Tag: எஸ். நித்தியலக்ஷ்மி

  • “பெருந்தலைவர்” – கர்மவீரர் காமராசர்!

    — எஸ். நித்தியலக்ஷ்மி.

    பெருந்தலைவர்

    kaamaraasar

    முன்னுரை:
    தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker),பெருந்தலைவர் என்ற பெருமைக்குரிய காமராசர் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு உயர்ந்தவர். வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்து தமிழகத்துக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் நலன்களுக்கு மிகப்பெரும் தொண்டாற்றியவர்.

    பிறப்பு:
    விருதுநகர் மாவட்டம் விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி தம்பதியருக்கு 15.07.1903 ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் இவரின் பெயர் குலதெய்வமான காமாட்சி அம்மனின் பெயரையே சூட்டினர். இவரது தாயார் மட்டும் ராஜா என்று அழைத்து வந்தார். பின்னாளில் காமாராசு என பெயர் மாற்றம் பெற்று எல்லோராலும் அழைக்கப் பெற்றார்.

    கல்வி:
    தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கிய காமரசர், ஆறு வயதில் தந்தையை இழந்ததும் ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.

    சிறை வாழ்க்கை:
    ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

    அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ.வரதராசுலு நாயுடு அவர்களின் வாதத் திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

    1940ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும்போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு விடுதலை ஆன காமராசர் நேராகச் சென்று தனது நகராட்சித் தலைவர் பதவியை துறந்தார். அப்போது பதவிக்கு நேர்மையாகவும் முழுமையாகவும் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்று கூறினார்.

    மீண்டும் 1942ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார். இம்மாதிரியான சிறை வாழ்க்கைகளின்போது சுயமாகப் படித்துத் தன் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார்.

    அரசியல் குரு:
    மிகச்சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியுமான சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் காமராசர். 1936ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சியைக் கண்டு தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லத்திற்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார். குடியாத்தம் தொகுதியில் சட்டப்பேரவைக்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தமிழக முதல்வராக 13.04.1954 தமிழ் புத்தாண்டு அன்று பதவியேற்றார். முதல்வராக பதவியேற்றதும் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லம் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டுதான் தன் பணிகளைத் தொடங்கினார்.

    அமைச்சரவை:
    * காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன.

    * மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.

    * காமராசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த பக்தவச்சலம் இருவரையும் அமைச்சரவையில் அமைச்சர்களாக சேர்த்திருந்தார்.

    ஆற்றிய பணிகள்:
    ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்றும் உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது (ஆங்கிலேய அரசு காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலை நாட்கள் 180 லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப்பட்டது.

    காமராசர் முதல்வராக பதவி வகித்த காலங்களில் தமிழகத்தின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமை அளித்து பலத் திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின்கீழ் 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவை:

    * கீழ் பவானித்திட்டம்

    * மேட்டூர் கால்வாய்த்திட்டம்

    * காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்

    * மணிமுத்தாறு

    * அமராவதி

    * வைகை

    * சாத்தனூர்

    * கிருஷ்ணகிரி

    * ஆரணியாறு ஆகியவையாகும்

    முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களும், பெருந் தொழிற்சாலைகளும்:

    * பாரத மிகுமின் நிறுவனம்

    * நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

    * மணலி சென்னை சுததகரிப்பு நிலையம் (MRL) இதன் தற்போதைய பெயர் (CPCL)

    * இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

    * நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

    * கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

    * மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

    * குந்தா மின் திட்டம்

    * நெய்வேலி மற்றும் ஊட்டியில் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.

    அகிலஇந்திய காங்கிரஸ் (K.PLAN):
    மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும், குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் ‘காமராசர் திட்டம்’ ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதல்வர் பதவியை (02.10.1963) துறந்து பக்தவத்சலம் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தில்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 ஆம் தேதி அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவகர்லால் நேரு மறைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

    இறுதிக் காலம்:
    காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காமராசர் இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித நிலங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வாழ்க்கை பயணத்தை முடித்தார்.

    நினைவுச் சின்னங்கள்:
    காமராசர் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினைவிடம் ஒன்றை
    அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

    காமராசர் இறந்த பிறகு 1976-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள்

    எஸ். நித்தியலக்ஷ்மி.

    Google Search

    கூகுளில் தேடல் நுட்பங்கள்

    கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்குத் தேவையில்லாத பல தகவல்கள் பட்டியலிடப் படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம்.

    கூகுள் தேடல்கள் :
    1. குறிப்பிட்ட சொல் மட்டும்: நாம் சொற்கள் அடங்கிய சில சொல் தொகுதிகளைத் தருகையில், அடிப்படைத் தேடலில் அவை எந்த வரிசையில் இருந்தாலும், அந்த டெக்ஸ்ட் உள்ள தளம் காட்டப்படும். அப்படி இல்லாமல், குறிப்பிட்ட வரிசையில் சொற்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே தேவை எனில் என்ன செய்திட வேண்டும்? எடுத்துக்காட்டாக, “nor custom stale her infinite variety” என்ற வரிசையில் உள்ள ஷேக்ஸ்பியர் வரியினைக் கொண்டுள்ள டெக்ஸ்ட் உள்ள பக்கம் மட்டுமே வேண்டும் எனில், இந்த சொற்களை மேற்கோள் குறிகளுக்குள் தர வேண்டும். அப்படிக் கொடுக்கையில், இந்த வரிசையில் உள்ள சொற்றொடர்கள் உள்ள பக்கங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்.

    எனவே, இது போன்ற கட்டாயமான தேவை இருந்தால் மட்டுமே மேற்கோள் குறிகளுக்குள் தேடல் சொற்களை அமைக்க வேண்டும். சாதாரணத் தேடலில் அமைத்தால், பல முக்கிய தளங்களை நாம் காணாமல் இழக்க வேண்டியதிருக்கும்.

    2. சொல்லை விலக்கி அளிக்க: குறிப்பிட்ட ஒரு சொல்லுடன், இன்னொரு குறிப்பிட்ட சொல் இல்லாதவை மட்டுமே நமக்குத் தேவையாய் இருக்கும். எடுத்துக்காட்டாக, மெட்ரோ நகரங்களைப் (metro cities) பற்றித் தேடுகிறீர்கள். இப்போது வந்திருக்கும் விண்டோஸ் 8 தொகுப்பில் மெட்ரோ என்ற யூசர் இன்டர்பேஸ் முதலில் தரப்பட்டது. எனவே நீங்கள் metro cities என்று அளிக்கையில், விண்டோஸ் 8 குறித்த தளங்களும் காட்டப்படும். இதனைத் தவிர்த்து நகரங்களை மட்டும் பெற, Metro Cities windows என ஒரு சிறிய டேஷ் அடையாளத்தை (மைனஸ்) தேவையற்ற சொல்லுடன் இணைக்க வேண்டும். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் உள்ள எதுவும் வேண்டாம் என்றால், அந்த தளத்தின் பெயருக்கு முன்னால், site: எனக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, tamil kings site: wikipedia.org எனக் கொடுக்கலாம்.

    3. இணைச் சொற்களுடன் தகவல்: மேலே காட்டப்பட்டதற்கு எதிராக, ஒரு சொல்லைப் போன்றே பொருள் உள்ள இணைச் சொற்களும் (Synonyms) காட்டப்பட வேண்டும் எனில், (~) குறியீட்டினைச் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ~food facts எனக் கொடுத்தால், நல்ல உணவிற்கான பிற சொற்களுடன் தேடல் தகவல்கள் தரப்படும்.

    4. குறிப்பிட்ட தளத்தினுள் மட்டும்: உங்களுக்கான தேடல் குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனில், சொல்லுக்குப் பின்னால் site: என்ற சொல்லுடன், அந்த தளத்தின் யு.ஆர்.எல். தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, chromesite:support.google.com எனக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கையில் chrome என்ற சொல் support.google.com என்ற தளத்தில் இடம் பெறும் இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

    5. எந்த சொல்லானாலும் சரி: குறிப்பிட்ட தேடல் சொல் தொகுதியில் ஓர் இடத்தில், எந்த சொல் வந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினால், தேடலுக்கான சொல் தொடரில், அந்த இடத்தில் ஆஸ்டெரிஸ்க் குறியீட்டைத் தரலாம். எடுத்துக் காட்டாக “a * saved is a * earned” என அமைக்கலாம்.

    6. எந்த சொல்லுக்கான விடையும் வேண்டும்: சில சொற்களைக் கொடுத்துத் தேடச் சொல்கையில், அவற்றில் இரண்டில் எந்த சொல் இருந்தாலும் வேண்டும் என எண்ணினால், அந்த இரண்டு சொற்களுக்கிடையில் “OR” எனப் பெரிய எழுத்துக்களில் தர வேண்டும். எடுத்துக்காட்டாக olympics location 2014 OR 2018 எனத் தரலாம். இவ்வாறு தருகையில், ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடம் 2014 ஆம் ஆண்டு அல்லது 2018 ஆம் ஆண்டு என இரண்டு ஆண்டுகளுக்குமான தேடல் நடைபெற்று விடை கிடைக்கும். இந்த குறியீடு இல்லை என்றால், இரண்டு சொற்களும் இடம் பெறும் தள விடைகள் மட்டுமே கிடைக்கும். இந்த தேடல் குறியீட்டில் என்பதற்குப் பதிலாக “|” என்ற குறியீட்டினையும் அமைக்கலாம்.

    7. ரேஞ்ச் அமைக்க: விலை, ஆண்டு, நேரம், காலம் குறிப்பிடுகையில், இதிலிருந்து இது வரையிலானது வரை தேடுக என்று நாம் அமைக்க விரும்புவோம். அப்போது ரேஞ்ச் அமைப்பில் உள்ள இரண்டுக்கும் இடையே இரு புள்ளிகளை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலான விலை ரேஞ்சில் உள்ள கேமராக்கள் குறித்து அறிய camera Rs.50..Rs.100 என அமைக்கலாம்.

    Share