-புவனேஷ்வர்
நல்ல புகழுடைய வீணை யதன்
நாதமெ னக்குச்சுவை யில்லை – அரும்
மெல்லியலே திருக் குவையே! உயிர்ச்
சோதியு னக்குவய மானேன்!
கொல்லைப் பசுகொடுத்த பாலும் நல்ல
மாமி தந்தஉண வேதும் – மிக
நல்ல தாய்கொடுத்த பாகும் எனக்கு
சிந்தை மகிழ்வுதர வில்லை;
நல்ல நினைப்புடைய தோழர் அவர்
சொல்லில் எரிச்சலுமுண் டாச்சு – ஒரு
கள்வெறி போலிது வாச்சு வந்து
தெள்ளமு தேயருள் வாயோ?
சோலை மரநிழலில் மாந்தர் மகிழ்
சோடி யாச்செல்லற் கண்டா லுன்
னோடி ணைந்திடற் கெங்கும் எனக்
கோடி தள்ளுதற் செய்வாய்?
ஓய்வு ஒழிதலில் லாமல் லுன்றன்
உறவைநி னைந்திரங்கு வேனோ – ஓர்
வாழுமு றைமையறியேன் நான் வந்
திருந்தென் கலிதொலைத் திடாயோ?
அஞ்சு மானொத்த பெண்ணே இது
வஞ்சக மன்று நீ கண்டாய் – இனி
நெஞ்ச மறப்பதில்லை யுன்னை யொரு
தஞ்சமென் பேன்மறுக் காதே!
அருளில் பெரியவராம் மாதர் என்று
நாலும றைசொல்லக் கேட்டேன் – தனி
யிருளுன் னவனென்னை கொண்டால் அது
ஏலா துனக்கது சொல்வேன்;
திங்கள் முகம்பதிந்த நெஞ்சில் சிறு
தீப்பொறி தங்கிடு மோடீ? உனைக்
கண்டு மணந்திடவே வந்தேன் – இது
பண்டைமு றைமையடி கண்ணே!
வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்
கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்
கொண்டு மறைவழி நின்றே புகழ்
மண்டு மனையறம் செய்வோம்!

Leave a Reply