Author: புவனேஷ்வர்

  • கவியின் காதல்!

     

    -புவனேஷ்வர்

     

    நல்ல புகழுடைய வீணை யதன்

    நாதமெ னக்குச்சுவை யில்லை – அரும்

    மெல்லியலே திருக் குவையே! உயிர்ச்

    சோதியு னக்குவய மானேன்!

     

    கொல்லைப் பசுகொடுத்த பாலும் நல்ல

    மாமி தந்தஉண வேதும் – மிக

    நல்ல தாய்கொடுத்த பாகும் எனக்கு

    சிந்தை மகிழ்வுதர வில்லை;

     

    நல்ல நினைப்புடைய தோழர் அவர்

    சொல்லில் எரிச்சலுமுண் டாச்சு – ஒரு

    கள்வெறி போலிது வாச்சு வந்து

    தெள்ளமு தேயருள் வாயோ?

     

    சோலை மரநிழலில் மாந்தர் மகிழ்

    சோடி யாச்செல்லற் கண்டா லுன்

    னோடி ணைந்திடற் கெங்கும் எனக்

    கோடி தள்ளுதற் செய்வாய்?

     

    ஓய்வு ஒழிதலில் லாமல் லுன்றன்

    உறவைநி னைந்திரங்கு வேனோ – ஓர்

    வாழுமு றைமையறியேன் நான் வந்

    திருந்தென் கலிதொலைத் திடாயோ?

     

    அஞ்சு மானொத்த பெண்ணே இது

    வஞ்சக மன்று நீ கண்டாய் – இனி

    நெஞ்ச மறப்பதில்லை யுன்னை யொரு

    தஞ்சமென் பேன்மறுக் காதே!

     

    அருளில் பெரியவராம் மாதர் என்று

    நாலும றைசொல்லக் கேட்டேன் – தனி

    யிருளுன் னவனென்னை கொண்டால் அது

    ஏலா துனக்கது சொல்வேன்;

     

    திங்கள் முகம்பதிந்த நெஞ்சில் சிறு

    தீப்பொறி தங்கிடு மோடீ? உனைக்

    கண்டு மணந்திடவே வந்தேன் – இது

    பண்டைமு றைமையடி கண்ணே!

     

    வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்

    கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்

    கொண்டு மறைவழி நின்றே புகழ்

    மண்டு மனையறம் செய்வோம்!

     

     

    Share