Tag: முனைவர் த. சரவணன்

  • வ.சுப. மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை

    -முனைவர் த. சரவணன்

    தமிழுக்கே உரிய சிறப்புக் கூறுகளாக எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்து எழுத்துக்களைக் கூறுவர். அதேபோன்று சொல்லாக்க முறைகளில் வினைத்தொகை என்னும் தொகைச்சொல் வடிவமும் தமிழுக்கே உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வினைத்தொகைபற்றி இலக்கணிகள் குறிப்பிடுவது பற்றியும் வ.சுப. மாணிக்கனார் அவற்றில் இருந்து வேறுபடுவது பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    வினைத்தொகை

    வினைத்தொகையானது இரண்டு சொற்கூறுகளைக் கொண்டது. அதன் முதற்கூறு வினையடியாகவும் இரண்டாவதுகூறு பெயராகவும் காணப்பெறும். சான்றாகக் கொல்களிறு என்ற சொல்லில் உள்ள கொல் என்பது வினையாகவும் களிறு என்பது பெயராகவும் காணப்படுகிறது.

    வினைத்தொகையைப் பற்றித் தொல்காப்பியர்

    வினையின் தொகுதி காலத் தியலும்” (தொல். எச்சவியல். 19) என்கிறார். இதில் வினைத்தொகை என்பதை வினையின் தொகுதி என வழங்குகிறார் அவர். வினைத்தொகையானது கால இடைநிலை தொக்குப் பொருள் தரும் என்பது இந்நூற்பாவால் பெறப்படுகிறது.

         நன்னூலார் வினைத்தொகையை,

         “காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” (நன்னூல். 364)

    என்கிறார். வினைத்தொகையை விரித்துப் பொருள் கொள்ளும்பொழுது எச்சமாக மாற்றியே பொருள்உரைக்க முடிகிறது. சான்றாகக் கொல்களிறு என்பதைக் கொன்ற களிறு என்னும்போது இறந்தகாலப் பெயரச்சமும், கொல்கின்ற களிறு என்னும் போது நிகழ்காலப் பெயரெச்சமும் கொல்லும் களிறு என்னும் போது எதிர்காலப் பெயரெச்சமும் இடம்பெறுகிறுகிறது. எனவே இப்பெயரெச்சங்களைத் தொகையாக்கிக் கூறும்போது வினைத்தொகை உண்டாகிறது என்பது பொதுவான கருத்து.

    வினைத்தொகை என்னும் சொற்கூட்டின் முதற்கூறு வினையும் வினைப்பெயரும் தோன்றுவதற்குரிய வேர்ச்சொல்லாக அமைந்து இருக்கின்றது. வினை என்பது காலம் காட்டும் தன்மை உடையது ஆகும். ஆகவே வினைத்தொகையும் காலமொடு வருகிறது. வினைத்தன்மையே அச்சொற்கூட்டில் இருப்பதால் வினைத்தொகை என்று பெயர்கொடுக்கப்பெற்றுள்ளது. எனவே வினைத்தொகை என்பதற்கு  வினைத்தன்மை அதாவது காலம்காட்டும் நிலை தொக்கது என்று விளக்கம் அளிக்கலாம்.

    வ.சுப.மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை

    வ.சுப. மாணிக்கம் அவர்கள் A Study of Tamil verbs என்னும் நூலில் வினை வடிவங்களை அடையாளம் காண்பதில் உதவும் காரணியாக வினைத்தொகையைக் காண்கிறார்.

     “வினைத்தொகையைக் கட்டமைக்கும் அச்சொற்கூட்டின் முதல் பகுதியானது எந்த ஒரு வினையின் மூலவடிவத்தையும் உறுதிசெய்வதற்குத் தவிர்க்க இயலாக் காரணியாக விளங்குகிறது. சான்றாக ஆகூழ், ஆகாறு, ஆகிடன், அளவாகு மொழிமுதல் ஆகிய சொற்களில் ஆகு என்னும் தூய வினைவடிவத்தை நாம் காணமுடியும்” (A Study of Tamil verbs, ப.37)

    ஏவல் வடிவங்கள் வினையின் உண்மையான வடிவத்தைக் காட்டுவதில் தோல்வி அடையும்போது வினைத்தொகை வடிவங்களே நம்மைக் காப்பாற்றுவதாகவும் வ. சுப. மாணிக்கனார் குறிப்பிடுகிறார். மேலும் சிக்கலுக்குரிய வினைவடிவமாகிய வா, தா என்பவற்றின் வினையடியாக வரு, தரு என்பதையே கொள்ளலாம் என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் விளக்குகிறார்.

    “ஐயத்திற்குரிய எந்த ஒரு வினைவடிவத்தின் உண்மையான மூலத்தையும் அடையாளம்காண நமக்கு உதவுவது வினைத்தொகையின் முதற்கூறான வினையடியே. பின்வரும் சான்றுகளில் வரு, தரு என்னும் சொற்கள் வினைத்தொகையில் அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரு    விசிப்புனல் (தொல்.1008) வரு விருந்து (குறள்.83) புனல்தரு பசுங்காய் (குறுந்தொகை. 292)” (A Study of Tamil verbs, ப.44)

    வினைத்தொகை பற்றிப் பிற்கால இலக்கணிகள் கொண்டிருந்த கருத்துக்கு மாற்றாகத் தொல்காப்பியரைப் பின்பற்றி, வினைத்தொகையில் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டுமே  உணரமுடியும் என்பதைப் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.

    “இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் குறிப்பிடும் இரண்டு பெயரெச்சங்களை மட்டுமே      தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    அவ்வறு பொருட்குமார் அன்ன உரிமைய
    செய்யும் செய்த என்னும் சொல்லே (தொல். 718)

    கொல் களிறு போன்ற சொற்களில் நிகழ்காலத்தையும் இறந்தகாலத்தையும் மட்டுமே விளங்கிக்கொள்ள முடிவதாகஅவர் எண்ணுகிறார். இதற்குச் சான்றாகப் பின்வரும் நூற்பாவைக் குறிப்பிடலாம்.

    செய்யும் செய்த என்னும் கிளவியின்
    மெய்யொருங்கு இயலும் தொழில்தொகு மொழியும்” (தொல். 482)”                                                                                  (A Study of Tamil verbs, ப.102)

    மேற்கண்ட கூற்றில் தொழில்தொகு மொழியாகிய வினைத்தொகையில் செய்யும் செய்த என்னும் இரண்டு காலமே அதன் விரியில் வருவதை எடுத்துக்காட்டி இடைக்கால இலக்கணிகள் குறிப்பிடும் முக்காலமும் காட்டும் என்பதனை வ.சுப. மாணிக்கனார் மறுப்பதை அறியமுடிகிறது.

    “உம் ஈறு நிகழ்காலத்துக் குரியது எதிர்காலத்துக்குரியதாவது எதனாற் பெறுதும்? என்பது வினா. பெயரெச்ச விகுதிகளுள் அகரம் இறப்பு நிகழ்வுக் காலங்கட்குரியது. உம் நிகழ்வுக்குரியது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லையாதலின் உம் விகுதியைக் கொள்ளவேண்டும்.” (தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் – எச்சவியல், பக்.132) என்று ஆ. சிவலிங்கனார் குறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லாமையாலேயே இரண்டு பெயரெச்சங்களே வினைத்தொகையில் காணப்படுகின்றன என்று வ.சுப. மாணிக்கனார் முடிவு செய்கிறார். தொல்காப்பியர் வினைத்தொகையைப் பற்றிக் குறிப்பிடும் நூற்பாவில் காலத்தியலும் என்று பொதுப்படையாகக் கூறி இன்ன காலம் என்று குறிப்பிடாமல் சென்றுள்ளதும் இதற்குக் காரணமாகும்.

    இறுதியாக, வினைத்தொகை என்பதில் கடந்த கால, நிகழ்காலப் பெயரெச்சங்களே தொக்கி நிற்கின்றன என்பதும் வினையடியின் தூய வடிவைக் கண்டறிவதில் வினைத்தொகையின் முதற்கூறு உதவுகிறது என்பதும் வ.சுப. மாணிக்கனாரின் இலக்கணப் பார்வையின் மூலம் அறிய முடிகிறது.

    ******

    துணைநின்ற நூல்கள்:

    Manickam,V.Sp. 1972. A Study of Tamil Verbs. Annamalai Nagar: Annamalai University.

    சிவலிங்கனார், ஆ. 1998. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (உரைவளம்) எச்சவியல்.  சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

    ******

    கட்டுரையாசிரியர்
    இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
    இலக்கியத்துறை
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    #40, ஐ.ஆர்.டி வளாகம், நூறடிச்சாலை,
    தரமணி, சென்னை – 113.

     

     

     

    Share
  • சிவப்பிரகாசம் குறிப்பிடும் மூவகை வாசகர்கள்

    -முனைவர் த. சரவணன்

    தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
    தோன்றிய
    நூல்எனும் எவையும் தீதாகா”

    மேற்கண்ட பாடலடி உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாச அவையடக்கப் பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலடி தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் செல்வாக்குப் பெற்றது. பழமையை மட்டும் போற்றிப் புதுமையை இகழ்வதை இப்பாடலடி கண்டிக்கின்றது.  இவ் அவையடக்கப் பாடலில் இப்பாடலடியைத் தொடர்ந்து வரும் அடிகளில், ஒரு பனுவல் மூன்று வகை வாசகர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பது விளக்கப்படுகின்றது. எனவே இக்கட்டுரை சிவப்பிரகாச அவையடக்கப் பாடல் குறிப்பிடும் மூவகை வாசகர்களைப் பற்றி எடுத்து இயம்புகிறது.

    எழுதப்பட்ட ஒரு பனுவல் (Text), தனக்கான வாசகர்களாலும் உருவாக்கம் பெறும்போதுதான் அதற்குப் பன்முகப் பரிமாணம் கிடைக்கிறது. மேலும் எந்த ஒரு பனுவலும் தனக்கான வாசகர்கள் என்ற நினைப்பு இல்லாமல் உருவாவதில்லை. படைப்பு உருவாக்கத்தில் நிலவும் இந்தத் தன்மைதான் ஆற்றல் வாய்ந்த ஒன்றாக வாசித்தல் விளங்குவதற்கு அடிப்படை ஆதாரமாகிறது.

    வாசகர் என்கிற ஒரு கூட்டத்தாரின் பல்வேறு வகையான புலனுணர்வுகளால் உணரத்தக்க ஒரு நிகழ்வுதான் இலக்கியம். அவரவர் புலனுணர்வுகளுக்குத் தக்கவாறு ஒரு படைப்பிலக்கியம் எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பதை இன்றைய திறனாய்வாளர்கள் வாசகர்கள் ஏற்புடைமைத் திறனாய்வில் (Readers Response theory) குறிப்பிடும் கூறுகளை உமாபதி சிவாசாரியார் சிவப்பிரகாச அவையடக்கப் பாடலில் குறிப்பிடுகின்றார்.

    உண்மையான வாசகர் (Actual reader), மேலான வாசகர் (Super reader), அறிவார்ந்த வாசகர் (Informed reader), இலட்சிய வாசகர் (Ideal Reader), மாதிரி வாசகர் (Model Reader), உள்ளுறை வாசகர் (Implied Reader), கொள்கை வாசகர் (Encoded reader) என்று வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் பெயரிட்டழைக்கப்படுகின்றனர்.(Jeremy Hawthorn. 2011. A Glossary of Contemporary Literary Theory, pp.289-292) ஆனால் உமாபதி சிவாசாரியார்  பின்வரும் பாடலில் துணிந்த நன்மையினார், நடுவாம் தன்மையினார், ஆராய்ந்தறிதல் இன்மையினார் என்னும் மூவகை வாசகர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

    தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
    தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா துணிந்த
    நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
    நவையாகா தெனஉண்மை நயந்திடுவர் நடுவாந்
    தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர்
    தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறிதல்
    இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே திலருற்
    றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே.            (சிவப்பிரகாசம் பாடல் எண்.12)

    துணிந்த நன்மையினார்

    துணிந்த நன்மையினார் என்பவர் ஒரு நூலைப் படித்த உடனேயே அதனுடைய பழமையும் புதுமையும் சொற்குற்றமும் கொள்ளாமல் அப்படியே ஏற்றுக்கொள்வர். அது எவ்வாறெனில் நல்ல இரத்தினமானது ஒரு நாய்த்தோலிலே கட்டியிருந்தாலும் இரத்தினமறிந்தவர்கள் தோலின் குற்றம் கொள்ளாது மாணிக்கத்தின் நன்மையை மட்டும் கைக்கொள்ளுவர். இங்கு மாணிக்கத்தின் நன்மையைக் கொள்ளுபவரைப் போலத் துணிந்த நன்மையினார் என்பவர் குறிப்பிடப்படுகின்றார்.

    நடுவாந்தன்மையினார்

    இவர் முற்சொன்னவரைப் போல் அல்லாமல் ஒரு பனுவலை வாசித்தவுடன் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் வேதாகமத்தைப் பின் செல்லுகின்ற நூல் என்றும் நன்மையை உடையது என்றும் மெதுவாக ஏற்றுக்கொள்வார்.

    ஆராய்ந்தறிதல் இன்மையினார்

    இவர் குணமும் குற்றமும் பொருளிடத்தில் பொருந்தியுள்ள முறைமையை ஆராய்ந்து அறியாதவராய் இருப்பார். ஒரு நூலை உத்தமர்கள் கொண்டாடினால் கொண்டாடியும் ஒரு நூலின் மீது பொறாமை கொண்டோர் இகழ்ந்துரைத்தால் அதற்கு ஏற்றவாறு  அந்த நூலை இகழ்ந்தும் உரைப்பார். இவர் தமக்கென்று நன்மை தீமையைத் தீர்மானிக்கும் அறிவு இல்லாமல் திகழ்வார்.

    தொல்காப்பியர் இந்த மாந்தர்களைக் குறித்துக்

    கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
    உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
    நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே”–      தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூற்பா எண். 27

    எனச் சுட்டுகிறார். அத்தகைய உணர்வில்லாத மாந்தருக்குப் பனுவலின் பொருள் புலப்படாது  என்றும் பதிவு செய்கிறார். ஆக, தொல்காப்பியர் வாசகர்/மாந்தர் என்று கருதுவது பனுவலோடு இரண்டறக் கலந்த ஒருவரைத்தான் எனத் தெரிகின்றது. நவீனத் திறனாய்வும் பனுவலின் பண்பாக்கத்தோடு உருவாகும் ஒருவரைத்தான் வாசகர் என்று கருதுகிறது. இங்குச் சிவப்பிரகாசப் பாடல் குறிப்பிடும் முதல்வகை வாசகர்/மாந்தர் என்பவர் பனுவலோடு இரண்டறக் கலந்த உணர்வுடைய ஒருவர். மூன்றாம் வகை வாசகர்/மாந்தர் கண்ணினும் செவியினும் உணர்வில்லாத ஒருவர்.

    முடிவுரை

    சிவப்பிரகாச அவையடக்கப் பாடல் வெறும் அவையடக்கப் பாடலாக மட்டுமல்லாமல் இன்றைய இலக்கியத் திறனாய்வாளர் குறிப்பிடும் வாசகர் ஏற்புடைமை பற்றியும் விளக்குவதை அறிய முடிகிறது. ஒரு தத்துவ இலக்கியப் பனுவல் மூன்றுவகை மாந்தர்களால்/வாசகர்களால் மூன்றுவிதமாக புரிந்துகொள்ளும் முறையும் இப்பாடலால் விளக்கப்படுகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1.திருவிளங்கம், மு. (உ.ஆ.). 1933. கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த சிவப்பிரகாசம் மூலம். சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை.

    2.கணேசையர், சி. (ப.ஆ.). 1943. தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பின்னான்கியல்களும் பேராசிரியமும். சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்.

    3.Jeremy Hawthorn. 2011. A Glossary of Contemporary Literary Theory. New Delhi: Heritage Publishers.

     ******

    கட்டுரையாளர்
    இளநிலை ஆய்வு அலுவலர்
    இலக்கியத்துறை
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை -113

     

     

     

    Share