Tag: திருமதி பா. அனுராதா

  • பெண் முன்னேற்றத்தில் பாரதி

    திருமதி பா. அனுராதா

    உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.

     

     

    பெண்மையின் வழிகாட்டியே!

    நீ சென்ற ஒற்றையடி

    பாதையால்  உயர்ந்தனர் மாதர்;!

    அடுப்படியில் பூட்டி வைத்த நயவஞ்சகரே

    நாங்கள் அகிலத்தை அடுப்படிக்கு

    கொண்டு வந்தோம்!

    பெண்ணே!

    நீ இன்றி இவ்வுலகில்

    யாருமில்லை! அறிவாய் நீ!

    துணிந்து எழு பெண்ணே!

    வஞ்சகர் நாட்டில் பாரதியின்

    சொற்சுவையும் பொருள்சுவையும்

    மாதரின் மலர்ச்சியை மறுசுழற்சி செய்தனவே!

    நம்பிக்கையோடு பிறந்துவிட்டாய் பெண்ணே

    நாணம் கொள்ளாதே!

    உன் பெருமைதனை பேச

    இன்னொரு பாரதி பிறக்கவில்லையே!

    துகிலுரிக்கையில் மானம் காக்க

    நவீன கண்ணன் யாருமில்லை! பெண்ணே!

    உன் சபதத்தை ஏற்று

    போர் புரிய பாண்டவருமில்லை!

    பெண்ணிற்காக இதிகாசம் எழுத

    தாய்மண்ணில் யாருமில்லை!

    மதுரத் தேமொழி மங்கையரே!

    அவலம் எய்திக் கவலையின்றி

    வாழும் பாவையரே – உன்

    கவலையை உமிழ்ந்து தள்ளி

    பெண்ணறமாய் நிமிர்ந்து நில்!

    வானம் உன் வசமாகட்டும்!

    தாய்திரு நாட்டில் பெண்மைவெல்ல

    வீரமங்கையாய் விடியலைத் தேடி

    ஓடு மகளே! ஓடு

    தனியாக சஞ்சாரம் செய்து

    அண்டத்தை தழைத்தோங்கச் செய்வோம்!

    நயவஞ்சகரே!

    நாங்கள் என்றேனும் தோற்றதுண்டா?

    நீங்களல்லவா எம்மை

    வைத்து இழந்தீர்!

    குடும்ப வறுமையிலும்

    இல்லாதோரை மகிழச்செய்தாயே!

    மனையாளை அடிமைப்படுத்த எண்ணி

    தாய்குலத்தை அடிமைப்படுத்தலாமோ!

    அம்புபட்ட மான்போல்

    அழுது துடித்தேன் — ஓ பாரதியே!

    இன்னும் பிறப்பெடுக்கவில்லையா?

    உம்மை மறக்க முடியாமல்

    எம் மழலைச் செல்வத்திற்கு

    பாரதியென பெயர்ச் சூட்டிடுவேன்

    உம் பெயர்தனை உச்சரிக்க

    என் உள்ளந்தனில் உற்சாகம்

    பெருக்கெடுக்க

    வாழ்வுதனில் முன்னேற உன்

    வார்த்தை ஜாலம்

    என் வசம்.

    Share