Category: நுண்கலைகள்

நிழற்படம்,நுண்கலைகள்

  • 90’s மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா

    90’s மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா

    அண்ணாகண்ணன்

    90’s மிட்டாய் கடை (90’s Mittai Kadai) என்ற பெயரில், சென்னை, தாம்பரத்திற்கு அருகில் உள்ள சிட்லபாக்கத்தில், ஒரு கடை இயங்கி வருகிறது. 1990களில் வழக்கில் இருந்த தின்பண்டங்கள், பொம்மைகள், கருவிகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இங்கே விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.  இந்தக் கடைக்கு நானும் என் மனைவியும் நேற்று நேரில் சென்று வந்தோம். எங்கள் அனுபவத்தை, இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளோம்.

    1980களில் 1990களில் பிறந்தவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் இளமைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க வேண்டுமா? 90’s மிட்டாய் கடையின் உள்ளே ஒரு முறை சென்று பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட தின்பண்டங்களும் விளையாடிய பொம்மைகளும் கருவிகளும் பயன்படுத்திய பொருள்களுமாக, உங்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும்.

    அந்தப் பதிவு, இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சேவைகள்

    தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சேவைகள்

    அண்ணாகண்ணன்

    சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், என்னென்ன சேவைகளை வழங்கி வருகின்றது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கே சிகிச்சை பெறலாம். முதல் முறை பதிவு செய்ய, ரூ.20 மட்டுமே கட்டணம். அடுத்தடுத்த முறைகளுக்கு ரூ.10 மட்டுமே கட்டணம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. எல்லோருக்கும் இலவசமாக மருந்துகளை வழங்குகிறார்கள். இதில் வழங்கப்படும் சேவைகள், செயல்படும் நாள், நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகராசர் காமராசர்

    மகராசர் காமராசர்

    அண்ணாகண்ணன்
     
    பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.
     
    மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.
     
     
     
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • காந்தி ஜெயந்தி – சௌந்திரவல்லி நேர்காணல்

    காந்தி ஜெயந்தி – சௌந்திரவல்லி நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மறுபயன்பாட்டை ஊக்குவிக்க, என் தாயார் சௌந்திரவல்லி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

    பல்வேறு பொருள்களை மீண்டும் பயன்படுத்துவது எப்படி? என்ற அடிப்படைக் கேள்வியுடன் அவரைச் சந்தித்தேன். அவர் சொல்வதைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 278

    படக்கவிதைப் போட்டி – 278

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (04.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 277இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 277இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    உச்சியிலிருந்து வீழும் அருவிக்குப் போட்டியாய் நீரில் குதித்துக்கொண்டிருக்கும் பயமறியா இளங்கன்றைத் தம் படப்பெட்டிக்குள் அடக்கிவந்திருப்பவர் திரு. எம். மோகன். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டி 277க்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நனிநன்றி உரியது!

    அச்சம் என்பது சிறிதுமின்றிப் பாறை உச்சியிலிருந்து நீரைநோக்கிப் பாய்கின்ற இளமையின் வேகம் நம்மை மிரளவைக்கின்றது. கூடவே தொடித்தலை விழுத்தண்டினாரின் சங்கப் பாடலையும் நினைவலைகளில் உருளவைக்கின்றது.

    தாம் சிறுவனாய் இருந்தபோது தாழ்ந்திருக்கும் மருதமரக் கிளையிலேறித் ’துடும்’ என்ற ஒலியெழ விரைந்து மடுவில் பாய்ந்ததையும், கரையில் இருந்தவர்கள் அதைக் கண்டு மருண்டதையும் இருமலோடும் இளைப்போடும் தண்டூன்றித் தள்ளாடும் முதுமையில் அசைபோட்டுப் பார்க்கின்றார் இந்தப் புலவர்.

    ”உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணற் கொண்ட கல்லா விளமை.”
    (புறம் – 243)

    சிறுவர்களின் அறியாமை கலந்த அச்சமின்மைக்குச் சான்றாய் இந்தச் சங்கப் பாடலும் இவ்வாரப் படக்கவிதைக்கான படமும் விளங்குகின்றன.

    இனி, இப்படத்திற்குப் பொருத்தமாய் நம் கவிஞர்கள் வரைந்திருக்கும் கவிதைகளைக் கண்ணுறுவோம், வாருங்கள்!

    ”அருவியில் குளிப்பது நல்லதே; ஆனால் உயரேயிருந்து குதிப்பது ஆபத்து என்பதை அறிந்து செயல்படு!” என்று இவ் இளைஞனுக்கு அன்பாய் அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அளவோடு…

    அருவி நீரது குளித்திட மட்டுமே
    அதிலே குதித்தால் அபாயம் உயிர்க்கே,
    பெருமை மிக்கது சாதனை செய்தல்
    பெரிதாம் இழப்பு சிறிய தவறிலே…

    அச்சம் இலாமை அனைத்திலும் நன்றே
    அசட்டுத் தைரியம் அழிப்பாய் இன்றே,
    துச்ச மாக எதையும் எணாமல்
    துணிந்து தெளிந்து செயல்படு நீயே…!

    *****

    ”தண்ணீரின் வேகத்தோடு போட்டிபோட்டுக் குதிக்கும் இளைஞனே! தோழர்களுடன் நீந்துவது சுகமானது. நீச்சலடித்துப் பழகிவிடு! அதில் தங்கப் பதக்கங்கள் வாங்கிக் குவித்துவிடு!” என்று இளைஞனுக்கு உற்சாகமூட்டுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    தண்ணீரின் வேகம் அதிகமா?
    உன் கால்களின் பாய்ச்சல் அதிகமா?
    இரண்டுமே ஒன்றோடொன்று போட்டி
    வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்!

    ஆற்று நீரோ அருவி நீரோ
    கடல் நீரோ கிணற்று நீரோ
    இதில் குளியல்கள்
    என்னவொரு சுகம்
    கிராமத்துப் பொக்கிஷங்கள்!
    உடல் நலம் சிறக்கும் சாதனங்கள்!

    தோழர்களுடன் பாய்ந்தடிக்கும்
    நீச்சல் ஓர் அருமைதான்
    பாடிப்பாடிக் கைகள் அடித்தெழப்
    பாடல் கோடி பிறக்குதாம்!

    இந்தச் சுகம் எதிலுமில்லை!
    இளைஞனே நீ நீச்சலடித்தெழு!
    தங்கப்பதக்கம் வாங்கிவாங்கி
    தாய்நாட்டிற்கே குவித்து விடு!

    *****

    ”தாயின் மடி குடியிருந்து, தந்தையின்தோள் சேர்ந்து, தன் காலில் தான் நின்று பழமைக் கறை களைய இளமையே தாவி வா!” என்று இளைஞனை அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    இளமையே நீ தாவி வா!

    தரையிருந்து வான் எட்டி
    மலை முகடு வழியிறங்கித்
    தாவிக் குதித்தோடிக்
    கடும் பாறைச் சமமாக்கிப்
    பூமிவளம் தான் பெருக்கிக்
    குளிர்விக்கும் நீர்போலத்
    தாயின் மடி குடியிருந்து
    தந்தைதோள் சேர்ந்து
    தன் காலில் தான் நின்று
    தரைமீது நடைபயின்று
    துள்ளிக் குதித்தோடிப்
    பழமைக் கறை களைந்து
    புதுப் புனல் பொங்கு நீராடிட
    இளமையே நீ தாவி வா!

    *****

    இனிய கவிதைகளால் படிப்போர் இதயம் தொட்டிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

    தற்காத்தலே தகவுடைமை!

    பொங்கிப் பொழிந்த கார் மழையால்
    பொங்கி வழியுது பாறையில் பாலருவி
    தேங்கிய சுனை நீரில் வெம்மை தணிக்க
    ஏங்கிய இளமை எட்டித் தாவுது!

    எல்லையில்லாத் துணிவே
    எமனாகலாம் எச்சரிக்கை!
    களிப்புடன் குளிக்க வந்த இடமே
    காவு வாங்கலாம் கவனம்! கவனம்!

    வழுக்குப் பாறை நீரோட்டம்
    வாழ்வை வழிமாற்றிடும் – உடன்
    வந்த நட்புகளுக்கு வழக்கானால்
    வாழ்வே போராட்டம் ஆகிடும்!

    நீராடல் ஒரு கலை நீ நின்றாடு!
    நீள் உலகில் அன்றாட வாழ்வில் வென்றாட
    நீ விழிப்போடு களித்தாடு விழி
    நீர் வழிய வினை செய்யல் ஆகாது!

    நீங்கள் எல்லாம் இந்நாட்டின்
    நிலையுயர்த்தும் இளமை அலை
    நிலையுணர்ந்து கவனாமாய் நீராடு
    நிலை தவறின் இல்லை ஓர் விலை உயிருக்கு!

    தாயுண்டு தந்தையுண்டு தாய்மண்ணும்
    தான் உனை நம்பியுண்டு – பயமறியாத்
    தளிர் இளங்கன்றே தற்காத்தலே தகவுடைமை
    தவறில்லாக் குறள் நெறி கொள் வாழ்வை வெல்!

    ”நீராடல் ஒரு கலையே! அதனை விழிப்போடு களித்தாடு! தற்காத்தலே தகவுடைமை; குறள் நெறி கொள்! வாழ்வை வெல்!” என்று பயமறியா இளங்கன்றுக்கு நயமாக நல்லுரை நவின்றிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

    நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமிழில் 25 நூல்களையும் ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளிலும் அமைந்த இந்த நூல்கள் பலவும், பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவை. கணவரிடம் அடி வாங்கி, பாதுகாப்பு இல்லத்தில் தங்கியோர், ஓடிப் போன பெண்கள், தொழுநோயாளிகள், குண்டர் குழுவில் இருந்தோர்… எனப் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கேட்டுக் கதைகளாக எழுதியவர். எழுதுவதற்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்காகக் கள ஆய்வு செய்வது, பாத்திரங்களாகவே மாறுவது, கூடு விட்டுக் கூடு பாய்வது… என விரியும் தமது அனுபவங்களை இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் நிர்மலா ராகவன், மலேசியாவில் 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு இயற்பியல் கற்பித்தவர். மலாய், சீனர், இந்தியர் எனப் பல்லின மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவர். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கும் வறுமையில் வாடியவர்களுக்கும் இனக் காழ்ப்பை எதிர்கொண்டவர்களுக்கும் துணை நின்று பாதுகாத்தவர். இந்த நேர்காணலில் தாம் சந்தித்த மாணவர்கள் சிலரைப் பற்றி நம்முடன் உரையாடுகிறார்.

    படம் வரைவது தவிர வேறு எதுவுமே தெரியாத மாணவர்கள், தேர்வு என்றால் படிக்க வேண்டுமா என்று கேட்ட மாணவர், வகுப்பில் தூங்கிய மாணவர், பொம்மையே பார்க்காத மாணவர், F.U.C.K. என்று ஆய்வுக்கூடத்தில் எழுதிய மாணவர், தெருவில் நின்று தங்கள் உடலை 50 காசுக்கு விற்ற மாணவியர், இந்த வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக என் அனுதாபங்கள் என்று சொன்ன மாணவர் எனப் பலரை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். ஆட்டிசம் பாதிப்புள்ள மாணவரை வகுப்பில் மானிட்டராய் நியமித்தது, பட்டன் போடாத / ஜிப் போடாத மாணவர்களுக்கு ஊக்கு வாங்கிக் கொடுத்தது, ஒரு வகுப்பை ஒரே மாதத்தில் ஆங்கிலம் பேச வைத்தது, சீன மாணவியருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தது… எனப் பல அனுபவங்கள் இதில் உண்டு.

    இந்த சுவாரசியமான நேர்காணலைப் பார்த்து மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 277

    படக்கவிதைப் போட்டி – 277

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    எம்.மோகன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (27.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கூரிய அலகும் விரிந்த குடைபோன்ற சிறகுகளுமாய் வானில் வலம்வரும் நாரையை நளினமாய்ப் படமெடுத்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து வழங்கப்பட்டிருக்கும் படமிது. ஒளிப்படக் கலைஞருக்கு என் நன்றியை அளித்து மகிழ்கின்றேன்.

    தமிழரைத் தலைநிமிரச் செய்யும் சிறப்பமை சங்கப் பாடல்களில் பறவைகள் பலவற்றின் இயல்புகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    ”அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீ னருந்தும்
    தடந்தாள் நாரை” (குறுந்: 349) என்று அடும்பின் கொடியிடத்தே மலர்ந்த அழகிய மலரைச் சிதைத்து ஆர்வமாய் மீனருந்தும் வளைந்த காலுடைய நாரையைப் பற்றிப் பேசுகின்றது குறுந்தொகைப் பாடலொன்று!

    நீர்நிலைகளையும் காடுகளையும் மனிதர்கள் தம்முடைய குடியிருப்புகளுக்காகத் தொடர்ந்து அழித்துவருவதனால் காட்சிக்கினிய பறவையினங்கள் உணவையும் உறைவிடத்தையும் இழந்து தவிக்கின்றன. இதேநிலை நீடித்தால் வருங்காலங்களில் பறவையினங்களை நாம் படங்களிலும் கதைகளிலும் மட்டுமே காணமுடியும் எனும் அவலநிலை வாய்த்துவிடும்!

    இதோ…சிறகுவிரித்துப் பறந்துவரும் எழிற்பறவையைப் பிடித்துத் தம் பாட்டெனும் கூட்டிலடைக்க நம் கவிஞர்களும் கற்பனைச் சிறகுகளோடு காத்திருக்கின்றார்கள். அவர்களை வரவேற்போம்!

    *****

    ”குஞ்சுகளுக்கு இரைதேடிச்சென்ற பறவை திரும்பிவந்தபோது தன் கூடிருக்கும் மரம் மனிதனால் வெட்டப்படாதது கண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டது” என ஏற்கனவே மனிதனால் கூட்டையும் குஞ்சுகளையும் இழந்த பறவையின் பதைபதைப்பைக் காட்சிப்படுத்தியுள்ளார திரு. செண்பக ஜெகதீசன்.

    மாறுவானா…

    குஞ்சுகளுக்கு இரைதேடிய
    பறவை
    கூட்டை நாடி வந்தது..

    நெடுந்தூரம் பறந்த
    களைப்பிலும் விட்டது
    நிம்மதிப் பெருமூச்சு-
    கூடிருக்கும்
    மரம் இருக்கிறது
    மனிதனால் வெட்டப்படாமல்…

    முன்பு
    கூட்டோடு குஞ்சுகளோடு
    மரம் வெட்டப்பட்டது
    மறக்கவில்லை பறவைக்கு,
    மனம் குமுறுகிறது
    மனிதனை நினைத்து..

    மனிதன் ஏன் இப்படி
    மாறிவிட்டான் இப்போது-
    தன்னினம் அழிக்கிறான்,
    தாயாய் உதவும்
    இயற்கையை அழித்து
    எங்களை வாட்டுவதுடன்
    தனக்கும்
    தேடுகிறான் கேடு..
    மாறுவானா மனிதன்…!

    *****

    ”உட்கார்ந்து ஓய்வெடுக்க மரம் கிடைக்காதா என்றெண்ணி நீ ஏங்கிய வேளையில் மரத்தினை உன் கண்ணில்காட்டிய இறைக்கு நன்றிசொல்!” என்று பறவைக்கு அறிவுறுத்துகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    பட்ட மரமும் பறவையும்

    விட்டுவிட்ட உறவுகளால்
    விரக்திதனை மிக அடைந்து
    எட்ட எட்டப் பறந்து
    எங்கெல்லாமோ திரிந்து
    சுட்டுப் பொசுக்கும் வெயிலால்
    சோர்வடைந்த பறவையே!

    உட்கார்ந்து ஓய்வெடுக்க
    ஓரிடம் கிடைக்காதா என்று
    கஷ்டம் கண்டு மனமிரங்கும்
    கடவுளிடம் முறையிட்டாயோ நீ!?

    பட்டமரக் கிளையொன்றை
    உன் பார்வையிலே பட வைத்துக்
    கஷ்டமதைத் தீர்த்து வைத்த
    கடவுளுக்கு நீ நன்றி சொல்!

    எந்தக் கவலையானாலும்
    இறைவனிடம் சரணடைந்தால்
    வந்த கவலை தீரும்
    வழி ஒன்று பிறக்குமென்று
    இந்தப் படம் விளக்கும்
    விந்தை கண்டு வியக்கின்றேன்!

    *****

    அந்நிய தேசத்துப் பறவையின் வாயிலாய் இந்திய நாட்டின் சிறப்புகளை, தனித்தன்மையினை விரிவாய்ப் பேசவைத்திருக்கின்றார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    அந்நிய தேசத்துப் பறவை நான்
    இந்திய தேசத்தில் தான்
    எத்தனை எத்தனை விதமாக
    வேறுபாடுகள் இருக்கின்றன!

    அத்தனை வேறுபாடுகள்
    இத்துணைக் கண்டத்தில்
    இந்தியன் ஒற்றைச் சொல்லில்
    இமயம் முதல் குமரி வரை
    கட்டுண்டு இருக்கும் அழகு
    உலகில் எங்கும் காண முடியாது!

    சுதந்திரமான பறவை நான்
    அதேபோல்
    சுதந்திரமான
    மக்கள் இந்திய மக்கள்!

    கருத்துச் சுதந்திரம்
    பத்திரிகைச் சுதந்திரம்
    தனிமனிதச் சுதந்திரம்
    பேச்சுச் சுதந்திரம்
    எழுத்துச் சுதந்திரம்
    மாபெரும் ஜனநாயக நாடு!

    இந்தியனின் அறிவு
    இதனாலே செறிவு!

    சிந்தனைக்கு
    எழுத்தாற்றலுக்கு

    இந்த மண்ணில் தான்
    சுதந்திரம்
    பறவையாகிய
    என்னைப் போல!

    சுதந்திர இந்தியா காண
    எத்தனை எத்தனை
    உயிர்த் தியாகங்கள்!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    பிறந்ததற்கு!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    வாழ்வதற்கு!

    பெருமைப் படு
    இந்த மண்ணில்
    மீண்டும் பிறப்பதற்கு!

    சுதந்திரத்தின் மகிமை
    சுதந்திரத்தின் அருமை
    குடிமக்களுக்குத்
    தராது
    வல்லரசு என்றால்
    அங்கே எங்கே
    தனிமனிதச் சிந்தனை
    தலைசிறந்து விளங்கும்??

    உலகிலேயே
    சுதந்திரமாகப்
    பறவை போல்
    வாழ்பவர்கள்
    கருத்துச் சுதந்திரத்தில்
    இந்தியர்களே!

    ******

    ”உறுமீனைக் கண்டறிந்து, காலமும் தானறிந்து இலக்குநோக்கிப் பாய்வோரே திறன்வாய்ந்த செயல்வீரர்” என்று மனிதர் வாழ்வில் வெற்றிபெறும் வழியைப் பறவையின் பண்பைவைத்து விளக்குகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    செயல்வீரர்

    உறுமீனைக் கண்டறிந்து
    இலக்கு நோக்கிப் பாய்ந்து
    வான் நோக்கி மீண்டெழுந்து
    இரை தேடும் பறவையெனக்
    காலமதைத் தானறிந்து
    கனியும்வகை தெளிந்து
    காரியங்கள் செய்திடுவார்
    திறன் வாய்ந்தோர் செயல்வீரர்!

    கொட்டும் மழை பொய்த்ததென
    வெட்டியாய் நேரம் கடத்திடாமல்
    கால்வாய் வெட்டிக் கழனி திருத்தி
    நிலம் கொழிக்க வழி செய்வார்!
    பட்டினியால் வாடினாலும்
    விதைநெல்லைச் சேர்த்துவைத்து
    வருங்காலச் சந்ததிக்கு
    வாழ வழி செய்திடுவார்!

    எதிர்காலம் கனவென்று
    எதிர்வாதம் செய்துவிட்டு
    நிகழ்காலம் வீணாக்கும் – வெற்று
    வேதாந்தம் விட்டுவிட்டு
    வருங்கால வெற்றிக்குத்
    திட்டங்கள் தீட்டிவைத்து
    முயலாமை தனை விழுங்கி
    முன்னேற்றப் பாதையிலே
    சிறகடித்துப் பறந்திடுவர்!

    *****

    பறவையைக் கண்ட அறிவியல்வல்லார் விமானத்தைப் படைத்தனர்; கற்பனைவல்லாரான  நம் கவிஞர்களோ வாழ்வியல் உண்மைகள் பேசும் கவிதைகளைப் படைத்துக் காட்டியுள்ளனர். அவர்களைப் பாராட்டி மகிழ்வோம்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    நல்ல பண்பு

    நாடு விட்டு நாடு வந்து
    கூடு கட்டும் பறவையே!
    கூடு கட்ட இடம் தந்து
    குஞ்சுகளையும் காத்த மரம்
    காடு கண்ட காட்டுத்தீயால்
    கட்டையான சேதி கேட்டு
    நாடு விட்டு நாடு வந்து
    நலம் விசாரிக்க வருகின்றாயோ
    நன்றிதனை மறவாமல்!?
    நாட்டில் வாழும் மனிதரும்
    காட்டத் தயங்கும் பண்பினைக்
    கூட்டில் வாழும் பறவைக்கு
    கொடுத்தது அந்த இறைவனோ!?

    ”கூடுகட்ட இடம் தந்த மரம் காட்டுத்தீயால் கருகியதுகண்டு மனங்கசிந்த இப்பறவை, அம்மரம் நாடி வந்தது நலம் விசாரிக்க!” என்று மனிதரிடத்தும் காணவியலாத பறவையின் நன்றியறிதலைக் கவிதையில் படைத்துக் காட்டியிருக்கும் திரு. கோ. சிவகுமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • நித்திலாவின் ஓவியங்கள்

    நித்திலாவின் ஓவியங்கள்

    அண்ணாகண்ணன்

    எங்கள் மகள் நித்திலா, சென்னையில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார் (வயது 7). அவரது ஓவியங்கள் சில, உங்கள் பார்வைக்கு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 276

    படக்கவிதைப் போட்டி – 276

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து நம் ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (20.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 275இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 275இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நெடிது வளர்ந்துநிற்கும் தென்னை மரங்கள், ”நிமிர்ந்து பாருங்கள் எம்மை” என்று நம்மை அழைப்பதுபோலிருக்கும் இந்தக் கவின்மிகு காட்சியைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. எம். மோகன். இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ”பெற்றபிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது” என்பது கிராமங்களில் வாழும் மக்களின் நீங்காத நம்பிக்கை!

    மகாகவி பாரதிகூடத் தம் பாட்டில் பராசக்தியிடம், காணிநிலமும், கேணியும், அதனருகே பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் கேட்டார் என்பதிலிருந்து தென்னையின் அருமைதன்னை நன்குணரமுடிகின்றது.

    கண்ணைக் கவரும் தென்னை மரங்களைத் தம்  எண்ணச் சரங்களால் அலங்கரிக்க வருகின்றார்கள் புலமைமிகு கவிஞர் பெருமக்கள்! அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

    *****

    ”பச்சை வயல்களின் ஓரத்திலே பாங்காய் நிற்கும் தென்னைகளை அழிக்காதே; இயற்கை அழகினில் இன்பம்கொள்!” என்று அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அழிக்காதே அழகை…

    பச்சை வயல்கள் ஒரத்தில்
    பார்க்க அழகாய்த் தென்னைகள்
    உச்சி மரத்தில் காய்களுடன்
    உயர்ந்தே நிற்கும் காண்பாயே,
    துச்ச மாக எண்ணாதே
    துணைதான் இயற்கை நமக்கேதான்,
    இச்சை கொண்டே அழிக்காதே
    இன்பம் கொள்வாய் அழகினிலே…!

    *****

    ”தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது; உன்தலை விரித்துக் கிடந்தாலும் அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்! உன் நா வறண்டு கிடக்கையில் அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்” என்று தென்னையின் நல்லியல்புகளைப் பாட்டில் பட்டியலிட்டுள்ள முனைவர் செ.நீதி, தம்முடைய மற்றொரு பாட்டில், ”நீ என்னை மிதித்த போதும்  நான் உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்?! மிதிவண்டியாகிய என்னைச் சாதாரணமாக நினைத்துவிடாதே! வாகன மாசுகளிலிருந்து இயற்கையைக் காக்கும் ஆத்மா இல்லாத ஆத்மா நான்!” என்று தென்னைகளின் அருகில் தனித்து நின்றிருக்கும் மிதிவண்டியையும் மதியூகியாய்ப் பேச வைத்திருக்கின்றார்.

    தென்னை

    வரிசையாய்நின்று யார் உயரம்? என்று
    வானிடம்கேட்டு நிற்கின்ற தென்னையே!
    உங்கள் உயரத்தை அளவிட முடியாமல்
    வானம் வியந்து முகம் வெளுத்து நிற்கிறது!
    கொடுப்பதில் உனக்கு நிகர் உலகில் இல்லை
    உயரத்தில் உனக்குச் சமம் எதுவுமில்லை!
    வேலை இல்லாதவனுக்கு உன் ஓலை வேலை தருகிறது
    குடில் இல்லாதவனுக்குக் குடிசைத் தருகிறது
    தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது
    உன்தலை விரித்துக் கிடந்தாலும் பரவாயில்லையென்று
    அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்!
    உன் நா வறண்டு கிடக்கையில்
    அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்
    உன் உடலைக் காயப்படுத்தினாலும்
    சுவையான காயைத் தருகிறாய்
    உன் ஓடும் ஓசைதரும் கருவியாய்ப் பேசுகிறது
    உன் ஏடும் கைவினைப் பொருளாய் அழகைப் பறைசாற்றுகிறது!
    தலையாட்டுப் பொம்மைக்கும்
    தலையாட்டக் கற்றுக் கொடுத்ததும் நீதானோ?
    நீ தருவ தெல்லாம் நன்மை
    இது உலகம் அறிந்த உண்மை!
    கஜா புயல்உன் தலையைப் பிடித்துப் பிய்த்துப் போட்டபோது
    வலியைத் தாங்கித் தாய்போல் நின்றாய்!
    உன் சேயெல்லாம் வீழ்ந்த போது
    தென்னீர் தந்தவனுக்காகக் கண்ணீர்விட்ட மக்கள் எத்தனையோ பேர்!
    ஏழைகளின் வாழ்வாதாரம் நீ!
    ஓங்கி நில்! உலகத்தைத் தாங்கி நில்!
    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி யாண்டு!

    *****

    மிதிவண்டி!

    ஏய் நண்பனே! நன்றி மறந்தாயே நவீனப் பயணத்தில் ஓடி ஓடி -ஓடிய
    என் பயணத்தை நிறுத்தி விட்டாயே!
    சாலை ஓரத்தில்அனாதையாய் விட்டு விட்டாயே!
    விட்டுச் சென்ற கரங்கள் என்னை அழைத்துச் செல்லுமென்று
    முதியோர் இல்லத்து முதியவனாய் ஏக்கத்தோடு
    காத்துக்கொண்டிருக்கிறேன் கள்வன்கூட என்னை களவாட மறுக்கிறானே!
    அதோ காண்! தென்னையெல்லாம் என்னைப்பற்றி
    ஏதோ சலசலத்துப் பரிகாசம் செய்கிறது அதனால்தான்
    திரும்பி நிற்கிறேன் முகத்தைக்காட்ட வெட்கப்பட்டு!
    நீ என்னை மிதித்த போதும்- நான்
    உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்!
    பழமையை விட்டுப் புதுமையில்
    பாரதி கண்ட செந்தமிழ்நாட்டைத் தொலைத்து விட்டாயே!
    நீ காணும் பாரதத்தை இதோ பாரய்யா!
    நஞ்சை நிலமெல்லாம் நஞ்சாகிப் போனதய்யா
    புஞ்சை நிலமெல்லாம் புண்ணாகிப் போனதய்யா
    சாலையோர மரங்களெல்லாம் காணாமல் போனதய்யா
    ஒற்றையடிப் பாதையெல்லாம் மறைந்து போனதய்யா
    ஆறுகள் எல்லாம் கழிவாகிப் போனதய்யா
    வாழ்க்கை தடம் மாறிப் போனதய்யா
    தூய்மையான காற்றில் இன்று துர்நாற்றம் வீசுதய்யா
    நாகரிகம் என்ற சொல்லும் துகிலுரிக்கப் பட்டதய்யா
    மிதிவண்டியாகிய என்னைச் சாதரணமாக நினைத்துவிடாதே
    வாகன மாசுகளிலிருந்து இயற்கையைக் காக்கும்
    ஆத்மா இல்லாத ஆத்மா நான்!

    *****

    ”ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில் ஆரோக்கியம் மட்டுமே இருந்தது! இன்றோ வாகனங்களின் மிகுதிபோல நோய்களும் மிகுந்துவிட்டன” என்று நியாயமாய்க் கவலையுறும் இயற்கை விவசாயியைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

    நான் ஒரு இயற்கை விவசாயி அப்பா
    காலநேரத்தைச் சரியாகக் கணக்கிடும் பட்டதாரி விவசாயி அப்பா!

    எதிர்காலத்தில் விவசாயம்தான் அதிக வருமானம்
    பெற்றுத்தரும் தொழிலாக இருக்கும் அப்பா!

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை
    எனது வாழ்க்கை முறை அப்பா!

    மிதிவண்டியில் வந்து விவசாயம் காலை மாலை
    விளைச்சல் நிலம்தான் என் உடற்பயிற்சிக் கூடமப்பா!

    ஏன் செய்கின்றோம்
    எதற்குச் செய்கின்றோம்
    எதனால் செய்கின்றோம்
    என்ற சிந்தனை மறந்த நிலையில் தான்
    செய்வினை செய்பவர்களைப் பார்த்துச் சில கேள்விகள்…

    நடையை மறந்து எரிபொருள் வண்டியில் பயணிப்பதால்
    இருமடங்கு செலவை அதிகரிக்கிறீர்கள்!

    ஒன்று எரிபொருளுக்கு…
    மற்றொன்று வைத்தியத்திற்கு!

    ஏன் ஒரு முப்பது நிமிடங்கள் முன்னதாக
    மிதிவண்டியில் செல்ல முடியாதா?
    பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாதா?

    ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில்
    ஆரோக்கியம் மட்டுமே இருந்தது!

    இன்றோ
    இருசக்கர வாகனங்கள் இரண்டு!
    நான்கு சக்கர வாகனங்கள் ஒன்று!
    நோய்களின் எண்ணிக்கையும் ஒன்றுக்கு இரண்டாக!!

    சிந்திப்போம்…
    எது தேவையோ
    அதைத் தேடுவோம்
    அதை நாடுவோம்
    மற்றதை விடுவோம்

    இலவசமாக
    ஏரோபிளேனே கிடைத்தாலும்
    தேவையில்லை எனில்
    வாழ்க்கை பிளானில்
    இல்லை யென்று
    பிளாக் செய்து விடுவோம்!

    *****

    ”பசுமை வரப்பினிலே உடற்பயிற்சிக்கு ஏற்றதென நினைத்து வந்தவரின் மிதிவண்டி இது” என்று அதனை அறிமுகப்படுத்தும் திருமிகு. சுதா மாதவன், ”வாருங்கள்! மிதிவண்டியில் மனமகிழ்ந்து மிதந்துசெல்வோம்” என்று நமையழைக்கிறார்.

    பசுமை வரப்பினிலே
    வரிசையாய் நிற்கும் தென்னை மரத்தருகே
    உடற்பயிற்சிக்கு ஏற்றதென
    நினைத்தவருடைய மிதிவண்டி

    அழகிய சாலை நெடும் பயணம்
    ஆள் அரவமில்லாமல் வெறிச்சோட
    இரு சக்கரங்களை மிதிக்கும் போது
    மனம் பூங்காற்றில் அமைதியுறுமோ?

    எரிபொருள் விலையேற்றம்
    பொதுப் பயண மார்க்கங்கள்
    இயங்காத காலமிது என்பதனால்
    மிதிவண்டிப் பயணத்திலே
    மிதந்து செல்வோம் மனமகிழ்ந்து!

    *****

    ”சூரியனை மறைத்துச் சற்றே தாகம் தீர்த்திட வானுயர்ந்து வளர்ந்த தென்னை நிழலிங்கே, வளரும் புஞ்சையை மட்டுமல்லாது மறந்து போன விவசாயியையும் விவசாயத்தையும் தளராது காத்து நின்றதே!” என்று வியக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    தொலை தூரப் பயணம்
    தொய்வில்லாமல் செல்ல
    சாலையோரம் எங்கும்
    தென்னை மரங்களை நட்டோம்!
    கார்மேகம் வந்து
    மாதம் மும்மாரிப் பொழிந்து
    வளம் எல்லாம் பெறுக
    வசதிகள் வந்து
    காரில் பயணம் செய்வதாய்
    வரும் தினம் கனவு!
    கரங்களாய் நீண்ட கதிர்களால்
    சீதையைச் சிறைபிடித்த ராவணனாய்
    எங்கள் வாழ்வைச்
    சிறைபிடித்த சூரியன்!
    வானரப் படை சூழச்
    சீதையை மீட்க வந்த ராமனாய்
    விண்மீன்கள் படை சூழ
    இரவில் வந்த வெண்ணிலவு
    இதயத்தை குளிரவைத்ததே!
    மெல்ல நகர்ந்திடும் நாடு
    முன்னேற்றப் பாதையில்
    பாதைகள் மாறியது சாலைகளாய்
    இன்னும் மாறாத
    எங்கள் வண்டிச்சக்கரம்
    என்றும் துணையாய் வரும்
    மிதிவண்டிச் சக்கரம்
    வானம் பார்த்த பூமியாய்
    வானம் பார்த்து
    மழை வருமோ என எதிர்பார்த்து
    வாழ்ந்திடும் எங்கள்
    வாழ்க்கை சக்கரம் மாறிடுமோ?
    ஓடிடும் மேகம்
    சூரியனை மறைத்து
    சற்றே தாகம் தீர்த்திட
    வானுயர்ந்து வளர்ந்த
    தென்னை நிழலிங்கே
    வளரும் புஞ்சையைக்
    காத்து நின்றதே
    மறந்து போன
    விவசாயியையும்
    விவசாயத்தையும்
    அது காத்து நின்றதே!

    *****

    தென்னையையும் மிதிவண்டியையும் வைத்து அருமையான கருத்துக்களைக் கவிமுத்துக்களாய்க் கோத்துத் தந்திருக்கும் பாவலர்களின் கவியாற்றலுக்கு என் வந்தனங்களையும் பாராட்டுக்களையும் சாற்றி மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    மிதிவண்டியும் தென்னையும்!

    ஆட்டும் திசையில் ஆடும்
    காட்டும் திசையில் ஏகும்
    நேர்பாதையில் நிமிர்ந்து செல்லும்
    மிதிவண்டியும் தென்னையைப் போலே…

    முதலில் கீழே சறுக்கும்
    மிதித்து ஏறக் கீழ் தள்ளும்
    பழகப்பழகக் கைக்கொள்ளும்
    சீராய் ஏற்றம் கொள்ளும்…

    க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்
    நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்
    வீண் ஆட்டம் போடாது வாழ – வெற்றிக்
    கனியும் கையில் கிட்டும்!

    ”முதலில் கீழே சறுக்கும்; மிதித்து ஏறக் கீழ் தள்ளும்; க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்; நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்” என்று மிதிவண்டிக்கும் தென்னைக்கும் பொருந்துவதாய்த் தம் கவிதையில் இரட்டுற மொழிந்துள்ள (சிலேடை) திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?

    Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    நோக்கர் உறுப்பினர் கதீப் மாமூனா லெப்பை அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்

    ஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    புகையிலை சிகரெட்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல தீங்குகள் ஏற்பட்டு வருகையில், மூலிகை சிகரெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார், டேவிட் ராஜா. புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை இதன் மூலம் மீட்டு, புகைப் பழக்கத்தையே கைவிடச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

    ஆடாதொடை இலைகளைக் கொண்டு இந்த அதிசயத்தை, சித்த மருத்துவரான இவர் மனைவி டாக்டர் கமலா சௌந்திரம் முதலில் நிகழ்த்திக் காட்டி, காப்புரிமை பெற்றார். அதைத் தொடர்ந்து, முள்ளை முள்ளால் எடுப்பது போல், சிகரெட்டைச் சிகரெட்டாலேயே வீழ்த்தும் வகையில், இதற்குப் புது வடிவம் கொடுத்து, வணிக ரீதியில் டேவிட் ராஜா, சந்தைப்படுத்தி வருகிறார்.

    சித்தா மூலிகை சிகரெட்டை உருவாக்கியது எப்படி என்று இந்த நேர்காணலில் நமக்கு விவரிக்கிறார். ஒரு தொழில்முனைவோராக அவரது பயணத்தையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் இதில் காணலாம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share