Tag: செவ்வாய்

  • (Peer Reviewed) செவ்வாய் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை

    முனைவர் தி.தெய்வசாந்தி,
    சர்வதேச ஆராய்ச்சி மையம்,
    கலசலிங்கம் பல்கலைக்கழகம்,
    கிருஷ்ணன்கோயில், தமிழ்நாடு – 626126.
    மின்னஞ்சல்: ttheivasanthi@gmail.com
    இணையத்தளம்: www.theivasanthi.weebly.com

     செவ்வாய்க் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை

    முக்கியக் குறிப்புகள்

    1) பஞ்சபூத சக்திகளின் அடிப்படையில் செவ்வாயில் உயிர் வாழ்க்கைச் சாத்தியம்

    2) இந்திய வானியல் அறிவு – ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட் – தொடர்பு

    3) விண்கலங்கள் / ஏவுகணைகள் அனுப்ப, புதிய முறை

    செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான “மார்ஸ்” என்பது, ரோமன் போர்க் கடவுளைக் குறிக்கிறது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது மிகச் சிறிய இக்கிரகம், சூரியனிலிருந்து நான்காவது வட்டத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பிலுள்ள, இரும்பு ஆக்சைடு (ஹெமட்டைட்), இக்கிரகத்திற்குச் சிவந்த நிறத் தோற்றத்தை அளிப்பதால், “சிவப்பு கிரகம்” எனவும் அழைக்கப்படுகிறது. இக்கிரகமானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது. அப்பொழுது, இக்கிரகத்தை வெறுங்கண்ணால் காண முடியும். தெய்மோஸ் (விட்டம் சுமார் 8 மைல்) மற்றும் போபோஸ் (விட்டம் சுமார் 14 மைல்கள்) என்ற சிறிய, ஒழுங்கற்ற வடிவிலான, இரண்டு இயற்கை துணைக்கோள்கள் இதனைச் சுற்றி வருகின்றன. இவற்றின் பெயர்களான போபோஸ் என்றால் பீதி / பயம் மற்றும் தெய்மோஸ் என்றால் பயங்கரவாதம் என்பதும் பொருள். போபோஸ் ஆனது, மேற்கில் உதித்து, கிழக்கில் மறைகிறது.

                  மங்கள்யான் அனுப்பிய செவ்வாயின் படம். நன்றி: இஸ்ரோ. 

    செவ்வாய் கிரகத்தில் மெல்லிய வளிமண்டலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் பனிப் படலங்கள் உள்ளன. அங்குள்ள, “ஒலிம்பஸ் மோன்ஸ்” என்ற மலை, சூரிய குடும்பத்திலுள்ள இரண்டாவது மிக உயர்ந்த மலை ஆகும். “வாலீஸ் மரிநேரிஸ்” என்பது, அங்கே, காணப்படுகின்ற ஒரு பெரிய பள்ளத்தாக்கு ஆகும். வட துருவத்தின், 40% பரப்பினை, உள்ளடக்கிய, “ஸ்மூத் பொரியலிஸ்” என்ற பெரிய வடிகால் உள்ளது. அக்கிரகத்தின் பாறைகளை ஆரய்ந்ததில், 3.5 – 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிகிறது. அக்கிரகத்தில், காந்தப் பரப்புகள் / துருவங்கள், சமுத்திரங்கள் மற்றும் கடல் மட்டங்கள் இல்லை.

    செவ்வாயின், வெப்பநிலை குறைந்தபட்சம் -143 °C லிருந்து அதிகபட்சம் 35 °C என்ற அளவில் உள்ளது. அக்கிரகத்தின், பருவ காலநிலைகள் பெரும்பாலும் பூமியைப் போன்று இருந்தாலும், பூமியின் பருவங்களை விட இருமடங்கு என்ற அளவில் உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தூரத்தை விட, சூரியனுக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் அதிகம் என்பதுதான், அதற்குக் காரணம். சூரியனில் இருந்து அதன் சராசரி தூரம், சுமார் 230 மில்லியன் கி.மீ., அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 1.52 மடங்கு அதிகம். அது, ஒருமுறை, சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் 687 (பூமி) நாட்கள் ஆகும். அதன் ஒரு நாள், ஒரு புவி நாளை விட சிறிதளவு அதிகம்: 24 மணி நேரம், 39 நிமிடங்கள், மற்றும் 35.244 வினாடிகள். அதன் ஒரு ஆண்டு 1.8809 பூமியின் ஆண்டுக்குச் சமமாகும்.

    செவ்வாய் கிரகத்தின் விட்டமானது,  பூமியின் விட்டத்தில் சுமார் பாதியாகும். அதன் அடர்த்தி, பூமியை விடக் குறைவாகும். அங்கு, சிலிக்கான், ஆக்சிஜன், உலோகங்கள், மற்றும் தாதுக்கள் போன்றவை காணப்படுகின்றன. குறைந்த கொதிநிலை உடைய குளோரின், பாஸ்பரஸ், சல்பர் போன்றவை, பூமியை விட அதிக அளவில் காணப்படுகின்றன; தவிர, இரும்பு, மக்னீசியம், அலுமினியம், கால்சியம், பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளன. அதன், இரு துருவங்களிலும் பனியடுக்குகள் உள்ளன. அவற்றின் மீது கார்பன்-டை-ஆக்சைடு, ஒரு மெல்லிய படலமாக, உறைந்துள்ளது.

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதாக, 1965ஆம் ஆண்டு வரை, நம்பப்பட்டு வந்தது. அண்மையில், அதன் துருவங்களில் பனிக்கட்டிகள் அதிக அளவில் இருப்பது ராடார்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வெப்பமான மாதங்களில் பாயும் நீர் சாத்தியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மண்ணில் 1.5% முதல் 3% வரை நீர் உள்ளதாக 2013ஆம் ஆண்டில், நாசாவின் ரோவர் கண்டறிந்துள்ளது.

    செவ்வாயைச் சுற்றும் செயற்கைக் கோள்கள், அங்கு 96% கார்பன் டை ஆக்சைடு, சிறிய அளவில் ஆர்கான், நைட்ரஜன், ஆக்ஸிஜன், நீர், அம்மோனியா, மீத்தேன் மற்றும் ஃபார்மல்டிஹைடு இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இதன் மூலம், உயிரின வாழ்க்கை, அங்கு சாத்தியம் என்பதற்கு உரிய ஆதாரங்கள் தென்படுகின்றன. ஜெர்மன் விண்வெளி மையம், செவ்வாயின் தட்ப வெப்பச் சூழ்நிலை, வளிமண்டல அழுத்தம், கனிமங்கள், ஒளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, பாசிப் பூஞ்சையானது, அங்கு வாழ முடியும் என்று தெரிவித்துள்ளது.

    மீத்தேன் வாயுவானது, உயிரினக் கழிவுகள் மட்கும் பொழுதும் அல்லது செர்பென்டினைசேஷன் (serpentinization) எனப்படும் உயிரியல் அல்லாத செயல்முறை, (அதாவது, நீர், கார்பன் டை ஆக்சைடு, மற்றும் ஒலிவைன் சம்பந்தப்பட்ட பொருள்களில் நடைபெறும் வேதிவினைகள்) மூலமும் உற்பத்தி செய்யப்படும். எனவே, மீத்தேன் வாயுவை மட்டும் வைத்து, உயிரினங்களின் வாழ்க்கை, அங்கு சாத்தியம் என்று உறுதிபடத் தெரிவிக்க இயலாது.

    பீனிக்ஸ் செயற்கைக் கோளிலிருந்து, பெறப்பட்ட தகவல்களின் மூலம், அக்கிரக மண்ணில் காரத் தன்மையும் (pH 8.3), தாவரங்கள் வளர்ச்சிக்குத் தேவையான மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் போன்ற தனிமங்கள் இருப்பதும் அறியப்பட்டுள்ளது. பஞ்சபூதங்கள் எனப்படும், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி (நிலம்) என்ற ஐந்து அடிப்படை / ஆதாரச் சக்திகள் செவ்வாய் கிரகத்தில் காணப்படுவது, அங்கு உயிரினங்களின் வாழ்க்கை சாத்தியம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    நான்காவது நூற்றாண்டு சீன வானியல் அறிஞர்கள், செவ்வாய் பற்றி அறிந்து இருந்தார்கள் என்பதைச் சீனாவின் பண்டைய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. “சூரிய சித்தாந்தம்” என்ற இந்திய வானியல் நூல், செவ்வாய் கிரகத்தின் விட்டம் மதிப்பிடப்பட்டிருப்பதாக, ஐந்தாவது நூற்றாண்டிலேயே தெரிவிக்கின்றது. கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், “பஞ்சபூதம்“ தத்துவங்கள் அடிப்படையில், அக்கிரகம், “தீக்கோள்” எனக் குறிப்பிடப்படுகிறது.

    வேதங்களில், அக்கிரகம், பூமியின் மகன் என்று கூறப்பட்டுள்ளது. அது, ரோமன் நாட்டின் போர் மற்றும் கொலைக் கடவுள் ஆகும். அதற்கு, அடையாளமாக ஈட்டி மற்றும் கேடயம் உள்ளது. அக்கிரகத்தின் மண் மற்றும் மனித இரத்தத்தின் ஹீமோகுளோபின் இரண்டும் இரும்பு செறிந்தவை. இதன் காரணமாக, அவை தனித்துவமான ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கின்றன. சோதிடவியலில், சிவப்பு கிரகமான செவ்வாய், மங்கள், அங்காரகன், இரக்த வர்ணன் (இரத்த போன்ற சிவப்பு நிறத்தில் இருப்பது) மற்றும் பூமா(பூமி மகன்) என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலும் அது, போர்க்கடவுள் என்றும், பிரம்மச்சாரி என்றும் கூறப்பட்டுள்ளது. அது, பிருத்வி, பூமி எனப்படும் பூமாதேவியின் மகன் என்றும், பூமாதேவியினால் வளர்க்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இராசி மண்டலத்தின், 12 இராசிகளில், ஒவ்வொரு இராசியிலும் 57.25 நாட்கள் இருக்கும் செவ்வாயானது, சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆர்பிட்டர்கள், லேண்டர்கள், ரோவர்கள் உடைய ஆளில்லா விண்கலங்களைச் செவ்வாய்க்கு அனுப்பியுள்ளன. தற்பொழுது, ஏழு செயற்கைக் கோள்கள், அதாவது, மார்ஸ் ஒடிசி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர், மாவன் மற்றும் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் என்ற ஐந்தும் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையிலும், மார்ஸ் எக்ஸ்புளோரேசன் ரோவர் எனப்படும் ஆப்பர்சூனிட்டி மற்றும் செவ்வாய் அறிவியல் ஆய்வுக் கூடம் எனப்படும் க்யூரியாசிட்டி என்ற இரண்டும் செவ்வாயின் மேற்பரப்பிலும் சுற்றி வருகின்றன. இவற்றின் மூலம், செவ்வாய் பற்றிய வானியல் ஆய்வு எளிதில் சாத்தியமாகிறது.

    உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக, சமீபத்தில், டைம்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட, செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் (MOM) திட்டம், “மங்கள்யான்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது (சமஸ்கிருதத்தில் “மங்களா” என்பது “செவ்வாய்” என்றும், “யானா” என்பது “வாகனம்” என்றும் பொருளாகும்). சதீஷ் தவான் விண்வெளி மையம் (ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர பிரதேசம்) இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தால் (ISRO), பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் மூலம், 28 அக்டோபர் 2013-இல் ஏவப்படுவதாக இருந்த மங்கள்யான் வானிலை சரியில்லாததால் 5 நவம்பர் 2013 அன்று, விண்ணில் செலுத்தப்பட்டது. அது, 298 நாட்களில், 780,000,000 கி.மீ.(480,000,000 மைல்) தூரம் பயணம் செய்த பிறகு, செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 1300 மைல் உயரத்தில், 24 செப்டம்பர் 2014 முதல், செவ்வாயைச் சுற்றி வருகிறது. மேலும், திட்டமிட்ட நேரத்திற்கு 41 மணி நேரம் முன்னதாகவே, அது, செவ்வாயைச் சுற்றுவது குறிப்பிடத்தக்கது. அதன், ஆறு மாத ஆயுட்காலத்திற்கு, குறைந்தபட்சம் 20 கிலோ எரிபொருள் அவசியம். ஆனால், 40 கிலோ எரிபொருள் மீதம் இருப்பதால், ஆறு முதல் பத்து மாதங்கள் வரை அது செவ்வாயைச் சுற்றிவரும் என்று எதிர்பார்க்கலாம். எரிபொருள் சேமிக்க உதவும் “ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்” என்ற கொள்கை மங்கள்யான் ஏவும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மங்கள்யானின் மொத்த நிறை 1,350 கிகி. அதில் திரவ எரிபொருள்கள் நிறைந்த எஞ்சின் மட்டும் 852 கிகி நிறை ஆகும். இரு திரவ எரிபொருள்கள் கலவையான, மோனோமீத்தைல்ஹைட்ரஸின் மற்றும் டைநைட்ரஜன் டெட்ராக்சைடு என்பவை, பூமியில் இருந்து வெளியேறுவதற்குத் தேவையான உந்துதல் வேகத்தை அடைய உதவுகின்றன (11.2 கிமீ / வினாடி). அதிகபட்சம் 840 வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ளதால், தேவையான மின்சாரம் உருவாக்கப்பட்டு, மீதமுள்ளது சேமிக்கப்படுகிறது. மேலும், மங்கள்யானின் இலக்குகள் மற்றும் செவ்வாய் பற்றிய ஆய்வுக்கு உதவும் 15 கிகி நிறையுள்ள, 5 கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    நிலாவிற்கு, 2008ஆம் ஆண்டு, சந்திரயான்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு, அதனுடைய வெற்றி, மங்கள்யானின் தோற்றத்திற்கு அடித்தளமிட்டது. மிக மிகக் குறைந்த செலவில் உருவான, இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.454 கோடி (US $ 74 மில்லியன்) ஆகும். மங்கள்யான், கிரகங்களுக்கிடையில் செயல்படுத்தப்பட்ட, இந்தியாவின் முதல் திட்டமாகும். மேலும், அது இந்தியாவை, முதல் முயற்சியிலேயே, செவ்வாயின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்த உலகின் முதல் (ஆசிய) நாடு என்று பெருமைப்பட வைத்திருக்கிறது. சோவியத் விண்வெளித் திட்டம், நாசா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்குப் பிறகு, செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெயரை இஸ்ரோ பெற்றுள்ளது.

    கிரகங்களுக்கிடையில் ஏவப்படும் விண்கலங்கள் / செயற்கைக்கோள்களுக்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், திட்டமிடுதல், மேற்பார்வையிடுதல், இயக்குதல் போன்றவற்றை விரிவாக “எடுத்துச் சொல்லும் தொழில்நுட்பம்” ஒன்றை உருவாக்குவதுதான், இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கை. ராக்கெட் ஏவுதல், விண்கலங்கள் / செயற்கைக்கோள்கள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், அவற்றை இயக்குதல் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் தானியங்கிச் சாதனங்களைத் தேவைப்படும் சூழல்களில் இயக்குதல் போன்றவற்றை இந்தியா செய்ய இயலும் என்பதை எடுத்துக் காட்டுவது, இத்திட்டத்தின் முக்கியக் கொள்கை. இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, மேற்பரப்பு, கனிம வளங்கள் மற்றும் தட்ப வெப்பச் சூழ்நிலை / வானிலைகளை ஆராய்தல், இரண்டாவது கொள்கையாகும்.

    மங்கள்யான் தற்போது, இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (IDSN) உதவியுடன், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தொலைப்பதிவு, கண்காணிப்பு மற்றும் ஆணை வலையமைப்பின் (ISTRAC) விண்கலக் கட்டுப்பாடு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் தகவல் தொடர்புகள், பெருக்கிகள் மற்றும் ஒத்திசைவு டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் கையாளப்படுகின்றன. மேலும், அதிலுள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் சக்திவாய்ந்த ஆண்டெனாக்கள் IDSN-லிருந்து தொலைப்பதிவுகள், கண்காணிப்புகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தொடர்பான கட்டளைகள் பெறவும், செலுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    சூரியன், சந்திரன், மற்ற பிற கிரகங்களின் இயக்கங்களைக் கண்காணிக்கவும் கணிக்கவும் டில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மகரசங்கராந்தி தினத்தன்று, பெங்களூரின் கவிகங்காதரேஸ்வரர் கோவிலுள்ள நந்தியின் கொம்புகள் இடையே ஒரு மணிநேரம் மட்டும் செல்லும் சூரியக் கதிர்கள், சிவலிங்கம் மீது விழுந்து ஒளிர்கிறது. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில், மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியன்று, அங்குள்ள அஸ்திக்கலசம் (சாம்பல்) மீது சூரியக் கதிர்கள் விழும்படி உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் (தமிழ்நாடு) யோகநந்தீஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது, சித்திரை மாதம் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மட்டும் (ஏப்ரல் மாதம்) சூரியக் கதிர்கள் ஒளிரும்படி அமைத்துள்ளனர். இவை, பழங்காலத்தில், நமது முன்னோர்கள், வானியல் அறிவியல் வல்லுனர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

    மேலும் இவை, “ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்” கொள்கைக்கு இணையானவையாக உள்ளன. ஆனாலும், அக்கொள்கைக்கு, பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் சேமிப்பில் உதவும், இக்கொள்கையின் அடிப்படையில், செவ்வாய்க்கு விண்கலங்கள் ஏவும் சந்தர்ப்பங்கள், ஒவ்வொரு 26 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. மங்கள்யான் ஏவுதலில், இக்கொள்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின், அந்த வெற்றிகரமான மங்கள்யான் ஏவுதலுக்குப் பிறகு, 28/9/2014-இல் பிரபல பத்திரிகையான, நியூயார்க் டைம்ஸ், பசு மாட்டுடன் ஒரு இந்திய விவசாயி, “எலைட் விண்வெளி கிளப்”-இல் கதவைத் தட்டுவது போன்ற கார்ட்டூன் வெளியிட்டு விமர்சித்து இருந்தது. பண்டைய இந்திய வானியல் அறிவுத் திறமைகள் பற்றி, அப்பத்திரிக்கை சரிவர அறிந்திருந்தால், அவ்வாறு விமர்சனம் செய்திருக்க வாய்ப்பில்லை.

    மங்கள்யானைத் தொடர்ந்து, 2017-2020-இல், செவ்வாய்க்கு, விண்கலங்கள் அனுப்ப, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  செவ்வாய் டிரேஸ் வாயு மிஷன் என்ற விண்கலம், அங்குள்ள மீத்தேன் மற்றும் சிதைவுப் பொருட்களான, ஃபார்மால்டிஹைடு, மெத்தனால் போன்றவற்றை ஆய்வு செய்ய, 2016-இல் அனுப்பப்படவுள்ளது. 30 செப்டம்பர் 2014-ல், நடந்த ஒரு கூட்டத்தின் போது, நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய் பற்றி இணைந்து ஆராய்வதற்கு, ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    எதிர்காலத்தில், செவ்வாய்க்குப் பயணம் செய்வதற்காக, நானோ தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ரோபோட்கள் மற்றும் விண்வெளி லிஃப்ட் போன்றவை பயன்படுத்தப்படும். நானோ-எரிபொருள்கள் மற்றும் கடினத் தன்மை மிகுந்தவையும், குறைந்த எடையும் கொண்ட கார்பன் நானோ குழாய்கள், கிராபின் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி விண்கலம் தயாரிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதால், விண்கலங்களின் எடை குறையும், சக்தி அதிகரிக்கும்.

    ரோபோட் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், யதார்த்தமான மனித உருவில் செயல்படும் ரோபோட்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆண்ட்ராய்டு ரோபோட்கள் என்பவை, அவ்வாறு மனிதனைப் போல் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட, செயற்கை உயிரின ரோபோட்கள் ஆகும். அவை, விண்கலங்களில் ஏற்படும் தவறுகளையும், பழுதுகளையும் சீர்செய்யப் பயன்படுத்தப்படலாம்.

    விண்வெளி லிஃப்ட் என்பது, பூமியில் ஒரு இடத்திலிருந்து, விண்வெளியை நோக்கி உயர்த்திக் கட்டப்பட்ட கேபிள் மூலம் பயணம் செய்து, விண்வெளியை அடையும் முறை ஆகும். இந்த முறையில், விண்கலங்கள் இல்லாமல், கேபிள் மூலம், விண்வெளிக்கு பொருள்கள் எடுத்துச் செல்லவும், கீழே கொண்டு வரவும் இயலும். வலுவான, குறைந்த எடையுள்ள, கெவ்லர் போன்றவை அத்தகைய லிஃப்ட் உருவாக்குவதில் உதவுகிறது. பூமியை விட, குறைந்த ஈர்ப்புச் சக்தி கொண்ட அனைத்துக் கிரகங்களுக்கும் (நிலா, செவ்வாய் போன்ற), விண்வெளி லிஃப்ட் உருவாக்கலாம். ஒபயாசி என்ற ஜப்பான் கட்டுமான நிறுவனம், 2050 ஆம் ஆண்டுக்குள், 60,000 மைல் உயரத்திற்கு, விண்வெளி லிஃப்ட், செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற லிஃப்ட்கள் நடைமுறைக்கு வந்தால், விண்கலங்கள் உருவாக்குவதற்கான செலவுகள் பெருமளவு குறையும்.

    விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை, மிகச் சிறிய துகள்களாகச் செய்து, அவற்றை ரேடியோ அலைகள் மூலம் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பி மீண்டும் அவற்றைச் செவ்வாய்க் கிரகத்தில் வைத்து, அதன் உண்மையான உருவிற்கு மாற்றும் முறைதான், மேற்கூறிய, அனைத்தையும் விடச் சிறந்த தொழில்நுட்பம் (தற்பொழுது, செவ்வாய்க் கிரகத்திற்கு கட்டளைகளையும், புகைப்படங்களையும் அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற முறையில்). இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் வெற்றியுடன் உருவாக்கப்படுமா என்பதைக் காலம்தான் சொல்லும். காத்திருப்போம்!

    References / Sources: Mars Orbiter Mission – Wikipedia. 2018. Mars Orbiter Mission – Wikipedia. [ONLINE] Available at: https://en.wikipedia.org/wiki/Mars_Orbiter_Mission [Accessed 03 Sep 2018]

    ==========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கட்டுரை ஆசிரியர், செவ்வாய்க் கோள் பற்றி இதுவரை உலக வானியல் விஞ்ஞானிகள், பொறி நுணுக்க நிபுணர்கள் கண்டுபிடித்த, யூகித்த தகவலை, முற்காலச் சீன, இந்திய வல்லுநர் எழுதி வைத்த தகவலோடு ஒப்பிட்டுக் கட்டுரை வடிக்கிறார்.

    வண்ணத்தில் குறிப்பிட்ட மூன்று கூற்றுகள் [நீர் இருப்பு, இந்திய வல்லுநர் வானியல் விஞ்ஞான அறிவு, முப்பக்க அண்ட மின்தொடர்பு (3D objects Electronic transmission)] தர்க்கத்துக்கு உரியவை. நீர்வள இருப்பு, உயிர் மூலவி இருப்பு இன்னும் உறுதியாக்கப்படவில்லை.

    ஆயினும் செவ்வாய்க் கோள் பயணம் பற்றிக் கடந்த கால, எதிர்காலத் தகவல்கள் பலவற்றைச் சேகரித்து உருவான இக்கட்டுரை, வல்லமையில் வெளியிடத் தகுதியுடையது.

    ==========================================

    Share
  • செவ்வாயில் நீரோட்டம்!

    ஒரு அரிசோனன்

    உவர்நீர்க்கொடுகள்-செவ்வாய்செவ்வாய்-ஆய்வு விண்கலம் அனுப்பி, நாசா[NASA], ஜே.பி.எல்[JPL], யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனா இணைந்து அசோசியேடட் பிரஸ் மூலமாக வெளியிடப்பட்ட, தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில் காணப்பட்ட கருமையான கோடுகள் உவர்நீர் ஓட்டத்தினால் ஏற்பட்ட தடங்களே என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

    பதினான்கு கோடிமைல்கள் தொலைவிலுள்ள செவ்வாய்க்கோளின் கடுங்குளிரால் உறைந்துபோன தரையில் இப்பொழுது தண்ணீர் நிறைகிறது.  அந்த கிரகத்தில் உவர்நீர் ஓடுவதற்கான வலுவான சான்று இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். செவ்வாயில் உயிரினங்கள் இருக்கலாமோ என்று ஆராய்ந்தறிய இது ஒரு முக்கியமான அடிப்படையாக அமைகிறது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட நேச்சர் ஜியோசயின்ஸ்[Nature Geoscience] என்னும் விஞ்ஞான இதழில் லுஜென்ர ஓஜ்ஹாவும், மேரிபெத் வில்ஹெல்மும், “நமக்குத்தெரிந்த உயிரினங்கள் வாழத் தண்ணீர் மிகவும் தேவையான ஒன்று.  செவ்வாயில் நீர் இருப்பதனால் வானுயிரியல், கனிம, நீரியல் விளைவுகள் ஏற்படுத்தும்;  எதிர்கால மனித ஆய்வுப் பயணங்களின் நிலமை மாறுதல் ஏற்படவும் வழிவகுக்கும்,” என்று எழுதியுள்ளார்கள்.

    மாபெரும் அறிவிப்பாக நாசாவினால் முழங்கப்படும் இது முற்றிலும் புதிதல்ல.  ஏனெனில் செவ்வாயில் தண்ணீரைப் பற்றிய ஆராய்ச்சி பல்லாண்டுகளாக விஞ்ஞானிகளின் கவனத்தைப் ஈர்த்திருக்கிறது.  பனி எரிமலைகளின் கண்டுபிடிப்பும் இவ்வாறே அவர்களை குதூகலப்படுத்தியுள்ளது.

    தொன்மையான் ஆற்றுப்படுகைகளில் உள்ள தடங்கள் மூலம் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் நிறைந்திருக்கலாம் என்று வானுயிர் வல்லுனர்கள் ஊகித்துவந்திருக்கிறார்கள்.  நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேறும் சகதியுமான, பழமையான பெருங்கடல்கள் அங்கு இருந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    உவர்நீர்க்கொடுகள்-செவ்வாய் 2செவ்வாயில் மேற்பரப்பில் வளைந்து நெளிந்து காணப்படும் அமைப்புகள் அங்கு மிகமிகப் பழங்காலத்தில், நெடுங்காலமாகத் தண்ணீர் ஓடியிருக்கலாம் என்பதையே ஊகிக்கவைக்கிறது.  குறைந்தபட்சம் பாக்டீரியா, இன்னும் எளிமையான உயிரினங்கள் வாழும் அளவுக்குத் தண்ணீர் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    தண்ணீர் ஏதோ ஒரு வடிவத்தில் செவ்வாயில் இன்னும் இருக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளில் தெளிவாகியது.  அது அதிக அளவில், நிலத்தில் பனிப்படிமங்களாகவோ, துருவங்களுக்கருகே பெரிய பனிக்கட்டி ஆறாகவோ [glacier], விண்கல் பள்ளங்களிலும், மலை இடுக்குகளிலும் பெரிய பனிக்கட்டிப் பாளங்களாகவோ இருக்கலாம் என்றே எண்ணப்பட்டது.  உயிரனமில்லாத, ஒன்றுமே நடக்காத, வரண்டதொரு கோள் செவ்வாய் என்று இதுகாறும் நினைக்கப்பட்டுவந்த முன்னுதாரணம், “செவ்வாய் இன்னும் நீரினால் மாற்றியமைக்கப்பட்டுவரும் ஓர் உலகமே,” என்ற மாற்றத்தை அடைந்தததற்குக் காரணம், அங்கு தண்ணீர் இருக்கிறது என்ற அறிவே.

    செவ்வாயில் உயிர் தோன்றியிருந்தால், அது இன்னும் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்ற கருத்தை செவ்வாய் ஆய்வுத் திட்டப் பகுப்பாய்வுக் குழு [Mars Exploration Program Analysis Group] முன்வைக்கிறது.

    இரண்டாண்டுகளுக்கு முன்னர், 2013ல் நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற விஞ்ஞானப் பத்திர்கையில் வெளிவந்த கட்டுரையில் செவ்வாயின் நில வடிவமைப்பு கோள்நடுக்கோட்டின் அருகில் வியப்புக்கும் அதிகமான அளவு உவர்நீர் இருக்கிறது என்ற கருத்தை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். செப்டெம்பர், 2015ல் விடப்பட்ட அறிக்கையும் அதையே உறுதிசெய்கிறது.

    நாசா தலைமையகத்தில் நடந்த ஒரு செய்திக் கருத்தரங்கில், அதன் கோள் அறிவியல் இயக்குனர் [director of planetary science] ஜிம் கிரீன், “கடந்த காலத்தில் நாம் நினைத்துவந்ததைப்போல செவ்வாய் ஒரு வரண்ட கோள் அல்ல,” என்றார்.

    இதற்குமுன்னர் செவ்வாயில் நீரோட்டம் இருக்கிறது என்பது சூழ்நிலைச் சான்றாகவே {based on circumstancial evidence}வரையறுக்கப்பட்டது.

    புதிதாகக் கிடைத்த நிலவடிமைப்பை நிறப்பிறிகைத் தரவுகள்மூலம் ஆராய்ந்து, செவ்வாயில் நீருள்ள உப்புகள் இருப்பதைக் கண்டார்கள்.  இது பருவகால நீரோட்டமாகவிருக்கலாமென்று எண்ணவைத்தது.

    கடந்த அறிக்கையில், “நிறப்பிரிவு உள்வாங்குமுறையுடன் மிகவும் ஒத்துப்போகும் — எங்களால் கண்டுபிடிக்கப்பட  நீருள்ள உப்புகள் — மக்னீசியம் பெர்குளோரேட், மக்னீசியம் குளோரேட், சோடியம் பெர்குளோரெட் ஆகும்,” என்ற விஞ்ஞானிகள், “செவ்வாயில் காணப்படும் சாய்வுகொடுகள், அங்கு ஒரேகாலத்தில் நடக்கும் நீரோட்டத்தின் விளைவே என்பதை எங்களுடைய கண்டுபிடிப்புகள் உறுதிசெய்கின்றன,” என்றும் எழுதியுள்ளார்கள்.

    அங்கு காணப்படுவது உவர்நீர், நல்நீர் அல்ல என்று நம்பப்படுவதும் ஒரு உற்சாகத்தைத் தரும் ஒன்றேயாகும்.  அந்த உவர்நீர் உயிரினம் இருக்கக் கிட்டத்தட்ட துணையாகும் என்றே சுட்டுகிறது.

    “இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாயின் இந்த தன்னிகரில்லாத பகுதியில் ஆய்வுப்பயணம் மேற்கொள்ளவேண்டியதும் மேலும் வானஉயிரினவியல் இயல்பாய்வு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது,” என்று அந்த அறிக்கை சொல்லுகிறது.

    எனவே, இக்கண்டுபிடிப்பு செவ்வாயைப் பற்றிய பெரிய கேள்வி ஒன்றுக்கு விடையளித்தாலும், மற்றபல கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.

    ஒருகாலத்தில் செவ்வாயில் மேகங்கள், பனிப்போர்வையால் மூடப்பட்ட மலைத்தொடர்கள், நல்நீர் ஏரிகள்  இவற்றுடன் ஒரு பெருங்கடலும் இருந்தது.  அத்தனை தண்ணீரும் செவ்வாயின் காற்றுமண்டலம் மெலிந்தவுடன் காலம் செல்லச்செல்ல சிதறடிக்கப்பட்டது.  அது ஏன் நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் பலவிதமான விளக்கம் அளித்துவருகிறார்கள்.

    அங்கிருக்கும் உவர்நீரில் எந்த அளவு உப்பு இருக்கிறது, அது எவ்வளவு குளிர்ந்ததாக இருக்கிறது என்று ஆராயவும், அத்தண்ணீர் செவ்வாயின் உயிரினங்களை மட்டும் வாழவைக்கிறதா என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அங்கு பயணிக்கும் மனிதர்களுக்கு ஒரு நீராதாரமாக அமையுமா என்றும் உறுதிசெய்யவும் விரும்புகிறார்கள்.

    ஜான் மேசி கிரன்ஸ்ஃபெல்டு என்ற இயற்பியல்துறை வல்லுநர் [physicist] சமீபத்தில் நடந்த  செய்தியாளர் கருத்தரங்கில் இவ்வாறு கூறினார்: “பூமியிலிருந்து வேறொரு இடத்திலுள்ள இன்னும் இருந்துவருகின்ற இயற்பியல் வளமுள்ள இருப்பிடமாகவே செவ்வாய் தோன்றுகிறது.  அங்கு அதற்கான வளங்கள் உள்ளன.”

    ***

    கட்டுரை/படங்கள் உதவி:

    Water in Mars, by Adiranne La France, The Atlantic Magazine, September 28, 2015

    http://www.msn.com/en-us/news/technology/water-is-flowing-on-mars/ar-AAeSOCo?ocid=spartandhp

    Share