் என்ற அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது இக்கருத்தினை

    ‘’ வலவன் ஏவா வானவூர்தி

    எய்துப………….(புறம் பா 27)

    என்ற பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். சிறந்த அரசர்கள் விண்ணில் பாகனால் செலுத்தப்படாத தானே இயங்குகின்ற திறன் வாய்ந்த வானவூர்தியில் சென்றனர்எ ன்ற குறிப்பின் வழி தமிழர்கள் விமான ஓட்டும் கலையில் வல்லவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

    கணிதவியல் சிந்தனைகள்

    வாழ்வியலோடு ஒட்டியதாகும் கணிதம். அதன் உதவியின்றி எதுவும் நடைபெறாது. இதை உணர்ந்தே

    ‘’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

    கண்ணென்ப வாழும் உயிர்க்கு ( குறள் 392)

    என்று வள்ளுவரும் கூறினார். ஔவையும்

    ‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்

    மைஇல் கமலமும் வெள்ளமும் (பரி 2.13-14) இப்பாடலில் எண் கணிதம் கூறப்பட்டுள்ளது.

    கணக்கற்ற பல ஊழிகள் பல கோடி ஆண்டு காலத்தைக் குறிக்கின்றது. இதில் ஆம்பல் என்பது பழந்தமிழர் கணக்கிட்ட ஆயிரம் கோடி என்ற  பேரியல் எண் வெள்ளம் என்பது கோடி கோடியைக் குறிக்கின்றது. கோடியை விடவும் பெரிய எண்களுக்கும் தமிழில் பெயர் இருப்பது தமிழரின் தனிச்சிறப்பை உணர்த்தும் குறிப்பாகும்.

    மருத்துவச் சிந்தனைகள்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நலமுடன் வாழ முடியும். நீர்வேட்கைத் தீர்க்கும் பொருட்டு அக்காலத்தில் மூவகை மருந்தாக நெல்லிமரம் பயன்பட்டது. நெடுந்தூரம் வந்த நீர்வேட்கை மிக்க புதியவர்கள் உயிரைப் போகாது தடுக்க நெல்லிக்காயை சுவைத்தனர். நீர்ச்சத்து நிறைந்த தாவரங்களுள் நெல்லிமரம் ஒன்றாகும்.

    -கோட்கரம் நீந்தி

    நெட்ஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்

    செல்லுயிர் நிறுத்த சிவைக்காய் நெல்லி (புறம் 271 5-7)

    இந்நெல்லிக்கனியை நீண்ட நாள் உயிர்வாழும் பொருட்டு ஒளவைக்கு அதியமான் வழங்கினான் (புறம் 97)

    மண்ணறிவியல் சிந்தனைகள்

    பழந்தமிழர்கள் மண்ணின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். நீர் வற்றாத வைகை ஆற்றில் காணப்படும் மணல் செம்பழுப்பு அல்லது கருப்பாக இருக்கும் . இம்மணல் பயிர் செய்வதற்கு ஏற்றதாக இருந்ததை

    வரும்புனல் வையை வார்மணல் அகன்றுறைத்

    திருமருதோங்கிய விரிமலர்க்   காலின் ( அகம் 36.9-10)

    இங்கு ஆற்று நீர் கொண்டு வந்த வெண் மணலின் தன்மையை அறிய முடிகிறது.

    புவி வெப்பமடைதலும் பருவ மழை மாறுதலும்

    புவி வெப்ப மாற்றத்தால் பாலை நிலம் பாதிக்கப்படுவதை பின்வருமாறு புறநானூறு பாடல் விளக்குகிறது.

    கதிர் கையாக வாங்கி ஞாயிறு

    பைதரப் பெறூதலின் பயங்கரந்து மாறி

    விடிவாயப்பட்ட வியன்கண் மாநிலம் (அகம் 164.!-3)

    என்ற பாடல் அடிகள் ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைக் கவர்ந்த்தையும் பசுமையற்ற நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதையும் இலைகள் வாடிப்போய் உதிர்ந்ததையும் விளக்குகிறது.

    நீர்க்கடிகாரம்

    நல்ல காரியம் செய்வதற்கு முன் நேரத்தைப் பார்ப்பது உண்டு. சங்க காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன் நேரத்தைப் பார்ப்பதற்காக நாளிகைக் கணக்கர்கள் கோவில்களிலுள்ள கிடாரமாகிய நீர்க்கடிகாரத்தைக் கண்டு அதிலுள்ள நீரின் அளவைக் கொண்டு நாளிகையைக் கணக்கிட்டுக் கூறினர் என்பதை

    ‘’எறிநீர் வையகம் வெலீஇய செல்போய் நின்

    குறு நீர்க்கன்னல் இனைத்து என்று இசைப்ப’’- (முல்லைப்பாட்டு 57-58)

    இதே கருத்தை மாங்குடி மருதநாரும் குறிப்பிடுகின்றார்.

    அக்கால மகளிர் நேரத்தை வட்டிலைக்கொண்டுதான் கணக்கிட்டனர்.

    கதிரவனைக் கொண்டு அல்லது.

    குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது

    கதிர் மருங்கறியா தஞ்சு வரப்பா அய்  (அகம் 43;6,7)

    தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் தலைவி தன்னிலையில் துயிலாமல் இருப்பவர்கள் யார் என்று எண்ணும் போது நாளிகை வட்டில் அவள் கண்முன் தோன்றுகிறது. இரவெல்லாம் துயிலாமல் நாளிகை வட்டிலையே கூர்ந்து நோக்கியிருப்பது போல நானும் தலைவன் வரவையே எதிர்பார்த்து இருக்கிறேன் என்பதை குறு 261 ஆம் பாடல் விளக்குகிறது.

    ‘’ அஞ்சு வருபொழுதினானும் என்கண்

    துஞ்சா வாழி தோழி காவலர்

    கணக்கு ஆய் வகையின் வருந்தி என

    நெஞ்சு புண்ணுற்ற விழுமந்தானே’’ (குறு 261)

    நியூட்டனின் விதி

                                  ‘’வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

    ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்

    வல்வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்’’ (புறம் 152)

    எய்த வில்லானது யானை , புலி, புள்ளிமான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்திய வில்லின் வேகம் குறைந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தாக்கி விசை நிலைப் பெற்றதாகக் கூறுமிடத்து நீயூட்டனின் விதி உணர்த்தப்படுகிறது.

    ஆற்றின் வழியாக மிதந்து செல்லும் தெப்பமானது நீரின் விசையை மட்டும் பெற்றுச் செல்கிறது. இந்தத் தெப்பத்தினை வேறு எந்த விசையும் தாக்குவதில்லை. அதைப்போல வாழ்க்கை ஒரேச் சீராகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட புறப்பாடலும் நீயூட்டனின் இரண்டாவது விதிக்குப் பொருந்தியுள்ளது.

    ‘’பேர்யாற்று

    நீர்வழிப்படுஉம் புணைபோல் ஆருயிர்

    முறைவழிப்படுஉம் என்பதும் ‘’ (புறம் 192 .8-10)

    விண்மீன்கள் பற்றிய அறிவு

    விண்மீன்கள் பற்றி அக்கால மக்களுக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. வருணனைப் பாங்கில் விண்மீன்கள் தோன்றுதலை ‘’ வெள்ளி முளைத்தல் ‘’ என்றே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதை அறிகிறோம்.

    ‘’ வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய ‘’ (பொரு – 72)

    கண்ணுக்கு அழகுபட விளங்குவதன் காரணமாக விண்மீன்கள் தோன்றுவதை பூத்தல் என்று குறிப்பதும் இலக்கிய வழக்காக உள்ளது.

    ‘’ மீன் பூத்தன்ன உருவ ‘’ ( புறம் 21;4)

    ‘’வான்மீன் பல பூப்ப’’ ( புறம் 129;7)

    விண்மீன்கள் அன்றன்று புதிதாக முளைப்பனவல்ல கதிரவனால் மறைக்கப்பட்டே பகலில் தோன்றாதுள்ளன என்ற அறிவியல் உண்மை அக்காலத்து மக்களுக்கு விளங்காமல் இல்லை.

    விண்மீன்கள் என்பனவும்; நிலவும் சூரியனும் போல வானில் சுடர் விட்டுப் பிரகாசிப்பனவே ஆயினும் விண்மீன்களின் பிரகாசம் வேறுபடுகிறது. விட்டு விட்டுப் பிரகாசிப்பன அவை. அதனை காற்றில் அலைந்து அலைந்து எரியும் தீப்பந்தங்களுக்கு இலக்கியங்கள் ஒப்பிட்டுள்ளது பொருத்தமானதாகும்.இது பற்றியே இலக்கியங்கள் விண்மீன்கள் ஒளிவிடுவதை- இமைத்தல் என்றும் குறிக்கின்றன. ‘’ வானமின்னின் வயின் வயின் இமைக்கும்’’ (குறு 150; 2)

    மின்னலிலிருந்து வேறுபடுத்துவதை அதனை மீன் என்றனர். மீன் பூத்தன்ன தோன்றலர் ( திரு 169)

    ‘’சிறுமீன் புரையும் கற்பின் ‘’(பொரு 303)

    ‘’கைம்மீன் புகையிலும் ‘’(புற 117 ;1)

    ‘’வடமீன் புரையும் கற்பின் ‘’ (புற 122 ;8)

    ‘’மீன்றிகழ் விசும்பின் ‘’ (புற 25;1)

    பழந்தமிழ் இலக்கியங்களில் மீன் என்பது வானத்து மீனையும் வையத்துக் கயங்களின்  மீனையும் குறித்து வருகின்ற இருபொருள் காரணமாக அழகிய வருணனைகள் விளங்குகின்றன. மின்னுகின்ற காரணத்தால் மீன் என்று விண்மீன் குறிக்கப்பட்டதோடன்றி வெள்ளொளி அதன் ஒளி ஆதலின் ஒளிநிறத்தை வைத்து வெள்ளி என்றும் வழங்கப்பட்டது.

    ’’வெள்ளிஏர்தர ‘’(புறம்  398;1)

    ‘’வெள்ளி ஓடினும் ‘’ (புறம்  117;2)

    ‘’இலங்கு கதிர் வெள்ளி’’( புறம்  35;7)

    வானத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் போன்ற கோள்களும் நட்சத்திரக் கூட்டங்களும் இவற்றுக்கெல்லாம் அப்பால் அழகிய மண்தளங்களும் உண்டு என்பது மாங்குடி மருதனாரின் அறிவியல் சிந்தனை

    ‘’ அங்கண்மால் விசும்பு புகையவளி போழ்ந்து (மதுரை 384)

    பூமியிலிருந்து 200 மைல்களுக்கு மேலே காற்று மண்டலம் கிடையாது என்பதை புறப்பாடல் விளக்குகிறது ‘’வழியிடை வழங்கா வானஞ்சூடிய’’

    சங்கப்புலவரின் பாடல்கலெல்லாம் அவர்களின் பட்டறிவே என்பதும் உள்ளதை உள்ளவாறே விளக்குவதும் அவர்களின் அறிவியல் சிந்தனையாகும். ஊர்வன. பறப்பன, நீர்வாழ்வன தாவர விலங்கு பற்றிய அறிவியல் சிந்தனைகளை உணர முடிகிறது.

    உலகம் சுழல்கின்ற சுழற்சியை உலகம் தன் சுழற்சியினால் நல்ல இசையை உண்டாக்கும் தன்மை படைத்தது என்பதை                             ‘’மலையும் சோலையும் மாபுகழ் கானமும் தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப’’ என்கிறது மலைபடுகடாம் (170-171)

    வானம் அளவிட முடியாததாகவும் காற்று நுழைந்து செல்லாத காற்றற்ற வெளியாகவும் விளங்குவதனை

    ‘’மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

    இயங்கிய இரு சுடர்

    கண்ணெனப் பெயரிய ‘’ என்ற புறப்பாடல் விளக்குகின்றது (365)

    நெம்புகோல், தராசு பற்றிய அறிவை புறம் 131 ஆம் பாடல் விளக்குகிறது. ஆய் என்ற வள்ளலை முடமோசியார் வட திசையில் மேரு மலைக்கு சமமாக ஆய் வள்ளலின் பெருங்குடி தென் திசையில் விளங்குவதால் தான் உலகம் ஒரு பக்கம் சரிந்து நிற்கிறது என்பதனை தராசு கோலுடன் உவமையாக விளக்குகிறார்.

    குறிஞ்சிப்பூ பற்றிய விளக்கம்

      குறிஞ்சி என்ற சொல்லின் விளக்கம் சங்கத்தொகை நூல்களில் 19 இடங்களில் இச்சொல் ஆளப்பட்டிருந்தாலும் இவற்றில் ஏழு இடங்உகளில் மட்டுமே குறிஞ்சி மலர் பற்றிய விளக்கம் இடம் பெறுவதாக பேராசிரியர் இர. குளோரியா சுந்தரமதி குறிப்பிடுகிறார்.

    ஒரு மலைத்தலைவனது நாட்டைச் சிறப்பித்துகூறும் ஒரு தலைவி

    ‘’கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு

    பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே ’(குறு .3 )’

    என்கிறாள்.

    குறிஞ்சிப்பூவின் தேனை மிகவும் அரியதாக கருதியதை இப்பாடல் வரிகள் சுட்டுகின்றன. குறிஞ்சித்தேன் பிறத் தேனை விடச் சிறப்புடையது. பல்லாயிரக்கணக்கில் பூப்பதாலும் தேனீக்கள் நிறையத் தேனைத்தொடுக்க வாய்ப்புண்டாகிறது.பொதுவாகத் தேன் கூடுகளில் பல வகைப்பூக்களின் தேன் காணப்படும் . ஆனால் குறிஞ்சிப்பூக்களின் தேனால் இழைக்கப்படும் கூட்டில்  பிற பூக்களின் தேன் கலப்பதில்லை ஏனெனில் குறிஞ்சி செடிப் பூக்க ஆரம்பித்தால் தேனீக்கள் குறிஞ்சித்தேனையே கூடுகளில் சேர்க்கின்றன. இத்தகைய தேனைத் தாவரவியல் அறிஞர்கள் தனிப்பூத் தேன்( Unifloral Honey ) என்று கூறுகின்றார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது ஆதலின் இதன் மலரில் சுரக்கும் தேன் அதாவது மலரின் செல்களில் உள்ளச் சாறு மிக முதிர்ந்து தேன் சுரப்பிகளின் வழியாக வெளிப்படுவது இனிதாக இருப்பதில் வியப்பில்லை.

    முடிவுரை 

    சங்க இலக்கிம் ஒரு கடல். கற்பவருக்குப் பல்துறை அறிவு இருந்தாலன்றி சங்க இலக்கியத்தின் முழுப்பொருளையும் அறிதல் சற்றுக் கடினமே. கருங்கோர் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருத்தேன் இழைக்கும் நாடன் என்ற ஒரு குறுந்தொகைப்பாடலை விளங்கிக் கொள்வதற்கே சில துறை அறிவுகள் வேண்டும்.அறிவியல் ஆய்வு முறையில் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து பொருளை வெளிக்கொணர்ந்தால் செம்மொழியின் செவ்வியல் இலக்கியங்களை உலகு உணர்ந்து பாராட்டும் என்பதில் ஐயமில்லை

     பார்வை நூல்கள்

    சங்க இலக்கியங்கள்

    தமிழியல் புது நோக்கு ; முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

    தமிழ்ப்புதுக்கவிதைகளில் அறிவியல் ; முனைவர் க.முருகேசன்

    அகநானூறு ஆய்வுக்கோவை ; குறிஞ்சிப்பதிப்பகம்

    நற்றினை ஆய்வுக்கோவை   : விழிச்சுடர் பதிப்பகம்

    `

    Share
  • பொருநராற்றுப்படையில் மெய்ப்பாடுகள்

    -கி. ரேவதி                                                              

    முன்னுரை

     தமிழில் இலக்கண இலக்கியப் படைப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத பிணைப்புகளாய் மெய்ப்பாடுகள் அமைந்துள்ளன. இலக்கணங்களுக்குச் சான்றுகளாய் இலக்கியங்களும், இலக்கியங்களின் இலக்கணங்களை கூறுபவையாக இலக்கணங்களும் அமைந்துள்ளன. இவ்வகையில் தொல்காப்பியம் என்பது இலக்கணம். ஆற்றுப்படை என்பது ஓர் இலக்கிய வகை. தொல்காப்பியத்தில் கூறப்படும் இலக்கணங்களில் ஒன்றான மெய்ப்பாடுகள் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படும். இவ்வகையில் பத்துப்பாட்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் பொருநராற்றுப்படையில் தொல்காப்பிய எண்வகை மெய்ப்பாடுகளைக் கோட்பாடாகக் கொண்டு அவற்றில் பொருத்தி பார்ப்பதே நோக்கமாகும்.

    தறுகண்ணால் ஏற்படும் பெருமிதம்:

    தறுகண் என்பது ஒருவர் வளர்த்துக் கொண்ட தனித் தகுதி (அல்லது) திறமையைக் குறிக்கும். ஒருவரின் தனித்திறனை, சிறப்பை எடுத்துக் கூறும்போது கூறுபவருக்கும், கேட்பவருக்கும் பெருமிதம் உண்டாகும். பொருநர் ஆற்றுப்படையில்,

    கோடியர் தலைவ கொண்டது அறிந
    அறியாமையின் நெறிதிரிந்து ஓராஅது
    ஆற்றுஎதிர் படுதலும் நோற்றதன் பயனே
    போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந!1     (பொருந.57-60)

    என்ற வரிகளில் கூத்தர்களுக்குத் தலைவனே! நீ மிடற்றுப் பாடலைப் பாடுதலில் வல்லமை உடையாய்! அந்த இருவகைப்பட்ட இசைக்கும் ஒப்பக் கூத்து ஆடவும் நீ வல்லாய்! பாட்டிசையும், யாழிசையும், கூத்தாட்டமும் தம்முள் ஒத்து இருக்கும் காட்சி மூவேந்தரும் ஒருங்கே இருக்கும் காட்சியை ஒத்த இன்பம் தருகின்றது.

    பிறர் தம் மனத்தில் கொண்ட கருத்தினைக் குறிப்பால் அறிய வல்லவனே! நீ வழி அறியாமையால் வேறு வழி போகாமல் இவ்வழியே வந்து என்னை இவ்வழியிடத்தே காண்பதும் நீ முற்பிறவியில் செய்த நலிவினையின் பயனே காண்பாயாக! புகழால் மேம்பட்டவனே! பிறர் புகழை அரசவையில் மேம்படுத்துபவனே! என்று பாணனின் தறுகண்ணைக் குறிப்பிட்டு நான் கூறுவதைக் கேட்பாயாக என்று பெருமித்தோடு உரைக்கிறான் பரிசில் பெற்ற பாணன்.

    புதுமையில் தோன்றும் மருட்கை

    கட்புலனாகும் எந்தப் பொருளுக்கும் கவர்ந்திழுக்கும் புதுமைப் பொலிவு உண்டு. ஆனால் அதன் நிலைப்புத் தன்மை நீடித்திருப்பது அரிது. எனவே புதுமைக்குத்தான் இளமைப் பொலிவு இருக்க முடியும். புதுமை பற்றி அறியும்போது அதன் விரிவு மேலும் பெரியதாய் விரிய விரிய அதுவே புதிதுபுதிதாய்ப் பொலிவதை அறிகின்ற பொழுது வியப்பு எழுகிறது; இதுவே புதுமையாகும்.

    இக்காலத்தில் கடவுளைக் காண்பதும், கொடை செய்வாரைக் (அரசன்) காண்பதும் புதுமையாகும். கொடையால் உயர்ந்த நிலையை அடைவதும் புதுமையாகும். இதுவரை அனுபவிக்காத செல்வ நுகர்ச்சியை அணுபவிக்கும்போது மனத்தில் நடப்பதெல்லாம் கனவோ என மருட்கையாகிய வியப்புத் தோன்றும். கரிகாலனின் உபசரிப்பால் பெரும் செல்வ நுகர்ச்சியை பெற்ற பொருநன்,

    ”………………………………………………………………காலைக்
    கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையும்
    கனவுஎன மருண்டஎன் நெஞ்சு ஏமாப்ப
    வல்அஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்ப
    கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட”2 (பொருந.96-100)

    என்ற பாடல் வரிகளில் கரிகாலனைக் கண்ட அன்றைய காலை என்னைக் கண்டவர் நேற்று வந்தவன் இவன் அல்லன் என்று மருண்டு கூறுதற்குக் காரணமான என் தோற்றப்பொலிவான நிலையினையும் கண்டேன். அன்று விடியலில் நிரம்ப உண்ட கள்ளின் மணம் என்னை விட்டு நீங்காதிருந்தமையால் வண்டுகள் இடையறாது என்னை மொய்த்து கொண்டிருந்தன.

    இப்பொலிவு கனவிற்கண்ட காட்சிதானோ என்று என் மனம் மருண்டது. என் பக்கத்தில் அரசனுடைய ஏவல் இளைஞர்கள் நின்றுகொண்டிந்தனர். அவர்கள் இது கனவு இல்லாமைக்குரிய காரணங்களை எடுத்துக்காட்டினர் என்று பரிசில் பெற்ற பொருநன் பரிசில் பெறாப் பொருநனிடம் தாம்பெற்ற விருந்தின் நுகர்ச்சியைக் கனவோ என்று வியப்பை அடைந்த நிலையை கூறுகின்றான்.

    உவகை மெய்ப்பாடு

    உவகையானது மனமகிழ்ச்சியை குறிக்கும். மனமகிழ்ச்சியே ஒருவனின் மன அழுத்தத்தைக் குறைத்து தன் கவலைகளை மறக்கடிக்கும் மருந்தாகும். இம்மகிழ்ச்சி ஒருவனின் வாழ்வில் இல்லையெனில் அவன் தன் வாழ்வின் பிடிமானத்தைவிட்டு மனத் தளர்ச்சி அடைவான். எனவே மகிழ்ச்சியே மனிதனை வாழ வைக்கும் ஆயுதமாகும். இவ்வுவகை செல்வ நுகர்ச்சி, ஐம்புல நுகர்ச்சி, காம நுகர்ச்சி, விளையாட்டு ஆகிய நான்கு சூழலில் தோன்றும்.

    செல்வ நுகர்ச்சியால் ஏற்படும் உவகை

    செல்வம் என்பது மனித வாழ்வின் தேவைகளில் ஒன்றாய் உள்ளது. செல்வத்தை நோக்கியே மக்கள் பயணிக்கின்றனர். செல்வம் அளவோடு இருந்தால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பர். இப்பழமொழி செல்வத்திற்கும் பொருந்தும். இதனைக் கருதியே அரசர்களும் செல்வத்தைக் கொடையாக வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். அவற்றைப் பெறும் கலைஞர்களும் பகிர்ந்துண்டு வஞ்சகம், குரோதம் முதலியவை இல்லாமல் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.

    செல்வத்தை கொடுப்பதால் ஏற்படும் உவகை எனில் பெறுபவரும் எய்தும் பேரின்பத்தை திருவள்ளுவர்,

    “இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து”3       (திருக்.1051)

    என்கிறார். இவ்வாறான மகிழ்ச்சியை ஆற்றுப்படைப் பாடல்வரிகளிலும் காணலாம். பொருநராற்றுப்படையில் பொருநனை உபசரிக்கும் கரிகால் பெருவளத்தான் கன்னிப் பெண்களிடம் கள்ளினைக் கொடுத்து அருந்தும்படிச் செய்தான். அப்பெண்களின் தோற்றத்தை காட்சிப்படுத்த வந்த பொருநன் அம்மகளிர் தங்கியுள்ள செல்வத்தால் நிறைந்த மாளிகையினை,

    “மழையென மருளும் மகிழ்செய்மாடத்து”4 (பொருந.84)

    என்று உரைக்கிறார். இதன் வழி மகிழ்ச்சி தரும் மேனிலை மாடத்தே உறைவார் என மகளிர் தங்கியுள்ள இடத்தின் தன்மையை அறியலாம். மகிழ்செய் பதம் என்பது மகிழ்ச்சி செய்விக்கும் இடம் என்று பொருள் மேலும் கரிகாலனின் உபசரிப்பை சிறப்பித்துக் கூற வந்த பொருநன் அவர்களின் ஒருத்தியாகிய விறலியர் மன்னனைக் களிப்பூட்டினர் என்றும் கள்ளின் நுகர்ச்சியில் பல நாள் கழித்த பின் கரிச்சோறு உண்டதாக உரைகிறான் இதனை,

    மண்அமை முழவின் பண்அமை சீறியாழ்
    ஒண்நுதல் விறலியர் பாணி தூங்க
    மகிழ்பதம் பல்நாள் கழிப்பி ஒருநாள்
    அவிழ்ப்பதம் கொள்க என்று இரப்ப5 (பொருந.109-112)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். மகிழ் பதம் என்பதற்கு மகிழ்தற்கு உரிய மகிழ்ச்சியை உடைய கள் என்று பொருள்படும் செல்வத்து பயன் ஈதல் அதனால் கொள்வோரும் கொடுப்போரும் எய்தும் இன்பம். இது செல்வத்தால் ஏற்படும் இன்ப நுகர்ச்சியாகும்.

    புலன்களால் ஏற்படும் உவகை

    உவப்பாவது கல்விப் பயனாகிய அறிவுடைமையில் கனிந்து தோன்றுவது. புலமையால் ஏற்படும் அறிவுமுதிர்ச்சியால் புலப்படுவது ஆகும். புலன் என்பது ஐம்புலன்களையும் குறிக்கும். ஒருவன் தன் ஐம்புலன்களைக் கொண்டும். இன்ப நுகர்ச்சியை பெறுவான்.

    அறிவுடையார் கூறும் சொற்களை செவிகளின் வழி கேட்கும்போது மட்டுமின்றி கலைஞரின் கலை நுட்பங்களால் உருவான கலைச்சிற்பங்களை கண்களின் வழி காணும் போதும் உள்ளம் ஓர்வித பரவசம் (அ) மகிழ்ச்சி அடைகிறது.

    பரிசில் பெற்ற பொருநன் விறலியின் கேசாதி பாத வருணனையைக் கூறுமிடத்து விறலியின் பேச்சும் வாயும் பற்றிக் கூறுகிறான். விறலியின் பேச்சும் ஓசையானும் பொருளாலும் கேட்போர்க்கு இன்பம் தரும் சொல் என்று உரைக்கிறான் இதனை,

    அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதல்
    கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
    இலவுஇதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்6    (பொருந.25-27) என்ற பாடல் வழி அறியலாம். ஐம்புலன்களில் ஒன்றாகிய செவிகளின் வழிப் பெரும் இன்ப நுகர்ச்சியை குறிக்கும் சொல்லாக இன்மொழி என்ற சொல் அமைந்துள்ளது.

    முடிவுரை:

    பாணர்களின் வாழ்வானது இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை பிரதிபலிப்பவையாக இவை அமைந்துள்ளன. பாணர்களின் வாழ்வில் ஒருவரின் நிலைகண்டு எள்ளி நகையாடல் என்பது கிடையாது. என்பதால் நகை தோன்றுவது அரிதாகும். ஒவ்வொரு மனிதரிடமும் நகை முதலா உவகை ஈராக உள்ள எண்வகை மெய்ப்பாடுகளும் தோன்றுதல் இயல்பாகும்.

    அடிக்குறிப்புகள்

    1. மாணிக்கவாசகன்.ஞ (உ.ஆ), பத்துப்பாட்டு(தொகு), பொருந. பா.அ.56-60-ப.58
    2. மேலது – பா.அ. 109-112 – ப.64
    3. மேலது – பா.அ. 25-27 ப.54
    4. மேலது – பொருந> பா.அ. 54-56 – ப.59
    5. கோ.சேதுபதி – திருக். 1050
    6. மேலது – பொருந – பா.அ. 48-50 – ப.57

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    தெய்வானை அம்மாள் மகளிர்க் கல்லூரி (தன்னாட்சி) விழுப்புரம்

     

     

    Share
  • கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது !

    நேர்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு – எம்.ரிஷான் ஷெரீப்

    (இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.)

    கேள்வி : நீங்கள் தமிழ்மொழியில் ஆக்கங்களை எழுதி வரும் படைப்பாளியாக இருப்பதோடு, சிங்கள இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பின் மீதான ஈடுபாடு எவ்வாறு தோன்றியது?

    பதில் : அது வேண்டுமென்றே செய்தவொன்றல்ல. தானாக நிகழ்ந்தது. பணி நிமித்தம் பிற நாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அதுவரைக்கும் நான் இலங்கையில் வசித்த காலத்தில் வாசித்துக் கொண்டிருந்த சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை இழக்க நேரிட்டது. எனவே எனது சகோதரி கவிஞர் பஹீமா ஜஹான், இலங்கையில் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மாத்திரமல்லாது அரசியல் கட்டுரைகளையும் கூட மின்னஞ்சல் வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றிலுள்ள நல்ல, தீய விடயங்கள் குறித்து நாங்கள் வாதிட்டோம். தர்க்கித்தோம். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலக்கியத்தைக் குறித்தும், ‘சிங்களவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்களல்ல’ என்பதையும், யுத்தத்தையும், இன மத வேறுபாடுகளை எதிர்க்கும் சிங்களவர்களும் இலங்கையில் வசிக்கிறார்கள் என்பதையும் தமிழ் வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற முடியும் எனப் புரிந்தது. மொழிபெயர்ப்புப் பயணம் அப்போதிலிருந்து அவ்வாறுதான் தொடங்கியது.

    கேள்வி : தமிழ் மொழி மூலமாகக் கல்வி கற்ற நீங்கள் சிங்கள மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? சிங்கள சமூகத்தோடு சிறுபராயம் முதல் தொடர்பேதும் இருந்ததா?

    பதில் : எனது ஊர் மாவனல்லை. எனவே சிறுபராயம் தொட்டு நான் வளர்ந்தது சிங்கள மக்களுடன்தான். சந்தையில், மைதானத்தில், வைத்தியசாலையில், கடைத்தெருக்களில் என அனைத்து இடங்களிலும் என்னைச் சூழ இருந்தவர்கள் சிங்கள மக்கள். அக் காலத்திலேயே அனைவரும் சிரமம் எனக் கூறும் சிங்கள மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது. பாடசாலையில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைத் தேர்ந்தெடுத்தேன். பிற்காலத்தில் கணினி வகுப்பில் சேர்ந்ததுவும் ஒரு சிங்கள ஆசிரியையிடம்தான். பல்கலைக்கழகத்திலும் என்னுடன் படித்தவர்கள் சிங்கள மாணவர்கள். இவ்வாறாக சிங்கள மொழி சிறுபராயம் தொட்டு என் கூடவே வந்ததால் சிங்கள மொழி எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

    கேள்வி : படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறு பராயம் மற்றும் நீங்கள் வெளியிட்டுள்ள இலக்கிய படைப்புக்கள் பற்றி?

    பதில் : எனது சிறுபராயம் தொட்டு புத்தகம் வாசிக்கும் சூழல் எமது வீட்டிலிருந்தது. அம்மா முதற்கொண்டு வீட்டிலிருந்த அனைவரும் புத்தகங்களை வாசித்தார்கள். ஆகவே எனக்கும் அந்தப் பழக்கமே தொற்றியிருக்கிறது என்று கூறலாம். பாடசாலைக் காலங்களில் நிறைய இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றிருக்கிறேன். பாடசாலைக் காலத்துக்குப் பிறகும் நிறைய எழுத அவையும் பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் அளித்தன. உயர்தரக் கல்வியை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இலக்கியப் பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கியிருந்தேன்.

    ‘இந்த வயதில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கற்று, வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தை எட்டியதன் பிறகு எழுதத் தொடங்குங்கள். அப்போதுதான் அந்த எழுத்து ஆழமாகவும், காத்திரமாகவும் அமையும்’ என தக்க சமயத்தில் சகோதரி அறிவுறுத்தினார். ஆகவே உத்தியோகம் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் திரும்பவும் எழுதத் தலைப்பட்டேன். கல்வி கற்றுக் கொண்டிருந்த காலங்களில் எதுவும் எழுதாமலிருந்த போதும் அக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதை நிறுத்தவில்லை. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சிறந்த நூல்கள் எனக் கூறப்படுபவற்றைத் தேடி வாசித்திருக்கிறேன்.

    பிறகு திரும்பவும் நான் எழுதத் தொடங்கியது எனது வலைத்தளத்தில்தான். அவை தமிழ் வாசகர்கள் இருந்த அனைத்து நாடுகளையும் சென்று சேர்ந்தமையால் எனது வலைத்தளத்தில் பதிவிட்ட எனது கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், அரசியல் கட்டுரைகள் என்பவற்றை அச்சு நூல்களாக வெளியிடத் தீர்மானித்தோம். அவ்வாறு கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கள், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கள், அரசியல் கட்டுரைத் தொகுப்புக்கள் போன்றன இதுவரைக்கும் அச்சு நூல்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தில் எனது புதிய கவிதைத் தொகுப்பையும், சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பொன்றையும் வெளியிடத் தீர்மானித்திருக்கிறோம்.

    கேள்வி : முப்பது வருடங்களாக நிலவிய யுத்தத்தின் காரணமாக தமிழ் மொழியில் எழுதி வரும் எழுத்தாளர்கள் பலருக்கும் இலங்கையை விட்டும் புலம் பெயரை நேர்ந்திருக்கிறது. மேலும் பல எழுத்தாளர்கள் யுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. இவற்றால் தமிழ் இலக்கியத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் ?

    பதில் : யுத்தமானது, தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்தது என்பதே உண்மை. 1983 கலவரத்துக்கு முன்பு இலங்கையின் தமிழ் சினிமாவும், தமிழ் இலக்கியமும் வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தவை. நிறைய எழுத்தாளர்கள் உருவாகியிருந்தார்கள். 1983 கலவரத்தில் அனைத்தையும் இழக்க நேரிட்டது. ஆசியாவின் பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகமும், பல்லாயிரக்கணக்கான நூல்களும் எரிக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு அவை இல்லாமலாகின. அது சாதாரண விடயமல்ல.

    யுத்தம் தொடங்கியது. யுத்தத்தின் காரணமாக போர்க்கால இலக்கியம் உருவானது. யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்களும், யுத்தத்தின் காரணமாக தமக்குரியவற்றை இழந்தவர்களும் தமிழ் மொழியில் எழுதியதெல்லாம் யுத்தமானது தமிழ் மக்களுக்கு உரித்தாக்கியிருக்கும் துயரத்தையும், கண்ணீரையும், இழந்த ஜீவிதங்களையும், துயருறும் மக்களையும் பற்றித்தான். அவ்வளவு காலமும் தமிழ் இலக்கியம் என்றால் அது இந்தியத் தமிழ் இலக்கியம்தானென ஏற்றுக் கொண்டிருந்த உலகத்தில் போரிலக்கியமாக இலங்கைத் தமிழ் இலக்கியம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அது தனிப்பட்டு எழுந்து நின்றது.

    யுத்த தேசத்தில் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தினால் நிறைந்திருக்கும் இலக்கியம். அதை எழுதியவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், போர்க்களத்தில் இருந்தவர்களும்தான். அவ்வாறுதான் யுத்தமானது தமிழ் இலக்கியத்தைப் பாதிக்கச் செய்தது. இன ஒடுக்குமுறை மேலோங்கி, தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற அனைத்தும் யுத்தங்களின் போது இல்லாதொழிக்கப்படுகின்றன. அந்தப் புள்ளியிலிருந்து இலக்கியமானது அத் துயரங்கள் குறித்த படைப்புக்களால் பூரணத்துவம் அடையத் தொடங்கி விடுகின்றது. ‘‘Protest literature’ என அழைக்கப்படும் அந்த இலக்கியம் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாக பிறப்பெடுத்தது அப்போதுதான்.

    இப்போதும் கூட பொதுவாக தமிழ் இலக்கியம் எனும்போது இந்தியத் தமிழ் இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் தமிழ் இலக்கியம், தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கியம் என ஒவ்வொரு படைப்பையும் வகைப்படுத்த முடிகிறது. யுத்தத்துக்கு முன்னர் இந்தளவு பிரிவுகள் இருக்கவில்லை.

    கேள்வி : இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்திலும் இந்திய ஆக்கிரமிப்பைத் தவிர்க்க முடியாதுள்ளது. இலங்கைக்குள் தரமான தமிழ் இலக்கிய படைப்புக்கள் குறைவாகத்தான் பதிப்பிக்கப்படுகின்றன. அநேகமான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்புக்கள் இந்தியாவில்தான் பதிப்பிக்கப்படுகின்றன. உங்களுடையதும் கூட அப்படித்தான் இல்லையா? அதன் காரணத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

    பதில் : நான் முன்பே கூறியது போல இலங்கைத் தமிழ் இலக்கியம் எனும்போது அதிலிருந்து யுத்தத்தையும், சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடியாது இல்லையா? யுத்த காலத்திலும், தற்போதும் யுத்தத்தைக் குறித்தும், தற்காலத்தில் நிகழ்த்தப்படும் இனக் கலவரங்கள் குறித்தும் எழுதப்படும் இலக்கியப் பிரதிகளை தமது பதிப்பகத்தினூடாக பிரசுரிக்க பல தமிழ்ப் பதிப்பகங்கள் தயங்குகிறார்கள். ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என அவர்கள் பயப்படுகிறார்கள். அந்தப் பயம் சாதாரணமானது தான்.

    அண்மையில் கூட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை முன்னட்டையில் கொண்டிருந்த ஒரு இந்தியத் தமிழ் சஞ்சிகையை இலங்கையில் தனது புத்தகசாலையில் விற்பனைக்கு வைத்திருந்தார் என்பதற்காக தமிழ் பதிப்பகத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்து விளக்க மறியலில் அடைத்தது. எனவே தான் உணர்வதை எழுதுவதற்கு, எழுதியதைப் பதிப்பிப்பதற்கு இலங்கைக்குள் சுதந்திரம் இல்லை எனும்போது அப் படைப்புக்களை வெளிநாட்டில்தான் பதிப்பிக்க நேர்கிறது. அதுதான் எனக்கும் நேர்ந்தது. எமது நாட்டின் எமது இலக்கியத்தை நாம் எழுதி இன்னொரு நாட்டிடம் பதிப்பிக்கக் கொடுக்க வேண்டியிருக்கிறது. காரணம் இலங்கையில் அதற்கான சுதந்திரம் இல்லை என்பதோடு அவ்வாறு பதிப்பித்தாலும் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் அதிகம் என்பதால்தான். ஆகவே இலங்கையில் ஒரு தொகுப்பை பதிப்பித்து விட்டு சிறைக்குச் செல்லவும், அதன் பிறகு இலக்கியமே வேண்டாமென்று வீட்டிலிருந்து பெருமூச்சு விடவும் விரும்பாததால்தான் இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரும் இந்தியாவில் தமது புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்.

    கேள்வி : பிற நாடுகளில் பதிப்பிக்கப்படும் தமிழ் நூல்களின் பிரதிகளை இலங்கைக்கு தருவித்துக் கொள்ளும்போதும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருவதாக அறியக் கிடைக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அனுபவம் எவ்வாறிருக்கிறது?

    பதில் : அது உண்மைதான். தமிழ்ப் புத்தகங்கள் தபால் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்படுமாயின், அப் புத்தகங்களின் அட்டைப்படம் முதற்கொண்டு முழுமையான உள்ளடக்கம் வரைக்கும் தபாலதிகாரிகளிடம் விவரித்த பிறகுதான் அப் புத்தகங்கள் எமக்கு கிடைக்கும். அட்டைப்படத்திலோ, உள்ளடக்கத்திலோ யுத்தம் சம்பந்தப்பட்ட ஏதேனும் இருப்பின் புத்தகங்களைப் பெற்றுச் செல்ல வந்தவரின் பாடு முடிந்தது. எவரும் அவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்ள விரும்ப மாடடார்கள், அல்லவா?

    எனது அனுபவத்தைப் பற்றிக் கூறுவதானால், ஒரு தடவை நானும் கவிஞர் பஹீமா ஜஹானும் இணைந்து சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் கவிதைத் தொகுப்பொன்றை மொழிபெயர்த்து ஒரு நூலாக வெளிநாட்டில் பதிப்பித்து வெளியிட்டிருந்தோம். அப் பதிப்பகம் அதன் பிரதிகளை எமக்கு அனுப்பியிருந்தது. புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள தபாலகத்துக்குச் சென்றால் புத்தகப் பொதியைப் பிரித்துப் பார்த்திருந்தார்கள். அத் தொகுப்பைப் பற்றிய விபரங்களை விசாரித்தார்கள். இராணுவ வீரர்களின் ஓவியம் அட்டைப்படத்தில் அச்சாகியிருந்தது. அதைக் கவனித்தவர்கள் அப் பொதியை எம்மிடம் ஒப்படைக்கவில்லை. ‘புத்தகங்களைத் திரும்பவும் கொழும்புக்கு அனுப்புகிறோம். அங்கு விசாரணைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு கடிதம் வரும். பிறகு அங்கே சென்று உங்கள் புத்தகப் பொதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்கள். அக் கடிதம் வரும் வரைக்கும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இன்று வரையில் அக் கடிதம் வரவேயில்லை. இது நிகழ்ந்து தற்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன.

    இது எனது அனுபவம் மாத்திரமல்ல. பிற நாடுகளிலிருந்து இலங்கையில் பெற்றுக் கொள்ள தமிழ்ப் புத்தகங்களை கொள்வனவு செய்யும் பலரும் இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

    கேள்வி : ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களினூடாக மத்திய ஆசிய இஸ்லாமியக் கலாசாரப் பின்னணி குறித்துக் கூறப்படும் பல படைப்புக்களை நாங்கள் வாசித்திருக்கிறோம். இலங்கையில் இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்று சேர்ந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லாவிட்டால் அதற்கான காரணமென்ன?

    பதில் : இலங்கையின் இஸ்லாமிய இலக்கியமானது சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்றடையவில்லை. இலங்கையின் இஸ்லாமிய இலக்கியம் எனும் போது அதைக் கூட போர் பாதித்திருக்கிறது.

    யுத்த காலத்தில் கூட இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் பலவும் அதிகளவில் கிழக்கு மாகாணத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. யுத்தத்தின் காரணமாக அவை குறித்து பெரிதளவில் பேசப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்படும் தரமான சிறந்த இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்ப்பதை விட்டு விட்டு, நன்றாக விற்பனையாகக் கூடிய இரண்டாந்தர தொகுப்புக்களை மொழிபெயர்ப்பு செய்து இலங்கையில் புத்தக வியாபாரிகளிடம் சேர்ப்பிப்பதைத்தான், தமிழ்மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் அனேகமானவர்கள் செய்து வருகிறார்கள். எனவே அவற்றை வாசிக்கும் சிங்கள வாசகர்கள் இவ்வளவுதான் தமிழ் இலக்கியம், இவ்வளவுதான் இஸ்லாமிய இலக்கியம் என அந் நூல்களைக் கொண்டு வரையறுத்துக் கொள்கிறார்கள். இந் நிலைமை மாற்றப்பட வேண்டும்.

    கேள்வி : இலங்கையில் 1950 களிலிருந்து அதிகளவில் இனக் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அண்மையில் கூட இஸ்லாமிய சமூகத்தினருக்கெதிராக அவ்வாறானதொரு இனக் கலவரம் மூண்டது. இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கமும், மன அழுத்தமும் ஒரு படைப்பாளியாக உங்களைப் பெரிதும் பாதிக்கும். இன ஒற்றுமையை வலியுறுத்தி பல படைப்புகள் வருகின்றபோதிலும், இப்போதும் கூட இலக்கியவாதியாகவோ, படைப்பாளியாகவோ நாங்கள் இருக்கும் இடம் குறித்து உங்களால் திருப்திப்பட முடிகிறதா? இன ஒற்றுமைக்காக ஒரு இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்குள்ள பொறுப்புக்கள் எவை?

    பதில் : தற்கால இலங்கையானது, இரு புறமும் வெட்டக் கூடிய கத்தி போன்றிருக்கிறது. ஒரு புறம் இன வாதம். மறு புறம் சிறுபான்மை மக்களை அடக்கியாளக் கூடிய அரசியல் வியாபாரம். அரசியல்வாதிகள் எவ்விதத் தயக்கமுமின்றி தமது இலாபங்களுக்காக வேண்டி சந்தர்ப்பங்களுக்கேற்ப கத்தியின் இரு புறங்களையும் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளிடையே எவ்வித இன மத வேறுபாடுகளுமில்லை. இந்த விடயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுதான். அவர்கள் உசுப்பேற்றி விடும் மக்கள் குறித்தும், அதன் காரணமாக தற்காலத்திலும், எதிர்காலத்திலும் இந் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் எவருமே கவனத்தில் கொள்வதில்லை.

    அண்மையில் வெளிவந்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற ‘கூம்பியோ (எறும்புகள்)’ எனும் சிங்களத் தொலைக்காட்சி நாடகத்தின் ஒரு பாகத்தை நானும் பார்த்தேன். அதில் பொட்டு வைத்திருக்கும் ஒரு தமிழ்ச் சிறுமி ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்கிறாள். அவ் வீட்டுக்கு பொருட்களை வினியோகிக்க வரும் ஒரு சிங்கள இளைஞனைக் கண்டு அவள் புன்னகைக்கிறாள். அவனோடு கொஞ்சிக் கதைக்கவும், தனது தொலைபேசி இலக்கத்தை அவனுக்குக் கொடுக்கவும் அவள் விரும்புகிறாள். அதற்கு முன்பு ஆண்கள் எவரையுமே கண்டதில்லை போல அவளது நடவடிக்கையின் மூலம் கேவலமாக அத் தமிழ்ச் சிறுமி சித்தரிக்கப்படுகிறாள்.

    இக் காட்சியை நாடகத்தின் இயக்குனர் நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கக் கூடும். கடந்த காலத்திலும் அப்படித்தான் இருந்தது. அனேகமான சிங்களத் திரைப்படங்களிலும், சிங்கள நாடகங்களிலும் பார்வையாளர்களை சிரிப்பூட்டுவதற்காக வேலைக்காரியாகவும், தோட்டக்காரனாகவும் தமிழ்க் கதாபாத்திரங்களை நுழைத்திருப்பார்கள். அவர்களை கேவலமாக சித்தரிப்பார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னரும் இந்த நிலைமைதான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இவ்வாறான படைப்புக்களை பார்க்கும், வாசிக்கும் பெரும்பான்மை சமூகமானது, சிறுபான்மை சமூகத்தை கேலிக்குரியதாகத்தான் கருதுகிறது. அவர்களை வெறுப்போடு பார்க்கிறது.

    இன ஒற்றுமைக்காக உருவாக்கப்படும் இவ்வாறான படைப்புக்களில் கூட சிறுபான்மையினரை கேலியாகச் சித்தரிக்கும்போது இலங்கையில் பெரும்பான்மை சமூக கலைஞர்களைப் போலவே இலக்கியவாதிகளும் இன ஒற்றுமை என வரும்போது அவர்கள் இருக்குமிடத்தைக் குறித்து திருப்திப்பட முடியாது. இன ஒற்றுமை குறித்துச் சிந்திக்கும் எந்தவொரு கலைஞருக்கும், எந்தவொரு இலக்கியவாதிக்கும் இருக்க வேண்டிய பொறுப்பு என்பது சிறுபான்மையினரை கேலிக்குரியவர்களாக்காமல், அவர்களை மோசமானவர்களெனச் சித்தரிக்காமல் படைப்புக்களை உருவாக்குவதாகும்.

    அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போதும் அதுதான் நடந்தது. ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும்போது கூட இனவாதக் கும்பலுக்கு அவ்வளவு மோசமான தாக்குதல்களையும், தாம் விரும்பியவாறு நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதாவது, அரசையும், சட்டத்தையும் கவனத்திலேயே கொள்ளாது தெருவிலிறங்கி பகிரங்கமாக சிறுபான்மையினரைத் தாக்கி, அவர்களது சொத்துக்களையும், உயிர்களையும்  அழிக்க முடியுமாக இருக்கும் ஜனநாயக நாடு இது என்பதுதானே? இது எவ்வாறு சாத்தியமானது?

    அனேகமான கலை, இலக்கியப் படைப்புக்களில் இலங்கையில் ஒரு இன சமூகத்தினரை, ஏனைய இன சமூகத்தினரை விடவும் சிறந்தவர்களாக சித்தரித்துக் காட்டுவதால் வந்த வினைதான் இல்லையா? எனவே இன ஒற்றுமை குறித்து இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்கு இருக்கும் பொறுப்புதான் ஏனைய மக்களையும் கௌரவமாக, அவர்களது மனித உரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் தமது கலை, இலக்கியப் படைப்புக்களை சமூகத்துக்கு வழங்குவதாகும்.

    கேள்வி : நீங்களும், உங்கள் சகோதரியும் சிங்கள மொழிப் படைப்புக்கள் பலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அவற்றுக்கு தமிழ் வாசகர்களிடையே எவ்வாறான வரவேற்பிருக்கிறது?

    பதில் : யுத்த காலத்தில், போரில் சிக்கித் துயருற்ற அப்பாவித் தமிழ் மக்கள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றையே நாங்கள் மொழிபெயர்த்திருக்கிறோம். அவற்றை எழுதியவர்கள் சிங்கள இலக்கியவாதிகள். எனவே அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு படைப்புக்களை உலகம் முழுவதுமிருக்கும் தமிழ் வாசகர்கள் வாசித்துவிட்டு எம்மிடம் எழுப்பிய முதல் கேள்வி, ‘பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரலெழுப்பும் சிங்களவர்களும் இலங்கையில் இருக்கிறார்களா?’ என்பதுதான்.

    அது வரையில் சிங்களவர்கள் அனைவருமே, இலக்கியவாதிகளும் கூட தமிழர்களை எதிர்ப்பவர்கள், தமிழர்களை வாழ விடாதவர்கள் என்றுதான் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனவே இன ஒற்றுமையை வலியுறுத்தி சிங்களத்தில் எழுதப்பட்ட சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வழங்கி அந்த எண்ணத்தை மாற்ற எம்மால் முடிந்தது. இந்தியாவிலும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் வாசகர்கள் சிங்களத்தில் எழுதப்படும் இலக்கியப் படைப்புக்களை வாசிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். மொழிப் பிரச்சினைதான் இங்கு சிக்கலாக இருக்கிறது. தற்போது எமது மொழிபெயர்ப்புக்களின் மூலம் அச் சிக்கலை ஓரளவு தீர்க்க முடிந்திருக்கிறது எனக் கூறலாம். எதிர்காலத்திலும் அதனை ஒரு சேவையாகச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.

    ******

    Share
  • கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் …. 2

    ஆகாயம், வெண்ணிலவு, கடலலைகள், ஆதவன் இவையனைத்தும் தத்தம் கடமைகளைச் சரியான நேரத்தில் சரியான வகையில் புரிகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைத்த சக்தி எது? எனும் கேள்வி பல சமயங்களில் எமது உள்ளங்களில் எழுவது சகஜம்.

    இவற்றை நடைமுறைப்படுத்த ஒரு சக்தி தேவையில்லையே! இவைகள் இயற்கையின் நிகழ்வுகளே என ஒரு சாரார் வாதிடக் கூடும்.

    அவ்வியற்கையையே நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எண்ணிக் கொள்வோமானால் அச்சக்தியை வழிபடுவதும் ஒரு இயற்கை நிகழ்வே ! .

    இத்தகைய விளக்கங்களைக் கவியரசர் மிக எளிமையான தனது பாடல்களில் புகுத்தி விடுவது அவரது அபாரமான திறமைக்கு எடுத்துக் காட்டு.

    இதோ இவ்வாரம் மற்றுமொரு இனிய கவியரசரின் பாடலுடன் உங்கள்

    முன்னே !

    சாந்தி நிலையம் என்னும் திரைப்படத்தில் பி.சுசீலாவின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்.

    இறைவன் வருவான் அவன்

    என்றும் நல்வழி தருவான்

    இறைவன் வருவான் அவன்

    என்றும் நல்வழி தருவான்

    அறிவோம் அவனை – அவன்
    அன்பே நாம் பெறும் கருணை
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    நம்பிக்கையின் ஆதாரத்திலேதான் மனிதன் வாழ்கிறான். நம்பிக்கையற்றவர் வாழ்க்கை பாலைவனத்தைப் போன்றது. வாழ்க்கையில் பசுந்தளிர்கள் துளிர்க்க வேண்டுமானால் நிச்சயம் அங்கே நம்பிக்கை எனும் நீர் வார்க்கப்பட வேண்டும்.

    அந்நம்பிக்கையை வாரி வழங்குவது ஆன்மீக உணர்வுகளே இவ்வான்மீக உணர்வுகளின் உற்பத்தி இறைநம்பிக்கையாகும்.

    அவ்விறை நம்பிக்கையை எத்தகைய இனிமையான வரிகளுள் எளிமையாகப் புகுத்தி விட்டார் எம் கவியரசர்.

    எம் துயர் களைய இன்றைய அவலம் நீங்கி நல்லதோர் நாளை மலர நிச்சயம் இறைவன் வருவான் என்றோர் நம்பிக்கையுடன் கைகோர்த்து அவ்விறைவன் எமக்கு நல்வழியைக் காட்டுவான் என்னும் நம்பிக்கையும் சேர்ந்தே நடைபோடுகிறது.

    அவ்விறைவன் எமக்கு அருள் புரிகிறான் என்று எப்படி அறிவது எனும் கேள்விக்கு அற்புத விளக்கத்தை வாரி வழங்குகிறார் கவியரசர். எமது மனதில் துலங்கும் கருணையே இறைவன் எமக்கு அருள் புரிந்ததிற்கு அடையாளம் என்கிறார் பாருங்கள். மனிதர் மீது மனிதர் வைக்கும் அன்பின் அடிப்படையே தெய்வம் என்று கவியரசர் கூறும் எளிமையான ஆன்மீக விளக்கத்திற்கு எது ஈடாக முடியும் ?

    வண்ண வண்ணப் பூவினில்
    காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவே
    முத்தை வைத்தவன்
    வண்ண வண்ணப் பூவினில்
    காயை வைத்தவன்
    சிப்பி ஒன்றின் நடுவே
    முத்தை வைத்தவன்
    சின்னச் சின்ன நெஞ்சினில்
    பாசம் வைத்தான்
    நெஞ்சில் வரும் பாசத்தை
    பேச வைத்தான்
    சின்ன சின்ன நெஞ்சினில்
    பாசம் வைத்தான்
    நெஞ்சில் வரும் பாசத்தை
    பேச வைத்தான்
    அன்பே என்பது கோயில்
    ஆசை என்பது நாடு
    பாசம் என்பது வீடு

    இறைவன் என்பவன் தன்னை எவ்வாறு வெளிக்காட்டிக் கொள்கிறான் என்கிறார் கவியரசர், அழகான வண்ண மயமான மலர்களின் வழியே காயைக் காட்டுகின்றான், கடலின் அடித்தளத்தில் மூடியிருக்கும் சிப்பியின் உள்ளே அழகான முத்தையல்லவா காட்டித் தன் ஆதிக்கத்தை நிரூபிக்கிறான்.

    சின்னக் குழந்தைகளின் சிறிய நெஞ்சினில் பாசத்தை வைத்து தனது கோயிலை அடையாளம் காட்டுகின்றான். கள்ளமில்லா மழைகளின் வார்த்தைகளின் வழியே தனது அன்பை வெளிக்காட்டுகிறான்.

    அது மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் ஆன்மீக உணர்வு பொதுவானதே என்பதை எடுத்துக் காட்டுவதற்காக அன்பே கோவில் என்றும், ஆசையை நாட்டின் மீதும், பாசத்தை வீட்டின் மீதும் வைப்பதன் மூலம் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் எனத் தெளிவாகப் புரிய வைக்கிறார்.

    பாசம் என்பது வீடு
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    உள்ளம் என்னும் கோயிலைக்
    கட்டி வைத்தவன்
    கண்கள் என்னும் வாசலை
    தந்து வைத்தவன்
    உள்ளம் என்னும் கோயிலைக்
    கட்டி வைத்தவன்
    கண்கள் என்னும் வாசலை
    தந்து வைத்தவன்
    கண்ணில் வரும் பாதையை
    காணச் சொன்னான்
    நல்ல நல்ல பாதையில்
    போகச் சொன்னான்
    கண்ணில் வரும் பாதையை
    காணச் சொன்னான்
    நல்ல நல்ல பாதையில்
    போகச் சொன்னான்
    கண்கள் அவனைக் காண்க
    உள்ளம் அவனை நினைக்க
    கைகள் அவனை வணங்க

    உண்மையாக மனிதன் வாழ்ந்து விட்டால், அடுத்தவருக்குத் தீங்கு நினைக்காமல் வாழ்ந்திருந்தால், பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் கருணை கொண்டிருந்தால், கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? அவன் உள்ளமே கோவிலாகி விடாதா?

    அந்த உள்ளம் எனும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண்பது எப்படி? ஓ அதுக்குத்தானே வாசலாகக் கண்களைக் கொடுத்துள்ளான். அக்கண்களிலே வழியும் அன்பு மிகுந்த கருணை உள்ளம் எனும் கோவிலில் உள்ள தெய்வத்தைன் தரிசனத்தை கொடுத்து விடுமே !

    அப்பப்பா ! கவியரசரின் ஆழ்ந்த ஆன்மார்க வழியிலமைந்த சிந்தனையின் ஆழம் தான் என்ன?

    கண்களை கொடுத்து விட்ட ஆண்டவன் எம்மிடம் கேட்பதெல்லாம் என்ன? அக்கண்களினால் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து எம் வாழ்க்கைப் பயணத்தை எநல்ல வழியில் ஓட்டி விட வேண்டும் என்பது தானே !

    என் மந்தில் வாழும் இறைவனை கண்களை மூடித் தியானித்து , கைகளை கூப்பி வணக்கினால் உள்ளம் நல்லதையே எண்ணும், அது நல்ல வழியிலேயே செல்லும்.

    கைகள் அவனை வணங்க
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்
    அறிவோம் அவனை – அவன்
    அன்பே நாம் பெறும் கருணை
    இறைவன் வருவான் – அவன்
    என்றும் நல்வழி தருவான்

    அன்பினிய நெஞ்சங்களே ! அனைவர்க்கும் பொதுவான இறைவன் அன்பு மனங்களில் தான் வாழுகிறான். கருணையுள்ள உள்ளங்களில் தான் கோயில் கொள்கிறான். இறைவனை வெளியே எங்கும் தேடாதீர்கள் உங்கள் உள்ளங்களிலேயே தேடுங்கள் என்பதை எளிமையாகப் பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவியரசர் தனது வரிகளில் ஆன்மீக உணர்வுகளைப் புதைத்து வைத்தது அற்புதமே !

    (மீண்டும் அடுத்த பாகத்தில்)

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (276)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். வாரமொன்று என்பது வாழ்வின் காலத்தின் அளவினைக் குறுக்கிக் கொண்டே போகும் அளவுகோல் போன்று தோன்றுகிறது. ஒவ்வொரு வாரமும் வந்து போக வேண்டியது தமது காலக்கட்டாயக் கடமை போன்று யார் விரும்பினாலும் அன்றி விரும்பாவிட்டாலும் தன்பாட்டுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் சரித்திரத்தில் அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பதிவுகளைத் தமது சார்பில் விட்டுத்தான் சென்றிருக்கின்றன என்பதுவே உண்மையாகிறது.

    அப்படியான ஒரு சரித்திர நிகழ்வின் நூற்றாண்டு இவ்வாண்டில் இம்மாதத்தில் நிகழ்வதென்பது இப்போது பலவகைகளில் இங்கிலாந்தில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியான அந்நிகழ்வுதான் என்ன? இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து இவ்வாண்டு தூற்றாண்டாகத் திகழ்கிறது. இங்கிலாந்தில் பெண்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது 1918ம் ஆண்டேயாகும். இவ்வாக்குரிமையை இங்கிலாந்திலுள்ள மக்கள் மிக இலகுவாகப் பெற்று விடவில்லை. அதற்காக இங்கிலாந்திலுள்ள பெண்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய தேவையிருந்தது.

    இங்கிலாந்தில் 1865ம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் எனும் போராட்டம் வலுப்பெற்று பல வடிவங்களெடுத்து முற்றிலுமாக 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தேர்தல்களில் வாக்களிக்கலாம் எனும் உரிமை இறுதியாக 1928 ம் ஆண்டுதான் அளிக்கப்பட்டாலும். பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது 1918ம் ஆண்டேயாகும். இத்தருணத்தில் இன்றைய பெண்களின் நிலையைப் பற்றிய ஒரு கேள்வி பலரது மனங்களிலும் எழுவது இயற்கை. இன்றைய உலகில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பல நாடுகளின் தலைவர்களாக அந்நாட்டின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தகமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மையாகிறது.

    ஆனால் அதேசமயம் பெண்கள் தமக்கு கலாச்சாரக் கட்டுப்பாடு எனும் பெயரில் இடப்பட்ட தடைகளை உடைத்தெறியக் கூடிய சந்தர்ப்பங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கிறார்களா ? என்பது கேள்விக்குறியே ! இங்கு மிக முக்கியமாக நாம் நோக்க வேண்டிய பதம் “காலாச்சாரம்” எனும் சொல்லே. இதன் முழுஅர்த்தமும் சரியான வகையில் உள்வாங்கப்பட்டிருக்கப் பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே ! இன்றைய இந்த நவீன உலகில் கலாச்சாரம் எனும் பதத்தின் உபயோகத்தைப் பெண்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக உபயோகிக்கும் பல ஆண்கள் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமே ! பெண்களுக்கென சில குறிக்கப்பட்ட வேலைகளை நிர்ணயித்து அவர்களை அந்த எல்லைகளை விட்டு வெளியே வரவிடாதபடி கதவுகளை ,ஊட்டி வைத்து சமுதாய அமைப்புகளை ஏற்படுத்தி வைத்திருப்பதை பல இடங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஒரு பெண் பிரதமரைக் கொண்ட இந்த இங்கிலாந்து நாட்டில் கூட இன்றும் பெண்களுக்கான முன்னேற்றக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதுவே கசப்பான உண்மையாகிறது.

    இன்றும் பலரால் பெண் என்பவள் தமது தாய், சகோதரி, மனைவி எனும் நிலைகளில் இருந்தாலும் பெண்களை காமப்பொருளாகக் கண்டு சிலாகிக்கும் பலரைக் காணும்போது நெஞ்சம் கொஞ்சம் வருந்தத்தான் செய்கிறது. அதேசமயம் பாரதி கண்ட புதுமைப்பெண் என்பவளின் உண்மையான சமுதாயப் பங்களிப்பின் முழுஅர்த்தத்தையும் விளங்கிக் கொண்டிருக்கிறோமா? என்பது சந்தேகமே ! இதன் அர்த்தத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் விளங்கிக்கொள்ளவில்லை என்பதுவே உண்மை. தம்மை கவர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவதற்க்குச் சாதகமாக புதுமைப்பெண் எனும் விளக்கத்தை உபயோகப்படுத்தும் சில பெண்களினால் வரம்புகளை மீறும் ஆண்கள் தம்மை நியாயப்படுத்தும் பல நிகழ்வுகளைக் காண்கிறோம்.

    அன்னை எனும் ஸ்தானத்தில் எமது பிறப்புக்கும் இன்று நாம் சமுதாயத்தில் நடமாடும் நிலைக்கும் காரணமாக இருந்த பெண்ணின் திறமை இல்லம் எனும் நான்கு சுவர்களுக்குள் மட்டும் விளங்குவது எந்தவொரு சமுதாயத்திலும் முன்னேற்றத்துக்கு ஏற்ற ஒரு செயலாக அமையாது. இராணுவம், போலிஸ் போன்ற பணிகளில் பெண்கள் அமர்வது முடியாத ஒன்று எனும் நிலைமாறி இன்று அத்தகைய பணிகளில் பெண்களுக்கும் முன்னிடம் கொடுப்பது நிகழாமல் இல்லை. இங்கிலாந்தின் மெட்ரோபோலிடன் போலிஸ் இலாகவின் தலைமைப்பதவியில் இப்போது ஒரு பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றும் இங்கிலாந்தில் முன்னனி ஸ்தாபனங்களில் நிர்வாக இயக்குனர்களாக அவற்றை வழிநடத்துபவர்களில் பென்களின் விகிதாசாரம் குறைவாகவே உள்ளது.

    இங்கிலாந்தில் ஒரே பணியில் இருக்கும் ஆண்களின் ஊதியத்துக்கும் பெண்களின் ஊதியத்துக்கும் வித்தியாசமிருப்பது பெண்களின் நிலை இன்னமும் குறைவாக மதிப்பிடப்படுவதையே காண்பிக்கிறது. இதைப்பற்றிய கரசாரமான விவாதங்கள் முன்னனி ஊடகங்களில் நிகழாமல் இல்லை. இருப்பினும் இதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் இன்னமும் மந்தமாக இருக்கிறது என்பதுவே உண்மை. பெண் பிரதமரின் வழிநடத்தலில் இயங்கும் நாட்டில் இந்நிலை இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள். அதேசமயம் நானொரு பெண் எனக்கு இப்போது கிடைத்திருப்பதுவே பெரும் விடயம் என்று தம்மைக்குறித்த தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களின் பங்களிப்பும் இம்முன்னேற்றத்துக்கு தடையாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    ஆண், பெண் எனும் இருவரிமே மனிதர்கள் தான் காலத்தோடு உலகம் சந்தித்த மாற்றங்கள் பல . அவற்றோடு பெண்களை நோக்கிய சமுதாயப் பார்வைகளும் மாற்ற வேண்டியது அவசியமே ! அம்மாற்றங்கள் எங்கெங்கே, எவ்வாறு நிகழ வேண்டும் என்பது முக்கியம். பெண்கள் தமக்கு இணையாக அனைத்துப் பணிகளையும் புரியும் ஆற்றல் கொண்டவர்கள் என்று ஆண்களும், தாம் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பெண்களும் புரிவது எத்தனை முக்கியமோ கலாச்சார மாற்றத்தின் உண்மையான புரிதலையும், நாகரீகம் என்பதின் முழுஅர்த்தத்தையும் ஆண்கள், பெண்கள் இருவருமே புரிந்து கொள்வதும் அத்தனை முக்கியம். அன்னை என்பவளின் உறவு அன்றும், இன்றும், என்றும் அன்னையே ஆனால் அவளின் அறிவின் ஊடுருவல் குடும்பம் எனும் எல்லைகப்பாலும் விரிவடைவது அன்றை விட இன்று மாற்றமடைந்திருக்கிறது.

    பெண்மையைப் போற்றுதும் !

    பென்மையைப் போற்றுதும் !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்,
    சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
    அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
    வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….

    Share
  • எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு

     

           

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது, ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது / முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது, தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது, அருணாசலக் கவிராயர் விருது மற்றும் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

            இவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 31 என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. பலரது வேண்டுகோளுக்கிணங்க சூன் 15 வரை விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியுடையவர்கள் செயலர், தமிழ்ப்பேராயம், எண் 518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழக நிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603 203 என்ற முகவரிக்குத் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044 2741 7379 – ல் தொடர்புகொள்ளவும்.

    Share
  • உலக சூற்று சூழல் தினம்

     

    நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வை

    தேவை இல்லாத பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து வை

    காய்கறி கழிவு களையும் பிரித்து தனியாக வை.

    வருடம் ஒரு முறை மனித கழிவை வெளியேற்ற வை

    இன்று தண்ணீரும், காற்றும் மாசு படுகின்றதே

    இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கின்றதே

    கழிவு நீர் கலப்பதால் கடல்வாழ் இனங்கள் இறக்கின்றதே

    காற்று மாசு பாட்டால் நாட்டின் தலைககரமே தவிக்கின்றதே !

    சுற்றுப்புறம் தூய்மையாய் இருப்பதற்கு உதவுங்கள்

    தனிமனிதா, தூய்மையை அன்றாடம் கடை பிடியுங்கள்

    வீட்டின் சுத்தமே , நாட்டின் சுத்தம் என எண்ணுங்கள்

    குழந்தைகள், முதியோர்கள் நலனை கருத்தில்கொள்ளுங்கள் !

    அழகாக வீடு கட்டினால் மட்டும் போதாது

    அழகாக தோட்டம் அமைத்தால் மட்டும் போதாது

    வீட்டைச் சுற்றி குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

    மக்களுக்கு மாசு கட்டுப்பாடின் மாண்பினை எடுத்துரையுங்கள் !

    வானத்தைப்போல் பரந்த மனமும் உயர்ந்த லட்சியம் கொள்

    கடல் அலைபோல் சுறுசுறுப்பினை கற்றுக்கொள் ,

    கண்ணுக்கு தெரியாத உயிரூட்டும் காற்றுபோல் உதவ கற்றுக்கொள்,

    உலகின் சுற்றுசுழலையும் பாதுகாக்க எண்ணம்கொள் !

    ரா.பார்த்தசாரதி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180606 Yashoda -lr A4

    மாதவர், கேசவர், மாலவர், மோகினி
    மாதவர்(மாது அவர்) சபரீசன் மாதாவாம்: -ஆதலால்
    அன்னையென்(று) எண்ணி அணுகுவோரைக் காத்தருள்வான்
    தன்னையே கன்னையன் தந்து….கிரேசி மோகன்….!

    Share
  • அகநானூற்றில் இல்லற விழுமியங்கள்

    இரா. அமுதா

     

    முன்னுரை

     

              உலகில் இனத்தாலும் மொழியாலும் தனித்தன்மை உடையவரே தமிழர்; ஆவார். சங்ககாலம் தமிழரின் வரலாற்றில் தலைசிறந்த காலம். சங்ககால மக்களின் மாசற்ற வாழ்வினை வெளிப்படுத்தும் காலம். இக்காலத்தே தோன்றிய இலக்கியங்கள் கருத்துவளமும் கற்பனைச் சிறப்பும் பொருந்திய அழகான பாடல்களைப் பெற்று மிளர்வன. ஈராயிரம் ஆண்டுகட்க்கு முன்னே தமிழர் வாழ்ந்த வாழ்க்கையை விளக்குவன. தமிழ் மக்கள் பலமுறை பயின்று படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வங்கள் அவை. புறத்தே தோன்றும் காட்சிகளையும் அகத்தே தோன்றும் கருத்துகளையும் புனைத்து நிற்கும் அழகு ஓவியங்கள் அவை. சொல்வளமும் இனிமையான ஓசையும் கொண்டு மனித மனத்தை ஆராய்ந்து கூறுவதோடு பல்வேறு இல்லற, தனிமனித,சமுதாய விழுமியங்களை வெளிப்படுத்துவதில் சங்க நூல்கள் சிறப்புமிக்கதாயுள்ளன.

              சங்க இலக்கியங்கள் என்று கூறப்படும் பத்துப்பாட்டு;ம், எட்டுத் தொகையும் தமிழரின் பொற்கால இலக்கியங்களாகப் போற்றப் பெறுகின்றன. அவைகள் பண்டைத் தமிழர்தம் வாழ்வில் கொண்டிருந்த சிறந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் நமக்கு மானுட விழுமியங்களாக உணர்த்திவருகின்றன.

              தமிழர் தம் பண்பாட்டு வாழ்க்கைக்கு, பண்பட்ட வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது அகவாழ்க்கையே என்பதைச் சங்கப்பாக்கள் புலப்படுத்தி நிற்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப் பாட்டில் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் எட்டுத் தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகவாழக்கையைப் பற்றிக் கூறும் இலக்கியங்களாகும.; இவற்றில் அகநானூற்றில் கூறப்பட்டுள்ள அகவாழ்விற்கு அடித்தளமான இல்லறம் பற்றியும்,அவற்றுள் வெளிப்படும்  விழுமியங்கள் பற்றியும் ஆய்வதே இக்கட்டு;ரையின் நோக்கமாகும்.

    இல்லறம் –

              ஆண், பெண் இருவரும் மனம்ஒத்து, கருத்தொத்து இணைந்து வாழ்க்கை நடத்துவதோடு பல்வேறு அறங்களையும் ஆற்றுபவர்களாக இருப்பதே இல்லறத்தின் சிறப்பாகும். இல்வாழ்க்கை வாழ்பவன் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் மட்டுமின்றி துறவிகள், ஏழைகள், இறந்த முன்னோர்கள் ஆகியோர்க்கும் துணையாக இருந்தல் வேண்டும். பழிக்கு அஞ்சுபவனாகவும், பகுத்துண்ணும் வழக்கம் உடையவனாகவும் வாழ்தல் வேண்டும். அவனது வாழ்வில் அன்பும் அறமும் இருத்தல் வேண்டும். இவ்வாறு அறநெறியில் இல்லறத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் தெய்வத்துக்குச் சமமாகக் கருதப்படுவான். ஆதலால் நல்ல மனைவி, மக்களையும், சுற்றத்தினையும் பெற்று வாழும் ஆண்மகனுக்கு அமையும் வாழ்க்கைத் துணையாளும் குடும்பத்திற்கு ஏற்ற குணநலன்களோடு நற்பண்புகளையும், கற்பு என்னும் வலிமையையும் பெற்று வாழ்க் கூடியவளாக இருத்தல் அவசியம். சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் இத்தகைய சிறப்புகளையும் மாண்புகளையும் கொண்ட தலைவன், தலைவியரை மையமாகக் கொண்ட பாடல்கள் புனையப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலில் வெளிப்படுத்தப்படும் இல்லற விழுமியங்கள் காலத்தால் அழியாததாகவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும் இருப்பதில் ஐயமில்லை.

    இல்லற அறம் –

              சங்க காலத்தில் ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறைவு, முறை, பொறை முதலான இல்லற அறப்பண்புகள் வாழ்வியலில் மேற்கொள்ளப்பட்டன. பொதுவாக இன்னுரை பேசுதலும் இன்னாதன செய்யாதிருத்தலுமே சிறந்த அறமாகக் கருதப்பட்டது. இல்லறக்கடன் ஆற்றுதல் வேண்டி தலைவன் பொருள் தேடிச் செல்லலும் அவன் வரும்வரை தலைவி ஆற்றியிருந்து இல்லறக்கடன் ஆற்றுலும் அகநானூற்றில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் அறம்பல புரிவதற்கும் பிறர் கடைவாயில் சென்று நிற்காத நிலைமைக்கும் பொருள் இன்றியமையாதது என்பதனை

                       “அறன்கடைப் படாஅவாழ்க்கையும் என்றும்

                     பிறன்கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும்

                     பொருளின் ஆகும்”           (அகம் 155:1-3)   

      

              என்ற பாடல் விளக்குகிறது. இப்பாடல் இல்வாழ்வில் அறம் தவறாதிருத்தலையும் பொருளின் இன்றியமையாமையையும் விளக்கி இல்லற விழுமியங்களை வெளிப்படுத்துகிறது.

              இல்வாழ்வார்க்குரிய அறச் செயலின்றும் பிறழாமல் நடத்தலும், நெருங்கிய சுற்றத்தார்க்கு எய்திய துன்பங்கள் பலவற்றையும் நீக்கி அவர்களை நல்வாழ்க்கை வாழச் செய்தலும் வேண்டுமெனில் தலைவியாகிய நீ சிலகாலம் என் பிரிவை ஆற்றியிருத்தல் அவசியம் என்று தலைவன் கூறுவதை

                        “அறந்தலைப் பிரியாதுஒழுகலும் சிறந்த

                      கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்

                      வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்” (அகம் 173:1-3)

             

              என்ற பாடல் விளக்குகிறது. நாம் துன்பத்தால் வாடி வருந்தினாலும் கவலையில்லை என்று சொல்லிய மனத்தின் தூய்மையை உணர்த்தும் இல்லற விழுமியம் போற்றத்தக்கது.

    விருந்தோம்பல் –

              இல்லறத்தில் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று விருந்தோம்பல். விருந்தோம்பும் பெருவாழ்க்கையினை மகளிர் விரும்பினர். போக்குவரத்து வசதிகளும்,காசு கொடுத்து அறுசுவை உணவு கொள்ளும் உணவுச் சாலைகளும் இல்லாத அக்காலத்தில் விருந்தோம்பற் பண்பு சிறந்த இல்லற அறமாக மேற்கொள்ளப்பட்டது. விருந்தோம்பலைத் தலைமக்களுக்குரிய சிறந்த கடமைகளுள் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

                        “விருந்து புறந்த ருதலும் சுற்றம் ஓம்பலும்

                      பிறவும் அன்ன கிழவோர் மாண்புகள்” (தொல் கற்பு-11)

              என்ற வரிகள் விருந்தோம்பலைத் தலைசிறந்த விழுமியமாக எடுத்துரைப்பதைக் காணலாம். பண்டைக் காலத்தில் வீடு தேடி வரும் புதியவர்களே விருந்தினர் எனப் போற்றப்பட்டனர். அவர்களை அகமும், முகமும் மலர இனிதே வரவேற்று விருந்தளித்தனர் என்பதை

                        “வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற்

                       செறிந்த சேரிச் செம்மன் மூதூர்“(அகம்:15:6-7)

     

     என்ற வரிகள் விளக்குகின்றன.

    இல்லற மகளிர்க்குரிய மாண்புகள்

              சங்க அக இலக்கியங்களின் வாயிலாக பெண்களின் பண்பாட்டை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். ஒரு குடும்பம் வாழ்வதும், தாழ்வதும் பெண்ணால்தான் என்று அக்கால மக்கள் நம்பி வந்தனா.; அந்த நம்பிக்கை இன்றும் உண்டு. பெண்கள் புகுந்த வீட்டின் இயல்புக்கேற்ப நடந்து கொண்டு பிறந்த வீட்டைப் பற்றி எண்ணி இருப்பர். பிறந்த வீட்டின் உதவியை எதிர் பாராதும், உதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளாதும் வாழ்ந்து சிறப்பு எய்தினர். அவர்கள் வாழ்வில் அன்பும், அறமும், அறிவும் பின்னியதாகவே அமைந்திருந்தது.

              பொருள்வயின் பிரிய எண்ணிய தலைமகன் தலைவியின் இயல்புகளை எண்ணி செலவழுங்கிநிற்கும் இடத்தில்

                         “….. நன்மனைப்

                      பன்மாண் தங்கிய சாயல் இன்மொழி” (அகம் 193 : 11-12)

              என்று கூறி தலைவியை சிறப்பிக்கின்றான.; நாள்தொறும் விருந்தோம்பல் முதலான நல் அறங்கள் நிகழ்தற்கு இடமான நன்மையுடைய நமது இல்லத்திற்கு உரியவளாகிய கற்புடை மகளிர்க்;கு இன்றியமையாத பல்வேறு மாண்புகளும் பொருந்திய தலைவி என்று தலைவியின் சிறப்புகளைத் தலைவன் விழுமியங்களாக வெளிப்படுத்துகின்றான். இதே கருத்தை தொல்காப்பியம்.

                       “கற்பும் காமமும் நற்பால் ஒமுக்கமும்

                     மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

                     விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

                      பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” (தொல் கற்பு-11)

    என்று தலைவியின் மாண்புகளை எடுத்துரைக்கிறது.

     இல்வாழ்வில் மழலை இன்பம் –

              அக்காலத்தில் மக்கட்பேற்றைப் பெறும்போதுதான் உண்மையான உh,,,யர்ந்;த நிறைவு பெற்ற மனித நிலையை ஒவ்வொருவரும் எய்தினர் என்ற கருத்தை உணர்த்துகின்ற பாடல்கள் பல அகநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அத்தகு மாண்புடைய மக்கட்பேற்றை அடைந்தவரின் விழு நிலையையும், அடையாதவரின் இழி நிலையையும் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

              இல்வாழ்க்கையின் பயனாக மக்களைப் பெற்றவரையே மாண்புடையவராகத், தலைமைப்பேறு உடையவராகப் பண்புடையோர் கருதினா.; குழந்தைப் பேற்றின் காரணமாக இவ்வுலகத்திலும் புகழொடு விளங்குவார்கள். மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் எனப் பலரும் கூறிய பழைய மொழிகள் எல்லாம் உண்மையாதலைக் காணலாம் என்பதனை

                       “இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

                      மறுமை உலகமும் மறுவின்று எய்துப

                      செறுநரும் விழையும் செயி;ர்தீர்;  காட்சிச்

                      சிறுவர்ப் பயத்த செம்மலோர் எனப்

                       பல்லோர் கூறிய பழமொழி  எல்லாம்,

                       வாயே ஆகுதல் வாய்த்தனம் – தோழி” (அகம்:66:1-6)

     

     என்ற பாடல் விளக்குகிறது.

    வறுமையில் செம்மை –

            கணவன் இல்லம் வறுமையுற்ற போதிலும் செல்வம மிகுந்த தம் தந்தை வீட்டை நாடிச் செல்லாத தலைவி சிறப்பிக்கப்படுகிறாள். தலைவனின் இல்லிலிருந்து வந்த தலைவியிடம் தலைவன் இல் குறித்து வினவும் தோழியிடம் தலைவி உயர்வாகக் கூறி கணவன் இல்லறத்தைச் சிறப்பிக்கிறாள்.  இல்லறப் பெண்கள் அழகாலும், குணத்தாலும் சிறந்ததோடு, அன்பு, தலைவன் மனமறிந்து வாழ்தல், புதல்வரைப் போற்றும் பாங்கு, இல்லறக் கடமை, தெய்வக்;கற்பு முதலானவற்றான் சிறப்புற்று விளங்கி இல்லறத்தைச் சிறப்பித்தனர்.

    தன்னலமற்ற பண்பு –

                            ‟விளைகவயலே! வருக இரவலர் ” (ஐங்.2:2)

              என்ற அடி தமிழர் அருள் நெறியை விளக்குவதாகும.; வயலில் தானியங்கள் விளைவது நமக்கு மட்டுமன்று இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவே என்ற கருத்தைக் கொண்டதே இவ்வடி. இல்லறமே நல்லறம் என்ற கொள்கை தமிழரின் உயாந்த அருள் நெறியை உணர்த்துகிறது. இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் உழைத்து, உற்பத்தி செய்து பிறர்க்கு உதவும் தன்னலமற்ற பண்பு உடையவர்கள் என்பதனை அக நூல்கள் உயர்ந்த விழுமியமாகக் காட்டுகின்றன.

              தமிழர்கள் அகத்தையும்,புறத்தையும் இரு கண்களாகக் கண்டனர் அகம், புறம் என்னும் இரண்டும் ஒற்றுமை,வேற்றுமைகளைப் பெற்றிருப்பினும் புறத்தினும் அகமே சிறப்புடையதாகக் கருதப்பட்டது. புறத்திணைப் பொருளான வீரம் மக்களுள்  சிலர்க்N;க உரியது. ஆனால் அகத்திணைக்குப் பொருளான காமமோ ஆண் பெண் என்னும்  பிரிவுகளைக் கொண்ட உயர்திணை, அஃறிணை உயிர்களுக்கெல்லாம் பொதுவானதாகும். ஆண் பெண் இணைந்து வாழும் உயர்திணை வாழ்வினை இல்லறம் என சிறப்பிக்கின்றனர். இவ்வில்லறத்தில் தலைவனும் தலைவியும் இணைந்து அன்புநெறி பூண்டு விருந்தோம்பல், விட்டுக் கொடுத்தல், காத்திருத்தல், பகுத்துண்ணல் சுற்றத்தைக் காத்தல், கேட்டினை விலக்கல், ஈத்துவத்தல், புகழ்தேடல், முதலான உயரிய விழுமியங்களை வெளிப்படுத்த இல்லற மக்கள் கைக்கொள்ளும் ஒழுக்கங்களுக்கு இடப்படும் சிறப்புப் பெயரே பண்பு. பயன்தரும் பண்பின் இரட்டைக் குழந்தைகள் தான் அன்பும், அறமும். இவை வெளிப்படும் இடமே இல்லறம். இவ்வில்லறத்தின் வாயிலாக மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விழுமியங்களை அகநானூற்றுப் பாடல்கள் வெளிப்படுத்தியிருத்தலை இக்கட்டு;ரை விளக்குகிறது.

    துணை நூற்பட்டியல-;

    1)       பொ.வே.சோமசுந்தரனார் உரை, அகநானூறு, கழக வெளியீடு, பதிப்பு-1970.

    2)       நச்சி;னார்க்கினியர் உரை, தொல்காப்பியம், கழக வெளியீடு, பதிப்பு-1966.

    3)    அ.தட்சி;ணாமூர்த்தி, சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உணர்வுகள்,                   மங்கயர்கரசி பதிப்பகம், பதிப்பு-2001.

    4) முனைவர்.ப.கோமதி முதலானோர், சங்க இலக்கியங்களில் மானுட   விழுமியங்கள், அ.இ.பதிப்பகம், பதிப்பு-2011 

     

    இரா.அமுதா,

    முனைவர் பட்ட ஆய்வாளர்,

    தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி,

    கோவை-10.

    Share
  • முகிலை இராசபாண்டியனின் தேரி மணல் நாவலில் கடற்கரைப் புனைவு

    -த. ஆதித்தன்

    விலங்குகளோடு காடுகளில் வாழ்ந்த மனிதன் தனது நாகரிக வளர்ச்சியின் விளைவாகத் தனக்கென ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டான்.  அதுவே மக்கள் நிலம் சார்ந்து சேர்ந்து வாழ்வதற்கு முன்னோடி எனலாம்.

    மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவைப் பெருக்கிக் கொண்டதன் மூலம் பல முன்னேற்றங்களை அடைந்தான்.  நாகரிக வளர்ச்சியும் பெற்றான்.  அவன் நிலம் சார்ந்து அமைத்துக் கொண்ட வாழ்க்கை முறையும், வாழ்க்கை சூழலும் அன்று முதல் இன்று வரை இலக்கியங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

    மனிதன் நாகரிகம் அடைவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே கூடிவாழும் இயல்புடையவனாய் இருந்துள்ளான்.  இக்கூடி வாழும் இயல்பினால் விளைந்த நன்மைகள் பல.  மக்களினம் பல கிளைகளாக வளர்ச்சி அடைவதற்கும் அது வழிவகுத்தது.  மனித இனம் பல்வேறு குழுக்களாகப் பிரிவதற்குப்  பேசும் மொழி, செய்யும் தொழில் போன்று  வாழும் இடமும் முக்கிய பங்காற்றுகிறது.  அதனை கருத்தில் கொண்டுதான் நம் முன்னோர் ஐவகை நிலப்பாகுப்பாட்டினை வகுத்துள்ளனர் போலும்.

    நிலப்பாகுபாடு:

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலப்பாகுபாட்டினை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  இவற்றில் பாலை என்பது குறிஞ்சியும், முல்லையும் முறைமையில் திரிந்ததே என்பதால் பாலைக்கென தனிநிலம் இல்லை எனலாம்.  இதனை,

    “முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
    நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை, அடி:64-66)

    என்று சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கிறது.

    தொல்காப்பியம்,

    “மயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” (தொல், அகத்தினை இயல், நூற்பா:951) என்று இந்நிலப்பாகுபாடுகளைப் பற்றிக் கூறுகிறது.  இவற்றுள் ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்னும் அடி நெய்தல் நிலத்திற்குரிய கடவுள் வருணன் என்பதையும், பெருமணல் மிகுந்த கடற்கரை நிலம் நெய்தல் என்பதையும் கூறுகிறது.

    இலக்கியங்கள் வாழ்க்கையோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகும்.  கடலும் கடல் சார்ந்த நிலமாகிய நெய்தல் நிலத்திற்கு ஏற்ற நிகழ்வுகளும் அவ்வகையில் இலக்கியங்களுள் இடம்பெற்றுள்ளன.  இந்தநெய்தல் நிலம் தொடர்பான பல வர்ணனைகளைச் சங்க இலக்கியப் பாடல்களிலும் காண முடியும். உதாரணமாக,

    “பெருநீர் அழுவத்து எந்தை தந்த
    கொழுமீன் உணங்கற் படுபுள் ஒப்பி,
    எக்கர்ப் புன்னை இன்நிழல் அசைஇ,
    செக்கர் ஞெண்டின் குண்டுஅளை கெண்டி,
    ஞாழல் ஓங்குசினைத் தொடுத்த கொடுங்கழித்
    தாழை வீழகயிற்று ஊசல் தூங்கி,
    கொண்டல் இடுமணல் குரவை முனையின்
    வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி,
    மணிப்பூம் பைந்தழை தைஇ, அணித்தகப்
    பல் பூங்கானல் அல்கினம் வருதல்
    கவ்வை நல்அணங்கு உற்ற, இவ்வூர்
    கொடிது அறிபெண்டிர் சொற்கொண்டு, அன்னை
    கடிகொண் டனளே தோழி பெருந்துறை
    எல்லையும் இரவும் என்னாது கல்லென
    வலவன் ஆய்ந்த வண்பரி
    நிலவுமணல் கொட்கும்ஓர் தேர்உண்டு எனவே” (அகநானூறு, பாடல்: 20)

    என்னும் அகநாநூற்றுப் பாடலைக் காணலாம்.

    தோழி தலைவியிடம் கூறும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.  தலைவியோடு களவொழுக்கத்தில் ஈடுபட்ட தலைவன் ஒருநாள் பகலில் சிறைப்புறமாக வந்து நிற்கிறான்.  அதனைக் கண்ட தோழி அவன் வந்துள்ளதை அறியாததுபோல் காட்டிக் கொள்கிறாள்.  அலர் தூற்றும் ஊர் பெண்களின் சொல்லினைக் கேட்டுத் தாய் தலைவலியை வீட்டினுள் காவல்படுத்தியதைத் தலைவனுக்கு உணர்த்த விரும்புகிறாள்.  எனவே தலைவனுக்குக் கேட்கும் வகையில் தலைவியிடம் கூறுவது போல இப்பாடலின் செய்திளைத் தோழி கூறுகிறாள்.

    தந்தை கொண்டுவரும் கொழுப்பு நிறைந்த மீன்களை உலரவைத்து கருவாடாக்குவது உண்டு.  அவ்வாறு மாற்றுவதற்காக மீன்களை உலரவைத்துக் காயவைப்பர்.  அப்போது அதன்மீது வந்து விழுகின்ற பறவைகளை விரட்டுவதற்காகத் தோழியும் தலைவியும் கடற்கரை மணல் மேட்டில் உள்ள புன்னை மரங்களின் நிழல்களில் அமர்ந்திருப்பர்.  அதனைத் தலைவியிடம் நினைவு கூர்ந்த தோழி தொடர்ந்து அவளிடம் பின்வருமாறு கூறுகிறாள்.

    கடற்கரையில் சிவந்த நண்டின் ஆழமான வளைகளை அகழ்ந்து எடுத்தோம்.  உப்பங் கழிகளில் உள்ள தாழையின் விழுதுகளைக் கயிறாகப் பயன்படுத்தி ஞாழல் மரங்களின் உயர்ந்த கிளைகளில் ஊசல் ஆடினோம்.  காற்றுக் கொண்டு வந்து குவித்த மணலில் குரவைக் கூத்தாடினோம்.  இவையெல்லாம் வெறுப்பை உண்டாக்கினால் வெண்மையான மேற்பகுதியைக் கொண்ட அலைகள் வீசும் கடலில் தோழியருடன் விளையாடினோம்.  அழகிய மலர்களாலான பசிய தழையாடையை அழகுடன் உடுத்திக் கொண்டோம்.   பூக்கள் பல நிறைந்த கடற்கரைச் சோலையில் தலைவனைச் சந்தித்து வந்தோம்.

    இவ்வாறு தலைவனைச் சந்திப்பதைப் பற்றி, அவர் கூறுவதையும், பேய் பிடித்த பெண்கள் கூறுவனவற்றையும் நம்தாய் கேட்டு விட்டாள்.  அதனால் இரவு பகல் என்று இல்லாமல் குதிரைகள் பூட்டப்பட்ட கல் என்னும் ஓசையுடன் கடற்கரைக்கு வந்துச் செல்லும் தேரைப் பற்றி எண்ணியவளாய் நம்மை வீட்டு காவலில் வைத்துவிட்டாள்.   நாம் என்ன செய்ய முடியும் என்று தோழி கூறுவதாக பாடல் அமைந்துள்ளது.

    இப்பாடலில் கடற்கரைப் பற்றிய புனைவு மிக அழகுடன் அமைந்துள்ளது.  கடற்கரையில் மீன்களைக் கருவாடாக்குவதற்காகக்  காய வைப்பது, உப்பங்கழியும் அதன் அருகில் உள்ள தாழை, ஞாழல் மரம் போன்றவற்றைப் பற்றிய குறிப்பு போன்றவை மிக எதார்த்தமானவை ஆகும்.  கடற்கரையில் காணப்படும் மணல் மேட்டையும் இப்பாடலின் ஆசிரியர் உலோச்சனார் காட்சிப்படுத்த தவறவில்லை.

    “உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
    ஒழுகை உமணர் வருபதம் நோக்கி,
    கானல் இட்ட காவற் குப்பை,
    புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
    மடநோக்கு ஆயமொடு உடன்உப்பு ஏறி,
    ‘எந்தை திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப!
    இனிதே தெய்யஎம் முனிபுஇல் நல்லூர்
    இனிவரின் தவறும் இல்லை எனையதூஉம்
    பிறர்பிறர் அறிதல் யாவது
    தமர்தமர் அறியாச் சேரியும் உடைத்தே”. (நற்றிணை, பாடல்:331)

    என்னும் நெய்தல் திணையில் அமைந்த நற்றிணைப் பாடலும் கடற்கரைப் பகுதி குறித்து எடுத்துரைக்கிறது.

    கடற்கரையில் உப்பளங்கள் காணப்படும்.  அதனை உழாது விளைவிக்கும் நெய்தல் நில மக்களால் உவர் நிலத்தில் விளைவிக்கும் உப்பு என்று கூறியுள்ளது அருமை.  அந்த உப்பை உப்பு வணிகர் வருகின்ற காலம் வரை கடற்கரையில் குவித்து வைத்திருப்பார்.

    அங்கு, புலால் மணம் பொருந்திய மீனை உப்பிட்டு கருவாடாக்குவதற்குக் காய வைத்திருப்பர்.  அவற்றைக் கொள்வதற்காக வந்துவிழும் பறவைகளை மடநோக்கு உடைய பெண்கள் தோழிகளோடு சேர்ந்து விரட்டுவர்.  அவர்கள் குவித்து வைத்துள்ள உப்புக் குவியல் மீதேறி எம் தந்தையின் படகு இது. உம் தந்தையின் படகு அது எனக் கடலுள் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் படகுகள் குறித்துக் கூறுவர் என்று கடற்கரை நிகழ்வுகளை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது  இப்பாடல்.

    சங்க காலம்தொட்டு இன்று வரையிலும் இதேபோன்ற கடற்கரைப் புனைவுகள் பல இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.  ஆய்வுக்கு எடுத்துள்ள தேரிமணல் நாவலிலும் கடற்கரை சார்ந்த நிகழ்வுகள் காணப்படுகின்றன.  இந்நாவலின் ஆசிரியர் முகிலை இராசபாண்டியன் சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், திறனாய்வு, உரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்து வருபவர், அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ள அவரின் தேரிமணல் என்னும் நாவலில் இடம் பெற்றுள்ள கடற்கரைப் புனைவுகளே இங்கு எடுத்தாளப்படுகிறது.

    தேரிமணல் நாவலின் தொடக்கமே கடலில் ஆறு கலக்கும் கழி முகப்பகுதிதான்.  ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அதனைக் கடலுள் பாயவிடாவிட்டால் அது பக்கத்தில் உள்ள ஊர்ப் பகுதிக்குள் புகுந்துவிடும்.  ஆற்றுத் தண்ணீரைக் கடலுக்குள் வெட்டி விடுவதைப் பொழி வெட்டுவது என்று கூறுவர்.  அந்தப் பொழிவெட்டும் பிரச்சினையில் இருந்துதான் செம்மீன் நாவல் தொடங்குகிறது.  இது குறித்து,

    “பொழி முகத்துக்குப் போன சின்னத்துரையும் மற்றவர்களும் எந்த இடத்தில் மணலை வெட்டினால் கழி வெள்ளம் கடலுக்குள் போகும் என்று பார்த்தார்கள். நேரம் இன்னும் விடியாமல் இருட்டாகவே இருந்தது.  கன்னியாகுமரியில் இருக்கும் லைட்ஹவுசின் வெளிச்சத்தில் கடல் மணல் ஓரளவு தெரிந்தது. பொழி வெட்டுவதற்கான இடத்தைப் பார்த்த சின்னத்துரை, கடலை எட்டிப் பார்த்தார்.  கடல் அடி அதிகமாக இருந்தது.

    “ஏண்ணே…! நாம பொழியை வெட்டி விட்டாலும் கடல் அடிச்சி ஏத்திடும் போல இருக்கே…” என்றான் பண்டாரக்குட்டி. “ஆமாடே…அடிச்சி ஏத்தும் போலத்தான் இருக்கு, ஆனா, கழி தெவங்கி நிக்கிறதால இழுத்துக்கிட்டு ஓடிவிடும்…நீ வெட்ட ஆரம்பி…” என்றார் சின்னத்துரை.

    பண்டாரக் குட்டியும் மற்றவர்களும் மண்வெட்டியால் வெட்டத் தொடங்கினார்கள். மணக்குடி ஊரின் நடுவில் இருந்தது அந்தக் கழி. கழிக்குக் கிழக்கே இருப்பதைக் கீழ மணக்குடி என்றும் மேற்கே இருப்பதை மேல மணக்குடி என்றும் சொல்வார்கள். பழையாறு என்னும் ஆறு, கடலில் சேரும் இடம்தான் அந்தக் கழிமுகப் பகுதி. பொழி ஓடிவிட்டால் கீழ மணக்குடிக் காரர்கள் மேல மணக்குடிக்கு நடந்து போக முடியாது;  வள்ளத்தில்தான் போக முடியும்,”(பக்கம் எண்: 22-23 தேரிமணல்) என்று  ஆசிரியர் குறிப்பிட்டள்ளார்.  இது வர்ணனைகள் இல்லாத காட்சிப்படுத்துதலாகவே அமைந்துள்ளது. கடற்கரையில் உள்ள கழிமுகத்தை வாசகனுக்கு அறிமுகம் செய்யும் வகையில் மட்டுமே இப்பகுதியானது உள்ளது.

    சீறிவரும் அலைகளுக்கு மத்தியில் கடலில் குளிப்பது சுகமானது.  அவ்வாறு கடலில் குளிப்பதைக் கண்முன்னே கொண்டுவரும் வகையில் நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

    மண்டைக் காட்டுக் கோயில் திருவிழாவினை ஒட்டி விழாவிற்கு வரும் மக்கள் கடலில் குளிப்பது வழக்கம்.  அது தொடர்பான செய்திகளைக் குறிப்பிடும் போது மக்கள் கடலில் குளிப்பதுக் குறித்து,

    “ஒன்பது மணிக்கெல்லாம் கடலில் சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.  சீறிவரும் அலையை எதிர்கொண்டு அவர்கள் நின்றார்கள்.  அலை அடிக்கும் நேரத்தில் அதன்மேல் தாவி அந்தப் பக்கம் விழுந்தார்கள், இப்படி ஒவ்வோர் அலையாக எதிர்கொண்டு தாவிக் குதித்ததால் கடலை ஜெயித்த பெருமிதம் அவர்களின் முகத்தில் தெரிந்தது. எதிர்த்துவரும் அலையில் கட்டுமரத்தைத் தள்ளிக் கொண்டு நின்றார்கள் சில மீனவர்கள்.  அலை அடி அதிகமாக இருந்ததால் அவர்கள் கட்டுமரத்தை முன்னே தள்ளிக்கொண்டு போகும் போதெல்லாம் அது திரும்பிக் கொண்டு நின்றது.

    பெரிய அலையின் வருகைக்காக அவர்கள் கொஞ்ச நேரம் பொறுமையாக நின்றார்கள்.  சின்னச் சின்ன அலைகள்தாம் தொடர்ந்து வந்தன.  அந்த அலைகளின் அடி வேகமாகத்தான் இருந்தது.  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அலைகள் அளவில் சிறியவையாய் இருந்தாலும் வேகத்தில் குறைவு இல்லை. சின்ன அலைகளில் தாவிக் குதித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அதிகமாக இருந்தது.  திடீரென்று ஒரு பெரிய அளவில் அலை வந்தது.  அந்த அலையை எதிர்ப்பார்க்காததால் சின்ன அலையில் தாவியதைப் போலவே இந்த அலையிலும் தாவினார்கள்.

    கடல் அலையில், அதுவும் அரபிக்கடல் அலையில் குளிப்பதற்கு ஒரு லாவகம் வேண்டும்.  சின்ன அலை என்றால் மேலே தாவி அலையின் பின்பக்கம் பாயவேண்டும். மிகவும் சின்ன அலை என்றால் குதிக்க வேண்டும்.  பெரிய அலை என்றால் தரையோடு தரையாக மூச்சைப் பிடித்துக்கொண்டு படுத்துக் கொள்ளவேண்டும். மிகப் பெரிய அலை என்றால் குத்தவைத்திருப்பது போல் நன்றாக குனிந்து கொள்ளவேண்டும். பெரிய அலையின் போது குனிந்தாலும் படுத்தாலும் அலை நம்மைக் கடந்து போய் தரையில் அடிக்கும், பெரிய அலையின் மேல் தாவிக்குதித்தால் அது நம்மையும் சுருட்டிக் கொண்டு தரையில் அடிக்கும்.  சில சமயங்களில் சின்ன அலைகளின் மேல் தாவும்போது கூட, காலைப் பிடித்து இழுக்கும்.  வேகமாகப் பாய்ந்தால் தப்பிக் கொள்ளலாம் “(பக்கம் எண்.71-72, தேரிமணல்) என்கிறார்.

    இப்பகுதியைப் படிப்பவர்கள் கடலில் குளிப்பது எப்படி என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.  அந்த அளவிற்கு அனுபவித்து ரசனையோடு எழுதியுள்ளார் நாவலாசிரியர்.  இப்பகுதியில் கட்டுமரத்தைக்  கடற்கரையில் இருந்து கடலுள் இறக்குவதையும் காட்சிப்படுத்தியுள்ளார்.  இவை அனைத்தும் மிகவும் யதார்த்தமாக, நாம் நேரடியாக பார்ப்பது போன்று அமைந்துள்ளது.

    கடற்கரையில் சுழன்று அடிக்கும் காற்றால் மணல் சிறிய குன்றுபோல் உயர்ந்திருக்கும் அதனை மணல் தேரிகள் என்பர்.  அந்த மணல் தேரிகளை, “காற்றாடி மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியைத் தாண்டி விட்டால் மணல் தேரிகள், அந்த மணல் தேரிகளைக் கடந்து விட்டால் கடல்தான்.  மரங்களின் இடையே வந்த தங்கக்கண்ணை யாரும் பார்க்கவில்லை.  தேரிமணல் காட்டுக்கு வந்தாலும் யரும் பார்க்க முடியாது.  ஒரு பனை உயரத்திற்கு இருக்கும் அந்தத் தேரி மணலுக்கு இடையே நடந்து சென்றால் கூட யாருக்கும் தெரியாது.” (பக்கம் எண்: 35, தேரிமணல்) என்று நாவலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மணல் தேரிகளைக் குறிக்கும் தேரிமணல் என்னும் சொல்தான் நாவலின் பெயராகவும் அமைந்துள்ளது.

    இத்தகைய கடற்கரைப் புனைவுகளைக் கொண்ட படைப்புகளில் காணப்படுகின்ற நெய்தல் சார்ந்த செய்திகளைத் தொகுத்து ஆராயும்போது அந்நிலம் சார்ந்த பதிவுகளையும் பண்பாட்டு வழக்காறுகளையும் குறித்தான புரிதல் மேலோங்கும் எனலாம்.

    *****

    கட்டுரையாளர் – இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர் – 613 010.

     

     

     

    Share
  • கூவம் தந்த செழுச்சி அல்லிக்கேணி

    சேசாத்திரி சிறீதரன்

     

    மயிலைமா வல்லிக் கேணியான்

    திவ்.இயற்.நான்மு.35

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு

    குயிலொடு மயில்கள் நின்று ஆல

    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்

    திருவல்லிக்கேணிக் கண்டேனே (1073)

    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்

    திருவல்லிக்கேணிக் கண்டேனே (1075)

    – திருமங்கை ஆழ்வார்

    http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3792

    குரவம் – common bottle flower

    குரவ மலர் மணம் வீசும் குளிர்ந்த பொழில்களும் கதிரவனின் ஒளிக்கதிர் படா இருண்ட சோலைகளில் குயிலும் மயிலும் திரிகின்ற மாட மாமயிலைத் திருவல்லிக்கேணி என அதன் இயல்பைப் புகழ்கிறார் திருமங்கை ஆழ்வார். மயிலையும் அல்லிக்கேணியும் அக்கால் ஒன்றுபட்ட பகுதியாகவே இருந்துள்ளன. மயிலை இன்னும் சிறப்புற்று இருந்ததாலேயே மயிலையின் திருவல்லிக்கேணி எனப்பட்டது போலும். இவ்விரு நிலத்தொகுதியும் செழுச்சியுற்றது (fertile) என்னவோ கூவம் ஆற்று ஓட்டத்தின் நீர்ப்பாய்ச்சனத்தினால் தான் என்பது யாவரும் உணரவேண்டிய உண்மை.

    திருவல்லிக்கேணி, வேங்கட கிருஷ்ணன் எனப் பெயரிய பார்த்தசாரதி பெருமாளின் கோவில் கொண்ட ஊர். இது ஆழ்வார்கள் பாடல் பெற்ற,108 வைணவ தலங்களுள் ஒன்று. இங்கத்து கோவிலின் கருவறை முற்றத்தில் உள்ள தந்திவர்மப் பல்லவனின் 12 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.808) கல்வெட்டு இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கு சான்று. மேலும் கருவறை முதல் முற்றம் வரை உள்ள பாறை கருங்கல் வகை சார்ந்தது . கருவறையின் புறச்சுவர் மஞ்சள் நிறப் பாறை வகையினது என்பது இக்கோவில் பின்னீடு சோழர்களால் கட்டப்பட்டது என்பதற்கு சான்றாகிறது. இக்கோவில் அக்காலத்தே அந்த அளவிற்கே சிறிதாக இருந்துள்ளது.


    ​​

    1. வடக்கு கருவறைச் சுவர். ​(சோழர் காலம் வரை கோவில் இந்த அளவே இருந்துள்ளது)

    2. மேற்கு கருவறைச் சுவர்.

    3. தாயார் சன்னதியை ஒட்டிய தெற்கு கருவறைச் சுவர்.

    ​ஆனால் இக்கோவில் இன்று மிகக் கம்பீரமாக காட்சிப்படுவதற்கு காரணம் விசய நகர ஆட்சியின் போது அரங்கநாதர், இராமர், வரதர், நரசிம்மர், ஆண்டாள், ஆழ்வார்கள் என தனி சன்னதி அமைக்கப்பட்டு விரிவுற்றது. கோவிலின் பழைய அமைப்பு அக்கால் மறுசீரமைக்கப்பட்டது. அதற்கு சோழர் கால கல்வெட்டுகள் பல அடிக்கல்லாக தரையில் வைத்து பூசியிருப்பதே சான்று,

    பின்னர் இக்கோவிலில் மேற்கு புறத்தில் கசேந்திர வரதர் சன்னதி முதல் ஆண்டாள் சன்னதி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டு அதற்கு பண உதவி செய்த தெலுங்கு ஆண், பெண் கொடையாளிகளின் சிலைகள் செதுக்கப்பட்டு ஒவ்வொரு தூணிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்தூண்களைப் பார்த்தாலே அவற்றின் செலவுக்கு கணக்கு என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடியும். அதே போல ஆண்டாள் சன்னதி முதல் சுவர் கண்ணாடி வரை தூண் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதற்கு உதவிய தெலுங்குப் பெண்ணின் சிலை ஒரு தூணிலே வடிக்கப்பட்டு அதன் மேல் தெலுங்கு கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் தெலுங்கரின் முயற்சியால் இக்கோவில் கம்பீரத்தோடு பிரம்மாண்ட தோற்றத்தையும் எய்தியது எனலாம். பெருமாளின் தென்புறச்சுவரில் நெடிய தெலுங்கு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது. இந்நெடியக் கல்வெட்டு 1585 இல் பெனுகொண்டாவை தலைமை இடமாகக் கொண்டு ஸ்ரீ ரங்கராயர் ஆண்டுவந்த போது இராமராஜ வேங்கடபதிராஜுவின் தளவாய் திருமலைராயர் மாட நெல்லூர் செஞ்சம் கிராமம் தலையாறி கண்காணிப்பிலுள்ள , நீடு கிராமம் நிடாரம்பரம் கிராமம் ஆகிய இரு கிராமங்களை திருஅல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு தானமாகக் கொடுத்து அதைக்கொண்டு பெருமாளுக்கு என்னென்ன கைங்கரியம் செய்யவேண்டும் என்று ஒரு நெடிய பட்டியலே கொடுத்து அதில் ஒரு குறையும் இல்லாமல் நடந்தேற வேண்டும். அதற்கு இடர் செய்வார் கங்கை கரையில் பசுவையும் பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று பொறித்துள்ளார்.

    கோவிலுக்குள் சிறிதளவேனும் வெளிச்சமும் காற்றும் வரட்டும் என்று கருதித்தானோ என்னவோ தென்புறத்தில் மடைப்பள்ளிக்கும் தாயார் சன்னதி மண்டபத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பெரிதாக மண்டபம் ஏதும் கட்டாமல் விட்டுவிட்டதை உணர முடிகிறது.


    4. மேற்கு திசை சிலை மண்டபம்.

    5. ஆண்டாள் சன்னதிக்கு நேரே அமைந்த மண்டபம்.

    6. ஆண்டாள் சன்னதி மண்டபம் எழும்ப உதவிய பெண். தலைமேல் அவர் பற்றி தெலுங்கு கல்வெட்டு.
    ​​

    இப்படியாக விசயநகர – நாயக்கர் ஆட்சியின் போது இக்கோவில் 16 /17 ஆம் நூற்றாண்டுகளில் விரிந்து பெருமையுற்ற நிலையில் சத்திரபதி சிவாஜி தனது படை ஒளரங்கசிப்பின் தென்னக படையெடுப்பால் அழிந்து விடாமல் காக்கும் உத்தியாக தமிழகம் வந்தார். அப்போது வேலூர், செஞ்சி நாயக்கர் ஆட்சி ஒழிக்கப்பட்டு மராத்தியர் ஆட்சி நிறுவப்பட்டது. இவ்வாட்சி சிறு காலப் பொழுதே நிலைத்தாலும் பல சிவன் கோவில்களில் மராத்தியர் வெற்றி நினைவாக மண்டபங்கள் கட்டுவிக்கப்பட்டு அறப்பணிகள் நிறைவேறினர். மராத்தியரில் சிலர் மாத்துவ வைணவத்தை பின்பற்றுவோரும் உண்டல்லவா? ஆதலால் மராத்தியர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் தமது முத்திரையை பதித்தனர். கோவிலினுள் கட்டுவதற்கு இடமே இல்லாமல் தெலுங்கர் தமது அறப்பணியை ​முடிந்துவிட்டதால் மனம் கலங்காத மராத்தியர் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து திருக்குளம் நோக்கி புடைப்பு சிற்பங்கள் கொண்ட நெடிய வரவேற்பு மண்டபத்தை கட்டுவித்தனர். அதில் ஒரு தூணில் ஒரு மராத்திய அதிகாரி தனது மனைவியுடன் ஒருங்கே நின்று பெருமாளை நோக்கி கைக் கூப்பி நிற்கிறார். அவர் தலையை மராத்திய தலைச் சிதவல் அணி செய்கிறது. அவரது சிலைக்கு கீழே மண்ணீ வர் என்று அவரது பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.


    ​​

    7. வெளியில் அமைந்த மராத்தியர் கட்டிய வரவேற்பு மண்டபம்.

    8. மண்ணீவர் என பெயர் பொறித்த மராத்திய அதிகாரி மனைவியுடன் தொழுகிறார்.

    9. திருக்குளமும் அதில் மண்டபமும்.

    கல்வெட்டும் / விளக்கமும்:

    – – – நம்பியும் அருளாளனும் உள்ளிட்டோம் – – – / – – – டும் ஆக உரு இருபத்தாறுக்கும் எரிக்க கடவ திருநு – – / – – – கக் கடவோம் இவ்வுரு இருபத்தாறுங் கைக்கொண் – – – / – – -ரான நான தண்டிப்பிடிக்கோன் மக்களில் திருவா – – – / – – – ர்க்கு இரண்டும் எரிய இட்ட குத்துவிளக்கு இரண் – – –

    விளக்கம்: கோயிலில் காட்சி படுத்தியுள்ள, இரு ஓரங்களிலும் எழுத்தை இழந்த 12 – 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இது. நுந்தா விளக்கு எரிக்கிறோம் என ஆடு (உரு) 26 ஐ பெற்றுக்கொண்ட பிராமணர், நான்காம் அதிகார நிலை நாடு கிழார் தண்டிப்பிடிக்கோன் பிள்ளைகளில் திருவா- – என்பவரிடம் இருந்து விளக்கு எரிக்க இரண்டு குத்துவிளக்கும் பெறப்பட்டன என்பது செய்தி .



    ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக் – – – / ஸிங்க நாயற்று பூர்வ ப[ க்ஷ ] – – – / ண்ட சோழ மண்டலத்து புலியு – – -/ ஆளுடையர் திருவாந் யூருடை – – – / ளைகளில் கழுமலவூரர் பக் – – – / கொண்ட நற்புதுக் கா[சு] – – – -/கச் செலுத்தக் கடவோமாக – – –

    விளக்கம்: வலது ஓரம் எழுத்துகளை இழந்து தரையில் கிடந்து மிதிபட்டு தவிக்கும் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. கழுமலவூரரிடம் (சீர்காழி) இருந்து திருவான்மியூர் உலகாளுடைய பெருமானுக்கு அன்றாட பூசனைக்கு வேண்டியன செய்ய புதுக்காசுகளை பெற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.



    ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரண[ம்] ஸ்வஸ்தி ஸ்ரீ மன்மகாமண்டலேஸ்வர ஸ்ரீ வீர பிறுதாப சதாசிவ தேவமகாராயற்கு செல்லா நின்ற ஸம்வற்ஸரம் 1486 (1564) க்கு செ

    ல்லா நின்ற ரத்தாக்ஷி வருஷ மகரநாயற்றில் பூற்வபக்ஷத்தில் உத்திராடமும் ஆதித்யவாரமும் பெற்ற நாள் தெள்ளிய சிங்கப்பெருமாளிட தாஸன் நரசிங்கதாஸன் தேசாந்திரி பண்ணி — க்க — –

    யிங்கரியம் பள்ளிகொண்ட பெருமாள் மகாலக்ஷ்மியார் பூ[மி] தேவியார் நாரசிங்கப்பெருமாள் வராகனாராயணப் பெருமாள் சேஷன் திருப்பதிஷ்ட்டையும் கிஷ்ணன் யுஹ்மணிதேவி பல – – – [டா]ள் – – –

    மதன் அனுருத்திரன் ஸாத்திகை ஆழ்வார் திருப்பதிஷ்டையும் வேதவல்லினாச்சியாற்கு உற்சவ விக்கிறகமும் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும் கிஷ்ணன் கோ{யி}[லும்] முன் – – –

    மண்டபமும் வேதவல்லி நாச்சியார் கோயிலும் முன் திருவாய்மொழி மண்டபமும் திருமடப்பள்ளியும் அடைய வளைஞ்சாந் திருமதிளும் திருவாபரணங்களும் யிந்த ஸறுவ

    கயிங்கரியமும் தேஸாந்திரி நரசிங்கயங்கார் கையிலே தெள்ளிய ஸிங்கப் பெருமாள் கொண்டருளினார். கிறாமம் புதுப்பாக்கம் வேப்பேரி வேஷாறுபாடி யிந்த [கிறாம]

    ங்களும் கொண்டருளினார் யிந்த ஸகளவித கயிங்க [ரியங்களும் சந்திராதித்தவரைய் தெள்ளியஸிங்கப் பெருமாள் கொண்டருளவும்.

    விளக்கம்: 1564 ல் விசயநகர வேந்தர் சதாசிவ ராயர் ஆட்சியின் போது தெள்ளிய சிங்கப்பெருமாளின் தாசன் என்று கூறிக்கொண்டு நரசிங்கையிங்கார் என்பவர் அரங்கநாதர், இலக்குமி, பூதேவி, நரசிம்மர், வராகர், சேஷ நாகம், கிருஷ்ணன், ஆழ்வார் போன்றோருக்கு சன்னதிகள் ஏற்படுத்தி பதிவித்தார் (பிரதிஷ்டை செய்தார்). நகையணியும், வேதவல்லித் தாயாருக்கு செப்புத் திருமேனியும் செய்வித்துக் கொடுத்தார். அரங்கநாதர், கிருஷ்ணன் சன்னதிக்கு முன் மண்டபம் கட்டுவித்தார். வேதவல்லி தாயாருக்கு தனி சன்னதியும், மடைப்பள்ளியும், முன் திருவாய்மொழி மண்டபமும், வளைந்த மதிலும் கட்டி கொடுக்க இவை அனைத்தையும் தெள்ளிய சிங்க பெருமாள் ஏற்றுக்கொண்டார்.

    அதோடு வேப்பேரி, வியாசர்பாடி அவற்றுக்கு இடைப்பட்ட புதுப்பாக்கம் (இக்கால் பட்டாளம் ஆக இருக்க வேண்டும்) ஆகிய கிராமங்களை தெள்ளிய சிங்க பெருமாள் நரசிங்கய்யங்காரிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறார்.

    வேப்பேரி தினத்தந்திக்கும் வியாசர்பாடி அம்பேதுக்கர் கல்லூரிக்கும் 5- 6 கிலோ மீட்டர் நீளத் தொலைவு இடைவெளி, தினத் தந்தி முதல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலகம் வரை 2.5 – 3 கிலோ மீட்டர் தொலைவு அகலம் உள்ளது. இத்தனைப் பெருங்கொடையை அளிக்க வேண்டுமெனில் நரசிங்கயங்கார் பெரிய ஆட்சி அதிகாரப் பொறுப்பில் இருந்தவராய் இருக்க வேண்டும்.என்று எண்ணத் தோன்றுகிறது. இதே போன்ற தெளிவான செய்தி உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் ஆழ்வார்கள், ஆண்டாள் போன்றோருக்கு எப்போது தனி சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் வணங்கி வரலாயினர் என்பதை உறுதிப்படுத்தலாம். அதோடு கோவில்களில் வாகனங்களில் தெய்வத்தை ஏற்றி ஊர் உலா வரும் திருவிழா எப்போது தொடங்கியது என்பதையும் அறிந்து கொள்ளலாம். அதே போல் சிவன் கோவில்களில் 63 நாயன்மார்கள் எப்போது சிலையாக பதிவிக்கப்பட்டனர் என்பதையும் உறுதிப்படுத்தலாம். இவை தாம் உண்மையான தொல்லியல் நோக்கிலான கோவில் கட்டட ஆராய்ச்சி.

    ஆற்று மேடுகளில் கோவில் இயக்கம் உருப்பெறவும் கால்கொள்ளவும் பெரிதும் துணைநின்றவர் ஆட்சியில் முதல் அதிகார நிலையில் இருந்த பல்லவ வேந்தர்கள் ஆவர். மேலைச் சாளுக்கியர், இராட்டிரகூடர் எழுச்சியால் பின்னாளில் இவர்கள் இரண்டாம் அதிகார மன்னர் நிலைக்கும், மூன்றாம் அதிகார அதியரைசர் நிலைக்கும் தாழ்ந்து போனார்கள். இவர்கள் இக்கால் எந்த சாதியில் கலந்து கரைந்து போயிருப்பார்கள் என்ற ஆவல் அனைவர் உள்ளத்திலும் எழுவது இயல்பே. இதற்கு சான்றாக ஒரு 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது.

    சென்னைபுரி / ஸ்ரீ அருணாச்சலேசுவர / ர் கோயில் – வீடு – / மயிலை நல்லப்பா / முதலியார் புத்திரராகிய / ஜஷ்டீ சு முத்துசாமி / முதலியார் தற்மம் தொ / ண்ட மண்டலத்தா/ ரில் – வைசிய குலம் / துளுவவேளாளம் / பு. பல்லவராய கோ / த்திரம் – போதாய[ன] / சூத்திரம் -சாலிவா / கன – வருஷம் / 1764

    விளக்கம் : தொண்டை மண்டலம் மூன்றாம் வருணம் துளுவ வேளாள சாதியில் பல்லவ கோத்திரத்தில் பிறந்த மயிலைவாழ் நல்லப்ப முதலியார் மகன் ஜஸ்டிசு முத்துசாமி முதலியார் சென்னை அருணாசலேசுவரர் கோயிலுக்கு வீடு ஒன்றை தானமாகக் கொடுத்தார்.

    மேற்சொன்ன நான்கு கல்வெட்டுகளும் “சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்” நூலில் உள்ளன. மேற்கோள் உதவி கோவை திரு. சுந்தரம்.

    தொண்டை மண்டல கல்வெட்டில் குறிக்கப் பெறும் மூன்றாம் அதிகார நிலை அதியரைசர்கள் அரையன், ராயன் என்றும், நான்காம் அதிகார நிலை கிழார்கோன்கள் நாடுகிழான் என்றும் குறிக்கப்படுகின்றனர் . அரையன், கிழான் யாவரும் பெரு நிலக்கிழார்களே. ஆகவே தொண்டை மண்டலத்தில் 16 /17 ஆம் நூற்றாண்டில் சாதி உருவான காலத்தில் இவர்கள் துளுவ வேளாளர்களாக தம்மை அறிவித்துக் கொண்டுள்ளனர். மேலும் 17ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியிலும், 19 ஆம் நூற்றாண்டு வெள்ளையர் ஆட்சியிலும் இந்த துளுவ வேளாளர்கள் பல கோவில்களை கட்டுவித்ததும், மறுசீரமைத்ததும், பல கொடைகளை நல்கியதும் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன என்பது இவர்கள் முன்னோரான அரையன், கிழவன் போன்றோர் செய்தது போலவே அறப்பணியை தொடர் ந்து இவர்கள் வெள்ளையர் ஆட்சி வரை செய்து வந்துள்ளனர் எனக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் பார்த்தால் கல்வெட்டுகளில் சிவாச்சாரி பிராமணர்களுக்கு இணையாக அல்லது அடுத்ததாக கல்வெட்டுகளில் அதிகம் இடம்பெறும் மக்கள் வேளாள மக்களாகவே உள்ளனர். தமிழ் மொழிக் காப்பு, பண்பாடு நாகரிகக் காப்பு, சமய அறங்காப்பு ஆகியவற்றில் தமக்கு நிகரில்லாத முதலிடம் பெற்ற இந்த வேளாள மக்கள் இக்கல்வெட்டுகள் உள்ள காலம் வரை அவரின் பங்களிப்பு நினைத்து போற்றலுக்கு உரியதாகிறது.

    கோவில் ஆடு மாடுகளை வளர்த்து அன்றாடம் விளக்கு எரிக்க நெய் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மன்றாடி, கோணார் போன்ற இடையர் கல்வெட்டில் மூன்றாம் இடம் பிடிக்கின்ற சாதியார் ஆவார். .

    கலிங்கத்தை வெற்றிகொண்ட பல்லவன் கருணாகரத் தொண்டைமானை அவன் மனைவி தான் வழங்கிய திருநந்தா விளக்கு கல்வெட்டில் அவனை வேளாண் என்று குறிப்பிடுகிறாள், “ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்துமூந்று ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து திருவத்தி / யூராழ்[வா]ர்க்கு சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டு திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி உடையான் வேளாண் கருணாகரநாந தொண்டைமானார் / தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.

    நூல்: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், 2011, தொகுதி 2, எண் :5, பக் – 10, காஞ்சி வரதர் (அருளாள பெருமாள்) கோயில்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    பகவான் உவாச்….!
    ————————————————-
    ”கும்பிடுதல் ஏனெதற்கு! காண்டீபா, கொடியுச்சி
    எம்பிடும் ஆஞ்சனேயர் ஏளிவிட்டார் -நம்பிடு,
    ஆறறிவு கொண்டவனே அஞ்சறிவு ‘’ஆ’’வைப்போல்:
    போரறிவு கொள்மகனே பாண்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இனிய சந்திப்பு!

    அன்புடையீர்,

     

    ’’டப்ளின் சரண்யாபரத்வாஜ் இல்லம் வந்தார் , தன் தந்தையுடன்…..தன் மகன் பூணலுக்கு அழைக்க…..இந்த கி.வா.ஜி.(WoRd Punningil Expert) எனக்கு ஒரு மினியேச்சர் சாக்லேட் கிருஷ்ணாவை தந்து சாக்லேட் மாலை அணிவித்தார்,ஃஅப்கோர்ஸ் என் மனைவிக்கு ஒரு புடவை…மொமெண்டோவாக தனக்கே உரிய கிவாஜி பாணியில் மொமெண்டோவாக, எழுதி பரிசளித்தார் இந்த லண்டன் சகோதரி….படம் பார்க்க…..என்ன தவம் செய்தேனோ இவள் அன்புக்கு பாத்திரமாக…..!இவள் தந்த சாக்லேட் கிருஷ்ணா பொம்மையும்,மொமெண்டோவும் என் இல்லத்தை அழகு படுத்துகிறது….இவள் மகன் ‘’அத்வைத்’’ பூனலுக்கு அடியேன் விசிஷ்டாவைதி ஒரு வெண்பா எழுதினேன் அதை பத்திரிகையில் போட்டுள்ளார் இந்த கிவாஜி(கிவாஜாவின் ரசிகை)…வெண்பா ஸ்கேன் செய்து அடுத்த மெயிலில்….மிக்க நன்றி கிவாச(ச ஃபார் சரண்யா…சரண்யா எழுத ஆரம்பித்தால் கிரேஸ(மறுபடியும் ஸ ஃபார் ஸரண்யா) ஆகிவிடுவார்….ஈவரது எழுத்தில் PUN FUN இரண்டும் உண்டு…..மீண்டும் நன்றியுடன் கிரே(ஸ)ஸி மோகன்…..!

    Share