Tag: அகநானூறு

  • (Peer Reviewed) இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்

    (Peer Reviewed) இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்

    செ. சிலம்பு அரசி

    முனைவர் பட்ட ஆய்வாளர்

    ப. வேல்முருகன்

    நெறியாளர்

    தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

    ராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்

    முன்னுரை

    படைப்புகளைப் சரியான முறையில் உரிய நெறிமுறைகளோடு பதிப்பித்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் அரும்பணி, பதிப்புப் பணி ஆகும். தொடக்க காலத்தில் சுவடிகளைப் பெயர்த்தெழுதிப் படியெடுத்துக் கொண்டனர். அப்பிரதிகள் அச்சியந்திரங்களின் வருகையினால்   அச்சிடப்பட்டுப் பரவலாக்கப்பட்டன.   பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட  பாடல்களைத் திணை, அடி, பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுத்தும் தொகுப்பித்தும் வந்துள்ளனர். சங்க இலக்கியத்திற்கு 1834–இல் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்த சரவணப் பெருமாள் ஐயர் தொடங்கி சி.வை. தாமோதரன் பிள்ளை, உ.வே. சாமிநாதையர், செளரிப்பெருமாளரங்கன், அ.பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ராஜகோபாலார்யன், எஸ்.வையாபுரிப்பிள்ளை முதலான பலர் சங்க இலக்கியப் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

    வே. ராஜகோபாலார்யன் செய்த அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகம் செய்வதும், பதிப்பாசிரியர்; பதிப்பாண்டுகளில் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. இவ்வாய்வுக்கு வே. ராஜகோபாலார்யன் பதிப்புகள் முதன்மையாதாரமாகவும், அகநானூறு குறித்த திறனாய்வு நூல்கள் துணைமையாதாரமாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

    அகநானூறு

    கடைச்சங்க காலத்தில் இயற்றப்பெற்ற நூல்களுள் ஒன்று அகநானூறு என்பர்.    அகத்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் 400 பாடல்கள் உள்ளன. இந்நூல் அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு என்று வேறு பெயர்களையும் கொண்டுள்ளது. 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்டு அடியளவில் பெரியது. பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். அகநானூற்றுப் பாடல்களைப் பாடியவர் 145 பேர். மூன்று (114, 117, 165) பாடல்களுக்குப் புலவர் பெயர் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை உப்பூரிக்குடிக்கிழார் மகன் உருத்திரசன்மனார் தொகுத்தும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தும் உள்ளனர்.

    1 -120 களிற்றியானை நிரை, 121- 300 மணிமிடைப்பவளம், 301-400 நித்திலக் கோவை  என   400 பாடல்களையும் முப்பிரிவாகப் பகுத்துப் பெயரிட்டுள்ளனர்.

    பதிப்பு

    ஓலைச் சுவடிகள், காகிதப்பிரதிகள் இவற்றை ஒப்பு நோக்கிப் பாட வேறுபாடுகள் சுட்டிக் காட்டிப் பதிப்புச் செய்வதே பதிப்பு என்பர்.

    அகநானூற்றுப் பதிப்புகளை நோக்குகையில் பெரும்பாலும் பகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ‘அகநானூறு முதல் பதிப்பு 1918 தொடங்கி 2010 வரை வந்துள்ள பதிப்புகள், வெளியீடுகள் என்ற நிலையில் 47 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் 13 நூல்களே பதிப்புகளாக அமைகின்றன’ என்று மா.பரமசிவன் (2010:39) அகநானூறு பதிப்பு வரலாறு (1918-2010) எனும் நூலில் குறிப்பிடுகிறார். 1918, 1920, 1923, 1926, 1933–இல் (இரு பதிப்பு) ஆறும் வே. இராஜகோபாலாரியனால் பதிப்பிக்கப்பட்டவை. 1940-இல் சைவ சித்தாந்த மகாசமாஜம், 1943-இல் களிற்றி யானைநிரை, 1944-இல் மணிமிடைபவளம், நித்திலக்கோவை மூன்றையும் பாகனேரி வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதச் செட்டியார், 1958-இல் மர்ரே.எஸ். இராஜம், 1990-இல் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை மூன்றையும் மயிலம் வே.சிவசுப்பிரமணியன், 2018-இல் களிற்றியானைநிரை மட்டும் ஏவா வில்தன் ஆகியோர் பதிப்பித்துள்ளனர்.

    1918 முதல் 2018 வரை அகநானூற்றிற்குப் பதிப்புகளாக 14 நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் இராஜகோபாலார்யன் பதிப்புகளை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

    இராஜகோபாலார்யன் பதிப்பு

    1918, 1920, 1923, 1926, 1933 (இரு பதிப்பு) ஆம் ஆண்டுப் பதிப்புகள் ஆறும் வே.இராஜகோபாலாரியனின் பதிப்புகளாகும்.

    அகநானூற்றை முதலில் பதிப்பித்து வெளியிட்டவர், கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன் (வே. இராஜகோபாலையங்கார்). 1918–இல் தொடங்கி 1933 வரை சிற்சில மாற்றங்களோடு பதிப்பித்து வெளியிட்டுள்ளார். பதிப்பிக்கத் தூண்டியவர்கள், சுவடி கொடுத்தவர்கள், பொருள் உதவி செய்தவர்கள், சரிபார்த்துத் தந்தவர்கள் போன்றன கூறுவதைப்  பதிப்பறங்களாகக் கடைப்பிடித்துள்ளார்.

    1918   :  முதல் பதிப்பு

    முதல் பதிப்பு 1918-இல்

    அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1918 ’

    என்று உள்ளது. இப்பதிப்பின் முகப்புப் பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் கிடைக்கவில்லை என்று இரா. ஜானகி ‘சங்க இலக்கியப் பதிப்புரைகள்’ (ப.38) எனும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    முதல் பதிப்பாசிரியர் யார்?

    அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் ரா. இராகவையங்கார் என்று சிலர் கருதுவதாக மா. பரமசிவன் (2010:2) தம் நூலில் கூறியுள்ளார். 1923ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்பு அட்டையில் ‘ஸேதுஸமஸ்தான வித்துவான் ஸ்ரீ உ. வே. ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் சோதித்துத் தந்தன’ என்று உள்ளதால் ரா. இராகவையங்கார் சோதித்துத் தர, ராஜகோபாலார்யன் பதிப்பித்திருக்க வேண்டும்.

    1918–இல் வெளிவந்துள்ள பதிப்பில் KAMBAR VILAS BOOK DEPOT என்று பதிப்பகம் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. கம்பர் விலாசப் பதிப்பகம், ராஜகோபாலார்யனால் நடத்தப்பட்டது என்பதை ராஜகோபாலார்யனின்  1933ஆம் ஆண்டுப் பதிப்பின், மறுபதிப்பில் இடம்பெற்றுள்ள வாழ்க்கை வரலாறு அகச் சான்றாக அமைந்து உறுதிப்படுத்துகிறது.  இவற்றைக் கொண்டு ராஜகோபாலார்யனே முதல் பதிப்பாசிரியர் என்று கூறலாம்.

    90 பாட்டா? 120 பாட்டா?

    முதல் 90 பாடல்களுக்குப் பழைய உரை உள்ளது. அது யார் உரை என்று தெரியவில்லை.  முகப்பட்டையில் ‘முதற்பகுதி’ என்று உள்ளதால். பழைய உரை கொண்ட 90 பாடல்கள் மட்டும் பதிப்பிக்கப்பட்டதா? அல்லது பழைய உரையுடன் 30 பாட்டுக்கு (91 முதல் 120வரை) மூலத்தைச் சேர்த்து களிற்றியானைநிரை (120) முழுவதும் பதிப்பிக்கப்பட்டதா? என்ற ஐயம் தோன்றுகிறது. இந்த ஐயத்திற்கு அவர் எழுதிய ஸ்ரீ பொன் ஆடு என்ற நூல் விடை கூறுகிறது. 1918–இல் களிற்றியானை நிரை மட்டும் வெளிவந்துள்ளது என்பதை

    1927-இல் (பிரபவ) வெளிவந்துள்ள ராஜகோபாலார்யனின் ‘ஸ்ரீ: பொன் ஆடு’ எனும் நூல்வழி அறியமுடிகிறது. அந்நூலின் பின் அட்டையில் தம் அகநானூற்று நூலுக்குக் கிடைத்துள்ள நூலக ஆணை பற்றிய செய்தியை இராஜகோபாலார்யன் பதிவு செய்துள்ளார் (விவரம்: பின்னிணைப்பு – 4). அப்பதிவின் மையப்பகுதி வருமாறு:

    “ A copy of the first part of  “Ahananuru” containing 120 stanzas is a useful edition to the library and the Deputy Inspectors of School are permitted to purchase a copy of the same from the allotment placed at their disposal under“ Books and periodicals “in the current year’s budget” (1927: பின் அட்டை).” (மா.பரமசிவன் 2010:7)   அறிய முடிகிறது.

    1920   : இரண்டாம் பதிப்பு

    1920-இல்

    ‘ஸ்ரீ: அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும், இரண்டாம் பகுதியும்’ MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1920, copyright], [price Rs. 9.’

    என்ற பதிப்பு வெளிவந்துள்ளது. இப்பதிப்பிலும் பதிப்பாசிரியர் பெயர் இல்லை; பதிப்பகப் பெயர் உள்ளது.  முகவுரை எதுவும் இல்லாமல் கடவுள் வாழ்த்துடன் தொடங்கி, 90ஆம் பாடல்வரை பழைய உரையுடனும் பிற பாடல்களின் மூலமும், இறுதியில் பாயிரமும், செய்யுள் முதற் குறிப்பகராதியும் உள்ளன.

    1920-இல் இராஜகோபாலார்யன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எவ்வித முன்னுரையும் இல்லாமல் 90 பாடல்களைப் பழைய உரையுடன் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு, இராஜகோபாலார்யன் பதிப்பு என்பதை 1923-இல் பதிப்பித்துள்ள அகநானூற்று நூலின் ஒரு விஞ்ஞாபனம் என்னும் பகுதி உறுதிப்படுத்துகின்றது. அப்பகுதி வருமாறு:

    பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறாதது ஏன்?

    பதிப்பகத்தின் பெயர் இடம்பெற்று, பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. அதாவது உள்ளதை மட்டும் பதிப்பித்துப் பதிப்பாசிரியர்க்குரிய பதிப்பறங்களை மேற்கொள்ளாத போது பதிப்பாசிரியர் பெயரை ஏன் சேர்க்க வேண்டும் என்று இராஜகோபாலார்யன் நினைத்திருக்கலாம்.  1923-இன் பதிப்பில் பாடல்களைத் தவிர முகவுரை தொடங்கிப் பொருட்குறிப்பகராதி வரை, பதினைந்து தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. பதிப்பாசிரியர் இப்பதிப்புகளில் பதிப்பறங்களைச் சிறந்த முறையில் கடைப்பிடித்துள்ளதால் பதிப்பாசிரியர் பெயரைச் சேர்த்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது. இதிலிருந்து வே. இராஜகோபாலார்யன் பதிப்பறங்களை மேற்கொண்டால் மட்டுமே பதிப்பாசிரியார் பெயர் இடம் பெறவேண்டும் இல்லையென்றால் பதிப்பாசிரியர் பெயர் இடம் பெறல் கூடாது என்ற கருத்துடையவராக இருந்துள்ளதை உணர முடிகின்றது. இதன் மூலம், அவர்   சிறந்த பதிப்பாசிரியருக்குரிய இலக்கணத்தைக் கடைப்பிடித்துள்ளார் என்றே கூறலாம்.

    1923   : மூன்றாம் பதிப்பு

    1923-இல்

    ‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், இவை ஸேது ஸம்ஸ்தான வித்துவான் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் சோதித்துத் தந்தன, மயிலாப்பூர் கம்பர் விலாஸம் வே. இராஜகோபாலையங்கார் பதிப்பு, ருதிரோத்காரி ளு], [விலை ரூ.10.’

    என்பது அவரின் மூன்றாம் பதிப்பாகும்.

    1920–இல் குறைப் புத்தகமாக வெளியிட்ட ராஜகோபாலார்யன் உடல்நிலை சரியானபின் 1923–இல் இரா. இராகவையங்காரைப் பரிசோதிக்கச் செய்து தம் பதிப்பைச் செம்மை செய்துள்ளார்.

    ‘1923 இல் ரா.இராகவையங்காரைப் பரிசோதித்துத் தருமாறு வேண்டுகிறார்; அவரும் பரிசோதித்துத் தர இணங்கிப் பரிசோதித்து 69 பாடல்களைச் (விவர: பின்னிணைப்பு-8:அட்டவணையில் 1923ஆம் ஆண்டிற்குரிய பகுதி) செம்மை செய்கிறார்’ (2010:43)

    1.முகவுரை – ரா. இராகவையங்கார், 2. ஒரு விஞ்ஞாபனம் – வே. இராஜகோபாலன், 3.சோதனைப் பத்திரம், 4.பாடினோர் வரலாறு, 5.தொகுத்தோர் வரலாறு, 6.தொகுப்பித்தோர் வரலாறு, 7.அரசர் முதலியோர் வரலாறு, 8.உரையாசிரியர் வரலாறு, 9.அகநானூற்று ஆராய்ச்சிக் குறிப்பு, 10.ஐந்திணைக்கு உரிய பாடல்கள், 11. இலக்கணக் குறிப்பு, 12.சுருக்கக் குறியீடு, 13.கடவுள் வாழ்த்து, 14.90 பாட்டுக்குப் பழைய உரை + (91-400) மூலம், 15.பாயிரம் 16.செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 17.அபிதான குறிப்பு அகராதி, 18.பொருட்குறிப்பு அகராதி ஆகியன இடம் பெற்றுள்ளன.

    1926   : நான்காம் பதிப்பு

    1926-இல்

    ‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு களிற்றியானைநிரை மூலமும் முதற்றொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும், இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும்’ சென்னை, கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், அக்ஷய ளு சித்திரை மீ, விலை ரூ. 4.’

    என்னும் பதிப்பு வெளிவந்துள்ளது. அப்பதிப்பில், 1.முகவுரை – ராஜகோபாலார்யன், 2.அகநானூறு முகவுரை – இரா.இராகவையங்கார், 3.ஒரு விஞ்ஞாபனம் – வே.இராஜகோபாலன், 4.சோதனைப் பத்திரம் 5.கடவுள் வாழ்த்து, 6.120 பாட்டு, 7.அபிதானக் குறிப்பு முதலியன, 8. சோதனைப் பத்திரம், குறிப்புரை ஆகியன இடம் பெற்றுள்ளன.

    முன்னர் மூலத்தை மட்டும் பதிப்பித்தவர், இப்பதிப்பிலிருந்து உரை எழுதத் தொடங்குகிறார். இதனை ‘இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும்’ என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம். மேலும், ஒரு முகவுரையையும் ராஜகோபாலார்யன் எழுதுகிறார். ஏனென்றால் உரை எழுத தூண்டுகோலாக இருந்தவர் பற்றியும், பின் கிடைத்த ஏட்டுப் பிரதிகளால் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளதைப் பற்றியும் கூறுகிறார். இவற்றைப் பதிவு செய்தல் பதிப்பாசிரியர் கடமை என்பதை அறிந்தே மேலும் ஒரு முகவுரை அவர் எழுதியுள்ளார் எனக் கருதலாம்.

    ராஜகோபாலார்யன், அ. பின்னத்தூர் நாராயணசாமியுடன் இருந்ததால் அவருக்கு உரை எழுதும் அனுபவம் கிடைத்தது. அதனால் உரை எழுத தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.  அம்முகவுரைப் பகுதியின் ஒரு பகுதி வருமாறு: அ. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

    இப்பகுதியின் மூலம் பழைய உரையுடன் 30 பாட்டிற்கு ராஜகோபாலார்யன் குறிப்புரை என்று உரை எழுதியும், பின் கிடைத்த சில ஏட்டுப் பிரதிகளால் பல திருத்தங்கள் செய்தும் இப்பதிப்பைப் பதிப்பித்துள்ளார் என்பதை உணர முடிகின்றது.

    1926 ஆண்டு பெயரில் இரு பதிப்பு நூல்கள் வேறுபட்டு கிடைக்கின்றன. இது மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

    எ.கா.  முதல் பாடலில் நவிரல் என்ற சொல்லுக்குப் பொருள் மாறுபட்டுக் காணப்படுதல்

    1. நவிரல் – சூதல் (1926 -அ)
    2. நவிரல் – குலைதல் (1926 -ஆ)

    1933   :  ஐந்தாம் பதிப்பு

    ‘ஸ்ரீ: எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும்’ இவை ‘ஸேது ஸமஸ்தான மகாவித்துவான் பாஷா கவிசேகரர் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தன,’ ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம் மயிலாப்பூர், ஸ்ரீ முகளு], [விலை ரூ. 7-8-0.’

    என்பது இப்பதிப்பின் முகப்புப் பக்கம் ஆகும்.

    இந்நூலில் 1. இரண்டாம் பதிப்பின் முகவுரை – ராஜகோபாலார்யன், 2. முகவுரை – இரா. இராகவையங்கார், 3. ஒரு விஞ்ஞாபனம் – வே. இராஜகோபாலார்யன், 4. செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 5. அபிதானக் குறிப்பு முதலியன, 6. இலக்கணக் குறிப்பு, 7. சுருக்கக் குறியீடு, 8. கடவுள் வாழ்த்து, 9.முதல் 90 பாட்டுக்குப் பழைய உரையும்+70 பாட்டுக்கு ராஜகோபாலார்யன் உரையும் மற்றவை மூலம் மட்டும் இடம்பெற்றுள்ளன. 10. பாயிரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    இப்பதிப்பு 91-160 பாட்டுக்கு ராஜகோபாலார்யன் உரையைக் கொண்டுள்ளது.

    இரண்டாம் பதிப்பின் முகவுரையில் உள்ள,

    பகுதியைக் கொண்டு,

    1. அகநானூற்று உரை மு. இராகவையங்கார் உரையா?

    ‘121-160 ஆம் பாடல்களின் உரை, மு. இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது என்பர்.

    2.பதிப்பாண்டு எது?

    1935 -இல் அவர் மரணம் அடைகிறார்.  அவர் இறந்த  செய்தி 1933 நூலில் எப்படி இடம் பெற்றுள்ளது? மேற்பகுதி 1933 –இல் இடைச்செருகப்பட்டதா? அல்லது முன்னர் (1933-இல்) அச்சிடப்பட்ட பகுதிகள் 1935 பிறகே அச்சுடன் சேர்த்து நூலாக்கப்பட்டனவா?’என்ற இரண்டு வினாக்களை மா.பரமசிவன் எழுதிய அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் (2016) என்ற நூலின் அணிந்துரையில் ஆ.மணி எழுப்பியுள்ளார்.  முதல் கேள்வி, மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

    1933-ஆம் ஆண்டு பதிப்பில் எவ்வித மாற்றமுமின்றி ராஜகோபாலார்யனின் இறந்த செய்தியுடன் கூடிய வாழ்க்கை வரலாற்றை இணைத்து  1935–இல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். 1935ஆம் ஆண்டுப் பதிப்பு, மறுபதிப்பு என்று பதிப்பாசிரியர் கூறாததன் விளைவே ஆய்வில் குழப்ப நிலை  ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

    1933  : ஆறாம் பதிப்பு

    1933இல் நித்திலக் கோவையையும் பதிப்பிக்கிறார். ஸ்ரீ:எட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூன்றாவது நித்திலக் கோவை மூலம், இது ‘ஸேது ஸமஸ்தான வித்துவான் ஸ்ரீ உ.வே.ரா.இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தது, கம்பர் விலாசம் ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் பதிப்பு, கம்பர்  புஸ்தகாலயம், மயிலாப்பூர்,  சென்னை ஸ்ரீ முகளு  – ஆவணி மீ.

    1. இரண்டாம் பதிப்பின் முகவுரை – ராஜகோபாலார்யன், 2. அகநானூறு -முகவுரை – ரா. இராகவையங்கார், 3. ஒரு விஞ்ஞாபனம் -வே. இராஜகோபாலன், 4.செய்யுள் முதற்குறிப்பு அகராதி, 5. அபிதானக் குறிப்பு முதலியன, 6. இலக்கணக் குறிப்பு, 7. இப்பதிப்பில் எடுத்துக் காட்டிய நூற்பெயர் முதலியவற்றின் முதற்குறிப்பு விளக்கம், 8. மூன்றாவது நித்திலக் கோவை (301-400), பாயிரம்.

    தொகுப்புரை

    1918, 1920, 1923, 1926, 1933(இரு பதிப்பு)ஆம் ஆண்டுப் பதிப்புகள் ஆறும் வே. ராஜகோபாலாரியனால் சிற்சில மாற்றங்களோடு பதிப்பிக்கப்பட்டுள்ளன.  

    இவற்றில் 1918ஆம் ஆண்டுப் பதிப்புஅகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதி, MADRAS, KAMBAR VILAS BOOK DEPOT, MYLAPORE, 1918 ’ என்ற முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் கிடைக்கவில்லை. பதிப்பகத்தைக் கொண்டே முதல் பதிப்பாசிரியர் வே. ராஜகோபாலார்யன் என்றும், அவர் எழுதிய  ‘ஸ்ரீ பொன் ஆடு’ என்ற நூல் வழி 120 பாடல்களைக் கொண்டது இப்பதிப்பு என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

    1920ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + மூலம்) எவ்வித முகவுரையும் இல்லாமல் வெளிவந்ததற்கு உடல்நலமே காரணம் என்று 1923ஆம் பதிப்பில் கூறுகிறார்.

    1923ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + மூலம்) 18 தலைப்புகள் கொண்டு ஒரு முழுமையான பதிப்பாக அமைகிறது.

    1926ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + 30 பாட்டுக்கு குறிப்புரை, களிற்றியானை நிரை மட்டும்) வே.ராஜகோபாலார்யனைப் பதிப்பாசிரியராகவும், 30 பாட்டுக்குக் குறிப்புரை எழுதியதால் உரையாசிரியராகவும் அறிமுகப்படுத்துகிறது.

    1926 ஆம் ஆண்டினையுடைய  இரு பதிப்பு நூல்கள் கிடைக்கின்றன. இந்நூல்கள், பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளன.

    1933ஆம் ஆண்டுப் பதிப்பு (90 பாட்டுக்கு பழைய உரை + 91 இலிருந்து 60 பாட்டுக்கு உரை + மூலம்) 10 தலைப்புகளைக் கொண்டுள்ளது. இப்பதிப்பின் முகவுரையைக் கொண்டு மு. ராகவையங்கார் உரை எழுதியிருக்கலாம் என்ற ஐயம் ஏற்படுகிறது. இது மேலாய்வுக்குரியது. இவ்வாண்டிலே நித்திலக்கோவையையும் பதிப்பித்துள்ளார்.

    1933 ஆம் ஆண்டு பதிப்போடு ராஜகோபாலார்யன் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றதைத் தவிர்த்து, வேறு எவ்வித மாற்றமுமின்றி 1935–இல் மறுபதிப்பு வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது.

    அடிக்குறிப்பு

    இரண்டாவது கேள்வி குறித்து மா. பரமசிவன் அவர்களை நேரில் சந்தித்தபோது, என்னிடம் உள்ள ராஜகோபாலார்யன் பதிப்பு நூலில் வாழ்க்கை வரலாறு பகுதியே இல்லை. நீங்கள் எப்படி கொடுத்தீர்கள் என்று கேட்டேன். நான் உ.வே.சா. நூலகத்திலிருந்து பெற்ற நூலில் அச்செய்தி இடம் பெற்றுள்ளது என்று கூறி அவரிடமுள்ள அகநானூறு நூல்களைப் படியெடுத்து தந்துதவினார்.  நான் வைத்துள்ள அந்தப் படியை அவரிடம் காட்டினேன். இந்நூல் எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறிப் பின் என் கருத்து ஏற்கும் வகையில் உள்ளது என்றார்.

    இது குறித்து ஆ. மணி அவர்களிடமும் தெரிவித்தேன்.  அப்போது, ஒரு படப்படியில் (pdf)  உள்ள நூல் அவர் இறப்புக்குப் பின் இராஜகோபாலார்யன் புகைப்படத்துடன், அவர் வாழ்க்கைக் குறிப்பைத் தனியே அச்சிட்டு முன்பகுதியில் இணைத்து, 1935-இல் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே நீங்கள் எழுப்பிய வினாவுக்கு விடையாக இருக்கும் என்றும் கூறினேன்.  அதற்கு அவர் உன் கருத்து ஏற்கும் வகையில் இருந்தாலும், ராஜகோபாலார்யன் பதிப்புகளின் உண்மைப் படிகளைப் பார்த்த பிறகே உறுதி செய்ய முடியும் என்று கூறினார்.

    துணைநூல் பட்டியல்

    1. ஸ்ரீ அகநானூறு மூலமும் உரையும், முதற்பகுதியும் இரண்டாம் பகுதியும், Madras: KAMBAR VILAS BOOK DE OT, Mylapore,1920.
    2. இராஜகோபாலார்யன் வே. (பதி.), எட்டுத்தொகை ஆகும் அகநானூறு மூலமும் உரையும், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1923.
    3. ராஜகோபாலார்யன் வே. (பதி.), ஸ்ரீஎட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு முதலாவது களிற்றியானைநிரை மூலமும் முதற்றொண்ணூறு பாட்டிற்குப் பழைய உரையும் இறுதி முப்பது பாட்டிற்கு ஸ்ரீ வத்ஸசக்ரவர்த்தி ராஜகோபாலார்யன் எழுதிய குறிப்புரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1926.
    4. ராஜகோபாலார்யன் வே. (பதி.), ஸ்ரீஎட்டுத்தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாஸம், மயிலாப்பூர், சென்னை, 1933.
    5. பரமசிவன் மா., அகநானூறு ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2016.
    6. பரமசிவன் மா., அகநானூறு பதிப்பு வரலாறு (1918 – 2010), காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2010.
    7. பரமசிவன் மா., அகநானூற்றுப் பதிப்புப் பின்புலம், காவ்யா கோடம்பாக்கம், சென்னை, 2012.
    8. ஜானகி இரா., சங்க இலக்கிய பதிப்புரைகள், பாரதி புஸ்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை, 2010.
    9. ஏவா வில்தன், களிற்றியானைநிரை, EFEO & IFP, புதுச்சேரி, 2018.

    =========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை [Peer Review]:

    சங்க இலக்கியங்களில் நெடுந்தொகை நானூறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவது அகநானூறு. 1918ஆம் ஆண்டு முதல் வே.இராஜகோபால ஐயங்கார் அவர்களால் அகநானூறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுரையாளர் இராஜகோபால ஐயங்காரின் அகநானூற்றுப் பதிப்புகள் அமைந்துள்ள முறை, வெளியிடப்பட்டுள்ள ஆண்டுகள், பதிப்புகளின் அமைப்பு ஆகியன குறித்து அறிமுகப்படுத்துகின்றார். இவர் 1918 முதல் 1933 வரையில் வெளிவந்துள்ள வே.இராஜகோபால ஐயங்காரின் அகநானூற்று பதிப்புகளைத் தனித்தனியே விளக்கியுள்ளார். வே.இராஜகோபால ஐயங்காரின் பதிப்பாக்கப் பின்புலத்தில் ரா.இராகவையங்கார் செயல்பட்டுள்ளார் என்பதை இவரது பதிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

    – வே. ராஜகோபாலார்யன் செய்த அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகம் செய்வதும், பதிப்பாசிரியர் – பதிப்பாண்டுகளில் உள்ள சிக்கல்களை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

    – 1926ஆம் ஆண்டுப் பெயரில் இரு பதிப்பு நூல்கள் வேறுபட்டுக் கிடைக்கின்றன. இது மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளது.

    – ‘121-160 ஆம் பாடல்களின் உரை, மு. இராகவையங்கார் செய்ததாக இருக்கலாமோ என எண்ணத் தூண்டுகிறது என்பர்.

    – 1926 ஆம் ஆண்டினையுடைய இரு பதிப்பு நூல்கள் கிடைக்கின்றன. இந்நூல்கள் பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் மேலாய்வுக்குரியதாக அமைந்துள்ளன.

    ஆய்வாளர் மேற்கண்ட கேள்விகளையும் ஆய்வுச் சிக்கல்களையும் கட்டுரையில் நுட்பமாக முன்வைக்கின்றார். ஆனால் அவற்றிற்கான முழுத் தீர்வைக் கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தவில்லை.

    இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகள்தோறும் முகவுரை பகுதியில் முன்வைக்கின்ற கருத்துகளை, தலைப்புகளின் அடிப்படையில் மட்டும் கட்டுரையாளர் தொகுத்துத் தருகின்றார். அத்தலைப்புகளுக்குள் முன்வைத்துள்ள கருத்துகள் குறித்த கட்டுரையாளரின் பார்வை, கட்டுரையில் வெளிப்படவில்லை

    வே.இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளை அறிமுகப்படுத்துவதாகவே கட்டுரை பெரிதும் அமைகின்ற காரணத்தினால் ஆய்வுக் கட்டுரையாக வெளியிட இயலாது. ஆயினும், ஆய்வாளரின் உழைப்பையும் ஈடுபாட்டையும் கருத்திற் கொண்டு இக்கட்டுரையினை இலக்கியக் கட்டுரைப் பகுதியில் வெளியிடுகிறோம்.

    =========================================================

    Share
  • அகநானூறும் பாலையின் முப்பொருளும்

    முனைவர் ம. தமிழ்வாணன்

    உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

    அகநானூறு

    சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:

    1. களிற்றியானை நிரை (1 – 20)
    2. மணிமிடை பவளம் (121 – 300)
    3. நித்திலக்கோவை (301 – 400)

    என்பனவாகும். இப்பகுப்பினை,

    களித்த மும்மதக் களிற்றியானை நிரை

              மணியொடு மிடைந்த அணிகினர் பவளம்

              மேவிய நித்திலக் கோவை என்றாங்கு

              அத்தகு பண்பின் முத்திறமாக

              முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை

    என்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது. இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.

    திணையும் பாடலும்

    அகநானூற்றைப் பொறுத்தவரை பாடலின் எண்ணைக் கொண்டு இன்ன திணைப்பாடல் எனச் சுட்டிக்காட்ட முடியும். அந்த வகையில் புலவரின் தொகுப்புத்திறனும் பகுப்புத்திறனும் பாராட்டிற்குரியன. இதனை,

    ஒன்றுமூன்று ஐந்து என்பதன் பாலை; ஓதாது

              நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே

              ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு

              கூறாதவை குறிஞ்சிக் கூற்று

    என்னும் வெண்பாப் பாடல் எடுத்துக்காட்டுகிறது. அதன் திணைப் பகுப்பு விவரம் வருமாறு,

    1. 1, 3, 5… 399 – பாலைத்திணைக்கு உரியவை
    2. 4, 14, 24… 394 – முல்லைத்திணைக்கு உரியவை
    3. 6, 16, 26 …. 396 – மருதத் திணைக்கு உரியவை
    4. 10, 20, 30…. 400 – நெய்தல் திணைக்கு உரியவை
    5. 2, 8…. 392, 398 – குறிஞ்சித் திணைக்கு உரியவை

    எண் அடிப்படையில் அகநானூற்றில் குறிப்பிட்டுள்ள திணைப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை வருமாறு,

    பாலைத்திணைப் பாடல்கள் – 200

    முல்லைத்திணைப் பாடல்கள் – 40

    மருதத்திணைப் பாடல்கள் – 40

    நெய்தல் திணைப்பாடல்கள் – 40

    குறிஞ்சித்திணைப் பாடல்கள் – 80

    தொகுத்தவர் – உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்

    தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

    பாயிரம் இயற்றியவர் – இடையல நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்ல தரையனார்.

    கடவுள் வாழ்த்து – பாரதம் பாடிய பெருந்தேவனார்.

    பாலைப் பாடிய புலவர்கள்

    அகநானூற்றில் இடம்பெற்றுள்ள 200 பாலைத்திணைப் பாடல்களில் இரண்டினைப் பாடியோர் பெயர் தெரியவில்லை. எஞ்சியுள்ள 198 பாடல்களைப் பாடிய புலவர்களின் வரிசையைக் காண்போம். ஒரு புலவரால் பாடப்பட்ட 62 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று பாடல்களைப் பாடியோர் மூவரும் இரண்டிரண்டு பாடல்களைப் பாடியோர் எண்மரும் நான்கு பாடல்களைப் பாடியோர் நால்வரும் இடம் பெற்றுள்ளனர்.    குடவாயிற் கீர்த்தனாரும் நக்கீரரும் தலா ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளனர். கல்லாடனார் எழு பாடல்களைப் பாடியுள்ளார். எயினந்தை மகனார் இளஞ்கீரனார் அவர்கள் ஒன்பது பாடல்களைப் பாடியிருக்கிறார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, கயமனார், மருத இளநாகன் போன்ற மூவரும் தலா 12 பாடல்களைப் பாடியுள்ளனர். சிறப்பிற்குரிய மாமூலனார் 27 பாடல்களைப் பாடியுள்ளார். இதில் பாலை பாடுவதில் வல்லவரான பெருங்கடுங்கோவை விட மாமூலனார் அகநானூற்றில் மிகுதியான பாடல்களைப் பாடியமை அறியத் தகுந்த செய்தியாகும்.

    பாலைத் திணை

    தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தில் திணைகள் ஐந்தெனச் சுட்டப்பட்டுள்ளது. அகத்திணைகள் ஏழு என்று பகுத்துச் சொல்லும் தொல்காப்பியர் இடைநிற்கும் ஐந்து திணைகளை அன்பின் ஐந்திணை என்று கூறுகிறார்.

    நடுவண் ஐந்திணை நடுவணது வொழிய

              படுதிரை வையம் பாத்திய பண்பே” (அகத்.2)

    இதில் பாலைத்திணை நீங்கலாக நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு.

    பாலைத்திணை என்பது சுரமும் சுரஞ் சார்ந்த நிலமும் ஆகும். இதன் உரிப்பொருளாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் திகழ்கிறது (அகத்.14). இத்தகைய பாலைத்திணைக்குரிய சிறுபொழுது, பெரும்பொழுது பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர்,

    நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு

              முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (அகத்.9)

    பின்பனி தானும் உரித்தென மொழிப” (அகத்.10)

    என்று சுட்டுவதைக் காணலாம். இதனால் வேனிற் காலத்துப் பெரும்பொழுதும் நண்பகளாகிய சிறுபொழுதொடு பின்பனிக்காலமும் பாலைக்குரிய பொழுதுகளாகும் என்பது பெறப்பட்டது. பாலை நிலம் என்பது நிலையானதல்ல என்பதை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். இக்கருத்தினைப் பற்றி இளங்கோவடிகள் ‘

    முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

    நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலம்பு.64-66)

    என்று சுட்டுவதைக் காணலாம்.

    முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

    நுவலுங்காலை முறைசிறந்தனவே

    பாடலுள் பயின்றவை நாடும் காலை” (அகத்.3)

    தொல்காப்பியத்தில் ஒவ்வொரு திணைக்கும் மூவகைப் பொருள்கள் இருப்பதை எடுத்துக் கூறுகிறார். அவை,

    1. முதற்பொருள் – நிலமும் பொழுதும்
    2. கருப்பொருள் – கருவாய் அமைந்தவை (தெய்வம், உணவு, விலங்கு…)
    3. உரிப்பொருள் – தனிச்சிறப்பு, ஒழுக்கம்

    என்னும் பொருள்களாகும்.

    பாலையின் முதற்பொருள்

    பாலைத்திணையின் மணலாகிய (சுரவழி) முதற்பொருளை அகநானூற்றுப் பாடல்கள் வறண்ட நிலமாகவே காட்டுகின்றன. இந்நிலத்தை அடைசேர்த்தும் சேர்க்காமலும் அருஞ்சுரம் (பா.17,203,275) கோட்சுரம் (பா.27), சுரம் (பா.721,353), வியன்சுரம் (பா.361), வெஞ்சுரம் (பா.327,385) போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர்.

    சூரிய கதிர்களால் நிலப்பகுதி வெப்பத்தைப் பெற்றுப் பாலை நிலமானதைக் “கோடை நீடிய அகன்பெருங் குன்றம்” (அகம்.45) என்னும் பாடலடி விளக்குகிறது. மேலும் நிழற்கவின் இழந்த நீர்இல் நீளிடை அழல்அவிர் அருஞ்சுரம் (அகம்.213). கவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம் (அகம்.325). ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர் (அகம்.267) என்னும் அடிகள் பாலைநிலம் பற்றி எடுத்துரைக்கின்றன.

    கருவூர் நன்மார்பன், மலையும் மலைசார்ந்த இடமும் மிகுந்த வெப்பத்தின் தாக்குதலால் ஈரமற்றுச் சுரமாவதை “ஈரமில் வெஞ்சுரம்” (அகம்.277) என்கிறார். மாமூலனார் பாடிய,

    எரிகவர் உண்ட கரிபுறப் பெருநிலம்

              பீடுகெழு மருங்கின் ஒடுமழை துறந்தென

              ஊன்இல் யானை உயங்கும் வேனில்” (அகம்.233:3-5)

    என்ற பாட்டினால், ‘குறிஞ்சி நிலத்தைத் தமக்குரிய வாழிடமாகக் கொண்டது யானை. அது நெருப்பினால் எரிந்து நாசமாகியதால் கரிந்த பெரிய நிலத்தில் வாழ்ந்தது. இங்குள்ள வெப்பத்திற்கு அஞ்சிய மேகங்கள் வேறிடத்திற்குச் சென்றமையால் அங்கு மழையில்லை. அதனால் அங்கு வாழ்ந்த யானை உணவின்றி மேலிந்து காணப்பட்டது’ என்னும் செய்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    பாலைத்திணைக்குரிய பெரும்பொழுதுகள் இரண்டு அவை இளவேனில், முதுவேனில் காலங்களாகும். பின்பனி காலமும் உரியது என்பதால் முக்காலங்கள் உரியன.

    இளவேனிற்காலம் – சித்திரை, வைகாசி

    முதுவேனிற்காலம் – ஆனி, ஆடி

    பின்பனிக்காலம் – மாசி, பங்குனி

    பண்டைக் காலத்தில் கோடை காலத்தை என்றூழ் என்றும் அழைப்பர். இதனை,

    என்றூழ் நின்ற புன்தலை வைப்பு” (அகம்.21:14)

    ஈந்து குருகு உருகும் என்றூழ் நீளிடை” (அகம்.55:2)

    எறிபருந்து உயவும் என்றூழ்” (அகம்.81:9)

    என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. மேலும் வேனிற்காலத்தை யானர் வேனில் (அகம்.317) காமர் வேனில் (அகம்.341) என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.

    சேரமான் இளங்குட்டுவன், வேனிற் காலத்தில் இலைகள் உதிர்ந்து பின்னர்த் தடுத்துப் பூவோடு பொலிவாய் விளங்கும் இக்காலத்தில் கதிரவனின் வெப்பத்தால் காடு காய்ந்து கிடக்கும் அங்குப் பெருங்காற்று வீசி மூங்கிலைத் தாக்கும். அதனால் சிதறி விழுந்த தீப்பொறியின் நெருப்பால் பசுமை இழந்த மலை உச்சிகள் உடைய பயனற்ற சுரவழிகள் காணப்படுவதைச் சுட்டிச் செல்கிறார். பாலைத்திணைக்குரிய பின்பனிக் காலத்தை அற்சிரம் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது. இதனை,

    அற்சிரம் நீங்கிய அழும்பத வேனில்” (அகம்.97:17)

    மழைகால் அற்சிரம் (அகம்.205:15)

    புகைநிற உருவின் அற்சிரம்” (அகம்.317:3)

    என்னும் சொற்றொடரால் அறியலாம். வாடைக்காற்று கூதிர் காலத்திற்கும் முன்பனிக் காலத்திற்கும் உரியது. அந்தக் காற்று பிடாவினது இனிய மணத்தை எங்கும் பரவச் செய்யும். இக்காலத்தில் தோன்றுகின்ற பனியானது நம்மை வருத்துகிறது. இதனைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியுமா? எனத் தோழியிடம் தலைவி கூறினாள். இச்செய்தியைக் கருவூர்க் கலிங்கத்தார் பாடுகின்றார்.

    வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்

              கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற

              பனிஅலைக் கலங்கிய நெஞ்சம்” (அகம்.183:12-15)

    கருப்பொருள்

    கருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குக் கருவால் அமைந்த பொருட்களைக் குறிக்கும். இக்கருப்பொருட்களாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பனவும் பிறவும் ஆகும். பிறவும் என்பதற்கு இளம்பூரணர் தனது உரையில் (அகத்.20 உரை) யாழின் பகுதிகளாகிய பண், நீர் போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார்.

    பாலைத்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம் – கொற்றவை. உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள். மா – வலியழிந்தயானையும், வலியழிந்த புலியும், வலி அழிந்த செந்நாயும். மரம் – பாலை, இருப்பை, கள்ளி, சூறை கொண்ட பாறையும். செய்தி – ஆறலைத்தல். பண் – பாலை பிறவும் என்றதனால் பூ – மராம்பூ. நீர் – அறுநீர்க் கூவலும் அறுநீர்ச் சுனையும் (அகம்.20 உரை) என இளம்பூரணர் குறிப்பிடுகிறார். இந்நிலத்திற்குரிய தெய்வமான கொற்றவையைக் குடவாயிற் கீரத்தனார் “கானமர் செல்வி” (அகம்.345) என்று கூறுவதைக் காணமுடிகிறது. நிலத் தலைவனை மீளி, விடலை, காளை, எனக் குறிப்பிடுவதை,

    மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி” (அகம்.93:18)

    மீளி உள்ளம் செலவு வலி உறுப்ப” (அகம்.373:7)

    வெள்வேல் விடலை” (அகம்.7:12)

    கூர்வேல் விடலை” (அகம்.315:14)

    திருந்துவேல் விடலை” (அகம்.195:2)

    வன்கண் காளை” (அகம்.263:9)

    வயக்களிற்று அன்ன காளை” (அகம்.55:5)

    கடுங்கண் காளை” (அகம்.321:12)

    என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன. பாலை நிலத்தினுடைய மக்கள் நீருக்காகக் கிணற்றை நம்பி இருந்தனர். அக்கிணறுகள் நீரற்றுக் காணப்பட்ட நிலையை, ஓலைக் கூவல் (அகம்.21) அகலிடம் குழித்த அகல்வாய்க் கூவல் (அகம்.295) என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.

    மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனின் பாட்டில், ‘யானை நீர்வேண்டித் துழாவித் பார்த்த கிணற்றினைத் தலைவன் ஆழமாகத் தோண்டினான். அதிலிருந்து குறைகுடமாக வெளிப்பட்ட உப்பிநீரைத் தலைவி குடித்தாள்’ (அகம்.207) என்று சொல்லப்பட்டுள்ளது.

    பறை, மா

    பாலை நில எயினர் அச்சத்தைப் பிறருக்கு மிகுதியாகத் தரும் துடி என்னும் தோற்கருவியைப் பயன்படுத்தினர். இதனை, உருள்துடி (அகம்.19) கடுந்துடி (அகம்.79) என்னும் சொற்கள் எடுத்துரைக்கின்றன. மதுரைக் காஞ்சியில் மறவர்கள் துடிகளை முழங்கியபடி வணிகக் கூட்டத்தோடு போரிட்டு வென்று பெறுதற்குரிய அணிகலன்களைப் பெற்றனர் (அகம்.89) என்று கூறப்பட்டுள்ளது. இம்மக்கள் பாலை யாழையும் பாலைப் பண்ணையும் பயன்படுத்தியதைத் தங்கால் பொற்கொல்லனார் (அகம்.335) பாடலின் மூலம் அறியலாம்.

    விலங்குகளில் யானை, புலி, மான், புறா, பருந்து, எருவை, கழுகு போன்றவையும் தாவரங்களில் ஓமை, இரும்பை, குராம்பூ, மராம்பூ போன்றவையும் அகநானூற்றில் மிகுதியான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலைநில விலங்காக அறியப்படுவது செந்நாயாகும். இந்நாய் வன்மையான பற்களைக் கொண்டது. இதனை,

    வல்லையிற்றுச் செந்நாய்” (அகம்.53:6)

    திண்நிலை எயிற்ற செந்நாய்” (அகம்.199:9)

    என்னும் அடிகளால் அறியலாம்.

    உரிப்பொருள்

    அந்தந்த திணைகளுக்கு உரிமையுள்ள தனிச்சிறப்பு, ஒழுக்கம் பற்றி எடுத்துரைப்பது. அதாவது பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் உரிப்பொருளாகும். இத்தகைய உரிப்பொருளை உணர்த்துவனவாகப் பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன. அகநானூற்றில் இளங்கீரனார், ‘தலைவன் நாடிடையிட்டும் காடிடையிட்டும் நெடுந்தூரம் பிரிந்து செல்கிறான். அவனுடைய நெஞ்சமோ தலைவியைச் சூழ்ந்து கொண்டே இருக்கிறது’ என்கிறார். இச்செய்தியை,

    கடுங்குரல் குடிஞைய நெடும்பெரும் குன்றம்

              எம்மொடு இறத்தலும் செல்லாய் பின்நின்று

              ஒழியச் சூழ்ந்தனை ஆயின் தவிராது

              செல்இனிச் சிறக்க நின்உள்ளம்” (அகம்.19:5-8)

    என்னும் பாடல் வெளிப்படுத்துகிறது. மாமூலனார், ‘தலைவன் பொருளுக்காகக் கொடிய தன்மையுள்ள பாலை நிலத்தையும் வேற்றுமொழி பேசுகின்றோர் நாட்டையும் கடந்து சென்றுள்ள நிலையை,

    “…………. நோன்சிலைத்

              தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்

              பிழியார் மகிழர் கழிசிறந்து ஆர்க்கும்

              மொழிபெயர் தோம் இறந்தனர்” (அகம்.295:14-17)

    என்னும் பாட்டினால் உணர்த்துகிறார். தலைவன் தலைவியை விட்டுப் பொருளுக்காக நெடுந்தூரம் பிரிந்து செல்வதை,

    “………….. சேய் நாட்டுப்

              பொலங்கல வெறுக்கை தருமார்” (அகம்.1:8-9)

              வெம்முனை அருஞ்சுரம் நீந்தித் தம்வயின்

              ஈண்டுவினை மருங்கின் மீண்டோர் மன்” (அகம்.103:10-11)

    என்னும் பாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.

    அகநானூற்றில் அதிகப் பாடல்களைக் கொண்ட திணை பாலைத்திணை என்பது அறியத்தகுந்தது. இந்நூலில் அமைந்துள்ள பாலைத்திணைப் பாடல்களில் முதற்பொருள். கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றும் ஒருங்கே பயின்று வருவதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம். மேலும் அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களை மிகுதியாகப் பாடியவர் மாமுலனாரே என்பதும் பொருள்வயின் பிரிந்து பொருளீட்டும் கடமை தலைவனுக்கே இருந்தது என்பதும் பாலைநில தமிழ் மக்களின் வாழ்வியல் நிலைகள் எவ்வாறு இருந்தன என்பதும் நன்கு வெளிப்பட்டு நிற்கின்றன.

    துணைநூற்கள்

    1. தாமோதரம்பிள்ளை சி.வை.(ப.ஆ),1885, தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சர் காட்டிஸ் பிரஸ் சென்னை.
    2. சாமிநாதையர்.உ.வே.(ப.ஆ) 1920, சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரை.
    3. சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்)1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு
    4. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.
    5. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.  கட்டுரையாளர், முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்தரமணி, சென்னை – 600113
    Share