விசாகை மனோகரன்
திவாகர் ஆபீஸ் வந்து, சீட்டில் அமர்ந்தான். பக்கத்து சீட்டில் இருக்கும் அவன் நண்பன் சதீஷ் இன்னும் வரவில்லை. வந்துவிடுவான். ஏதாவது டிராபிக் ஜாமாயிருக்கும். சிங்காரச் சென்னையில் அதற்க்குத்தான் பஞ்சமேயில்லையே. பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ஒரே நாளில் இந்த பெரிய தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். நல்ல நண்பர்கள். அதோ சதீஷ் வந்துவிட்டான்.
வாடா, ஏன் லேட்டு? டிராபிக் ஜாமா?
ஆமாண்டா. எலெக்டிரிக் டிரெய்ன்ல ஏறமுடியல கூட்டம், பஸ்ல வந்தேன்.
ஏண்டா இன்னிக்கு தெரியுமா நம்ம சம்பள உயர்வு பத்தி?
ஆமாம். என்ன பண்ணப்போறாங்களோ!
எப்படியும் மாசம் ஒரு 5000/ உசராது? பாக்கலாம்.
சுமார் 11மணி வாக்கில் அவர்களது மேஜையில் வந்து விழுந்தன சம்பள சீட்டுக் கவர். இரண்டு பேரும் ஆவலுடன் பிரித்தார்கள். சதீஷ் சந்தோஷத்துடன் “திவா, நீ சொன்னமாதிரியே 5000/ ரூபா உசந்திருக்குடா!” திவாகர் பேசவில்லை. பேயறைஞ்ச மாதிரி இருந்தான்.
திவா, திவா என்னடா?
ஒண்ணூம் சொல்லாமல் சீட்டை அவனிடம் நீட்டினான் திவாகர். அதில் அவனுக்கு வெறும் 2000/ தான் உயர்வு என்று இருந்தது. என்ன சொல்லவதென்று புரியவில்லை சதீஷ்க்கு. மவுனமாயிருந்தான்.
திவாகர் சீட்டை எடுத்துக் கொண்டு மேலதிகாரியிடம் சென்றான்
சார், என்ன இது? வெறும் 2000/ ரூபா உசந்திருக்கு?
ஆமாம் திவாகர், நீங்க பன்ற வேலைக்குத் தகுந்த மாதிரி கம்பெனி கொடுத்திருக்கு.
எப்படி சார் இது நியாயம்? நானும் சதீஷும் ஒண்ணா சேந்தோம். ஒரே வேலை பாக்கறோம். அவனுக்கு 5000, எனக்கு 2000மா?
நீங்களும் அவரும் ஒண்ணா சேர்ந்திருக்கலாம், ஆனா ஒரே வேலை பாக்கறோம்னு சொல்லாதீங்க. அவர் டேபிள்ல பாத்தீங்களா? ஒரு ஃபைல் பெண்டிங் இருக்கா? சரி, மாசம் எவ்வளவு லீவ் போடறாரு? நீங்க? போங்க ஸார், போயி வேலைய ஒழுங்கா பாருங்க. அப்பறம் கேளுங்க.
ஒன்றும் பேசாமல், பேச முடியாமல், சாயங்காலம் வீட்டிற்கு டல்லாக வந்து, உட்கார்ந்தான். அவன் முகத்தைப் பார்த்து, என்னவோ சரியில்லை என்று புரிந்து கொண்ட அவன் மனைவி, கல்லூரிக்குச் செல்லும் மகனையும், பள்ளிக்கு செல்லும் மகளையும் அருகில் அழைத்து “அப்பா மூஞ்சி சரியில்ல, ஆபீஸ்ல ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன். இரண்டு பேரும் சத்தம் போடாதீங்க” அப்படின்னு சொன்னா.
கொஞ்ச நேரம் கழித்து காபியுடன் நுழைந்த அவள்..
“ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா” ந்னு கேட்டாள்.
ஆமாம்டி, நான் ஆபீஸ்ல வேலையே செய்யறதில்லையாம், ஃபைல் பெண்டிங் வெக்கறேனாம், லீவ் நிறைய போடறேனாம், அது இதுன்னு சொல்லி என்னைய சதீஷோட கம்பேர் பண்ணி, அவனுக்கு 5000, எனக்கு வெறும் 2000 தான் சமபளம் உயர்வுன்னு சொல்றாங்கடி.
விடுங்க போகட்டும், ஏன் டென்சன்?
அதில்ல எனக்கு. அவங்க “உனக்கு இவ்வளவுதான்”னு சொன்னா கூட பரவாயில்ல. அதென்ன இன்னொருத்தன் கூட கம்பேரிசன். அதான் எனக்கு பிடிக்கல.
விடுங்க. வந்து சாபிடுங்க வாங்க
நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். நீ பசங்களுக்கு குடு.
கொஞ்ச நேரம் கழிச்சு, சாப்பிடப் போனா, பையன் அம்மாகிட்ட அப்பான்னு ஏதோ சொல்லிக்கிட்டிருந்தான்.
“ஏம்மா, போன மாசம் நான் நம்ம பக்கத்து வீட்டு விஷ்ணுவோட ஃபைக் மாதிரி எனக்கும் வாங்கித்தாங்கப்பான்னதுக்கு, அவன மாதிரி நீயும் மார்க் வாங்கிக் காமி, பாக்கலாம்ன்னு கம்பேர் பண்ணினாரே அது கரெக்ட்டு, ஆபீஸ்ல பண்ணினா மட்டும் தப்பா?. இது என்னம்மா தனக்கொரு நியாயம், மத்தவங்களுக்கு வேறயா?”
எனக்கு சுருக்குன்னு குத்திச்சு. அது கரெக்ட்டுன்னா இதுவும்….
சிரிப்பு வந்தது, அறிவும் வந்தது. நாளைக்கு பையனுக்கு ஃபைக் வாங்கணும்
எங்கியோ ஒரு பாட்டு கேட்டது..
“துன்பம் வரும் வேளையில சிரிங்க
என்று சொல்லிவெச்சான் வள்ளுவரு சரிங்க”.
