Tag: அன்பு ஜெயா

  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 31, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு அன்பு ஜெயா அவர்கள்

    Anbu Jeya

     

    வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் சிட்னி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருவாளர் அன்பு ஜெயா அவர்கள். மருந்தாக்கியல் துறையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவராயினும் தமிழின்பால் ஆர்வம் மிக்கவர். உயரதிகாரியாகப் பணியாற்றிய இவர் தனது பணி ஓய்விற்குப் பிறகு தான் பங்கேற்ற தமிழ் சார்ந்த தன்னார்வப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அந்த வரிசையில், சென்ற வாரம் (ஆகஸ்ட், 24 அன்று)மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்று, ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சிப் பணிகள் பற்றிய சிறப்புரையாற்றினார். அயல்நாட்டில் தமிழ் வளர்க்கும் அரும்பணியை ஆற்றிவரும் திரு. அன்பு ஜெயா அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    சென்னையைச் சேர்ந்த முனைவர் அன்பு ஜெயா அவர்கள், மதுரை மருத்துவக் கல்லூரியிலும், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றவர். இரண்டாம் மொழி கற்பித்தலில் பயிற்சி பெற்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னி பாலர் மலர் தமிழ்ப்பள்ளிகளில் தன்னார்வலராகவும், அதன் மக்கள்தொடர்பு அதிகாரியாகவும், ஹோல்ஸ்வொர்த்தி கிளை தமிழ்ப்பள்ளியின் முதல்வராகவும் எனத் தொடர்ந்து பற்பல பொறுப்புகளை ஏற்றுத் தமிழ்ச்சேவை செய்து வருபவர். தற்பொழுது பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகராகவும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் கூட்டமைப்பின் புத்தகக் குழுவில் பங்கேற்று, பாடப்புத்தகங்கள் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

    தமிழ் ஆஸ்திரேலியன்” மாதஇதழின் (http://www.tamilaustralian.com.au/) இணையாசிரியரான அன்பு ஜெயா அவர்கள், ஆஸ்திரேலியாவிலும், புலம்பெயர்ந்த தமிழர் வாழும் அயல்நாடுகளிலும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் நடத்தி வருகிறார். தமிழை இரண்டாம் பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவியாகத் தனது இணையதளத்தில் (http://www.anbujaya.com/) பல பயிற்சிகளை தொகுத்து அளித்துள்ளார். தமிழ் பயிற்றுவிக்கும் அயலக பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இத்தளம் பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

    வாரம் ஓரிரு மணிநேரங்களே தமிழ்கற்கும் சூழ்நிலையில் வளர்பவர் அயலகத்தில் வளரும் தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் சிறுவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பொழுது, தாயகத்தில் கற்பிக்கும் முறையில் இருந்து சற்று வேறுபட்ட உத்திகளைப் பயன்படுத்தவேண்டியத் தேவையுள்ளது. இத்தேவை குறித்தும், அதற்கு உதவும் உத்திகள் குறித்தும் “சிறார்க்குத் தமிழ் கற்பிக்கப் பயன்படும் உத்திகள்” என்று அன்பு ஜெயா விவரிக்கும் கட்டுரையும் இத்தளத்தில் இடம் பெறுகிறது. இக்கட்டுரையை அவர் மலேசியாவில் 2013 ஆம் ஆண்டு நடந்த 10 ஆவது உலகத்தமிழாசிரியர் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார். மறு ஆண்டு, கோவையில் நடந்த “தாயகம் கடந்த தமிழ் 2014” எழுத்தாளர் மாநாட்டில், “ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் சமர்ப்பித்தார்.

    இந்த ஆண்டு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ஆஸ்திரேலியா பாலர் மலர் தமிழ்ப்பள்ளி ஆலோசகரான திரு. அன்பு ஜெயா அவர்கள்,

    Anbu Jeya Madhurai

    “ஆஸ்திரேலியாவில் தமிழர்களின் வளர்ச்சியும் தமிழ்மொழியின் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆஸ்திரேலியாவில்தான் முதன்முதலில் தமிழ் வளர்ச்சிக்கான பன்மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டது என்றும், தாய் மொழியைத் தவிர வேற்று மொழியொன்றை அறிந்துகொள்ள இத்திட்டம் வழிவகுக்கிறது என்றும் கூறினார். அந்த பாடத்திட்டத்திற்கேற்ப ஏழாம் வகுப்பு நூல்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றும், அடுத்த கட்டமாக எட்டாம் வகுப்புக்கான நூல்கள் உருவாகும் பணி தொடர உள்ளது என்றும் கூறினார். மேலும், திருக்குறள் நிகழ்ச்சிகள், இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு மாணவர்களுக்குத் தமிழின் சிறப்பு உணர்த்தப்படுகிறது என்றும், மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசனைகளும் பெறப்பட்டு ஆஸ்திரேலியாவின் தமிழ்வளர்சிப் பணி தொடரும் எனவும் கலந்துரையாடலில் ஆஸ்திரேலியாவில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் தமிழ் வளர்ச்சிப்பணிகள் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் உள்ளன. பன்மொழிச் சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழியில் சொல்வளம் பெற இத்தகைய வானொலிகள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ் ஓசை, கலப்பை, தென்றல், மெல்லினம் போன்ற அச்சு இதழ்களும் ஆஸ்திரேலியாவில் வெளி வருகின்றன. தமிழ்க் கல்வியினைப் பொறுத்தவரை தமிழ் அமைப்புகள் சில சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழைக் கற்பிக்கின்றன போன்ற தகவல்களையும் வழங்கி ஆஸ்திரேலிய தமிழ்வளர்ச்சியின் நிலையை எடுத்துரைத்தார்.

    புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களின் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ந்து கடந்த கால்நூற்றாண்டாகத் தன்னார்வப் பணியாற்றிவரும் வல்லமையாளர் அன்பு ஜெயா அவர்களைப் பாராட்டி அவர் பணிகள் சிறப்புறவும், அதனால் அயலகத் தமிழர்கள் பயன் பெறவும் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Contact Links:
    website: http://www.anbujaya.com/
    blog: தமிழ்ப் பந்தல்: http://tamilpandal.blogspot.com.au/
    facebook: https://www.facebook.com/anbu.jaya
    google.plus: https://plus.google.com/116850260359140513353/posts
    youtube: https://www.youtube.com/channel/UCAS3JlgjchEQxRMM8enxneQ
    http://tamilaustralian.com.au/magazine/?feb2014
    email: anbujaya2005@gmail.com
    Sources:
    http://epaper.dinamani.com/575841/Dinamani-Madurai/25-08-2015#page/1/1
    http://epaper.dinamalar.com/Gallery.aspx?id=25_08_2015_273_014_002&type=P&artUrl=25082015273014&eid=356
    http://www.dinamani.com/edition_madurai/madurai/2015/08/25/ஆஸ்திரேலியாவில்-தமிழ்ச்சொ/article2992538.ece

    Share