பெண்மை போற்றுக
முனைவர் கு. வளர்மதி,
உதவிப்பேராசிரியர்,
இளங்கலைத் தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.
“அந்நியருக்கு அடிமைப்பட்ட தேசத்துக்கு விடுதலை
ஆணுக்கு அடிமைப்பட்ட பெண்ணுக்கும் விடுதலை!
மாதவம் புரிந்து மங்கையராகப் பிறப்பு
ஆணுக்குப்பெண் சரிநிகர் சமமென வாழ்வு
கணவனுடன் உடன்கட்டை ஏறிடாத இறப்பு!
தந்தையை கணவரை மகனையென – ஆணினத்தைச்
சார்ந்தே வாழும் சார்புவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.
வெளிநாட்டில் படிப்பு வேலையென தனித்தியங்கும்
சொந்தக்காலில் நிற்கும் வாழ்க்கைக்குத் தொடக்கப்புள்ளி…
எட்டாக்கனியான பட்டங்களும் பதவிகளும் எட்டின
பேச்சுரிமைமுதல் சொத்துரிமைவரை அனைத்தும் வசப்பட்டன.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்பது அக்காலம்
நாட்டுக்குள்ளே பெண்ணை ஏற்றிவைப்பது இக்காலம்!
அரியணையில் வீற்றிருக்கும் அதியன்போன்ற மன்னனுக்கு
அறிவுரைநல்கும் ஔவையெனும் அமைச்சராக ஒருகாலம்,
அறிவார்ந்த கருத்துக்களுடன் அரியணையில் வீற்றிருந்து,
சிங்கப்பெண்ணாக வலம்வரும் பெண்ணினமே தற்காலம்!
மண்ணில் மட்டுமல்ல, விண்ணிலும் பெண்ணென…
மகத்தான சாதனைகளின் கொள்கலனான சக்தியை
மாபெரும் பெண்மையை வணங்கிப் போற்றுவோம்!”
