Tag: ஏ எஸ் கோவிந்த ராஜன்

  • அழகைப் பார்த்து ஏமாந்த மீன்!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    இயற்கை எழில் நிறைந்த அழகான ஊர் தான் புதூர். அங்கு ஏரி, குளங்கள் என நீர் நிலைகள் நிறைந்திருக்கும். அங்குள்ள ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. அக்குளத்தில் உள்ள மீன் குட்டிகள் எப்பொழுதும் கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும்.

    அதில் ஜானி, பட்டு என்ற இரு குட்டி மீன்கள் விளையாடிக் கொண்டிருந்தன. ஜானி, ஏய்! பட்டு எங்கே என்னைப் பிடி பார்க்கலாம் என்றது. அதற்கு பட்டு, என்னிடமே சவால் விடுகிறாயா? இப்பொழுது பார். ஒரு நொடியில் உன்னை பிடிக்கிறேன் என்று கூறி விளையாடிக் கொண்டே கரையோரம் வந்தன.

    அச்சமயம் கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து, ‘ஏய் ஜானி, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான்.” மேலும் அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தாலே பயமாக இருக்கிறது. வா! ஜானி நாம் உள்ளே சென்று விடலாம் என்று கூறியதும், எல்லா மீன்களும் குளத்திற்குள் வேகமாக சென்றுவிட்டன.

    வேக வேகமாக மீன்கள் உள்ளே சென்றபோது, குட்டிகளா! ஏன் இப்படி அவசரமாக ஓடி வருகிறீர்கள்? என்று அங்குள்ள ஒரு பெரிய மீன் கேட்டது. கரையோரத்தில் ஒரு காகம் இருக்கிறது. அக்காகத்தின் நிறம் மற்றும் குரலைக் கேட்டால் பயமாக இருக்கிறது. அதனால்தான் வேகமாக ஓடி வந்தோம் என்றது, பட்டு.

    அதற்கு அந்த பெரிய மீன் காகத்தால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றது. ‘உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப்பற்றி தவறாக நினைக்கக்கூடாது” என்று பெரிய மீன் கூறியது. மற்ற மீன்குட்டிகள் இந்த தாத்தாவுக்கு வேறு வேலையே இல்லை. எப்பொழுதுமே உபதேசம் தான் என்று கூறிவிட்டு சென்றன.

    தினமும் காகத்தைப் பார்த்து கரைக்குச் செல்லாமல் குளத்தினுள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தன, மீன்கள். சில நாட்களுக்குப் பிறகு குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்திருந்தது.

    அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய்! அங்கே பாருங்கள். வெள்ளை நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் அலகு நீளமாக மட்டுமில்லாமல் கூர்மையாகவும் உள்ளதே! அதனுடைய நடையைப் பார் என்று கொக்குவை வர்ணித்துக் கொண்டிருந்தது.

    மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது, கொக்கு. உடனே மீன் குட்டிகள் கொக்குவைப் பார்த்து நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், உங்களது அலகை தொட்டுப் பார்க்கலாமா? என்று ஒரு மீன் குட்டி கேட்டது.

    அக்குட்டிமீன் அவ்வாறு கேட்டதும் கொக்கு மகிழ்ச்சியில் மூழ்கியது. உடனே, கொக்கு தொட்டுப் பார் என்று கூறியது. ஒரு மீன் குட்டி கொக்கிடம் சென்றதும், கொக்கு அந்த மீனை கவ்விக் கொண்டது. நன்றாக மாட்டிக்கொண்டாயா? என்றது.

    கொக்கிடம் மாட்டிய மீன் ஆ! என்னை விட்டிவிடுங்கள்! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குட்டிகள் ஆபத்து ஆபத்து வேகமாக ஓடுங்கள் என்று அனைத்து மீன்களும் குளத்திற்குள் சென்றன. ஆனால், அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது. மற்ற மீன் குட்டிகள் அந்த தாத்தா மீன் சொன்னது சரிதான்.

    அழகை மட்டும் பார்த்து ஒருவருடன் பழகக்கூடாது என்று அனைத்து மீன்களும் உறுதியெடுத்துக் கொண்டன. அன்று முதல் அனைத்து மீன் குட்டிகளும் கவனமாக இருந்தன. மகிழ்ச்சியாக குளத்தில் வாழ்ந்து வந்தன.

    நீதி : அழகற்று இருப்பது எல்லாம் தீயதுமல்ல. அழகாக இருப்பது எல்லாம் நல்லதுமல்ல.

    Share
  • சுயநலத்துடன் பழகிய நண்பன்!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    ஒரு ஊரில் மோகன், சூர்யா என்ற இரு நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். மோகன் எந்தவொரு எதிர்பார்ப்பும், சுயநலமின்மையும் இல்லாதவர். ஆனால், சூர்யா கொஞ்சம் சுயநலம் உள்ளவர். மோகன் இதை அறியாமல் சூர்யாவை முழுவதுமாக நம்பினார். சூர்யா அடிக்கடி மோகனிடம் ஐம்பது, நூறு என்று கடன் வாங்குவார். ஆனால், திருப்பித் தராமல் காலம் கடத்துவார்.

    மோகனின் மனைவி, ஏன் உங்கள் நண்பர் கேட்கும் போதெல்லாம் கடன் கொடுக்கிறீர்கள். அவரோ திருப்பித் தருவதில்லை. நாம் என்ன வசதியாகவா இருக்கிறோம்? நாமும் கஷ்டத்தில் தானே இருக்கிறோம். நான் இப்படிச் சொல்வதால் உங்கள் நண்பரை குறை சொல்வதாய் நினைக்க வேண்டாம் என்பாள். மோகன் அதை கண்டுகொள்ள மாட்டார். மோகன் மனைவியும் அதற்கு மேல் எதுவும் பேச மாட்டாள்.

    வழக்கம்போல் ஒருமுறை சூர்யா, மோகனிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். மோகனிடம் அவ்வளவு பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்று கூற முடியாமல் இருந்தார். மோகன் தன் மனைவியிடம் கூறியபோது அவள், நம்மிடம் ஆயிரம் ரூபாய் இல்லை என்று உங்கள் நண்பரிடம் கூறிவிடலாம் என்றாள்.

    உடனே மோகன், அப்படி எல்லாம் கூற முடியாது என்றான். பின் தன் நண்பனுக்காக வீட்டிலிருந்த உடைந்துபோன தங்க மோதிரம் ஒன்றை அடகு வைத்து ஆயிரம் ரூபாயை வாங்கி நண்பன் சூர்யாவிடம் கொடுத்தார். மோதிரத்தை அடகு வைக்க இருவருமே சென்றனர். இதனால் மோகனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டையே வந்துவிட்டது.

    பல மாதங்களாகியும் சூர்யா மோகனிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை. மோகனும் அவனிடம் கேட்கவில்லை.

    மோகனின் மனைவி, பணத்தை திருப்பி கேட்காவிட்டால் தன் தாய் வீட்டுக்குப் போய்விடுவதாக பயமுறுத்தியதால், மிகவும் பணிவாகவே தன் நண்பனிடம் பணம் பற்றிக் கேட்டார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதும் சூர்யாவிற்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், கோபத்தை வெளிக்காட்டாமல் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறினார். அப்போது சூர்யாவிடம் பணம் இருந்தது. ஆனால், பணத்தை திருப்பித் தர மனம் வரவில்லை.

    ஒருநாள் இருவரும் இரவு படம் பார்த்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த பாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. திடீரென ஒரு திருடன் அவர்கள் எதிரே வந்து கத்தியைக் காட்டி கையில் உள்ள பணத்தை தரும்படி கூறினான்.

    மோகனிடம் பத்து ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் சூர்யாவிடம் ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே சூர்யா தனது பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து உனக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொள் என்றார். உனக்குக் கொடுக்கவேண்டிய கடனை இப்போதே அடைத்துவிட்டேன் என்று கூறி அப்பணத்தை மோகனின் கைகளில் வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டார். திருடனும் மோகனின் கையிலிருந்து பணத்தைப் பிடிங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.

    நல்ல வேலையாக நான் பிழைத்தேன். எப்படியும் திருடன் நம்மிடமிருந்து ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றிருப்பான். நமக்கு நஷ்டமாகியிருக்கும். நல்லவேளை பணத்தை மோகனிடம் கொடுத்ததால் நமது கடனும் தீர்ந்தது என்று நிம்மதியாக இருந்தான். மோகனின் பணம்தானே திருடுப்போனது. நமக்கொன்றும் நஷ்டமில்லையே. தான் நன்றாக சிந்தித்து செயல்பட்டோம் என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார், சூர்யா.

    அப்போது தான் மோகன், சூர்யாவின் மோசமான எண்ணத்தை புரிந்து கொண்டார். அச்சமயம் தன் மனைவி கூறிய சொற்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. நீயெல்லாம் ஒரு நண்பனா? உன்னைப் பற்றி இப்பொழுது நன்றாக புரிந்து கொண்டேன். உன்னைப் போல் ஒரு சுயநலமான நண்பன் இனி எனக்குத் தேவை இல்லை. ஆயிரம் ரூபாயை இழந்ததன் மூலம் எனக்கு நல்ல பாடம் கிடைத்தது. இனி உன் பொய்யான நட்பு எனக்குத் தேவையில்லை என்று சொல்லி வேகமாக வீடு வந்து சேர்ந்தார், மோகன்.

    நீதி : யார் நல்லவர் என்பதை நமது கடினமான சூழ்நிலையில் தான் புரிந்துக்கொள்ள முடியும்.

    Share
  • தனிச்சிறப்பு..!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    ஒரு அடர்ந்த காட்டில் நிறைய பழம், செடி, கொடி வகைகள் இருந்தன. அக்காட்டில் வளரும் அனைத்து பழங்களும் வருடத்திற்கு ஒருமுறை தனது நண்பர்களை சந்திப்பதற்காக மாநாடு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தன.

    அந்த வகையில் அனைத்து பழங்களும் சேர்ந்து அந்த ஆண்டின் கடைசியில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தன. தன் நண்பர்களை சந்திப்பதற்கு ஆர்வமாக அனைத்து பழங்களும் தயாராகிச் சென்றன.

    பின் அக்கூட்டத்தில் தலைமையேற்று பேசிய வாழைப்பழம், உலகில் உள்ள பழங்களில் எந்தப் பழம் அதிகச் சுவையுடையது மற்றும் எது சிறப்புடையது? என்ற கேள்வியைக் கேட்டவாறே தன் உரையை முடித்துக் கொண்டு அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்கும்படி கூறியது.

    பின்னர் ஆப்பிள், தன்னை உட்கொள்பவர்களுக்கு நோய் வராமல் தடுக்கும் எதிர்ப்புத்திறன் என்னிடம் உள்ளது என்று கூறியது. உடனே, மாதுளம்பழம் தன்னை உட்கொள்பவர்களுக்கு தோல் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் திறனும், குடற்புண் வருவதை தடுக்கும் சக்தியும் உள்ளது என தன்னைத்தானே பெருமைப்படுத்தி பேசியது.

    பின்னர், கொய்யாப்பழம் தன்னை சாப்பிடுபவர்களுக்கு முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருவேன் எனவும், மேலும் மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும் என்றது. பிறகு, அன்னாசிப்பழம் தன்னை உட்கொண்டால் ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடிய திறன் என்னிடமே உள்ளது என்றது. இவ்வாறு அனைத்து பழங்களும் தன்னைத்தானே உயர்த்தி பேசியது.

    ஆனால், திராட்சைப்பழம் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது. அனைத்துப் பழங்களும் திராட்சைப் பழத்தை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தது. திராட்சைப்பழம் ஏதாவது பேசும் என்று எதிர்பார்த்தன. ஆனால், திராட்சைப்பழமோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது.

    திராட்சை அமைதியாக இருந்ததைப் பார்த்த மற்ற பழங்கள் அதைப் பார்த்து இழிவாக நினைத்து சிரித்தது. அச்சமயம் பலாப்பழம் ஒன்று உருண்டு வந்து திராட்சையின் அருகில் நின்றது.

    பலாப்பழம், திராட்சைப் பழத்தை பார்த்து அன்புடன் திராட்சையே! நீ ஏன் மௌனமாக இருக்கிறாய்? என்று கேட்டது. ஆனால், திராட்சை எதுவும் பேசாமலே இருந்தது.

    திராட்சையே உன்னைப் பற்றி எனக்கு தெரியும். உலகில் உள்ள அனைத்து பழங்களிலும் சிறப்புப்பெற்றவன், நன்மையைச் செய்பவன், நலம் அளிப்பவன், சுவை நிரம்பியவன் நீதான் என்று! ஆனால், அதைத்தவிர ஒரு சிறப்புத் தகுதி உன்னிடம் உண்டு. அதை நீயே கூற வேண்டும். அப்போது தான் மற்றப் பழங்களுக்கும் உன் தகுதி பற்றி தெரியும் என்று கூறியது.

    பின்னர், திராட்சைப்பழம் அமைதியாக மற்ற பழங்களைப் பார்த்து, நீங்கள் எல்லோருமே தனித்தனியாகவே வருகிறீர்கள். தனித்தனியாகவே விற்பனை செய்யப்படுகிறீர்கள். ஆனால், நாங்கள் அப்படியல்ல. நாங்களோ, ஒரு கூட்டமாகவும், ஒற்றுமையாகவும், கொத்தாகவும் வளர்கிறோம். நாங்கள் ஒருவர் வளர்வதற்கு இடம் தருகிறோம். விட்டுக்கொடுக்கும் எண்ணத்துடன் வாழ்கிறோம். விற்பனைக்குப் போகும்போதும் நாங்கள் ஒன்றாகவே செல்கிறோம். தனியாக நாங்கள் விலை போவதில்லை.

    எங்களைச் அரைத்து சாறாக்கி குடிக்கும்போது ஒன்றாகவே அழிந்து போகிறோம். வாழும்போதும், வளரும்போதும், ஏன் மரணத்திலும் கூட நாங்கள் இணைபிரியாமல் இருக்கிறோம் என்று கூறியது. அதனால்தான் நாங்கள் சிறந்தவர்கள் என்ற அங்கீகாரத்தை அடைந்திருக்கிறோம். வேறு எதுவுமில்லை என்றது.

    அப்பொழுது தான் மற்ற பழங்கள் திராட்சையை பற்றி நன்கு தெரிந்துக்கொண்டது. தாங்கள் சிரித்ததற்கு திராட்சையிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.

    நீதி : ஒற்றுமையாக இருப்பதே தனிச்சிறப்பு. மற்றவர்களை காட்டிலும் நாம் தனிச்சிறப்புடன் இருக்க வேண்டுமானால் திராட்சையை போல் ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும்.

    Share
  • திறமையால் உயிர் தப்பிய குரங்கு!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    திறமையால் உயிர் தப்பிய குரங்கு!!

    ஒரு ஆற்றின் கரையோரத்தில் பெரிய நாவற்பழ மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் குரங்கு ஒன்று வசித்து வந்தது. ஒரு நாள் ஆற்றில் வசிந்து வந்த பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்திற்கு அருகில் வந்தது. குரங்கு முதலையை பார்த்து, முதலையே! அதிக சுவையுடைய நாவற்பழங்களை நீயும் ருசித்துப்பார் எனக்கூறி முதலைக்கு நாவற்பழங்களை கொடுத்தது.

    அன்றுமுதல் முதலையும், குரங்கும் நண்பர்களாகினர். தினமும் முதலை குரங்கைப் பார்க்க ஆற்றின் கரைக்கு வந்துவிடும். இருவரும் மகிழ்ச்சியாக கதைகளை பேசியும், வாழ்க்கை பற்றிய கருத்துகளை பகிர்ந்தும் வந்தன. மேலும், தான் சாப்பிட்டது போக மீதமிருந்த நாவற்பழங்களை முதலை தன் மனைவிக்கும் எடுத்துச் செல்லும்.

    ஒருநாள் முதலையின் மனைவி, அமிர்தம் போல் சுவையுடைய இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது? என்றது. ஆண் முதலை, எனக்கு நெருங்கிய நண்பனான குரங்கு ஒன்று அன்பாக இந்தப் பழங்களை தருவதாக கூறியது. பின் முதலையின் மனைவி அமிர்தம்போல் இருக்கும் இப்பழங்களை எப்போதும் சாப்பிடும் அந்த குரங்கின் இதயமும் இதைப் போலவே சுவையாகத்தானே இருக்கும் அல்லவா? அதனால் அக்குரங்கை கொன்று அதனுடைய இதயத்தை கொண்டு வருமாறு கூறியது.

    உடனே ஆண் முதலை மனைவியிடம், குரங்கு நம்மிடம் நண்பனை போல் பழகுகிறது. மேலும் நம் பசிக்கு பழங்களை கொடுத்து உதவிகளை செய்கிறது. இவ்வளவு உதவிகள் செய்யும் குரங்கிற்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. அதனால் இந்த எண்ணத்தை இதோடு விட்டு விடு என்று கோபமாக கூறியது.

    அதற்கு முதலையின் மனைவியோ, அந்த குரங்கை எனக்காக கொன்று அதன் இதயத்தை கொடுக்க வேண்டும் என கண்டித்துக் கூறியது. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஆண் முதலை கண்ணீர் விட்டு வருந்தியது. எனக்கு பழங்கள் கொடுத்த குரங்கை நான் எப்படிக் கொல்வது? என வருத்தத்தில் குரங்கைப் பார்க்கச் சென்றது. வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் பார்த்த குரங்கு, நண்பனே! ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டது.

    அதற்கு அந்த முதலை, உன்னிடம் பழங்களை வாங்கிச் சாப்பிடும் நான் இத்தனை நாட்களாகியும் உன்னை வீட்டிற்கு அழைத்து வராததால் என் மனைவி என்னை திட்டிவிட்டாள் என்று கூறியது. அதனால் நீ உறுதியாக என் வீட்டிற்கு வர வேண்டும் என வற்புறுத்தியது. குரங்கும், சரி என ஒத்துக்கொண்டது. குரங்கும் ஆனந்தமாய் முதலையின் முதுகில் ஏறிக்கொண்டது.

    முதலை நடு ஆற்றை தாண்டி சென்றதற்கு பின் குரங்கிடம் உண்மையைக் கூறத் தொடங்கியது. நண்பனே! என்னை மன்னித்து விடு. என் மனைவிக்காக உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்றது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குரங்கு, நான் உங்களுக்கு என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொன்றுவிடுவதாக கூறுகிறீர்கள் என பயத்துடன் கேட்டது. நீ கொடுத்த நாவற்பழங்கள் அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே, உன் இதயத்தை ருசித்துப் பார்க்க ஆசையாக உள்ளது என தன் மனைவி கூறியதை குரங்கிடம் முதலை கூறியது.

    உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, அதை நீ கரையிலேயே கூறியிருந்தால், நாவல்மரத்தின் அடியில் மறைத்து வைத்திருக்கும் ருசி மிகுந்த நாவற்பழங்களை அண்ணிக்காக எடுத்து வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம்! என்றது குரங்கு. அதைக் கேட்டதும் முதலை, நண்பனே! அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு. உன்னை நாவல் மரத்தடிக்கு திரும்ப அழைத்துச் செல்கிறேன் என்று கூறி இரண்டும் கரைக்கு வந்தது.

    முதலை, நாவற்பழங்களை தருமாறு கூறியது. ஆனால் குரங்கோ முதலையிடம் கோபமாக, உன்னை நல்ல நண்பனாக நினைத்தேன். ஆனால், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய். உன் குணம் என்னவென்று எனக்கு இப்போது புரிந்தது. இனி இந்த நாவல்மரத்தடிக்கு வராதே! என்றது. அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்து அந்த இடத்தை விட்டுச் சென்றது.

    நீதி : ஆபத்தில் நேரத்தில் புத்தசாலிதனமாக நடந்து கொள்வதே சிறப்பு.

    Share
  • நீதி தவறிய மன்னன்..!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    நீதி தவறிய மன்னன்..!!

    பூஞ்சோலை என்னும் நாட்டை மதியழகன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அரசரின் மனைவி ஓரளவிற்கு இசைஞானம் அறிந்தவள். தன்னைத் தவிர வேறு யாரும் இசையில் ஞானமுள்ளவர் இல்லை என அவள் நினைத்திருந்தாள்.

    ஆண்டுதோறும் கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அத்திருவிழாவில் ராமர் என்ற இசைக்கலைஞர் மிகவும் அழகாக இசை நிகழ்ச்சி நடத்துவார். அவர் இறந்த பின், அவரது மனைவி இறைவனைப் புகழ்ந்துப்பாடுவாள். சில வருடத்திற்குப் பிறகு அரசியாரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ராமரின் மனைவி தன்னை பாட அனுமதிக்காததால் மிகுந்த வேதனை அடைந்தாள். பின் சில காலம் எதிலும் கலந்து கொள்ளாமல் தனித்து நின்றாள்.

    இந்த ஆண்டும் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வருடம் எப்படியாவது இறைவனைப் புகழ்ந்து பாட வேண்டும் என முடிவு செய்தாள், ராமரின் மனைவி. வழக்கம்போல் திருவிழாவில் அரசியாரின் இசைக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் அரசியாரின் இசையை ரசித்து கேட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென்று மக்கள் கூட்டம் குறையத் தொடங்கியது. அதைப் பார்த்த அரசருக்கு எதுவும் புரியவில்லை. எதற்காக மக்கள் அனைவரும் எழுந்துச் செல்கிறார்கள் என்று பார்க்கச் சொன்னார். அங்கு சென்று பார்த்தால் ராமரின் மனைவி இறைவனை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட அரசியார் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

    அரசி தன் கணவன் மதியழகனிடம் எவ்வளவு தைரியமிருந்தால் இவள் எனக்கே எதிராக இசைப்பாடுவாள். இவளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என கோபமாகக் கூறினாள். தன் மனைவியை திருப்திபடுத்துவதற்காக ராமரின் மனைவியை பழிவாங்க நினைத்தார், அரசர்.

    அச்சமயத்தில் அரசர் இசைக்கலையில் சிறப்புப்பெற்ற மணிமேகலை என்பவளை அழைத்து இசை நிகழ்ச்சி வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில், என்னுடன் போட்டியிட யார் தயார்? என்றாள். உடனே மன்னன் ராமரின் மனைவியைப் பார்த்து, அம்மையே! தாங்கள் தான் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட முடியும் என்றார்.

    அதற்கு ராமரின் மனைவி, அரசே! நம் நாட்டின் பெருமைக்காக கலந்து கொள்கிறேன் என்றார். உடனே போட்டி பற்றிய விதிமுறைகளை அரசர் அறிவித்தார். இப்போட்டி மூன்று நாட்கள் நடைபெறும். நடுவர் தீர்ப்பே இறுதியானது. மணிமேகலை வெற்றி பெற்றால் அரசவைக் கலைஞராகும் தகுதியும், ராமரின் மனைவி தோற்றால் நாடு கடத்தப்படுவதாகவும் மன்னர் அறிவித்தார்.

    அரசரின் சதிதிட்டத்தைப் பற்றி புரிந்துகொண்ட ராமரின் மனைவி, இறைவனிடம் சென்று இறைவா! நீ மட்டுமே எனக்குத் துணை என்று கூறி அழுதாள். தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டி நடைபெற்றது. மூன்று நாட்களும் மணிமேகலையே சிறந்தவள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அப்போது ஒரு முதியவர் எழுந்து நடுவர்களிடம் எதன் அடிப்படையில் மணிமேகலையின் இசைதான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்கினீர்கள்? மேலும், மணிமேகலையின் இசை, ராமரின் மனைவி இசைத்த இசை இரண்டிற்கும் இடையேயான நிறை, குறைகளைத் தெளிவாக விவரித்தார். ராமரின் மனைவி இத்தனை சிறப்பாக இசைக்க, அவரை எப்படி தோற்றவர் என்று அறிவித்தீர்கள்? நடுவர்கள் மனசாட்சியோடு தீர்ப்பு வழங்காமல் பொய்யாக தீர்ப்பு வழங்குவது சரியா? என்று கேட்டார்.

    இசைக்கும், இறைவனுக்கும் தொடர்பு உண்டு. இசைக்கு அநீதி செய்வதன் மூலம் இறைவனையே அவமதிக்கிறீர்கள் என்றார் முதியவர். இதைக்கேட்டு கடும் கோபத்திற்குள்ளான அரசர் அம்முதியவரை கைது செய்யுமாறு கூறினார். காவலர்கள் அவரை கைது செய்ய சென்றதும் அவர் அங்கிருந்து மறைந்து போனார். பின் கோவிலில் இருந்து பெரும் சத்தம் கேட்டது. முதியவர் இருந்த இடத்தில் இறைவன் காட்சியளித்து மறைந்தார்.

    அதிர்ச்சியடைந்த அரசர் தன் தவறை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினார். தன் மனைவிக்காக தான் செய்தது தவறு எனப் புரிந்து கொண்டு, தன் மகனிடம் அரச பொறுப்பை ஒப்படைத்து அரச வாழ்வைத் துறந்து ஆன்மீக வாழ்விற்குச் செல்வதாக அறிவித்தார்.

    Share