Tag: பேரா. முனைவர். வெ.இராமன்

  • குறியீட்டு முறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் – பகுதி 2

    -பேரா. முனைவர். வெ.இராமன்

    ஒருங்குறியில் எழுத்துக்களைச் சேர்க்க, அவை அச்சிலும் புழக்கத்திலும் இருந்ததற்கான ஆதாரம் இருந்தால் போதுமானது. சில அகராதிகளில் மட்டும் உள்ள பொதுப்பயன்பாட்டில் இல்லாத எழுத்துக்களெல்லாம் ஒருங்குறியில் ஏறி உள்ளன. இத்தனைக்கும், ஹிந்து சாத்திர, ஸ்தோத்திர நூல்களை அச்சிடுவோர் பல்லாண்டுகளாக பெரும்பான்மையாகத் துணை எண்களுடன் கூடிய எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

    இதன் அடிப்படையில்தான், தமிழிலும் 2,3,4 ஆகிய துணைக்குறிகள் அடங்கிய எழுத்துக்களுக்கு தனி இடம் கேட்டு, “Extended Tamil” என்ற பகுதியை ஒதுக்கி, அதில் இவ்வெழுத்துக்களை சேர்க்க ஒருங்குறி நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துமுறையும் மொழியும் ஒன்றல்ல. ஒரு மொழியானது பல்வேறு எழுத்துமுறைகளில் எழுதப்படலாம், அதே போல ஒரு எழுத்துமுறையானது பல்வேறு மொழிகளை எழுதப் பயன்படலாம். உதாரணமாக, செர்பிய மொழியானது இலத்தீன், சிரில்லிக் என்ற இரு எழுத்துமுறைகளிலும் எழுதப்படுகிறது. தேவநாகரி எழுத்துமுறையானது மராட்டி, ஹிந்தி, நேபாளம் முதலிய மொழிகளை குறிக்கப்பயன்படுகிறது. ஆகவே, ஒரு எழுத்துமுறையானது அதைச்சார்ந்த மொழியும் கூடுதலாக பிற மொழிகளையும் குறிக்கும் வேளைகளில், பல்வேறு புதிய எழுத்துக்கள் துணைக்குறிகளுடன் நீட்சியாக எழுகின்றன. இது உலகின் அனைத்து எழுத்துமுறைகளுக்கும் பொருந்தும்.

    பிற இந்திய மொழிகளை மூலபாடம் மாறாமல் தமிழ் எழுத்துமுறையில் எழுத இந்தத் துணை எண்களுடன் கூடிய எழுத்துக்கள் நிச்சயமாக உபயோகப்படும். நம்முடைய பாரம்பரிய பண்டைய சூத்திர, சாத்திர, உரைகளில் இருந்து தமிழ் நூல்களில் உச்சரிப்பும் மூலமும் மாறாமல், மேற்கோளாக காட்ட இவ்வெழுத்துக்கள் மிகவும் பயன்படும். இந்த எழுத்துக்களை பயன்படுத்த விரும்பாதவர்கள், பயன்படுத்த வேண்டாம். ஜ, ஹ, ஷ, ஸ போன்ற எழுத்துக்கள் இருந்தும் சிலர் பயன்படுத்தாதது போலத்தான் இதுவும்.

    இது போன்ற கூடுதல் எழுத்துக்கள், உதாரணமாகத் தற்காலத்தில் தமிழில் இல்லாத dha ध என்ற எழுத்துக்கூட மிக முன்னதாகவே 2000 காலத்துக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டில் காணப்படுகின்றன. இது ஜைன சமயக் கல்வெட்டு, धम्मम् த⁴ம்ம்ம் என்ற பிராகிருத சொல்லை குறிக்க இவ்வெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பழமையான தமிழ்க்கல்வெட்டை தற்காலத்தில் மொழிப்பெயர்க்க வேண்டுமென்றாலும் கூட த⁴ என்ற எழுத்து வேண்டும். மயிலையாரின் கூற்றுப்படி பௌத்த ஜைன சமயத்தவர்கள் தான் மணிப்பிரவாளத்தையே உருவாக்கியவர்கள். ஏதோ தமிழ் – வடமொழி தொடர்பு என்றாலே ஹிந்து மதச் சம்பந்தம் உடையது என்று கூறுபவர்கள் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

    துணை எண்களுடன் கூடிய எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான முன்மொழிவு ஒருங்குறி அமைப்பிடம் அளிக்கப்பட்டது. நம்முடைய சாத்திரங்கள் கிரந்தங்கள் முதலியவற்றை மூலபாடம் தவறாது தமிழ் எழுத்துமுறையில் எழுதக்கூடிய நுட்பத்தேடல் காரணங்களுக்காகவே இம்முறை கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்குத் தமிழ்கூறும் நல்லுலகத்துக் கணினி உபயோகிப்பாளர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் எழுந்தது. பேராசிரியர் இ.அண்ணாமலை[1] போன்றோர் இதற்கு விரிவான விளக்கமும் தெரிவித்தனர்.

    ஒருங்குறியில் சீன மொழிக்கு 25000 (சரியான எண்ணிக்கை 20902) குறியீட்டு இடங்கள், சிங்களத்திற்கு 400 (சரியான எண்ணிக்கை, தமிழைப் போல், 128) இடங்கள், செம்மொழித் தமிழுக்கு 128 இடங்கள்தானா?” என்ற கேள்வியுடன் துவங்குகிறது. இந்தக் கேள்வி, ஒருங்குறி பற்றிய அடிப்படையான புரிதல் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒருங்குறி ஒரு கருவி, உலகத்து மொழிகளை அவற்றின் எழுத்தில் கணினியில் கையாள உதவும் கருவி, எழுதுவதைத் தரப்படுத்தும் கருவி. ஒரு வரிசையில் ஒவ்வொரு மொழிக்கும் அதன் எழுத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடம்கொடுத்து, ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக் குறியீட்டு எண் (code point) கொடுக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு. சொல்லை அலகாகக் கொண்டு எழுத்து முறை அமைந்த சீன மொழியில் எழுத்துகள் அதிகமாக இருப்பது இயற்கை. தமிழ், ஒலியின் அடிப்படையில் குறைந்த எழுத்துகளைக் கொண்டு எல்லாச் சொற்களையும் படைக்கிறது. எழுத்துகள் குறைவாக இருப்பதால், தமிழுக்கு ஒருங்குறியில் குறைந்த இடங்கள். ஒருங்குறியில் இடம், மொழியின் தகுதியைப் பொறுத்து அமைவதல்ல. அதனால் குறைந்த இடங்கள் தமிழின் தரத்தைத் தாழ்த்துவது ஆகாது.

    தமிழ் எழுத்துகளுக்கு அதிக இடம் வேண்டும் என்று கணித்தமிழ் சங்கம் முதலான அமைப்புகளும், தமிழக அரசும் கேட்டது தொழில்நுட்ப அடிப்படையில். தற்போது ஒருங்குறியில் தமிழ் உயிரெழுத்துகளும் அகரமேறிய மெய்யெழுத்துகளும் தனித்தனியே குறியீட்டு எண்கள் பெறுகின்றன. உயிர்மெய் எழுத்துகளுக்குத் தனிஎண் கிடையாது. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சொல்லும் தொல்காப்பியம் உயிர்மெய்யெழுத்துகளைச் சேர்க்கவில்லை என்பதை இங்கே மனத்தில் கொள்ளலாம். உயிர்மெய் எழுத்துகளைக் கணினி ஒரு மென்பொருளால், (இதற்கு rendering engine என்று பெயர்), அகரமேறிய மெய்யையும் உயிர்க்குறியையும் சேர்த்து,  உருவாக்குகிறது. உயிர்மெய் எழுத்துகளுக்குத் தனியே குறியீட்டு எண்கள் ஒதுக்க வேண்டும் என்பதே மேலே சொன்ன கோரிக்கையின் மூலக் கருத்து.

    தமிழ் எழுத்துகளுக்குக் குறியீட்டு எண், ஒருங்குறியில், மற்ற இந்திய மொழிகளைப் போல, 7 பிட் அலகைப் பயன்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. (இது எல்லா இந்திய மொழிகளுக்கும் இந்திய அரசு அங்கீரித்த ISCII எனப்படும் குறியீட்டு முறை). அதாவது, 0, 1 என்ற இரண்டே எண்களைப் பயன்படுத்தி எந்தத் தகவலையும் எண்வயப்படுத்தும் கணினியில், 27 தகவல்களை இந்த அலகால் எண்வயப்படுத்த முடியும். கணினித் துறையில் இந்த அலகு காலாவதி ஆகி வருகிறது. இப்போது 16 பிட் அலகே (216) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் எழுத்துகளை எண்வயப்படுத்த இந்த விரிந்த அலகை வேண்டுகிறது மேலே சொன்ன கோரிக்கை. தமிழ் எழுத்துகளின் விரிந்த எண்வய முறைக்கு TACE (Tamil All Character Encoding) என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இது ஒருங்குறியில் தனியார் பயன்படுத்த மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இடப்பட்டிருக்கிறது.

    ஒருங்குறிக் கூட்டமைப்பு, இப்போது தமிழ் எழுத்துகளுக்குக் கொடுத்துள்ள எண்வய முறையை மாற்ற விரும்பவில்லை. ஏற்கனவே முடிவு செய்த தமிழ் எழுத்துக்கான  எண்வய முறையை மாற்றுவதால் எழும் நடைமுறைச் சிக்கல்களே இதற்குக் காரணம். முதலாவது, ஒருங்குறியில் ஒரே மாதிரியாக இந்திய மொழிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உள்ளமைப்பை இந்த மாற்றம் பாதிக்கும். இரண்டாவது, விரிந்த எண்வய முறை அமுலுக்கு வந்தால், தமிழில் பழைய முறையில் கோக்கப்பட்ட ஆவணங்களை எளிதாகப் படிக்க முடியாது. மூன்றாவது, புதிய எண்வயமுறை இல்லாமல், சில பயனேற்ற மென்பொருள்களை (application software) – குறுஞ்செய்தி அனுப்ப, அச்சிடத் தேவையானவை – தமிழில் பிசிறில்லாமல் பயன்படுத்த முடியாது என்று சொல்லும் குறை ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை; கணினி வல்லுநர்கள் தீர்வு காணக் கூடிய பிரச்சனை. ஒருங்குறிக் கூட்டமைப்பின் இந்தச் சிந்தனை, தமிழின் தகுதி பற்றியது அல்ல.

    ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 128 இடங்களில் 41 இடங்கள் கிரந்தத்தோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பது அழைப்பில் காணப்படும் மற்றொரு தவறான விபரம். வழக்கில் உள்ள சில கிரந்த எழுத்துகளோடு சேர்த்துத் தமிழ் எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் 48. மீதியுள்ள இடங்கள் தமிழ் எண்களுக்கும் வேறு சில குறிகளுக்கும் கொடுக்கப்பட்டு, சில இடங்கள் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்பதற்காகக் காலியாக விடப்பட்டுள்ளன. 41 இடங்களில் புதிய கிரந்த எழுத்துகள் இல்லை.

    டாக்டர் ஸ்ரீரமண சர்மாவின் நீட்டித்த தமிழ்[2] (Extended Tamil) பற்றிய முன்வரைவில் கிரந்த எழுத்துகளை அப்படியே தமிழ் எழுத்துகளோடு சேர்த்து எழுதும்படிச் சொல்லவில்லை. சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும்போது, அதில் உள்ள, ஆனால் தமிழில் இல்லாத, வர்க்க எழுத்துகளையும் வேறு சில எழுத்துகளையும் (மொத்தம் 26 எழுத்துகள்) இணையான தமிழ் எழுத்துகளில் மேல்குறியிட்டு (super script) எழுதலாம் என்றே சொல்லியிருக்கிறார். அதாவது, சமஸ்கிருதத்தில் உள்ள kha, ga, gha போன்ற வர்க்க ஒலிகளை க2 க3, க4 என்றும் உயிர்ப்புடைய ரு, லு போன்ற ஒலிகளை ரு2, ல2 என்றும் எழுதலாம் என்றே சொல்கிறார். சமஸ்கிருதத்தின் இந்த ஒலிகளை கிரந்த எழுத்துகளால் எழுதும் சாத்தியத்தோடு ஒப்பிட்டு, எண்குறியிட்ட தமிழ் எழுத்துகளே ஏற்றவை என்ற தன் முடிவைச் சொல்கிறார்.

    சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரை, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும், இன்றும் உள்ள, ஒரு மரபிற்குக் கணினியின் துணையை நாடுகிறது. புதிதாக ஒரு எழுத்து வழக்கைப் பரிந்துரைக்கவில்லை. இந்த மரபில் தமிழ் எழுத்துகளில் எண்குறியிட்டு எழுதும் வழக்கம் இருக்கிறது. சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும் மரபு, அதை கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபிலிருந்து வேறுபட்டது.

    இந்தப் பரிந்துரை சமஸ்கிருதத்தை, தேவநாகரியில் அல்லாமல், தமிழ் எழுத்துகளில் எழுதும் முறை பற்றிய பிரச்சனை. இங்கு மொழிவேறு, எழுத்துரு வேறு என்ற உண்மையைச் சுட்ட வேண்டும். தேவநாகரி, ரோமன் போன்ற எழுத்துருக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படுவது பலரும் அறிந்த உண்மை. ஒரு மொழி ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களில் எழுதப்படுவதும் உண்மை. வலைப்பதிவில் கருத்துத் தெரிவிக்கும் சிலர், தமிழ் எழுத்துரு அவர்களுக்குக் கிடைக்காததால், தமிழை ரோமன் எழுத்துகளில் எழுதினாலும் அது தமிழ் மொழிதான்.  சமஸ்கிருதத்தை, தமிழ் எழுத்துரு உட்பட, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்கும் பல எழுத்துருக்களில் எழுதுவது வரலாறு காட்டும் உண்மை.

    சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துருவில் எழுதுவதைத் தமிழ்மொழியின் பிரச்சனையாகப் பார்ப்பது, அது தமிழ் நெடுங்கணக்கை நீட்டிக்கிறது என்ற எண்ணத்தால், தமிழ் மக்கள் (தோசை, தலித், போகம் (‘crop’) போன்று) தாங்கள் பேசும் சொற்களில் உள்ள ஒலிப்புடைய (voiced) எழுத்துகளை (ga, da, dha, ba என்ற அவற்றின் உச்சரிப்பைக் காட்டும் முறையில்) எழுத விரும்பி, கிரந்த எழுத்துகளை (அல்லது எண் மேலேற்றிய தமிழ் எழுத்துகளைப் (க2, ட2, த2, ப2)) பயன்படுத்திவிடலாம் என்னும் பயத்தால்.

    சர்மாவின் முன்வரைவை உத்தமம் (INFITT) என்னும் தமிழைக் கணினியில் பயன்படுத்தும் முயற்சிகளில் முன்னணியில் நிற்கும் அமைப்பும், சில நிறுவனங்களும், சில தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் விரிவுத் தமிழ் ஒருங்குறியில் இடம்பெற வேண்டாம் என்று ஒருங்குறிக் குழுமியத்திற்குக் கோரிக்கை அனுப்பினார்கள்.

    இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உள்ள தமிழ் நெடுங்கணக்கை இது மாற்றுகிறது என்னும் வாதம், சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டில் எழுதும் மரபில் உள்ள பிரச்சனையைத் தமிழ் நெடுங்கணக்கிற்குள் கொண்டுவர வேண்டாம் என்னும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

    விரிவுத் தமிழை எதிர்க்கும் வாதத்தின் நிலைப்பாடு இதுவே. “தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவை இல்லை; தமிழர்கள் தங்கள் தமிழ் உச்சரிப்பில் காட்டும் சில புதிய ஒலிகளை வடிக்க எழுத்து வேண்டாம். தமிழ்நாட்டில் வழங்கும் தமிழல்லாத எந்த மொழியையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதத் தேவை இல்லை. அதனால், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படும் ரோமன், தேவநாகரி போன்ற எழுத்து முறைகளுக்கு விரிவாக்கப்பட்ட எழுத்து (Extended Roman, Extended  Devanagari) இருப்பது போல், தமிழுக்கு எழுத்துமுறை விரிவு, கணினிக்கு மட்டுமே என்றாலும், தேவை இல்லை.”

    ஒருங்குறிக் கூட்டமைப்பு, சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தொழில்நுட்ப ரீதியில் தேவை இல்லை என்பதே. புதிய ஒலிகளை எண் குறியீடாக ஒருங்குறியில் ஏற்கனவே இருக்கும் எண்களை வைத்தே எழுதலாம் என்பது அதன் கருத்து.

    தமிழ் எழுத்துகளுக்கு யாரும் எண்குறியிட்டுப் புதிய உச்சரிப்புகளைக் காட்ட விரும்பினால், கிரந்தம் தேவை இல்லை. இப்போது ஒருங்குறியில் உள்ள எண்களை வைத்தே, விரிவுத் தமிழ் இல்லாமலே, எழுதலாம். ஒருங்குறியில் கிரந்தத்தைத் தடுத்தாலும் இதைத் தடுக்க முடியாது.

    கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்பது தனியான வேறு கோரிக்கை. ஒருங்குறியில் உள்ள எத்தனையோ எழுத்துருக்களைப் போல, கிரந்தத்திற்கும் இடம் வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை இந்திய அரசு, கிரந்த எழுத்து முறை வல்லுநர் குழுவின் பரிந்துரையின் பேரில், ஒருங்குறிக் குழுமியத்திற்கு அனுப்பியது.

    கிரந்த எழுத்துக்கள் அட்டவணை[3]

    கிரந்தக் கோரிக்கையில் சில தமிழ் எழுத்துகளைக் கிரந்த நெடுங்கணக்கில் சேர்த்திருப்பதை மறுபரிசீலனை செய்யத் தமிழக அரசு நேரம் கேட்டதால், இதன் மீது முடிவெடுப்பதைக் கூட்டமைப்பு தள்ளிவைத்திருக்கிறது. இந்திய அரசின் பார்வையில் இது தமிழ் பற்றிய பிரச்சனை அல்ல. கிரந்தம் பற்றிய பிரச்சனை. எனவே, இது தமிழைப் பாதிக்கும் என்ற வாதத்தை ஒப்புக்கொள்ளாது.

    ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் இடம்பெறும் தேவைக்கான பல காரணங்களில் சமஸ்கிருத்தைக் கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபு ஒன்று. சர்மா இந்த மரபின் தேவைக்காகவே ஒருங்குறியில் கிரந்தத்தைச் சேர்ப்பது பற்றித் தனியாக வேறு ஒரு முன்வரைவு அனுப்பினார். டாக்டர் நா. கணேசன் ஒரு முன்வரைவை அனுப்பினார். ஒருங்குறிக்கு யாரும் பரிந்துரைகள் அனுப்பலாம். தமிழும் தகவல் தொழில்நுட்பமும் அறிந்த சிலர் அனுப்புகிறார்கள். கூட்டமைப்பு தொழில்நுட்ப அடிப்படையில் பரிந்துரைகளைப் பரிசீலித்து முடிவெடுக்கிறது.  அது  நடைமுறைச் சிக்கல் உட்பட எல்லாவற்றையும் சீர்தூக்கி முடிவுசெய்யும். அரசின் பலமோ, அரசியல் விளைவுகளோ அந்த முடிவில் முக்கிய இடம் வகிப்பதில்லை.

    தமிழுக்கே உரிய மூன்று (ழ, ற ன) எழுத்துக்களையும், எ, ஒ என்ற இரண்டு உயிர்கள் மெய்யோடு சேரும்போது எழுதும் இரண்டு உயிர்க்குறிகளையும் விரிவாக்கப்பட்ட கிரந்தத்தில் சேர்க்கும் பரிந்துரை, இந்திய அரசின் கோரிக்கையில் இருக்கிறது. (எ, ஒ என்ற  இரண்டு உயிர் எழுத்துகளுக்கு கிரந்த எழுத்திலேயே கூடுதல் குறியிட்டு (diacritic marks) எழுதவே பரிந்துரை இருக்கிறது). இது, கிரந்த வல்லுநர்கள் பலர் சேர்ந்த ஒரு குழு செய்த முடிவு. ‘தமிழ் வரிவடிவம் கிரந்த வரிவடிவத்திற்குள் ஒரு சிறு பகுதியாக அடங்கிவிடுகின்றது’ என்று தவறாகவும் மிகைப்படுத்தியும் கூறுவது இதைத்தான்.

    சர்மாவின் முன்வரைவில் தமிழுக்கே உரிய ஐந்து எழுத்துகளைக் கிரந்த எழுத்துகளோடு சேர்க்கும் பரிந்துரை இல்லை. அவர் நவீன சமஸ்கிருத்தில் தமிழ் உட்பட பிறமொழிச் சொற்களை, முக்கியமாகப் பெயர்களை (names), எழுதும் தேவை ஏற்படும். அந்தத் தேவையை நிறைவு செய்யக் கிரந்த விரிவு (Extended Grantha) தேவைப்படும். அதில் கூடுதல் குறி சேர்த்த கிரந்த எழுத்துகளைச் சேர்க்கலாம் என்று சொல்கிறார். எடுத்துக்காட்டாக, z என்ற ஒலியுள்ள Xerox, zebra என்ற ஆங்கிலச் சொற்களை ஜ-இன் கீழ் இருபுள்ளி இட்டுக் காட்டலாம் என்று சொல்கிறார். தொல்காப்பியர், தமிழ் என்ற தமிழ்ச் சொற்களைச் சமஸ்கிருத்தில் எழுதும்போது, தமிழ்நாட்டில் கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்களுக்குத் தமிழும் படிக்கத் தெரியும் என்பதால், கிரந்தத்தில் இல்லாத எழுத்துகளையும் உயிர்க் குறிகளையும் ஒருங்குறியில் உள்ள தமிழ் எழுத்துப் பகுதியிலிருந்து இறக்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால், இது ஒருங்குறிக் கூட்டமைப்பின் ஒவ்வொரு எழுத்து முறைக்கும் தனிப்பகுதி (block) இருக்க வேண்டும் என்னும் கொள்கைக்கு  முரணானது. எனவே, இந்திய அரசின் கோரிக்கையில் தமிழில் உள்ள மூன்று எழுத்துகள் கிரந்தப் பகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிரந்த எழுத்துகளில் பல காலமாகத் தமிழ் எழுத்துகளோடு ஒரே அல்லது ஒத்த வரிவடிவம் உடைய உ, ஊ, ய, வ, ண, (த, ந) என்ற எழுத்துகள் இருந்து வருகின்றன. இந்தக் கோரிக்கையின்படி மூன்று எழுத்துகள் அதிகமாக இருக்கும்.

    கிரந்த எழுத்து முறை பற்றிய பிரச்சனையைத் தமிழின் பிரச்சனை ஆக்கத் தேவை இல்லை. இது கிரந்த எழுத்து முறையை நவீனமாக்கும் முயற்சி. தமிழ் நெடுங்கணக்கின் சில எழுத்துகள் கிரந்த எழுத்து முறையில் சேர்வது தமிழைக் கெடுப்பது ஆகாது. தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் ஆங்கிலேயர் உச்சரிப்பில் Tamil என்று எழுதுகிறார்கள்; தமிழ் உச்சரிப்பின்படி எழுத வேண்டும் என்றால் Thamizh என்று எழுதலாம். ஓர் ஆங்கிலேயர் Thamil என்று எழுதலாம் என்று சொன்னால், தமிழ் கெட்டுப் போகும் என்று சொல்ல மாட்டோம், அல்லவா? ஆங்கிலத்தைக் கெடுக்கிறது என்று ஆங்கிலேயர்கள் சொல்லலாம். இதேபோல், புதிய எழுத்துகள் கிரந்தத்தைக் கெடுக்கிறது என்று பழமையைப் போற்றும் சில கிரந்தவாதிகள் சொல்லலாம்.

    தமிழ் எழுத்துகளும் ரோமன் எழுத்துகளும் ஒருங்குறியில் தனித்தனியே இருந்தும், தமிழில் எழுதும்போது ரோமன் எழுத்துகளைச் சேர்க்க முடிவதுபோல, தமிழ் எழுத்துகளும் கிரந்த எழுத்துகளும் தனித்தனியே இருந்தாலும், தமிழர்கள் தமிழில் எழுதும்போது கிரந்த எழுத்துகள் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. அதைத் தடுக்க வேண்டுமென்றால், தொழில்நுட்பத்தை முடக்குவது வழி அல்ல, அவர்களுடைய மொழி நடத்தையை மாற்ற இசைவு வழியில் முயலுவதே வழி.

    இதுதவிர பல்வேறு குறியீட்டு முறைகள் புழங்கிய காலத்தில் தமிழக அரசு அலுவலகங்களில் வானவில் என்ற தனியார் அளித்த குறியீட்டு முறையையும் அதன் எழுத்துருக்களையும் பயன்படுத்தினர். அதன்பிறகு குறியீட்டு முறைகள் தரப்படுத்தத் துவங்கியபோதும் தமிழக அரசு அலுவலகங்கள் அதே வானவில் குறியீட்டையே பயன்படுத்தின. பின் டேம், டேப் குறியீட்டு முறையை அதிகாரப்பூர்வ குறியீட்டு முறையை அரசு அறிவித்தது. ஆனாலும் தமிழக அரசு அலுவலகங்கள் அதே வானவில் குறியீட்டையே பயன்படுத்தின. பிறகு ஒருங்குறிக்கு உலகமே மாறிய போதிலும், அரசு 2010-ல் ஒருங்குறியை அதிகாரபூர்வ குறியீட்டு முறையாக அறிவித்தபோதிலும் தற்போது வரை வானவில் முறையே பல அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணம் வானவில் முறை அவர்களுக்கு பழகிவிட்டது மற்றும் புதிய செயலைக் கற்றுக்கொள்ள அவர்கள் காட்டும் சோம்பலும் தான் எனலாம். அதுதவிர பழைய கோப்புகளை புதிய முறையில் மாற்றும்போது வேலைப்பளு அதிகரிக்கும் என்ற தவறான எண்ணமும்தான் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். இம்முறையிலிருந்து அதிகாரபூர்வ குறியீட்டுமுறைக்கு மாற்றுவதற்கு சரியான அதிகார பலத்துடன் ஆணையிடும் அதிகாரிகள் இல்லை என்பதும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

    மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஒருங்குறி, குறியீட்டு முறைகள் மற்றும் கணினியில் தமிழ் உபயோகம் குறித்த விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்து. தமிழ் தட்டச்சு என்பது மிகப்பெரிய கடினமான பணி என்றே பலரும் கருதுகிறார்கள். கணினியும், தமிழும் தெரிந்தவர்கள் சில மணித்துளிகளிலேயே தமிழ்த் தட்டச்சு முறையைக் கற்றுக்கொள்ளலாம் என்பதே பலருக்கும் தெரியாத ஒன்று. இவ்வகையில் கற்றறிந்தவர்களிடையேயும் அறியாமை நிலவுகிறது என்பதற்கு இது ஒரு சரியான சான்று என்கிறார்கள் கல்வியாளர்கள். எனவே பல்கலைக்கழகங்கள், உயர்கல்விக்கூடங்களில்  ஆய்வுப்பணிகள் ஒன்றிணைக்கப்படாமலேயே இன்னும் சிதறிக்கிடக்கின்றன.

    இவ்வகையில் குறியீட்டு முறைகள், எழுத்துருக்கள், விசைப்பலகைகள் என மூவகைப் பணிகளையும் போதிக்கத் தேவையான மனித ஆற்றல் ஏறக்குறைய தமிழகத்தில் மிக மிகக்குறைவாகவே உள்ளது எனலாம். இத்தகைய ஆற்றல் தமிழர்கள் வாழும் அனைத்து தேசங்களிலும் பரவினால் தமிழ்க்கணினியானது உலகெங்கும் மிக அதிகமான பயன்பாட்டில் வரும் என்பதில் ஐயமில்லை.

    இங்ஙனம் பல்வேறு வகைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறியீட்டு முறைகளைச் சிக்கலில் வைத்துள்ளன எனலாம்.

    *****

    குறிப்புகள்

    [1] http://tdil.mit.gov.in/Standards/ISCII.aspx

    [2] http://www.tscii.org/

    [3] http://www.tamilvu.org/Tamilnet99/index.htm

    [4] Tamilnadu Government, Information Technology Department, GO (Ms) No.29, dated 23.06.2010

    [5] http://unicode.org/

    [6] http://www.tamilvu.org/Tamilnet99/order.htm

    [7] கணினியில் தமிழ் நிகழ்வுகள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள், பக். 876 – 878

    [8] Tamilnadu Government, Information Technology department, GO (Ms) No.13, dated 10.11.2006

    [9] http://www.unicode.org/L2/L2008/08101-tace-report.pdf

    [10] Ibid

    [11] http://www.sangatham.com/news/grantha-whats-happening.html/comment-page-1

    [12] http://www.vallamai.com/?p=1666

    [13] http://tamil.oneindia.com/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html

    [14] http://unicode.org/charts/

    “கணினியில் தமிழ் எழுத்துருக்களும், குறியீட்டு முறைகளும்” வெ.இராமன் (2016) மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு.

    *****

    கட்டுரையாளர்
    முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641021
    மின்னஞ்சல்: raman600@gmail.com

     

     

    Share
  • குறியீட்டு முறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் – பகுதி 1

    -பேரா. முனைவர். வெ.இராமன்

    தமிழில் இதுவரை உருவாக்கியுள்ள அனைத்துக் குறியீட்டு முறைகளையும் இதுவரை அலசியிருந்த போதும்  அனைத்துக் குறியீட்டு முறைகளும் பயன்பாட்டில் இருந்த விதம் விளக்கப்படவில்லையாதலால், அவை பயன்பாட்டில் இடம் பெற்றது குறித்தும், நடைமுறையில் உள்ள சிக்கல்களும் அவற்றிற்கான காரணங்களையும் இனி விரிவாகக் காணலாம்.

    இஸ்கி (ISCII) குறியீட்டு முறை[i] இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட முறையாகும். இது பெரும்பாலும் தேவநாகரி முறையினைச் சார்ந்து அமைக்கப்பட்டிருந்தது. அதுதவிர இந்திய அரசு மாநில மொழிகளின் வளர்ச்சிக்கென பெரிய திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பது வல்லுநர்களின் கருத்து. எனவே இஸ்கி முறையானது தமிழ் மொழியின் மீது எந்தவொரு தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை எனலாம். எனவே இஸ்கி குறியீட்டு முறையானது தமிழர்களிடையே பரவவில்லை என்பதே கண்கூடு. அதுதவிர இந்தியாவிற்கு வெளியே தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இஸ்கியின் ஆக்கம் குறித்து அந்த நாட்டில் வசித்த+ நன்பல ஆசினி தமிழ் மக்கள் அறிந்திருக்கவில்லை என்பது தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்தாகும்.

    திஸ்கி (TSCII) குறியீட்டு முறை[ii] உலகம் சார்ந்த தமிழ் வல்லுநர்களின் கூட்டுறவு முயற்சியால் உருவான குறியீட்டு முறையாகும். இது உலகம் முழுவதுமுள்ள கணினி உபயோகிப்பாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் தமிழ் உபயோகத்தில் புழக்கத்தில் இருந்த குறியீட்டு முறையாகும். வலைத்தளங்கள், மின்னஞ்சல் போன்ற கணினி உபயோகத்தில் மிகவும் பயன் உடைய குறியீட்டு முறையாகத் திகழ்ந்தது. பல்வேறு இலக்கிய நூல்கள் இக்குறியீடு முறையில் உருவாக்கப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. உதராணமாக நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கிய நூல்கள் இக்குறியீட்டு முறையில் புதுப்பிக்கப்பட்டு ’மதுரைத் திட்டம்’ வலைத்தளத்தில் வெளியிட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். ஆயினும் உலகெங்கும் பரவிய ஒருங்குறி குறியீட்டு முறையானது கால வெள்ள நீரோட்டத்தில் திஸ்கி முறையினை அடித்துக் கொண்டு சென்றுவிட்டது எனலாம்.

    வ்ட்ட்தனிப்பட்டவர்கள் உண்டாக்கிய குறியீட்டு முறைகள் என்பது ஆரம்பத்திலிருந்தே தனித்தீவுகளாகவே இருந்து வந்தன. இம்முறையினைப் பயன்படுத்தி இருவர் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இருவரிடமும் அக்குறியீட்டு முறைகான மென்பொருள் இருப்பது அவசியமாகிறது. மற்றவர் வேறு மென்பொருள் வைத்திருப்பினும் அல்லது மென்பொருட்கள் இல்லாதிருந்தாலும்  தமிழ் எழுத்துருக்களானது படிக்க இயலாத குறியீடுகளாகவே தோன்றும். இக்குறியீட்டு முறையில் நூற்றுக்கணக்கான மென்பொருட்கள் உலகெமெங்குமிருந்து தோன்றியிருந்தன. அவை அனைத்தையும் பற்றி அறிந்திருக்கவோ, வாங்கிப் பயன்படுத்தவோ இயலாது. இக்குறியீட்டு முறைகள் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டிருந்தால் தரப்படுத்தலுக்கும் வழியின்றி முறைப்படுத்த வழியில்லாத முறைகளாகவே திகழ்ந்தன. எனவே கணினி உபயோகிப்பாளர்களிடம் இக்குறியீட்டு முறைகள் வரவேற்பைப் பெறாமல் பயன்பாட்டிற்கு வராமலே போயின.

    டேம், டேப் (TAM, TAB) குறியீட்டு முறைகள்[iii] ஏற்கனவே குறிப்பிட்டது போல் விசைப்பலகை பயன்படுத்த வழிகாட்டுதல் இல்லாமை, தமிழகத்திற்கு வெளியே வசிக்கும் தமிழர்களிடையே கொண்டு சேர்க்கும் காரணிகள் இல்லாமை ஆகியவை இக்குறியீட்டு முறைகள் பரவாமல் போனதற்கு முக்கிய காரணங்களாகும்.

    அதுதவிர அரசியல் காரணங்களாலும் இக்குறியீட்டு முறை பெரிதும் பாதிப்படைந்தது. இதை அறிமுகப்படுத்தி அரசாணை பிறப்பித்த அரசு ஆட்சிக்குப்பின்னர் வந்த அரசு இதனை கண்டுகொள்ளவில்லை எனலாம். அதுதவிர இம்முறையில் அரசு வழங்கிய எழுத்துருக்கள் அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கொண்டிருந்ததை பின்னர் வந்த அரசு விரும்பவில்லை. எனவே அவை பயன்படுத்தப்படாமலேயே ஒதுக்கப்பட்டன.

    இவற்றை எல்லாம் தாண்டி ஒருங்குறி செயலாக்கத்திற்காக 2010 ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று தமிழக அரசு அரசாணை[iv] எம்.எஸ் எண் 29, தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் ஓர் அரசாணையை வெளியிட்டது. அதன்படி அரசு முன் வெளியிட்ட டேப், டேம் (TAB, TAM) உட்பட அனைத்து 8பிட் குறியீட்டு முறைகளையும் நிறுத்துவதுடன் 16 பிட் குறியீட்டிற்கு மாறுவதாக அறிவித்தது. அத்துடன் தமிழ் கணினியில் உபயோகப்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் 16 பிட் ஒருங்குறி முறைதான் முக்கிய குறியீட்டு முறையாகும் எனவும் அரசாணை பிறப்பித்தது. இத்துடன் டேப், டேம் (TAB, TAM) குறியீட்டு முறையானது முடிவுக்கு வந்தது எனலாம்.

    ஒருங்குறி குறியீட்டு முறை[v] தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள குறியீட்டு முறையாகும். ஒருங்குறிக்கு முக்கியத்துவம் இருந்தபோதிலும் தமிழின் கணினிப் பயன்பாட்டை தரப்படுத்துவதற்காக தமிழக அரசு ஒரு அரசாணை (அரசாணை எம்.எஸ் எண் 653 தேதி 08.10.1998) மூலம் பேராசிரியர் முனைவர் எம். அனந்தகிருஷ்ணன் அவர்களைத் தலைவராகக் கொண்டு, தமிழக முதலமைச்சர் தலைமையின்கீழ் செயல்படும் தகவல் தொழில்நுட்ப மாநில செயற்குழுவின் கீழ் தமிழ் தொழில்நுட்பத்திற்காக ஒரு துணைக்குழுவை அமைத்தது. இக்குழுவானது 1999ம் பிப்ரவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் ’தமிழ்நெட்99’[vi] எனும் மாநாட்டை நடத்தியது. டேம், டேப் (TAM, TAB) எனும் குறியீட்டு முறைகளை இம்மாநாடு அறிமுகப்படுத்தியது. இருப்பினும் ஒருங்குறி வளர்ந்து வருவதைக் கண்டு ஒருங்குறி கூட்டமைப்பில் தமிழக அரசு இணை உறுப்பினராகவும் இம்மாநாடு வலியுறுத்தியது. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இத்துணைக்குழுவானது இணைந்து ஒருங்குறையைப் பற்றி ஆராயத்துவங்கியது. இவ்வாரய்ச்சியின் விளைவாக கீழ்காணும் கருத்துகள் வெளிப்பட்டன.

    1999-இல் வெளியிடப்பட்ட இந்த ஒருங்குறியின் தரமானது தமிழ்க் கணினி உபயோகத்திற்கு திறமையாகச் செயல்பட போதுமானது இல்லை எனக் கருதப்பட்டது. அதற்கான காரணங்களாவன[vii]:

    1. ஒருங்குறியில் தமிழ் குறியீடானது 247 எழுத்துக்களுக்குப் பதிலாக 31 எழுத்துக்களை மட்டுமே உள்ளீடு செய்திருந்தது. இந்த 31 எழுத்துக்களாவன 12 உயிரெழுத்துக்கள், 18 அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் மற்றும் ஒரு ஆயுத எழுத்து. இதுதவிர 5 கிரந்த அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்களையும் ஒருங்குறி உள்ளீடு செய்திருந்தது. எனவே தமிழ் எழுத்துக்களில் 10% மட்டுமே தமிழ் எழுத்துக்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது.
    2. ஒதுக்கப்பட்ட உயிர்மெய் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனி எழுத்துக்களே. அவை எழுத்துக்களின் துணை வடிவங்களோ அல்லது இணை எழுத்துக்களோ அல்ல.
    3. பொதுவாக தமிழ் எழுத்துவடிவக்கட்டுரைகளில் உயிர்மெய் எழுத்துக்களானது 64% முதல் 70% வரையிலும், உயிர் எழுத்துக்களானது 5% முதல் 6% வரையிலும், மற்றும் மெய் எழுத்துக்களானது 25% முதல் 30% வரையிலும் இருக்கும் என ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே உயிர்மெய் எழுத்துக்களை இணை எழுத்துக்களாக உடைப்பது திறமையான கணினி உபயோகத்திற்கு வழிவகுக்காது.
    4. கணினியில் எழுத்துக்கள் ஒழுங்கமைவுக்கு (rendering) இந்த குறியீட்டு முறையானது சரியான வழியாக அமையாது. தமிழின் இயற்கை மொழி செயல்முறைக்கும் (Natural Language Process), எழுத்துக்களை வரிசைப்படுத்துவதற்கும் இம்முறை ஒத்துழைக்காது. மேலும் அதிக நேரம், இடம் ஆகியவற்றைக் கணினியில் எடுத்துக் கொள்வதுடன் திறமையான செயல்பாட்டிற்கு எதிராக அமையும்.
    5. இக்குறியீட்டு முறையானது இஸ்கி – 1988 (ISCII – 1988) குறியீட்டு முறையின் அடிப்படையிலானது. இதனால் எழுத்துக்கள் இயற்கையான வரிசையில் அமைந்திருக்காது. இதனை இயற்கை வரிசைக்குக் கொண்டு வருவதற்கு சிக்கலான தொகுப்பு வழிமுறை நிரல் தேவைப்படும்.
    6. தனி ஒரு எழுத்து அமைப்பதற்கு பல கூட்டுக் குறிகள் தேவைப்படும். இந்த பல கூட்டுக் குறிகள் பாதுகாப்புக் குறைபாடு, குழப்பமான கூட்டு ஆகியவற்றிற்கு வழி வகுப்பதுடன் இயல்பு நிலைப்படுத்துதல் செயல்பாட்டையும் செய்ய வேண்டியிருக்கும்.
    7. சாதாரண எண்ணுதல், வரிசைப்படுத்துதல், தேடுதல் போன்றவை திறமையற்று இருக்கும்.
    8. சட்டவிரோத கூட்டு எழுத்துக்களைத் தவிர்ப்பதற்காக தனி விதிவிலக்கு அட்டவணை தேவைப்படும்.
    9. தேவநாகரியின் அடிப்படையில் இது அமைக்கபட்டுள்ளதால் அதே எழுத்தை எழுதும் போது குழப்பமேற்படுத்தும்.
    10. இது 23 உயிர் மெய் எழுத்துக்களை கொண்டு அதை மெய் எழுத்து என வழங்குவது தமிழ் இலக்கணத்துக்கு எதிரானது.
    11. பேச்சிலிருந்து எழுத்திற்கும், எழுத்திலிருந்து பேச்சிற்கும் மாற்றுவது இயற்கைக்கு மாறாக அமைந்துள்ளது.
    12. சேமிப்பதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் திரும்பப் பெறுவதற்கும் திறனற்ற வகையில் அமைந்துள்ளது.
    13. தமிழ் எழுத்துக்களை இது கூட்டெழுத்தாகக் சுட்டுகிறது. உதாரணமாக ச + ெ◌ + ◌ா =சொ என்கிறது. சொ என்பது இங்கு கூட்டெழுத்து ச, ெ◌, ◌ா என்பவை எழுத்துக்கள். இது தமிழ் இலக்கணத்துக்கு எதிரானது.
    14. எழுத்துக்களை எண்ணுவதற்கும் இம்முறை பயன்படாது. உதாரணமாக மணிவண்ணன் என்ற பெயர் ஆறெழுத்துக் கொண்டது. ஆனால் இங்கு அது ’ம ண ◌ி வ ண ◌் ண ன ◌்’ என்ற ஒன்பது எழுத்தாகக் காட்டப்படும்.
    15. இக்குறியீட்டு முறை சட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். உதராணமாக ஒரு பத்திரத்தின் வாசகமானது ’வீட்டின் முழு உரிமையையும் திருமதி ரோஜாவுக்குக் கொடுத்து விடுகிறேன்”. ஆனால் சில மென்பொருட்களில் கிரந்த எழுத்துக்களான ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் பிழைபட்டு விடுகின்றன. இவை “’வீட்டின் முழு உரிமையையும் திருமதி ரோf◌ாவுக்குக் கொடுத்து விடுகிறேன்” என்று தோன்றக்கூடும். இது ’திருமதி ரோஜா’ அல்லது ’திருமதி ரோஷா’ என்று குழப்பம் ஏற்படுத்தக்கூடும்.

    இதுபோன்ற குழப்பங்களைக் களைவதற்காக 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி அன்று தமிழக அரசானது ஒரு அரசாணை[viii] வழியாக (அரசாணை எம்.எஸ். எண் 13, தகவல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு) பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன் அவர்களைத் தலைவராகவும், முனைவர் எம்.பொன்னவைக்கோ அவர்களைத் துணைத்தலைவராகவும், முனைவர் பி.ஆர்.நக்கீரன் அவர்களை கூட்டுநராகவும் மற்றும் 10 வல்லுனர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட செயல் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது புதிய தமிழ் 16 – பிட் குறியீட்டு முறைக்கான வழிவகைகளை ஆராய ஆரம்பித்தது. இக்குறியீட்டு முறை டேஸ் 16 (TACE 16 – Tamil All Character Encoding – 16 Bit)[ix] வழங்கப்பட்டது. அதாவது 16 பிட் குறியீட்டு முறையில் அனைத்து தமிழ் எழுத்துக்கள் மற்றும் கிரந்த எழுத்துக்களை அமைக்கும் முறையாகும்.

    இரு ஆண்டுகள் சோதனைகளுக்குப் பிறகு இக்குழுவானது தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தது.

    1. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட தரவு சேமிப்பு உபயோகத்தின்போது 46% முதல் 11.94% வரை திறன் பெற்று விளங்குகிறது.
    2. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட தரவு தலைப்புகள் வரிசைப்படுத்தலின்போது 69% முதல் 22.99% வரை திறன் பெற்று விளங்குகிறது.
    3. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட அனைத்துத் தரவுகளும் தமிழில் உள்ளபோது 39% அதிகத் திறன் பெற்று விளங்குகிறது.
    4. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட வரிசைப்படுத்தலின்போது 31% முதல் 16.96% வரை வேகமாக செயல்படுகிறது.
    5. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட தலைப்புகள் உருவாக்கத்தின் போது 7% வேகமாகச் செயல்படுகிறது.

    இதுபோன்ற பல்வேறு சோதனை முடிவுகளையும் காரணங்களையும் சுட்டிக்காட்டி ஒருங்குறியில் தமிழின் அனைத்து எழுத்துக்களையும் டேஸ்-16 அடிப்படையில் அமைக்கக் கோரியது.

    இது குறித்த முழு விவர அறிக்கையினை L2/08-101 என்ற எண்ணின்[x] கீழ் ஒருங்குறி கூட்டமைப்பிடம் சமர்ப்பித்தது. ஆயினும் ஒருங்குறி கூட்டமைப்பானது வரிசைப்படுத்துதல், இயற்கை மொழி செயல்முறை ஆகிய காரணங்களை நிராகரித்ததுடன் அனைத்து எழுத்துக்கள் முறை கோரிக்கையையும் நிராகரித்தது. இது ஒருங்குறி கூட்டமைப்பின் தத்துவத்திற்கு எதிராக அமைந்துள்ளதால் நிராகரிக்கப்படுவதாகக் காரணமும் கூறியுள்ளது. எனவே தற்போதுள்ள ஒருங்குறி முறையே நடைமுறையில் தொடரும் என்றும் கூறிவிட்டது.

    இருப்பினும் தமிழக அரசானது டேஸ்-16 குறியீட்டு முறையை அங்கீகரித்துடன் அதற்கான எழுத்துருக்களையும் தமிழ் இணையப்பல்கலைக்கழக வலைத்தளத்தில் வழங்கி வருகிறது. அச்சுத்துறை, சில மென்பொருட்கள் ஆகியவற்றின் பயன்பாட்டில் ஒருங்குறி பயன்பாடு போதுமானதாக இல்லை எனவே அவ்விடங்களில் டேஸ்-16 குறியீட்டு முறையை உபயோகப்படுத்திக் கொள்ளவும் அனுமதித்துள்ளது. 

    விரிவாக்கப்பட்ட தமிழ் – ஆதரிப்பும், எதிர்ப்பும்

    தமிழ் ஒருங்குறி எழுத்துருவின் பயன்பாட்டை இன்னும் விரிவாக்கும் முகமாக இன்னும் சில எழுத்துக் குறியீடுகளை சேர்த்து “விரிவாக்கப்பட்ட தமிழ்” (extended Tamil) என்ற எழுத்துருவையும் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும் என்று தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் சிலர் ஒருங்குறி நிர்வாகத்திற்கு யோசனை தெரிவித்துள்ளனர். ஒருங்குறி நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” குறியீட்டு முறை தொடர்பாகப் பல குழப்பங்கள் நிகழ்ந்துவரும் காரணத்தினால், அது குறித்துச் சில அடிப்படையை விளக்கங்கள் தரப்பட வேண்டிஉள்ளது என்கிறார் ஆய்வாளர் வினோத் ராஜன்[xi].

    தற்சமயத்தில் இணையம் எங்கும் தமிழ் ஒருங்குறி கோடு சார்ட்டில் (Unicode Code Chart) தமிழில் கூடுதலாக 26 கிரந்த எழுத்துக்கள் சேர்க்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சில தேவையற்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன. “விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை. இது போன்ற குழப்பங்களுக்கு, “விரிவாக்கப்பட்ட தமிழுக்கான” ஒருங்குறி முன்மொழிவை திறந்து கூட பார்க்காதது தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதில் மிகத்தெளிவாகவே, முன்மொழியப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” அட்டவணையில் துணை எண்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்கள் தான் உள்ளன.

    கிரந்த எழுத்துமுறையானது பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத பெருமளவு பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்தது, பழங்கால தமிழர்கள் கிரந்த லிபி கொண்டே சமஸ்கிருதத்தைக் கற்றனர். நம்முடைய பழைய கல்வெட்டுகளில் பலவற்றிலும் கிரந்த லிபி உள்ளது. கிரந்த லிபியானது இப்போதும் கூட சிறு அளவில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழிலிருந்து தனிப்பட்ட எழுத்துமுறை அது. அதை தனியாகத்தான் ஒருங்குறியில் ஏற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம்முடைய பாரம்பரிய கிரந்த லிபியானது இன்னும் ஏறக்குறைய ஓராண்டில் ஒருங்குறியில் ஏறிவிடும். கிரந்த லிபியானது தமிழ் ஒருங்குறிக்குச் சம்பந்தமற்றதாக தனியாக ஒருங்குறியில் ஏறவிருக்கிறது. இத்தோடு கிரந்த சம்பந்தம் முற்றிற்று.

    கிரந்த எழுத்துமுறைக்கான முன்மொழிவை ஒருங்குறி நிறுவனத்திடம், சென்ற ஆண்டு அளித்த போது, மேற்கத்தியர் ஒருவர், ஏன் கிரந்தத்தையும் தமிழையும் ஒன்றிணைக்கக்கூடாது, தமிழ் ஒருங்குறியில் நிறைய காலி இடங்கள் உள்ளனவே, ஏன் தேவை இல்லாமல் கிரந்தத்தை தனியாக ஒருங்குறியில் ஏற்றப்பட வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனத்திடம் சமர்பித்தார். அப்போதே, அதை மறுத்து, சில எழுத்துக்கள் இரண்டுக்கும் பொதுவாக இருந்தாலும், தமிழ் லிபியும், கிரந்த லிபியும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறான பாரம்பரிய லிபிகள். எனவே தமிழில் இருந்து தனியாகத்தான் கிரந்தம் ஒருங்குறியில் இணைக்கப்பட வேண்டும் என்று உடனே மறுமொழி, இதே விரிவாக்கப்பட்ட தமிழை முன்மொழிந்த தரப்பினால், ஒருங்குறி அமைப்பிடம் கொடுக்கப்பட்டது, தனியாகவே கிரந்தம் இப்போது ஒருங்குறியில் சேர்க்கப்படவிருக்கிறது.

    இந்த நிகழ்வை ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளவர்களும், கிரந்த லிபியை ஒருங்குறியில் சேர்க்க முயன்றவர்களும் நன்றாக அறிவர். இந்த “விரிவாக்கப்பட்ட தமிழ்” முன்மொழிவானது அனுப்பப்பட்டு, ஒருங்குறி தொழில்நுட்ப குழுவினரின் பரிசீலனைக்கும் சென்றது. இதுவும் ஒருங்குறி உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்த விஷயம். அப்போதே கூட தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படவில்லை. மற்ற இந்திய எழுத்துமுறைகளை போல் அல்லாது தமிழில் kha, gha, jha, dha, ba போன்ற எழுத்துக்களுக்கு வடிவமில்லை. ஆகவே, தமிழில் சமஸ்கிருதம் உட்பட்ட பிற இந்திய மொழிகளை மூல உச்சரிப்பு மாறாமல் அச்சிட விரும்பியவர்கள், தமிழ் எழுத்துக்களுடன் 2,3,4 முதலிய எழுத்துக்களை சேர்த்து க² க⁴ ஜ² த⁴ ப³ என்றவாறு தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தினர். பல ஆண்டுகளாக இது வழக்கில் உள்ள ஒரு முறை. இது இலத்தீன் எழுத்துக்களை grave, accent, caret போன்ற துணைக்குறியீடுகளை இணைத்து புதிய ஒலிகளை குறிப்பிடுவது போலத்தான். உதாரணமாக, e என்ற எழுத்து è é ê ë xஎன்றவாறாக பல்வேறு துணைகுறியீடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு ஒலிகளை வெளியிடுவது போல. இதே போல், தமிழிலும் துணைஎண்களுடன் கூடிய இது போன்ற எழுத்துக்களையே, தமிழ் அட்டவணையில், ஒரு “விரிவாக்கப்பட்ட தள”த்தை உருவாக்கி, அதில் இவ்வெழுத்துக்களைச் சேர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இலத்தீன் எழுத்துமுறை ஆங்கிலம் உட்பட உலகின் பல்வேறு மொழிகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் ஏற்றவாறு, துணைக்குறிகளுடன் கூடிய எழுத்துக்களையும் இன்னபிற புது எழுத்துக்களையும் சேர்த்துக்கொண்டது. அடிப்படை எழுத்துக்களை மீறிய இதுபோன்ற துணைக்குறிகள் கொண்ட கூடுதல் எழுத்துக்கள் பல்வேறு விரிவாக்கப்பட்ட ஒருங்குறி பகுதிகளில் சேர்க்கப்பட்டது. இலத்தீன் எழுத்துமுறைக்கு, LATIN-1 SUPPLEMENT, LATIN EXTENDED-A, LATIN EXTENDED-B , LATIN EXTENDED-C, LATIN EXTENDED-D, LATIN EXTENDED ADDITIONAL என்றவாறும், ரஷ்ய சிரில்லிக் எழுத்துமுறையில் CYRILLIC SUPPLEMENT , CYRILLIC EXTENDED-A CYRILLIC EXTENDED-B என்றவாறும், ஜப்பானிய மொழியை எழுதுவதையே பிரதானமாக கொண்ட ஜப்பானிய எழுத்துக்களுக்கு கூட சிறுபான்மை மொழியான ஐனு மொழியை எழுத, Katakana Phonetic Extensions என தனியே கூடுதல் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    ஒருங்குறியின் தேவநாகரி அடிப்படை அட்டவணையில் கூட சமஸ்கிருத ஒலிகளை மட்டும் அல்லாது, எ, ஒ, ற, ழ, ள, ன போன்ற திராவிட மொழி ஒலிகளுக்கான எழுத்துக்களும், சிந்தி, காஷ்மீரி மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்துப்படும் எழுத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் சமஸ்கிருதம், ஹிந்தி முதலான வடமொழி கணினி முயற்சிகளோ, அல்லது மென்பொருள் செயல்பாடுகளோ செயலற்று போய்விடவில்லை. சமஸ்கிருதம் மற்றும் பிற வட மொழிகளை எழுதுவோர் அவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தப்போவதில்லை.

    காஷ்மீரி மொழியை எழுத முனைவோர் தங்களுக்கு தேவையான எழுத்துக்களை பயன்படுத்தப்போகின்றனர். 19ஆம் நூற்றாண்டு மேற்கத்திய மொழியியலாளர்கள் சிருஷ்டித்த புதிய தேவநாகரி வடிவங்கள் மற்றும் அவெஸ்தன் மொழியை எழுதுவதற்கு தேவையான எழுத்துக்கள் கூட தேவநாகரி ஒருங்குறியில் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது.

    [தொடரும்]

    *****

    குறிப்புகள்

    [1] http://tdil.mit.gov.in/Standards/ISCII.aspx

    [2] http://www.tscii.org/

    [3] http://www.tamilvu.org/Tamilnet99/index.htm

    [4] Tamilnadu Government, Information Technology Department, GO (Ms) No.29, dated 23.06.2010

    [5] http://unicode.org/

    [6] http://www.tamilvu.org/Tamilnet99/order.htm

    *****

    கட்டுரையாளர்
    முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641021
    மின்னஞ்சல்: raman600@gmail.com

     

     

    Share
  • தனிப்பட்டவர்கள் உண்டாக்கிய குறியீட்டு முறைகள்

    -பேரா. முனைவர். வெ.இராமன்

    கணினியில் தமிழ்  தோன்றியது  1980  காலப்பகுதியில்தான். இக்காலப் பகுதியில் தான்  தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத்  தயாரித்து வெளியிட்டுச் சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான  இயக்கு தளங்களை  (Operating system) கொண்டிருந்தன. பின்னர்  மக் ஓ.எஸ். (Mac OS), மைக்ரோசாப்ட் டாஸ் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயங்கு தளமுடைய கணினிகள் கிட்டத்தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ்வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில்1. இவை வெளிவந்து கொண்டிருக்கும் போது  தமிழ்க்  கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

    கணினிகள் பெரும்பாலும்  ஆங்கிலத்திலேயே  இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பயன் பொருட்களும் கணினியின் திறமையைப் பயன்படுத்திச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென்பொருள்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.

    தமிழில் முதல் மென்பொருள்

    ஆங்கில மென்பொருள்களின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுநர்கள். இம் முயற்சிகளின் பயனாக முதலில் தோன்றிய  மென்பொருள்களில்  ஆவணங்கள் எழுதும்  ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும்2. இது  1984- இல் கனடாவில்  வாழும் முனைவர்  ஸ்ரீநிவாசன்  என்பவரால் உருவாக்கப்பட்டது3. இதன்மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய  IBM DOS 2.x  இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும்  MS Windows இயங்குதளத்தில் பயன்படக் கூடியதாகப் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந்நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர்,  மலேசியா  ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன.

    தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்

    80களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது; ஆனால் மேலதிக விபரங்கள் பெற முடியவில்லை. 1990களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Fonts) அறிமுகப் படுத்தப்பட்டது4. ஆதமி (1984) உருவாகும் முன்னர்ப் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன்முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு  LaTex  எழுதியில் உபயோகிக்க  wntamil  என்னும் எழுத்துரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  ஐ-ட்ரான்ஸ் (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது5. இந்த எழுத்துருக்களைக் கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு (transliteration) முறையே உபயோகிக்கப்பட்டது. அதாவது அம்மா என்பதை  ammaa  என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும்6. எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுதமுடிந்தது. இக்காலகட்டத்தில் பல எழுத்துருக்களைப் பல வல்லுநர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளில் உபயோகத்திற்கு வந்து கொண்டிருந்தன.

    இவ்வெழுத்துருக்களில்  கனடாவில்  வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்குக் கருநாடக இசை  இராகங்களின்  பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கிய கல்வி என்னும் பயன் மென்பொருள்களுக்குப் பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய மயிலையும் (Mylai)7, பாமினி (Bamini) 8போன்றவையும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களால் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி (Word, Excel) ஆகிய மென்பொருட்களைத் தமிழில் உபயோகிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. 

    பொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்

    இப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு  தரத்தையும்  (standards) கடைப்பிடிக்கவில்லை9. தரங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு சரியாக ஒத்தியங்கவில்லை.

    சில சமயங்களில், சில மென்பொருள்களிலும் தொல்லைகள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன.

    வலைக் கணினியில் (இணையத்தில்) தமிழில் மின்னஞ்சல்

    தொழில்நுட்பம் வளரும்போது, தனித்தனியாகத் தன் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகள்  வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டன. இணைக்கப்பட்ட கணினிகளும் அவற்றின் செலுத்துகைகளும் மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாக நிறைவு செய்யத்தொடங்கின. வலையில் இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் காலகட்டத்தில் (90களில்)  தொடர்பாடல்  துணைக்கருவியாக நறுமணம்வீசத் தொடங்கின.  மின்னஞ்சல்  பயன்பாடு பெரும்புகழாகத் தொடங்கியது.

    யூனிக்சு (UNIX)  இயங்குதள  (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முன்னரே இருந்தும்கூட, தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சல் தொடர்பாடல் பரவலாகத் தொடங்கும்போது தான் தமிழைத் தொடர்பாடலில் பயன்படுத்தும் தேவை எழுந்தது. தனிப்பட்டவரின் எழுத்துருக்கள் சீர்தரம் இல்லாச் சிக்கல்களால் இந்த இடத்தில் கொஞ்சம் இடரத் தொடங்கின.

    தமிழ் மின்னஞ்சல் இடர்கள்

    தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்பப் பயன்பாட்டில் வைத்திருந்ததால், ஒருவர், தமிழில், தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும்போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். அனுப்புபவர், பெறுநர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும் அஞ்சல் தொடர்பு என்பது இலகான செயலாக இருக்கவில்லை. மின்னஞ்சல் மென்பொருளிலேயே தமிழில் அனுப்பப்படும் அஞ்சலை வாசிக்க முடியாது. வேறு செயலிக்கு வெட்டி ஒட்ட (cut and paste) வேண்டும்.

    அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளிடையே பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் மடல் சரியாகப் போகிறதா எனச் சோதித்துப் பார்க்கும்போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். ஆக, ஒட்டுமொத்தத்தில் தமிழில் மின்னஞ்சல் தொடர்பு என்பது கடினமாகவே இருந்தது.

    தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள்

    மதுரை

    இப்படியான சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மென்பொருள் தோன்றியது. அது தான்  மதுரை (Madurai) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வேறுபாடான வேலையைச் செய்தது. அதாவது ஒரு  கோப்பில் தமிழ் ஆக்கங்களைத் தமிழ் ஒலிப்பை  இலத்தீன் (ஆங்கில) எழுத்துப்படி (எழுத்துப்பெயர்ப்பில்) எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு  மதுரை  கட்டளையை (command) அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆனால் எளிதாகச் சின்னச் சின்னச் சொற்களைத் தமிழ்ப்படுத்த இது மிகவும் பயனுடையதாக இருந்தது.

    அத்துடன் ஒரு முக்கியக் குறிப்பு என்னவென்றால்,  மதுரையிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. அவை  அஸ்கி  (ASCII) அமைப்பிலமைந்தவை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துகளின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துகள். ஆதலால் இவ்வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1990 களின் முற்பகுதியில் செயல்படத் தொடங்கி இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர்  முனைவர் பாலா சுவாமிநாதன்  அவர்கள்.

    இதன் மூலம் கிடைக்கும் எழுத்துகள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.

                |_| L |_| L |T

    படபடா என எழுதுவது கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.
    இதிலிருந்த பெரிய குறை. எழுத்துகள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததுதான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பயன்பாட்டில் பெரிதாக இடம்பெற முடியாமல் போய்விட்டது.

    தனித் தீர்வு நோக்கி – முரசு அஞ்சல்

    “தமிழ் மூலம் மின்னஞ்சல்” சிக்கல்களுக்குத் தீர்வு முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986ஆம் ஆண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால்  முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் இப்பொழுது இலகுவாக்கப்பட்டது.

    இந்தச் செயலியில் முக்கியமான கூறு விசைப்பலகை. இந்த மென்பொருளைத் தொடங்கிவிட்டு, ஆங்கில விசைப் பலகையினூடாகவே தமிழ்-ஆங்கில  எழுத்து பெயர்ப்பு  மூலம் தமிழை எழுத முடிந்தது. அத்தோடு இந்த விசைப்பலகையில் தமிழ்த் தட்டச்சும் முறையும் இருந்தது. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அது மட்டுமல்ல, தமிழை எழுத, வாசிக்கத் தெரியாத தமிழ் படிக்காத மேதைகள் கூட (ஆங்கிலம் தெரிந்திருந்தவர்கள்) எழுத்துப்பெயர்ப்பைப் பயன்படுத்தித் தமிழில் எழுத முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழைதிருத்த முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

    முரசு அஞ்சல் வெளிவந்த மிக விரைவிலேயே,  யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சல் செயலி தமிழ் போன்ற பிற மொழி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளிவந்து மின்னஞ்சல் தமிழை மேம்படுத்தியது.

    முரசு அஞ்சல் (Murasu Anjal), இணைமதி (Inaimathi)  மயிலை  (Mylai),  ஆவரங்கால் (Avarangkal) போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கியப் பங்காற்றின. இந்த எழுத்துருக்களும் கூட எந்தவொரு பொது ஒழுங்கையும் கடைப்பிடித்திருக்கவில்லை. இந்நேரத்தில்,  யுனிக்ஸில் அகரம் (akarm) என்ற செயலியும்,  மக்கிண்டாசில்  சில்க்கி  (SILKey) என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகிவிட்டிருந்தன.

    இது தவிர நளினம் (செல்லையா), கம்பன் (வாசுதேவன்), அணங்கு (குப்புசாமி), துணைவன் (ரவி) போன்றோரின் எழுத்துரு செயலிகளில் புழக்கத்தில் வரத்துவங்கின.

    இணைய யுகம் – வைய விரி வலை

    மின்னஞ்சல் தொடர்பாடல் (Communication) தமிழில் கைகூடலாகி வரும் நேரத்தில் இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் ஏற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான்  இணைய  யுகம். (Internet era) இணையத்தில், வைய விரி வலை  (world wide web) 1990 நடுப் பகுதியில்  கோபர் (Gopher),  மொசையிக் (Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்கள் உருவாகி வலைக் கணினிகளின் பாவனையை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது ஆக்கம் அடைந்து  மீயுரைக்  (HTML) குறியுடன் “நெட்ஸ்கேப்” (Netscape) உலாவிகளில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே தொடக்கமாகியது.

    சில இணைய தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. தமிழர் தாயகங்களிலிருந்து தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணைய தளங்கள் பெரும்புகழாகத் தொடங்கின.  தினமலர், ஆனந்த விகடன்,  குமுதம்,  வீரகேசரி  மற்றும் பல ஏடுகள், பருவஇதழ்கள் இணையத்தில் கால்பதித்துக் கொண்டன. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவைத் தனிக் கணினிகளில் இறக்கம் செய்து வைத்திருந்தால் போதும் அந்த இணைய தளங்களை எப்பொழுதும் வாசிக்க முடியும்.

    இணையத் தமிழ் முன்னோடி – நா. கோவிந்தசாமி

    முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த  நா. கோவிந்தசாமி. 1995ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation – Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன்முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

    இயங்கு எழுத்துரு

    90 இறுதியளவில், பிற மொழி இணைய தளங்களைக் கருத்தில் கொண்டு, இயங்கு எழுத்துரு (dynamic font) என்ற எழுத்துரு பயன்பாட்டிற்கு வந்தது. இதைப் பிட்ஸ்ட்ரீம் (bit stream) என்ற ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன்மூலம் இணைய தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப்பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப்படையில், உபயோகிப்பாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணைய தளங்களைப் பார்வையிட முடிந்தது.

    இந்த இயங்கு எழுத்துருவைப் பயன்படுத்திப் பல தமிழ் மொழி இணையத் தளங்கள் அழகாக உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில்,  மைக்ரோசாப்ட்  நிறுவனமும் இயங்கு எழுத்துருவுக்குக் கருவிகளை வழங்கியிருந்தது. காலப்போக்கில் இது நடைமுறை இழந்து வருவது தெரிகிறது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் பயன்படுத்த உருப்பெற்ற வண்ணமிருந்தன.

    தமிழ்.நெட்

    இணையப் பயனும் தமிழில் மின்னஞ்சல் கைகூடலான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன.

    இந்நிலையில்,  1995  அளவில்,  ஆஸ்திரேலியாவில்  இருக்கும் திரு. பாலா பிள்ளை  என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஈடுபாட்டில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணைய தளத்தைத் தொடங்கி அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழ்க் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினர். தமிழும் தமிழர் சார்ந்த எல்லாச் செய்திகளுமே அங்கே அலசப்பட்டன. பல அறிஞர்களையும், வித்துவான்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்த தமிழ்.நெட் பெருமைக்குரியது. முரசு அஞ்சல் எழுத்துருவை ஒழுங்காகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. இவ்வாறு பல்வகையான தனியாளர்களின் பங்களிப்புடன் தமிழ் எழுத்துருக்கள் கணினியில் வலம் வரத்தொடங்கின.

    *****

    குறிப்புகள்

    1. https://en.wikipedia.org/wiki/Personal_computer

    2. http://www.sivalingam.in/computer/basics/kaaladithadam.htm

    3. Ibid

    4.http://www.mypno.com/index.php?view=article&catid=49%3Aeduart&id=7495%3A2013-09-11-08-30-15&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=95

    5. Ibid

    6. http://www.vallamai.com/?p=57199

    7. http://manikandanvanathi.blogspot.in/2012/04/blog-post.html

    8. Ibid

    9. கணினியில் தமிழ் நிகழ்வுகள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள், பக். 876 – 878

    10. “கணினியில் தமிழ் எழுத்துருக்களும், குறியீட்டு முறைகளும்” வெ.இராமன் (2016) மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு.

    *****

    கட்டுரையாசிரியர்
    முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641021
    மின்னஞ்சல்: raman600@gmail.com

    Share