Tag: ஆசிரியர் குழு

  • வல்லமை ஆசிரியர் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு

    பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ், ஒன்பதாம் ஆண்டில் நடை போடுகிறது. 2019 மே மாதத்தில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. தரமான ஆய்வுக் கட்டுரைகளை அவற்றின் தகுதியை மட்டுமே பரிசீலித்து வெளியிட்டு வருகிறோம். இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன.

    அருஞ்செயல் புரிந்த ஒருவருக்கு வாரந்தோறும் வல்லமையாளர் விருதினை வழங்கி வருகிறோம். வாரந்தோறும் படக்கவிதைப் போட்டியும் நடத்தி வருகிறோம். இதுவரை சிறுகதை, கட்டுரை, கவிதை, கடித இலக்கியம், நூல் விமர்சனம்… எனப் பல திறன்களை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளை நடத்தியுள்ளோம்.

    வல்லமை, கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில் கூகுள், ஃபேஸ்புக், ஃபிளிக்கர், வாட்ஸப் ஆகியவற்றில் குழுமங்களை நடத்தி வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறது.

    வல்லமையை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் ஆசிரியர் குழுவினை விரிவுபடுத்த உள்ளோம்.

    *தமிழ் மொழியறிவும் கூர்மையான ஆய்வுக் கண்ணோட்டமும் இதழியல் ஆர்வமும் கொண்டவர்கள், உதவி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    *கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பயிற்சி இதழாளர்களாகப் பணியாற்றலாம்.

    *ஆய்வுக் கட்டுரைகளை நடுநிலையுடன் மதிப்பாய்வு செய்வதில் திறம் வாய்ந்த பேராசிரியர்களும் அறிஞர்களும் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

    *இணையத்தள வடிவமைப்பிலும் வேர்ட்பிரஸ் தொழில்நுட்பத்திலும் ஆண்டிராய்டு செயலி உருவாக்கத்திலும் அனுபவம் வாய்ந்தவர்கள், வல்லமைக்குத் தொழில்நுட்ப ரீதியில் உதவலாம்.

    • விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் பிழையின்றி எழுதவும் கணினியில் தட்டச்சு செய்யவும் கற்றவர்களாக இருக்க வேண்டும்.
    • படைப்புகளில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
    • சொந்தமாகக் கணிப்பொறியும் இணைய இணைப்பும் கொண்டிருக்க வேண்டும்.
    • நாள்தோறும் ஓரிரு மணி நேரம், வல்லமைக்காகச் செலவிடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
    • வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிய வேண்டும்.
    • வல்லமை, இலாப நோக்கில்லாத அமைப்பு என்பதால், எம்மால் ஊதியம் வழங்க இயலாது. ஆயினும், வல்லமை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
    • தமிழ்த் துறை மட்டுமின்றி, எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இல்லத்தரசிகளும் மாணவர்களும் கூட, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.
    • விருப்பம் உள்ளோர், உங்கள் சுயவிவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பத்தை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்பது நம் இலக்கு. வாருங்கள் இணைந்து சிந்திப்போம், செயல்படுவோம், முன்னேறுவோம்.

    Share
  • படக் கவிதைப் போட்டி!

    அன்பினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    10968398_790635987695368_6964584805244615655_n

    நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் அவர்களால் நம் குழும உறுப்பினரான அனிதா சத்யம் அவர்கள் இந்த மாதத்தின் சிறந்த ஒளிப்படக் கலைஞராகத் தேர்வு பெறுகிறார். அவர் எடுத்த படத்தை, கவிதைப் போட்டிக்கான முதல் படமாக அறிவிக்கிறோம். அழகோவியமான இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    Share