Category: வரலாறு

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 3)

    நைஜல் ஃபராஜ் மற்றும் Reform UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.

    பிரிட்டிஷ் அரசியலைப் பற்றி எழுதும்போது, கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதிகளில் ஒருவராக நைஜல் ஃபராஜை குறிப்பிடாமல் முன்னேற முடியாது.

    ஒரு அரசியல் தலைவர் எப்போதும் ஆட்சியில் இருந்தால்தான் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டியதில்லை. சிலர் எதிர்க்கட்சியில் இருந்தபடியே நாட்டின் அரசியல் திசையையே மாற்றிவிடுவார்கள். நைஜல் ஃபராஜ் அப்படிப்பட்டவர்.

    அவர் பிரிட்டிஷ் அரசியலின் மையக் கேள்விகளாக மாற்றியவை குடியேற்றம், தேசிய இறையாண்மை மற்றும் பிரிட்டிஷ் அடையாளம்.

    பல ஆண்டுகளாக இந்தக் கருத்துக்கள் அரசியல் மேடைகளில் பேசப்பட்டாலும், அவற்றை பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாற்றியவர்களில் ஃபராஜுக்கு முக்கியமான இடமுண்டு.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை பலர் அரசியல் கனவாகவே கருதினர்.

    ஆனால் அந்தக் கனவு மக்களின் வாக்காக மாறியது.

    பிரெக்சிட் வாக்கெடுப்பின் பின்னணியில் ஃபராஜ் வகித்த பங்கு, பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் தனி அத்தியாயமாகவே இருக்கும்.

    பிரெக்சிட்டிற்குப் பிறகு அவரது அரசியல் முடிந்துவிடும் என்று பலரும் நினைத்தனர்.

    ஆனால் அரசியலில் வெற்றிடங்கள் நீண்ட காலம் காலியாக இருப்பதில்லை.

    மக்களின் புதிய அதிருப்திகளை உணர்ந்த ஃபராஜ், ரீபோர்ம் யூகே என்ற கட்சியை தேசிய அரசியலின் முக்கிய சக்தியாக மாற்றத் தொடங்கினார்.

    ரீபோர்ம் யூகேவின் பலம் என்ன ?

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் கவனித்த ஒரு விஷயம் உண்டு.

    மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புவதில்லை.

    ஆனால் அவர்கள் தாங்கள் கேட்கப்படவில்லை என்று உணரும்போது, மாற்றத்தை உருவாக்கும் சக்தியைத் தேடுகிறார்கள்.

    இன்று ரீபோர்ம்ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது இதுவே.

    வாழ்க்கைச் செலவு உயர்வு…

    வரி சுமைகள்…

    குடியேற்றம் தொடர்பான கவலைகள்…

    தேசிய சுகாதார சேவையின் நீண்ட காத்திருப்பு…

    அரசியல்வாதிகளின் மீது குறைந்து வரும் நம்பிக்கை…

    பிரிட்டனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பகுதி மக்களிடையே உருவாகிவரும் அச்சம்…

    இந்த அனைத்தையும் ஒரே அரசியல் மொழியாக மாற்ற முயற்சிக்கிறது Reform UK.

    அவர்கள் பேசும் மொழி மிகவும் நேரடியானது.

    அரசியல் அலங்காரச் சொற்கள் குறைவு.

    அதனால்தான் பாரம்பரிய அரசியலில் விரக்தியடைந்த சில வாக்காளர்களை அவர்கள் ஈர்க்க முடிகிறது.

    2024 பொதுத்தேர்தலில் Clacton தொகுதியில் ஃபராஜ் 21,225 வாக்குகளைப் பெற்று, 46.2% வாக்கு பங்குடன் வெற்றி பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக கன்சர்வேடிவ் வேட்பாளர் ஜைல்ஸ் வாட்லிங்ஸ் 12,820 வாக்குகளைப் பெற்றார்.

    அது ஒரு தொகுதி வெற்றி மட்டுமல்ல.

    “ரீபோர்ம் யூகேஐ இனி புறக்கணிக்க முடியாது” என்ற அரசியல் செய்தியாகவும் அது அமைந்தது.

    ரீபோர்ம் யூகேவின் பலவீனம் என்ன ?

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் மற்றொரு உண்மையையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

    மக்களின் கோபத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது ஒரு விஷயம்.

    ஒரு நாட்டை நிர்வகிப்பது வேறு விஷயம்.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது கொள்கைகளை விமர்சிப்பது எளிது.

    ஆனால் ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு முடிவும் பொருளாதாரம், வெளிநாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், சமூக ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பாதிக்கும்.

    அங்கேயே எந்த புதிய அரசியல் இயக்கமும் தனது உண்மையான திறமையை நிரூபிக்க வேண்டும்.

    ரீபோர்ம் யூகே இன்னும் அந்தச் சோதனையை முழுமையாக எதிர்கொண்டதாக நான் கருதவில்லை.

    ஒரு அரசியல் கட்சியின் உண்மையான வலிமை, அது எவ்வளவு சத்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது என்பதில் மட்டும் இல்லை.

    அதிகாரம் கிடைத்தால் அந்த எதிர்ப்பை நடைமுறை அரசாக மாற்றும் திறன் அதற்கு இருக்கிறதா? என்பதில்தான் உள்ளது.

    £5 மில்லியன் விவகாரம்  ஃபராஜின் அரசியலைச் சூழ்ந்த புதிய கேள்வி

    இங்கேதான் நைஜல் ஃபராஜின் சமீபத்திய அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு திருப்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

    2024ஆம் ஆண்டு, ரீபோர்ம் யூகேக்கு நிதியுதவி செய்த கிரிப்டோ முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹாபோர்ன் என்பவரிடமிருந்து ஃபராஜ் £5 மில்லியன் பெறுமதியான தனிப்பட்ட பரிசைப் பெற்றார்.

    இது சாதாரண அரசியல் நன்கொடை விவகாரம் அல்ல.

    ஏனெனில், அந்தத் தொகை தொடர்பாக நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஃபராஜ் ஆரம்பத்தில், இந்தப் பணம் தனது வாழ்நாள் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகளுக்காக வழங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.

    பின்னர் அவர் அதனை Brexit-க்காக மேற்கொண்ட தனது அரசியல் முயற்சிகளுக்கான ஒரு வகையான “பரிசு” எனவும் விளக்கியுள்ளார்.

    இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    விசாரணை நடைபெறுவது என்பது ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டார் என்பதல்ல.

    ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு வழங்கப்பட்டது, அது ஏன் உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை, நாடாளுமன்ற விதிகளுக்கு அது உட்பட்டதா என்பவை நிச்சயமாக பொதுமக்கள் கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளாகும்.

    மேலும், இந்த விவகாரம் வெறும் அரசியல் வதந்தியாக இல்லை. நாடாளுமன்ற விதிமுறைகளை கண்காணிக்கும் அமைப்பின் விசாரணைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.

    இதன் காரணமாக ஃபராஜின் அரசியல் வாழ்க்கையில் ஒரு புதிய கேள்வி எழுந்தது:

    “அதிகார வர்க்கத்தைஎதிர்த்து பேசும் ஒருவர், தன்னுடைய அரசியல் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மையை எவ்வாறு நிரூபிக்கிறார்?”

    அதுதான் இன்றைய பிரச்சினையின் அரசியல் மையம்.

    பதவி விலகலும் கிளாக்டன் இடைத்தேர்தலும்

    இந்த நிதி விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தீவிரமடைந்த நிலையில், 2026 ஜூலை 7 அன்று ஃபராஜ் கிளாக்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனால் அவர் அரசியலை விட்டு விலகவில்லை.

    மாறாக, தனது பதவி விலகலின் மூலம் மீண்டும் அதே தொகுதியில் இடைத்தேர்தலை உருவாக்கி, அதில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

    அவர் இதனை “மக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையிலான தேர்தல்” என்ற அரசியல் சவாலாக முன்வைத்தார்.

    அதாவது,

    “என்னைப் பற்றிய தீர்ப்பை நாடாளுமன்ற விசாரணைகள் வழங்க வேண்டாம்; கிளாக்டன் (Clacton) மக்கள் வழங்கட்டும்” என்பதே அவரது அரசியல் நிலைப்பாட்டின் சாரமாக இருந்தது.

    இது ஃபராஜின் அரசியல் பாணியை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

    ஒரு பிரச்சினையை அவர் சட்டரீதியான அல்லது நாடாளுமன்ற நடைமுறை விவகாரமாக மட்டும் பார்க்கவில்லை.

    அதை உடனடியாக “மக்கள் எதிர் அதிகார வர்க்கம்” என்ற அரசியல் போராட்டமாக மாற்றுகிறார்.

    இதுதான் அவரது பலமும்.

    அதே நேரத்தில் இதுவே அவரது அரசியல் பலவீனமாகவும் மாறக்கூடும்.

    ஏனெனில், ஒவ்வொரு நிர்வாக அல்லது ஒழுங்குமுறை விசாரணையையும் “அதிகார வர்க்கத்தின் சதி” என்று மாற்றிவிட்டால், உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிப்பது பின்னுக்குத் தள்ளப்படுவதற்கான அபாயம் உள்ளது.

    ஆனால் நடந்தது என்ன?

    ஃபராஜ் எதிர்பார்த்திருந்தது ஒரு மிகப்பெரிய அரசியல் மோதல்.

    ரீபோர்ம் யூகே  ஒருபுறம்.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் போன்ற பாரம்பரிய அரசியல் சக்திகள் மறுபுறம்.

    ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்டது.

    முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தன.

    லேபர், கன்சர்வேடிவ், லிபரல் டெமகிரட்ஸ், கிறீன்ஸ் ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ரீஸ்டோர் பிரிட்டன் கட்சியும் போட்டியிடவில்லை.

    இதன் அரசியல் காரணம் தெளிவானது.

    அந்தக் கட்சிகளின் பார்வையில், ஃபராஜ் தனது சொந்த நிதி மற்றும் நாடாளுமன்ற விசாரணைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த இடைத்தேர்தலை உருவாக்கியிருந்தார்.

    கன்சர்வேடிவ் தலைவர் கெமி பேடனொக் இதனை “போலி இடைத்தேர்தல்” என்றும் “தன்முனைப்பு போட்டி” என்றும் விமர்சித்தார்.

    லேபர் இதனை ஒரு “சர்க்கஸ்” எனக் கருதி போட்டியிடவில்லை.

    லிபரல் டெமகிரட்ஸ் தலைவர் எட் டேவி, இதனை ஃபராஜின் “அகங்கார அரசியல்” என்று விமர்சித்ததுடன், அதற்கு அரசியல் ஆக்சிஜன் வழங்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

    கிறீன்ஸ் கட்சியும் இறுதியில் போட்டியிடாமல் விலகியது.

    இதில் ஒரு சுவாரசியமான அரசியல் முரண்பாடு உள்ளது.

    ஃபராஜ் விரும்பியது:

    “அரசியல் வர்க்கத்திற்கெதிரான மக்கள் போராட்டம்”

    முக்கியக் கட்சிகள் உருவாக்கியது:

    “ஃப்ராஜுக்கெதிரான ஃப்ராஜின் போராட்டம்”

    அதாவது, அவர் எதிர்பார்த்த பெரிய அரசியல் போராட்ட மேடை உருவாகவில்லை.

    34 வேட்பாளர்கள்  ஆனால் உண்மையான போட்டியாளர் யார்?

    முக்கியக் கட்சிகள் விலகியதால் கிளாக்டன் தேர்தல் வெறுமையாகிவிடவில்லை.

    மாறாக, வரலாற்றில் மிகவும் விசித்திரமான தேர்தல்களில் ஒன்றாக மாறியது.

    மொத்தம் 34 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இது ஒரு பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான மிகப்பெரிய வேட்பாளர் எண்ணிக்கையாக அமைந்தது.

    அவர்களில் மிகவும் கவனத்தை ஈர்த்தவர் நகைச்சுவை அரசியல்வாதியான கவுண்ட் பின்வேஸ்(Count Binface).

    இது ஒரு சாதாரண தேர்தல் களமாக இல்லாமல், பிரிட்டிஷ் அரசியலின் மீதான மக்களின் விரக்தி, நகைச்சுவை, எதிர்ப்பு மற்றும் அரசியல் நாடகத்தின் கலவையாக மாறியது.

    ஆனால் இதன் அடிப்படை உண்மை ஒன்றுதான்:

    பெரிய கட்சிகள் இல்லாத தேர்தல், உண்மையான தேசிய அரசியல் ஆதரவை அளக்கும் வழக்கமான அளவுகோலாக இருக்க முடியாது.

    ஃபராஜ் மீண்டும் வென்றார் – ஆனால் அதன் அர்த்தம் என்ன?

    2026 ஆகஸ்ட் 13 அன்று நடந்த கிளாக்டன் இடைத்தேர்தலில் நைஜல் ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 22,239 வாக்குகளையும், சுமார் 62.8% வாக்குகளையும் பெற்றார்.

    அவருக்கு அடுத்ததாக இருந்த கவுண்ட் பின்வேஸ் (Count Binface) சுமார் 9,455 வாக்குகளைப் பெற்று 26.7% பெற்றார். வெற்றி மிகப் பெரியது.

    ஆனால் இங்கே ஒரு அரசியல் நுணுக்கத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

    2024 பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் வாக்குகள் சேர்ந்து அந்தத் தொகுதியில் மிகப் பெரிய வாக்குத் தளத்தை வலதுசாரிக் கட்சிகளுக்கு உருவாக்கியிருந்தன.

    2026 இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவே இல்லை.

    எனவே, இந்த வெற்றியை “பிரிட்டன் முழுவதும் ஃபராஜுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு” என்று எடுத்துக்கொள்வது அரசியல் ரீதியாக மிகைப்படுத்தலாகிவிடும்.

    இது முதன்மையாக கிளாக்டன் தொகுதியில் ஃபராஜின் தனிப்பட்ட அரசியல் ஆதரவையும் ரீபோர்ம் யூகேயின் உள்ளூர் வலிமையையும் காட்டுகிறது.

    ஆனால் அது அவருக்கு ஒரு முக்கியமான அரசியல் மூலதனத்தை மீண்டும் வழங்கியுள்ளது:

    நாடாளுமன்ற இருக்கை.

    ஆனால் £5 மில்லியன் கேள்வி முடிந்துவிட்டதா?

    இல்லை.

    இதுதான் இந்த இடைத்தேர்தலின் மிக முக்கியமான அரசியல் உண்மை.

    ஃபராஜ் மீண்டும் வெற்றி பெற்றாலும், பாராளுமன்ற விதிமுறைகளை மீறிய விசாரணை முடிவடைந்துவிடவில்லை.

    மாறாக, அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளதால் அந்த விவகாரம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில் விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் போன்ற சாத்தியக்கூறுகள் உருவாகலாம்.

    இதனால் Clacton மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு விஷயத்தைச் சொல்கிறது:

    “நாங்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.”

    ஆனால் அது மற்றொரு விஷயத்தைச் சொல்லவில்லை:

    “நாடாளுமன்ற விதிமுறைகள் தொடர்பான விசாரணை தேவையில்லை.”

    இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாது.

    ஜனநாயகத்தில் மக்கள் வாக்கு ஒரு அரசியல் ஆணையை வழங்குகிறது.

    ஆனால் சட்டமும் நாடாளுமன்ற விதிகளும் தங்களுடைய நடைமுறையில் தொடர்கின்றன.

    புலம்பெயர் தமிழனாக என் பார்வை

    இந்த இடத்தில் நான் ஒரு தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, குடியேற்றம் குறித்து பேசப்பட்டது.

    இன்று குடியேற்றமே தேர்தல்களின் மையக் கேள்விகளில் ஒன்றாக மாறியுள்ளது.

    அப்போது விவாதம் வேலை வாய்ப்பைப் பற்றியது.

    இன்று விவாதம் தேசிய அடையாளத்தையும் எல்லைக் கட்டுப்பாட்டையும் பற்றியது.

    அப்போது,

    “எத்தனை பேர் வருகிறார்கள்?”

    என்ற கேள்வி இருந்தது.

    இன்று,

    “பிரிட்டன் எப்படிப்பட்ட நாடாக இருக்க வேண்டும்?” என்ற கேள்வி எழுகிறது.

    இந்த மாற்றத்தை நான் ஐம்பத்தொரு ஆண்டுகளாக நேரில் பார்த்திருக்கிறேன்.

    ஒரு குடியேறிய தமிழனாக, இந்த நாட்டின் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், வாய்ப்புகளையும் மதிக்கிறேன்.

    அதே நேரத்தில், இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களின் உணர்வுகளையும் நான் புரிந்துகொள்கிறேன்.

    ஒரு நாட்டிற்கு மனிதநேயமும் தேவை.

    அதே நாட்டிற்கு ஒழுங்கும் தேவை.

    ஒரு நாட்டிற்கு அகதிகளின் துயரத்தைப் புரிந்துகொள்ளும் இதயமும் தேவை.

    அதே நேரத்தில், அதன் குடியேற்றக் கொள்கைக்கு தெளிவான விதிகளும் தேவை.

    இந்த இரண்டிற்கும் இடையே சமநிலையை உருவாக்குவது எந்த அரசுக்கும் மிகவும் கடினமான அரசியல் பணியாகும்.

    ஆனால் அதைவிட முக்கியமானது இன்னொன்று.

    குடியேற்றத்தைப் பற்றிப் பேசும்போது குடியேறியவர்களைப் பற்றிய வெறுப்பையும், குடியேற்றம் குறித்து கவலைப்படுபவர்களைப் பற்றிய அவமதிப்பையும் ஒரே நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

    அரசியல் விவாதம் மனிதர்களை எதிரிகளாக மாற்றாமல், பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடும் வழியாக இருக்க வேண்டும்.

    கன்சர்வேடிவ் கட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை

    எனது பார்வையில் ரீபோர்ம் யூகேயின் மிகப்பெரிய வெற்றி அவர்கள் பெற்றிருக்கும் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை மட்டும் அல்ல.

    கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் மொழியையே மாற்றியிருப்பதுதான்.

    ஒரு காலத்தில் வலதுசாரி வாக்காளர்களின் இயல்பான தேர்வாக இருந்த கன்சர்வேடிவ் கட்சி, இன்று தனது பாரம்பரிய ஆதரவாளர்களில் ஒரு பகுதியை ரீபோர்ம் யாகூ நோக்கி இழந்துள்ளது.

    இது சாதாரண வாக்கு மாற்றமல்ல.

    இது அரசியல் நம்பிக்கையின் இடமாற்றம்.

    கிளாக்டன் இதற்கு ஒரு குறியீடு.

    ஆனால் கன்சர்வேடிவ் கட்சிக்கு இங்கே இன்னொரு கேள்வியும் உள்ளது:

    ரீபோர்ம் யூகேவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமா?

    அல்லது ரீபோர்ம் யூகே எடுத்துக்காட்டும் மக்களின் உண்மையான கவலைகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா?**

    இரண்டாவது வழியே நீண்ட காலத்தில் பயனுள்ளதாக இருக்கலாம்.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சோதனை

    ரீபோர்ம் யூகேவின் வளர்ச்சியை கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.

    லேபர் கட்சிக்கும் இது ஒரு சவால்.

    ஏனெனில் குடியேற்றம், வாழ்க்கைச் செலவு, என்.எச்.எஸ், வீடமைப்பு, வேலைவாய்ப்பு, பொது சேவைகள் போன்ற கேள்விகள் வலதுசாரிகளின் சொந்த பிரச்சினைகள் அல்ல.

    அவை சாதாரண மக்களின் வாழ்க்கைக் கேள்விகள்.

    Labour அவற்றுக்கு நம்பகமான தீர்வுகளை வழங்கத் தவறினால், அந்த இடத்தை ரீபோர்ம் போன்ற இயக்கங்கள் நிரப்பும்.

    அதேவேளை,ரீபோர்மை எதிர்ப்பதற்காக அதன் கடுமையான மொழியை அப்படியே ஏற்றுக்கொள்வதும் லேபருக்கு தீர்வாக இருக்காது.

    மக்களின் அச்சத்தை மறுப்பதற்குப் பதிலாக, அந்த அச்சம் ஏன் உருவானது என்பதைப் புரிந்துகொள்வதே அரசியலின் முதிர்ச்சி.

    லிபரல் டெமகிரட்ஸ் மற்றும் புதிய அரசியல் இடைவெளி

    Liberal Democrats-க்கு இங்கு வேறொரு வாய்ப்பு உள்ளது.

    கன்சர்வேடிவ் மற்றும் ரீபோர்ம் இடையிலான வலதுசாரி போட்டி தீவிரமடையும் போது, மிதவாத மற்றும் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வாக்காளர்களுக்கு ஒரு அரசியல் இடம் உருவாகிறது.

    ஆனால் அந்த இடத்தை லிபரல் டெமகிரட்ஸ் எவ்வளவு திறமையாக நிரப்புகின்றனர் என்பதுதான் கேள்வி.

    கிளாக்டன் இடைத்தேர்தலைப் புறக்கணித்தது அவர்களுக்கு தேசிய அளவில் ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டைத் தந்திருக்கலாம்.

    ஆனால் எதிர்காலத்தில் ரீபோர்ம் யூகே வளர்ந்துகொண்டே சென்றால், அதன் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அரசியல் தளத்தை யார் உருவாக்கப் போகிறார்கள்?

    இதுவும் ஒரு முக்கியமான கேள்வி.

    ஃபராஜ் – ஒரு தலைவர் மட்டுமா? அல்லது ஒரு அரசியல் அறிகுறியா?

    நைஜல் ஃபராஜை ஒருவர் விரும்பலாம்.

    வெறுக்கலாம்.

    அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்ளலாம்.

    மறுக்கலாம்.

    ஆனால் அவரை அரசியல் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பிரிட்டனின் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

    அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல.

    அவர் பிரிட்டிஷ் சமூகத்தின் ஒரு பகுதியின் மனநிலையை வெளிப்படுத்தும் அரசியல் நிகழ்வு.

    அந்த மனநிலை ஏன் உருவானது என்பதைக் கவனிப்பது முக்கியம்.

    அதை வெறுமனே “வலதுசாரி கோபம்” என்று நிராகரித்துவிட்டால், அதன் பின்னால் இருக்கும் சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

    அதே நேரத்தில், அந்தக் கோபத்தை அரசியல் அதிகாரமாக மாற்றும் ஒவ்வொரு முயற்சியையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

    அதுதான் ஜனநாயகத்தின் சமநிலை.

    கிளாக்டன் நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்

    இந்த இடைத்தேர்தல் எனக்கு ஒரு முக்கியமான அரசியல் உண்மையை நினைவூட்டுகிறது.

    மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது, அவருடைய ஒவ்வொரு செயலும் சரி என்று தீர்ப்பு வழங்குவதாக அர்த்தமல்ல.

    அதேபோல்,

    ஒரு அரசியல்வாதி மீது விசாரணை நடைபெறுவது, அவர் அரசியல் ரீதியாக மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டார் என்பதையும் அர்த்தப்படுத்தாது.

    கிளாக்டன் மக்கள் ஃபராஜை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.

    இப்போது அவரது பொறுப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

    அவர் அதிகார வர்க்கத்தை எதிர்ப்பதாகச் சொன்னால், அதனை விமர்சிப்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நேர்மை ஆகியவற்றிலும் தன்னை நிரூபிக்க வேண்டும்.

    ஏனெனில் அதிகாரத்தை விமர்சிப்பது எளிது.

    அதிகாரத்தின் முன் நின்று தன்னைத் தானே சோதனைக்கு உட்படுத்திக்கொள்வதுதான் கடினம்.

    முடிவாக…

    நைஜல் ஃபராஜின் அரசியல் பயணம் இன்னும் முடிவடையவில்லை.

    மாறாக, அது இன்னொரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

    பிரெக்ஸிட் அவரை வரலாற்றில் பதித்தது.

    ரீபோர்ம் யூகே அவரை மீண்டும் தேசிய அரசியலின் மையத்திற்குக் கொண்டுவந்தது.

    கிளாக்டன் அவருக்கு நாடாளுமன்ற இருக்கையைத் தந்தது.

    ஆனால் £5 மில்லியன் விவகாரம் அவருக்கு ஒரு புதிய சோதனையை உருவாக்கியுள்ளது.

    அந்தச் சோதனை வெறும் ஃபராஜுக்கானது அல்ல.

    அது பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கான சோதனையும் கூட.

    ஒரு அரசியல்வாதியின் மக்கள் ஆதரவும், அவரது அரசியல் பொறுப்பும் இரண்டும் ஒன்றாக இருக்க முடியுமா?

    மக்களின் கோபத்தை அரசியல் மாற்றமாக மாற்ற முடியும்; ஆனால் அந்த மாற்றத்தை நல்லாட்சியாக மாற்ற முடியுமா?

    ரீபோர்ம் யூகே எதிர்ப்பின் சக்தியாக மட்டுமே தொடருமா, அல்லது ஒருநாள் ஆட்சிக்குத் தயாரான மாற்று அரசாக உருவெடுக்குமா?

    கன்சர்வேடிவ் கட்சி தனது பாரம்பரிய வாக்குத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்புமா?

    லேபர் மக்களின் பொருளாதார மற்றும் சமூக அச்சங்களுக்கு நம்பகமான பதிலை வழங்குமா?

    லிபரல் டெமகிரட்ஸ் இந்த புதிய அரசியல் இடைவெளியை நிரப்புவார்களா?

    இவைதான் இனி பிரிட்டிஷ் அரசியலின் முக்கியக் கேள்விகள்.

    நான் இந்த நாட்டில் ஐம்பத்தொரு ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு புலம்பெயர் தமிழனாக இந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, எனக்கு தோன்றுவது ஒன்றுதான்:

    பிரிட்டன் மாறிக்கொண்டிருக்கிறது.

    ஆனால் மாற்றத்தின் திசையை இன்னும் யாரும் முழுமையாகத் தீர்மானித்துவிடவில்லை.

    அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளலாம்.

    தலைவர்கள் வரலாம்.

    போகலாம்.

    வாக்காளர்கள் கட்சிகளை மாற்றலாம்.

    ஆனால் இறுதியில் பிரிட்டனின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, அதன் மக்களின் மனநிலையும் அவர்கள் செலுத்தும் வாக்கும்தான்.

    அந்த மனநிலை எந்தத் திசையில் நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே, பிரிட்டிஷ் அரசியலின் நாளைய முகத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்.

    நைஜல் ஃபராஜ் அந்த மாற்றத்தின் காரணமா?

    அல்லது ஏற்கனவே மாறிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் சமூகத்தின் வெளிப்பாடா?

    இதற்கான பதில் இன்னும் வரலாற்றின் கைகளில்தான் உள்ளது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    (தொடரும் – பகுதி 4: கன்சர்வேடிவ் கட்சியின் வீழ்ச்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் எதிர்காலம், மற்றும் பிரிட்டிஷ் அரசியலின் புதிய சமநிலை.)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    அன்பினியோரே!

    அன்பு வணக்கம்.

    நீங்கள் நலமா ?

    நான் நலமேயுள்ளேன்.

    எனது இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் எனும் இந்த தொடரின் இனிவரும் ஐந்து மடல்களும் இன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைகளை ஐந்து பகுதிகளாக பிரித்து அலசும் மடல்களாக வரும்.

    வாரமொரு பகுதியாக வரைய இருக்கிறேன்.

    அன்பானவர்களே ! நான் கவிஞனுமில்லை, கலைஞனுமில்லை, ரசிகனுமில்லை, பெரிய எழுத்தாளனுமில்லை.

    இங்கிலாந்தில் கடந்த 51 ஆண்டுகளாக வசிக்கும் ஒரு 69 வயதான சாதாரண புலம்பெயர் தமிழன் என்பதே எனது தகுதி.

    ஈழம் எனது அடையாளம், தமிழ் எனது முகவரி.

    இன்றைய. அவசர உலகிலே அரசியல் மாற்றங்கள் இமைக்கும் பொழுதினில் நடந்தேறுகின்றன.

    நான் இப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கும் போதே அதை மறுதலிக்கும் நிகழ்வுகள்.

    அப்படி நான் பதிவிடுவதற்கு மாக எதுவும் நடப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல .

    அதற்காக முன் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறேன்

    மாற்றத்தின் வாசலில் நிற்கும் பிரிட்டன்

    51 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழும் ஒரு புலம்பெயர் தமிழனின் அரசியல் சாட்சியம்

    பகுதி – 1

    ஐம்பத்தொரு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெறும் கால அளவல்ல.

    அது ஒரு நாட்டின் அரசியல் பரிணாமத்தை கண்முன்னே பார்த்து பதிவு செய்யும் நீண்ட பயணம்.

    நான் இங்கிலாந்தில் காலடி எடுத்து வைத்த காலத்தில், இந்நாடு இன்னும் தனது பேரரசின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தது.

    தொழிற்சாலைகளின் புகை வானத்தை மூடியிருந்தது.

    தொழிலாளர் சங்கங்கள் அரசியலில் வலுவான தாக்கம் செலுத்தின. குடியேற்றம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்று காணும் அளவுக்கு சமூக ஊடகங்கள் அரசியலை வடிவமைக்கவில்லை.

    இந்த ஐம்பத்தொரு ஆண்டுகளில் நான் பல பிரதமர்களைக் கண்டிருக்கிறேன்.

    பல தேர்தல்களை நேரில் அனுபவித்திருக்கிறேன்.

    மக்களின் மனநிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் கவனித்திருக்கிறேன்.

    அரசியல் என்பது வெறும் கட்சிகள் மோதும் களம் அல்ல.

    அது மக்களின் நம்பிக்கைகளும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் சந்திக்கும் இடம் என்பதை இந்த நாடு எனக்குக் கற்றுக் கொடுத்தது.

    ஒரு ஜனநாயகத்தின் வலிமை அதன் அரசாங்கத்தில் மட்டும் இல்லை.

    ஆட்சியை மாற்றும் உரிமையை மக்கள் அமைதியாகப் பயன்படுத்தும் பண்பாட்டில்தான் இருக்கிறது.

    அந்த வகையில் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்கும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

    கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துப் பார்த்தாலே பிரிட்டிஷ் அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் ஆழமானவை.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரெக்சிட், அதன் பொருளாதார விளைவுகள், வாழ்க்கைச் செலவின் உயர்வு, தேசிய சுகாதார சேவையின் சவால்கள், குடியேற்றக் கொள்கைகள், உலக அரசியல் மாற்றங்கள் இவை அனைத்தும் மக்களின் அரசியல் சிந்தனையையே மாற்றியுள்ளன.

    ஒரு காலத்தில் இரண்டு பெரிய கட்சிகளான லேபரும் கன்சர்வேடிவும் மாறி மாறி ஆட்சி செய்த அரசியல் அமைப்பு, இன்று பல திசைகளில் இழுக்கப்படுகிறது.

    வலதுசாரி தேசிய உணர்வை முன்வைக்கும் சக்திகள் வலுவடைகின்றன.

    மைய அரசியலை வலியுறுத்துபவர்கள் புதிய கூட்டணிகளைத் தேடுகின்றனர்.

    இளைஞர்களின் வாக்கு முறையும், வயதான வாக்காளர்களின் முன்னுரிமைகளும் மாறுபடுகின்றன.

    இந்த மாற்றங்களின் மையத்தில் இன்று ஒரு புதிய அரசியல் சமநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

    இன்றைய பிரதமராக உள்ள ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் இயக்கத்தின் மரபை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி.

    அவருடைய தலைமையால் லேபர் கட்சி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில், நைஜல் ஃபராஜ் தலைமையிலான ரீபோர்ம் கட்சி, பாரம்பரிய வலதுசாரி அரசியலை முற்றிலும் மாற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

    இதனால் கன்சர்வேடிவ் கட்சி தனது அரசியல் அடையாளத்தை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இன்னும் மத்திய அரசியலின் குரலாக இருக்க முயற்சித்தாலும், இரு துருவங்களுக்கிடையில் தனது இடத்தை உறுதிப்படுத்த போராடுகிறது.

    இவை வெறும் கட்சிகளின் கதைகள் அல்ல.

    இவை பிரிட்டிஷ் சமூகத்தின் உள்ளார்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்புகள்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரச்சாரங்கள் தெரு மேடைகளிலும், செய்தித்தாள்களிலும் நடந்தன.

    இன்று அவை கைப்பேசியின் திரையில் நடக்கின்றன.

    ஒருகாலத்தில் குடும்ப மரபே வாக்கை நிர்ணயித்தது.

    இன்று ஒரு வைரல் காணொளி கூட வாக்காளரின் மனதை மாற்றுகிறது.

    இந்த மாற்றத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில், அரசியல் என்பது நிலையாக இருக்கும் கட்டிடம் அல்ல காலத்தோடு வடிவம் மாறும் உயிருள்ள அமைப்பு என்பதையே நான் உணர்ந்திருக்கிறேன்.

    இந்தக் கட்டுரையில் நான் எந்தக் கட்சியையும் புகழவோ, குறைக்கவோ முயலவில்லை.

    ஒரு பாமர மனிதனின்அரசியல் ஆய்வாகவும், ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், வெற்றியையும் சவால்களையும் பார்த்து வாழ்ந்த புலம்பெயர் தமிழனாகவும், நான் கண்ட உண்மைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு நாட்டின் அரசியல் அதன் நாடாளுமன்றத்தில் மட்டும் எழுதப்படுவதில்லை.

    அது பேருந்து நிறுத்தங்களில் பேசப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் விவாதிக்கப்படுகிறது.

    பல்கலைக்கழகங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

    குடியேற்றக் குடும்பங்களின் உணவுமேசைகளில் அனுபவமாகப் பகிரப்படுகிறது.

    அந்த உயிருள்ள அரசியலின் சாட்சியாக இந்த ஆய்வை நான் பதிவு செய்கிறேன்.

    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    03.08.2026

    அடுத்த வாரம் ………

    (தொடரும் – பகுதி 2: “ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை: அரசியலமைப்பும் அரசியல் பயணமும்”)

    Share
  • கழுவேற்றம்!

    பண்டைய தமிழர்களின் வாழ்வியலின் எச்சமாக வாழும் சாட்சியாக, தமிழகத்தில் இருக்கும் கொலைக்கருவியான கழுமரங்களில் காளிங்கராயன் கால்வாய் அருகில் அமைந்துள்ள காத்தவராயன்  கோவிலில் உள்ள கழுமரமும் ஒன்று. மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களை “கழுவில் ஏற்றுதல்” என்னும் கொடிய வழக்கம் பண்டைய காலத்தில் பல இனங்களில் இருந்தது. மரத்தால் செய்யப்பட்டிருப்பதனால்தான் அதனைக் ‘கழுமரம்’ என்று குறிப்பிட்டனர். இரும்பால் ஆன கழுவும் பழக்கத்தில் இருந்துள்ளது. அதனை ‘வெங்கழு’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

    கழுமரம் குறித்து, வரலாற்றில் நெடிய செய்திகளும் கோவில் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் உள்ளன.  கொங்குநாட்டில் ஈரோடு நகர்  காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் வளையல்கார தெருவில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் பனை மரத்தால் ஆன “கழுமரம்” உள்ளது . இக்கழுமரத்தை இங்குள்ள மக்கள்  “காத்தவராயன்” என்ற பெயரில் வழிபட்டுவருகின்றனர். ஒரு பீடத்தில் உள்ள அந்த கழுமரம் பனைமரத்தால் ஆனது. ஆறடிக்கும் குறைவான உயரம். பனஞ்செதில்கள் தேய்ந்து போயிருக்கின்றன. சிலுவை போன்ற வடிவில் குறுக்கு சட்டம் போடப்பட்ட அந்த கழுமரத்தில் இரண்டு இரும்பு சங்கிலிகள் இணைக்கபட்டிருக்கின்றன. கழுமரத்தை இப்போது காத்தவராயன் என்று வணங்குகிறார்கள். சுமார் 800 வருடங்களுக்கு முன்பாக உள்ள கழுமரம் அது என்கிறார்கள். கொலைக்கருவிகள் கடவுளாவது உலகெங்கும் நடைபெற்று வரும் தொடர் நிகழ்வு. கழுமரமும் அப்படித்தான் கடவுளாகியிருக்கிறது. இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள ‘அய்யனாரப்பன் கோவிலில்’ உள்ளது. இதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வெங்கழுவை காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம். தமிழகத்தில் இருக்கும் வெங்கழு இது ஒன்றுதான் எனக் கருதப்படுகிறது.

    கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும் செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி பல கதைகள் உள்ளன.

    கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘மூன்றாம் வ்லாட் ட்ராகுலா’ என்னும் ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசர் ஆவார். இவருக்கு ‘கழுவேற்றும் வ்லாட்’ (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு. இது போன்ற தண்டனை முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கிறது. இதை Impalement  என்று சொல்வார்கள். கவுண்ட் விளாட் நிறைய ஆட்களை கழுவேற்றியதால் அவர் விளாட் தி இம்பேளர் (Vlad the Impaler ) என்று அழைக்கபட்டார். அவர் தான் பின்னாளில் டிராகுலாவாக உருமாறினார் என்ற கதைகளும் உள்ளன.

    திருஞான சம்பந்தர் அறையணிநல்லூர் ஈசவசுனை வந்த போது, சமணர்கள் கருவறைக்கு முன்னே பாறங்கல்லை வைத்து வழியடைத்தார்கள். வாயிலையும் மூடி அடைத்தார்கள். திருஞான சம்பந்தர் சிவன நினைந்து பாடிய பின், வாயில் திறந்தது. பாறாங்கல் விலகி வழிவிட்டது. அறையணிநாதரை வழங்கி வழிபட்டார். இந்த விவரம் அறிந்த அரசர் சமணர்களை கழுவேற்றச் செய்தார் என்பார்கள். கழுமரம் மணலூர் பேட்டை சாலையில் திருக்கோவிலூரில் இருந்து 8.கி.மீ தூரத்தில் உள்ளது. கழுவன் குளம் கிராமத்திலும், விழுப்புரம் சாலை 1கி.,மீ தொலைவில் உள்ள அங்குதான் இந்நிகழ்ச்சி நடந்ததாகச் சொல்கிறார்கள்.

    கழுவேற்றம் நடந்ததா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்தாலும் இது தொடர்பான ஓவியங்கள் சில கோவில்களில் காணப்படுகின்றன. சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகுமாம்.

    தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. கழுவேற்றம் அரசை எதிப்பவர்களுக்கும், கள்ளர்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள் .

    நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடக்கிறது. மக்களுக்காக போராடிய வீரர்கள் கழுவேற்றப்பட்டால், அவர்களின் உயிர், அந்தக் கழுமரங்களில் உறைந்து, தெய்வத்தன்மை அடைந்து விடும் என, மக்கள் நம்பினர். அதனால், வீரர்களின் கழுமரங்களை, காலங்காலமாக வழிபட்டு வருகின்றனர்.

    பொங்கலுடன் ஆட்டுக் குறுதியை கலந்து, உருண்டையாக உருட்டி, புது மண்சட்டியில் இட்டு, அதிகாலையில் கருடனுக்குப் படைக்கின்றனர். இது கழுவேற்றப்பட்டோர், கழுகுக்கு இரையாக்கப்பட்டதன் நினைவேந்தலாக உள்ளது. கழுமரங்கள், மரம் மற்றும் இரும்பால் செய்யப்பட்டிருக்கலாம். அவை காலத்தால் அழிந்த பின், கல்லால் ஆன கழுமரங்கள் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு செய்த கழுமரங்களில், உயிர்விட்டவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    களவு புரியும் போலித் துறவிகளைக் கழுவேற்றுவதை,

    “கத்தித் திரிவர் கழுவடி நாய்போல்

    கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்”

    என்கிறார்  திருமூலர்.

    (திருமந்திரம் பாடல் எண் : 1655)

    தமிழகத்தில் மட்டுமின்றி, தொன்மையான கிரேக்க, உரோமானிய  நாகரிகங்களிலும் தொன்று தொட்டு இவ்வழமைகள் இருந்திருக்கலாம்.

    ‘வாதனையின் கழுமரம்’ என்ற சொற்றொடர், இயேசுவுக்குத் தண்டனை அளிக்கப்பட்ட பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கிரேக்க இலக்கியங்களில், இசுடவரசு என்ற வார்த்தையின் பயன்பாடு குறித்து அறிய முற்பட்டால், அது, குறுக்குச் சட்டம் ஏதும் இல்லாததொரு செங்குத்தான  கம்பம் என்ற பொருளில் வருவதை அறியலாம். இயேசுவை ஆணியால் அறைவதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவியைக் குறிப்பதற்கு அப்போசுதலர்களான பேதுருவும் பவுலும் சீலோன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்; இது, எவ்விதக் குறுக்குச் சட்டமும் இல்லாத ஒரே செங்குத்தான கம்பம் என்பதைக் காட்டுகிறது.(அப்போசுதலர் 5:30; 10:39; 13:29; கலாத்தியர் 3:13; 1 பேதுரு 2:24) இலத்தீனத்தில் -கிருக்சு, கிரேக்கத்தில் இசுடவரசு  (மத்தேயு  27:40 – பைபிள்) .

    லூயிசு மற்றும் சார்ட் என்பவர்களுடைய இலத்தீன் அகராதி கிருக்சு என்ற வார்த்தைக்கு குற்றவாளிகள் அறையப்படுவதற்கோ தொங்கவிடப்படுவதற்கோ பயன்படுத்தப்படும் ஒரு மரத்தைக் குறிக்கிறது.

    நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் தனது வெப்புநோய் தீர்த்த திருஞான சம்பந்தரின் சைவ சமயம் தழுவிட, 8000 சமணர்களைக் கழுவேற்றியதாகப் பெரியபுராணம் கூறுகிறது.

    “மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி

    துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இச்சமணர் தாங்கள்

    முன்னமே பிள்ளையார் பால் அனுசி தம்முற்றச் செய்தார்

    கொல்நுனைக் கழுவில் ஏற்ற முறை செய்க என்றுகூற”

     

    “வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்

    ஆதம் இல்லி அமணொடு தேரரை

    வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?”

    என்று சம்பந்தர் தனது மதுரைப் பாடல்களில் கூறுகிறார்.

    சைவம், சமணம், வைணவம்,கிறித்துவம், இசுலாமியம், புத்தம் என  அனைத்து மதங்கள் கடந்து வந்த பாதையிலும் இது போன்ற கொடுந்தண்டனைகள் அதன் வழிநெடுக உள்ள இரத்தக் கரைகளே சாட்சிகளாய்ப் படிந்திருக்கின்றன என்பதே நிதர்சனம்.. ஆம்.குற்றங்களுக்கான இதுபோன்ற கொடுமையான தண்டனைகள் அனைத்துலகிலும் வரலாற்றுச் சான்றுகளாக நிற்கின்றன !

    முன் காலத்தில் பெருங்குற்றம் புரிந்தவர்களுக்கு,  கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், வாளினால் தலையைத் துண்டித்தல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், யானையால் மிதிக்கவிட்டுக் கொல்லுதல், வெட்டவெளியில் தூக்கில் இட்டு உடலை விலங்குகளுக்கு இரையாக்குதல், அல்லது  உயிருடன் விலங்கிற்கு இறையாக்குதல், உயிருடன் மண்ணிற்குள் புதைத்தல், நஞ்சிட்டுக் கொல்லுதல்,  தீயிட்டுக் கொளுத்துதல் என்று பல வகையில் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டன.

    மனித உரிமைகளைக் காக்கும்பொருட்டு உலக நாடுகள் அனைத்தும், குற்றத்தை இழைத்தவர் என்ற சந்தேகத்தின் பெயரிலோ அல்லது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதற்காகவோ, “எவரொருவரும் சித்தரவதைக்கோ அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற, கீழ்த்தரமான, சிறுமைப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கோ அல்லது தண்டனைகளுக்கோ உட்படுத்தப்படக் கூடாது” என்று  உலக மனித உரிமைப் பிரகடனம் (1948) 5ஆம் விதியாகக் கையெழுத்திட்டுள்ளன. இது பெரும்பாலும் நடைமுறையில் இருந்தாலும், எங்கோ ஒரு சில நாடுகளில் அவரவர்களின் வழமைக்கேற்ப தனிப்பட்ட சட்டங்கள்  அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்கு  முற்பட்ட இதுபோன்ற தண்டனை முறைகளையும் இன்றைக்கும்  நடைமுறைப்படுத்தி வருவது வருந்தத்தக்கது..

     

    Share
  • ஆதிகால தெய்வ வழிபாடு!

    தமிழ்க்கடவுளான முருகன் மலைத் தெய்வம் என்று போற்றப்படுபவன். ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் போற்றி படைக்கப்பட்டிருக்கலாம் என்பர்.

     


    வேலன் வெறியாடல், குன்றக்குரவை, வெறியாட்டு என்பன சிறப்பிடம் பெற்றன. இவ்விழாக்களின் போது ஆட்டைப் பலியிட்டு, முருகனுக்கு உகந்த பண்டங்களான தேன், திணைமாவு போன்றவற்றைப் படைத்து ஆடிப்பாடி வழிபட்டனர். இவற்றை மரபு சார் வழிபாட்டு முறைமைகள் எனக்கொள்ளலாம். ஆதி காலந்தொட்டு முருகன் என்பவன் மலை நிலத்துக்குரிய தெய்வமாகவும் தமிழ் கடவுளாகவும் வழிபடப்பட்டுள்ளான். அதே பண்புகளுடன் இன்றைய கலியுகத்திலும் சர்வதேசக் கடவுளாகத் தமிழ்க் கடவுளாக முருகன் திகழ்கின்றான்.

     கி.மு. 300 வாக்கில் எழுதப்பட்ட தொல்காப்பியம் முருகனைச் சேயோன் என அழைத்து, அவனைக் குறிஞ்சி நிலக் கடவுளாகச் சுட்டுகிறது. சேயோன் (சேய் = மகன்) மிக வலிமையான கொற்றவை எனும் தெய்வத்தின் மகனாகக் கருதப்பட்டு வருகிறான். முருகன் ஒரு குழுமத்தின் தலைவனாக இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டித் தெய்வத்தன்மைக்கு உயர்த்தப்பட்டு நாளடைவில் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கலாம். சமூக அடிப்படையில் மலையைத்
    தெய்வமாகவும் முருகனை மலைவாழ் இறையாகவும் வழிபட்டிருக்கலாம் என்றும் கருத முடிகின்றது. மக்களின் வாழ்வு முதன்முதற் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கருத்து.
    விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ; என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகின்றார்.

     ஆதிகால மனிதர் குன்று சார்ந்த குறிஞ்சிப் பகுதிகளில் வாழ்ந்த காலத்தில் முருகன் கடவுளாகப் படைக்கப்பட்டிருக்கலாம் என்பர். ’குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பது மக்களின் நம்பிக்கை. குறிஞ்சிப் பகுதிவாழ் குமரனே முருகன் என்பது மானுடவியலாளரின் ஆய்வாளர்களின் கருத்து. இதன் அடிப்படையில் இவனே தலைவனாய் இருந்து காப்பவன்!

     பன்னிருதோள்களும், பன்னிரு உயிர்கள் பதினெட்டுக் கரங்களும் பதினெட்டு மெய்கள். ஆறு முகங்களும் ஆறு இன எழுத்துகள். அவனது கூரிய வடிவேல் ஆயுத எழுத்து. ;முருகு; என்ற சொல்லில் ;மு; மெல்லினம் ;ரு; இடையினம் ;கு; வல்லினம் என்ற சுவையான தகவல்களையும் வழங்குகின்றனர் தமிழறிஞர்கள். இவனே தமிழ்க் கடவுள். முருகு என்பதன் பொருள் அழகு. அழகானவன் முருகன்!

     மயிலில் முருகன் ஏறியதற்கு கூறப்படும் ஒரு காரணம்: மவுரியர் என்பதன் பொருள் மயில். மவுரியர்களின் சின்னம், மயில். ஆக மவுரியர்கள் முருகனை மயில் மேல் ஏற்றியதில் வியப்பு இல்லை. மவுரியர்களுக்குப் பின் வந்த குசான மன்னர்களான குப்தர்கள் காலத்திலும் முருக வழிபாடு, வட இந்தியாவில் பிரதானமாக இருந்தது.

     கிபி 150ஆம் ஆண்டு காலகட்டத்தில் குசான மன்னன், குவிசகன் அச்சிட்ட தங்க நாணயத்தில், ;ஸ்கந்த கொமானோ பிசாகோ; (விசாகோ) என கந்தனும், வேலேந்திய விசாகனும் இரட்டைக்
    கடவுளராக நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. ஆக கந்தனின் ஒரு வடிவமே விசாகன் அல்லது தனித் தெய்வமாக வழிபடப்பட்டு பின்னாளில் கந்தனுடன் இணைந்த வடிவமாக விசாகனைக்
    கொள்ளலாம். குப்தர் அரசவைப் புலவரான காளிதாசனின், குமார சம்பவம், முருகனின் வரலாறை நூலாக எழுதி அவனுக்கு அழியாப் புகழ் தேடிக் கொடுத்தான். ஆக இவர்கள் காலத்திற்கு முந்தைய காலத்தின் வரலாறுகளையும் சேர்த்தே காவியம் படைத்திருப்பார்கள்
    என்பது தெளிவு.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 313

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 313

    சக்தி சக்திதாசன்

    அன்பான வல்லமை வாசகர்களே!

    சில மாதங்கள் இடைவேளையின் பின்னால் உங்களோடு இணைவதில் மகிழ்கிறேன்.

    இந்த சில மாதங்களுக்குள் உலகில் எண்ண முடியாத பல நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

    இங்கிலாந்தில் வாழும் எமக்கு எமது பிரதமர் மீது நடத்தப்படும் விமர்சனங்களும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுமே  இன்று எமது நாட்டின் பேசுபொருளாக இருக்கிறது.

    இந்த மடல் அவர்மீது ஒரு பார்வையை என் கோணத்தில் வீசுகின்றது.

    கியர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் பிரதமர்.

    கியர் ஸ்டார்மர் 1962ஆம் ஆண்டு பிறந்தார்.

    அவர் ஒரு வழக்கறிஞராக (barrister) தொழில் வாழ்க்கையை தொடங்கினார், பின்னர் அரசியலில் நுழைந்தார்.

    அவர் ரீகேட் கிராமர் பள்ளியில் படித்தார், பின்னர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

    தொழிலாளர் வர்க்கப் பின்னணியில் வளர்ந்த ஸ்டார்மர், தனது தந்தை ஒரு கருவி தயாரிக்கும் தொழிலாளியாகவும் தாயார் ஒரு செவிலியராகவும் இருந்ததாகக் கூறி வந்தார்.

    இந்த சாதாரண குடும்பப் பின்னணியை அவர் தனது அரசியல் அடையாளத்தின் மையமாக வைத்து வந்தார்.

    2008ஆம் ஆண்டு ஸ்டார்மர் இங்கிலாந்தின் பொது வழக்காடல் இயக்குனராகவும் (Director of Public Prosecutions) கிரீடன் வழக்காடல் சேவையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

    2013 வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

    இந்தப் பதவியில் அவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை கையாளும் முறையில் முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

    இப்பணி அவருக்கு தேசிய அளவில் பெரும் அங்கீகாரம் தேடித் தந்தது.

    2015ஆம் ஆண்டு லண்டனின் ஹோல்பர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார்.

    2016இல் பிரெக்சிட் நெருக்கடியின்போது அவர் நிழல் பிரெக்சிட் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    2020ஆம் ஆண்டு லேபர் கட்சியின் தலைவரானார்.

    அவர் தலைமையில் லேபர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சியின் நீண்ட கால ஆட்சிக்கு எதிராக கட்சியை கட்டமைத்தது.

    2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பிரதமரானார்.

    பிரதமராக பொறுப்பேற்றல்

    14 ஆண்டுகள் கன்சர்வேடிவ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஸ்டார்மர் பதவியில் அமர்ந்தார்.

    பொருளாதாரம், குற்றம், தேசிய சுகாதார சேவை (NHS), கல்வி, காலநிலை நெருக்கடி ஆகியவற்றில் நோக்கங்களை அறிவித்தார்.

    ஒரு நீதித்துறை நிபுணர் தலைமையிலான அரசு, நாட்டை மீண்டும் கால்மேல் நிறுத்தும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

    பொருளாதார நெருக்கடி

    ஸ்டார்மர் அரசின் மிகப் பெரிய சவால் பொருளாதாரம்.

    பிரதமர் வாழ்க்கைச் செலவைத் தனது முன்னுரிமையாக குறிப்பிட்டு, மக்களின் பைகளில் அதிக பணம் வர வழி செய்வதாக உறுதியளித்தார்.

    வேலை உரிமைகளில் மாற்றங்கள், மருந்துக் கட்டண உச்சவரம்பு, மூன்று தசாப்தங்களில் முதன்முறையாக ரயில் கட்டண உறைவு ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.

    ஆனால் இந்த வாக்குறுதிகள் வேகமாக நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் வளர்ந்தது.

    NHS சுகாதாரத் திட்டங்கள் மற்றும் நலன்புரி சீர்திருத்தம்

    NHS காத்திருப்பு பட்டியல்களை குறைப்பது தேர்தல் நம்பகத்தன்மைக்கான முக்கியமான போர்க்களமாக இருக்கிறது.

    மேலும் நலன்புரி சீர்திருத்த மசோதா மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    யுனிவர்சல் கிரெடிட் மற்றும் பர்சனல் இண்டிபென்டன்ஸ் பேமென்ட் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சித்த மசோதா, குறைபாடுடையோர் மற்றும் மனநல பாதிப்புள்ளவர்களுக்கான நலன்களை மட்டுப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது.

    கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இதற்கு எதிராக கிளர்ச்சி செய்ததால் அரசு பெரும் திருப்பங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

    கட்சிக்குள்ளும் அரசியல் நெருக்கடி

    2025 செப்டம்பரில் துணைப் பிரதமர் ஆஞ்சலா ரேனர் வரி சர்ச்சை காரணமாக பதவி விலகினார், இது ஸ்டார்மரின் தலைமைக்கு பெரும் அடியாக விவரிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பீட்டர் மேன்டெல்சன் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டு, அவரது நடத்தை விவகாரங்கள் காரணமாக நீக்கப்பட்டார்.

    இந்த மேன்டெல்சன் சர்ச்சை, தலைமை நிர்வாகி மோர்கன் மெக்ஸ்வீனி மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் டிம் அலன் ஆகியோரின் ராஜினாமாவிற்கு வழிவகுத்தது.

    வீழ்ச்சியடைந்த மக்கள் ஆதரவு

    ஐப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, ஸ்டார்மர் 1977 முதல் இதுவரையிலான பதிவுகளில் மிக மோசமான மக்கள் ஆதரவை கொண்ட பிரதமர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

    13 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி அடைந்தனர், 79 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்தனர்.

    தேர்தலுக்குப் பின் அவரது ஆதரவு +5% இலிருந்து −30% ஆக சரிந்தது; பின்னர் −46% வரை தொடர்ந்து வீழ்ந்தது.

    ரிஃபார்ம் யூகேவின் எழுச்சி

    நைஜல் ஃபாரேஜின் ரிஃபார்ம் யூகே கட்சி ஒரு ஆண்டுக்கும் மேலாக கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தில் நிற்கிறது.

    2026ஆம் ஆண்டின் முதல் பெரிய கணிப்பு, ரிஃபார்ம் யூகே 381 இடங்களுடன் பெரும்பான்மை பெறும் எனவும், லேபர் வெறும் 85 இடங்களுக்கு சரியும் எனவும் கணிக்கிறது.

    இது ஸ்டார்மரின் நிர்வாகத்திற்கு மிகப் பெரிய அரசியல் எச்சரிக்கை மணி.

    ஸ்டார்மர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.

    2018க்குப் பின் சீனாவிற்கு விஜயம் செய்த முதல் பிரிட்டிஷ் பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.

    வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

    பிரெக்சிட் வாக்கெடுப்பின் 10வது ஆண்டு நினைவாண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்குவது என்ற ஸ்டார்மரின் குறிக்கோளை மையமாக வைக்கும்.

    ஒற்றைச் சந்தை அல்லது சுங்கத் தொழில்முறையில் மீண்டும் இணைவதை நிராகரிக்கும் அதே வேளையில், ஈராஸ்மஸ் திட்டத்தில் மீண்டும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

    வரும் தேர்தல்களில் சோதனை

    மே மாத உள்ளூராட்சி தேர்தல்கள் லேபர் கட்சிக்கு கடினமான இரவாக மாறலாம் என அஞ்சப்படுகிறது.

    இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மூன்று இடங்களிலும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

    ஸ்டார்மர் மற்றும் அவரது குழு, சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன்கூட பயனுள்ள ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதில் சிரமப்பட்டுள்ளனர்.

    கியர் ஸ்டார்மர் ஒரு சட்டவல்லுனராக, நீதியின் குரலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.

    ஆனால் ஆட்சி என்பது சட்டமன்றக் கூடம் அல்ல என்பதை அவரது பிரதமர் பதவி உணர்த்துகிறது.

    இந்த நெருக்கடிகளை வெறுமனே ஸ்டார்மரின் தவறுகளில் மட்டும் திணிக்க முடியாது .

    இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்த பொருளாதார மந்தநிலை மற்றும் முக்கியப் பாரம்பரிய கட்சிகள் மீதான மக்கள் அவநம்பிக்கையின் விளைவும்கூட.

    2026ஆம் ஆண்டில் ஸ்டார்மர் தனது கட்சிக்கும் நாட்டிற்கும் தன்னைப் பின்பற்ற காரணங்களை வழங்க வேண்டியிருக்கிறது.

    அதற்கு வெறும் நேரம் மட்டும் போதாது ஒரு தெளிவான தொலைநோக்கு திட்டம் அவசியம்.

    இன்றைய அவரின் நிலை

    பீட்டர் மேன்டெல்சன் விவகாரம்  ஸ்டார்மரின் பிரதமர் பதவியை உலுக்கும் சர்ச்சை

    பீட்டர் மேன்டெல்சன் யார்?

    பீட்டர் மேன்டெல்சன் பிரிட்டனின் “நியூ லேபர்” இயக்கத்தின் சிற்பியாகக் கருதப்படுகிறார்.

    டோனி பிளேர் மற்றும் கோர்டன் பிரவுன் ஆட்சிகளில் மிக முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர்.

    இரண்டு முறை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ததன் பின்னரும், இங்கிலாந்தின் அரசியல் வட்டாரங்களில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராக விளங்கி வந்தார்.

    ஆனால் 2025-2026 காலகட்டத்தில் அவரது பெயர் ஒரு மாபெரும் ஊழலின் மையத்தில் சிக்கிக்கொண்டது .

    அந்த ஊழல் ஸ்டார்மரின் ஆட்சியையே கேள்விக்குறியாக்கியது.

    இது எப்படி தொடங்கியது?

    தூதர் நியமனம்

    2024 டிசம்பரில் ஸ்டார்மர், மேன்டெல்சனை அமெரிக்காவிற்கான பிரிட்டிஷ் தூதராக நியமித்தார்.

    2025 பிப்ரவரியில் மேன்டெல்சன் வாஷிங்டனில் பதவியேற்றார்.

    இந்த நியமனம் தொடக்கத்திலேயே சர்ச்சையை உருவாக்கியது .

    ஏனெனில் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மேன்டெல்சனுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது அரசியல் வட்டாரங்களுக்கு முன்பே தெரிந்திருந்தது.

    யார் இந்த எப்ஸ்டீன்?

    ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு அமெரிக்க பணக்கார நிதியாளர். 2008ஆம் ஆண்டு 18 வயதிற்கு கீழான சிறுமியிடம் பாலியல் வக்கிரத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்டு, 2019ஆம் ஆண்டு சிறார் கடத்தல் குற்றங்களுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது மரணமடைந்தார்.

    அவரது மரணத்திற்குப் பிறகு அமெரிக்கா வெளியிட்ட ஆவணங்கள் உலகெங்கும் பல முக்கியஸ்தர்களின் பெயர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன அவற்றில் மேன்டெல்சனின் பெயரும் முன்னணியில் இருந்தது.

    “மிகவும் நெருங்கிய நண்பர்”  நெடுங்கால உறவு வெளிப்படுகிறது.

    2025 செப்டம்பரில் அமெரிக்க நாடாளுமன்ற கண்காணிப்பு குழு வெளியிட்ட ஆவணங்களில், எப்ஸ்டீனின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அடங்கிய புத்தகத்தில் மேன்டெல்சன் எப்ஸ்டீனை “என் சிறந்த தோழன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இது மேன்டெல்சன் முன்பு கூறிய “அவரை சரிவரத் தெரியாது” என்ற வாதத்தை நொறுக்கியது.

    இதைத் தொடர்ந்து ஸ்டார்மர் மேன்டெல்சனை தூதர் பதவியில் இருந்து நீக்கினார்.

    அரசு ரகசியங்கள் கசிந்ததா?

    மிகப் பெரிய குற்றச்சாட்டு

    2026 பிப்ரவரியில் வெளிவந்த அறிக்கைகள், 2009-2010 காலகட்டத்தில் மேன்டெல்சன் வணிக அமைச்சராக இருந்தபோது எப்ஸ்டீனுக்கு முக்கியமான அரசு தகவல்களை கசிவு செய்தார் என்று சுட்டிக்காட்டின.

    குறிப்பாக, 2010 மே 9ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் யூரோவைக் காப்பாற்றுவதற்காக ₹500 பில்லியன் நிதி உதவி திட்டத்தை அறிவிக்க இருந்தது.

    இந்த சந்தை முக்கியத் தகவலை மேன்டெல்சன் முன்கூட்டியே எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக மின்னஞ்சல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

    மேலும் 10, டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையிலான ரகசிய நிலத்தடி தொடர்பு பாதை பற்றிய தகவலையும் எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக ஒரு மின்னஞ்சல் கூறுகிறது.

    பாதுகாப்பு ஆய்வு நிராகரிக்கப்பட்டதா?

    மிக முக்கியமான வெளிப்பாடு

    ஏப்ரல் 16, 2026ஆம் தேதி வெளியான செய்தி, யுகேஎஸ்வி (UK Security Vetting) என்ற பாதுகாப்பு ஆய்வு அமைப்பு 2025 ஜனவரி 28ஆம் தேதி மேன்டெல்சனுக்கு பாதுகாப்பு அனுமதியை மறுத்தது என வெளிப்படுத்தியது.

    ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகே அவர் தூதராக உறுதி செய்யப்பட்டார்.

    வெளியுறவு அமைச்சகத்தின் (FCDO) அதிகாரிகள் பாதுகாப்பு ஆய்வு அமைப்பின் பரிந்துரையை மீறி, மேன்டெல்சனுக்கு அனுமதி வழங்கியதாக அரசு செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டார்.

    இந்த வெளிப்பாடு அரசியல் நெருப்பை மேலும் பரவடித்தது “முறையான நடைமுறை பின்பற்றப்பட்டது” என்று ஸ்டார்மர் பலமுறை கூறியிருந்தனர், அது பொய் என நிரூபணமாயிற்று.

    “எனக்கு சொல்லப்படவில்லை” என்பதே ஸ்டார்மரின் வாதம்.

    ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் மேன்டெல்சன் நியமனம் ஒரு தவறு என்று ஒப்புக்கொண்டார்.

    ஆனால் ராஜினாமா கோரிக்கைகளை நிராகரித்தார்.

    தாம் 2026 ஏப்ரல் 14ஆம் தேதிதான் பாதுகாப்பு அனுமதி மறுப்பு பற்றி அறிந்ததாக பிரதமர் கூறினார்.

    “இது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பது திகைப்பளிக்கிறது” என்று ஸ்டார்மர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

    எதிர்க்கட்சி கன்சர்வேடிவ் தலைவர் கேமி பேடனோக், “அவர் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை; ஏனெனில் தெரிந்துகொள்ள விரும்பவில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.

    2025 செப்டம்பரில் மேன்டெல்சன் பதவியில் இருந்திருந்தால் அவரை ஆதரித்து நிற்பதாக ஸ்டார்மரின் தலைமை நிர்வாகி மோர்கன் மெக்ஸ்வீனி தொடர்ந்து வற்புறுத்தினார் .

    இந்த நியமனத்தை முன்னின்று ஆதரித்தவரும் மெக்ஸ்வீனியே.

    2026 பிப்ரவரி 8ஆம் தேதி மெக்ஸ்வீனி ராஜினாமா செய்தார்.

    “பிரதமரை மேன்டெல்சனை நியமிக்கும்படி ஆலோசனை வழங்கியதற்கு முழு பொறுப்பு ஏற்கிறேன்” என்று கூறினார்.

    ஆஞ்சலா ரேனரின் நெருங்கிய ஆதரவாளர்கள், 2024இலேயே அவர் மேன்டெல்சன் நியமனத்திற்கு எதிராக தனிப்பட்ட முறையில் ஸ்டார்மரை எச்சரித்திருந்ததாக வெளிப்படுத்தினார்கள்.

    இது மேலும் சேதத்தை அதிகரித்தது.

    2026 பிப்ரவரி 23ஆம் தேதி பொது பதவியில் ஊழல் (Misconduct in Public Office) சந்தேகத்தின் பேரில் மேன்டெல்சன் கைது செய்யப்பட்டார்.

    கைதை தொடர்ந்து, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளுக்கு சென்று நிரந்தரமாக குடியேற திட்டமிட்டதாக நாடாளுமன்றத் தலைவர் சர் லிண்ட்சே ஹோயல் போலீசாரிடம் தகவல் அளித்தார்.

    மேன்டெல்சன் இதை மறுத்தார்.

    மார்ச் 6ஆம் தேதி ஜாமின் நிபந்தனைகள் நீக்கப்பட்டு கடவுச்சீட்டு திரும்ப வழங்கப்பட்டது.

    மார்ச் 10ஆம் தேதி மேன்டெல்சன் புரிவி கவுன்சில் உறுப்பினர் பட்டத்தில் இருந்து இராஜாவின் ஒப்புதலோடு நீக்கப்பட்டார்.

    ஸ்டார்மரின் நிலை இன்று

    இந்த சர்ச்சை, ஸ்டார்மரின் ஆட்சிக்கு மிக பாதகமானதாக விவரிக்கப்படுகிறது.

    பல லேபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் மோசமான முடிவுகள் வந்தால் தலைமை சவால் எழலாம் என்று கருதுவதாக தெரிகிறது.

    ஸ்டார்மர், மேன்டெல்சன் வேட்டு செய்தல் செயல்முறையில் குறைபாடு இருந்தது என்று ஒப்புக்கொண்டு, துண்டரவு அமைச்சகத்தின் மதிப்பீட்டை மீறும் அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்தார்.

    மேலும் வெளியுறவு செயலாளர் ஈவெட் கூப்பரும் மூத்த அதிகாரி ஆலிவர் ராபின்ஸும் “நம்பிக்கை இழந்தோம்” என கூறப்பட்டு, ராபின்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    மேன்டெல்சன் விவகாரம் வெறுமனே ஒரு தனி நபர் சர்ச்சை அல்ல.

    இது ஸ்டார்மரின் தீர்ப்பாண்மை, அரசின் வெளிப்படையான தன்மை மற்றும் தேசிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

    ஒரு நியமனத்தில் தொடங்கிய இந்த விவகாரம், கைது, ஆவணங்கள் வெளியீடு, கட்சி உள் கலகம் என படிப்படியாக விரிந்து, இன்று பிரதமரின் பதவியையே அசைக்கும் அளவுக்கு பெரிதாகியுள்ளது.

    காத்திருந்துதான் பார்ப்போமே !

    Share
  • அமெரிக்க இதழியல் புரட்சியாளர்!

    அமெரிக்க இதழியல் புரட்சியாளர்!

    -மேகலா இராமமூர்த்தி

    மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியிலுள்ள மேக்கோவில் (Makó, Hungary) ஏப்ரல் 10, 1847ஆம் ஆண்டு பூலாப் புலிட்சர், எலிஸ் பெர்கர் (Fülöp Pulitzer, Elize Berger) எனும் யூத இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் ஜோசப் புலிட்சர் (Joseph Pulitzer). அவருக்கு 4 உடன்பிறப்புகளும் இருந்ததாகத் தெரிகின்றது; ஜோசப்பின் தந்தையார் கூலவாணிகம் செய்து ஓரளவு வளமையுடன் இருந்தமையால் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளித்துவந்தார். ஆனால் ஜோசப் சிறுவனாக இருந்தபோதே அவர் மறைந்தமையால் குடும்பத்தின் பொருளாதாரம் நொடித்துப் போனது.

    வாய்ப்புகளின் தேயமாக விளங்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தால் தம் வாழ்க்கை வளம்பெறும் என்று கருதிய புலிட்சர் அமெரிக்காவுக்குச் செல்லவிரும்பினார்.

    ஆனால் எப்படிச் செல்வது? பயணச் செலவுக்கான பணத்தை எப்படிப் பெறுவது?

    அக்காலக்கட்டத்தில் (1864) அமெரிக்காவில் நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டுப் போரில் (Civil War) ஈடுபடுவதற்கு ஐரோப்பாவின் பல நாடுகளிலும் வீரர்களைத் தெரிவுசெய்துகொண்டிருந்தது அமெரிக்க இராணுவம். அதனைப் பயன்படுத்தித் தம்மையும் படைவீரராகப் பதிவுசெய்துகொண்டார் புலிட்சர். எனவே அவரது அமெரிக்கப் பயணத்திற்கான செலவை அமெரிக்க இராணுவமே பார்த்துக்கொண்டது.

    தம்முடைய 17ஆவது அகவையில் அமெரிக்கா வந்த அவர் ஒன்றியப் படையில் (Union Army) இணைந்தார். ஆபிரகாம் இலிங்கனின் குதிரைப் படையில் (Cavalry) ஓராண்டுக்காலம் பணியாற்றினார். 1865இல் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் பல்வேறு இடங்களில் சிறுசிறு பணிகள் செய்துவந்த அவர் பின்னர் மிசௌரி மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸுக்கு (St. Louis, Missouri) வந்துசேர்ந்தார். அங்கிருந்த அச்சகங்களில் வேலைசெய்து இதழியலைக் கற்று, செயின்ட் லூயிஸிலிருந்து வெளிவந்த ஜெர்மன்மொழிச் செய்தித்தாளான வெஸ்ட்லிக்கே போஸ்ட்டில் (Westliche Post) அச்சுக்கோப்பவரானார்; பின்னர் இதழாளராகவும் பயிற்சிபெற்றார். இதழியல்சார் பணிகள் அனைத்தையும் தம்மோடு பணியாற்றிய சக ஊழியர்களைப் பார்த்தே கற்றுக்கொண்டார் புலிட்சர்!

    1872இல், ‘செயின்ட் லூயிஸ் போஸ்ட்-டிஸ்பாட்ச்’ (St. Louis Post-Dispatch) எனும் நாளிதழின் இணை உரிமையாளரானார் புலிட்சர்; 1878-ஆம் ஆண்டிற்குள் அந்த நாளிதழ் அவரின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது. புலனாய்வு இதழியல், ஊழல் எதிர்ப்புச் செய்திகள், தொழிலாளர்கள், குடியேறிகளுக்கான ஆதரவு ஆகியவற்றைக் கொண்ட புரட்சிகரமான நாளிதழாக அது திகழ்ந்தது. அமெரிக்காவில் புலனாய்வு இதழியல் (investigative journalism) எனும் துறையைப் பிரபலப்படுத்திய பெருமை ஜோசப் புலிட்சரையே சாரும்.

    அக்காலத்தில் ’நியூயார்க் வேர்ல்ட்’ (New York World) எனும் நாளிதழைச் சிரமப்பட்டு நடத்திக்கொண்டிருந்த அதன் உரிமையாளர் பிராங்க் மன்சியிடமிருந்து (Frank Munsey) அவ்விதழை 1883இல் வாங்கிய புலிட்சர், வெகுமக்களைக் கவரும் வகையில் அந்நாளிதழில் தொடர்கதைகள், கேலிச்சித்திரங்கள், புலனாய்வுச் செய்திகள், விளக்கப்படங்கள் எனப் பலவற்றை அறிமுகப்படுத்தினார். நியூயார்க் வேர்ல்ட் நாளிதழைப் புதிதாக வாங்கி நடத்தியபோதும் செயின்ட் லூயிஸ் போஸ்ட்-டிஸ்பாட்ச் நாளிதழின் உரிமையாளராகவும் மேலாளராகவும் தொடர்ந்து செயற்பட்டுவந்தார் அவர்.

    நியூயார்க் வேர்ல்ட் நாளிதழில் 1886இல் பணிக்குச் சேர்ந்த நெல்லி பிளை (Nellie Bly) எனும் பெண் இதழாளர் துணிச்சலாகச் செயற்பட்டு நியூயார்க்கின் பிளாக்வெல் தீவிலிருந்த மனநலக் காப்பகத்தில் (Blackwell’s Island Insane Asylum, New York City) நடந்த முறைகேடுகளை, தாமே மனநோயாளிபோல் அங்கே தங்கி, அறிந்துவந்து அம்பலப்படுத்திப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    காலவோட்டத்தில் ’நியூயார்க் வேர்ல்ட்’ நாளிதழுக்குக் கடும்போட்டியாக விளங்கத் தொடங்கியது வில்லியம் ராண்டால்ப் ஹர்ஸ்ட் (William Randolph Hearst) என்பவர் நடத்திவந்த ’நியூயார்க் ஜர்னல்’ எனும் மற்றொரு நாளிதழ். தொழில்போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று கருதிய புலிட்சர் பெரிய மனிதர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கிசுகிசுக்களையும் நியூயார்க் வேர்ல்டில் வெளியிட்டு மக்களின் மலின விருப்பங்களுக்குத் தீனிபோட்டார். இதனால் மஞ்சள் பத்திரிகை (yellow journalism) எனும் விமர்சனத்தை எதிர்கொண்டது அந்நாளிதழ். தொழில்போட்டியில் வெல்லவேண்டும் எனும் எண்ணமானது உயர்ந்த சிந்தனை கொண்ட மனிதர்களையும் தரந்தாழ்ந்த செயல்களைச் செய்ய வைக்கும் என்பதற்கு இஃதோர் சான்று!

    எனினும் சமூகநலன்சார் கருத்துக்கள், அரசியல்வாதிகளின் ஊழலை அம்பலப்படுத்துதல் போன்றவற்றையும் தொடர்ந்து வெளியிட்டு நாளிதழின் முதன்மை நோக்கத்தைக் கைவிடாது காத்துவந்தார் புலிட்சர். சிறிது காலத்திற்குப்பின் போட்டி வேகம் தணிந்து, சமூக முன்னேற்றம், அறக்கேட்டிற்கு எதிரான கருத்துக்கள், மறைக்கப்பட்ட உண்மைகளைப் புலனாய்வின் வாயிலாய் வெளிக்கொணர்தல் போன்றவற்றுக்கே முதன்மை தந்தார் புலிட்சர் என்றறிகின்றோம்.

    இதழியல், இலக்கியம், நாடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்குப் பரிசளிக்கும் நோக்கிலும், இதழியல் பள்ளியை நிறுவும் நோக்கிலும், 1904ஆம் ஆண்டு, தம் சொத்தின் ஒரு பகுதியை நியூயார்க்கிலுள்ள கொலம்பியாப் பல்கலைக்கழகத்திற்கு (Columbia University, New York) ஒதுக்கி உயில் எழுதிவைத்தார் ஜோசப் புலிட்சர்.

    இதற்கிடையே பார்வையிழப்பு, நரம்புச் சிதைவு போன்ற பல கடுமையான உடல்நலக் கேடுகளால் அவதியுற்றுவந்த புலிட்சர், 1911ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள் தம்முடைய 64ஆவது அகவையில் உயிர்நீத்தார். 1917ஆம் ஆண்டு புலிட்சர் பரிசுகள் (Pulitzer Prizes) நிறுவப்பட்டுத் தகுதியானோர்க்கு ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. [1943ஆம் ஆண்டுமுதல் இசைத்துறைச் சாதனையாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்படுகின்றது.] 1912ஆம் ஆண்டுமுதல் இதழியல் பள்ளி கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் (Columbia University Graduate School of Journalism) செயல்படத் தொடங்கிற்று.

    ஹங்கேரியில் பிறந்த ஜோசப் புலிட்சர், கண்டம்விட்டுக் கண்டம்வந்து தம் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் இதழியல் துறையில் சாதனை படைத்ததோடல்லாமல் அத்துறையிலும் பிற படைப்பாக்கத் துறைகளிலும் சாதனை புரிவோரைப் பாராட்டும் வகையில் பரிசுகளையும் நிறுவியது பெரும் பாராட்டுக்குரியதன்றோ?

    புலிட்சர் பரிசின் முன்பக்கம்/பின்பக்கம்

    அமெரிக்காவின் மிக உயர்ந்த இலக்கியப் பரிசாகக் கருதப்பெறும் புலிட்சர் பரிசினைப் பெறுவதற்கு நாம் அமெரிக்கராக இருக்கவேண்டும் என்பதில்லை; அமெரிக்காவில் வாழும் பிறநாட்டினரும் இப்பரிசுக்குத் தகுதியானவரே; ஆனால் பரிசுக்காக அனுப்பப்படும் படைப்புகள் அமெரிக்காவில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்; ஆங்கிலத்தில் இருக்கவேண்டும்; பிறமொழி நூல்களாக இருப்பினும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தே அனுப்பவேண்டும்.

    புலிட்சர் பரிசினை வெல்வோருக்கு 15,000 அமெரிக்க வெள்ளியும் வெண்கலப் பதக்கமும் சான்றிதழும் ($15,000 USD, a certificate and a bronze medallion) வழங்கப்பெறும்!

    *****
    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://www.britannica.com/biography/Joseph-Pulitzer
    2. https://americanaristocracy.com/people/joseph-pulitzer
    3. https://en.wikipedia.org/wiki/Joseph_Pulitzer
    Share
  • விலங்குப் பண்ணை

    விலங்குப் பண்ணை

    -மேகலா இராமமூர்த்தி

    சனநாயகப் பொதுவுடைமைவாதி (Democratic Socialist), இங்கிலாந்தின் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் (Member of Independent Labour Party), பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்ட ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய ’விலங்குப் பண்ணை’ (Animal Farm) என்னும் புதினம், இரஷ்யச் சர்வாதிகாரத்தை (Soviet Totalitarianism) பற்றியது. 1917ஆம் ஆண்டு ஏற்பட்ட இரஷ்யப் புரட்சி, அதனைத் தொடர்ந்துவந்த தொழிலாளர் கட்சியின் (Bolshevik Party) ஆட்சி, குறிப்பாக ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தலைமையிலான ஆட்சிமுறை ஆகியவை குறித்த உருவகங்களை (allegories) உள்ளடக்கியது இப்புதினம். தாம் சொல்லவிரும்பியதை மனிதக் கதாபாத்திரங்கள் வாயிலாகச் சொல்லாமல் பண்ணை விலங்குகளை உருவகங்களாக்கிச் சுவையாகச் சொல்லியிருக்கின்றார் ஆர்வெல். 1923ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற சிறந்த 100 புதினங்களுள் ஒன்றாக டைம் இதழால் (Time Magazine) தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியது இப்புதினம்.

    இனி விலங்குப் பண்ணை புதினத்தைச் சுருக்கமாக அறிந்துகொள்வோம்.

    ’மேனர்’ பண்ணையிலிருந்த (Manor Farm) விலங்குகளை அவற்றின் உரிமையாளரான திரு. ஜோன்ஸ் (Mr. Jones) மோசமாக நடத்துகின்றார். அதிகமான வேலை, குறைவான உணவு என்று அவை துன்புறுத்தப்படுகின்றன. அவற்றினிடையே வாழ்ந்துவருகின்ற, ’பழைய மேஜர்’ (Old Major) என்றழைக்கப்படும் புத்திசாலியான கிழப் பன்றியார், பண்ணையிலுள்ள விலங்குகள் அனைத்தும் மனித ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டுச் சமமாகவும் சுதந்திரமாகவும் வாழும் ஒரு சமூகத்தைப் படைக்கவேண்டும் எனக் கனவு காண்கின்றார். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் பண்ணை விலங்குகளை ஈடுபடுத்த வேண்டும் எனும் விருப்பங்கொண்டு அவ்விலங்குகளை அழைத்து,

    ”தோழர்களே! மனிதன் மட்டுந்தான் எதனையும் உற்பத்தி செய்யாமல் அனைத்தையும் நுகரும் ஒரே படைப்பு. அவனால் பால்தர இயலாது; முட்டையிட முடியாது; காளைகளைப்போல ஏருழ இயலாது; விரைந்தோடி முயல்களைப் பிடிக்க முடியாது; இப்படி எந்தத் திறனும் இல்லாத அவன்தான் எல்லா விலங்குகளுக்கும் முதலாளியாக இருக்கின்றான். உழைப்பும் விளைச்சலும் நம்முடையது; ஆனால் அதன் பயனை ஜோன்ஸும் அவனைச் சார்ந்தோரும் அனுபவிக்கின்றனர். இந்தக் கடின உழைப்பால் நாம் நம் வாழ்க்கையை முழுமையாகக்கூட வாழமுடிவதில்லை. நமக்கு எல்லா மனிதர்களும் எதிரிகள்; எல்லா விலங்குகளும் தோழர்கள்” என்று கூறி அவற்றிடம் எழுச்சியூட்டுகிறார்.

    வயது மூப்பின் காரணமாக வீர உரையாற்றிய ஒருசில நாள்களிலேயே பழைய மேஜர் மரித்துவிடுகிறார்; எனினும் அவர் ஊட்டிய சுதந்திர உணர்வு அனைத்து விலங்குகளிடத்திலும் கிளர்ந்தெழுகின்றது.

    அப்பண்ணையில் மிகவும் சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் வாய்ந்தவையாகக் கருதப்படும் பன்றிகளான நெப்போலியன் (Nepolean), ஸ்னோபால் (Snowball), ஸ்க்வீலர் (Squealer) ஆகிய மூவரும் சேர்ந்து பழைய மேஜரின் கருத்துக்களை ஒன்றுதிரட்டி ஓர் முழுமையான சிந்தனைத் தொகுப்பாக்கி அதற்கு விலங்குவாதம் (Animalism) என்று பெயர்சூட்டினர்.

    பண்ணை முதலாளி ஜோன்ஸ் குடிப்பழக்கம் உள்ளவன். ஓரிரவில் நன்றாகக் குடித்துவிட்டுப் பண்ணைக்கு வந்தவன், விலங்குகளுக்குத் தீனிபோட மறந்து அவற்றைப் பட்டினி போட்டுவிட்டான்; அதனால் சீற்றம்கொண்ட விலங்குகள் பண்ணையில் உணவு வைக்கப்பட்டிருக்கும் கிடங்கிற்குள் நுழைய முற்படுகின்றன; விலங்குகளை விரட்டுவதற்குப் பண்ணையாட்களுடன் ஜோன்ஸ் முனைய, ஏற்கனவே ஓல்டு மேஜரால் சுதந்திர உணர்ச்சிபெற்றிருந்த அவ்விலங்குகள் கிளர்ந்தெழுந்து, ஜோன்ஸையும் அவனது பண்ணையாட்களையும் பண்ணையைவிட்டே விரட்டிவிடுகின்றன.

    ஜோன்ஸின் மேனர் பண்ணை இப்போது விலங்குகள் வசமாகிவிட்டது. ஜோன்ஸின் பிள்ளைகள் படித்துவிட்டுக் குப்பையில் தூக்கியெறிந்திருந்த ஆங்கில அரிச்சுவடிப் புத்தகத்தை எடுத்துப் படித்ததனால் ஏற்கனவே ஆங்கில எழுத்துக்களை அறிந்துகொண்டிருந்தனர் நெப்போலியனும் ஸ்னோபாலும்.

    பண்ணையைவிட்டு ஜோன்ஸும் அவனது ஆட்களும் விரட்டப்பட்டுவிட்ட சூழலில் இப்போது பண்ணைக்குப் பெயர்மாற்றும் படலம் தொடங்குகின்றது. நெப்போலியன் கருப்பு வெள்ளைநிற வண்ணங்களைப் பானைகளில் எடுத்துக்கொண்டு வர, ஸ்னோபால் ’மேனர் பண்ணை’ எனும் பெயரை அழித்துவிட்டு ’விலங்குப் பண்ணை’ என்று எழுதுகின்றான். அத்தோடு விலங்குப் பண்ணையிலுள்ள விலங்குகள் பின்பற்றவேண்டிய ஏழு கட்டளைகளும் சுவரில் எழுதப்படுகின்றன. அவை:

    1. இரு கால்களில் நடக்கும் எதுவாக இருந்தாலும் அது நமக்கு எதிரி.
    2. நான்கு கால்களில் நடப்பது அல்லது சிறகுகள் கொண்டது நமக்கு நண்பன்.
    3. எந்த விலங்கும் ஆடை அணியக் கூடாது.
    4. எந்த விலங்கும் படுக்கையில் தூங்கக் கூடாது.
    5. எந்த விலங்கும் மது அருந்தக் கூடாது.
    6. எந்த விலங்கும் அடுத்த விலங்கைக் கொல்லக்கூடாது.
    7. எல்லா விலங்குகளும் சமமானவை.

    விலங்குகள் கடினமாக உழைத்துத் தங்கள் உழைப்பின் பலனைத் தாங்களே அனுபவிக்கின்றன. நெப்போலியனும் ஸ்னோபாலும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கின்றனர்; ’பாக்சர்’ எனும் குதிரை கண்மூடித்தனமான விசுவாசத்தைத் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பன்றிகளிடம் காட்டுகின்றான். பண்ணையிலுள்ள ஆடுகள், ”நான்கு கால்களில் நடப்பது நமக்கு நண்பன்; நெப்போலியன் எதையும் சரியாகத்தான் செய்வார்” என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அனைத்து விலங்குகளுக்கும் கல்வி கற்பிக்கப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான விலங்குகள் கற்பதில் ஆர்வம் காட்டாது எழுத்தறிவற்றவையாகவே இருக்கின்றன.

    பண்ணையின் பழைய முதலாளியான ஜோன்ஸும் வேறுசில பண்ணை முதலாளிகளும் சேர்ந்து மேனர் பண்ணையைக் கைப்பற்றுவதற்காக விலங்குகளோடு போரிடுகின்றனர்; மாட்டுக்கொட்டகையருகே நடைபெற்ற அப்போரில் (Battle of the Cowshed) நெப்போலியன், ஸ்னோபால் தலைமையில் போரிட்ட விலங்குகள் வெற்றிபெறுகின்றன. அதனால் நெப்போலியனும் ஸ்னோபாலும் நாயகர்களாகக் கொண்டாடப்படுகின்றனர்.

    நெப்போலியன், ஸ்னோபாலிடையே யார் தலைமைப் பொறுப்பில் இருப்பது எனும் அதிகாரப்போட்டி உருவாகின்றது. ஸ்னோபால் பண்ணைக்கு அருகில் காற்றாலை (Windmill) கட்டவேண்டுமென ஆலோசனை கூறுகின்றான்; அதன்மூலம் மின்சாரத்தை உற்பத்திசெய்து எந்திரங்களை இயக்குவதன் வாயிலாக விலங்குகளின் உடலுழைப்பைக் குறைக்கலாம் என்பது அவனது அறிவார்ந்த – காலத்துக்கேற்ற திட்டம். ஆனால் ஸ்னோபாலின் அறிவும் திறனும் நெப்போலியனுக்குப் பிடிக்கவில்லை; ஸ்னோபால் உடனிருந்தால் தனக்குப் போட்டியாகவும் – தலைவலியாகவும் இருப்பான் என்றெண்ணித் தான் இரகசியமாக வளர்த்துவந்த நாய்களை ஏவி ஸ்னோபாலைப் பண்ணையைவிட்டுத் துரத்தச் செய்கிறான்; ஸ்னோபால் ஓடி மறைந்துவிடுகின்றான்; அதன்பின்னர் அவன் பண்ணைக்குத் திரும்பவில்லை.

    நெப்போலியன் தனிப்பெரும் தலைவனாகின்றான். காற்றாலை கட்டவேண்டும் என்று இப்போது அவன் விலங்குகளுக்கு அறிவுறுத்திக் கட்டச்செய்கிறான். ”இரு கால்களில் நடக்கும் எதுவாக இருந்தாலும் அது நமக்கு எதிரி” எனும் விதியை மீறி நெப்போலியன் மனிதர்களுடன் இணைந்து வணிகம் செய்யத் தொடங்குகின்றான்.

    நெப்போலியனும் பிற பன்றிகளும் நல்ல உணவுகளைத் தாம் அதிக அளவில் எடுத்துக்கொள்ள, மற்ற விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. நெப்போலியனுக்கு விசுவாசமான நாய்கள் மற்ற விலங்குகளின் கண்ணெதிரிலேயே பல சிறிய விலங்குகளைத் தாக்கிக் கொல்கின்றன.

    நெப்போலியனின் வலக்கரமாக விளங்கிவருபவனும், பேச்சில் வல்லவனுமான ஸ்க்வீலர், ’நெப்போலியன் எது செய்தாலும் அது சரியாகவே இருக்கும்’ எனும் பரப்புரையை மற்ற விலங்குகளிடத்தில் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றான்.

    நெப்போலியன் கடவுளைப் போல அனைத்து விலங்குகளாலும் வணங்கப்படும் நிலைக்கு உயர்கின்றான்; பன்றிகள், விலங்குகளுக்கென உருவாக்கப்பட்ட கட்டளைகளை வெளிப்படையாகவே மீறுகின்றன. பண்ணை மீண்டும் மனிதத் தாக்குதல்களை எதிர்கொள்கின்றது; எனினும் விலங்குகள் வெற்றிபெறுகின்றன; நெப்போலியனே தலைமைப் பொறுப்பில் நீடிக்கின்றான்.

    நெப்போலியனின் விசுவாசியான ’பாக்சர்’ அதிக வேலைப்பளுவால் கழுத்து முறிந்து கீழேவிழுகின்றான்; அவனை நெப்போலியன் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டு இறைச்சிக்காக விற்றுவிடுகிறான்; சில நாள்கள் கழித்து பாக்சர் மருத்துவமனையில் அமைதியாக இறந்ததாக நெப்போலியனின் பரப்புரையாளன் ஸ்க்வீலர் விலங்குகளிடம் பொய்யுரைக்கின்றான்.

    அதிகாரமற்ற சாதாரண விலங்குகள் அதிக உழைப்பைத் தருமாறு வற்புறுத்தப்படுகின்றன; எனினும், ஜோன்ஸிடம் இருந்ததைவிட இப்போது தம் வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருப்பதாக ஸ்க்வீலரால் நம்பவைக்கப்படுகின்றன; நெப்போலியனும் அவனுக்குத் துதிபாடும் பன்றிகளும் கொண்டாட்டங்களில் திளைக்கின்றனர். பண்ணைகளில் விளைச்சல் சரியில்லாமல் போனாலோ – களை மண்டினாலோ – வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ பண்ணையின் விளைநிலங்களில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக உலவும் ஸ்னோபாலின் சதிச்செயல்தான் அதற்குக் காரணம் என்று பரப்புரை செய்யப்படுகின்றது.

    ஆண்டுகள் ஓடுகின்றன. விலங்குகளின் கருத்துச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுவிடுகின்றது. நான்கு கால்களில் நடந்துகொண்டிருந்த பன்றிகள் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்குகின்றன (அதாவது மனிதர்களைப்போல் மாறிவிட்டன). விலங்குப் பண்ணையின் ஏழு கட்டளைகளும் அழிக்கப்பட்டு, “எல்லா விலங்குகளும் சமமானவை; ஆனால் சில விலங்குகள் மற்றவற்றைவிட அதிகச் சமமானவை” (எல்லா விலங்குகளும் சமமாகத் தோன்றலாம்; ஆனால் சமம் அல்ல என்பதே இதன் நுட்பமான உட்பொருள்) எனும் புதிய கட்டளை நடைமுறைக்கு வருகின்றது. பிற பண்ணை முதலாளிகளோடு இயல்பாகப் பழகத் தொடங்கும் நெப்போலியன், இறுதியில் விலங்குப் பண்ணையை’மேனர் பண்ணை’யாக மீண்டும் பெயர்மாற்றம் செய்துவிடுகிறான். மனித முதலாளிகளின் நடத்தையே விலங்குகளின் ஆட்சியிலும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதன் குறியீடு இது!

    இக்கதையில் காணப்படும் பாத்திரங்களும் அவர்கள் உருவகப்படுத்தும் நிஜ மனிதர்களும்:

    மேனர் பண்ணை – புரட்சிக்கு முந்தைய இரஷ்யா (Pre-revolutionary Russia)

    மேனர் பண்ணை முதலாளி ஜோன்ஸ் – ஜார் நிக்கோலஸ் II (Tsar Nicholas II (Russian monarchy))

    பழைய மேஜராக வரும் பன்றி – கார்ல் மார்க்ஸ் + விளாடிமிர் லெனின் (Karl Marx + Vladimir Lenin (ideas of communism))

    கிளர்ச்சி – 1917ஆம் ஆண்டு நடந்த இரஷ்யப் புரட்சி (Russian Revolution)

    விலங்குப் பண்ணை (Animal Farm) – சோவியத் யூனியன்

    விலங்குவாதம் (Animalism) – கம்யூனிசம் (Communism)

    ஏழு கட்டளைகள் (Seven Commandments) – கம்யூனிசச் சித்தாந்தம்

    நெப்போலியன் – ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin)

    ஸ்னோபால் – லியான் ட்ராட்ஸ்கி (Leon Trotsky)

    மாட்டுக்கொட்டகைப் போர் – பண்ணையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உரிமைப்போர்

    ஸ்க்வீலர் – அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களின் பரப்புரை (Propaganda/state-controlled media)

    ஸ்னோபால் வெளியேற்றப்படுதல் – ட்ராட்ஸ்கி நாடுகடத்தப்படுதல்

    பாக்சர் – உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் (Working class)

    நாய்கள் – ஸ்டாலின் அரசின் இரகசியக் காவல்துறையினர் (NKVD / KGB)

    ஆடுகள் – சுயசிந்தனையற்ற மக்கள்கூட்டம் (Thoughtless humans)

    காற்றாலை – தொழில்மயமாதல் (Industrialization)

    கட்டளைகளை மாற்றுதல் – வரலாற்று மறுசீரமைப்புவாதம் (Historical Revisionism)

    ”மாகாளி பராசக்தி உருசிய நாட்
    டினிற் கடைக்கண் வைத்தா ளங்கே
    ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி
    கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்”
    என்று ஜார் மன்னன் வீழ்ந்ததையும் உருசியநாட்டில் தொழிலாளர் புரட்சி வென்றதையும் இந்தியாவிலிருந்தே கொண்டாடினார் மகாகவி பாரதி.

    அப்புரட்சியைத் தொடர்ந்து, ”தொழிலாளர்களுக்குச் சமத்துவம், சம உரிமை அளிப்போம்” எனும் முழக்கத்தோடு விளாடிமிர் லெனின் (Vladimir Lenin) தலைமையில் ஆட்சிக்கு வந்தது தொழிலாளர் கட்சி (Bolshevik Party); தொழிலாளர் நலனில் லெனின் அக்கறை காட்டினார்; முதலாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொழிற்சாலைகள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. ஆனால் அரசு நியமித்த மேலாளர்கள் தொழிலாளர்கள்மீது தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். காலப்போக்கில் அதிக வேலைநேரம், எதிர்ப்போர்மீது அடக்குமுறை, தண்டனை போன்றவையும் நடைமுறைக்கு வந்தன. வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுத் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். லெனினுக்கு எதிரான கட்சிகள், செயற்பாடுகள், செய்தித்தாள்கள் முடக்கப்பட்டன.

    தமக்கடுத்துக் கட்சியின் தலைவராகத் தொடரப்போவது யார் என்பதை லெனின் வெளிப்படையாக அறிவிக்கவில்லை; தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக (General Secretary) லெனின் இருந்தபோதே 1922இல் பொறுப்பேற்றவர் ஜோசப் ஸ்டாலின். ’செம்படை’ (Red Army) எனப்படும் தொழிலாளர் கட்சியின் இராணுவப்படையின் தளபதியாகச் செல்வாக்கோடு விளங்கியவர் லியான் ட்ராட்ஸ்கி (Leon Trotsky).

    லெனினின் மறைவுக்குப்பின் கட்சிக்குள் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ட்ராட்ஸ்கியின் செல்வாக்கைக் குறைத்ததோடு, ”கடந்த காலத்தில் ட்ராட்ஸ்கி புரட்சிக்கு எதிரானவராக இருந்தார்; அவரைச் சோவியத் யூனியனில் இருக்க அனுமதித்தால் லெனினிசமே வீழ்ச்சியடையும்; நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும்” என்று தவறான பரப்புரைகளின்மூலம் 1927இல் தொழிலாளர் கட்சியிலிருந்து அவரை நீக்கினார் ஸ்டாலின்; அத்தோடு நில்லாமல் ட்ராட்ஸ்கி அரசாங்கத்திற்குத் துரோகம் செய்கிறார், சோசலிசத்தின் எதிரி என்று கூறி 1929இல் நாடு கடத்தினார். இச்செயல்களைத்தான் நெப்போலியன் ஸ்னோபாலின்மீது பழிகூறி விலங்குப் பண்ணையைவிட்டு வெளியேற்றுவதாக ஆர்வெல் படைத்துள்ளார்.

    நாடுகடத்தப்பட்ட பின்பு பல்வேறு நாடுகளுக்கு மாறி மாறிச்சென்று வாழ்ந்துவந்தார் ட்ராட்ஸ்கி; அப்போதும் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களைத் துணிவோடு முன்வைக்க அவர் தயங்கவில்லை. இதனால் எரிச்சலடைந்த ஸ்டாலின், சோவியத்தின் இரகசியக் காவல்துறையைச் சேர்ந்தவனும் (Soviet secret police – NKVD) இசுப்பானியக் பொதுவுடைமைவாதியுமான ’இரமோன் மெர்கேடர்’ (Ramón Mercader) என்பவனை வைத்து 1940இல் ட்ராட்ஸ்கியைத் தீர்த்துக்கட்டினார்.

    ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக ஏற்பட்ட இரஷ்யப் புரட்சியின் வெற்றி, சோசலிச ஆதரவாளர்களின் கையில் ஆட்சியைக் கொடுத்தது. ஆனால் அவர்களும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், கெடுவாய்ப்பாக, சர்வாதிகாரத்தையே கையிலெடுத்து மக்களை ஒடுக்கினர்; தமக்கு எதிராகச் செயற்பட்டவர்களை அழித்தனர்.

    எனவே ஆட்சியதிகாரம் என்பது அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் வன்செயல்களுக்குமே ஆட்சியாளர்களை அழைத்துச்சென்றிருக்கிறதேயொழியச் சமூகச் சமத்துவத்துக்கோ பொதுவுடைமைக்கோ அஃது  ஒருபோதும் அழைத்துச்செல்லவில்லை என்பதுதான் உலக வரலாறு நமக்குக் காட்டும் கசப்பான உண்மை!

    இதனை எண்ணுகையில் ’மனிதனும் மாமனிதனும்’ (Man and Superman – 1905 Play by George Bernard Shaw) எனும் தம்முடைய நாடகத்தின் பின்னிணைப்பில் பெர்னார்டு ஷா எழுதிய வரிகள் என் நினைவுக்கு வருகின்றன: ”புரட்சிகள் ஒருபோதும் கொடுங்கோன்மையின் சுமையைக் குறைக்கவில்லை; மாறாக அவை அச்சுமையை இன்னொரு தோளுக்கு இடம் மாற்றி மட்டுமே வைத்துள்ளன.” [Revolutions have never lightened the burden of tyranny; they have only shifted it to another shoulder.” (Man and Superman, 1903)].

    எத்தகைய தீர்க்க தரிசனம் இது!

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. Animal Farm – George Orwell – published by Signet Classics, New York
    2. Man and Superman – George Bernard Shaw, Penguin Classics (Penguin Random House)
    Share
  • அச்சகத்திலிருந்து ஆட்சிமன்றம்வரை உயர்ந்தவர்!

    அச்சகத்திலிருந்து ஆட்சிமன்றம்வரை உயர்ந்தவர்!

    -மேகலா இராமமூர்த்தி

    எழுத்தாளர், சிந்தனையாளர், அறிவியலாளர், அரசியலறிஞர், சுதந்திர அமெரிக்காவை வடிமைத்த தந்தையருள் ஒருவர் எனப் பன்முகத் திறனாளராக (polymath) திகழ்ந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin).

    1706ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்திலுள்ள பாஸ்டனில் (Boston, Massachusetts), 17 பிள்ளைகள் கொண்ட எளிய குடும்பத்தில் 15ஆவதாகப் பிறந்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின். பள்ளிக்கு அனுப்பும் வசதியற்ற குடும்பச்சூழல் காரணமாக அவருக்குக் கிடைத்த முறையான கல்வி என்பது பத்து வயதுவரை மட்டுமே.

    பெஞ்சமின் பிராங்க்ளினின் அண்ணன்களுள் ஒருவரான ஜேம்ஸ் பிராங்க்ளின் (James Franklin) அச்சகம் வைத்து ’தி நியூ இங்கிலாந்து கூரண்ட்’ (The New-England Courant) எனும் நாளிதழை வெளியிட்டுவந்தார். அங்கே தமது 12ஆவது வயதில் வேலைக்குச் சேர்ந்து அச்சுக்கோத்தல், பிழைதிருத்தல், பத்திகள், கட்டுரைகள் எழுதுதல் முதலியவற்றைக் கற்றுக்கொண்டார் பெஞ்சமின் பிராங்க்ளின். அவரைப் பொறுத்தவரை அந்த அச்சகமே அவருக்குத் தொடக்க காலத்தில் கல்வி கற்பித்த பல்கலைக்கழகமாயிருந்தது.

    கட்டுரைகள் எழுதக் கற்றுக்கொண்ட பெஞ்சமின் பிராங்க்ளின், அத்தோடு நிற்கவில்லை. ’சைலன்ஸ் டோகுட்’ (Silence Dogood) எனும் புனைபெயரில் தாமே இரகசியமாகக் கட்டுரைகள் எழுதி அண்ணனின் நாளிதழில் வெளியிட்டுவந்தார். அவரின் கட்டுரைகள் பரவலாக வாசகர்களின் பாராட்டுக்களைப் பெறலாயின. தம்பி புனைபெயரில் ஆக்கங்கள் வெளியிடுவதை ஒருநாள் அறிந்துகொண்டுவிட்டார் அண்ணன் ஜேம்ஸ் பிராங்க்ளின்.

    தம்பியைப் பாராட்டி, எழுத ஊக்குவித்தாரா என்றால் இல்லை! ”தம்மிடம் அச்சுக்கோக்கக் கற்றுக்கொண்ட சிறுவன் எழுத்தாளராகிப் பொதுமக்களின் பாராட்டைப் பெறுவதா?” எனும் அழுக்காறு அவருள் பொங்கியெழுந்தது. கட்டுரைகள் எழுதி வெளியிடக்கூடாது என்று பெஞ்சமின் பிராங்க்ளினுக்குத் தடைவிதித்தார். அதனால் வருத்தமுற்ற பெஞ்சமின், தம்முடைய 17ஆவது வயதில் பாஸ்டன் நகரத்தைவிட்டே வெளியேறினார். பதின்ம வயதில் அவரெடுத்த மிகத் துணிச்சலான முடிவு அது என்றே கூறவேண்டும். சுதந்திரமாகத் தாம் விரும்பியதைச் செய்வதற்கு அவருக்கு அப்போது வேறு வழியேதும் இருக்கவில்லை. எனவே தம்மிடமிருந்த சொற்பப் பணத்துடன் பாஸ்டனிலிருந்து வெளியேறி இலண்டனுக்குச் சென்று அங்குக் கிட்டத்தட்ட இரண்டாண்டுக் காலம் தங்கி அச்சகங்களில் பணியாற்றியும், அப்பணிசார்ந்த திறன்களை மேம்படுத்திக்கொண்டும் பென்சில்வேனியா மாகாணத்திலிருந்த பிலடெல்பியாவுக்குத் திரும்பினார்.

    அச்சுத்துறையில் தமக்கிருந்த அனுபவம் காரணமாக விரைவிலேயே ஓர் அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். முதலாளியிடம் நல்ல பெயர் வாங்குவதே அப்போது அவரின் முதன்மையான நோக்கமாக இருந்தமையால் தம் எழுத்தாற்றலை வெளிப்படுத்த அவர் முனையவில்லை; கடுமையாய் உழைத்தார்; கையில் ஓரளவுக்குக் காசு சேர்ந்தபின் 1728இல் ஓர் அச்சகத்தை விலைக்கு வாங்கினார். விற்பனையில் தடுமாறிக்கொண்டிருந்த ’பென்சில்வேனியா கெஜட்’ (Pennsylvania Gazette) எனும் நாளிதழையும் 1729இல் வாங்கினார். அதில் தாமே பல கட்டுரைகளை, பத்திகளைப் பல்வேறு புனைபெயர்களில் எழுதி வெளியிடவே அந்நாளிதழின் விற்பனை சூடுபிடித்தது.

    ’ரிச்சர்டு சாண்டர்ஸ்’ (Richard Saunders) எனும் புனைபெயரில் பெஞ்சமின் பிராங்க்ளின் ஆண்டு வெளியீடாகக் கொண்டுவந்த ’Poor Richard’s Almanack’ எனும் வானியல் குறிப்புகள், பொன்மொழிகள், அறிவுரைகள் அடங்கிய பதிப்பு அக்காலத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று மிக அதிக அளவில் விற்றுத் தீர்ந்தது. இவ்வாறு 26 வெளியீடுகள் (1732–1758) வந்தன. இப்பதிப்புகளால் பெஞ்சமினின் பொருளாதார நிலை உயர்ந்தது. தமக்குக் கிடைத்த வருவாயைப் புதிய அச்சு எந்திரங்கள் வாங்குவது, அறிவியல் ஆய்வுகளுக்கான கருவிகள் வாங்குவது போன்ற பணிகளுக்குச் செலவிட்டார் அவர்.

    அறிவியல் ஆய்வுகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

    குழந்தைப் பருவம் முதலே சுற்றுச்சூழலைக் கூர்மையாக அவதானித்தல், இயற்கைத் தத்துவம், மின்சாரம், எந்திரவியல் சார்ந்த நூல்களை ஆர்வத்துடன் கற்றல் போன்றவை பெஞ்சமின் பிராங்க்ளினின் இயல்புகளாக இருந்தன. இவற்றால் அவரின் அறிவியல் ஆய்வு மனநிலை தூண்டப்பட்டாலும் அப்போதைய வாழ்க்கைச் சூழலும், பொருளாதார நெருக்கடிகளும் அவரை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட அனுமதிக்கவில்லை. ஆதலால் தேர்ந்த எழுத்தாளராகித் தம் படைப்புகள் நன்கு விற்பனையாகவே அவ்வருமானத்தைக் கொண்டு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டார்.

    வீட்டை வெப்பமாக்குவதற்கு உதவும் பிராங்க்ளின் அடுப்பு (The Franklin Stove – 1740s), இடிதாங்கி (Lightning Rod-1752), இரட்டைக் குவியக் கண்ணாடி (Bifocal Glasses – 1784) போன்றவை அவரின் அறிவியல் கண்டுபிடிப்புகளுள் சில. இவ்வாறு அன்றாட வாழ்வுக்குப் பயன்படும் அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி உலகப் புகழ்பெற்றார் பெஞ்சமின் பிராங்க்ளின். தம் அறிவுசார் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயனளிக்கவேண்டும் எனும் உயர்ந்த நோக்கில் அவை எவற்றுக்குமே அவர் காப்புரிமை (patent) பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா, இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலமது. 1730களில் மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். 1751இல் பென்சில்வேனியா சட்டமன்றத்தின் உறுப்பினராக அவர் தெரிவுசெய்யப்பட்டார். தற்சார்புள்ள காலனிய ஆட்சியை உருவாக்குதல், இங்கிலாந்து அமெரிக்காவை நியாயமான வகையில் நடத்துவதற்கான செயல்களில் ஈடுபடுதல், காலனித்துவ நலன்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில், காலனித்துவ முகவராக (a colonial agent) 1757 முதல் 1775 வரை, அவர் இலண்டனில் வசித்தார்.

    ஆனால் இங்கிலாந்து தொடர்ந்து அமெரிக்கக் காலனிகள்மீது கடுமையாக வரி விதிப்பது, காலனிகளில் வசித்த மக்களின் குறைகளைப் புறக்கணிப்பது, கடுமையான தண்டனைகளை வழங்குவது போன்ற முறையற்ற அடக்குமுறைகளில் ஈடுபடவே, காலனிகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அவை இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெறவேண்டும் எனும் முடிவுக்கு வந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

    1775இல் இங்கிலாந்துக்கும் இங்கிலாந்தின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்ற அமெரிக்கக் காலனிகளுக்குமிடையே அமெரிக்கப் புரட்சிப் போர் (American Revolutionary War) தொடங்கியது.

    1775இல் பெஞ்சமின் பிராங்க்ளினும் அமெரிக்கா திரும்பிவிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான சுதந்திரப் பிரகடனத்தை (Declaration of Independence) ஜூன், 1776இல் அமெரிக்கா உருவாக்கத் தொடங்கியது. அந்தப் பிரகடனத்தை உருவாக்க நியமிக்கப்பட்டிருந்த தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson), ஜான் ஆடம்ஸ் (John Adams), ரோஜர் ஷெர்மன் (Roger Sherman), இராபர்ட் லிவிங்ஸ்டன் (Robert R. Livingston) ஆகிய நால்வரோடு இணைந்து பெஞ்சமின் பிராங்க்ளினும் (Benjamin Franklin) பணியாற்றினார். இவர்களை ஐவர் குழு (the Committee of Five) என்பர். சுதந்திரப் பிரகடனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை தாமஸ் ஜெபர்சன் எழுத, அவற்றில் திருத்தங்கள் செய்வது, தெளிவுக்காகச் சிலவற்றைச் சேர்ப்பது போன்றவற்றை பிராங்க்ளின் மேற்கொண்டார்.

    1776, ஜூலை 4இல் அமெரிக்கச் சுதந்திரத்திற்கான பிரகடனம் முறையாக காண்டினெண்டல் காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெஞ்சமின் பிராங்க்ளின் பிரான்சுக்கான அமெரிக்கத் தூதராக அதே ஆண்டு திசம்பரில் நியமிக்கப்பட்டார். பிரான்சுடன் நல்லுறவைப் பேணி அந்நாட்டிடமிருந்து அமெரிக்கப் புரட்சிப் போருக்கான ஆதரவையும், படையுதவி, பொருளாதார உதவி, போர்த்தளவாடங்கள் முதலியவற்றையும் பெற்றார். பிப்ரவரி 6, 1778இல் அமெரிக்கா பிரான்சுடனான கூட்டணி ஒப்பந்தமும் (The Treaty of Alliance with France) செய்துகொண்டது.

    அமெரிக்காவுடன் பிரான்சும் கைகோத்து இங்கிலாந்துக்கு எதிரான போரில் இறங்கியதால் அமெரிக்கா இங்கிலாந்தை வீழ்த்துவது எளிதானது. 1783இல் அமெரிக்காவைச் சுதந்திர நாடாக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டது.

    இவ்வாறு அமெரிக்கா சுதந்திர நாடாவதற்கு பெஞ்சமின் பிராங்க்ளின் இராஜதந்திரத்தோடு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அதனைத் தொடர்ந்து 1787இல் அமெரிக்காவுக்கான அரசியலமைப்பு (constitution), ஜேம்ஸ் மேடிசனின் (James Madison) முதன்மையான பங்களிப்பில் வடிவமைக்கப்பட்டது. ஜேம்ஸ் மேடிசனை ’அமெரிக்க அரசியலமைப்பின் தந்தை’ என்பர்.

    பிராங்க்ளின் உள்ளிட்ட 39 பிரதிநிதிகள் செப்டம்பர் 17, 1787 அன்று அதில் கையெழுத்திட்டுப் புதிய தேசத்தின் அடித்தளத்தை முறையாக நிறுவினர்.

    அமெரிக்கா இங்கிலாந்துக்கு எதிரான புரட்சிப்போரில் வெற்றிபெற்றுச் சுதந்திர நாடாவதற்கும், அதன் அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும் பெரும் பங்களிப்புச் செய்தமையால் அமெரிக்க உருவாக்கத் தந்தையருள் ஒருவராக (One of the Founding Fathers of America) போற்றப்படுகின்றார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

    1749இல் அவர் உருவாக்கிய பிலடெல்பியா கலைக்கழகம் (Academy of Philadelphia) என்று பென்சில்வேனியாப் பல்கலைக்கழகமாக (University of Pennsylvania) உயர்ந்து நிற்கின்றது. அமெரிக்காவின் முதல் பொதுநூலகத்தை, சிறுதொகையைச் சந்தாவாகக் கட்டி மக்கள் பயன்பெறும் வகையில், 1731இல் பிலடெல்பியாவில் அவர் நிறுவினார் (America’s first subscription library).

    கடின உழைப்பு, விடாமுயற்சி, தடைகளுக்கு அஞ்சாத் துணிவு, தொடர் கற்றலில் ஆர்வம், எழுத்தாற்றல், சமூக முன்னேற்றத்தில் நாட்டம், நாட்டுப்பற்று போன்ற திறன்கள் ஒருவரை எத்தகு மாமனிதராக உயர்த்தும் என்பதற்கு பெஞ்சமின் பிராங்க்ளினின் வாழ்க்கை வரலாறு தெளிவான சான்றாகும்.

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    1. britannica.com/biography/Benjamin‑Franklin

    2. https://www.bbc.co.uk/history/historic_figures/franklin_benjamin.shtml

    3. https://en.wikipedia.org/wiki/Benjamin_Franklin

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 308

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இதோ அடுத்தொரு இங்கிலாந்தின் நிலவரங்களோடு மீண்டும் ஒரு மடலுடன் உங்களுடன் இணைகிறேன்.

    ஜூலை 2025 இங்கிலாந்து அரசியலில் ஒரு முக்கியமான கட்டமாக இருந்தது.

    இப்போதைய இங்கிலாந்து அரசியல் நிலப்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நைஜல் வெராஜ்  தலைமையிலான ரீபோர்ம் கட்சி குடியேற்றக் கொள்கை தவிர்ந்த ஏனைய கொள்கைகள் பற்றி விளக்கத் தொடங்கியுள்ளது.

    இங்கிலாந்தினுள் சட்டவிரோதமாக சிறு படகுகள் மூலம் வருவோருக்கெதிரான ஆதரவின் அனுகூலத்துடன் தன்னை அரசியலுக்குள் தக்க வைத்த ரீவோர்ம் கட்சி த்ஜம்மை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    குடியேற்றக் கொள்கைகள், மற்றும் NHS மீதான நிதி குறைபாடுகள் குறித்து நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்களில் தீவிர விவாதங்கள் நடைபெற்றன.

    லண்டன் நகரில், சமூக நீதி மற்றும் இன ஒற்றுமையை வலியுறுத்தும் பேரணிகள் பல அமைப்புகளால் நடத்தப்பட்டன.

    இவை, இளைய தலைமுறையின் அரசியல் விழிப்புணர்வை தூண்டியதோடு, பன்முக சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலித்தன.

    இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், காசா பகுதியில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கு எதிராக, இங்கிலாந்து அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டியது.

    60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, பசியால் வாடும் குழந்தைகள் குறித்து பிரதமர் கியர் ஸ்டாமர் உருக்கமான அறிக்கையை வெளியிட்டார்.

    இஸ்ரேல், காசாவுக்குள் மருத்துவ உதவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், பிரித்தானிய அரசு செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தை ஒரு அரசாக அங்கீகரிக்கும் என அவர் எச்சரித்தார்.

    இது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு முன்னதாக சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
    அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், ஜூலை 2025-இல் ஸ்கொட்லாந்து விஜயத்தில் ஈடுபட்டார்.

    எடின்பரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே, அவரது வருகைக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமெரிக்க குடியேற்றக் கொள்கைகள், காசா போரில் அவரது நிலைப்பாடு, மற்றும் சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் குறித்து எதிர்ப்பு முழக்கங்கள் எழுந்தன.

    இங்கிலாந்து அரசியல் சூழ்நிலையை இந்த விஜயம் மேலும் பரபரப்பாக்கியது.

    இது உள்ளூர் அரசியல் விவாதங்களை சர்வதேச அரசியல் தாக்கங்களுடன் இணைக்கும் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது.

    லண்டனின் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி திருவிழா இந்த ஆண்டும் மிகுந்த பக்தி மற்றும் பாசத்துடன் கொண்டாடப்பட்டது.

    மலர் அலங்காரங்கள், தீமிதி விழா, மற்றும் பஞ்சமி, சஷ்டி, ஆடிப்பூரம் நாட்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    இளம் தலைமுறையினர் பாரம்பரிய நடனங்கள், பஜனை, மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழர் கலாச்சாரத்தின் உயிரோட்டத்தை மேடையில் வெளிப்படுத்தினர்.

    இந்த விழா, தமிழர் ஆன்மிக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.

    இலண்டன் ஶ்ரீ விம்பிள்டன் கணபதி ஆலயத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

    பக்தர்கள் தேரை வடம் பிடித்து நகர்வலமாக இழுத்தனர்.

    கணபதி ஹோமம், அபிஷேகம், மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் பக்தி உணர்வை தூண்டின.

    சிறுவர், பெரியோர் பங்கேற்ற இந்த விழா, சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்தியது.

    தேரோட்டம் என்பது வெறும் ஆன்மிக நிகழ்வாக மட்டுமல்ல அது ஒரு சமூக உறவின் வெளிப்பாடாகவும், தமிழர் அடையாளத்தின் ஊர்வலமாகவும் விளங்குகிறது.

    இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது.

    இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்றது.
    இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி, சீனியர்கள் இல்லாமலும், எதிர்பாராத வெற்றியைப் பெற்றது.

    முகமது சிராஜ் 5 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமுறையின் தைரியத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியது.

    ஜூலை 2025 இங்கிலாந்தில், தமிழர் ஆன்மிக உற்சாகம், இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீரத்தன்மை, மற்றும் சமூக அரசியல் விவாதங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பன்முகத் திரைபடமாக அமைந்தது.

    இது, உலகத் தமிழர்களின் கலாச்சார, ஆன்மிக, மற்றும் விளையாட்டு பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு அரிய மாதமாக இருந்தது.

    இங்கிலாந்து, தமிழர் அடையாளம், இந்திய வீரத்தன்மை, மற்றும் சமூக மாற்றத்தின் மேடையாக தொடர்ந்து விளங்கட்டும்.

    2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மந்தநிலைக்குச் சென்ற இங்கிலாந்து பொருளாதாரம், 2025-இல் சற்று மேம்படும் என நிதி அமைச்சகம் மற்றும் OBR (Office for Budget Responsibility) கணித்துள்ளது.

    2025 வளர்ச்சி விகிதம்: 1.4% → 1.9% என உயர்வு

    இருப்பினும், உணவுப் பொருட்கள், எரிபொருள், மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறைவால், இறக்குமதி சார்பு அதிகரித்து, விலை உயர்வும், வேலைவாய்ப்பு சிக்கலும் தொடர்ந்தன.

    உக்ரைன்–ரஷ்யா போர், சீனாவின் விலை போட்டி, மற்றும் உற்பத்தி செலவுகள் காரணமாக, தொழிற்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

    2018 வரை, சட்டவிரோத குடியேற்றம் பெரும்பாலும் லொறிகளின் பின்னால் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழைவதன் மூலம் நடந்தது.

    ஆனால், 2020–2025 காலப்பகுதியில், சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் வழிமுறை மூன்று மடங்காக அதிகரித்தது.

    இது, பாதுகாப்பு சிக்கல்கள், மனிதாபிமான பிரச்சனைகள், மற்றும் உள்நாட்டு அரசியல் விவாதங்களை தூண்டியது.

    இங்கிலாந்து அரசு, இந்த குடியேற்றவர்களை தற்காலிகமாக ஹோட்டல்கள், விடுதிகள், மற்றும் பழைய இராணுவ முகாம்களில் தங்கவைத்தது.

    இவை பெரும்பாலும் மாநகர எல்லைகளில், அல்லது சிறிய கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டன.

    இதனால், உள்ளூர் மக்களுக்கு சில கவலைகள் எழுந்தன:

    பாதுகாப்பு மற்றும் சமூக அமைதி குறித்த பயம்

    உள்ளூர் வசதிகள் மீது அழுத்தம் (மருத்துவம், கல்வி, போக்குவரத்து)

    தகவல் இல்லாமை மற்றும் அரசின் செயல்முறை பற்றிய நம்பிக்கையின்மை

    2025 ஜூலை மாதத்தில், பல இடங்களில் மக்கள் விடுதிகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இவை சமூக ஊடகங்கள், உள்நாட்டு ஊடகங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் மூலம் தூண்டப்பட்டன.

    போராட்டங்களின் முக்கிய காரணங்கள்:

    அரசின் செயல்முறை பற்றிய தெளிவின்மை

    உள்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வசதிகள் குறைவாகும் பயம்

    சமூக கலாச்சார மாற்றம் குறித்த எதிர்ப்பு

    சில ஊடகங்கள் மற்றும் அரசியல் பிரிவுகள் இந்த குடியேற்றத்தை அச்சுறுத்தலாக சித்தரித்தது

    இங்கிலாந்து அரசுக்கு, மக்கள் நலனும், குடியேற்றவர்களின் மனித உரிமையும் சமநிலையாகக் கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    தகவல் பரவல், உள்ளூர் மக்களுடன் கலந்தாய்வு, மற்றும் நீடித்த தீர்வுகள் தேவைப்படுகிறது.

    இங்கிலாந்து அரசாங்கம் இன்று (ஆகஸ்ட் 4, 2025) எல்லைப் பாதுகாப்புக்கான £100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது,

    இது சிறுபடகுகள் வழியாக சட்டவிரோத நுழைவுகளை தடுக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

    இது, புதிய அரசின் (கியர் ஸ்டாமர் தலைமையில்) முக்கிய சவாலாகவும், நாடாளுமன்ற விவாதங்களில் முக்கிய அம்சமாகவும் மாறியுள்ளது.

    £100 மில்லியன் நிதி ஒதுக்கீடு:
    300 புதிய அதிகாரிகள் National Crime Agency-இல் சேர்க்கப்படுவர்

    உயர்தர கண்டறிதல் தொழில்நுட்பம் மற்றும் AI ஆதரித்த உளவுத்துறை கருவிகள்

    சமூக ஊடகங்களில் சட்டவிரோத நுழைவுகளை விளம்பரப்படுத்தும் புதிய குற்றச்சாட்டு – 5 ஆண்டுகள் சிறை வரை தண்டனை

    “One in, One out” ஒப்பந்தம்:

    பிரான்ஸுடன் புதிய ஒப்பந்தம்  சட்டவிரோதமாக வந்தவர்கள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படுவர்

    அதற்குப் பதிலாக, பிரிட்டனுடன் தொடர்புடைய அகதிகள் ஏற்கப்படுவர்.

    சர்வதேச ஒத்துழைப்பு:
    ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் ஆட்கடத்தல் மன்னர்களை குறிவைக்கும் நடவடிக்கைகள்

    ஐரோப்பிய பொலிசாருடன் ஒப்பந்தங்கள்,
    எல்லைப் பாதுகாப்புப் பிரிவை வலுப்படுத்தல்

    அரசியல் எதிர்வினைகள்

    உள்துறை அமைச்சர் இவெட் கூப்பர் கூற்றுப்படி

    “இது ஒரு முழுமையான திட்டம் – நம்முடைய எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்.”   உள்ளது என்கிறார்.

    ஆனால் கன்சத்வேடி கட்சியோ “இது ஒரு தலைப்புச் செய்திக்காகச் செய்யப்படும் முயற்சி உண்மையான தீர்வு இல்லை” என விமர்சனம் செய்துள்ளது.

    இப்படியாக இங்கிலாந்து நிகழ்வுகளை மடல் மூலம் வலம் வந்தோம்.

    ” அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ” என்று ஒரே வரியில் முடித்து விடலாமா?

    Share
  • ஒரு புலம் பெயர் தமிழன் , ஒரு கோணம் , ஒரு பார்வை

    ஒரு புலம் பெயர் தமிழன் , ஒரு கோணம் , ஒரு பார்வை

    சக்தி சக்திதாசன்

    1975ஆம் ஆண்டு, 18 வயது மாணவனாக இங்கிலாந்து வந்தேன்.

    உயர்கல்வி எனும் கனவோடு வந்த என் பயணம், இன்று 51 ஆண்டுகளைக் கடந்த ஒரு தாத்தாவின் பயணமாக மாறியுள்ளது.

    இந்த காலப்பகுதியில், இங்கிலாந்து 15 பிரதமர்களைக் கண்டுள்ளது.

    ஒவ்வொருவரும் தனித்துவமான அரசியல் கோட்பாடுகளோடு வந்தாலும், அவர்களின் முடிவுகள் என் வாழ்க்கையின் பல பரிமாணங்களைத் தாக்கியுள்ளன.

    மாறும் தலைமைகளும், மாறாத மக்களுமாய் கண்ட காட்சிகளின் தாக்கங்கள் தந்த அனுபவப் பரிமாணங்கள் பரபரப்பானவை , பிரமிப்பானவை.

    சிலரை மட்டும் இங்கு அலசிப் பார்க்கிறது எந்தன் மனம்.

    ஹரோல்ட் வில்சன் (1964–1970, 1974–1976)

    தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற கோட்பாட்டுடன் வந்தார்.

    கல்வி, சுகாதாரம், சமூக சமத்துவம் ஆகியவற்றில் முக்கியமான சட்டங்களை கொண்டு வந்தார்.

    Open University திறந்த பல்கலைக்கழக உருவாக்கம் எனது உயர்கல்வி கனவுக்கு வழிகாட்டியது.

    நிற வேற்றுமை தடைச் சட்டம், கருத்தடை சட்டம், பாலியில் குற்ற சட்டம் போன்ற சட்டங்கள் முக்கியத்துவம் பெற்றன.

    புலம்பெயர்ந்தவர்களுக்கான உரிமைகளை உறுதி செய்யபட்டன.

    மாணவனாக இருந்த எனக்கு, இங்கிலாந்து ஒரு திறந்த சமூகமாக மாறுவதற்கான ஆரம்பக் காலம் இது.

    ஹரோல்ட் வில்சன் பிரதமராக இருந்த காலத்தில் 1975ம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய பொதுச் சந்தையில் அங்கத்துவம் பெறுவதற்கான மக்கள் ஆணையை சர்வ ஐன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக் கொண்டது.

    டெனிஸ் ஹீலி (1964–1970, 1974–1979)

    ஹரோல்ட் வில்சன் பதவி இராஜினாமா செய்ய இவர் எஞ்சியிருந்த காலத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றார்

    பாதுகாப்பு அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் பணியாற்றினார்.

    – 1976ஆம் ஆண்டு, IMF கடன் பெறும் சூழ்நிலையில், கடும் செலவுக் குறைப்புகளை மேற்கொண்டார்.

    – மாணவனாக இருந்த எனக்கு, கல்வி உதவித் தொகைகள் குறைவடைந்தன; வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்தன.

    – ஆனால், அவரது நேர்மையான அரசியல் அணுகுமுறை, எனக்கு பொறுப்பான நிர்வாகம் என்ற கருத்தை உருவாக்கியது.

    மார்கரெட் தாட்சர் (1979–1990)

    “இரும்பு பெண்மணி” என அழைக்கப்பட்ட இவர், தனியார்மயமாக்கல், தொழிலாளர் சங்கங்களின் கட்டுப்பாடு ஆகியவற்றில் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தினார்.

    என் மாணவ வாழ்க்கையில் வேலைவாய்ப்பு குறைபாடுகள், சமூக சேவைகளின் சுருக்கம் போன்றவை நேரடியாகத் தாக்கின.

    ஜோன் மேஜர் (1990–1997)

    மக்கள் வரிச் சட்டம் (Poll Tax) நீக்கம், உள்வரி அறிமுகம் என, சமூக நலனுக்கான மாற்றங்களை மேற்கொண்டார்.

    கறுப்பு புதன் (Black Wednesday) எனப்படும் பொருளாதார வீழ்ச்சி, எனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் குலைத்தது.

    பிரஜைகள் சட்ட மூலம், அரசு சேவைகளில் பொறுப்புணர்வு உருவாக்க முயன்றார்.

    வட அயர்லாந்து சமாதன உடன்படிக்கை (Northern Ireland Peace Process) ஆரம்பித்தது, சமாதானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

    நான் தந்தையாகிய காலத்தில், பிள்ளைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் இவரது நடவடிக்கைகள் நேரடியாகப் பாதித்தன.

    டோனி பிளேயர் (1997–2007)

    “நியூ லேபர்” என்ற புதிய கோட்பாட்டுடன் வந்த இவர், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்தார்.

    என் பிள்ளைகள் பள்ளிக்கல்வி பெறும் காலத்தில், இவரது திட்டங்கள் நன்மை பயந்தன.

    டேவிட் கேமரூன் (2010–2016)

    இவரது ஆட்சியில் நடந்த பிரெக்சிட் வாக்களிப்பு, எனது குடும்பத்தில் எதிர்காலம் குறித்த குழப்பங்களை ஏற்படுத்தியது.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிய சவால்களை உருவாக்கியது.

    பொரிஸ் ஜான்சன் (2019–2022): கோவிட் காலத்தின் பிரதமர்

    கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் நடவடிக்கைகள்

    2020 மார்ச் 23: முதல் தேசிய பூட்டுதல் அறிவிக்கப்பட்டது. “வீட்டில் இருங்கள், வைத்திய சேவையைப் பாவியுங்கள் , உயிர்களைப் பாதுகாப்பதற்கு உதவுங்கள் (Stay at home, protect the NHS, save lives) என்ற முழக்கம் மக்கள் மனதில் பதிந்தது.

    பரிசோதனை மற்றும் தடுப்பூசி திட்டங்கள்:
    “சோதனை மற்றும் நோயாளிகளை கண்டறிதல்” திட்டம் £37 பில்லியன் செலவில் தொடங்கப்பட்டது,

    ஆனால் பல குறைபாடுகள் இருந்தன.
    UK உலகில் முதலில் தடுப்பூசியை அங்கீகரித்து வழங்கியது.

    பொருளாதாரத்தை சீராக்கும் திட்டத்தில் மக்கள் உணவகங்களில் உண்பதற்காக அரச உதவி அளிக்கப்பட்டது.
    – “Eat Out to Help Out” திட்டம், மக்கள் உணவகங்களுக்கு செல்ல ஊக்குவிக்கப்பட்டது,

    ஆனால் இது கோவிட் பரவலை அதிகரித்தது என ஆய்வுகள் கூறுகின்றன.

    அரசியல் மற்றும் நம்பகத்தன்மை சிக்கல்கள்
    கட்சி விதி மீறல் (Partygate) பூட்டுதல் விதிகளை மீறி டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடந்த கொண்டாட்டங்கள், நம்பகத்தன்மையை பாதித்தன.

    லாங் கோவிட் குறித்து அலட்சியம்: 2020ல், அவர் “லாங் கோவிட் என்பது உண்மையல்ல” என ஒரு ஆவணத்தில் எழுதியதாக தகவல்கள் வெளியாகின.

    டாமினிக் கமிங்ஸ், மட் கன்கொக் போன்ற முக்கிய ஆலோசகர்களுடன் கருத்து வேறுபாடுகள்.

    சமூக சமத்துவம் குறித்த விமர்சனங்கள்: கறுப்பு , ஆசிய இன சமூகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட போதும், ஜான்சன் அரசு “நிற வேற்றுமை நிராகரிப்பு ” அணுகுமுறையை பின்பற்றியது என கோவிட் விசாரணைக் குழு கூறியது.

    லிஸ் ட்ரஸ் (செப்டம்பர்–அக்டோபர் 2022): மிகக் குறுகிய காலம்

    தற்காலிக பட்ஜெட் £45 பில்லியன் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது,

    ஆனால் பங்கு சந்தை வீழ்ச்சி, பவுண்ட் மதிப்பு குறைவு, வட்டி உயர்வு ஆகியவை ஏற்பட்டன.

    உலக வங்கி, இங்கிலாந்து வங்கி ஆகியவை தலையீடு செய்ய வேண்டிய நிலை.

    குவாசி க்வாட்டங் பணி நீக்கம், ஜெர்மி கண்ட் நிதியமைச்சராக நியமனம்.
    – Conservative கட்சியில் ஆதரவு குறைந்து, 49 நாட்களில் பதவி விலகினார்.

    Thatcher-போன்ற “Iron Lady” பிம்பத்தை உருவாக்க முயற்சி.

    கன்சர்வேடிவ் (Conservative) உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் பொதுமக்கள் ஆதரவு குறைவாக இருந்தது.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமை, பத்திரிகை விமர்சனங்கள், பார்டி உள்நோக்க சிக்கல்கள் ஆகியவை பதவி விலகும் நிலையை உருவாக்கின.

    ஒரு புலம்பெயர்ந்தவனின் பார்வையில்

    பொரிஸ் ஜான்சன் காலத்தில், கோவிட்-19 எனும் உலகளாவிய பேரழிவை எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்கள், நம்பகத்தன்மை வீழ்ச்சி, மற்றும் சமூக சீர்கேடுகள் எல்லாமே அந்த காலகட்டத்தின் சிக்கல்களுக்கு முகம் கொடுத்தவர்களுக்கு ஒரு வாழ்வாதார பிரச்சனையாகவே உருவானது.

    லிஸ் ட்ரஸ் காலம், ஒரு பொருளாதார சோதனையின் விளைவாக, அரசியல் நிர்வாகத்தின் நுட்பங்களை மீறிய ஒரு பாடமாகும்.

    இவர்கள் இருவரும், எனது 50 வருட அரசியல் அனுபவத்தில், நாட்டின் நிலைமையை மாற்றிய பிரதமர்கள். ஆனால், என் மனதில் பதிந்தது, மக்களின் நலனுக்கான அரசியல் தான்.

    ரிஷி சுனாக் ( 2022 – 2024 )

    ஒரு புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆசியர் பிரதமராக வருவது, எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமிதத்தை அளித்தது.

    ஆனால் பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதார செலவுகள் ஆகியவை தொடர்ந்தே இருந்தன.

    பொருளாதரத்தில் நிபுணராக இருந்தும் அனைத்து பொருளாதார சிக்ககளின் பொறுப்பும் இவரையே சார்ந்தது.

    இவர் ஒரு புலம்பெயர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது இவருக்கு எதுவிதமான அனுகூலத்தையும் அளிக்கவில்லை என்பதுவே உண்மை.

    ஐக்கிய இராச்சியம் கிறீஸ்துவ மதத்தை பெரும்பான்மையாகக் கொண்ட வெள்ளை இனத்தவரின் நாடு எனும் கருத்தை ஆதரிப்போர் இவரின் வீழ்ச்சியைக் கொண்டாடினார்கள் என்பதும் உண்மை.

    அதேநேரம் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை ஒரு வேற்று மதம், இனம் , நிறம் கொண்ட ஒருவருக்குக்கு கொடுக்கும் சந்தர்ப்பம் இங்கிலாந்து போன்ற ஒரு நாட்டிலேயே நிகழும் என்பது எனக்கு இந்நாட்டின் பிரஜையாக பெருமையளிக்கிறது என்பதும் உண்மை.

    கியர் ஸ்டார்மர் (2024–தற்போது)

    தற்போதைய பிரதமர், “நிலைத்தன்மை மற்றும் மிதவாதம்” எனும் கோட்பாட்டுடன் ஆட்சி நடத்துகிறார்.

    சமூக சமத்துவம், புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகள் குறித்து நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

    இந்த 50 ஆண்டுகளில், நான் ஒரு மாணவனாக, கணவனாக, தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக, ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் என் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே அனுபவித்துள்ளேன்.

    அரசியல் என்பது வெறும் தலைவர்கள் மாற்றம் அல்ல; அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு மனிதனின் வாழ்வின் ஓரங்களை மாற்றும் சக்தி.

    இங்கிலாந்து அரசியல், அதன் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் கொடுத்த தாக்கங்கள் கூட ஏதோ வகையில் என் செதுக்களில் பங்காற்றியிருக்கின்றன.

    ஆனால், என் தமிழ்ப் பாரம்பரியம், என் குடும்பத்தின் உறவுகள், என் மனதின் நிலைத்தன்மை இவை எனக்கு வழிகாட்டிய ஒளிகள்.

    அரசியல் மாற்றங்களை நேர்மறையாக அணுகும் மனப்பாங்கு, ஒரு புலம்பெயர்ந்தவனின் உண்மையான வெற்றிக்குறியாகும்.

    இந்த 50 ஆண்டுகளில், நான் ஒரு மாணவனாக, கணவனாக, தந்தையாக, இன்று ஒரு தாத்தாவாக, ஒவ்வொரு அரசியல் மாற்றத்தையும் என் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே அனுபவித்துள்ளேன்.

    அரசியல் என்பது வெறும் தலைவர்கள் மாற்றம் அல்ல; அது ஒரு குடும்பத்தின், ஒரு சமூகத்தின், ஒரு மனிதனின் வாழ்வின் ஓரங்களை மாற்றும் சக்தி.

    வாழ்க்கை விரிகின்றது , கணவன், தந்தையாக பொறுப்புகள் பெரிதாகின்றன.

    உறவுகள், பணியிடம், குடும்ப வாழ்க்கை
    -மாறும் முன்னுரிமைகள். ‘நான் என்ன பெறலாம்’ என்ற நிலை ‘நாங்கள் என்ன தரலாம்’ என்ற நிலைக்கு மாறுகிறது.

    தொடர்புகளில் ஆழம். பிள்ளைகள் மூலம் நேர்மையான மனிதத் தன்மை மேம்படுகிறது.

    கடந்த நாள் கனவாகத் தோன்றுகிறது; இன்றைய நாள், எதையாவது அர்ப்பணிக்க வேண்டிய நேரமாக மாறுகிறது.

    அடக்கம் மற்றும் அமைதி. வாழ்க்கையின் முழுமையான பக்கங்களை பார்த்த பின் வரும் ஒரு தூர பார்வை.

    பாரம்பரியம் & கலாசார கவனம். ‘நாம் யார்’ என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    அருளும் அறிவும் ஒருங்கிணைகின்றன. சலிப்பற்ற காதல், விதி நிலைத்த ஞானம் இவை தாத்தா மனதின் தனிச் சீரிய தன்மைகள்.

    புதுமுறையை ஊக்குவிக்கும் முயற்சி. “பிழைத்ததை பகிர்வோம்” என்ற எண்ணம், இளம் தலைமுறையுடன் வேரடுக்கும்.

    “நான் வாழ்ந்த வாழ்க்கையின் மொத்தம் இப்போது ஒரு வழிகாட்டி தீபமாகிறது.”

    காலம் ஒரு சோதனை அல்ல, ஒரு அருள்

    ஒரு மாணவன் கனவுகளின் உச்சியில் நிற்பவர்.

    ஒரு தாத்தா, அனுபவங்களின் பள்ளத்தில் அமைதியுடன் வசிப்பவர்.

    இருவரும் ஒவ்வொரு பருவத்தில், வாழ்வை புதிதாய் எழுத்து எழுதுகிறவர்கள்.

    என் இனிய வாசக உள்ளங்களே ! எனது இந்த 50 வருட கால இங்கிலாந்து வாழ்க்கையின் அனுபவங்களை ஒரு புர்ஹித கோணத்தில் பார்க்க விழைந்ததன் விளைவே இது.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 305

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 305

    சக்தி சக்திதாசன்
    இங்கிலாந்து

    அன்பான வல்லமை வாசக நெஞ்சங்களே !

    நான் நலமேயுள்ளேன் . நீங்களும் நலமாக இருக்க அனைவர்க்கும் பொதுவான இறையைப் பிரார்த்திக்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    2025-இன் மே மாதம், இங்கிலாந்து ஒரு பரிணாமக் கட்டத்தில் நுழைந்தது. வெப்பம் அதிகரித்தது மட்டுமல்ல, அரசியல் சூழ்நிலையும், சமூக மாற்றங்களும், கலாச்சார நிகழ்வுகளும் நாட்டின் மனநிலையை பிரதிபலித்தன.

    புதிய ஆட்சியின் சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள், மற்றும் உள்ளூர் தேர்தல்களின் தாக்கம்—இவை அனைத்தும் ஒரு புதிய பாதையை உருவாக்கின.

    அரசியல் பரிமாணம்: லேபர் ஆட்சியின் சோதனைக்காலம்

    2024-இல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, தனது ஆட்சியின் 11வது மாதத்தில் முழுமையான செலவுத்திட்ட மதிப்பீட்டை (Comprehensive Spending Review) மே 11-ஆம் தேதி வெளியிட்டது.

    இது, நாட்டின் எதிர்கால செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கான திசையை நிர்ணயித்த முக்கிய தருணமாக அமைந்தது.

    NHS மற்றும் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி

    சுகாதார சேவைகளுக்கு வருடத்திற்கு 2.8% வரை அதிகரிப்பு.

    பொதுத்துறை முதலீடுகள் – பள்ளிகள், போக்குவரத்து, மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களில் முதலீடு.

    பிரதமரின் நோக்கம் – “ஒரு புது பத்தாண்டு தேசிய மறுசீரமைப்பு” என்ற லேபர் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் முயற்சி.

    இது, லேபர் ஆட்சியின் “தொடக்க வெற்றிக்காலம்” முடிவடைந்து, நடவடிக்கைகள் மூலம் நம்பிக்கை பெற வேண்டிய கட்டமாக மாறியதை சுட்டிக்காட்டுகிறது.

    உள்ளூர் தேர்தல்கள்  ரீபார்ம் UK-வின் எழுச்சி

    மே 2 அன்று நடைபெற்ற உள்ளூர் தேர்தல்களில், ரீபோர்ம் (Reform UK) கட்சி 677 கவுன்சில் இடங்களை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    குறிப்பாக, ஹல் ‘ கிழக்கு யோர்க்‌ஷையர் (Hull & East Yorkshire) மற்றும் Greater Lincolnshire ஆகிய இரண்டு புதிய மேயர் ஆட்சிகளை கைப்பற்றியது.

    ஆனால்…

    – இது முழுமையான வெற்றி அல்ல

    ரீபோர்ம் யூ.கே (Reform UK) இன் வெற்றிகள் பெரும்பாலும் சிறிய நகரங்களில் மட்டுமே.

    சவால்கள் – கட்சி உறுப்பினர்கள் சிலர், “தொழிலாளர்களை நீக்குவோம்” போன்ற பிரச்சனையான கருத்துகளை வெளியிட்டதால், சட்டரீதியான சிக்கல்கள் உருவாகும் அபாயம்.

    இது, பிரதமர் ஸ்டார்மரின் ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்வினையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால் ரீபோர்ம் யூ.கே (Reform UK) இப்போது ஆட்சியில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .

    இது ஒரு புதிய சோதனை.

    சமூக மாற்றங்கள் பல நிகழ்ந்தன ப்ரைட்(Bright) விழாக்களில் ஆதரவு குறைவு.

    LGBTQ+ ப்ரைட் விழாக்களுக்கு பெரும்பாலான பெருநிறுவனங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளன..

    Sony, Durex, Costa Coffee போன்ற பிராண்டுகள், DEI (Diversity, Equity, Inclusion) கொள்கைகளுக்கான அரசியல் எதிர்ப்புகளால், அமெரிக்காவில் ஏற்பட்ட அழுத்தங்களின் தாக்கமாக இங்கிலாந்திலும் பின்வாங்கியுள்ளன.

    இது, சமூக நீதி மற்றும் வர்த்தக அரசியலின் மோதலை வெளிப்படுத்துகிறது.

    இங்கிலாந்து நிறுவனங்கள், அமெரிக்க அரசியல் சூழ்நிலையின் தாக்கத்தில் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றத் தொடங்கியுள்ளன.

    கலாச்சாரம் மற்றும் மக்கள் நிகழ்வுகள்:

    ஷெல்சி மலர் கண்காட்சி (Chelsea Flower Show) [மே 21–25]

    பசுமை நகரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருப்பொருளில் தோட்டக்கலை விழா.

    வைக்கல் விழ (Hay Festival (மே 22–ஜூன் 1) – இலக்கியம், கவிதை, சிந்தனை உரைகள்.

    – Brighton Festival (மே 3–26) – இசை, நாடகம், நடனம், திரைப்படம்.

    – FA Cup Finals (மே 17–18) – வெம்ப்லியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப்போட்டிகள்.

    இப்படியான கலாசார நிகழ்வுகள் பல நடந்தேறின.

    ஒரு தேசத்தின் திசை மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இங்கிலாந்தில் தென்படத் தொடங்கியுள்ளது.

    2025 மே மாதம், இங்கிலாந்து அரசியல் மறுசீரமைப்பு, சமூக சிந்தனையின் மாறுதல், மற்றும் கலாச்சார உற்சாகம் ஆகியவற்றின் சந்திப்பாக அமைந்தது.

    லேபர் ஆட்சி தனது வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.

    Reform UK தனது வெற்றிகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மக்கள், மாற்றத்திற்கான உணர்வுடன், நடவடிக்கைகளை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கின்றனர்.

    இஸ்ரேல்–ஈரான் யுத்தம் மேற்கு ஆசியாவை பதற்றமூட்டும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மர் எடுத்துள்ள நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

    அவர், ஈரான் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறியதுடன், இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.

    இதன் மூலம், இங்கிலாந்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், மேற்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்படுகிறது.

    இருப்பினும், இந்த நிலைப்பாடு ஈரானின் தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும், இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

    இஸ்ரேல்–ஈரான் மோதல் தொடர்பாக இங்கிலாந்து அரசு முன்பு எடுத்திருந்த நிலைப்பாடுகள் சில முக்கிய அம்சங்களை கொண்டிருந்தன:

    – பயண எச்சரிக்கை: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய குடிமக்களுக்கு அரசு அறிவுறுத்தியது.

    இது அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை பிரதிபலிக்கிறது.

    – பிரித்தானிய குடிமக்கள் வெளியேற்றம்: இஸ்ரேலில் உள்ள பிரித்தானியர்களை வெளியேற்ற சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இது பிராந்தியத்தில் தீவிரமடைந்த மோதல்களுக்கு பதிலாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

    – இராணுவ பங்கேற்பில் எச்சரிக்கை: ஈரான், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் என எச்சரித்தபோதும், இங்கிலாந்து நேரடியாக எந்த இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கவில்லை.

    இதன் மூலம், இங்கிலாந்து தற்காலிகமாகத் தன்னைத் தவிர்த்துக்கொண்டு, பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.

    இங்கிலாந்து அரசு, பொதுவாக, இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமையை ஆதரிக்கின்ற போதிலும், நேரடி மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் ஒரு சமநிலை நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளது.

    இது ஒரு மாதம் மட்டுமல்ல – ஒரு புதிய அரசியல் பருவத்தின் தொடக்கம்.

    உக்ரைன் உடன்படிக்கை: இங்கிலாந்து மற்றும் உக்ரைன் இடையே 100 ஆண்டு கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இது ரஷ்யா-ஈர்ப்பு சூழ்நிலையில் உக்ரைனுக்கு உறுதுணையாக அமைகிறது.

    பிரெக்சிட் பிந்தைய வர்த்தக ஒழுங்குகள்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

    அரசியல் நிதி ஒழுங்குமுறை: தேர்தல் நிதி முறைகள் மற்றும் அரசியல் நிதி பங்களிப்புகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

    பாராளுமன்ற சீர்திருத்தம்: மேலவை உறுப்பினர்களை நியமிக்கும் முறையில் மாற்றம் செய்யும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

    2025 ஜூன் மாதம், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு வரலாற்றுச் சம்பவமாக, தீராத நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தங்கள் உயிரை தாங்களே முடிக்க அனுமதிக்கும் கருணைக் கொலை மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

    314–291 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மனித உரிமை, கண்ணியமான இறப்பு, மற்றும் தனிநபர் சுயாதீனத்தை முன்னிறுத்தும் ஒரு முக்கியமான சட்டமாக கருதப்படுகிறது.

    இது, 1967ஆம் ஆண்டு கருக்கலைப்பு சட்டத்துக்குப் பிறகு சமூகக் கொள்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த மசோதாவுக்கு எதிராக பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சமூக அழுத்தத்தால் தங்கள் உயிரை முடிக்கத் தூண்டப்படக்கூடும் என்ற எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவை உள்ளிட்ட மதநம்பிக்கைக் குழுக்கள், மனித வாழ்வின் மதிப்பை வலியுறுத்தி, இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியிருந்தனர்.

    இந்த சட்டம் மேல்சபையில் மேலும் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில், இங்கிலாந்து சமூகத்தில் இறுதி நேர உரிமைகள் குறித்த விவாதங்களை இது மேலும் தீவிரமாக்கியுள்ளது.

    இந்த மாத மடலில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பல நிகழ்வுகளையும் அதன் தாக்கங்களையும் பார்த்தோம்.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும்வரை.

    Share
  • கங்கைகொண்ட சோழபுரம்

     

    நம் தமிழ்நாட்டின் முக்கியப் பெருமைகளில் ஒன்று என்றால் அது நம் வரலாற்றுச் சின்னங்களும், பிரம்மாண்டமான பழமையான ஆலயங்களும்தான். அந்த வகையில் 1090 ஆண்டுகள் பழமையான  கங்கைகொண்ட சோழபுரம் என்ற வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய முதலாம் இராசராச சோழனின் மகனான இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. யுனெசுகோ பாரம்பரிய தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இக்கோவில் சோழர் கட்டிடக்கலையின் ஒரு அற்புத அடையாளம்.
    இராசராச சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் பிறந்தவன் மதுராந்தகன் என்ற இராசேந்திர சோழன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்று “கடாரம் கொண்டான்’ என்ற பட்டம் பெற்றவன்.
    தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோவிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டி, பெரிய சிவலிங்கத்தையும் நந்தியையும் உருவாக்கியவன் தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீசுவரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டியுள்ளான். தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து கும்பத்திற்கு அபிசேகம் செய்தான். இதனால் இவ்வூர் “கங்கை கொண்ட சோழபுரம்’ ஆனது. புனித நன்னீராட்டு நீரை கோவிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன்மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தவன், கோவிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்துக்கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வது வழக்கமாம். இக்கோவில் முழுவதும் வெண்மையாகக் காட்டியளிப்பதற்குக் காரணம் கோவில் முழுவதும் பாறாங்கல்லால் ஆனது. தமிழகத்திலேயே மிகப்பெரிய இலிங்கம் இங்கு தான் உள்ளது. ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.

    இந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றான கங்கைகொண்ட சோழபுரத்தில் சிவன் முதன்மைக் கடவுளாக இருக்கிறார். 250 ஆண்டுகள் சோழர் பேரரசின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த கோயில், பிரமாண்டமான கலை, சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றது. திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றான இக்கோவில் ஐராவதேசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில் எனப் போற்றப்பட்டு யுனெசுகோவின் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  இதன் பிரம்மாண்டமான கோபுரத்தின் உயரம் 55 மீட்டர், அதாவது 180 அடி. 170 மீ உயரமும் 98 மீ அகலமும் கொண்ட ஒரு அழகான முற்றம் உள்ளது. பிரதான மூலவர் தெய்வம் 13 அடி உயரத்துடன் பிரம்மாண்டமாக நின்று அருள்பாலிக்கிறார். கட்டமைப்பின் முக்கிய பகுதி 341 அடி உயரமும் 100 அடி அகலமும் கொண்டது.

    60 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும் தூண்களமைந்த முன்மண்டபமும் உள்ளன. கருவறையின் முன் இருபுறமும் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர் சிலைகள் காணப்படுகின்றன.

    கருவறையில் சந்திரக்காந்தக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கிறது. தெற்குநோக்கிய அம்மன் சன்னிதியிலுள்ள பெரியநாயகி அம்மன் திருஉருவச் சிலையின் உயரம் 9.5 அடி . பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி ஐந்து கருவறைகளும் சிம்மக்கிணறும் உள்ளன.

    அண்மையில்தான் இக்கோயிலில் கொடி மரம் அமைக்கப்பட்டது.
    முதன்மைக் கருவறைச் சுவற்றின் வெளிப்புற மாடங்களில் அர்த்தநாரீசுவரர், நடராசர், பிரம்மன், துர்க்கை, திருமால், சரசுவதி என ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. சோழர் கலைக்குச் சான்றாக விளங்கும் 11ஆம் நூற்றாண்டு காலத்திய வெண்கலச் சிலைகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது சுப்பிரமணியர் திருவுருவ வெண்கலச் சிலையாகும். ஒன்பது கோள்களைக் குறிக்கும் ஒற்றைக் கல்லாலான நவக்கிரகம்  இக்கோயிலில் அமைந்துள்ளது.

    கல்வெட்டுகளின்படி இக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு முதலாம் இராசேந்திரன் ஆட்சிக்குவந்த இருபதாம் ஆண்டான பொ.ஊ. 1035 ஆகும். கங்கைவரை சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் இராசேந்திரன், தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். இடைக்காலச் சோழத் தலைநகராக விளங்கிய தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக முதலாம் இராசேந்திரன் மாற்றியதிலிருந்து தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

    முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பின் வந்த பெரும்பாலான சோழ அரசர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டிக் கொண்டனர். இவ்வரசனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த  முதலாம் குலோத்துங்க சோழனால் இந்நகரைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

    சேரர், சோழர், பாண்டியர் என மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் மூவர் உலாவிலும், தக்கயாகப்பரணியிலும் இந்நகரைப் பற்றிய விரிவான விளக்கங்களைக் காணமுடிகின்றது.  சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ள இக்கோவிலில், இசை, நடனம், வெண்கலச் சிலை உருவாக்கம் போன்ற பற்பல கலாச்சார நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.
    இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையினரால்   ஒரு பாரம்பரியமான நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
    இங்கு சரசுவதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் “ஞான சரசுவதி, ஞான லட்சுமி” என அழைக்கப்படுகின்றனர்.
    9 வயது சிறுமியின் வடிவில் புன்னகைத்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிடாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். மிக அபூர்வமான இக்கோலத்தைக் கொண்டவளை “மங்கள சண்டி” என்று அழைக்கிறார்கள்.
    இங்குள்ள நந்தி சுண்ணாம்புக் கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. இந்த நந்தியும் மிகவும் பெரியது. சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள இலிங்கத்தின் மீது விழும் காட்சி வேறு எங்கும் காணமுடியாத அற்புத காட்சி. அதேபோல் 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் நிழல் தஞ்சை கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது.
    கோவிலின் விமானம் கீழே சதுரமாகவும், அதன் மேல் எண்பட்டை வடிவிலும், உச்சிப் பகுதி வட்ட வடிவிலும் அமைக்கப்பட்டு சிவலிங்க வடிவில் காட்சி தரும்.  இக்கோவிலின்  வளாகத்தில் வடக்கிலும், தெற்கிலும் இரு சிறிய கோவில்கள் அமைந்துள்ளன.  அவை முறையே  “வட கைலாயம் என்றும் தென் கைலாயம் என்றும் கூறப்படும்.  வட கைலாய கோவிலில்  பின்னாளில் அம்மன் கற்சிலை வைக்கப்பட்டு அம்மன் கோவிலாகவும் தென் கைலாயம் கற்சிலை  ஏதுமின்றி சிதைந்து காணப்படுகிறது.

    சோழமன்னர்கள் வாழ்ந்த இடமே ‘மாளிகைமேடு’ ஆகும். செயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய பெரு மக்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி, விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியவை இங்கிருந்து பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்ததும் இக்கோவில்தான்.
    கங்கைகொண்டசோழீசுவரம் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் சயங்கொண்ட சோழபுரத்திருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து வருவோர் சேத்தியாதோப்பு வழியாக மீன்சுருட்டி வந்து, அங்கிருந்து திருச்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். கோவிலின் பல பகுதிகளில், குறிப்பாக, பிரதான மண்டபத்தில் அற்புதமாகச் செதுக்கப்பட்ட பல சிற்பங்கள் உள்ளன.

    ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற பல இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிற்பங்கள் இக்கோவிலிலும், அருகிலுள்ள கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
    மாசி சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, பங்குனித்திருவிழா, மார்கழி திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

    காலை 6 மணி முதல் 12 மணி வரை,
    மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

     

     

    Share
  • 2024 ஒரு பின்னோக்கிய பார்வை

    2024 ஒரு பின்னோக்கிய பார்வை

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    2024 எனும் உலகளாவிய நிகழ்வுகள் நிறைந்த ஒரு வருடம் அவசரமாக ஓடி இன்று அதன் அந்தத்தில் வந்து நிற்கிறது.

    இவ்வருடப் பயணத்தில் நாம் கடந்து வந்த பயணத்தில் நடந்து வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்க்கும் வேளையிது.

    இன்றைய உலகின் மாற்றங்கள் உலகின் அமைதியை நோக்கிப் போகிறதா ? அன்றி பதட்டமான  ஒரு சுழலுக்கு : ச் செல்கின்றதா ? என்பது ஒரு கேள்விக்குறியாகத் தொங்கிக் கொண்டேயிருக்கிறது.

    இவ்வருடம் உலகின் கேந்திர முக்கியத்துவம் கொண்ட நாடுகளின் தேர்தல்களை உள்ளடக்கிய ஒரு வருடமாக அமைந்திருந்தது.

    உலகப் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய  மேற்குலக நாடுகள் என கணிக்கப்படும் அமேரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகள் தேர்தல்களை எதிர்கொண்டன.

    அதே போன்று  தென்கிழக்கு ஆசிய துணைக் கண்டத்தின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த இந்தியாவும் தேர்தலை எதிர் கொண்டது.

    மேற்குறிப்பிட்ட நாடுகளின் அரசியல், பொருளாதார உதவிகளில் தங்கியிருந்த சிறீலங்காவும் தனது தேர்தலை எதிர்கொண்டது.

    2024 யூலை மாதம் 4 ம் தேதி ஐக்கிய இராச்சியம் தனது தேர்தலை எதிர்கொண்டது.

    பொருளாதார வீழ்ச்சி , வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு என்பவற்றின் தாக்கங்களின் பிரதிபலிப்பாக 14 வருடங்கள் அரசாட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடைந்தது.

    மேற்குலக நாடுகளில் முதலாவது இந்தியப் பின்னனியைக் கொண்ட ஆசியப் பிரதமர் எனும் சாதனை படைத்த ரிஷி சுனாக் அவரது தலைமையின் கீழியங்கிய கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் படுதோல்வியைச் சந்தித்தார்.

    இராமர் பதினான்கு வருடங்கள் கானக வாழ்க்கையை மேற்கொண்டது போல 14 வருடங்கள் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அரசியல் கானகத்தில் சிக்கிய லேபர் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.

    இத்தேர்தலில் தொழிற்கட்சி அடைந்த வெற்றி அவர்களால் பெறப்பட்டதா ? இல்லை அரசிலிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் மீது மக்கள் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடா எனும் வாதம் இன்றும் அரசியல் அவதானிகள் மத்தியில் கேள்வியாகவே இருக்கிறது.

    பிரதமராக பதிவியேற்ற கியர் ஸ்டாமர் இந்தப் 14 வருட அரசியல் கானஜ வரலாற்றில் தொழிற்கட்சி கண்ட மூன்றாவது தலைவராவார்.

    ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வருவேன் எனும் உறுதியுடன் பதவிக்கு வந்த கியர் ஸ்டாமரின் நடவடிக்கைகள் மக்களுக்கு மாற்றத்தை விட ஏ”மாற்றத்தையே” கொடுத்திருக்கிறது போன்றதொரு தோற்றத்தையே கொடுத்திருக்கிறது.

    மக்கள் என்னை விரும்ப வேண்டும் என்பதல்ல என் நோக்கம் , நாட்டினை வளப்படுத்துவதற்கு ஏற்ற அத்திவாரத்தைப் போடுவதே முக்கியம்.

    இப்போது எனது கொள்கைகளை மதிப்பீடு செய்யாதீர்கள் நான் எடுக்கும் இந்த அடிப்படை மாற்றங்களின் மீது நாம் எழுப்பப்போகும் உறுதியான வளம் பலனளிக்கும் போது என்னை மதிப்பீடு செய்யுங்கள் என்கிறார் கியர் ஸ்டாமர்.

    பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

    அடுத்து இந்தியத் தேர்தல் வந்தது. பிரதமர் மோடிக்கு இணையான எதிர்கட்சிகள் இல்லை பிரதமர் மோடியின் பா.ஜா.கா அமோக வெற்றியீட்டப் போகிறது எனும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

    ஆனால் தேர்தலின் முடிவு பிரதமர் மோடியின் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் தனியாக அரசமைக்கும் அதிகாரத்தை இழந்து கூட்டரசாங்கம் அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

    தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கட்சி தி.மு.க அமோக வெற்றியீட்டி அவரின் செல்வாக்கை நிரூபித்தது.

    உலக அரங்கில் இன்றைய பாரதம் மிக முக்கியமான ஒரு இடத்தை வகிக்கிறது.

    இந்தியாவின் இந்த ஸ்தானத்தின் தாக்கங்களை இனிவரும் ஆண்டுதான் வெளிக்கொணரும்.

    பொருகாதாரச் சிக்கல்களுக்குள் அழுந்தி அக சர்வதேச நாடுகளின் உதவியுடன்  நிமிர்ந்த சிறீலங்காவின் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமே அதிர்ச்சி அளித்தன.

    அரசமைக்கும்  சந்தர்ப்பமே அற்ற கட்சி எனும் அபிப்பிராயதிற்குள்ளான ஜே.வி.பி ஏனைய இதர  இடதுசாரக் கொள்கைக் கட்சிகளுடன் சேர்ந்தமைத்த தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளரான 56 வயதே ஆன அனுர குமார தேசநாயக்கா அமோஜ வெற்றியீட்டி சிறீலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதியாகப் பதவியேற்றார்.

    அதைத்தொடர்ந்து நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றியீட்டி அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்தது .

    இதிலே குறிப்பிட வேண்டிய விடயம் இலங்கையின் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பாராளுமன்ற அங்கத்தினரில் மூவர் அரசாங்கக் கட்சியான என்.பி.பி ஐச் சேர்ந்தவர்கள் என்பதுவே.

    முதன்முறையாகத் தமிழ் மக்கள் பழைய தமிழ் அரசிதல்வாதிகள் மீது நம்பிக்கையிழந்து புதிய ஐனாதிபதி தமக்கான தீர்வுகளைத் தருவார் என்று எதிர்பார்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    பொதுவாகவே இலங்கைத் தீவின் மக்களின் மனோநிலையில் ஒரு மாற்றம் தென்படுகிறது.

    ஊழலை ஒழிப்பேன் எனும் கோஷத்தை முன்வைத்த அநுர குமார திசநாயக்கவின் அரசியல் மாற்றம் எனும்.வாதத்தை ஏற்று மக்கள் புதியதோர் இளம் தலைமுறையினரிடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது போல் தெரிகிறது.

    இது தமிழர் பிரதேசங்களிலும் எதிரொலித்திருப்பதுதான் ஆச்சரியம்.

    அருச்சுனா இராமநாதன் எனும் ஒரு சுனாமி தமிழர் பிரதேசங்களினுள் புகுந்து ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது போல் தெரிகிறது.

    இம்மாற்றம் நேர்மறையானதா ? எதிர்மறையானதா ? என்பதை எதிர்வரும் வருடம் தான் க வேண்டும்.

    இங்கும் பொறுமைதான் எமக்குத் தேவைப்படுகிறது.

    புதிய அரசின் செயற்பாடுகளின் போக்கை அவதானிப்பது ஒன்றே இப்போதைக்கு செய்யக்கூடியது.

    அடுத்து வந்ததோ மிகப்பெரிய மாற்றம். ஆம் அமெரிக்க நாட்டின் ஐனாதிபதிக்கான தேர்தலின் முடிவு பலருக்கு வித்தியாச உணர்வுகளுடனான அதிர்ச்சியை அளித்திருக்கின்றது.

    ஐனநாயகக் கட்சியின் வேட்பாளர் தற்போதைய ஐனாதிபதி ஜோ பைடன் மீண்டும் தேர்தலில் குதிக்கிறேன் என்று ஆரம்பித்தார்.

    அவருக்கெதிராக சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக சர்ச்சைக்குரிய ட்ரம்ப் அவர்கள் போட்டியில் இறங்கினார்.

    இருவர்களுக்குமிடையிலான முதலாவது தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஜோ பைடன் சறுக்க அவரின் உதவி ஐனாதிபதியான இந்தியப் பின்னனியைக் கொண்ட கமலா ஹரிஸ் போட்டியில் இறங்கினார்.

    மிகவும் இறுக்கமான யார் வெல்லுவார்கள் என்று கணிக்க முடியாத தேர்தல் என்று சொல்லப்பட்ட தேர்தல் முடிவுகள் ட்ரம்பிற்கு அதீத வெற்றியைக் கொடுத்தது.

    விளைவு !

    வருகின்ற ஐனவரி 20ம் தேதி ட்ரம்ப் அவர்கள் அமேரிக்க நாட்டின் 48 வது ஐனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

    ஐனாதிபதியாஜ ட்ரம்ப் பதவியேற்பது பலரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாகவும், சிலருக்கு சர்க்கரையை வாயில் போட்டதாகவும் உணர்வுகளைக் கொடுத்திருக்கின்றது.

    ரஸ்ய நாட்டின் அதிபர் , சீன நாட்டின் அதிபர், வட கொரிய நாட்டின் அதிபர் ஆகியோருக்கு ட்ரம்ப் வருகை ஆறுதலைதளிக்கும்.

    ஏனைய பல நாடுகள் இவரது அரசியல் வருகையை மிகவும் எச்சரிக்கையுடன் அணுகுகின்றன.

    தனது தேர்தல் பிரசாரங்களில் வேளைக்கு வேளை பல முரணட்ட கருத்துகளை முன் வைத்தவர் ட்ரம்ப்.

    பதிவிக் கதிரையில் அமர்ந்ததும் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறார் என்பது 2025 இல் தான் வெளிச்சமாகும்.

    நிறவேற்று துவேஷத்துக்கு தூபமிடுபவர் ட்ரம்ப் எனும் கருத்து பலரின் மத்தியில் நிலவுகிறது.

    தனது அரசமைப்பில் ஆறு இந்தியப் பின்னனி கொண்டவர்களுக்கு இடமளித்திருப்பது இவர் மீதான மேற்கூறிய விமர்சனத்தை கேள்விக்குறியாக்குகிறது.

    வெளிநாட்டவர் அமேரிக்க நாட்டில் குடியேறுவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை தனது முக்கித கொள்கையாகக் கொண்டுள்ள இவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை 2025 வெளுக்க வைக்குமா ?

    பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

    இந்த உலகத்தின் சுழற்சியில் எத்தனையோ மாற்றங்கள் ?

    காலநிலை மாற்றங்கள் , இயந்திர முறை மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் என அவசரமான துரிதகதியில் இம்மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம்  இருக்கின்றன.

    காலநிலை மாற்றங்களுக்கு மனிதராகிய நாம் இயற்கைச் சீரழிவை மேற்கொள்ளுவதே காரணம் என்றொரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.

    ஆனால் இல்லை இது இயற்கையாகவே இப்பூமியின் சுழற்சியால் ஏற்படுவது இதற்கு மனிதரின் நடவடிக்கைகள் காரணமில்லை என்பது ஒரு சாராரின் வாதம்.

    எது எப்படியிருப்பினும் நாம் வாழும் சூழலின் காலநிலை மாறனடைந்திருக்கிறது என்பது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.

    இதனை எப்படிக் கையாளுவது என்பதற்காக வருடாவருடம் சர்வதேச நாடுகள் கூடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்துகின்றன.

    இம்மாற்றங்ககைத் தடுக்கும் முயற்சி சரியான திசையில் செல்கிறதா என்பது சந்தேகமே !

    கடந்த வருடத்தின் தேர்தல்களை ஒருபுறம் தள்ளுவோம் , காலநிலை மாறங்களைக்கூட ஒருபுறம் தள்ளுவோம் ஆனால் நாகரீக  உலகு என்று சொல்லிக் கொள்ளும் நாம் வெறும் மண்ணாசைக்காக ஆயிரமாயிரம் உயிர்களைக் காசு கொள்ளும் செயல் பக இடங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    ஊக்ரேன் ரஸ்யா ஐரோப்பிய சூழலில் கொன்றொழிக்கும் உயிர்கள் .

    மத்திய கிழக்கு நாடுகளில் பாலஸ்தீனிய மக்களின் உரிமைக்கான போராட்டமும் அதனை அடக்குகிறோம் எனும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களும் அபகுதியைத் தீராத புகை.மண்டலத்தினுள் அமிழ்த்திக் கொண்டிருக்கின்றன.

    உயிரிழந்து, வீடிழந்து , நாடிழந்து துடித்துக் கொண்டிருக்கும் மக்களின் அழுகுரல் ஒருபுறமும், கைதிகளாக பாகஸ்தினியர்களின் உரிமைப்போர் எனும் பார்வையில், அரபு தீவிரவாத அமைப்புகள் கடத்திச் சென்றவர்களின் நிலையறியாமல் ஓலமிடுவோர் ஒருபுறமுமாக காணும் அவலக் காட்சிகள்.

    உயிரழிவைத் தடுக்க ஏதாவது நடவடிக்கைகள் எடுப்பார்களா என சர்வதேச சமூகத்தை எதிர்பார்த்து ஏமாறும் ஒரு நிலை.

    இந்தக் கட்டத்தில் தான் தான் பதவியேற்று 24 மணி நேரத்தில் போர்களை நிறுத்துவேன் என்று சூளுரைத்த ட்ரம்பின் தேர்தல் வெற்றி எவ்வகை மாறத்தைக் கொண்டு வரப் போகிறது என்று சமாதானத்தை விரும்பும் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

    இதற்கான தீர்வையும் 2025 தனக்குள் புதைத்து வைத்திருக்கிறதோ ?

    இங்கிலாந்திலே 50 வருடங்களை எட்டிப்பிடிக்கப் போகும் எனக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தினர் ஏதோ உறவினர்களைப் போல தென்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    ஐக்கிய இராச்சியத்தின் அரசரான சார்ள்ஸ் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வில் பல அதிமுக்கிய பிரச்சனைகள் தோன்றின.

    அரசரான சார்ள்ஸ் அவர்கள் புரஸ்ட்ரேட் கான்சர் வியாதியால் தாக்கப்பட்டார்.

    தெய்வாதீனமாக அவருக்கு தகுந்த சமயத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் குணமடைந்து வருகிறார். இன்பமும் சிகிச்சை முடிவடையவில்லை.

    அதேநேரம் அரசரின் மருமகளும் முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அவர்களின் மனைவி கத்தரீன் வயிறு சம்மந்தப்பட்ட புற்றுநோயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். தற்போது அவரது சிகிச்சைகள் நிறைவுற்றதாகக்  கூறப்படுகிறது.

    எப்போதும் அதிக அளவில் சர்ச்சைகளுக்குள் அகப்பட்டுக் கொள்பவர் அரசரின் தம்பி இளவரசர் அண்ட்ரூ.

    சர்ச்சைகள் அனைத்தையும் ஓரளவு கடந்து விட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கிறிஸ்துமஸ் சமயத்தில் புது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டார்.

    இவருடன் நெருக்கமாகப் பழகி வந்த ஒரு சீன செல்வந்தர் சீன அரசாங்கத்துக்காக உளவு பார்பவர் என்று இங்கிலாந்தின் இரகசிய உளவுத்துறை கண்டுபிடித்தது.

    இத்தகைய நஅர் ஒருவரை இங்கிலாந்தின் அரச பரம்பரையின் இரகசியங்களுக்கு அண்மையில் நடமாடக் காரணமாயிருந்தார் என்று அவர்மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இவருக்கூடாக முன்னைய பிரதமர்களாக இருந்த டேவிட் கமரன், திரேஸா மே போன்றோருக்கு நெருக்கமாக இந்தச் சீன நபர் நடமாடியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

    பொதுவாகவே 2924 இங்கிலாந்துக்கு அரசியல், பொருளாதாரம் , மக்களின் வாழ்வாதாரம் என்பனவற்றில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

    மாற்றத்தை எதிர்பார்த்தோ அன்றி அரசின் மீதிருந்த அதிருப்தியின் காரணமாகவோ மக்கள் அதிகப் பெருபான்மை வாக்களித்து லேபர் கட்சியை அரசில் அமர்த்தியிருக்கிறார்கள் .

    ஆனால் பதவியில் அமர்ந்து முதலாவது பட்ஜெட்டிலேயே ஓய்வூதியக்காரர்களின் சலூகைகள் மீது கையை வைத்து கடும் எதிர்ப்புள்ளாகியிருக்கிறார்கள்.

    தாம் எதிர்பார்க்காத அளவில் பொருளாதாரச் சிக்கல்களை முந்தைய அரசாங்கம் கையளித்த காரணமே தாம் இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது எனது அவர்களது விளக்கம்.

    இதற்கான உண்மைகளும் , இவர்களின் நடவடிக்கைகளின் தாக்கத்தையும் 2025 இல் காண முடியும் என்பதே கேள்வி.

    எனது பின்புல நாடான சிறீலங்காவில் எனது சோதரர்களின் நீண்டகால உரிமைகளுக்கான ஓலத்தை பல எதிர்பார்ப்புகளுடன் பதவிக்கு வந்த அநுர அரசு தீர்த்து வைக்குமா என்பதும் 2025க்கே வெளிச்சம்.

    எதிர்பார்ப்புகளோ  ஓராயிரம் ஏமாற்றமா? இல்லை திருப்தியா விடைகாண அவலுடன் நுழைவோம் 2025க்குள் வாருங்கள்.

    Share
  • கங்கைகொண்ட சோழபுரம் – ஒரு பார்வை

    -மேகலா இராமமூர்த்தி

    விசயாலயச் சோழன் தொடங்கி மூன்றாம் இராசேந்திரன் ஈறாக விளங்கிய பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலம் தமிழ்நிலத்தின் நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டு எழுச்சிக்கும் பல்வேறு கலைகளின் மலர்ச்சிக்கும் பேருதவி புரிந்த காலமாகும். மாமன்னன் முதலாம் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோயில், அவன் மைந்தனான முதலாம் இராசேந்திரன் எழுப்பிய கங்கைகொண்ட சோழீச்சரம், இரண்டாம் இராசராசனால் தாராசுரத்தில் எழுப்பப்பட்ட ஐராவதீசுவரர் கோயில் ஆகிய மூன்றும் சோழர்காலக் கோயிற்கலையின் உச்சங்களாக இன்றும் மிளிர்கின்றன எனில் மிகையில்லை.

    இம்மூவருள் இராசராசனைத் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலேறிய முதலாம் இராசேந்திர சோழன், சோழப்பேரரசைக் கடல்கடந்தும் விரிவடையச் செய்து தமிழரின் வீரத்தை, பெருமையைத் தரணிக்கெல்லாம் பரப்பிய சிறப்புக்குரியவன்.

    சோழரின் புலிக்கொடியை அயல்நாடுகளிலும் பறக்கவிட்ட முதலாம் இராசேந்திர சோழன் குறித்தும் அவனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தின் சிறப்பைக் குறித்தும் சிறிது அறிந்துகொள்வோம்.

    முதலாம் இராசேந்திர சோழன்:

    விசயாலயன் காலத்தில் தலையெடுத்த பிற்காலச் சோழர்களின் ஆட்சி, முதலாம் இராசேந்திரன் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது. வானவன் மாதேவியாரான திரிபுவன மாதேவியார்க்கும் முதலாம் இராசராசனுக்கும் மகனாய்ப் பிறந்தவன் முதலாம் இராசேந்திரன். இவன் பிறந்தது மார்கழித் திருவாதிரை என்கின்றனர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி முதலான வரலாற்றறிஞர்கள்; ஆடித் திருவாதிரை என்கின்றார் தொல்பொருள், கல்வெட்டுத்துறை அறிஞர், குடவாயில் பாலசுப்பிரமணியன் (காமரசவல்லியில் உள்ள ராஜேந்திர சோழனின் கல்வெட்டைச் சான்றுகாட்டி). இவனுடைய இயற்பெயர் மதுராந்தகன் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன. இராசராசன் ஆட்சியின்போதே படைகளை நடாத்திப் போர்கள் பலவற்றில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றிருந்தான் இராசேந்திரன். இலங்கை மன்னனான ஐந்தாம் மகிந்தனையழித்து ஈழநாட்டை முற்றாகச் சோழரின் ஆளுமையின்கீழ்க் கொண்டுவந்தான்.

    இராசேந்திரன் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று மத்தியப் பிரதேசத்திலுள்ள சித்திரகோடா, கோசலதேசம், ஒட்டரநாடு, வங்காளத்திலுள்ள லாடதேசம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கைப்பற்றிக் கங்கைக்கரையை அடைந்தான். எனினும், தான்வென்ற நாடுகளை அவன் ஆள விரும்பவில்லை; படையெடுப்பை அதற்காக அவன் நடத்தவும் இல்லை. தான் புதிதாக உருவாக்க விரும்பிய நகரையும் ஏரியையும் கங்கைநீராற் தூய்மைப்படுத்த விரும்பியே படைகளை வடக்கே அனுப்பினான்; தன் படைகளைத் தடுத்த அரசர்களுடனேயே அவன் போர் புரிந்தான் என்கிறார் வரலாற்றறிஞர் மா. இராசமாணிக்கனார் தம்முடைய ’சோழர் வரலாறு’ எனும் நூலில்.

    கங்கையைக் கொண்டதோடு மட்டுமல்லாது கடல்கடந்து சென்று கடாரம்/காழகம் (மலேசியாவிலுள்ள கெடா), சுமத்ரா தீவிலுள்ள ஸ்ரீவிஜயம், இலாமுரி தேசம், மாநக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்) ஆகியவற்றையும் கைப்பற்றினான் இராசேந்திரன்.

    ’காழகம்’ என்ற சொல் (ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட்டினப்பாலை: 191)) பத்துப்பாட்டில் காணப்படுதலால் சங்கத்தமிழர் நெடுங்காலமாகக் கடாரத்துடன் கடல் வாணிகம் செய்துவந்தமையை அறியலாம்.

    கங்கைகொண்ட சோழபுரம்: முதலாம் இராசராசன் காலம்வரை தஞ்சையே பிற்காலச் சோழர்களின் தலைநகராய்த் திகழ்ந்தது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் அது மாறியது; கங்கை வரையில் படையெடுத்துச் சென்று அப்பகுதிகளைத் தன் குடைநிழலில் கொண்டுவந்ததன் அடையாளமாய்க் கங்கைகொண்ட சோழபுரம் எனும் புதிய நகரத்தை உருவாக்கி அதனையே சோழநாட்டின் தலைநகராக்கினான் ’பரகேசரி’யாகிய இராசேந்திரன்.

    இராசேந்திரனைத் தொடர்ந்து அரசாண்டவர்களும் இந்நகரத்தையே தம் தலைநகராகக் கொண்டமையால் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராய் விளங்கிய பெருமை இந்நகரத்துக்கு உண்டு. இப்போது இந்நகரம் தன் பழம்பெருமையை இழந்து ஒரு சிற்றூராய்க் காட்சியளிப்பது வருத்தமளிக்கின்றது.

    கங்கைகொண்ட சோழீச்சரம்: புதிய தலைநகரத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து, அந்நகரத்தில் அற்புதமானதொரு கோயிலைச் சிவனார்க்கு எடுப்பித்தான் இராசேந்திரன். கங்கைகொண்ட சோழனால் கட்டப்பெற்ற கோயிலாகையால் இது கங்கைகொண்ட சோழீச்சரம் எனும் பெயர்பெற்றது. இந்தியத் தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இக்கோயிலானது ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலைப் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவால் உலகின் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

    அளவில் தஞ்சைப் பெரியகோயிலைவிடச் சிறியதாயினும் சிற்ப வேலைப்பாடுகளில் தஞ்சைக் கோயிலை விஞ்சிய தரத்தோடும் எழிலோடும் திகழ்கின்றது இத்திருக்கோயில். தஞ்சைப் பெரியகோயில் இலிங்கத் திருமேனியைப் போலவே இங்குள்ள இலிங்கத் திருமேனியும் அளவிற் பெரியது; ஒரே கல்லால் ஆனது.

    எழில்மிகு சிற்பங்கள்: கங்கைகொண்ட சோழீச்சரத்தின் கிழக்கு வாயிலில் கோயிலின் எதிரே சுதையாலான பிரம்மாண்டமான நந்தி காணப்படுகின்றது.

    விமானத்தில் அமைந்துள்ள சிற்பங்களும் கோயிலின் வெளிப்புறத்தில் காணப்படுகின்ற சிற்ப உருவங்களும் பெருவனப்புடையவை. தென்மேற்கில் சபாபதியும், மேற்கில் இலிங்கோற்பவரும், தெற்கில் விநாயகரும் அழகாய்க் காட்சிதருகின்றார்கள்.

    வடக்கில் திருவாயிலுக்கருகில் சண்டேச அனுக்கிரகமூர்த்தி சிற்பம் எழிலோடு திகழ்கின்றது. இச்சிற்பத்தில் சிவபெருமான் உமையோடு அமர்ந்திருக்கின்றார். அவரது காலடியில் கைதொழுத நிலையில் அமர்ந்துள்ளார் சண்டேசுவரர். சிவனார் மகிழ்வோடு சண்டேசுவரருக்குக் கொன்றை மாலையொன்றைச் சூட்டுகின்றார்; உமையம்மை அதனைப் பெருமிதத்தோடு கண்டுகளிக்கின்றார். இச்சிற்பத்தை நோக்குகையில் ஒரு நாடகக் காட்சியையே சிற்பமாக வடித்துவிட்டனரோ என வியக்கத் தோன்றுகின்றது.

    இச்சிற்பத்தின் எதிரே காணப்படும் ஞானசரசுவதியின் சிற்பமும் கவினார் வனப்புடையது.

    இச்சிற்பங்களுக்கு மாமல்லபுரச் சிற்பங்களே அடிப்படையானவை என்றாலும் அவற்றினும் மேம்பட்ட சிற்பத்திறனை இவற்றில் காணமுடிகின்றது.

    கங்கைகொண்ட சோழீச்சரத்தைப் புகழ்ந்து கருவூர்த்தேவர் பாடிய பதிகங்கள் ஒன்பதாம் திருமுறையிலுள்ள திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று:

    அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
    அங்ஙனே பெரியநீ சிறிய
    என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
    எளிமையை யென்றும்நான் மறக்கேன்
    முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
    முக்கணா நாற்பெருந் தடந்தோட்
    கன்னலே தேனே அமுதமே கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
     (திருவிசைப்பா: 1)

    சோழகங்கம்: பஞ்சமில்லா நீர்ப்பாசனத்திற்கு வித்திடும் வகையில் தலைநகராம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராசேந்திரனின் விருப்பப்படி வெட்டப்பட்டதே சோழகங்கம் எனும் ஏரி. கொள்ளிடத்திலிருந்து அறுபது மைல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டிச் சோழகங்கத்துக்கு நீர்வழித்தடத்தை உருவாக்கியதாய்த் தெரிகின்றது. கங்கையிலிருந்து பொற்குடங்களில் கொண்டுவரப்பட்ட நீரை இவ்வேரியில் சேர்த்துக் கங்கையையும் காவிரியையும் (காவிரியின் வெள்ளப்பெருக்கைக் கொள்ளுமிடமே கொள்ளிடம்) அப்போதே ஒன்றிணைத்தவன் இராசேந்திரன்.

    ”பகீரதன் ஆகாயகங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததுபோல் கங்கைநீரைச் சோழநாட்டுக்குக் கொண்டுவந்து கங்கைகொண்ட சோழப் பேரேரியை முதலாம் இராசேந்திர சோழன் உருவாக்கினான்” என எசாலம் செப்பேடு கூறுகின்றது.

    சோழகங்கம் இப்போது ’பொன்னேரி’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. விசயநகரத்தார் காலத்தில் இப்பெயர் மாற்றம் ஏற்பட்டதாய்த் தெரிகின்றது. இதில் நீரைவிடவும் இப்போது மணலே அதிகம் நிறைந்திருப்பதைக் காண்கையில் மனம் கனக்கவே செய்கின்றது.

    மாளிகைமேடு: அரண்மனை இருந்த இடமிது. இராசேந்திரனும் அவனைத் தொடர்ந்துவந்த சோழமன்னர்கள் பலரும் கங்கைகொண்ட சோழபுர மாளிகையில் இருந்துகொண்டு ஆட்சிசெய்திருக்கின்றனர். இம்மாளிகை குறித்துக் கல்வெட்டுகளால் அறியமுடிகின்றது.

    ”வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
    மண்குளிரும் சாயல் வளர்க்குமாம் – தண்கவிகைக்
    கொங்காரலங்கல் குலதீபன் கொய்பொழில்சூழ்
    கங்கா புரமாளி கை.”
    என்று காங்கைகொண்ட சோழபுர மாளிகையைச் சிறப்பிக்கின்றது தண்டியலங்காரப் பாடல்.

    இப்போதிங்கு அரண்மனை இல்லை; அஃது இருந்ததற்கான அடையாளமாய்க் காரைக் கலப்புண்ட செங்கற் சிதைவுகளே மிகுதியாய்க் காணப்படுகின்றன. இங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடங்கள் பல்வேறு காலக்கட்டங்களைக் காட்டுவதால் இம்மாளிகை பிற்காலத்தில் மாற்றிக் கட்டப்பட்டமை புலப்படுகின்றது.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகள்: வரலாற்றுச் சிறப்புடைய கங்கைகொண்ட சோழபுரத்தில் 1980, 1981, 1985, 1987, 1991 ஆகிய ஆண்டுகளில் மாளிகைமேடு, மண்மலை, கல்குளம், குருவாலப்பர் கோயில், பொன்னேரி ஆகிய வெவ்வேறு இடங்களில் மொத்தம் 31 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இவ் அகழாய்வின் பயனாய்ப் பல தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றின்மூலம் சோழர்கால அரண்மனை எவ்வாறிருந்தது என்பதையும் அக்காலக் கலை, நாகரிகச் சிறப்பினையும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    கூரை ஓடுகள்: கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்தவை கூரை ஓடுகளும் இரும்பு ஆணிகளுமேயாகும். இக்கூரை ஓடுகளின் தலைப்பகுதி மரச்சட்டத்தில் பொருத்துவதற்கேற்ப அரைவட்ட வடிவில் காணப்படுகின்றன.

    இரும்பு ஆணிகள்: இரும்பு ஆணிகளும் பிடிப்பாணிகளும் அகழாய்வில் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை 3 செ.மீ முதல் 24 செ.மீ. வரை நீளமுள்ளவை. இவற்றின் தலைப்பகுதி சதுர வடிவிலுள்ளது. ஆணிகளின் தலைப்பகுதியை மரத்துடன் இணைக்குமிடத்தில் நான்கிதழ்கள் கொண்ட பூ வடிவ இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்பட்டு அழகூட்டப்பெற்றுள்ளது.

    வண்ணங்களுடன் கூடிய காரைத்துண்டுகள்: பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கொண்ட சுண்ணாம்புக் காரைத்துண்டுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. கட்டடங்களின் சுவர்ப்பகுதிகளிலும் விதானத்திலும் இவ்வண்ணங்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன என்று இவற்றைக்கொண்டு நாம் ஊகித்தறியலாம்.

    தந்தப் பொருள்கள்: தந்தத்தினாலான ஆளி, யானை ஆகிய உருவங்கள் கிடைத்துள்ளன. அரண்மனையை அணிசெய்யத் தந்தத்தினாலான பொருள்கள் பயன்படுத்தப்பட்டமையை இவை உணர்த்துகின்றன.

    வளையல் துண்டுகள்: சங்கினாலான வளையல் துண்டுகளும், கருப்பு, மஞ்சள், பச்சை, நீல நிறங்களினால் ஆன கண்ணாடி வளையல் துண்டுகளும் இங்குக் கிடைத்துள்ளன. சங்கினாலான வளையல்களைப் பெண்கள் அணியும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது. ஏன்… சிந்துவெளி அகழாய்விலேயே சங்கு வளையல்கள் செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டமை ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சோழர் காலத்தில் சங்கு வளையல்களோடு ’கலகலக்கும்’ கண்ணாடி வளையல்களையும் மகளிர் அணிந்திருந்தமைக்கான சான்றுகள் இவை.

    இவையல்லாமல் மட்பாண்டங்கள், சீனநாட்டுப் பானையோடுகள், காசுகள் செய்யப் பயன்படும் மண்ணாலான வார்ப்புகள், பளிங்குக் கற்களாலான மணிகள், குறுவாளின் கைப்பிடி போன்றவையும் அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.

    இவ்வாறு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களெல்லாம் கங்கைகொண்ட சோழீச்சரத்திற்கு அருகிலுள்ள அகழ்வைப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    முடிவுரை: இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாட்டின் தலைநகராகவும் கலைக்கூடமாகவும் திகழ்ந்த கங்கைகண்ட சோழபுரத் திருநகர் இன்று பொலிவிழந்து நலிவடைந்து சிற்றூராய் மாறியிருப்பது காலத்தின் கோலமே. சராசரி மாந்தர்களுக்கும் சாம்ராஜ்ஜியம் ஆளும் வேந்தர்களுக்கும் மட்டுமல்லாது ஊர்களுக்கும்கூட வாழ்வும் தாழ்வும் உண்டென்பதனை இது தெற்றெனக் காட்டுகின்றது.

    இப்பகுதியில் நிகழ்ந்த அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்களும் கல்வெட்டுகளும் இந்நகரின் பண்டைய சீரையும் சிறப்பையும் வியனுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. சோழர்களின் மங்காத புகழைத் தன்னகத்தே தாங்கியிருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தைப் பழையபடி பொலிவுறச் செய்யும் நன்முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவேண்டும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1.https://ariyalur.nic.in/tourist-place/gangaikonda-cholapuram/

    2. சோழர் வரலாறு – டாக்டர் மா. இராசமாணிக்கனார், பூரம் பதிப்பகம், சென்னை – 600 033.

    3. கங்கைகொண்ட சோழபுரம் இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம் – பதிப்பாசிரியர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப., சிறப்பு ஆணையர், தொல்லியல் துறை.

    4. https://www.dinamani.com/tamilnadu/ராஜேந்திர-சோழன்-வெட்டிய-சோழகங்கம்-ஏரி-மீண்டும்-உயிர்பெற-வாய்ப்பு-3253462.html

     

    Share
  • நவீன அரசியலுக்கு வழிகாட்டிய சிந்தனையாளர் – நிக்கலோ மாக்கியவெல்லி

    நவீன அரசியலுக்கு வழிகாட்டிய சிந்தனையாளர் – நிக்கலோ மாக்கியவெல்லி

    -மேகலா இராமமூர்த்தி

    துணிச்சலான அரசியல் சிந்தனைகளை வெளியிட்டதற்காக அன்றைய அரசியல் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவர் இத்தாலியைச் சேர்ந்த நிக்கலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli).

    மாக்கியவெல்லி என்ற பெயரைக் கேட்டவுடன் அரசியல்வாதிகளும் முடிமன்னர்களும் ஏதோ பேய் பிசாசுகளைக் கண்டவர்களைப்போல் அன்று அரண்டு போனதுண்டு. கிறித்தவ மதகுருமார்கள் மாக்கியவெல்லியைப் ‘பிசாசு’ என்று அழைத்ததும் உண்டு. மேனாட்டு மத நூல்களில் பிசாசுக்கு ’நிக்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மாக்கியவெல்லியின் முதல் பெயரான நிக்கலோ என்பதிலிருந்து தான், அந்தப் பழைய பிசாசு தனக்கு ‘நிக்’ என்ற புதிய பெயரை எடுத்துச் சூட்டிக் கொண்டது என்று வெறுப்புக் கலந்த வேடிக்கையுடன் அவரைப் பற்றி அன்று பேசியோர் உண்டு. மாக்கியவெல்லியனிசம் என்றாலே அரசியல் அயோக்கியத்தனம் என்றும் அரசியல் கொடுமை என்றும் பொருள் கூறுவோரும் உண்டு.

    மாக்கியவெல்லி இவ்வளவு பழிப்புக்கு ஆளாகும்படி என்ன செய்தார் என்று ஆராய்ந்து பார்த்தால், தம் மனத்தில் தோன்றிய கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் சொன்னார்; அவ்வளவுதான்! ”யதார்த்தவாதி வெகுஜன விரோதியாக இருப்பதில் வியப்பில்லைதானே?”

    ”மன்னர்கள் கொடுங்கோலர்களாக இருக்கவேண்டும் எனச் சொன்னார் மாக்கியவெல்லி” என்று கூறுகின்ற பலர் அவர் எந்தச் சூழ்நிலையில் அவ்வாறு இருக்கச் சொன்னார் என்பதனைக் குறிப்பிடுவதில்லை. ஓர் அரசு நிலைப்பதற்காக அதற்கு எதிராகச் சதி செய்கின்ற ஒரு சிலரைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தால் அவ்வாறு கொல்வது தவறன்று என்று குறிப்பிடுகின்றார் மாக்கியவெல்லி.

    ”கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்”
    (550) என்று நம் பேராசான் வள்ளுவர் கூறியிருப்பதை மாக்கியவெல்லியின் கருத்தோடு நாம் பொருத்திப் பார்க்கலாம்.

    மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லது மக்கள் நலமாக வாழக் கூடியபடி ஓர் அரசை நிலை நிறுத்துவதற்காக ஓர் அரசன் தொடக்க காலத்தில் நிலைமைக்குத் தகுந்தாற்போல் கொடுஞ்செயல்கள் புரிவதில் பிழையில்லை என்பதே மாக்கியவெல்லியின் கருத்தாக இருந்திருக்கின்றது.

    அரசியல் அறிஞராகவும், அரச தந்திரியாகவும் விளங்கிய நிக்கோலோ மாக்கியவெல்லி நாடகாசிரியர், இசைக் கலைஞர் எனும் வேறுபல திறன்களும் கொண்டவராய்த் திகழ்ந்திருக்கின்றார். 1469-ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் நாளன்று பெர்னார்டோ (Bernardo) மாக்கியவெல்லி என்பவருக்கு மகனாக இத்தாலியிலுள்ள பிளாரன்ஸ் நகரிலே பிறந்தவர் நிக்கோலோ மாக்கியவெல்லி. இவர் பிறந்தபோது பிளாரன்சில் குடியாட்சி நடைபெற்று வந்தது.

    1494-ஆம் ஆண்டு தம்முடைய இருபத்தைந்தாவது வயதில் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார் மாக்கியவெல்லி. பொதுவாழ்வில் புகுந்த நான்கே ஆண்டுகளில் அவர் குடியரசு அரசாங்கத்தின் செயலர் (Secretary) ஆகவும், இரண்டாவது ஆலோசனைத் தலைவராகவும் ஆனார். இப்பதவிகளில் பதினைந்து ஆண்டுகள் அவர் நிலைத்திருந்தார்.

    இதற்கிடையில் இத்தாலியில் உள்ள சிறிய அரச சபைகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள பல அரசுகளின் தலைநகரங்களுக்கும் பிளாரன்ஸ் அரசாங்கத்தின் தூதராகச் சென்றார் அவர். அவருடைய சாதுரியமான செயல்திறனால் பிளாரன்ஸ் குடியாட்சி பல நன்மைகளைப் பெற்றது. அவரும், பல நாடுகளுக்கும் பயணங்கள் சென்றுவந்த அனுபவத்தின் பயனாய் அரசியல் குறித்தும் ஐரோப்பிய நாடுகள் குறித்தும் நன்கு அறிந்துகொண்டார்.

    1503-ஆம் ஆண்டு இத்தாலிய அரசியல்வாதியான சீசர் போர்ஜியாவிடம் (Cèsare Borgia) தூதுசென்று திரும்பியபின்னர், தம்முடைய ஆர்வத்தை இராணுவத் துறையில் செலுத்த ஆரம்பித்தார் மாக்கியவெல்லி. இராணுவத் துறையில் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டபிறகு, 1506ஆம் ஆண்டு அவருக்குப் புதிய பதவியொன்றும் வழங்கப்பட்டது. பிளாரன்ஸ் அரசாங்கத்திற்கென்று மக்கள்படை ஒன்றை ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட சிறப்புப் பிரிவிற்கு அவர் செயலராக நியமிக்கப்பட்டார். புகழின் உச்சிக்கு மாக்கியவெல்லி சென்ற காலமது. அதே சமயத்தில் அவருக்கு எதிரிகளும் உருவானார்கள்.

    1512-ஆம் ஆண்டு பிளாரன்சில் குடியாட்சி அகற்றப்பட்டு பழைய அரச வம்சத்தினரான மெடிசி குடும்பத்தை (Medici family) சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திற்கு பிளாரன்ஸ் மீண்டும் உட்பட்டபோது, மாக்கியவெல்லி தம் பதவியினின்றும் நீக்கப்பட்டார்.

    மெடிசி குடும்பத்தினருக்கு எதிராய், அவர்களுடைய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அப்போது ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களின் பட்டியலில் மாக்கியவெல்லியின் பெயரையும் சேர்த்துவிட்டார்கள் அவருக்கு வேண்டாதவர்கள். அதனை உண்மையென்று நம்பிய மெடிசி அரச குடும்பத்தினர், மாக்கியவெல்லியைப் பிடித்து 1513-ஆம் ஆண்டு விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர் குற்றமற்றவரென்று உணர்ந்து விடுவித்தார்கள். ஆனபோதும் மீண்டும் அரசியல் பணியில் அவரை அமர்த்தவில்லை.

    மாக்கியவெல்லியின் வாழ்வில் துன்பங்களின் சாயை மெல்லப் படர ஆரம்பித்தது. அவர்பட்ட துன்பங்களைத் தம்முடைய நண்பரும் உரோம் நகரத்தின் தூதருமான பிரான்செஸ்கோ வெட்டோரி (Francesco Vettori) என்பவருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.

    அக்கடிதத்தில் தம்முடைய நாள் எவ்வாறு தொடங்கி எவ்வாறு கழிகின்றது என்பதை உணர்வுபூர்வமாய் விளக்கியிருக்கின்றார் மாக்கியவெல்லி. அதன் ஒரு பகுதியிது…

    “சூரியன் உதிக்கும்பொழுதே நான் எழுந்துவிடுவேன். எனக்குச் சொந்தமான சிறு காட்டுக்குப் போவேன். அங்கேயுள்ள மரங்களை வெட்டும்படி ஏற்பாடு செய்திருக்கின்றேன். அங்கு மரம் வெட்டுபவர்களோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, நீரோடைப் பக்கமாய்ப் போவேன். அங்கிருந்து தோப்புப் பக்கமாகச் செல்வேன். என்னுடைய மேல் சட்டைக்கு அடியில் நான் வழக்கமாகக் கொண்டு செல்லக்கூடிய கவிதை நூலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிப்பேன். பெரும்பாலும் அவை மகா கவிகள் தாந்தே (Dante), பெட்ரார்க் (Petrarch) ஆகியோரின் நூல்களாகவோ, கவிஞர் டிபுல்லஸ் (Tibullus), ஓவிட் (Ovid) ஆகியோரின் நூல்களாகவோ இருக்கும். அவர்களுடைய ஆசைக் கனவுகளையும், காதல் கதைகளையும் படித்து, அவற்றை என் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே நீரோடைப் பக்கமாக உலவிக் கொண்டிருப்பேன்.

    மாலைக்காலம் வந்தவுடன் வீட்டிற்குத் திரும்பிச்சென்று என் படிக்கும் அறைக்குள் நுழைவேன். அப்படி நுழையுமுன், நான் தினமும் பகலில் உடுத்திக் கொண்டிருக்கும் அழுக்கும் புழுதியும் நிறைந்த ஆடைகளைக் களைந்துவிட்டு, அரசாங்க உடைகளை அணிந்துகொண்டு, முன்னோர்களான அந்தப் பெரியோர்களின் புத்தக சாலைக்குள் நுழைவேன். அங்கே அவர்கள் என்னை அன்போடு வரவேற்பார்கள். எனக்கே சொந்தமான உணவுகளை நான் அவ்விடத்தில் உண்பேன். எவற்றை உட்கொள்ளுவதற்காக நான் பிறந்திருக்கின்றேனோ அவற்றை நான் உண்பேன்.

    பிறகு ஊக்கத்துடன் நான் அவர்களோடு உரையாடுவேன். அவர்களுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் என்னவென்று கேட்பேன். அவர்கள் எனக்கு மரியாதை காட்டி விருப்பத்தோடு என் வினாக்களுக்குப் பதிலளிப்பார்கள்; அந்த நான்கு மணி நேரமும் என் மனக் கவலைகளையெல்லாம் நான் மறந்திருப்பேன். அந்த நேரத்தில் நான் என் வறுமையைக் கண்டு அஞ்சமாட்டேன்; சாவும் என்னைப் பயமுறுத்தாது. நான் அவர்களோடு முழுக்க முழுக்க ஒன்றி விடுவேன்.” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

    தாம் பழங்காலத்து அறிஞர்களின் நூல்களைப் படிப்பதையும் அவற்றிலுள்ள கருத்துக்களைச் சுவைப்பதையுந்தான் மாக்கியவெல்லி, இப்படிக் கற்பனையாகத் தம் நண்பருக்கு எழுதியிருக்கின்றார்.

    இக்கடிதம் அவருடைய வறுமையின் ஆரம்ப காலத்தில் அவர் தம் நண்பருக்கு எழுதியது. வறுமையின் உச்சக் கட்டத்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தில், “என் தொண்டின் பெருமையை அறியக் கூடியவர் யாரும் இல்லையே! நான் எதற்காவது பயன்படுவேன் என்று நினைக்கக் கூடியவர் எவரும் இல்லையே!” என்று தம் கடிதங்களில் வேதனையோடு விளம்பியுள்ளார்.

    வரும்படிக்கு வழியில்லாமல் வறுமையில் உழன்றுகொண்டிருந்த அந்தக் காலத்தில்தான் மூன்று பெரிய நூல்களை எழுதி முடித்தார் மாக்கியவெல்லி. அவை: லிவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி (The Discourses on the First ten of Titus Livy), அரசன் (The Prince), மற்றும் போர்க் கலை (The Art of War) என்பன.

    ‘லிவியின் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி’ என்ற நூலில் உரோம் நகரத்தின் புகழ்பெற்ற வரலாற்றறிஞரான டைடஸ் லிவியின் முதல் பத்துப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றார் மாக்கியவெல்லி.

    இந்த நூலில் உரோமானியரின் ஆட்சிமுறையைப் பல இடங்களில் போற்றுகின்றார் அவர். தம் காலத்தவர்கள், வரலாறு படிக்காத காரணத்தினால்தான், புகழ்வாய்ந்த அந்தக் காலத்துப் பேரரசர்கள், பெரியோர்களின் பாதையை விட்டு விலகி நடக்கிறார்கள் என்றும், அதனால்தான் சமூகத்திற்குப் பல கேடுகள் ஏற்பட்டனவென்றும் சுட்டிக் காட்டுகின்றார்.

    ’போர்க் கலை’ என்ற தலைப்பில் ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் மாக்கியவெல்லி.  அவற்றில் போருக்குச் செல்லுகின்ற அரசர்களும், அரசாங்க அதிகாரிகளும் கையாளவேண்டிய தந்திரங்கள், சாமர்த்தியங்கள், கொள்கைகள் ஆகியவை விளக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

    மாக்கியவெல்லியின் நூல்களில் அவருக்குப் பெரும் புகழையும், கடுமையான விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றுத்தந்த நூல் ’அரசன்.’

    அரசன் என்ற நூலில் முடியரசுகளைப் பற்றி ஆராய்கின்றார் மாக்கியவெல்லி. அரசறிவியல் என்று சொல்லக்கூடிய முறையில் அரசியலைப் பற்றிய புதுமையான சிந்தனைகளை முதன்முதலில் இந்த நூலில் அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். அவருக்கு முன்பு அரசியல் குறித்து இப்படிச் சிந்தித்தவர்கள் யாரும் கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். எப்பாடுபட்டேனும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை இந்நூலில் விதைத்திருக்கின்றார் அவர்.

    அவற்றிலிருந்து சில கருத்துக்கள்…

    ”ஓர் அரசன் போரைப் பற்றியும், அதற்கு வேண்டிய படையமைப்பைப் பற்றியும், அந்த அமைப்பின் ஒழுங்கைப் பற்றியும் தவிர வேறு எதையும் குறிக்கோளாகக் கொள்ளவோ, நினைக்கவோ கூடாது. ஏனெனில், ஆதிக்கஞ் செலுத்தக்கூடிய ஒருவனுக்குத் தேவையான கலை போர்க்கலை ஒன்றுதான்!

    போர்களற்ற காலத்திலும்கூட அரசன் போர்ப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். செயல் மூலமாகவும், படிப்பின் மூலமாகவும் அதை அதிகப்படுத்திக் கொள்ளலாம். செயல் மூலமாகப் பயிற்சியை நடாத்துவதற்கு, அவன் தன் படை வீரர்களைத் தினமும் பயிற்சிபெறச் செய்தும், ஒழுங்கு முறையுடன் இருக்கச் செய்தும் வருவதோடு அடிக்கடி வேட்டைக்குச் சென்று தன் உடலைக் கடின உழைப்பில் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    அரசன் வேட்டைக்குச் செல்வதால் நாட்டையும், நாட்டில் உள்ள காடு மலைகளின் அமைப்பையும் பற்றிய அறிவைப் பெறுகின்றான். இவ்வாறு ஒரு நாட்டின் அமைப்பைப் பற்றிய இயற்கையறிவைப் பெற்ற ஒருவன்தான் புதிதாகக் காணக்கூடிய வேறொரு நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றியும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். நாட்டின் இயற்கையமைப்பு பற்றிய அறிவு நிரம்பிய அரசன், தன் எதிரியை எவ்வாறு கண்டுபிடிப்பது, எவ்வாறு களம் அமைப்பது, படை நடத்துவது, போர்த்திட்டம் வகுப்பது, கோட்டையைப் பிடிப்பது என்பன போன்ற விஷயங்களையும் நன்றாகத் தெரிந்து செயலாற்றுவான்.

    ஓர் அரசன் நல்ல குணங்கள் எல்லாவற்றையும் உடையவனாயிருப்பது போற்றுதலுக்குரியதுதான். ஆனால், மனித இயற்கை அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. எனவே முன்யோசனையுள்ள அரசன் தன்மீது எவ்விதமான பழிச்சொல்லும் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைக்குத் தக்கபடி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளவும் அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வோர் அரசனும் தான் கொடுங்கோலனாக மதிக்கப்படுவதைவிட அருளுடையவனாக நினைக்கப்படுவதையே விரும்ப வேண்டும். ஆயினும், அவனுடைய அருளுடைமையைத் தவறான முறையில் பயன்படுத்தாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.”

    இவ்வாறு, ஓர் அரசன் வெற்றிகரமாக ஆட்சிசெய்வதற்கு வேண்டிய பல யோசனைகளும் உத்திகளும் இந்நூலில் பேசப்படுகின்றன.

    அரசியல் வெற்றிக்காகச் சூழ்ச்சிகளையும், நேர்மையற்ற முறைகளையும் கொடுமைகளையும்…ஏன் கொலைகளையும் கூடச் செய்யலாம் என்று மாக்கியவெல்லி இந்நூலில் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லையென்றாலும், வீழ்ச்சியடைய விரும்பாத ஓர் அரசன் அவற்றைக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலைக்கு ஆட்படுகின்றபோது அவை(யும்) ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகவே இருக்கின்றன.

    இந்த நூலைப் படிக்கின்றபோது, வரலாற்று நூலைப் படிப்பதுபோன்ற சுவையற்ற உணர்வோ,  ஆராய்ச்சி நூலைப் படிப்பது போன்ற அலுப்போ ஏற்படுவதில்லை. மாறாகத் துப்பறியும் கதையைப் படிப்பதுபோன்ற விறுவிறுப்போடு செய்திகளைத் தந்திருக்கின்றார் மாக்கியவெல்லி.

    நிலைத்த நல்லரசு ஏற்பட்டு மக்கள் மகிழ்வோடு வாழ வேண்டும் எனும் நோக்கத்தை மையமாக வைத்துத்தான் மாக்கியவெல்லி ’அரசன்’ என்ற நூலை எழுதினார். ஆனால் அரசாங்கத்திற்கு வழிகாட்டும் நூலாக அமைவதற்குப் பதிலாக அது கொடுங்கோலர்களுக்குத் துணைபோகும் நூலாகக் கருதப்பட்டது வருந்தத்தக்கதே!

    1527-ஆம் ஆண்டு பிளாரென்ஸ் நகரம் மீண்டும் முடியாட்சியிலிருந்து விடுபட்டுக் குடியாட்சிக்கு மாறியது. ஆனால் மாக்கியவெல்லியின் வாழ்வில் அது மலர்ச்சியைத் தரவில்லை. குடியாட்சியினர் அவருக்கு எந்தப் பதவியையும் அளிக்கவில்லை. அதே ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் நாள் வயிற்றுவலியின் காரணமாய்த் தம் உலக வாழ்வை நீத்தார் அரசியல் அறிஞரான மாக்கியவெல்லி.

    உலகிற்குப் புதிய அரசியல் சித்தாந்தங்களை விட்டுச்சென்ற அவர் தம் குடும்பத்துக்கு விட்டுச்சென்றதென்னவோ கொடிய வறுமையை மட்டுமே. எனினும், நவீன அரசறிவியலை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகள் வரிசையில் நிக்கலோ மாக்கியவெல்லியின் பெயர் என்றும் அழியாது நிலைத்திருக்கும்.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Niccol%C3%B2_Machiavelli

    2. https://www.history.com/this-day-in-history/niccolo-machiavelli-born

    3. https://www.encyclopedia.com/people/social-sciences-and-law/political-science-biographies/niccolo-machiavelli.

    4. https://courses.washington.edu/hsteu401/Letter%20%20to%20Vettori.pdf

     

    Share