Tag: முனைவர் இரா.தேவேந்திரன்

  • அப்துல் ரகுமான் கவிதைகளில் படிமமும் குறியீடும்

    -முனைவர் இரா. தேவேந்திரன்

    முன்னுரை:

    தமிழ் இலக்கியத்துறையில் திறனாய்வு இன்று குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது. இலக்கிய வடிவம், இலக்கியப் பொருள், பொருளை வடிவ மாக்குவதில் படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்திகள், இலக்கியப் பொருளில் அமைந்துள்ள அணுகுமுறை போன்றவை திறனாய்வுத் துறையில் அதிகம் பேசப்படுகின்றன. படைப்பாளன் பயன்படுத்தும் இலக்கிய உத்தி அழகூட்டுவதற்காகவும் பொருள் புலப்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய உத்திகளுள் குறியீடும் படிமமும் குறிப்பிடத்தக்கதாகும்,

    தமிழில் படிமமும் குறியீடும்:

    இமேஜ்(image) என்னும் ஆங்கிலமொழிச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் இன்று வழங்கப்பெற்று வரும் ஒரு கலைச்சொல்லே படிமம் என்பதாகும். படிமம் என்பதற்கு உருக்காட்சி, உருவம், உருமாதிரி, ஒத்தவடிவம், கருத்துரு, கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போன்ற பொருள்களில் கையாளப்படுகின்றது. அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விளக்க இயலாதவற்றை நொடியில் தெளிவாக்கி நம்முன் நிறுத்த வல்லதே படிமம் என்று எஸ்ராபவுண்ட் விளக்குவார். மேலும், குறிப்பிடுகின்றபோது ஏராளமான கவிதைகளைப் படைப்பதைவிடச் சிறந்தது தன் வாழ்நாளில் ஒரே ஒரு படிமத்தைப் படைப்பதாகும் என்று படிமத்தின் சிறப்பினை குறிப்பிடுவார். படிமம் என்பது உணர்வும் அறிவுச் சேமிப்பும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியாகும். இதில் மனக்காட்சியின் விரிவு குறிப்பிடத்தக்கது.  படைப்போன் படிப்போன் திறனுக்கேற்பப் படிமம் பல படிநிலைகளைக் கொண்டது.

         குறியீடு என்பது சின்னம், அடையாளம் என்ற பொருட்களில் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றது. மனித வாழ்வில் இணைந்து கிடக்கும் கணக்கற்ற குறிகள்(Signs) பற்றிச் சமூகவியலார் இன்று மிகவிரிவாகப் பேசி வருகின்றனர். மனிதரின் தோற்ற ஒப்பனையில் பல அடையாளக் குறிகள் சாதி, சமயம், பண்பாட்டின் பல படிநிலைகள், சமூக அமைப்பின் பல நிலைகள் எனப் பல்வேறு அர்த்தங்களை இனம் காட்டும் ஆயிரமாயிரம் குறிகள் வாழ்வில் கலந்திருக்கின்றன. “குறிகள் பலவகைப்பட்டதாகத் தோன்றினும் அவற்றின் சிறப்பியல்புகளைக் கொண்டு, அமெரிக்கத் தத்துவ அறிஞர் சார்லஸ் சாண்டர்பீர்ஸ் அவற்றை மூன்று வகைகளாக அடக்குதலை ந. ம. வீ. ரவி குறிப்பிடுகின்றார். அவை, 1. உருவக்குறி(iconic signs), 2. சுட்டுக்குறி (indexical signs), 3. குறியீடு (symbolic signs) என்பனவாகும்” (குறியியலும் அரங்கக் குறியியலும், 1992, ப. 12) இம்மூவகைகளுள் ஒன்றே இலக்கியத்துறை தொடர்பான குறியீட்டையும் குறிப்பிடுகின்றது.

        குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். படிமத்தைப் போலவே குறியீட்டையும் ஓர் இலக்கியமாக மேலை நாடுகளில் பின்பற்றினர். மேலை நாட்டாரின் திறனாய்வுக் கொள்கைகள் தமிழறிஞர்களுக்கு அறிமுகமானபின், Symbolism, Imagism என்று அவர்கள் குறித்த கலைச்சொற்களுக்கு இணையாகக் குறியீட்டியல், படிமவியல் என்னும் சொற்கள் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன.

    தமிழிலக்கிய வரலாற்றில் படிமமும், குறியீடும் சங்க காலத்திலேயே மேலோங்கி விளங்கின. சங்க இலக்கியத்தில் காணப்படும் உள்ளுறை, இறைச்சி என்னும் குறிப்புப்பொருள் அடங்கிய இலக்கிய நயங்கள் இன்றைய படிமம் குறியீடு இவற்றின் முன்னோடியாகக் காணப்படுகின்றது.  சங்க காலத்திற்குப் பின் தற்காலத்தில் இவை பெரிதும் பேசப்படும் இலக்கிய உத்தியாக படைப்பாளர்களால் போற்றப்படுகிறது. இதனை அப்துல்ரகுமான் “சங்க காலத்திலும், சித்தர்கள் காலத்திலும் இலக்கிய உத்தியாகப் பயன்பட்ட குறியீடு மீண்டும் புதுக்கவிதைக் காலத்தில் தான் இலக்கிய உத்தியாகப் பயன்படுகின்றது. புதுக்கவிதையில் அது வெறும் உத்தியாக மட்டுமின்றி அதன் சிறப்பு பண்பாகவே மாறிவிட்டது என்று குறிப்பிடுகின்றார்.”(புதுக்கவிதையில் குறியீடு, 1990, ப. 183) புதுக்கவிதைகளில் பலவகையான உத்திகள் காணப்படுகின்றன. அவை, படிமம் (image), குறியீடு (symbol), அங்கதம் (satire), முரண் (parody), இருண்மை (obscurity), தொன்மம் (myth) போன்றவைகளாகும். இவ்வுத்திகளில் படிமம், குறியீடுகளைக் கவிக்கோ அப்துல் ரகுமான் தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளப் பாங்கினை இக்கட்டுரை ஆராய்கிறது.

    படிமம்:

    உணர்ச்சியுடைய சொற்சித்திரமாய் காணப்படும் படிமத்தைக் கவிக்கோ அப்துல்ரகுமான் சிறப்பாகக் கையாண்டுள்ளார். “தேவையற்ற எந்த ஒரு சொல்லையும் நீக்கிவிடுதல் என்னும் படிமவியலார் கொள்கைக்கு மிகப் பொருத்தமான கவிதைகளை எழுதுபவர் கவிக்கோ அப்துல்ரகுமான் என்பர்.” (க. இராமச்சந்திரன், புதுக்கவிதைகளில் பன்முகப் பார்வை, ப. 82) அவரது ‘பால்வீதி’ என்கிற கவிதைத் தொகுப்பு படிமக் கவிதைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    “இரவெல்லாம் / உன் நினைவுகள் / கொசுக்கள்”  (பால்வீதி)

    என்னும் கவிதையில் நினைவுகள் கொசுக்களாகப் படிமமாக்கப் பட்டுள்ளன. நினைவுக் கொசுக்களின் தொல்லையினால் இரவெல்லாம் தூக்கமின்றி வேதனைப்படும் மனிதனை நம்கண்முன்னே நிறுத்துகின்றார். அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் எளிதில் விடுவிக்க இயலாத மனவேதனையை இப்படிமக் கவிதைத் தருகின்றது.

    “என் ஆறாவது விரல்வழியே
         சிலுவையிலிருந்து
    வடிகிறது ரத்தம் – ஆம்
         என் மாம்சம்
         வார்த்தை ஆகிறது”

    என்னும் பால்வீதியில் அமைந்த இக்கவிதை ஆதியிலே தேவனிடத்திலிருந்து வார்த்தை மாம்சமாகி இயேசு வடிவில் வந்ததாகவும் பின்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகவும் கூறும் விவிலியத்தின் கருத்தினை கவிக்கோ படிமமாக்கியுள்ளார். அப்துல் ரகுமான் ‘வியட்நாம்’ என்ற தலைப்பில் எழுதிய  கவிதையில்,

    “அக்கம் பக்கம் / வசந்தமில்லை
          சோகத்தோடு / அமர்ந்திருக்கிறது
          சவத்தின் மீதொரு / வண்ணத்துப் பூச்சி” (வானம்பாடி – 9) எனப் போரின் உச்சத்தைப் படிமத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றார்.

         “வான உற்சவத்தின் / வாண வேடிக்கை
          முகிற்புற்று கக்கும் / நெருப்பு பாம்புகள்
          கருப்பு உதட்டின் / வெளிச்ச உதறல்
          இடிச்சொற்பொழிவின் / சுருக்கெழுத்து”  (பால்வீதி)

    என்ற இக்கவிதையில் வானத்தைக் கீறிப்பாய்கிற ராக்கெட்டுகளாக மின்னலையும், மேகத்திலிருந்து வெளிவருகின்ற நெருப்பினை புற்றிலிருந்து சாட்டையாக வெளிவருகின்ற பாம்பாகவும் நீண்ட இடியோசைக்கு மத்தியில் சட்டெனத் தோன்றி மறைவதால் அதனைச் சுருக்கெழுத்தாகவும் காட்சிப்படுத்துகின்றார்.

        ”பாரதம் என்றால் பதவிச் சண்டைதானே! இந்த
          நாட்டுக்குப் பொருத்தமாகத் தான் பெயர்
          சூட்டியிருக்கிறார்கள்
          அந்தப் பாரதத்தில் நான் செய்த வேலையை
          இந்தப் பாரதத்தில்  நீங்கள் செய்கிறீர்கள்”  (சுட்டு விரல்)

    புதிய பாரதம் என்ற இக்கவிதையில் சகுனியின் கூற்றாக அரசியலில் சூதாட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியவன் நான்தான் ஆனால் நீங்களோ அரசியலையே சூதாட்டமாக மாற்றி விட்டீர்களே! நான் அன்று பகடைக் காய்களைத்தான் உருட்டினேன் நீங்களோ மக்களையே உருட்டுகிறீர்கள் என்றவாறு தற்கால நிகழ்வை பாரத காலத்தோடு படிமமாக்குகிறார்.

    அப்துல் ரகுமான் வாழ்வின் பயணத்தைப் பறவையின் பாதையோடு ஒப்பிட்டு,

         “நதியின் பாதையைப் போல்
          உங்கள் பாதை
          உங்கள் பயணத்தால்
          உண்டாகட்டும்
          பறவையின் பாதையைப்போல்
          உங்கள் பாதை
          சுவடற்றதாக இருக்கட்டும்” (பித்தன், ப. 46)

    என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார். நதியின் நீரோட்டம் திட்டமிட்டு அமைவதில்லை. தான் விரும்பியவாறு செல்லும். பறவையின் பாதை சுவடற்றதாக அமைந்து காணப்படும். இவை இரண்டையும் மனித வாழ்வோடு படிமமாக்கி முன்னேற்றத்தின் வழியைக் காட்டுகின்றார்.

    குறியீடு:

    படிமத்தைப் போன்று குறியீட்டையும் தற்காலப் படைப்பாளர்கள் சிறப்பாக கையாண்டுள்ளனர். குறி என்பது ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுகின்றது. குறியீடோ ஒரு பொருளுக்காகத் தானே அதனிடத்தில் நிற்பது என்ற குறியீட்டாளர்களின் சிந்தனைக்கு ஏற்பக் கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புக்களும் காணப்படுகின்றது.

               “புறத்திணைச் சுயம் வரமண்டபத்தில்
                போலி நளன்களின் கூட்டம்
                கையில் மாலையுடன்
                குருட்டுத் தமயந்தி”    – பால்வீதி

    ‘ஐந்தாண்டாக்கு ஒருமுறை’ என்னும் இக்கவிதை தேர்தலை விமர்சிக்கின்றது. இதில் வேட்பாளர்கள் போலி நளன்களாகவும், மாலை வாக்குச் சிட்டாகவும், குருட்டுத் தமயந்தி அறியாமை என்னும் இருளில் கிடக்கும் வாக்காளனாகவும, சுயம்வரம் ஒரு தேர்தல் திருவிழாவாகவும் புலப்படுத்திக் கவிஞரின் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன. சுயம்வரக்காட்சியும், தேர்தல் காட்சியும் சேர்ந்து குறியீட்டுத் தன்மையை புராணக் கதையிலிருந்து  உணர்த்துகின்றது.

               “விற்க எதுவும் இல்லாததால்
                கண்ணகிகளைப் பேரம்பேசும்
                கோவலர்கள்” (பால்வீதி)

           “உதயகுமாரர்களுக்குத்
                தங்கள் உடல்களையே
                அட்சய பாத்திரமாக்கித்
                தம் வயிற்றுப் பசியைத்
                தணித்துக் கொள்ளும்
                மணிமேகலைகள்”

    என்பதான கவிதைகளில் இன்றைய சமூக அவலங்களைச் சுட்டுகின்றார். கண்ணகி, கோவலன், உதயகுமாரன், மணிமேகலை போன்ற பழங்கதை மாந்தர் இன்றைய நடைமுறை மாந்தர்களுக்கு குறியீடுகளாக காட்டப்படுகின்றனர்.

    அப்துல் ரகுமானின் ‘மூடிய இமை’ என்கிற கவிதையில் குறியீடுகள் முரணாக வந்து கருத்தை வெளிப்படுத்துக்கின்றன.

         “என்னைக் கண்டதும்
          கவிழும் உன் இமைகள்
          கொசுவலையா?
          மீன் வலையா?  (பால்வீதி)

    கவிஞர் இக்கவிதையில் ஒரு பெண்ணின் பார்வையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தவிப்பை இரண்டு விதங்களில் வெளிப்படுத்துகின்றார். வலைக்குள் கொசு வரக்கூடாது என்று தடுப்பதற்காக விரிப்பது கொசுவலை. வலைக்குள் மீன் விழவேண்டும்; வீழ்ந்த மீன் வெளியே தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக விரிப்பது மீன்வலை ஒன்று புறக்கணிப்பு மற்றொன்று எதிர்ப்பார்ப்பு. இது முரணாகும். இந்த முரணின் வாயிலாக ஒரு காதலனின் காதலுணர்ச்சியைக் குறியீடாகக் குறிப்பிடுதலைக் காணமுடிகின்றது.

               “உன் தராசுத் தட்டுகளைக்
                கொஞ்சம் கண்திறந்து பார்
                அங்கே
                புறாவின் மாமிசத்தை
                சிபிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள்”  (பால்வீதி)

    என்ற தொன்மைச் சான்றினை தற்கால நிகழ்வோடு குறிப்பிட்டு கவிஞர் குறியீடாக்கியுள்ளதைக் காணலாம்.

               “உங்கள் பாரம் / உங்களைவிட
                மதிப்புடையதாகட்டும்
                திரி சுமக்கும் சுடரைப்போல்”

    என்ற கவிதையில் திரிசுமக்கும் சுடரும் மனிதன் சுமக்கும் பாரத்தையும்  குறியீடுகளால் ஒப்பிட்டு கவிஞர் வாழ்வின் சுமைகளை சுகமாக்குகின்றார்.

    முடிவுரை:

     அப்துல்ரகுமான் கவிதைகளில் நட்சத்திரம், நெற்றிக்கண், இமை, சிலுவை ஆகியவை குறியீடுகளாக மீண்டும் மீண்டும் வருகின்றன. கோடி சூரியர்களைப் பிழிந்து நட்சத்திரங்கள் செய்தேன் என்ற இடத்தில் செறிவு என்ற பொருளிலும் ஒரு சங்காரத்தால் இந்த பூமி பண்படுத்தப் பட்டபின் நட்சத்திரங்களைத் தூவுவோம் இங்கே என்ற இடத்தில் ‘உயர்ந்தது’ என்ற பொருளிலும் நட்சத்திர வேஷம் அணிந்த எழுத்துக்கள் என்ற இடத்தில் ‘விளக்கம்’ என்ற பொருளிலும், இளவேனில் இரவு ‘பூ’ என்ற பொருளிலும் மூச்சுக்கயிறறுந்த மணியின் நாவிலிருந்து நட்சத்திரங்கள் மௌனமாக உதிரும் என்ற இடத்தில் ‘ஆன்மா’ என்ற பொருளிலும் நட்சத்திரம் பால்வீதியில் குறியீடுகளாக மின்னுதலைக் காணமுடிகின்றது. சங்க இலக்கிய உத்திகளில் காணப்படும் அழகியல் மற்றும் பொருண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுதல் போன்று புதுக்கவிதைகளில் காணப்படும் படிமம் மற்றும் குறியீடுகளில் அத்தகைய தன்மையைக் காணலாம். இதில் கவிக்கோ அப்துல் ரகுமான் முதன்மை பெறுதலை இக்கட்டுரையின் வழி அறிந்துகொள்ளமுடிகின்றது.

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்
    தமிழாய்வுத்துறை
    ஏ. வி. சி. கல்லூரி(தன்னாட்சி)
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை.

     

     

     

    Share
  • அமைப்பியல் ஆய்வுமுறையும்  அறிமுகமும்

    -முனைவர் இரா.தேவேந்திரன்

           மனிதரையும் அவர் சார்ந்த பண்பாடுகளையும் ஆராய முற்பட்டப் போது பல்வேறு ஆய்வுப் போக்குகளை மானிடவியல் அறிஞர்களும் ஆய்வியல் சிந்தனையாளர்களும் உருவாக்கினார்கள். வரலாற்று அணுகுமுறை (Historical Approach), பண்பாட்டுப் பரவல் கோட்பாட்டு அணுகுமுறை (Cultural Diffusionistic Approach), செயற்பாட்டியல் அணுகுமுறை (Functionalistic Approach), அமைப்பியல் அணுகுமுறை (Structural Functionalistic Approach), அமைப்பியல் செயற்பாட்டியல் அணுகுமுறை (Structural Functionalistic Approach) என்பன அவற்றுள் சிலவாகும். மேற்குறித்த அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு காலக்கட்டத்தில் ஒருசில சூழல்களில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இவற்றுள் அமைப்பியல் அணுகுமுறை முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நிலையாகும்.

     இலக்கியத்திலும், மொழியியலிலும், நாட்டார் பண்பாட்டியலிலும் தொடர்ந்து சமுதாய அரசியல் பற்றிய கருத்துருவங்களிலும் உளவியல் போன்ற பல்துறைகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற அறிவாராய்ச்சி முறையாக அமைப்பியல் காணப்படுகின்றது. அமைப்பியல் ஓர் உலகப்போக்கு எனவும் தத்துவம், பொதுமுறையியல் எனவும் தற்காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, படிப்பாளிகளுக்கிடையில் இது கவர்ச்சிகரமன ஒரு கொள்கையாகப் பரவிவருகிறது; பரப்பப்பட்டு வருகிறது. அத்தகைய அமைப்பியல் ஆய்வும் தோற்றம் மற்றும் வகைமைப்பாடும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

    அமைப்பியல் தத்துவப்பின்னணி

    கி.பி.17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளின் தத்துவத்தில் பகுத்தறிவுவாதமும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறையும் ஆளுமை புரிந்தன. வரலாறு, மனிதச்சிந்தனை, சமூகம், இயற்கை ஆகிய அனைத்துப் பகுதிளையும் ஒன்றினைத்து அறிவுபூர்வமாக விளக்கம் கொடுக்கும்போது உலகுநோக்குத் தத்துவங்கள் ஐரோப்பாவில் தோன்றின. அறியொணாவாதம், நம்பிக்கைவறட்சி, அகவயவாதம், பொது உலகநோக்குத் தத்துவங்களை எதிர்ப்பது போன்ற போக்குகள் அதிகமாயின. அத்தகைய போக்குகளைப் பயன்பாட்டுவாதம் (Pragmatism), பாசிட்டிவிசம் (Positivism), இருத்தலியல் (Existentialism), பிராயிடிசம்(Freudism), போன்ற தத்துவங்கள் பிரதிநிதித்துவப்படுத்தின. அமைப்பியல்வாதம் இத்தத்துவங்களின் சூழலில்தான் பிறந்தது. விஞ்ஞான ரீதியாக உலகை அணுகுதல் என்னும் வரையறைகளும் உருவாக்கப்பட்டன. தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட புறவயமான அறிவியல் அணுகுமுறை என கருதப்பட்டது. வாழ்க்கைத் தகவல்களைச் சேகரித்து வகைப்படுத்திப் பகுப்பாய்வு செய்து பொது விதிகளைக்கண்டு அறிவது விஞ்ஞான அணுகுமுறையாயிற்று. தகவல்களால் மெய்ப்பிக்கப் படாதவற்றை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளவில்லை. தர்க்க விதிகளால் விளக்க முடியாதவற்றையும் விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளவில்லை. அமைப்பியல் வாழ்க்கைத் தகவல்களின் அடிப்படையிலும் தர்க்கவியல் மூலமாகவும் அறிவுப்பூர்வமான சிந்தனை உலகை அறிந்துகொள்ள முயற்சி செய்தது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்கை அறிவியலில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து புதிய தத்துவமுறையியல் நடைமுறைகள் தோன்றின. இத்துடன் மானுடஅறிவியல்(Humanitics Anthopiyaloghy)  துறைகளிலும் புதிய சிந்தனைகள் தோன்றின.  ஒவ்வொரு கருத்தையும் விவரங்களையும் தொகுத்தறியும் போக்கு(Empirical descriptive level) மாறித்  தோன்றியது. அதாவது கோட்பாட்டில் கணக்கு முறைகளும், வடிவப்படுத்தும் (Formalisation) முறையும் உள்ளடங்கிய நுண்மையான அமைப்புகளின் உறவுகள் எப்படி உள்ளன என்றும் ஆராயப்பட்டன.(Avtonomova. Natalia, Frenchstructuralism: Mathodo-Logicalnotes,Social sciences, No:4.) தகவல்கள், வகைப்படுத்துதல், பகுப்பாய்வு, தர்க்கவியல், உள்ளார்ந்த பொதுவிதிகளைக் கண்டறிதல் என்பன போன்ற முறைமைகள் புதுபிக்கப்பட்டன. ஆழமான அமைப்புகளைக் கண்டறிய அமைப்பியல் முனைகிறது. உணர்ச்சிகளில் இருந்து முரண்படாத அவற்றிலிருந்து பிளவுப்படாத அறிவார்ந்த தன்மை அமைப்பியலில் பேசப்படுகின்றது.

    இவ்வாறாக 19ஆம் நூற்றாண்டின் அறிவுவாதம் அமைப்பியலால் மீட்டுருவாக்கம் பெறுகின்றது. அமைப்பியல் முதன்முதலில் மொழியியலில் பயன்படுத்தப்பட்டது. இச்சிந்தனைப்போக்கு சில தனித்தனி விஞ்ஞானத் துறைகளில் முதலில் தோன்றியது. சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகளிலும் இதன் ஆரம்பத்தொடக்கம் காணப்பட்டது. சமூகவியலில் ‘டர்க்கெய்ம்’ என்ற பிரஞ்சு அறிஞரும் மொழியியலில் பெர்டினண்ட்-டி-சசூரும் அமைப்பியலின் முதலாசிரியர்கள் என்று போற்றப்படுகின்றனர். மொழியியலையும், சமூகவியலையும் கடந்து மானுடவியல், உளவியல், புராணவியல், நாட்டார் வழக்காற்றியல், இலக்கியம் போன்ற துறைகளிலும் அமைப்பியல் அணுகுமுறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

    அமைப்பியல் நோக்கம்

         அமைப்பியலறிஞர்கள் இலக்கியத்தைத் தனக்குள் பல உறுப்புக்கள் கொண்ட ஓர் ஒழுங்கமைவு என்றனர். அமைப்பு என்பது தன்னளவில் கட்டுக்கோப்பானது; உயிர்த்தன்மை உடையது. அதனுடைய உறுப்புக்கள்  அல்லது பகுதிகள் அந்த அமைப்பின் எல்லைக்குள்ளிருந்தே ஆராயப்படக்கூடியவை. “இலக்கியத்தை (அல்லது எந்தப் பொருளையும்)  ஆய்வுக்கென எடுத்துக்கொள்கின்றபோது அதனைத் தனக்குள் பல உறுப்புகள் கொண்ட குறிப்பிட்ட ஓர் ஒழுங்கமைவுடன் கூடிய ஓர் அமைப்பாக அமைப்பியல் காணுகிறது. அமைப்பு என்பது ஒரு முழுமை இந்த முழுமை அதன் ஒவ்வொரு உறுப்பையும் பகுதியையும் குறிக்கும் என்பர்.”(நடராஜன் தி.சு., திறனாய்வுக்கலை, ப-131) மேலும் இலக்கியத்தை மொழியாகக்கொள்ள வேண்டும் என்று அமைப்பியல்  முன்மொழிகின்றது. “மொழி அமைப்பைக் கண்டறிவது போல் இலக்கியத்திலும் உள்கட்டமைப்பைக் காணுவது அமைப்பியல் திறனாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது என ந.முத்துமோகன் குறிப்பிடுகின்றார்” (முத்துமோகன். ந, ஐரோப்பிய தத்துவங்கள், ப-196) இலக்கியத்தை மொழியென்று கொள்ளும்பொது அதனை இலக்கிய அலகுகளால் ஆன கட்டமைப்பு என்று அறியமுடிகின்றது. இலக்கியப் படைப்பின் ஓர் அலகு பிற அலகுகளுடன் கொள்ளும் உறவு நிலைத்த உறவல்ல அது மாறுபடும் உறவு. உறவு மாறுபடுவதற்கு ஏற்ப பொருண்மையும் மாறுபடுகின்றது. அமைப்பியல் மொழி, தொன்மம், இலக்கியம் ஆகியவற்றின் உள்ளீடான ஒழுங்கு, முழுமை, கட்டமைப்பு, உருவம் ஆகியவற்றை ஆராய்ந்து, சமூக யதார்த்தத்திலிருந்து இலக்கியத்தைப் பிரித்து வைத்து இலக்கியத்தை இலக்கிய அலகுகளுக்கு இடையிலான உறவுகளாலும், உறவுகளின் கட்டமைப்பாலும் விளக்கிட அமைப்பியல் முனைகிறது.

    அமைப்பியல் சொற்பொருளும் விளக்கமும்

         அமைப்பியல் என்னும் சொல் கட்டமைப்பு, உள்ளடக்கம், ஒட்டுமொத்தம் எனப் பலவாறாகப் பொருள்கொள்ளும் தன்மையுடையனவாக உள்ளது. Structural என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இலக்கியப் பகுதிகளின் ஒன்றுக்கொன்றுள்ள உறவு முறைகளின் தொகுப்பு  என்று இலக்கிய அகராதிப் பொருள் கூறுகின்றது (Alex preminger, klarnke, J.Frank and Hardison (Ed) Princeton Encyclopedia of Poetry and Poetics, p.812)  அமைப்பு என்பது பொருள் நிறைந்த மொழிக்கூறுகள் ஒன்று சேர்ந்து ஒரு வடிவத்தை உருவாக்குகின்றது. ஒரு மொழியின் ஒலிகள், இலக்கணக்கூறுகள், சொற்கள் முதலியவற்றின் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட அணுகுமுறையாக அமைப்பியல் திகழ்கிறது.

         மொழியியல் அறிஞர்கள் இலக்கியத்தினை குறி – குறிப்பான் – குறிப்பிடுபொருள் என்று பாகுப்படுத்துகின்றனர். குறி(Sign) என்பதற்கு இருதள இயக்கம் உண்டு. குறி என்பது தன்னையும் சுட்டும், பிறிதொருப் பொருளையும் சுட்டும். தொல்காப்பியர் இதனைச் சொன்மை (தன்னைச் சுட்டுவது) என்றும் பொருண்மை (பிறிதொன்றைச் சுட்டுவது) என்று விளக்குகின்றார் (தொல்.சொல்.நூ.153). “இலக்கியப் பிரதியின் பல்வேறு உறுப்புகளைச் சொல், வாக்கியம், அரைப்புள்ளி, தலைப்பு போன்றன குறி என்றும், இவற்றின் சேர்க்கை மொத்தம் இலக்கியம் எனச்சுட்டும் குறிப்பான் என்றும் அதன் பொருள் குறிப்பிடு என்றும் புரிந்துகொள்கிறோம் என்பர்.” (தமிழவன், அமைப்பியல் வாதமும் தமிழிலக்கியமும், ப-82).  மார்க்ஸிய அமைப்பியல்வாதியான லூயி அல்துஸ்ஸரும் ஒரு முழுமையின் உறுப்புக்கள் பலத்தளங்களில் தம்முள் உறவு கொண்டிருக்கிருக்கும் என்கின்றார். இப்பல்வேறு உறுப்புக்களின் தொடர்புகளை அறிதலில்தான் அமைப்புப் பற்றிய அறிவு அடங்குகிறது. இலக்கியத்தை ஒரு குறிப்பிட்ட அடிப்படைகள் கொண்ட உற்பத்தி என்று அமைப்பியலாளர்கள் பார்த்தனர். ஆய்வாளர்களின் கருத்தின்படி அமைப்பியல் என்பது படைப்பின் கட்டமைப்புக் கூறுகளை வெளிப்படுத்தும் அறிவியல் தன்மை கொண்ட ஆய்வுப்போக்கு என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.

    அமைப்பியலின் வகைகள்

         அமைப்பியல் ஆய்வுநிலைகளின் அடிப்படையிலும் பொருண்மையின் அடிப்படையிலும் மொழியியல் அமைப்பியல், மானிடவியல் அமைப்பியல், மார்க்ஸிய அமைப்பியல், இலக்கிய அமைப்பியல் என்ற பகுப்பாய்வுகளுடன் ஆய்வுச் செய்யப்பட்டு வருகின்றது.

    மொழியியல் அமைப்பியல்

         மொழியியல் அமைப்பியலின் தோற்றத்திற்கு காரணமாயிருந்தவர் ஃபெர்தினெண்ட் தெ சசூர்(Ferdinand De Sasur). சசூர் மொழி என்பது சப்தக் குறிகளின் இணைப்பாலான அமைப்பு என்று கூறுகிறார். சொல் என்பது ஒரு குறி இத்தகைய பல குறிகளின் இணைப்பாலான அமைப்பே மொழி. சப்த ஒலி அணுக்களாலான சொல்லின் ஓசையமைப்பைக் குறிப்பான் (Signifier) எனலாம். அவ்வோசை அமைப்பால் குறிக்கப்படும் அர்த்தத்தைக் குறிப்பீடு(Signified) எனலாம் என்பது சசூரின் கூற்றாகும். மொழிக்கிடங்கு என்பதும் பேச்சு (Parole) என்பதும் சசூரின் சிந்தனைகளாக காணப்படுகின்றன. “இலக்கியத் தகுதி(Literary Competence) என்னும் எண்ணம் சசூரின் மொழிக்கிடங்கு பற்றிய சிந்தனையின் விரிவு. இலக்கியப் படைப்பில் மொழி இல்லை என்றால் உருவமிருக்கமுடியாது;  அதுபோல் உருவம் இல்லையென்றால் நூலும் இலக்கியமாய் இருப்பதில்லை. உருவமும் மொழியும் இயக்கவியல் அடிப்படையில் செயல்படுகின்றன எனக் குறிப்பிடுவார்.”(Culler, Jonathan. Structural Poetics, P-20).  மொத்ததில் சிறு சிறு ஒலிக்கூறுகளின் வேறுபாட்டினால் மொழி உருவானது போலவே மொழி அமைப்பை இணைப்பு நிலைப் பார்வையாலும் அடுக்குநிலைப் பார்வையாலும் சசூர் உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் விளக்குகின்றனர்.

    மானிடவியல் அமைப்பியல்

         மொழியியல் அமைப்பியலில் சசூர் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவரோ அத்தகைய நிலையை மானிடவியல் அமைப்பியலில் லெவிஸ்ட்ராஸ் அடைந்துள்ளார். மானிடவியல் என்னும் அறிவியல் லெவிஸ்ட்ராஸ் எண்ணப்படி பொருள்களுக்கு அர்த்தம் நல்கும் ஒன்றாகும். இரு ஒலிகளின் வேறுபாட்டில்தான் அர்த்தம் உருவாகிறது. சசூர் குறிப்பிட்ட குறியியல் (Semiotics) என்னும் புது அறிவியல் பற்றிய சிந்தனையையும் குறிப்பான் குறிப்பீடு என்னும் சிந்தனையையும், தளப்பார்வை, காலப்பார்வையையும், பேச்சு/மொழிக்கிடங்கு என்னும் பார்வையையும் தன் மானிடவியல் ஆய்வுகளில் பயன்படுத்தியுள்ளார். ஆழ்மன நிலையில் கிடக்கின்ற அமைப்புகளைத்தான் ஆய்வு செய்யவேண்டுமே தவிர வெளிப்படையாகத் தெரிகின்ற பொருள்களை நேரடியாக ஆய்வுசெய்வதில் பயனில்லை. அதுபோல் ஆய்வில் ஒரு பொருளின் கூறுகளைப்பற்றித் தெரிந்து கொள்வதைவிட அந்தக் கூறுகளுக்கு இடையில் உள்ள உறவைத்தான் ஆய்வு செய்யவேண்டும் என்பர். உண்மைப்பார்வைக்கு அப்பால்தான் அந்தப் பொருளின் உண்மை அடங்கி உள்ளது. மரபு, எண்ணம், பழக்கம் போன்றவற்றால் உருவாகும் கருத்துருவம் சமூகத்தை உருவாக்காது; ஆனால் சமூகம் தான் கருத்துருவங்களை உருவாக்கும் என லெவிஸ்ட்ராஸ் குறிப்பிடுகின்றார்.(Levistrass., Clande the Savage Mind, PP-117-130).

         மானிடவியல் அமைப்பியல் கலாசாரத்தின் எந்த அமைப்பை ஆராய வேண்டுமோ அந்த அமைப்பைச் சிறுசிறு கூறுகளாக உடைத்து ஒவ்வொரு கூறுக்கும் ஓர் அடையாளத்தைக் கொடுத்து, பின் அந்தக் கூறுகள் தமக்குள் கொண்டுள்ள உறவை ஆராய்கின்றது. லெவிஸ்ட்ராஸ் ‘உறவு முறை அடிப்படை அமைப்புகள்’ என்னும் நூலை எழுதியபின்  தனது நூறு கட்டுரைகளில் இருந்து சில முக்கியக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ‘அமைப்பியல் மானிடவியல்’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார். அக்கட்டுரையிலும் பல்வேறு பிரச்சினைகளைத் தேர்ந்தெடுத்துத் தன் அமைப்பியல் முறை ஆய்வைப் பயன்படுத்தி தீர்வுகள் கண்டார். அதே நேரத்தில் உலகுக்கு அமைப்பியல் ஆய்முறையை மேலும் பலமாக அறிந்து கொள்ள உதவினார்.

    மார்க்ஸிய அமைப்பியல்

         சிந்தனை என்பது வரலாற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி. சமூக யதார்த்தத்தால் உருவானது. அதாவது ஓர் உற்பத்தி முறையால் உருவானது. ஆகவே, அறிவு சிந்தனைக்குள் உருவாவது என்பதை அறியலாம். அறிவு என்பது கோட்பாட்டுக் களத்தில் தோன்றும் சிந்தனையே. இதனை மார்க்ஸ் ‘பருப்பொருள் தன்மை கொண்ட முழுமை என்னும் சிந்தனை; முழுமைப் பருப்பொருள் கொண்ட சிந்தனையாய் மாறுகின்றது.  அச்சிந்தனையானது சிந்திப்பது, அறிவது என்பவற்றின் விளைவேயாகும்.  இச்சிந்தனை வழியே மார்க்ஸிய அமைப்பியல் தோற்றம் கொள்கிறது என லூயி அல்துஸ்ஸர் குறிப்பிடுகின்றார் (Althusser Louis, Reeding Capital, p-41).  மார்க்ஸிய அமைப்பியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்கிறது. மார்க்ஸியச் சிந்தனையை எங்கல்ஸ், காட்ஸ்கி போன்ற ஜெர்மனிய  சிந்தனையாளர்களும்; போலந்தின் ரோஸோ லக்ஸம்பர்க்;  ரஷியாவின் பிளக்னோவ், லெனின்; இத்தாலியின் லஃபிரியோலா, கிராம்சி போன்றோரும் உலகறியச் செய்தனர்.

                கோட்பாடு, தத்துவம், பொருளாதரம், இலக்கியம் இவையெல்லாம் ஒரு மொத்த  முழுமையின் பல்வேறு வெளிப்பாடுகள். இவை ஒவ்வொன்றும் தனித்தனியான அமைப்புகளையும் விதிகளையும் செயல்களையும் அதே நேரத்தில் சில ஒற்றுமைகளையும் கொண்டு அமைப்பியல் வடிவத்தில் இணைந்திருக்கும்  என்பதுதான் மார்க்ஸின் கொள்கையாகும். படைப்பில் சிந்தனைவளம்  இருக்கிறதா, தர்க்க நெறிக்குட்பட்டுப் புற எதார்த்தத்துடன் இணைந்து போகிறதா, வரலாற்றுடன் பொருந்துகிறதா  என்ற பகுப்புகளுடன் மார்க்ஸிய அமைப்பியல் ஆராய்கிறது.

    இலக்கிய அமைப்பியல்

                அமைப்பியலின் சிந்தனை முறையிலே மிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது இலக்கிய அமைப்பியலாகும். இலக்கிய அமைப்பியலுக்கு முன்னோடியாக இருந்தது ரஷ்யாவில் உருவாக்கம் பெற்ற உருவவியல் வாதமாகும். உருவவியலாளர்களில்  முக்கியமானவர்களாக ரோமன் யாக்கப்சன், விக்டர் ஷக்லோவாஸ்கி, போரிஸ் எஹென்பாம், தொமோஷோவாஸ்கி, யுரிகின்யனொவ் என்னும் ஆய்வாளர்களைக் குறிப்பிடலாம்.  உருவவியல்வாதிகள்  படைப்பை  அதன் மாதிரிகளைக் கட்டுடைத்தனர். இலக்கியம், கலை போன்றவை எப்போதும்  ஒரு புதுமையை, புது அறிதலை, புது அனுபவத்தைப் புலன்களுக்கு தருவதாய் அமைதல் வேண்டும். ஒரு புதுப்படைப்பு என்பது  முந்தையப் படைப்பிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். அந்த படைப்பைப் படித்த கனத்திலிருந்து உலகைப் புதுவகையானதாய்ப் பார்க்க வேண்டும். கலையும் இலக்கியமும் தொடர்ந்து மாறும் என்னும்  கொள்கை உடையவராய் உருவவியல்வாதிகள் காணப்படுகின்றனர். “முதலில் இலக்கியத்துறைப் பார்வையாலும்(Synchrenic) அடுத்தாக காலப் பார்வையாலும்(Diachronic) உருவவியல்வாதிகளின் சிந்தனைமுறை சென்றதனை தமிழவன் குறிப்பிடுகின்றார். (தமிழவன், அமைப்பியல் வாதமும் தமிழிலக்கியமும், ப-241.)

                ஒரு படைப்பினுடைய பல்வேறு உறுப்புகளின் ஒன்றிணைந்த ஒரு முழுமையே உருவம் என்பது  இக்கொள்கையாளர்களின் மையமாக கருதப்படுகின்றது.  இலக்கிய அமைப்பின் வழி படைப்பினை அணுகின்றபோது அதனுள் பொதிந்து கிடக்கும் அனைத்து அம்சங்களையும் வெளிக்கொணர வழிவகை அமைகின்றது. பல்வேறுத் துண்டுகளாகச் சிதறிகிடக்கும் படைப்பு மையத்தை நோக்கிப் பயனிக்கின்றது. இலக்கியத்திற்குள் இருவகைப் பார்வைகளை இவ்வாய்வுமுறை காணுகின்றது. ஒன்று,   படைப்பின் அமைப்பு, அதன் உருவமும், இது ஒரு படைப்பின் பகுதி மற்றும், பாடலின் தொடர்ச்சியினையும்  அதன் அவசியங்களையும் வெளிப்படுத்துவன. அடுத்து, படைப்பு வெளிப்படுத்தும் கருத்துக்கள் உலக யதார்த்தங்களையும்  வெளிப்படுத்துவனவாக  அமைதல் வேண்டும். மேற்காணும் வகையில் இலக்கிய அமைப்பியல் ஆராய்ச்சி உலகில் அவசியமாகிறது.

    தமிழில் அமைப்பியல்சார் ஆய்வுகள்

                அமைப்பியல் என்ற இலக்கியத் திறனாய்வு நெறி இன்று உலகமெங்கும்  பரவியுள்ளது. தமிழில் எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து கோட்பாட்டளவில் அறிமுகமாகி இன்று செயல்முறைத் திறனாய்விலும் தன் தாக்கத்தை செலுத்திவருகின்றது. “இந்தியாவிலும்  இம்முறையில் உருவான திறனாய்வு தமிழில் தான் முதன்முதலாக மிக விரிவாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக தமிழவன் எடுத்துரைப்பார்.(அமைப்பியல் வாதமும் தமிழிலக்கியமும், ப-59.) இலக்கியத் திறனாய்வு தான் அணுகுகிற எழுத்தைப்(writting) பகுத்தும், தொகுத்தும், துண்டு துண்டாக்கி அலசிப்பார்ப்பதும் தவறல்ல என்ற எண்ணம் அமைப்பியலாளரிடம் காணப்படுகின்றது. இந்த அலசிப்பார்க்கும்(Analytical Approch) அணுகுமுறை இலக்கியதில் கலையாக, படைப்பாகப் பார்ப்பதிலிருந்து தவறுவதில்லை. “இலக்கிய சுவைப்பிற்கு அடிப்படையான தேவைகளாக நிலை, பின்னணி, வடிவம், கருத்து ஆகிய நான்கும் கருதப்படுகின்றன என  ஜெ.நீதிவாணன் குறிப்பிடுகின்றனர்.(நடையியல், ப-9). இத்தகைய வடிவம், உருவம், கட்டமைப்பு என்ற அமைப்புநிலைப் பற்றிய ஆய்வுகள் பழங்காலந்தொட்டே தமிழில் இருந்து வருகின்றன.

    தமிழ் யாப்பியல் வரலாற்றின் முதல்வராகத் தமிழிலக்கிய கோட்பாட்டின் முன்னோடியாகத் திகழும் தொல்காப்பியரின் காலத்திற்கு முன்னமே பாடல்களின் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் உறுப்புகளை வரையறை செய்துள்ளனர்.

         “நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென
          வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே”
         “யாப்பென மொழிப யாப்பறி புலவர்”
         “நூல் நவில் புலவர் நுவன்றறைந் தனரே”     “என்பனார் புலவர்” என வரும் தொல்காப்பிய தொடர்களால் அறியலாம் (தொல், பொருள், செய்யுள்(இளம்) நூ-310, 383, 457, 311, 422, 433, 434).

    செய்யுளுக்குச் சிறப்பியல்பாகிய பல்வகை ஒலிநயம் பொருந்திய சொற்கோவையினைப் பகுத்து ஆராய்தலும் ஆராய்ந்தவற்றை விளக்குதலும் யாப்பியல் பணியாக அமைகின்றது. சோ.ந. கந்தசாமி தனது ‘தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில், “சங்க யாப்பு என்பது முற்காலத்துச் சங்க யாப்பினை ஆராய்வதன்று என்பதும், பின்னர் எழுந்த சங்கத்துப் பாக்களின் அமைப்பியலை ஆராய்ந்து இலக்கணம் கூறுவதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பது எண்ணத்தக்கதாகும்.(ப-40.)

         பொருளதிகாரத்தில் பேசப்படும் செய்யுள் உறுப்புகள் கவிதையின் கட்டமைப்புத் தன்மையினை விளக்குவதாக அமைகின்றது. இது அமைப்பியலாளர் குறிப்பிடுகின்ற ‘ஒட்டுமொத்தம்’ என்ற நிலையினோடு தொடர்புடையனவாக உள்ளது. ஒலியில் தொடங்கி நோக்கு வரையிலும் பேசப்படும் அனைத்தும் ஒருசேரக் கட்டப்படுவதே செய்யுளாகும் என்ற பாவியல் சிந்தனைகளை தொல்காப்பியத்தின் வாயிலாக உணரலாம். தமிழ்ச் செய்யுள் உறுப்புகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. கி.பி. 1911 ஆம் ஆண்டு தி. வீரபத்திரமுதலியார் அகழாய்வு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நிகழ்த்திய உரையின் விளக்கமாக எழுதிய (The Evoluation of Tamil Virutham) என்ற ஆய்வுக்கட்டுரையில் பாவியல் சார்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார் (பக்-9-28).

    அ. சிதம்பரநாதனார் தமது முனைவர் பட்டத்திற்காக எழுதிய ஆய்வுநூலும் (Advanced Studies in Tamil Prosody) இலக்கியக் கட்டமைப்புச் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றது. மேலும், பல்வேறு ஆய்வாளர்கள் இச்சிந்தனை வழிப்பட்டவர்கள் என்பதை தமிழிலக்கிய ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன. தமிழவன் தமது “அமைப்பியல் வாதமும் தமிழ் இலக்கியமும்” என்ற நூலில் தமிழின் முக்கியமான மூன்று திறனாய்வுக் குழுக்களைக் குறிப்பிடுகின்றார்.

    அவை,

    1. இலக்கியவியல் திறனாய்வுக்குழு
    2. தமிழ்க் கல்வியியல் திறனாய்வுக்குழு
    3. மார்க்சியவியல் திறனாய்வுக்குழு. என்பன.

         இக்குழுக்களில் இடம் பெற்றுள்ள ஆய்வாளர்களில் முக்கியமானவர்கள் க.நா.சு, சி.சு.செல்லப்பா, ஆ.முத்துச்சிவன், மு.வ, க.கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி போன்றோராவர். இவர்களின் ஆய்வுமுறைகள் தமிழிலக்கிய வளங்களை அமைப்பியலார் போன்று வகைப்படுத்தலிலும், கட்டமைப்பதிலும், ஒப்பீட்டு முறையிலும் மேலும் முழுமையை நோக்கிய சிந்தனைகளோடும் அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. இலக்கிய ஆய்வியலாளர்கள் ஒவ்வொருவரும் தம் சிந்தனைப் போக்கினை வெளிப்படுத்துகின்றனர். இலக்கியவியல் குழுவினர் சங்க இலக்கியத்திற்கு ரசனை என்று எதிர்வினை காட்டுகின்றனர். மார்க்ஸியலாளர்கள் அதற்கு அரசியல் எதிர்வினை சுட்டுகின்றனர். தமிழ்க் கல்வியாளர்கள் அதற்கு மரபு என்று எதிர்வினைக் காட்டுகின்றனர். அவரவர் தனக்கான பொருளையும் வடிவத்தையும் காணுகின்றனர். அதன் உணர்வினையும் உயிர்ப்பையும் பெருகின்றனர். அதற்கான எதிர்வினையை இயக்குகின்றனர். இதுதான் அமைப்பியல் திறனாய்வாளரின் புரட்சிகர இலக்கிய கொள்கையாக அமைவதை அறியமுடிகின்றது. தமிழில் தற்போதைய அமைப்பியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாக தமிழவன், பூர்ணச்சந்திரன், நாகர்ஜுனன், ஆலிஸ்  போன்ற ஆய்வாளர்களைச் சுட்டலாம்.

    தொகுப்புரை

        அமைப்பியல் மனிதப் பண்பாட்டுத் துறைகளில் மிகவும் சக்திவாய்ந்த அறிவாராய்ச்சி முறையாக விளங்குவதை இக்கட்டுரை விளக்குகிறது. 19ஆம் நூற்றாண்டின் அறிவுவாதம் 20ஆம் நூற்றாண்டின் அமைப்பியல் வாதமாக மீட்டுருவாக்கம் பெறுகின்றது. அமைப்பியல் தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட புறவயமான அணுகுமுறையாகக் கருதப்பட்டுள்ளது. தகவல்கள், வகைப்படுத்துதல், பகுப்பாய்வுசெய்தல், தர்க்கவியல் உள்ளார்ந்த பொது விதிகளைக் கண்டறிதல் என்பன போன்ற முறைமைகளைப் பேசின.  அமைப்பியல் என்ற சொல்லாக்கம் ஐரோப்பியச்  சிந்தனைமரபோடு தமிழில் அறிமுகப் படுத்தப்பட்டாலும் இவ்வாய்வுமுறை வருவதற்கு முன்னரே பாடல்களின் அமைப்புகளை ஆராய்தல் அவற்றின் உறுப்புகளை வரையறை செய்தல் போன்ற சிந்தனைப்போக்கு  தமிழிலக்கிய உலகில் காணமுடிகின்றது.

    Share