பெயர் மறந்தது ஏனோ?…
விசாலம்.
உயர்திரு ஸ்ரீனிவாசவரதன் என்பவரின் மனைவி திருமதி. பத்மாசினி,, கணவருக்குத் தோளுக்குத் தோளாய் நின்று தேசப் பக்தியை பரப்பினவர்.
‘வந்தேமாதரம்’ என்ற முழக்கத்திற்கு,பல அடிகள் கிடைத்த காலம்,.. பெண்களும் பயந்து அடிமையாக இருந்தபோது இவர் அந்த அடிமைத்தனத்தை ஒழிக்க முன்னுக்கு வந்தார்,
பெண்களை விடுதலைப்போரில் ஈடுபடுத்தி சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் களத்தில் இறங்கியவர், சுதந்திரப்போர் கூட்டத்தில் பெரிய தியாகிகளைப் பற்றியும்,மஹாத்மா காந்திஜியைப் பற்றியும் நிறைய எடுத்து உரைத்தார்,
மதுரை பூந்தோட்டப் பகுதியில் ‘திலகர் ஆஸ்ரமம்’அமைத்து அங்கு மக்களைக்கூட்டி சுதந்திரப் பொறியை வளர்த்தார். தன் கணவர் சுதந்திரப் போரில் சிறைக்குச் சென்றவுடன் அவரை அங்கு போய்ப்பார்த்து நெற்றியில் வீரத் திலகமிட்டு வாழ்த்துச் சொன்னார்.
சாப்பிடும் நேரம் கூட எடுத்துக்கொள்ளாமல்,.. தனியாக தேச பக்தி பணியில் ஈடுபட்டு பெண்மணிகளைச் சேகரித்தார், கதர் உடுத்தும்படி அறிவுறுத்தி இராட்டினம் நூற்கவும் கற்றுக்கொடுத்தார், அவர் உடல் நலம் குன்றியது ஆனாலும் தன் உடல் நிலையை மறந்தார்.
அவருடைய இரண்டு குழந்தைகளும் பிறந்து,.. இறந்தும் போயின, இதனால் மனம் தளர்ந்து உட்கார்ந்துவிடவில்லை. தேசத்தொண்டைக் கைவிடவில்லை.
திரு சுப்பிரமண்ய சிவா அவருக்கு மிகவும் வேண்டிய குடும்ப நண்பர்.
மூன்றாவது முறையும், அவர் கர்ப்பிணியாக இருந்தும்.. தன் தேசப்பணியை தொடர்ந்துசெய்யும்போது ஒரு பெண் சிசு பிறந்து, அதுவும் இறந்து போனது. ஆனாலும் தன் சோகத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு மனம் தளரரமல் ‘சகோதரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை உருவாக்கி இராட்டினம் நூற்கத் தொடங்கினர் .
ஒரு சமயம் தான் அணிந்திருக்கும் நகைகளைக்கழட்டி, தேசபக்தர்களின் செலவுக்குக் கொடுத்துவிட்டார். அநியாயத்திற்க்கு எதிராக குரல் எழுப்பி 6 மாதம் சிறைத்தண்டனையும் அனுபவித்தார், அங்கு அவர் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்த காரணத்தினால்,..உடல்நிலை மிகவும் மோசமானது. தன் குழந்தைகளையெல்லாம் வரிசையாகப்பறிகொடுத்தபின்னும், தொடர்ந்து உழைக்க எப்படிப்பட்ட மனம் இருந்திருக்க வேண்டும்!!.. சுதந்திரமே அவர்முழு மூச்சாக இருந்தது.
தன்னிடம் இருந்த பல ஏக்கர் நிலததையும் ‘பாரதி ஆஸ்ரமம்’ அமைக்க நன்கொடையாகக் கொடுத்துவிட்டார். தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு பள்ளி அமைத்து கல்வி அறிவை வளர்த்தார். தேச பக்தி , அயராத உழைப்பு தேச விடுதலையே மூச்சு என்பவரின் மூச்சும் அவருடைய 49 வயதில் நின்றுவிட்டது
அவரை சுதந்திர தினத்தில் ஞாபகப் படுத்திகொண்டு வணங்குகிறேன் ;அவர் வளர்த்த பூங்கா வாடிவிட்டது.. அந்தப்பூக்கள் எங்கே?
பத்மாசினி அம்மையார் சுதந்திரக்காற்றுடன் கலந்துவிட்டார். இதுபோல் நமக்குத்தெரியாத பல பத்மாசினி அம்மையார்கள்இருந்திருப்பார்கள் . அவர்கள் சுதந்திரத்திற்காக உழைத்த உழைப்பும்,தியாகமும்.. யார் வெளியில் கொண்டுவருவார்கள்?
அந்தக்காலத்தில் புகழுக்காக ஒருவரும் வேலை செய்யவில்லை. இந்தக்கால அரசியலில் ஒருவர் வருவதற்கு முன்னாலேயே,டிவியைச்சேர்ந்தவர்களும் போட்டோகிராபரும் ஆஜராகிவிடுவதைப்பார்க்கிறோம் உண்மைத்தொண்டர்கள் யார் ?!!..ஜால்ராக்கள் யார்?!!.. என்று தெரிவதில்லை .
அன்பர்கள் யாவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..